பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்* பெருந் துயர் இடும்பையில் பிறந்து*
கூடினேன் கூடி இளையவர்தம்மோடு* அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்* உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
சேமமே வேண்டி தீவினை பெருக்கி* தெரிவைமார் உருவமே மருவி*
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்* ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்*
காமனார் தாதை நம்முடை அடிகள்* தம் அடைந்தார் மனத்து இருப்பார்*
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி* வேல்கணார் கலவியே கருதி*
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்* என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட* பாழியான் ஆழியான் அருளே*
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்* கண்டவா திரிதந்தேனேலும்*
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்* சிக்கெனத் திருவருள் பெற்றேன்*
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்* உடம்பு எலாம் கண்ண நீர் சோர*
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்* நாராயணா என்னும் நாமம்.
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்* எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி* அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்*
வம்பு உலாம் சோலை மா மதிள்* தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி*
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்* இன்னது ஓர் தன்மை என்று உணரீர்*
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்* கண்டவா தொண்டரைப் பாடும்*
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்* சூழ் புனல் குடந்தையே தொழுமின்*
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்* நாராயணா என்னும் நாமம்.
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்* கருத்துளே திருத்தினேன் மனத்தை*
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை* பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்* செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி*
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்* நாராயணா என்னும் நாமம்.
குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்* மங்கையார் வாள் கலிகன்றி*
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை* இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்* துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்*
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு* நாராயணா என்னும் நாமம் (2)
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட* வரி சிலை வளைவித்து*
அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற* இருந்த நல் இமயத்துள்*
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை* அகடு உற முகடு ஏறி*
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்* பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)
கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய* அரு வரை அணை கட்டி*
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்* இருந்த நல் இமயத்து*
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன* வேழங்கள் துயர்கூர*
பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று* இளங்கொடிதிறத்து ஆயர்*
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்* இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்* மணி அறைமிசை வேழம்*
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர* ஒருவனது அகல் மார்வம் திறந்து*
வானவர் மணி முடி பணிதர* இருந்த நல் இமயத்துள்*
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்* கிடந்து அருகு எரி வீசும்*
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கரை செய் மாக் கடல் கிடந்தவன்* கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த*
அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்* அமர்ந்த நல் இமயத்து*
வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை* அளை மிகு தேன் தோய்த்துப்*
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்* பரமா என்று*
இணங்கி வானவர் மணி முடி பணிதர* இருந்த நல் இமயத்து*
மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற* நிமிர்ந்து அவை முகில் பற்றிப்*
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய* கறி வளர் கொடி துன்னிப்*
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய* பூம் பொழில் இமயத்துள்*
ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து* இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்*
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை* இரும் பசி அது கூர*
அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய* அருவரை இமயத்து*
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று* எண்ணி நின்று இமையோர்கள்*
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறு துயர் அடையாமல்*
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை* இருந்த நல் இமயத்து*
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற* தழல் புரை எழில் நோக்கி*
பேதை வண்டுகள் எரி என வெருவரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கரிய மா முகில் படலங்கள் கிடந்து* அவை முழங்கிட*
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு* பிரிதி எம் பெருமானை*
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்* கலியனது ஒலி மாலை*
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு* அரு வினை அடையாவே* (2)
முற்ற மூத்து கோல் துணையா* முன் அடி நோக்கி வளைந்து*
இற்ற கால் போல் தள்ளி மெள்ள* இருந்து அங்கு இளையாமுன்*
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான்* வதரி வணங்குதுமே.
முதுகு பற்றிக் கைத்தலத்தால்* முன் ஒரு கோல் ஊன்றி*
விதிர் விதிர்த்து கண் சுழன்று* மேல் கிளைகொண்டு இருமி*
இது என் அப்பர் மூத்த ஆறு என்று* இளையவர் ஏசாமுன்*
மது உண் வண்டு பண்கள் பாடும்* வதரி வணங்குதுமே.
உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து* ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி*
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று* நடுங்காமுன்*
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய்* ஆயிரம் நாமம் சொலி*
வெறி கொள் வண்டு பண்கள் பாடும்* வதரி வணங்குதுமே.
பீளை சோரக் கண் இடுங்கி* பித்து எழ மூத்து இருமி*
தாள்கள் நோவத் தம்மில் முட்டி* தள்ளி நடவாமுன்*
காளை ஆகி கன்று மேய்த்து* குன்று எடுத்து அன்று நின்றான*
வாளை பாயும் தண் தடம் சூழ்* வதரி வணங்குதுமே.
பண்டு காமர் ஆன ஆறும்* பாவையர் வாய் அமுதம்*
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி*
தண்டு காலா ஊன்றி ஊன்றி* தள்ளி நடவாமுன்*
வண்டு பாடும் தண் துழாயான்* வதரி வணங்குதுமே.
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி* இருமி இளைத்து*
உடலம் பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்* பேசி அயராமுன்*
அத்தன் எந்தை ஆதி மூர்த்தி* ஆழ் கடலைக் கடைந்த*
மைத்த சோதி எம்பெருமான்* வதரி வணங்குதுமே.
பப்ப அப்பர் மூத்த ஆறு* பாழ்ப்பது சீத் திரளை*
ஒப்ப ஐக்கள் போத உந்த* உன் தமர் காண்மின் என்று*
செப்பு நேர் மென் கொங்கை நல்லார்* தாம் சிரியாத முன்னம்*
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்* வதரி வணங்குதுமே.
ஈசி போமின் ஈங்கு இரேல்மின்* இருமி இளைத்தீர்*
உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும்* குவளை அம் கண்ணியர்பால்*
நாசம் ஆன பாசம் விட்டு* நல் நெறி நோக்கல் உறில்*
வாசம் மல்கு தண் துழாயான்* வதரி வணங்குதுமே.
புலன்கள் நைய மெய்யில் மூத்து* போந்து இருந்து உள்ளம் எள்கி*
கலங்க ஐக்கள் போத உந்தி* கண்ட பிதற்றாமுன்*
அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு* ஆயிரம் நாமம் சொலி*
வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்* வதரி வணங்குதுமே
வண்டு தண் தேன் உண்டு வாழும்* வதரி நெடு மாலைக்*
கண்டல் வேலி மங்கை வேந்தன்* கலியன் ஒலி மாலை*
கொண்டு தொண்டர் பாடி ஆடக்* கூடிடில் நீள் விசும்பில்*
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு* ஓர் ஆட்சி அறியோமே.
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து* அன்று இணை அடி இமையவர் வணங்க*
தானவன் ஆகம் தரணியில் புரளத்* தடஞ் சிலை குனித்த என் தலைவன்*
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த* தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து*
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே. (2)
கானிடை உருவை சுடு சரம் துரந்து* கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்*
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப* உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்*
தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்* சென்று சென்று இறைஞ்சிட*
பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்* இரு நிதிக்கு இறைவனும்*
அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்* கொழுஞ் சுடர் சுழன்ற*
விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்* வெண் துகில் கொடி என விரிந்து*
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே!* தொழுது எழு தொண்டர்கள் தமக்குப்*
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்* பேர் அருளாளன் எம் பெருமான்*
அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்* ஆரமும் வாரி வந்து*
அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன்* பெரு முலை சுவைத்திட*
பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட* வளர்ந்த என் தலைவன்*
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த* செம்பொன் செய் விலங்கலில் இலங்கு,*
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்,* வதரி ஆச்சிரமத்து உள்ளானே
தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து* ஒரு மறத் தொழில் புரிந்து*
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த* பனி முகில் வண்ணன் எம் பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த* கரு வரை பிளவு எழக் குத்தி*
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்*
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்* எந்தை எம் அடிகள் எம் பெருமான்*
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க* ஆயிரம் முகத்தினால் அருளி*
மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த* மன்னவன் பொன் நிறத்து உரவோன்*
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா* உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்*
தான் முனிந்து இட்ட* வெம் திறல் சாபம் தவிர்த்தவன்*
தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்* குரை கடல் உலகு உடன் அனைத்தும்*
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த* உம்பரும் ஊழியும் ஆனான்*
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து* அங்கு அவனியாள் அலமரப்*
பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானை*
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்*
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்* வானவர் உலகு உடன் மருவி*
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்* இமையவர் ஆகுவர் தாமே. (2)
கலையும் கரியும் பரிமாவும்* திரியும் கானம் கடந்துபோய்*
சிலையும் கணையும் துணையாகச்* சென்றான் வென்றிச் செருக்களத்து*
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி* மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்*
தலை பத்து அறுத்து உகந்தான்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
கடம் சூழ் கரியும் பரிமாவும்* ஒலி மாத் தேரும் காலாளும்*
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை* பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்*
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்* இமையோர் வணங்க மணம் கமழும்*
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
உலவு திரையும் குல வரையும்* ஊழி முதலா எண் திக்கும்*
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்* வென்றி விறல் ஆழி வலவன்*
வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்*
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
ஊரான் குடந்தை உத்தமன்* ஒரு கால் இரு கால் சிலை வளையத்*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்* வற்றா வரு புனல் சூழ் பேரான்*
பேர் ஆயிரம் உடையான்* பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*
தாரா வயல் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற* அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்*
விளங்கு சுடர் ஆழி* விண்ணோர் பெருமான் நண்ணார்முன்*
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்* கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்*
தடம் சூழ்ந்து அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தாய் ஆய் வந்த பேய் உயிரும்* தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்*
தூய வரி உருவின் குறளாய்ச் சென்று* மாவலியை ஏயான் இரப்ப*
மூவடி மண் இன்றே தா என்று* உலகு ஏழும் தாயான்*
காயா மலர் வண்ணன்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்* அரி ஆய் பரிய இரணியனை*
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த* ஒருவன் தானே இரு சுடர் ஆய்*
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்* மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்*
தான் ஆய் தானும் ஆனான் தன்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
வெந்தார் என்பும் சுடு நீறும்* மெய்யில் பூசி கையகத்து*
ஓர் சந்து ஆர் தலைகொண்டு* உலகு ஏழும் திரியும்* பெரியோன் தான் சென்று*
என் எந்தாய்! சாபம் தீர் என்ன* இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
சந்து ஆர் பொழில் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தொண்டு ஆம் இனமும் இமையோரும்* துணை நூல் மார்வின் அந்தணரும்*
அண்டா எமக்கே அருளாய் என்று* அணையும் கோயில் அருகு எல்லாம்*
வண்டு ஆர் பொழிலின் பழனத்து* வயலின் அயலே கயல் பாயத்*
தண் தாமரைகள் முகம் அலர்த்தும்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தாரா ஆரும் வயல் சூழ்ந்த* சாளக்கிராமத்து அடிகளை*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்* அமரர் நல் நாட்டு அரசு ஆளப்*
பேர் ஆயிரமும் ஓதுமின்கள்* அன்றி இவையே பிதற்றுமினே*
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்* மாதரார் வன முலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழை எனக் கருதி* பேதையேன் பிறவி நோய் அறுப்பான்*
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி* இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்* திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி* போக்கினேன் பொழுதினை வாளா*
அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!* வானவர்க்கு அரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து* சுரி குழல் மடந்தையர்திறத்துக்*
காதலே மிகுத்து கண்டவா* திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்*
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்* வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து* பிறர் பொருள் தாரம் என்று இவற்றை*
நம்பினார் இறந்தால்* நமன் தமர் பற்றி எற்றி வைத்து*
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை* பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி*
நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று* இரந்தவர்க்கு இல்லையே என்று*
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!* நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை*
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்* படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி*
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து* திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு*
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்* உணர்விலேன் ஆதலால் நமனார்*
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்* பரமனே! பாற்கடல் கிடந்தாய்!*
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்* நீதி அல்லாதன செய்தும்*
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே* துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா* வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஏவினார் கலியார் நலிக என்று* என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு* உன் பாதமே பரவி நான் பணிந்து*
என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி* உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்*
தான் உடைக் குரம்பை பிரியும்போது* உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்*
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!* திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!*
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி* எழுமினோ தொழுதும் என்று*
இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்* நைமிசாரணியத்து* எந்தையைச் சிந்தையுள் வைத்து*
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்* மாலைதான் கற்று வல்லார்கள்*
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்* உம்பரும் ஆகுவர் தாமே. (2)
அம் கண் ஞாலம் அஞ்ச* அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு* பத்திமையால்*
அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிங்கவேழ்குன்றமே. (2)
அலைத்த பேழ் வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த* கூர் உகிராளன் இடம்*
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்* வன் துடி வாய் கடுப்ப*
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத* சிங்கவேழ்குன்றமே.
ஏய்ந்த பேழ் வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்* வகிர்ந்த அம்மானது இடம்*
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்* அன்றியும் நின்று அழலால்*
தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்* சிங்கவேழ்குன்றமே.
எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்* ஏதலன் இன் உயிரை வவ்வி*
ஆகம் வள் உகிரால்* வகிர்ந்த அம்மானது இடம்*
கவ்வும் நாயும் கழுகும்* உச்சிப்போதொடு கால் சுழன்று*
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்* சிங்கவேழ்குன்றமே.
மென்ற பேழ்வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
நின்ற செந்தீ மொண்டு சூறை* நீள் விசும்பூடு இரிய*
சென்று காண்டற்கு அரிய கோயில்* சிங்கவேழ்குன்றமே.
எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்* எயிற்றொடு இது எவ் உரு என்று*
இரிந்து வானோர் கலங்கி ஓட* இருந்த அம்மானது இடம்*
நெரிந்த வேயின் முழையுள் நின்று* நீள் நெறிவாய் உழுழை*
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்* சிங்கவேழ்குன்றமே.
முனைத்த சீற்றம் விண் சுடப் போய்* மூவுலகும் பிறவும்*
அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்* இருந்த அம்மானது இடம்*
கனைத்த தீயும் கல்லும் அல்லா* வில் உடை வேடரும் ஆய்*
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்* சிங்கவேழ்குன்றமே.
நாத் தழும்ப நாஅன்முகனும்* ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
அங்கு ஓர் ஆள் அரி ஆய்* இருந்த அம்மானது இடம்*
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப* கல் அதர் வேய்ங்கழை போய்த்*
தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.
நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்* நம்முடை நம் பெருமான்*
அல்லிமாதர் புல்க நின்ற* ஆயிரந் தோளன் இடம்,
நெல்லி மல்கி கல் உடைப்ப* புல் இலை ஆர்த்து*
அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத* சிங்கவேழ்குன்றமே.
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிஙக்வேழ்குன்று உடைய*
எங்கள் ஈசன் எம் பிரானை* இருந் தமிழ் நூல்புலவன்*
மங்கை ஆளன் மன்னு தொல் சீர்* வண்டு அரை தார்க் கலியன்*
செங்கையாளன் செஞ்சொல் மாலை* வல்லவர் தீது இலரே. (2)
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த* கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடங் கடல்* துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய் பிளந்த* புராணர் தம் இடம்*
பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய் முலை*
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
நின்ற மா மருது இற்று வீழ* நடந்த நின்மலன் நேமியான்*
என்றும் வானவர் கைதொழும்* இணைத் தாமரை அடி எம் பிரான்*
கன்றி மாரி பொழிந்திட* கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்*
சென்று குன்றம் எடுத்தவன்* திரு வேங்கடம் அடை நெஞ்சமே!
பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு* வென்ற பரஞ்சுடர்*
கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*
ஏத்துவார் தம் மனத்து உள்ளான்* இட வெந்தை மேவிய எம் பிரான்*
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
வண் கையான் அவுணர்க்கு நாயகன்* வேள்வியில் சென்று மாணியாய்*
மண் கையால் இரந்தான்* மராமரம் ஏழும் எய்த வலத்தினான்*
எண் கையான் இமயத்து உள்ளான்* இருஞ்சோலை மேவிய எம் பிரான்*
திண் கை மா துயர் தீர்த்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி* பொன் வயிற்றில் பெய்து*
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்* பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்* ஒள் எயிற்றொடு*
திண் திறல் அரியாயவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பாரும் நீர் எரி காற்றினோடு* ஆகாசமும் இவை ஆயினான்*
பேரும் ஆயிரம் பேச நின்ற* பிறப்பிலி பெருகும் இடம்*
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்* சோரும் மா முகில் தோய்தர*
சேரும் வார் பொழில் சூழ்* எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!
அம்பரம் அனல் கால் நிலம் சலம்* ஆகி நின்ற அமரர்கோன்*
வம்பு உலாம் மலர்மேல்* மலி மட மங்கை தன் கொழுநன்அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்* நீள் இதணம்தொறும்*
செம் புனம் அவை காவல் கொள்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்* சொலி நின்று பின்னரும்*
பேசுவார்தமை உய்ய வாங்கி* பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*
வாச மா மலர் நாறு வார் பொழில்* சூழ் தரும் உலகுக்கு எலாம்*
தேசமாய்த் திகழும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி* வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்* தஞ்சமதாகவே*
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி* வான்உலகு ஆள்வரே!
தாயே தந்தை என்றும்* தாரமே கிளை மக்கள் என்றும்*
நோயே பட்டொழிந்தேன்* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
வேய் ஏய் பூம் பொழில் சூழ்* விரை ஆர் திருவேங்கடவா!*
நாயேன் வந்து அடைந்தேன்* நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.
மான் ஏய் கண் மடவார்* மயக்கில் பட்டு மா நிலத்து*
நானே நானாவித* நரகம் புகும் பாவம் செய்தேன்*
தேன் ஏய் பூம் பொழில் சூழ்* திருவேங்கட மா மலை*
என் ஆனாய் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
கொன்றேன் பல் உயிரை* குறிக்கோள் ஒன்று இலாமையினால்*
என்றேனும் இரந்தார்க்கு* இனிது ஆக உரைத்து அறியேன்*
குன்று ஏய் மேகம் அதிர்* குளிர் மா மலை வேங்கடவா!*
அன்றே வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
குலம் தான் எத்தனையும்* பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்*
நலம் தான் ஒன்றும் இலேன்* நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்*
நிலம் தோய் நீள் முகில் சேர்* நெறி ஆர் திருவேங்கடவா!*
அலந்தேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
எப் பாவம் பலவும்* இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
துப்பா! நின் அடியே* தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*
செப்பு ஆர் திண் வரை சூழ்* திருவேங்கட மா மலை*
என் அப்பா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
மண் ஆய் நீர் எரி கால்* மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்*
புண் ஆர் ஆக்கை தன்னுள்* புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்*
விண் ஆர் நீள் சிகர* விரைஆர் திருவேங்கடவா!*
அண்ணா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
தெரியேன் பாலகனாய்* பல தீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேன் ஆயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*
கரி சேர் பூம் பொழில் சூழ்* கன மா மலை வேங்கடவா!*
அரியே! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
நோற்றேன் பல் பிறவி* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
ஏற்றேன் இப் பிறப்பே* இடர் உற்றனன்-எம் பெருமான்!*
கோல் தேன் பாய்ந்து ஒழுகும்* குளிர் சோலை சூழ் வேங்கடவா!*
ஆற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
பற்றேல் ஒன்றும் இலேன்* பாவமே செய்து பாவி ஆனேன்*
மற்றேல் ஒன்று அறியேன்* மாயனே எங்கள் மாதவனே!*
கல் தேன் பாய்ந்து ஒழுகும்* கமலச் சுனை வேங்கடவா!
அற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய* எம் கார் வண்ணனை*
விண்ணோர் தாம் பரவும்* பொழில் வேங்கட வேதியனை*
திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்*
பண் ஆர் பாடல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2)
கண் ஆர் கடல் சூழ்* இலங்கைக்கு இறைவன்தன்*
திண் ஆகம் பிளக்கச்* சரம் செல உய்த்தாய்!*
விண்ணோர் தொழும்* வேங்கட மா மலை மேய*
அண்ணா அடியேன்* இடரைக் களையாயே.
இலங்கைப் பதிக்கு* அன்று இறை ஆய*
அரக்கர் குலம் கெட்டு அவர் மாள* கொடிப் புள் திரித்தாய்!*
விலங்கல் குடுமித்* திருவேங்கடம் மேய*
அலங்கல் துளப முடியாய்!* அருளாயே.
நீர் ஆர் கடலும்* நிலனும் முழுது உண்டு*
ஏர் ஆலம் இளந் தளிர்மேல்* துயில் எந்தாய்!*
சீர் ஆர்* திருவேங்கட மா மலை மேய*
ஆரா அமுதே!* அடியேற்கு அருளாயே.
உண்டாய் உறிமேல்* நறு நெய் அமுது ஆக*
கொண்டாய் குறள் ஆய்* நிலம் ஈர் அடியாலே*
விண் தோய் சிகரத்* திருவேங்கடம் மேய,
அண்டா!* அடியேனுக்கு அருள்புரியாயே.
தூண் ஆய் அதனூடு* அரியாய் வந்து தோன்றி*
பேணா அவுணன் உடலம்* பிளந்திட்டாய்!*
சேண் ஆர் திருவேங்கட* மா மலை மேய,*
கோள் நாகணையாய்!* குறிக்கொள் எனை நீயே.
மன்னா* இம் மனிசப் பிறவியை நீக்கி*
தன் ஆக்கி* தன் இன் அருள் செய்யும் தலைவன்*
மின் ஆர் முகில் சேர்* திருவேங்கடம் மேய*
என் ஆனை என் அப்பன்* என் நெஞ்சில் உளானே.
மான் ஏய் மட நோக்கி* திறத்து எதிர் வந்த*
ஆன் ஏழ் விடை செற்ற* அணி வரைத் தோளா!*
தேனே!* திருவேங்கட மா மலை மேய*
கோனே! என் மனம்* குடிகொண்டு இருந்தாயே.
சேயன் அணியன்* என சிந்தையுள் நின்ற*
மாயன் மணி வாள் ஒளி* வெண் தரளங்கள்*
வேய் விண்டு உதிர்* வேங்கட மா மலை மேய*
ஆயன் அடி அல்லது* மற்று அறியேனே.
வந்தாய் என் மனம் புகுந்தாய்* மன்னி நின்றாய்*
நந்தாத கொழுஞ் சுடரே* எங்கள் நம்பீ!*
சிந்தாமணியே* திருவேங்கடம் மேய எந்தாய்!*
இனி யான் உனை* என்றும் விடேனே.
வில்லார் மலி* வேங்கட மா மலை மேய*
மல்லார் திரள்தோள்* மணி வண்ணன் அம்மானைக்*
கல்லார் திரள்தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லார் அவர்* வானவர் ஆகுவர் தாமே.
வானவர் தங்கள் சிந்தை போல* என் நெஞ்சமே! இனிதுஉவந்து
மா தவ மானவர் தங்கள் சிந்தை* அமர்ந்து உறைகின்ற எந்தை*
கானவர் இடு கார் அகில் புகை* ஓங்கு வேங்கடம் மேவி*
மாண் குறள் ஆன அந்தணற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* (2)
உறவு சுற்றம் என்று ஒன்று இலா* ஒருவன் உகந்தவர் தம்மை*
மண்மிசைப் பிறவியே கெடுப்பான்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
குறவர் மாதர்களோடு* வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்*
வேங்கடத்து அறவன் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
இண்டை ஆயின கொண்டு* தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
வானிடைக் கொண்டு போய் இடவும்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
வண்டு வாழ் வட வேங்கட மலை* கோயில் கொண்டு அதனோடும்*
மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
பாவியாது செய்தாய்* என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை*
மண்மிசை மேவி ஆட்கொண்டு போய்* விசும்பு ஏற வைக்கும் எந்தை*
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்* வேங்கட மலை ஆண்டு*
வானவர் ஆவியாய் இருப்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
பொங்கு போதியும் பிண்டியும் உடைப்* புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை*
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக* என் நெஞ்சம் என்பாய்*
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்* வேங்கடம் மேவி நின்று அருள்*
அம் கண் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
துவரி ஆடையர் மட்டையர்* சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்*
தமரும் தாங்களுமே தடிக்க* என் நெஞ்சம் என்பாய்*
கவரி மாக் கணம் சேரும்* வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை*
அமர நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
தருக்கினால் சமண் செய்து* சோறு தண் தயிரினால் திரளை*
மிடற்றிடை நெருக்குவார் அலக்கண்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
மருள்கள் வண்டுகள் பாடும்* வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்*
வானிடை அருக்கன் மேவிநிற்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும்* சிலர் பேசக் கேட்டிருந்தே*
என் நெஞ்சம் என்பாய்!* எனக்கு ஒன்று சொல்லாதே*
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி* வேங்கட மலை கோயில் மேவிய*
ஆயர் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.
கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய்* என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்*
பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக்* காண்கிலார்*
ஆடு தாமரையோனும் ஈசனும்* அமரர் கோனும் நின்று ஏத்தும்*
வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
மின்னு மா முகில் மேவு* தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய*
அன்னம் ஆய் நிகழ்ந்த* அமரர் பெருமானைக்*
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி* இன் தமிழால் உரைத்த*
இம் மன்னு பாடல் வல்லார்க்கு* இடம் ஆகும் வான் உலகே* (2)
காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய் தானவன் ஊர்*
நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*
வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*
ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே* (2)
தையலாள்மேல் காதல் செய்த* தானவன் வாள் அரக்கன்*
பொய் இலாத பொன் முடிகள்* ஒன்பதோடு ஒன்றும் அன்று*
செய்த வெம் போர் தன்னில்* அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள*
எய்த எந்தை எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
முன் ஓர் தூது* வானரத்தின் வாயில் மொழிந்து*
அரக்கன் மன் ஊர் தன்னை* வாளியினால் மாள முனிந்து*
அவனே பின் ஓர் தூது* ஆதிமன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்*
இன்னார் தூதன் என நின்றான்* எவ்வுள் கிடந்தானே*
பந்து அணைந்த மெல்விரலாள்* பாவைதன் காரணத்தால்*
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற* வேந்தன் விரி புகழ் சேர்*
நந்தன் மைந்தன் ஆக ஆகும்* நம்பி நம் பெருமான்*
எந்தை தந்தை தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு* பண்டு ஆல் இலைமேல்*
சால நாளும் பள்ளி கொள்ளும்* தாமரைக் கண்ணன் எண்ணில்*
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்* நெய்தல் அம் தண் கழனி*
ஏலம் நாறும் பைம் புறவின்* எவ்வுள் கிடந்தானே*
சோத்தம் நம்பி என்று* தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்*
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி* ஆகிலும் தேவர்க்கு எல்லாம்*
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று* முனிவர் தொழுது*
ஏத்தும் நம்பி எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி* திசைமுகனார்*
தங்கள் அப்பன் சாமி அப்பன்* பாகத்து இருந்த*
வண்டு உண் தொங்கல் அப்பு நீள் முடியான்* சூழ் கழல் சூடநின்ற*
எங்கள் அப்பன் எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி* வேதம் விரித்து உரைத்த புனிதன்*
பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்* தன் அடியார்க்கு இனியன்*
எந்தை எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.
பந்து இருக்கும் மெல் விரலாள்* பாவை பனி மலராள்*
வந்து இருக்கும் மார்வன்* நீல மேனி மணி வண்ணன்*
அந்தரத்தில் வாழும்* வானோர் நாயகன் ஆய் அமைந்த*
இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த* எவ்வுள் கிடந்தானை*
வண்டு பாடும் பைம் புறவின்* மங்கையர் கோன் கலியன்,
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை* ஈர் ஐந்தும் வல்லார்*
அண்டம் ஆள்வது ஆணை* அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்* வேழமும் பாகனும் வீழச்*
செற்றவன் தன்னை புரம் எரி செய்த* சிவன் உறு துயர் களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை* விழுமிய முனிவரர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை* குவலயத்தோர் தொழுதுஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை* ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)
வஞ்சனை செய்யத் தாய்உருஆகி* வந்த பேய் அலறிமண் சேர*
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை* தானவர் கூற்றை*
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்* வியந்துதி செய்ய பெண்உருஆகி*
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த* எழில் விழவில் பழ நடைசெய்*
மந்திர விதியில் பூசனை பெறாது* மழை பொழிந்திட தளர்ந்து*
ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்* எம் பெருமான் அருள் என்ன*
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நல் புவிதனக்கு இறைவன்*
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை*
பஞ்ச பாண்டவர்க்கு ஆகி* வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை*
எந்தை தந்தை தம்மானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணி இழையைச் சென்று*
'எந்தமக்கு உரிமை செய்' என தரியாது* 'எம் பெருமான் அருள்!' என்ன*
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்* பெண்டிரும் எய்தி நூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
பரதனும் தம்பி சத்துருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர் பொழிலூடு* குயிலொடு மயில்கள் நின்று ஆல*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி*
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்*
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்று இழிந்த*
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து* சென்று நின்று ஆழிதொட்டானை*
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்* மாட மாளிகையும் மண்டபமும்*
தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்* திருவல்லிக்கேணி நின்றானை*
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்* காமரு சீர்க் கலிகன்றி*
சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்* சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
காண்டாவனம் என்பது ஓர் காடு* அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க*
முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான்*
அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து* அரியாய் நீண்டான்*
குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே*
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து* அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்*
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்* பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்*
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்* பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்*
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்* அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்*
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்* வென்றி கொள் வாள் அமரில்*
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி* பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட*
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு* அணை கட்டி வரம்பு உருவ*
மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட* படை தொட்டு ஒருகால் அமரில் அதிர*
காலம் இது என்று அயன் வாளியினால்* கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்*
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பார் ஆர் உலகும் பனி மால் வரையும்* கடலும் சுடரும் இவை உண்டும்*
எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான்* அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*
அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன்* பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்*
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்* புகழ் வீட முனிந்து உயிர் உண்டு*
அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும்* வென்றி கொள் வாள் அவுணன்*
பகராதவன் ஆயிரம் நாமம்* அடிப் பணியாதவனை பணியால் அமரில்*
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பிச்சச் சிறு பீலி பிடித்து* உலகில் பிணம் தின் மடவார் அவர் போல்*
அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்* அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்*
நச்சி நமனார் அடையாமை* நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு*
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பேசும் அளவு அன்று இது வம்மின்* நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்*
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்* அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்*
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்* மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்*
மதிஇல் நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்* நிலவும் புகழ் மங்கையர் கோன்*
அமரில் கட மா களி யானை வல்லான்* கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*
உடனே விடும் மால் வினை* வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்*
கொடு மா கடல் வையகம் ஆண்டு* மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)
பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை* படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே* முளைத்து எழுந்த தீம் கரும்பினை*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை* புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை*
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு* பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி மாண்டு*
அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை*
கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்*
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்* உலகு உய்ய நின்றானை*
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை* கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ கானில்*
தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்* தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்*
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்*
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை* அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*
குடம்ஆடு கூத்தன் தன்னை* கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ* பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,*
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று* அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி* கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை* பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*
வளைமருப்பின் ஏனம்ஆகி* இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று* பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்*
பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை* பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை*
ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை* உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்*
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை* பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை*
தண்ணார்ந்த வார்புனல்சூழ் மெய்யம்என்னும்* தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி*
எண்ணானை எண்இறந்த புகழினானை* இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
கண்ணாரக் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை* படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
தென்இலங்கை அரக்கர்வேந்தை* விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு*
பண்டுஆய வேதங்கள் நான்கும்* ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
தொண்டனேன் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்* படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்*
தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்* தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்*
கடம் ஆரும் கருங் களிறு வல்லான்* வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்*
திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்* தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.
நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
வானவரை பெண் ஆகி* அமுது ஊட்டும் பெருமானார்*
மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரை,*
எண்ணாதே இருப்பாரை* இறைப் பொழுதும் எண்ணோமே. (2)
பார் வண்ண மட மங்கை* பனி நல் மா மலர்க் கிழத்தி*
நீர் வண்ணன் மார்வத்தில்* இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*
கார்வண்ண முது முந்நீர்க்* கடல்மல்லைத் தலசயனம்*
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்* அவர் எம்மை ஆள்வாரே.
ஏனத்தின்உருவுஆகி* நிலமங்கை எழில் கொண்டான்*
வானத்தில்அவர் முறையால்* மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள*
கானத்தின் கடல்மல்லைத்* தலசயனத்து உறைகின்ற*
ஞானத்தின் ஒளிஉருவை* நினைவார் என் நாயகரே. (2)
விண்டாரை வென்று ஆவி* விலங்கு உண்ண மெல் இயலார்*
கொண்டாடும் மல் அகலம்* அழல் ஏற வெம் சமத்துக்*
கண்டாரை கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரைக்,
கொண்டாடும் நெஞ்சு உடையார்* அவர் எங்கள் குலதெய்வமே.
பிச்சச் சிறு பீலிச்* சமண் குண்டர் முதலாயோர்*
விச்சைக்கு இறை என்னும்* அவ் இறையைப் பணியாதே*
கச்சிக் கிடந்தவன் ஊர்* கடல்மல்லைத் தலசயனம்*
நச்சித் தொழுவாரை* நச்சு என் தன் நல் நெஞ்சே!
புலன் கொள் நிதிக் குவையோடு* புழைக் கை மா களிற்று இனமும்*
நலம் கொள் நவமணிக் குவையும்* சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,*
கலங்கள் இயங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வலங்கொள் மனத்தார்அவரை* வலங்கொள் என் மட நெஞ்சே!
பஞ்சிச் சிறு கூழை* உரு ஆகி மருவாத*
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட* அண்ணல் முன் நண்ணா*
கஞ்சைக் கடந்தவன் ஊர்* கடல்மல்லைத் தலசயனம்*
நெஞ்சில் தொழுவாரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே!
செழு நீர் மலர்க் கமலம்* திரை உந்து வன் பகட்டால்*
உழும் நீர் வயல் உழவர் உழ* பின் முன் பிழைத்து எழுந்த*
கழு நீர் கடி கமழும்* கடல்மல்லைத் தலசயனம்*
தொழும் நீர் மனத்தவரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே .
பிணங்கள் இடு காடு அதனுள்* நடம் ஆடு பிஞ்ஞகனோடு*
இணங்கு திருச் சக்கரத்து* எம் பெருமானார்க்கு இடம்*
விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வணங்கும் மனத்தார் அவரை* வணங்கு என்தன் மட நெஞ்சே!
கடி கமழும் நெடு மறுகின்* கடல்மல்லைத் தலசயனத்து*
அடிகள் அடியே நினையும்* அடியவர்கள் தம் அடியான்*
வடி கொள் நெடு வேல் வலவன்* கலிகன்றி ஒலி வல்லார்*
முடி கொள் நெடு மன்னவர்தம்* முதல்வர் ஆவாரே. (2)
திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை* செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்* ஆகிலும் ஆசைவிடாளால்*
குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு* நின்தாள் நயந்திருந்த இவளை*
உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2)
துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்*
குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்* கோல நல் மலர் குழற்கு அணியாள்*
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த* மால் என்னும் மால் இன மொழியாள்*
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்* தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்*
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்* பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்* வளைகளும் இறை நில்லா*
என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே.
'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்* 'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்*
'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா* தென்றலும் தீயினில் கொடிதுஆம்*
தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்* சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்*
ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்* உருகும்நின் திருஉரு நினைந்து*
காதன்மை பெரிது கையறவு உடையள்* கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்*
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது* தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்*
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்* தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை*
வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த* வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி* மென்முலை பொன்பயந்திருந்த*
என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்* உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்*
'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை* மாயனே! 'என்று வாய்வெருவும்*
களங் கனி முறுவல் காரிகை பெரிது* கவலையோடு அவலம்சேர்ந்திருந்த*
இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு* அழியுமால் என்உள்ளம்!' என்னும்*
புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்* 'போதுமோ நீர்மலைக்கு என்னும்*
குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி* கொடிஇடை நெடுமழைக் கண்ணி*
இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2)
பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்* பொருகயல் கண்துயில் மறந்தாள்*
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது* இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்*
மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி* வீங்கிய வனமுலை யாளுக்கு*
என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய* எம்மாயனே! அருளாய்'*
என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்* இடவெந்தை எந்தை பிரானை*
மன்னுமா மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய்ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)
திரிபுரம் மூன்று எரித்தானும்* மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப*
முரிதிரை மாகடல் போல்முழங்கி* மூவுலகும் முறையால் வணங்க*
எரிஅன கேசர வாள்எயிற்றோடு* இரணியன்ஆகம் இரண்டு கூறா*
அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன* அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)
வெம்திறல் வீரரில் வீரர்ஒப்பார்* வேதம் உரைத்து இமையோர் வணங்கும்*
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்*
வந்து குறள்உருவாய் நிமிர்ந்து* மாவலி வேள்வியில் மண்அளந்த*
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்ட புயகரத்தேன்என்றாரே.
செம்பொன்இலங்கு வலங்கைவாளி * திண்சிலை தண்டொடு சங்கம்ஒள்வாள்*
உம்பர்இருசுடர்ஆழியோடு* கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே*
வெம்பு சினத்து அடல் வேழம்வீழ* வெண்மருப்புஒன்று பறித்து*
இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே .
மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி* மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
அதன்மருப்புஒன்று வாங்கும்* ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்*
வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி* வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து*
அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்ட புயகரத்தேன் என்றாரே.
கலைகளும் வேதமும் நீதிநூலும்* கற்பமும் சொல் பொருள் தானும்*
மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்* நீர்மையினால் அருள் செய்து*
நீண்ட மலைகளும் மாமணியும்* மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற*
அலைகடல் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
எங்ஙனும் நாம்இவர் வண்ணம் எண்ணில்* ஏதும் அறிகிலம் ஏந்திழையார்*
சங்கும் மனமும் நிறையும் எல்லாம்* தம்மனஆகப் புகுந்து*
தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயா* போதுஅவிழ் நீலம் புனைந்தமேகம்*
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
முழுசிவண்டுஆடிய தண்துழாயின்* மொய்ம்மலர்க் கண்ணியும், மேனிஅம்*
சாந்துஇழுசிய கோலம் இருந்தவாறும்* எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்*
எழுதிய தாமரை அன்னகண்ணும்* ஏந்துஎழில்ஆகமும் தோளும்வாயும்*
அழகியதாம் இவர்ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க* வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி*
அப்பால் அதிர்சங்கம்இப்பால் சக்கரம்* மற்றுஇவர் வண்ணம் எண்ணில்*
காவிஒப்பார் கடலேயும்ஒப்பார்* கண்ணும் வடிவும் நெடியர்ஆய்*
என் ஆவிஒப்பார் இவர்ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தே என்றாரே.
தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா* நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு*
வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி* வாய்திறந்து ஒன்று பணித்ததுஉண்டு*
நஞ்சம் உடைத்துஇவர் நோக்கும்நோக்கம்* நான் இவர் தம்மை அறியமாட்டேன்*
அஞ்சுவன் மற்றுஇவர்ஆர் கொல்? என்ன* அட்டபுயகரத்தேன்என்றாரே.
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்* நீள்முடி மாலை வயிரமேகன்*
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி* அட்ட புயகரத்து ஆதிதன்னை*
கன்னிநல் மாமதிள் மங்கைவேந்தன்* காமருசீர்க் கலிகன்றி*
குன்றா இன்இசையால்சொன்ன செஞ்சொல்மாலை* ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2)
சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்* சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்*
நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*
பல்லவன் வில்லவன் என்று உலகில்* பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
மல்லையர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)
கார் மன்னு நீள் விசும்பும்* கடலும் சுடரும் நிலனும் மலையும்*
தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்* தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
தேர் மன்னு தென்னவனை முனையில்* செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,*
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்* ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்*
வரம் தரு மா மணிவண்ணன் இடம்* மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்* நெடு வாயில் உக செருவில் முன நாள்*
பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
அண்டமும் எண் திசையும் நிலனும்* அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
எந்தை பிரானது இடம்* ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
விண்டவர் இண்டைக் குழாமுடனே* விரைந்தார் இரிய செருவில் முனிந்து*
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்* துயர் தீர்த்து அரவம் வெருவ*
முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்* திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற*
பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம்அதுவே.
திண் படைக் கோளரியின் உரு ஆய்* திறலோன் அகலம் செருவில் முன நாள்*
புண் படப் போழ்ந்த பிரானது இடம்* பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப* விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த*
பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்* மாண் உரு ஆய் முன நாள்*
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
உலகு உடை மன்னவன் தென்னவனைக்* கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ,
பல படை சாய வென்றான் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
குடைத் திறல் மன்னவன் ஆய்* ஒருகால் குரங்கைப் படையா*
மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்* அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்* வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த*
படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து* முன்னே ஒருகால் செருவில் உருமின்*
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
கறை உடை வாள் மற மன்னர் கெட* கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்*
பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகர்மேல்*
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்* கலிகன்றி குன்றாது உரைத்த*
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்* திரு மா மகள் தன் அருளால்*
உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்* செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்* வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்* இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்* தூய நான்மறையாளர் சோமுச் செய்ய*
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. (2)
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்* தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்*
சந்து அணி மென் முலை மலராள் தரணிமங்கை* தாம் இருவர் அடி வருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்* ஐந்துவளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
கொழுந்து அலரும் மலர்ச் சோலைக்* குழாம்கொள் பொய்கைக்* கோள்முதலை வாள்எயிற்றுக் கொண்டற்குஎள்கி*
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி* அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட* இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட*
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து* தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்* அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்* குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்*
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி* கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்*
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்* பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
மறை வளர புகழ் வளர மாடம்தோறும்* மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத*
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று* அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று* தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*
வெறி ஆர்ந்த மலர்மகள் நாமங்கையோடு வியன்கலை எண் தோளினாள் விளங்கு*
செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி* இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு* வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று* காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட*
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
பார் ஏறு பெரும் பாரம் தீரப்* பண்டு பாரதத்துத் தூது இயங்கி*
பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை* செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை*
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்* புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்*
சீர் ஏறு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
தூ வடிவின் பார்மகள் பூமங்கையோடு* சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று* கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை*
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை* செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை
தீ வடிவின் சிவன் அயனே போல்வார்* மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்*
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று*
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த* கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)
இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்* வளைமருப்பினில் அகத்துஒடுக்கி*
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்* கமலநல்மலர்த்தேறல் அருந்தி*
இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி* அம் பொழிலூடே*
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு* திருவயிந்திரபுரமே. (2)
மின்னும் ஆழி அங்கையவன்* செய்யவள் உறை தரு திரு மார்பன்*
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய* பரன் இடம் வரைச் சாரல்*
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர* பிணி அவிழ் கமலத்துத்*
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு* திருவயிந்திரபுரமே.
வையம் ஏழும் உண்டு ஆல் இலை* வைகிய மாயவன்*
அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்* மெய்தகு வரைச் சாரல்*
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய* முல்லை அம் கொடி ஆட*
செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு* திருவயிந்திரபுரமே.
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்தன்* மார்புஅகம் இரு பிளவாக்*
கூறு கொண்டு அவன் குலமகற்கு* இன் அருள் கொடுத்தவன் இடம்*
மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை* விசும்பு உற மணி நீழல்*
சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்* திருவயிந்திரபுரமே.
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல் இடம் அளந்து*
ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்* பொன் மலர் திகழ்*
வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்* குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி*
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு* திருவயிந்திரபுரமே.
கூன் உலாவிய மடந்தைதன்* கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்* கவின் ஆரும்*
வான் உலாவிய மதி தவழ் மால் வரை* மா மதிள் புடை சூழ*
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய* திருவயிந்திரபுரமே.
மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்* விலங்கலின்மிசை இலங்கை மன்னன்*
நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்* மணி வரை நீழல்*
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்* பெடையொடும் இனிது அமர*
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு* தண் திருவயிந்திரபுரமே.
விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்* வில் இறுத்து* அடல் மழைக்கு-
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்* நிலவிய இடம் தடம் ஆர்*
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு* மலை வளர் அகில் உந்தித்*
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே.
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்* விசயனுக்கு ஆய்*
மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்* குலவு தண் வரைச் சாரல்*
கால் கொள் கண் கொடி கைஎழ* கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்*
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே.
மூவர் ஆகிய ஒருவனை* மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை*
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச* தண் திருவயிந்திரபுரத்து*
மேவு சோதியை வேல் வலவன்* கலிகன்றி விரித்து உரைத்த*
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்* பாவங்கள் பயிலாவே (2)
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு* உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா* தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே* கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்*
தேன் ஆட மாடக் கொடி ஆடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2)
காயோடு நீடு கனி உண்டு வீசு* கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா* திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்* மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்* விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த*
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்* அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து* படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த*
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்* அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*
பெருமான் திருநாமம் பிதற்றி* நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து* கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்*
திருமால் திருமங்கையொடு ஆடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய* குல மன்னர் அங்கம் மழுவில் துணிய*
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்* தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*
பூமங்கை தங்கி புலமங்கை மன்னி* புகழ்மங்கை எங்கும் திகழ*
புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
நெய் வாய் அழல் அம்பு துரந்து* முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*
இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி* நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*
அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்* அரு மா மறை அந்தணர் சிந்தை புக*
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து* மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த*
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு* திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்* கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்*
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
மா வாயின் அங்கம் மதியாது கீறி* மழை மா முது குன்று எடுத்து*
ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்* குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*
மூவாயிரம் நான்மறையாளர்* நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்*
தேவாதிதேவன் திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்* சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்*
அரு நீல பாவம் அகல புகழ் சேர்* அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து* எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*
திரு நீலம் நின்று திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய* தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு*
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப* அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி* குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்* பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்திரகூடத்து உள்ளானே. (2)
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட* பிள்ளை பரிசு இது என்றால்*
மா நில மா மகள்* மாதர் கேள்வன் இவன் என்றும்*
வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்* புலன் கெழு கோவியர் பாடித்*
தே மலர் தூவ வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று* ஆய்ச்சியர் கூடி இழிப்ப*
எண் திசையோரும் வணங்க* இணை மருது ஊடு நடந்திட்டு*
அண்டரும் வானத்தவரும்* ஆயிரம் நாமங்களோடு*
திண் திறல் பாட வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம் புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாடத்*
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
பருவக் கரு முகில் ஒத்து* முத்து உடை மா கடல் ஒத்து*
அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன்மலை ஒத்து*
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து* இன மால் விடை செற்று*
தெருவில் திளைத்து வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்*
உய்யப் பரு வரை தாங்கி* ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போல*
தெய்வப் புள் ஏறி வருவான்* சித்திரகூடத்து உள்ளானே .(2)
ஆவர் இவை செய்து அறிவார்?* அஞ்சன மா மலை போல*
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து*
அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்* கை தொழ வீதி வருவான்*
தேவர் வணங்கு தண் தில்லைச்* சித்திரகூடத்து உள்ளானே.
பொங்கி அமரில் ஒருகால்* பொன்பெயரோனை வெருவ*
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு* ஆயிரம் தோள் எழுந்து ஆட*
பைங் கண் இரண்டு எரி கான்ற* நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்*
சிங்க உருவின் வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
கரு முகில் போல்வது ஓர் மேனி* கையன ஆழியும் சங்கும்*
பெரு விறல் வானவர் சூழ* ஏழ் உலகும் தொழுது ஏத்த*
ஒரு மகள் ஆயர் மடந்தை* ஒருத்தி நிலமகள்*
மற்றைத் திருமகளோடும் வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
தேன் அமர் பூம் பொழில் தில்லைச்* சித்திரகூடம் அமர்ந்த*
வானவர் தங்கள் பிரானை* மங்கையர் கோன்மருவார்*
ஊன்அமர் வேல் கலிகன்றி* ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*
தான் இவை கற்று வல்லார்மேல்* சாரா தீவினை தானே. (2)
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி* உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த* தாடாளன் தாள் அணைவீர்*
தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்* அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்* சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2)
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை* நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*
நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை* ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*
உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்* தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*
எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்* மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து*
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்* நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*
நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்* மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்*
செய் அணைந்து களை களையாது ஏறும்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து* முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்*
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட* நின்மலன் தாள் அணைகிற்பீர்*
நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே* தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்*
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு* திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து*
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட* விண்ணவர் கோன் தாள் அணைவீர்*
விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட* அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்*
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள* படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை*
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த* விண்ணவர் கோன் தாள் அணைவீர்*
வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்* துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்*
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்* புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த*
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்* திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*
திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி* வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி*
தெருவில் வலம்புரி தரளம் ஈனும்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்* பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்*
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்* மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*
அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ* நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*
பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்* காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே.
பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து* பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*
கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்* கலந்தவன் தாள்அணைகிற்பீர்*
கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று* கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி*
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்* காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.
செங்கமலத்து அயன்அனைய மறையோர்* காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை*
அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்* அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்* கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன*
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்* தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2)
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்* புகுந்ததன்பின் வணங்கும் என்*
சிந்தனைக்கு இனியாய்!* திருவே என் ஆர் உயிரே*
அம் தளிர் அணி ஆர் அசோகின்* இளந்தளிர்கள் கலந்து*
அவை எங்கும் செந் தழல் புரையும்* திருவாலி அம்மானே! (2)
நீலத்தடவரை* மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்* அடியேன் மனத்து இருந்தாய்*
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட* மழை முகில் போன்று எழுந்து*
எங்கும் ஆலைப் புகை கமழும்* அணி ஆலி அம்மானே!
நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை* என் மனத்தே புகுந்தது*
இம்மைக்கு என்று இருந்தேன்* எறி நீர் வளஞ் செறுவில்*
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ* அரிவார் முகத்து எழு வாளை போய்*
கரும்பு அந் நல் நாடு அணையும்* அணி ஆலி அம்மானே!
மின்னின் மன்னும் நுடங்கு இடை* மடவார்தம் சிந்தை மறந்துவந்து*
நின்மன்னு சேவடிக்கே* மறவாமை வைத்தாயால்*
புன்னை மன்னு செருந்தி* வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
எங்கும் அன்னம் மன்னும் வயல்* அணி ஆலி அம்மானே!
நீடு பல்மலர் மாலைஇட்டு* நின் இணைஅடி தொழுதுஏத்தும்*
என் மனம் வாட நீ நினையேல்* மரம் எய்த மா முனிவா!*
பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து* பல் பணையால் மலிந்து*
எங்கும் ஆடல் ஓசை அறா* அணி ஆலி அம்மானே!
கந்த மாமலர் எட்டும்இட்டு* நின்காமர் சேவடி கைதொழுது எழும்*
புந்தியேன் மனத்தே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
சந்தி வேள்வி சடங்கு நான்மறை* ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்*
அந்தணாளர் அறா* அணி ஆலி அம்மானே!
உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து* உன் அடியேன் மனம் புகுந்த*
அப்புலவ! புண்ணியனே!* புகுந்தாயைப் போகலொட்டேன்*
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்* தண் தாமரை மலரின்மிசை*
மலி அலவன் கண்படுக்கும்* அணி ஆலி அம்மானே!
சங்கு தங்கு தடங் கடல் கடல்* மல்லையுள் கிடந்தாய்*
அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்* இனிப் போயினால் அறையோ!*
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி* இன் இள வண்டு போய்*
இளந்தெங்கின் தாது அளையும்* திருவாலி அம்மானே!
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி* நின் அடைந்தேற்கு*
ஒரு பொருள் வேதியா! அரையா!* உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!*
நீதி ஆகிய வேதமாமுனியாளர்* தோற்றம் உரைத்து*
மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!* அணி ஆலி அம்மானே!
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்* தென் ஆலி இருந்த மாயனை*
கல்லின் மன்னு திண் தோள்* கலியன் ஒலிசெய்த*
நல்ல இன் இசை மாலை* நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு* இடம் ஆகும் வான்உலகே. (2)
தூவிரிய மலர் உழக்கி* துணையோடும் பிரியாதே*
பூவிரிய மது நுகரும்* பொறி வரிய சிறு வண்டே!*
தீவிரிய மறை வளர்க்கும்* புகழ் ஆளர் திருவாலி*
ஏவரி வெம் சிலையானுக்கு* என் நிலைமை உரையாயே. (2)
பிணிஅவிழு நறுநீல* மலர் கிழிய பெடையோடும்*
அணிமலர்மேல் மதுநுகரும்* அறுகால சிறு வண்டே!*
மணிகழுநீர் மருங்குஅலரும்* வயல் ஆலி மணவாளன்*
பணிஅறியேன் நீ சென்று* என் பயலை நோய் உரையாயே.
நீர்வானம் மண் எரி கால் ஆய்* நின்ற நெடுமால்*
தன்தார் ஆய நறுந் துளவம்* பெறும் தகையேற்கு அருளானே*
சீர்ஆரும் வளர்பொழில்சூழ்* திருவாலி வயல்வாழும்*
கூர்வாய சிறுகுருகே!* குறிப்புஅறிந்து கூறாயே.
தானாக நினையானேல்* தன் நினைந்து நைவேற்கு*
ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்* வலி செய்ய மெலிவேனோ?*
தேன் வாய வரி வண்டே!* திருவாலி நகர் ஆளும்*
ஆன்ஆயற்கு என் உறு நோய்* அறிய சென்று உரையாயே.
வாள் ஆய கண் பனிப்ப* மென் முலைகள் பொன் அரும்ப*
நாள் நாளும்* நின் நினைந்து நைவேற்கு*
ஓ! மண் அளந்த தாளாளா! தண் குடந்தை நகராளா!* வரை எடுத்த தோளாளா*
என்தனக்கு ஓர்* துணையாளன் ஆகாயே!
தார் ஆய தன் துளவம்* வண்டு உழுதவரை மார்பன்*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த* புள் பாகன் என் அம்மான்*
தேர் ஆரும் நெடு வீதித்* திருவாலி நகர் ஆளும்*
கார் ஆயன் என்னுடைய* கன வளையும் கவர்வானோ!
கொண்டு அரவத் திரை உலவு* குரை கடல்மேல் குலவரைபோல்*
பண்டு அரவின் அணைக் கிடந்து* பார் அளந்த பண்பாளா!*
வண்டு அமரும் வளர் பொழில் சூழ்* வயல் ஆலி மைந்தா!*
என் கண் துயில் நீ கொண்டாய்க்கு* என் கன வளையும் கடவேனோ!?
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்* தண் குடந்தைக் குடம் ஆடி*
துயிலாத கண்_இணையேன்* நின் நினைந்து துயர்வேனோ!*
முயல் ஆலும் இள மதிக்கே* வளை இழந்தேற்கு*
இது நடுவே வயல் ஆலி மணவாளா!* கொள்வாயோ மணி நிறமே!
நிலை ஆளா நின் வணங்க* வேண்டாயே ஆகிலும் என்*
முலை ஆள ஒருநாள்* உன் அகலத்தால் ஆளாயே*
சிலையாளா! மரம் எய்த திறல் ஆளா!* திருமெய்யமலையாளா*
நீஆள வளை ஆள மாட்டோமே.
மை இலங்கு கருங் குவளை* மருங்கு அலரும் வயல் ஆலி*
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை* நெடுமாலை*
கை இலங்கு வேல் கலியன்* கண்டு உரைத்த தமிழ் மாலை*
ஐஇரண்டும் இவை வல்லார்க்கு* அரு வினைகள் அடையாவே. (2)
கள்வன்கொல் யான் அறியேன்* கரியான் ஒரு காளை வந்து*
வள்ளி மருங்குல்* என்தன் மடமானினைப் போத என்று*
வெள்ளி வளைக் கைப் பற்ற* பெற்ற தாயரை விட்டு அகன்று*
அள்ளல் அம் பூங் கழனி* அணி ஆலி புகுவர்கொலோ! (2)
பண்டு இவன் ஆயன் நங்காய்!* படிறன் புகுந்து*
என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்* நுகர்ந்தானை உகந்து*
அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர* கிளிபோல் மிழற்றி நடந்து*
வண்டு அமர் கானல் மல்கும்* வயல் ஆலி புகுவர்கொலோ!
அஞ்சுவன் வெம் சொல் நங்காய்!* அரக்கர் குலப் பாவை தன்னை*
வெம் சின மூக்கு அரிந்த* விறலோன் திறம் கேட்கில் மெய்யே*
பஞ்சிய மெல் அடி* எம் பணைத் தோளி பரக்கழிந்து*
வஞ்சி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ!
ஏது அவன் தொல் பிறப்பு?* இளையவன் வளை ஊதி*
மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்* சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*
மாதவன் தன் துணையா நடந்தாள்* தடம் சூழ் புறவில்*
போது வண்டு ஆடு செம்மல்* புனல் ஆலி புகுவர்கொலோ!
தாய் எனை என்று இரங்காள்* தடந் தோளி தனக்கு அமைந்த*
மாயனை மாதவனை* மதித்து என்னை அகன்ற இவள்*
வேய் அன தோள் விசிறி* பெடை அன்னம் என நடந்து*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர்கொலோ!
என் துணை என்று எடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்*
தன் துணை ஆய என்தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்* வரம் செற்று அரங்கத்து உறையும்*
இன் துணைவனொடும் போய்* எழில் ஆலி புகுவர்கொலோ! (2)
அன்னையும் அத்தனும் என்று* அடியோமுக்கு இரங்கிற்றிலள்*
பின்னைதன் காதலன்தன்* பெருந் தோள் நலம் பேணினளால்*
மின்னையும் வஞ்சியையும்* வென்று இலங்கும் இடையாள் நடந்து*
புன்னையும் அன்னமும் சூழ்* புனல் ஆலி புகுவர்கொலோ!
முற்றிலும் பைங் கிளியும்* பந்தும் ஊசலும் பேசுகின்ற*
சிற்றில் மென் பூவையும்* விட்டு அகன்ற செழுங் கோதைதன்னைப்*
பெற்றிலேன் முற்று இழையை* பிறப்பிலி பின்னே நடந்து*
மற்று எல்லாம் கைதொழப் போய்* வயல் ஆலி புகுவர்கொலோ!
காவி அம் கண்ணி எண்ணில்* கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்*
பாவியேன் பெற்றமையால்* பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்* நெடுமாலொடும் போய்*
வாவி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ!
தாய் மனம் நின்று இரங்க* தனியே நெடுமால் துணையா*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்*
மேவிய நெஞ்சு உடையார்* தஞ்சம் ஆவது விண் உலகே. (2)
நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!* நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
எமக்கே அருளாய் எனநின்று* இமையோர் பரவும்இடம்*
எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே* களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து*
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)
முதலைத் தனி மா முரண் தீர அன்று* முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய*
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி* வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்*
பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்* பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்*
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய* அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்*
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு* அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்*
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்* அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி*
மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று* திசை நான்கும் நான்கும் இரிய* செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய* கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்தான்*
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்* ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்*
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு* இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து*
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து* தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்தான்*
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே* குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு*
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்* பகு வாய்க் கழுதுக்கு இரங்காது* அவள்தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்* உடனே சுவைத்தான் இடம்*
ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி* கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து*
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்* தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்*
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்* அடி வைத்த அம்மான் இடம்*
மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்* செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*
முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!
துளைஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்* துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்* விளைவித்த அம்மான் இடம்*
வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று* மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல்*
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த* விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும்*
படையோடு சங்கு ஒன்று உடையாய்! 'என நின்று* இமையோர் பரவும் இடம்*
பைந் தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்ப* தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்*
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்* மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*
கண்டார் வணங்கக் களி யானை மீதே* கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்*
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்* விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)
சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு* தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை*
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்* நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி* செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்* வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)
திண்ணியது ஓர் அரி உருவாய், திசை அனைத்தும் நடுங்க* தேவரொடு தானவர்கள் திசைப்ப*
இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து, உகிர் மடுத்த நாதன்* நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து, எழில் விளங்கு மறையும்* ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்*
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்* வைகுந்தவிண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்* அமுது செய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*
முண்டம்அது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்* முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்*
எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந்தெங்குகதலி* இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய*
வண்டுபல இசைபாட, மயில்ஆலும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
கலைஇலங்கும் அகல்அல்குல், அரக்கர் குலக்கொடியைக்* காதொடு மூக்குஉடன்அரிய, கதறி அவள்ஓடி*
தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த* தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
சிலைஇலங்கு மணிமாடத்து, உச்சிமிசைச்சூலம்* செழுங்கொண்டல் அகடுஇரிய, சொரிந்த செழுமுத்தம்*
மலைஇலங்கு மாளிகைமேல், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
மின்அனைய நுண்மருங்குல், மெல்லியற்கா* இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோள்இருபதும்போய்உதிர*
தன்நிகர் இல் சிலைவளைத்து அன்றுஇலங்கை பொடிசெய்த* தடந்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்,
செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை* செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்துஎங்கும்*
மன்னுபுகழ் வேதியர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்* பெரியபேயினது, உருவுகொடுமாள உயிர்உண்டு*
திண்மைமிகு மருதொடு, நல்சகடம் இறுத்தருளும்* தேவன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
உண்மைமிகு மறையொடு நல்கலைகள், நிறை பொறைகள்* உதவுகொடைஎன்று இவற்றின்ஒழிவுஇல்லாப்* பெரிய
வண்மைமிகு மறையவர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து* வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்*
உளம்குளிர அமுதுசெய்து இவ்உலகுஉண்ட காளை* உகந்துஇனிது நாள்தோறும், மருவிஉறைகோயில்*
இளம்படி நல்கமுகு குலைத், தெங்குகொடி செந்நெல்* ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்*
வளம்கொண்ட பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
ஆறாத சினத்தின், மிகுநரகன் உரம்அழித்த* அடல்ஆழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்*
கூறாகக் கொடுத்தருளும், திருஉடம்பன் இமையோர்* குலமுதல்வன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி* மதுவெள்ளம் ஒழுக, வயல்உழவர் மடைஅடைப்ப*
மாறாத பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
வங்கம்மலி தடங்கடலுள், வானவர்களோடு* மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி*
எங்கள்தனி நாயகனே!, எமக்குஅருளாய் என்னும்* ஈசன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
செங்கயலும் வாளைகளும், செந்நெலிடைக் குதிப்ப* சேல்உகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து*
மங்குல் மதிஅகடுஉரிஞ்சும், மணிமாட நாங்கூர் வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்* தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்*
வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*
மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய* வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன*
சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்* தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)
திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்* தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து*
இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*
பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்* தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ*
அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! (2)
வென்றிமிகு நரகன்உரம்அது, அழிய விசிறும்* விறல்ஆழித் தடக்கையன், விண்ணவர்கட்கு அன்று*
குன்றுகொடு குரைகடலைக், கடைந்து அமுதம்அளிக்கும்* குருமணி என்ஆர்அமுதம், குலவிஉறை கோயில்*
என்றும்மிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையோர்* ஏழ்இசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்*
அன்றுஉலகம் படைத்தவனை, அனையவர்கள் நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
உம்பரும் இவ்ஏழ்உலகும், ஏழ்கடலும் எல்லாம்* உண்டபிரான் அண்டர்கள், முன்கண்டு மகிழ்வுஎய்தக்*
கும்பம்மிகு மதயானை, மருப்புஒசித்து* கஞ்சன் குஞ்சிபிடித்துஅடித்த பிரான் கோயில்*
மருங்குஎங்கும் பைம்பொனொடு, வெண்முத்தம் பலபுன்னை காட்ட* பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண்மடவார், மகிழ்வுஎய்தும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!
ஓடாத ஆள்அரியின், உருவம்அது கொண்டு* அன்றுஉலப்பில் மிகுபெருவரத்த, இரணியனைப்பற்றி*
வாடாத வள்உகிரால் பிளந்து, அவன்தன் மகனுக்கு* அருள்செய்தான் வாழும்இடம், மல்லிகைசெங்கழுநீர்*
சேடுஏறு மலர்ச்செருந்தி, செழுங்கமுகம் பாளை* செண்பகங்கள் மணம்நாறும், வண்பொழிலின்ஊடே*
ஆடுஏறு வயல்ஆலைப், புகைகமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!
கண்டவர்தம் மனம்மகிழ, மாவலிதன் வேள்விக்* களவுஇல்மிகு சிறுகுறள்ஆய், மூவடிஎன்று இரந்திட்டு*
அண்டமும் இவ்அலைகடலும், அவனிகளும்எல்லாம்* அளந்தபிரான் அமரும்இடம், வளங்கொள்பொழில்அயலே*
அண்டம்உறு முழவுஒலியும், வண்டுஇனங்கள்ஒலியும்* அருமறையின்ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்*
அண்டம்உறும் அலைகடலின், ஒலிதிகழும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல், மைதிலிக்கா* இலங்கை மன்னன் முடிஒருபதும் தோள்இருபதும் போய்உதிரத்*
தாள்நெடுந்திண் சிலைவளைத்த, தயரதன்சேய்* என்தன் தனிச்சரண் வானவர்க்குஅரசு, கருதும்இடம் தடம்ஆர்*
சேண்இடம்கொள் மலர்க்கமலம், சேல்கயல்கள்வாளை* செந்நெலொடும் அடுத்துஅரிய உதிர்ந்த செழுமுத்தம்*
வாள்நெடுங்கண் கடைசியர்கள், வாரும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்* தேனுகனும் பூதனைதன், ஆர்உயிரும் செகுத்தான்*
காமனைத்தான் பயந்த, கருமேனிஉடைஅம்மான்* கருதும்இடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி*
நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்* ஐந்து வேள்வியோடு ஆறுஅங்கம், நவின்று கலை பயின்று*
அங்குஆம்மனத்து மறையவர்கள், பயிலும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
கன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை* காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்*
குன்றுஅதனால் மழைதடுத்து, குடம்ஆடு கூத்தன்* குலவும்இடம், கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள்*
துன்றுமணி மண்டபங்கள், சாலைகள்* தூமறையோர் தொக்குஈண்டித் தொழுதியொடு, மிகப்பயிலும் சோலை*
அன்றுஅலர்வாய் மதுஉண்டு, அங்கு அளிமுரலும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
வஞ்சனையால் வந்தவள்தன், உயிர்உண்டு* வாய்த்த தயிர்உண்டு வெண்ணெய்அமுதுஉண்டு*
வலிமிக்க கஞ்சன் உயிர்அதுஉண்டு, இவ் உலகுஉண்ட காளை* கருதும்இடம் காவிரிசந்து, அகில்கனகம்உந்தி*
மஞ்சுஉலவு பொழிலூடும், வயலூடும் வந்து* வளம்கொடுப்ப மாமறையோர், மாமலர்கள் தூவி*
அஞ்சலித்து அங்கு அரிசரண்என்று, இறைஞ்சும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து* பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்*
அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*
கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்* கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்*
ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்* உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)
போது அலர்ந்த பொழில் சோலைப்* புறம் எங்கும் பொரு திரைகள்*
தாது உதிர வந்து அலைக்கும்* தட மண்ணித் தென் கரைமேல்*
மாதவன் தான் உறையும் இடம்* வயல் நாங்கை* வரி வண்டு
தேதென என்று இசை பாடும்* திருத்தேவனார்தொகையே.
யாவரும் ஆய் யாவையும் ஆய்* எழில் வேதப் பொருள்களும் ஆய்*
மூவரும் ஆய் முதல் ஆய* மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*
மாவரும்திண் படைமன்னை* வென்றிகொள்வார் மன்னுநாங்கை*
தேவரும் சென்றுஇறைஞ்சுபொழில்* திருத்தேவனார்தொகையே.
வான்நாடும் மண்நாடும்* மற்றுஉள்ள பல்உயிரும்*
தான்ஆய எம்பெருமான்* தலைவன் அமர்ந்து உறையும்இடம்*
ஆனாத பெருஞ்செல்வத்து* அருமறையோர் நாங்கைதன்னுள்*
தேன்ஆரும் மலர்ப்பொழில்சூழ்* திருத்தேவனார்தொகையே.
இந்திரனும் இமையவரும்* முனிவர்களும் எழில் அமைந்த*
சந்த மலர்ச் சதுமுகனும்* கதிரவனும் சந்திரனும்*
எந்தை! எமக்கு அருள் என நின்ரு* அருளூமிடம் எழில்நாங்கை*
சுந்தரநல் பொழில்புடைசூழ்* திருத்தேவனார்தொகையே.
அண்டமும் இவ் அலை கடலும்* அவனிகளும் குல வரையும்*
உண்ட பிரான் உறையும் இடம்* ஒளி மணி சந்து அகில் கனகம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திகழ் மண்ணித் தென் கரைமேல்*
திண் திறலார் பயில்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே.
ஞாலம் எல்லாம் அமுது செய்து* நான்மறையும் தொடராத*
பாலகன் ஆய் ஆல் இலையில்* பள்ளிகொள்ளும் பரமன் இடம்*
சாலி வளம் பெருகி வரும்* தட மண்ணித் தென் கரைமேல்*
சேல் உகளும் வயல்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே.
ஓடாத ஆளரியின்* உரு ஆகி இரணியனை*
வாடாத வள் உகிரால்* பிளந்து அளைந்த மாலது இடம்*
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கைதன்னுள்*
சேடு ஏறு பொழில் தழுவு* திருத்தேவனார்தொகையே.
வார் ஆரும் இளங் கொங்கை* மைதிலியை மணம் புணர்வான்*
கார் ஆர் திண் சிலை இறுத்த* தனிக் காளை கருதும் இடம்*
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கைதன்னுள்*
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்* திருத்தேவனார்தொகையே.
கும்பம் மிகு மத யானை* பாகனொடும் குலைந்து வீழ*
கொம்பு-அதனைப் பறித்து எறிந்த* கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*
வம்பு அவிழும் செண்பகத்து* மணம் கமழும் நாங்கைதன்னுள்*
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்* திருத்தேவனார்தொகையே.
கார் ஆர்ந்த திருமேனிக்* கண்ணன் அமர்ந்து உறையும் இடம்*
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்* திருத்தேவனார்தொகைமேல்*
கூர் ஆர்ந்த வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே.
கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்* கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
அரசு அவன் தம்பிக்கு* அளித்தவன் உறைகோயில்*
செம்பலாநிரை செண்பகம்மாதவி* சூதகம் வாழைகள்சூழ்*
வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர* வண்புருடோத்தமமே.
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி* அக்காளியன் பண அரங்கில்*
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த* உம்பர்கோன் உறைகோயில்*
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்*
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று* அமைத்த சோறு அது எல்லாம் உண்டு*
கோநிரை மேய்த்து அவை காத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்* குல மயில் நடம் ஆட*
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச் சாடிப் புக்கு*
ஒருங்க மல்லரைக் கொன்று* பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு* கழனியில் மலி வாவி*
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து* ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட*
வாணனை ஆயிரம் தோள்களும்* துணித்தவன் உறை கோயில்*
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்* பகலவன் ஒளி மறைக்கும்*
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே.
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று* அயன் அலர் கொடு தொழுது ஏத்த*
கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய* கண்ணன் வந்து உறை கோயில்*
கொங்கை கோங்குஅவை காட்ட* வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்*
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்* தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
வெம் சினத்து அரி பரி கீறிய* அப்பன் வந்து உறை கோயில்*
இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு* எழில் கொள் பந்து அடிப்போர்*
கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்* வன்சாபம் மற்றுஅதுநீங்க*
மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த* எம்முகில் வண்ணன் உறைகோயில்*
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்* வண்பழம் விழ வெருவிப் போய்*
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே.
இந்து வார் சடை ஈசனைப் பயந்த* நான் முகனைத் தன் எழில் ஆரும்*
உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து* தன் குருளையைத் தழுவிப் போய்*
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்* ஆலி மன் அருள் மாரி*
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்* இப்பத்தும் வல்லார் உலகில்*
எண் இலாத பேர் இன்பம் உற்று* இமையவரோடும் கூடுவரே. (2)
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்* பேர் அருளாளன் எம் பிரானை*
வார் அணி முலையாள் மலர்மகளோடு* மண்மகளும் உடன் நிற்ப*
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை* பேதியா இன்ப வெள்ளத்தை*
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை* ஏழ் இசையின் சுவைதன்னை*
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
மறைப் பெரும் பொருளை வானவர்கோனை* கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்* செழு நிலத்து உயிர்களும் மற்றும்*
படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை* பங்கயத்து அயன் அவன் அனைய*
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி* மண் அளவிட்டவன் தன்னை*
அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க* அலை கடல் துயின்ற அம்மானை*
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
உயர் மணி மகுடம் சூடி நின்றானை* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
'தீமனத்து அரக்கர் திறலழித்தவனே!' என்று சென்று அடைந்தவர் தமக்குத்*
தாய்மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்* தயரதன் மதலையை சயமே*
தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
மல்லை மா முந்நீர் அதர்பட* மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை*
கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க* ஓர் வாளி தொட்டானை*
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்* கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.
வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்* வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை*
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை* கரு முகில் திரு நிறத்தவனை*
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை* கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.
அன்றிய வாணன் ஆயிரம்* தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை*
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்* மேவிய வேத நல் விளக்கை*
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்* கார் முகிலே! என நினைந்திட்டு*
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்* உள்ளத்துள் ஊறிய தேனை*
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்* மங்கையார் வாள் கலிகன்றி*
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்* ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்*
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு* வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்* மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி* கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து* இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்*
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)
பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட* பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி*
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப* ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்* இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங்கணார்தம்*
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே.
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு* பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்*
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி* அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ* மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி*
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே*
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி* வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த*
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட* கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்* எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்*
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை* கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி*
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப* மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்*
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி* ஆடவரை மட மொழியார் முகத்து* இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்* அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன* இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்* மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு*
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்* பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்*
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு* மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த* குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்தன்னால்*
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு* திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
நிலமடந்தைதனை இடந்து புல்கிக்* கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்*
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்* ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்*
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி* எண் திசையும் மண்டலமும் மண்டி*
அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்* முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து* ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்*
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை*
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்* கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன* பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி* சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி* மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ற* எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து* இலங்கை
வவ்விய இடும்பை தீரக்* கடுங் கணை துரந்த எந்தை*
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்* குங்குமம் கழுவிப் போந்த*
தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
மாத்தொழில் மடங்கச் செற்று* மருது இற நடந்து* வன் தாள்
சேத்தொழில் சிதைத்துப்* பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*
நாத்தொழில் மறை வல்லார்கள்* நயந்து அறம் பயந்த வண் கைத்*
தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
தாங்கு அரும் சினத்து வன் தாள்* தடக் கை மா மருப்பு வாங்கி*
பூங்குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து* எருது அடர்த்த எந்தை*
மாங்கனி நுகர்ந்த மந்தி* வந்து வண்டு இரிய* வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கருமகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து* தன்மேல்
வரும்அவள் செவியும் மூக்கும்* வாளினால் தடிந்த எந்தை*
பெருமகள் பேதை மங்கை* தன்னொடும் பிரிவு இலாத*
திருமகள் மருவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கெண்டையும் குறளும் புள்ளும்* கேழலும் அரியும் மாவும்*
அண்டமும் சுடரும் அல்லா* ஆற்றலும் ஆய எந்தை*
ஒண் திறல் தென்னன் ஓட* வட அரசு ஓட்டம் கண்ட*
திண் திறலாளர் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
குன்றமும் வானும் மண்ணும்* குளிர் புனல் திங்களோடு*
நின்றவெம் சுடரும் அல்லா* நிலைகளும் ஆய எந்தை*
மன்றமும் வயலும் காவும்* மாடமும் மணங் கொண்டு* எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
சங்கையும் துணிவும் பொய்யும்* மெய்யும் இத் தரணி ஓம்பும்*
பொங்கிய முகிலும் அல்லாப்* பொருள்களும் ஆய எந்தை*
பங்கயம் உகுத்த தேறல்* பருகிய வாளை பாய*
செங்கயல் உகளும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
பாவமும் அறமும் வீடும்* இன்பமும் துன்பம் தானும்*
கோவமும் அருளும் அல்லாக்* குணங்களும் ஆய எந்தை*
'மூவரில் எங்கள் மூர்த்தி* இவன், என முனிவரோடு*
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
திங்கள் தோய் மாட நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானை*
மங்கையர் தலைவன் வண் தார்க்* கலியன் வாய் ஒலிகள் வல்லார்*
பொங்கு நீர் உலகம் ஆண்டு* பொன்உலகு ஆண்டு* பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்* விளங்குவாரே.
தாஅளந்து உலகம் முற்றும்* தட மலர்ப் பொய்கை புக்கு*
நாவளம் நவின்று அங்கு ஏத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும் நாங்கைக்*
காவளம் பாடிமேய* கண்ணனே! களைகண்நீயே.
மண் இடந்து ஏனம் ஆகி* மாவலி வலி தொலைப்பான்*
விண்ணவர் வேண்டச் சென்று* வேள்வியில் குறை இரந்தாய்!*
துண் என மாற்றார்தம்மைத்* தொலைத்தவர் நாங்கை மேய*
கண்ணனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
உருத்து எழு வாலி மார்வில்* ஒரு கணை உருவ ஓட்டி*
கருத்து உடைத் தம்பிக்கு* இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*
பருத்து எழு பலவும் மாவும்* பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்*
கருத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
முனைமுகத்து அரக்கன் மாள* முடிகள் பத்து அறுத்து வீழ்த்து* ஆங்கு
அனையவற்கு இளையவற்கே* அரசு அளித்து அருளினானே*
சுனைகளில் கயல்கள் பாயச்* சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்*
கனை கழல் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
பட அரவு உச்சிதன்மேல்* பாய்ந்து பல் நடங்கள்செய்து*
மடவரல் மங்கைதன்னை* மார்வகத்து இருத்தினானே!*
தடவரை தங்கு மாடத்* தகு புகழ் நாங்கை மேய*
கடவுளே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மல்லரை அட்டு மாள* கஞ்சனை மலைந்து கொன்று*
பல் அரசு அவிந்து வீழப்* பாரதப் போர் முடித்தாய்*
நல் அரண் காவின் நீழல்* நறை கமழ் நாங்கை மேய*
கல் அரண் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மூத்தவற்கு அரசு வேண்டி* முன்பு தூது எழுந்தருளி*
மாத்தமர் பாகன் வீழ* மத கரி மருப்பு ஒசித்தாய்*
பூத்தமர் சோலை ஓங்கி* புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்*
காத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
ஏவிளங் கன்னிக்கு ஆகி* இமையவர் கோனைச் செற்று*
காவளம் கடிது இறுத்துக்* கற்பகம் கொண்டு போந்தாய்*
பூவளம் பொழில்கள் சூழ்ந்த* புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய* கண்ணனே! களைகண் நீயே.
சந்தம் ஆய் சமயம் ஆகி* சமய ஐம் பூதம் ஆகி*
அந்தம் ஆய் ஆதி ஆகி* அரு மறை அவையும் ஆனாய்*
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்* மட மயில் ஆலும் நாங்கைக்*
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும்* நாங்கைக்
காவளம் பாடிமேய* கண்ணனைக் கலியன் சொன்ன*
பாவளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசர் ஆகிக்*
கோ இள மன்னர் தாழக்* குடைநிழல் பொலிவர்தாமே.
கண்ணார் கடல்போல்* திருமேனி கரியாய்*
நண்ணார் முனை* வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
திண்ணார் மதிள் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.
கொந்து ஆர் துளவ* மலர் கொண்டு அணிவானே*
நந்தாத பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்ச்*
செந்தாமரை நீர்த்* திருவெள்ளக்குளத்துள்*
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.
குன்றால் குளிர் மாரி* தடுத்து உகந்தானே*
நின்றாய பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்ச்*
சென்றார் வணங்கும்* திருவெள்ளக்குளத்துள்*
நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே
கான் ஆர் கரிக் கொம்பு* அது ஒசித்த களிறே!*
நானாவகை* நல்லவர் மன்னிய நாங்கூர்த்*
தேன் ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.
வேடு ஆர்* திருவேங்கடம் மேய விளக்கே*
நாடு ஆர் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
சேடு ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்தாய்*
பாடாவருவேன்* வினை ஆயின பாற்றே.
கல்லால் கடலை* அணை கட்டி உகந்தாய்*
நல்லார் பலர்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வா* திருவெள்ளக்குளத்து உறைவானே*
எல்லா இடரும்* கெடுமாறு அருளாயே.
கோலால் நிரை மேய்த்த* எம் கோவலர்கோவே*
நால் ஆகிய* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
சேல் ஆர் வயல் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
மாலே என வல் வினை* தீர்த்தருளாயே.
வாராகம் அது ஆகி* இம் மண்ணை இடந்தாய்*
நாராயணனே!* நல்ல வேதியர் நாங்கூர்ச்*
சீரார் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.
பூவார் திருமாமகள்* புல்கிய மார்பா!*
நாவார் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்த்*
தேவா!* திருவெள்ளக்குளத்து உறைவானே*
'ஆவா! அடியான்* இவன் என்று அருளாயே.
நல்லன்பு உடை* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வன்* திருவெள்ளக்குளத்து உறைவானை*
கல்லின் மலி தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லர் என வல்லவர்* வானவர் தாமே. (2)
கவள யானைக் கொம்புஒசித்த* கண்ணன் என்றும் காமருசீர்*
குவளை மேகம் அன்ன மேனி* கொண்ட கோன் என் ஆனை என்றும்*
தவள மாடம் நீடு நாங்கைத்* தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கஞ்சன் விட்ட வெம் சினத்த* களிறு அடர்த்த காளை என்றும்*
வஞ்சம் மேவி வந்த பேயின்* உயிரை உண்ட மாயன் என்றும்*
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்* தேவ-தேவன் என்று என்று ஓதி*
பஞ்சி அன்ன மெல் அடியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
அண்டர் கோன் என் ஆனை என்றும்* ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும்* நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்*
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை* மன்னும் மாயன் என்று என்று ஓதி*
பண்டுபோல் அன்று என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்* கோல் வளையார் தம்முகப்பே*
மல்லை முந்நீர் தட்டு இலங்கை* கட்டு அழித்த மாயன் என்றும்*
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பல் வளையாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
அரக்கர் ஆவி மாள அன்று* ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற*
குரக்கரசன் என்றும்* கோல வில்லி என்றும் மா மதியை*
நெருக்கும் மாடம் நீடு நாங்கை* நின்மலன்தான் என்று என்று ஓதி*
பரக்கழிந்தாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாதன் என்றும் நானிலம் சூழ்*
வேலை அன்ன கோல மேனி* வண்ணன் என்றும்*
மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பாலின் நல்ல மென் மொழியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
நாடி என்தன் உள்ளம் கொண்ட* நாதன் என்றும்* நான்மறைகள்-
தேடி என்றும் காண மாட்டாச்* செல்வன் என்றும்*
சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பாடகம் சேர் மெல்அடியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்* ஒண் சுடரோடு உம்பர் எய்தா*
நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்* தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பலரும் ஏச என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கண்ணன் என்றும் வானவர்கள்* காதலித்து மலர்கள் தூவும்*
எண்ணன் என்றும் இன்பன் என்றும்* ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*
திண்ண மாடம் நீடு நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பண்ணின் அன்ன மென்மொழியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
பாருள் நல்ல மறையோர் நாங்கைப்* பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை*
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்* தாய் மொழிந்த மாற்றம்*
கூர் கொள் நல்ல வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்* இன்பம் நாளும் எய்துவாரே.(2)
நும்மைத் தொழுதோம்* நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்*
இம்மைக்கு இன்பம் பெற்றோம்* எந்தாய் இந்தளூரீரே*
எம்மைக் கடிதாக் கருமம் அருளி* ஆவா! என்று இரங்கி*
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்* நாங்கள் உய்யோமே?
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!* மருவினிய
மைந்தா* அம் தண் ஆலி மாலே!* சோலை மழ களிறே!*
நந்தா விளக்கின் சுடரே!* நறையூர் நின்ற நம்பீ* என்
எந்தாய்! இந்தளூராய்!* அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்
பேசுகின்றது இதுவே* வையம் ஈர் அடியால் அளந்த*
மூசி வண்டு முரலும்* கண்ணி முடியீர்*
உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து* இங்கு அயர்த்தோம்*
அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்* இந்தளூரீரே!
ஆசை வழுவாது ஏத்தும்* எமக்கு இங்கு இழுக்காய்த்து* அடியோர்க்கு
தேசம் அறிய* உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*
காசின் ஒளியில் திகழும் வண்ணம்* காட்டீர் எம் பெருமான்*
வாசி வல்லீர்! இந்தளூரீர்!* வாழ்ந்தே போம் நீரே!
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்* திசையும் இரு நிலனும்*
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால்* அடியோம் காணோமால்*
தாய் எம் பெருமான்* தந்தை தந்தை ஆவீர்* அடியோமுக்
கே எம் பெருமான் அல்லீரோ நீர்* இந்தளூரீரே!
சொல்லாது ஒழியகில்லேன்* அறிந்த சொல்லில்* நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க* எண்ணியிருந்தீர் அடியேனை*
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்* நமக்கு இவ் உலகத்தில்*
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்* இந்தளூரீரே!
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள* எம்மைப் பணி அறியா*
வீட்டீர் இதனை வேறே சொன்னோம்* இந்தளூரீரே*
காட்டீர் ஆனீர்* நும்தம் அடிக்கள் காட்டில்* உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன* நாங்கள் உய்யோமே.
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்* முழுதும் நிலைநின்ற*
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்* வண்ணம் எண்ணுங்கால்*
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்* புரையும் திருமேனி*
இன்ன வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே!
எந்தை தந்தை தம்மான் என்று என்று* எமர் ஏழ் அளவும்*
வந்து நின்ற தொண்டரோர்க்கே* வாசி வல்லீரால்*
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்* சிறிதும் திருமேனி*
இந்த வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே.
ஏர் ஆர் பொழில் சூழ்* இந்தளூரில் எந்தை பெருமானைக்*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலிசெய்த*
சீர் ஆர் இன் சொல் மாலை* கற்றுத் திரிவார் உலகத்தில்*
ஆர் ஆர் அவரே* அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்* ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து* பெரு நிலம் அளந்தவன் கோயில்*
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்* எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்* திருவெள்ளியங்குடி அதுவே. (2)
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு* அரக்கர் தம் சிரங்களை உருட்டி*
கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்* கண்ணனார் கருதிய கோயில்*
பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி* பொதும்பிடை வரி வண்டு மிண்டி*
தேன்இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்* திருவெள்ளியங்குடி அதுவே.
கடு விடம் உடைய காளியன் தடத்தைக்* கலக்கி முன் அலக்கழித்து*
அவன்தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்*
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்*
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்* திருவெள்ளியங்குடிஅதுவே.
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த* காளமேகத் திரு உருவன்*
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற* பரமனார் பள்ளிகொள் கோயில்*
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்* தொகு திரை மண்ணியின் தென்பால்*
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்* திருவெள்ளியங்குடி அதுவே.
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து* பாரதம் கையெறிந்து* ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த* செங்கண்மால் சென்று உறை கோயில்*
ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி* எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி*
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற* திருவெள்ளியங்குடி அதுவே.
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற* கடல் அரக்கர் தம் சேனை*
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த* கோல வில் இராமன் தன் கோயில்*
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்* ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி*
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்* திருவெள்ளியங்குடி அதுவே.
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த* மாவலி வேள்வியில் புக்கு*
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு* திக்கு உற வளர்ந்தவன் கோயில்*
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்* அரி அரி என்று அவை அழைப்ப*
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்* திருவெள்ளியங்குடி அதுவே.
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்* அசுரர் தம் பெருமானை* அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட* மாயனார் மன்னிய கோயில்*
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்* பதித்த பல் மணிகளின் ஒளியால்*
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய* திருவெள்ளியங்குடி அதுவே.
குடிகுடி ஆகக் கூடி நின்று அமரர்* குணங்களே பிதற்றி நின்று ஏத்த*
அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற* ஆழியான் அமர்ந்து உறை கோயில்*
கடிஉடைக் கமலம் அடியிடை மலர* கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய*
வடிவுஉடை அன்னம் பெடையொடும் சேரும்* வயல் வெள்ளியங்குடி அதுவே.
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்* பார் இடந்து எயிற்றினில் கொண்டு*
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற* திருவெள்ளியங்குடியானை*
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்* ஆள்வர் இக்குரை கடல் உலகே. (2)
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்* என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய* கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க* எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்* புள்ளம்பூதங்குடி தானே.(2)
கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து* உலகம் கைப்படுத்து*
பொள்ளைக் கரத்த போதகத்தின்* துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*
பள்ளச் செறுவில் கயல் உகள* பழனக் கழனி-அதனுள் போய*
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்* புள்ளம்பூதங்குடி தானே.
மேவா அரக்கர் தென் இலங்கை* வேந்தன் வீயச் சரம் துரந்து*
மாவாய் பிளந்து மல் அடர்த்து* மருதம் சாய்த்த மாலது இடம்*
காஆர் தெங்கின் பழம் வீழ* கயல்கள் பாய குருகு இரியும்*
பூஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
வெற்பால் மாரி பழுது ஆக்கி* விறல் வாள் அரக்கர் தலைவன் தன்*
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்* துணித்த வல் வில் இராமன் இடம்*
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்* கவின் ஆர் கூடம் மாளிகைகள்*
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
மையார் தடங் கண் கருங் கூந்தல்* ஆய்ச்சி மறைய வைத்த தயிர்*
நெய்யார் பாலோடு அமுது செய்த* நேமி அங் கை மாயன் இடம்*
செய்யார் ஆரல் இரை கருதிச்* செங் கால் நாரை சென்று அணையும்*
பொய்யா நாவின் மறையாளர்* புள்ளம்பூதங்குடிதானே.
மின்னின் அன்ன நுண் மருங்குல்* வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா*
மன்னு சினத்த மழ விடைகள்* ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்* வரி வண்டு இசை பாட*
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி* மாரி பழுதா நிரை காத்து*
சடையான் ஓட அடல் வாணன்* தடந் தோள் துணித்த தலைவன் இடம்*
குடியா வண்டு கள் உண்ண* கோல நீலம் மட்டு உகுக்கும*
புடை ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
இறையான் கையில் நிறையாத* முண்டம் நிறைத்த எந்தை இடம்*
மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்*
பொறையால் மிக்க அந்தணர் வாழ்* புள்ளம்பூதங்குடி தானே.
துன்னி மண்ணும் விண் நாடும்* தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்*
அன்னம் ஆகி அரு மறைகள்* அருளிச்செய்த அமலன் இடம்*
மின்னு சோதி நவமணியும்* வேயின் முத்தும் சாமரையும்*
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்* புள்ளம்பூதங்குடி தானே.
கற்றா மறித்து காளியன்தன்* சென்னி நடுங்க நடம்பயின்ற*
பொன் தாமரையாள் தன் கேள்வன்* புள்ளம்பூதங்குடி தன்மேல*
கற்றார் பரவும் மங்கையர் கோன்* கார் ஆர் புயல்கைக் கலிகன்றி*
சொல்தான் ஈர் ஐந்து இவை பாட* சோர நில்லா துயர் தாமே.
தாம்* தம் பெருமை அறியார்*
தூது வேந்தர்க்கு ஆய* வேந்தர் ஊர்போல்*
காந்தள் விரல்* மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும்* கூடலூரே.
செறும் திண்* திமில் ஏறு உடைய* பின்னை
பெறும் தண் கோலம்* பெற்றார் ஊர்போல்*
நறும் தண் தீம்* தேன் உண்ட வண்டு*
குறிஞ்சி பாடும்* கூடலூரே.
பிள்ளை உருவாய்த்* தயிர் உண்டு* அடியேன்
உள்ளம் புகுந்த* ஒருவர் ஊர்போல்*
கள்ள நாரை* வயலுள்* கயல்மீன்
கொள்ளை கொள்ளும்* கூடலூரே.
கூற்று ஏர் உருவின்* குறள் ஆய்* நிலம் நீர்
ஏற்றான் எந்தை* பெருமான் ஊர்போல்*
சேற்று ஏர் உழவர்* கோதைப் போது ஊண்*
கோல் தேன் முரலும்* கூடலூரே.
தொண்டர் பரவ* சுடர் சென்று அணவ*
அண்டத்து அமரும்* அடிகள் ஊர்போல்*
வண்டல் அலையுள்* கெண்டை மிளிர*
கொண்டல் அதிரும்* கூடலூரே.
தக்கன் வேள்வி* தகர்த்த தலைவன்*
துக்கம் துடைத்த* துணைவர் ஊர்போல்*
எக்கல் இடு* நுண் மணல்மேல்* எங்கும்
கொக்கின் பழம் வீழ்* கூடலூரே.
கருந் தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும் ஊர்போல*
பெருந் தண் முல்லைப்* பிள்ளை ஓடிக்*
குருந்தம் தழுவும்* கூடலூரே.
கலை வாழ்* பிணையோடு அணையும்* திருநீர்
மலை வாழ் எந்தை* மருவும் ஊர்போல்*
இலை தாழ் தெங்கின்* மேல்நின்று* இளநீர்க்
குலை தாழ் கிடங்கின்* கூடலூரே.
பெருகு காதல் அடியேன்* உள்ளம்-
உருகப் புகுந்த* ஒருவர் ஊர் போல்*
அருகு கைதை மலர* கெண்டை
குருகு என்று அஞ்சும்* கூடலூரே.
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்
மேவித் திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாட* பாவம் போமே.
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை* மூவெழுகால்
கொன்ற தேவ* நின் குரை கழல் தொழுவது ஓர் வகை* எனக்கு அருள்புரியே*
மன்றில் மாம் பொழில் நுழைதந்து* மல்லிகை மௌவலின் போது அலர்த்தி*
தென்றல் மா மணம் கமழ்தர வரு* திருவெள்ளறை நின்றானே.
வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி* முன்பரிமுகமாய்*
இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய* மாருதம் வீதியின்வாய*
திசை எலாம் கமழும் பொழில் சூழ்* திருவெள்ளறை நின்றானே.
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்* உடலகம் இரு பிளவாக்*
கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!* எனக்கு அருள்புரியே,
மையின் ஆர்தரு வரால் இனம் பாய* வண்தடத்திடைக் கமலங்கள்*
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்* திருவெள்ளறை நின்றானே.
வாம் பரி உக மன்னர்தம் உயிர் செக* ஐவர்கட்கு அரசு அளித்த*
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!* நின் காதலை அருள் எனக்கு*
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்* வாய்அது துவர்ப்பு எய்த*
தீம் பலங்கனித் தேன் அது நுகர்* திருவெள்ளறை நின்றானே.
மான வேல் ஒண் கண் மடவரல்* மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்*
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!* எனக்கு அருள்புரியே*
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி* வெண்முறுவல் செய்து அலர்கின்ற*
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்* திருவெள்ளறை நின்றானே.
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ* அமுதினைக் கொடுத்தளிப்பான்*
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!* நின் அடிமையை அருள் எனக்கு*
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்* தையலார் குழல் அணைவான்*
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை* திருவெள்ளறை நின்றானே.
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி* அரக்கன் தன் சிரம் எல்லாம்*
வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!* எனக்கு அருள்புரியே*
மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்* தாமரை மலர் வார்ந்த*
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்* திருவெள்ளறை நின்றானே.
முன் இவ் ஏழ் உலகு உணர்வுஇன்றி* இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த*
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே,
மன்னு கேதகை சூதகம் என்று இவை* வனத்திடைச் சுரும்பு இனங்கள்*
தென்ன என்ன வண்டு இன் இசை முரல்* திருவெள்ளறை நின்றானே.
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல்இடம் முழுதினையும்*
பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து எழுவேன்* எனக்கு அருள்புரியே,*
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி* வண்டு உழிதர* மாஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத்* திருவெள்ளறை நின்றானே.
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்* திருவெள்ளறை அதன்மேய*
அஞ்சனம் புரையும் திரு உருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சு உலாவிய வேல் வலவன்* கலிகன்றி சொல் ஐஇரண்டும்*
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே.
உந்திமேல் நான்முகனைப் படைத்தான்* உலகு உண்டவன்
எந்தை பெம்மான்* இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்* புனல் காவிரி*
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்* தென் அரங்கமே.
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்* மணி நீள் முடி*
பைகொள் நாகத்து அணையான்* பயிலும் இடம் என்பரால்*
தையல் நல்லார் குழல் மாலையும்* மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்* தென் அரங்கமே.
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று* மாவலி கையில் நீர
கொண்ட* ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்*
வண்டு பாடும் மது வார் புனல்* வந்து இழி காவிரி*
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்* நகர் பாழ்பட*
வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு* இடம் என்பரால்*
துளைக் கை யானை மருப்பும் அகிலும்* கொணர்ந்து உந்தி* முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே.
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்* வான் புக*
அம்பு தன்னால் முனிந்த* அழகன் இடம் என்பரால்*
உம்பர் கோனும் உலகு ஏழும்* வந்து ஈண்டி வணங்கும்* நல
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
கலை உடுத்த அகல் அல்குல்* வன் பேய் மகள் தாய் என*
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்* வாழ் இடம் என்பரால்*
குலை எடுத்த கதலிப்* பொழிலூடும் வந்து உந்தி* முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே.
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்* சகடமும் காலினால்*
துஞ்ச வென்ற சுடர் ஆழியான்* வாழ் இடம் என்பரால்*
மஞ்சு சேர் மாளிகை* நீடு அகில் புகையும் மா மறையோர்*
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்* தென் அரங்கமே
ஏனம் மீன் ஆமையோடு* அரியும் சிறு குறளும் ஆய*
தானும்ஆய* தரணித் தலைவன் இடம் என்பரால்*
வானும் மண்ணும் நிறையப்* புகுந்து ஈண்டி வணங்கும்* நல்
தேனும் பாலும் கலந்தன்னவர்* சேர் தென் அரங்கமே
சேயன் என்றும் மிகப் பெரியன்* நுண் நேர்மையன் ஆய* இம்
மாயை ஆரும் அறியா* வகையான் இடம் என்பரால்*
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து* ஆர் புனல் காவிர*
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
அல்லி மாதர் அமரும்* திரு மார்வன் அரங்கத்தைக்*
கல்லின் மன்னு மதிள்* மங்கையர்-கோன் கலிகன்றி சொல்*
நல்லிசை மாலைகள்* நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர் தாம் உலகு ஆண்டு* பின் வான் உலகு ஆள்வரே.
வெருவாதாள் வாய்வெருவி* வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்*
மருவாளால் என் குடங்கால்* வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்* வண்டு ஆர் கொண்டல்-
உருவாளன் வானவர்தம் உயிராளன்* ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட-
திருவாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே!
கலை ஆளா அகல் அல்குல்* கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்*
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?' என்னும்* மெய்ய
மலையாளன் வானவர்தம் தலையாளன்* மராமரம் ஏழ்எய்த வென்றிச்
சிலையாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே!
மான் ஆய மென் நோக்கி* வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்*
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்* திறம் பேசி உறங்காள் காண்மின்*
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக* நந்தன் பெற்ற
ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
தாய் வாயில் சொல் கேளாள்* தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்* பேசில் நங்காய்*
மா மாயன் என் மகளைச் செய்தனகள்* மங்கைமீர்! மதிக்கிலேனே!
பூண் முலைமேல் சாந்து அணியாள்* பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள*
ஏண் அறியாள் எத்தனையும்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நாள் மலராள் நாயகன் ஆய்* நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
'தாது ஆடு வன மாலை தாரானோ?' என்று என்றே தளர்ந்தாள் காண்மின்*
யாதானும் ஒன்று உரைக்கில்* எம் பெருமான் திருவரங்கம்' என்னும்* பூமேல்-
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்* மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற-
தூதாளன் என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சொல்லுகேனே?
வார் ஆளும் இளங் கொங்கை* வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்* எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள்* இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*
தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்* ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த-
தேராளன் என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் செப்புகேனே?
உறவு ஆதும் இலள் என்று என்று* ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால*
மறவாதே எப்பொழுதும்* மாயவனே! மாதவனே!' என்கின்றாளால்*
பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்* விண்ணோர்தங்கள
அறவாளன்* என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
பந்தோடு கழல் மருவாள்* பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்*
வந்தானோ திருவரங்கன்* வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*
சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி*
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
சேல் உகளும் வயல் புடை சூழ்* திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த*
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்* தாய் மொழிந்த அதனை* நேரார்
காலவேல் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்*
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்* பொன்உலகில் வாழ்வர்தாமே.
கைம்மான மழ களிற்றை* கடல் கிடந்த கருமணியை*
மைம்மான மரகதத்தை* மறை உரைத்த திருமாலை*
எம்மானை எனக்கு என்றும் இனியானை* பனி காத்த
அம்மானை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
பேரானை* குறுங்குடி எம் பெருமானை* திருத்தண்கால்
ஊரானை* கரம்பனூர் உத்தமனை* முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும்* மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது தென் அரங்கத்தே.
ஏன் ஆகி உலகு இடந்து* அன்று இரு நிலனும் பெரு விசும்பும*
தான் ஆய பெருமானை* தன் அடியார் மனத்து என்றும்*
தேன் ஆகி அமுது ஆகித்* திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்*
ஆன்-ஆயன் ஆனானைக்* கண்டது தென் அரங்கத்தே.
வளர்ந்தவனைத் தடங் கடலுள்* வலி உருவில் திரி சகடம்*
தளர்ந்து உதிர உதைத்தவனை* தரியாது அன்று இரணியனைப்-
பிளந்தவனை* பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்* பண்டு ஒருநாள்
அளந்தவனை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
நீர் அழல் ஆய்* நெடு நிலன் ஆய் நின்றானை* அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானை* கண்டார் பின் காணாமே*
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்* பின் மறையோர் மந்திரத்தின்*
ஆர் அழலால் உண்டானைக்* கண்டது தென் அரங்கத்தே.
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்* தவ நெறியை* தரியாது
கஞ் சனைக் கொன்று* அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை*
வெம் சினத்த கொடுந் தொழிலோன்* விசை உருவை அசைவித்த*
அம் சிறைப் புள் பாகனை* யான் கண்டது தென் அரங்கத்தே.
சிந்தனையை தவநெறியை* திருமாலை* பிரியாது-
வந்து எனது மனத்து இருந்த* வடமலையை வரி வண்டு ஆர்-
கொந்து அணைந்த பொழில் கோவல்* உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
அந்தணனை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
துவரித்த உடையவர்க்கும்* தூய்மை இல்லாச் சமணர்க்கும்*
அவர்கட்கு அங்கு அருள் இல்லா* அருளானை* தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும்* எம்மாற்கும் எம் அனைக்கும்*
அமரர்க்கும் பிரானாரைக்* கண்டது தென் அரங்கத்தே.
பொய் வண்ணம் மனத்து அகற்றி* புலன் ஐந்தும் செல வைத்து*
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு* மெய்ந் நின்ற வித்தகனை*
மை வண்ணம் கரு முகில்போல்* திகழ் வண்ணம் மரகதத்தின்*
அவ் வண்ண வண்ணனை* யான் கண்டது தென் அரங்கத்தே.
ஆ மருவி நிரை மேய்த்த* அணி அரங்கத்து அம்மானைக்*
காமரு சீர்க் கலிகன்றி* ஒலிசெய்த மலி புகழ் சேர்*
நா மருவு தமிழ்மாலை* நால் இரண்டோடு இரண்டினையும்*
தாம் மருவி வல்லார்மேல்* சாரா தீவினை தாமே.
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்* பதங்களின் பொருளும்*
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்* பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்* ஏழு மா மலைகளும் விசும்பும்*
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்* எண் இல் பல் குணங்களே இயற்ற*
தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்* சுற்றி நின்று அகலாப் பந்தமும்*
பந்தம் அறுப்பது ஓர்* மருந்தும்பான்மையும்* பல் உயிர்க்கு எல்லாம்*
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்* வானமும் தானவர் உலகும்*
துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி* தொல்லை நான்மறைகளும் மறைய*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி* பிறங்கு இருள் நிறம் கெட* ஒருநாள்-
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக* மாசுணம் அதனொடும் அளவி*
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற* படுதிரை விசும்பிடைப் படர*
சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்* தேவரும் தாம் உடன் திசைப்ப*
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்* இரணியன் இலங்கு பூண் அகலம்*
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து* பொழிதரும் அருவி ஒத்து இழிய*
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்* விண் உறக் கனல் விழித்து எழுந்தது*
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய* அடல் புரை எழில் திகழ் திரள் தோள்*
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி* மற்று அவன் அகல் விசும்பு அணைய*
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச* அறிதுயில் அலை கடல் நடுவே*
ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து* இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரிசிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட மலையால்*
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்* ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்* உலகில்-
சூழி மால் யானைத் துயர் கெடுத்து* இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி* பகலவன் ஒளி கெடப்* பகலே-
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்* ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
மால் ஆய் ஆல் இலை வளர்ந்து* மணி முடி வானவர் தமக்குச
சேயன் ஆய்* அடியோர்க்கு அணியன் ஆய் வந்து* என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்*
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து* பொரு திரை மா நதி புடை சூழ்ந்து*
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த* அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்று அறுப்பாரே.
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி* மற்று அவற்கு இன் அருள் சுரந்து*
மாழை மான் மட நோக்கி உன் தோழி* உம்பி எம்பி என்று ஒழிந்திலை* உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து* அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு* மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை* உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்* செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*
கோது இல் வாய்மையினாயொடும் உடனே* உண்பன் நான் என்ற ஒண் பொருள்* எனக்கும
ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை* வைகு தாமரை வாங்கிய வேழம்*
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற* மற்று அது நின் சரண் நினைப்ப*
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்* கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து* உன
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்* வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்*
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு* அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்* கொடிய செய்வன உள* அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்* மலர் அடி கண்ட மா மறையாளன்*
தோகை மா மயில் அன்னவர் இன்பம்* துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே* போதுவாய் என்ற பொன் அருள்* எனக்கும
ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை* மதியாத வெம் கூற்றம்-
தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்* தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்* எண்ணிய பேர் அருள்* எனக்கும்-
அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்* உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்*
காதல் என் மகன் புகல் இடம் காணேன்* கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய* குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்* எந்தை! நின் சரண் என்னுடை மனைவி*
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்* கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து* உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்* தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு*
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து* அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு* அடியேன் அறிந்து* உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்* ஒன்னலர்தங்களை வெல்லும்*
ஆடல்மா வலவன் கலிகன்றி* அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை* எந்தையை நெடுமாலை நினைந்த*
பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே.
கை இலங்கு ஆழி சங்கன்* கரு முகில் திரு நிறத்தன்*
பொய் இலன் மெய்யன்தன் தாள்* அடைவரேல் அடிமை ஆக்கும*
செய் அலர் கமலம் ஓங்கு* செறி பொழில் தென் திருப்பேர்*
பை அரவுஅணையான் நாமம்* பரவி நான் உய்ந்த ஆறே. (2)
வங்கம் ஆர் கடல்கள் ஏழும்* மலையும் வானகமும் மற்றும்*
அம் கண் மா ஞாலம் எல்லாம்* அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*
திங்கள் மா முகில் அணவு* செறி பொழில் தென் திருப்பேர்*
எங்கள் மால் இறைவன் நாமம்* ஏத்தி நான் உய்ந்த ஆறே.
ஒருவனை உந்திப் பூமேல்* ஓங்குவித்து ஆகம்தன்னால்*
ஒருவனைச் சாபம் நீக்கி* உம்பர் ஆள் என்று விட்டான்*
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த* பெரு நகர் அரவு அணைமேல்*
கரு வரை வண்ணன்தன் பேர்* கருதி நான் உய்ந்த ஆறே.
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி* உலகு எலாம் திரியும் ஈசன்*
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன* ஒண் புனலை ஈந்தான்*
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த* செறி வயல் தென் திருப்பேர்*
வானவர்தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே.
வக்கரன் வாய் முன் கீண்ட* மாயனே என்று வானோர்
புக்கு* அரண் தந்தருளாய் என்ன* பொன் ஆகத்தானை*
நக்கு அரி உருவம் ஆகி* நகம் கிளர்ந்து இடந்து உகந்த*
சக்கரச் செல்வன் தென்பேர்த்* தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே.
விலங்கலால் கடல் அடைத்து* விளங்கிழை பொருட்டு* வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன்* இருபது புயம் துணித்தான்*
நலம் கொள் நான்மறை வல்லார்கள்* ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு*
மலங்கு பாய் வயல் திருப்பேர்* மருவி நான் வாழ்ந்த ஆறே.
வெண்ணெய் தான் அமுதுசெய்ய* வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி*
கண்ணி ஆர் குறுங் கயிற்றால்* கட்ட வெட்டொன்று இருந்தான்*
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* வேலை
வண்ணனார் நாமம் நாளும்* வாய் மொழிந்து உய்ந்த ஆறே.
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய* ஆய்ப்பாடி தன்னுள்*
கொம்பு அனார் பின்னை கோலம்* கூடுதற்கு ஏறு கொன்றான்*
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* மேவும்-
எம்பிரான் நாமம் நாளும்* ஏத்தி நான் உய்ந்த ஆறே.
நால் வகை வேதம் ஐந்து வேள்வி* ஆறு அங்கம் வல்லார்*
மேலை வானவரின் மிக்க* வேதியர் ஆதி காலம்*
சேல் உகள் வயல் திருப்பேர்ச்* செங் கண் மாலோடும் வாழ்வார்*
சீல மா தவத்தர் சிந்தை ஆளி* என் சிந்தையானே.
வண்டு அறை பொழில் திருப்பேர்* வரி அரவுஅணையில் பள்ளி-
கொண்டு உறைகின்ற மாலைக்* கொடி மதிள் மாட மங்கைத்*
திண் திறல் தோள் கலியன்* செஞ்சொலால் மொழிந்த மாலை*
கொண்டு இவை பாடி ஆடக்* கூடுவர் நீள் விசும்பே. (2)
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு* நீர் கெழு விசும்பும் அவை ஆய்*
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை* அவை ஆய பெருமான்*
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு* தட மார்வர் தகைசேர்*
நாதன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே. (2)
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும்* ஒழியாமை முன நாள்*
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல* ஐயன்அவன் மேவும் நகர்தான்*
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு* மலர் கிண்டி அதன்மேல்*
நைவளம் நவிற்று பொழில்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்* ஒழியாமை முன நாள்*
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த* தட மார்வர் தகை சேர்*
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி* கங்குல் வயல் சூழ்*
நம்பன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என* வந்த அசுரர்*
இறைகள் அவைநெறுநெறு என வெறியஅவர் வயிறு அழல* நின்ற பெருமான்*
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல* அடிகொள் நெடு மா*
நறைசெய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என* வந்த அசுரர்*
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக* நொடி ஆம் அளவு எய்தான்*
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்* இவை அம்கை உடையான்*
நாளும் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்* துணை ஆக முன நாள்*
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்* இனிது மேவும் நகர்தான்*
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்* எழில் ஆர் புறவு சேர்*
நம்பி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்* நந்தன் மதலை*
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ* நின்ற நகர்தான்*
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்* மயில்கள் ஆடு பொழில் சூழ்*
நந்தி பணிசெய்த நகர்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று* முனியாளர் திரு ஆர்*
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு* கூட எழில் ஆர்*
மண்ணில் இதுபோல நகர் இல்லை என* வானவர்கள் தாம் மலர்கள் தூய்*
நண்ணி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
வங்கம் மலி பௌவம்அது மா முகடின் உச்சி புக* மிக்க பெருநீர்*
அங்கம் அழியார் அவனது ஆணை* தலை சூடும் அடியார் அறிதியேல்*
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி* எங்கும் உளதால்*
நங்கள் பெருமான் உறையும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
நறை செய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்*
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்* அவை அம் கை உடையானை* ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல* கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்*
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்* முழுது அகலுமே.
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு* பண்டை நம் வினை கெட என்று* அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று* அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து* அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே!*
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்* பெண் அமுது உண்ட எம் பெருமானே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட* தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ* நனி மலை சிலை வளைவு செய்து* அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்* உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்*
கலை தரு குழவியின் உருவினை ஆய்* அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்* சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்*
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று* அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்,
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்* ஏர் கெழும் உலகமும் ஆகி* முத
லார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்* சீர் கெழு நான்மறை ஆனவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்* இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்*
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்* இருக்கினில் இன் இசை ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
காதல் செய்து இளையவர் கலவி தரும்* வேதனை வினை அது வெருவுதல் ஆம்*
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்!* போது அலர் நெடுமுடிப் புண்ணியனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்* காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்*
ஓதல் செய் நான்மறை ஆகி* உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே!
பூ மரு பொழில் அணி* விண்ணகர் மேல்*
காமரு சீர்க்* கலிகன்றி சொன்ன*
பா மரு தமிழ்* இவை பாட வல்லார்*
வாமனன் அடி* இணை மருவுவரே*
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்* பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன்* ஐம்புலன்கள் கடன் ஆயின* வாயில் ஒட்டி
அறுத்தேன்* ஆர்வச் செற்றம் அவைதம்மை* மனத்து அகற்றி
வெறுத்தேன்* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
மறந்தேன் உன்னை முன்னம்* மறந்த மதி இல் மனத்தால்*
இறந்தேன் எத்தனையும்* அதனால் இடும்பைக் குழியில்*
பிறந்தே எய்த்து ஒழிந்தேன்* பெருமான்! திரு மார்பா!*
சிறந்தேன் நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே
மான் ஏய் நோக்கியர்தம்* வயிற்றுக் குழியில் உழைக்கும்*
ஊன் ஏய் ஆக்கை தன்னை* உதவாமை உணர்ந்து உணர்ந்து*
வானே! மா நிலமே!* வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
பிறிந்தேன் பெற்ற மக்கள்* பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன்* நீ பணித்த அருள் என்னும்* ஒள் வாள் உருவி
எறிந்தேன்* ஐம்புலன்கள் இடர் தீர* எறிந்து வந்து
செறிந்தேன்* நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே.
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்* பல்லாண்டு இசைப்ப*
ஆண்டார் வையம் எல்லாம்* அரசு ஆகி* முன் ஆண்டவரே-
மாண்டார் என்று வந்தார்* அந்தோ! மனைவாழ்க்கை-தன்னை*
வேண்டேன் நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
கல்லா ஐம்புலன்கள் அவை* கண்டவாறு செய்யகில்லேன்*
மல்லா! மல் அமருள் மல்லர் மாள* மல் அடர்த்த!*
மல்லா மல்லல் அம் சீர்* மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
வேறா யான் இரந்தேன்* வெகுளாது மனக்கொள் எந்தாய்!*
ஆறா வெம் நரகத்து* அடியேனை இடக் கருதி*
கூற ஐவர் வந்து குமைக்கக்* குடிவிட்டவரைத்*
தேறாது உன் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
தீ வாய் வல் வினையார்* உடன் நின்று சிறந்தவர்போல்*
மேவா வெம் நரகத்து இட* உற்று விரைந்து வந்தார்*
மூவா வானவர்தம் முதல்வா!* மதி கோள் விடுத்த
தேவா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே
போது ஆர் தாமரையாள்* புலவி குல வானவர்தம்
கோதா* கோது இல் செங்கோல்* குடை மன்னர் இடை நடந்த
தூதாதூ* மொழியாய் சுடர்போல்* என் மனத்து இருந்த
வேதா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே
தேன் ஆர் பூம் புறவில்* திருவிண்ணகர் மேயவனை*
வான் ஆரும் மதிள் சூழ்* வயல் மங்கையர்கோன் மருவார்*
ஊன் ஆர் வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்*
கோன் ஆய் வானவர்தம்* கொடி மா நகர் கூடுவரே.
துறப்பேன் அல்லேன்* இன்பம் துறவாது* நின் உருவம்
மறப்பேன் அல்லேன்* என்றும் மறவாது* யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன்* பிறவாமை பெற்றது* நின்
திறத்தேன் ஆதன்மையால்* திருவிண்ணகரானே. (2)
துறந்தேன் ஆர்வச் செற்றச்* சுற்றம் துறந்தமையால்*
சிறந்தேன் நின் அடிக்கே* அடிமை திருமாலே*
அறம்தான் ஆய்த் திரிவாய்* உன்னை என் மனத்து அகத்தே*
திறம்பாமல் கொண்டேன்* திருவிண்ணகரானே.
மான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
கோனே! குறுங்குடியுள் குழகா!* திருநறையூர்த்
தேனே* வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே
சாந்து ஏந்து மென் முலையார்* தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன்* அரு நரகத்து அழுந்தும்* பயன் படைத்தேன்*
போந்தேன் புண்ணியனே!* உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன்* நின் அடைந்தேன்* திருவிண்ணகரானே
மற்று ஓர் தெய்வம் எண்ணேன்* உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன்* பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்*
வற்றா நீள் கடல் சூழ்* இலங்கை இராவணனைச்
செற்றாய்* கொற்றவனே!* திருவிண்ணகரானே.
மை ஒண் கருங் கடலும்* நிலனும் மணி வரையும்*
செய்ய சுடர் இரண்டும்* இவை ஆய நின்னை* நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன்* உண்மையால் இனி * யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன்* திருவிண்ணகரானே.
வேறே கூறுவது உண்டு* அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே* நீ பணியாது அடை* நின் திருமனத்து*
கூறேன் நெஞ்சு தன்னால்* குணம் கொண்டு* மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால்* திருவிண்ணகரானே.
முளிந்தீந்த வெம் கடத்து* மூரிப் பெருங் களிற்றால்*
விளிந்தீந்த மா மரம்போல்* வீழ்ந்தாரை நினையாதே*
அளிந்து ஓர்ந்த சிந்தை* நின்பால் அடியேற்கு* வான் உலகம்
தெளிந்தே என்று எய்துவது?* திருவிண்ணகரானே.
சொல்லாய் திரு மார்வா!* உனக்கு ஆகித் தொண்டு பட்ட
நல்லேனை* வினைகள் நலியாமை* நம்புநம்பீ*
மல்லா! குடம் ஆடீ!* மதுசூதனே* உலகில்
செல்லா நல் இசையாய்!* திருவிண்ணகரானே.
தார் ஆர் மலர்க் கமலத்* தடம் சூழ்ந்த தண் புறவில்*
சீர் ஆர் நெடு மறுகின்* திருவிண்ணகரானைக்*
கார் ஆர் புயல் தடக் கைக்* கலியன் ஒலி மாலை*
ஆர் ஆர் இவை வல்லார்* அவர்க்கு அல்லல் நில்லாவே.
கண்ணும் சுழன்று பீளையோடு* ஈளை வந்து ஏங்கினால்*
பண் இன் மொழியார்* பைய நடமின் என்னாதமுன்*
விண்ணும் மலையும்* வேதமும் வேள்வியும் ஆயினான்*
நண்ணும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொங்கு உண் குழலார்* கூடி இருந்து சிரித்து* நீர்
இங்கு என் இருமி* எம்பால் வந்தது? என்று இகழாதமுன்*
திங்கள் எரி கால்* செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*
நங்கள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொங்கு ஆர் குழலார்* கூடி இருந்து சிரித்து* எம்மை
எம் கோலம் ஐயா!* என் இனிக் காண்பது? என்னாதமுன்*
செங்கோல் வலவன்* தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்*
நம் கோன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொம்பும் அரவமும்* வல்லியும் வென்ற நுண் ஏர் இடை*
வம்பு உண் குழலார்* வாசல் அடைத்து இகழாதமுன்*
செம் பொன் கமுகு இனம் தான்* கனியும் செழும் சோலை சூழ்*
நம்பன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
விலங்கும் கயலும்* வேலும் ஒண் காவியும் வென்ற கண்*
சலம் கொண்ட சொல்லார்* தாங்கள் சிரித்து இகழாத முன்*
மலங்கும் வராலும்* வாளையும் பாய் வயல் சூழ்தரு*
நலம் கொள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
மின் நேர் இடையார்* வேட்கையை மாற்றியிருந்து*
என் நீர் இருமி* எம்பால் வந்தது என்று இகழாதமுன்*
தொல் நீர் இலங்கை மலங்க* விலங்கு எரி ஊட்டினான்*
நல் நீர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
வில் ஏர் நுதலார்* வேட்கையை மாற்றி சிரித்து* இவன்
பொல்லான் திரைந்தான் என்னும்* புறன் உரை கேட்பதன்முன்*
சொல் ஆர் மறை நான்கு ஓதி* உலகில் நிலாயவர்*
நல்லார் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்* மதனன் என்றார்தம்மைக்*
கேள்மின்கள் ஈளையோடு* ஏங்கு கிழவன் என்னாதமுன்*
வேள்வும் விழவும்* வீதியில் என்றும் அறாத ஊர்*
நாளும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்* காதன்மை விட்டிட*
குனி சேர்ந்து உடலம்* கோலில் தளர்ந்து இளையாதமுன்*
பனி சேர் விசும்பில்* பால்மதி கோள் விடுத்தான் இடம்*
நனி சேர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
பிறை சேர் நுதலார்* பேணுதல் நம்மை இலாதமுன்*
நறை சேர் பொழில் சூழ்* நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*
கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்* கலிகன்றி சொல்*
மறவாது உரைப்பவர்* வானவர்க்கு இன் அரசு ஆவரே. (2)
கலங்க முந்நீர் கடைந்து* அமுதம் கொண்டு* இமையோர்
துளங்கல் தீர* நல்கு சோதிச் சுடர் ஆய*
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்* உடையான் ஊர்*
நலம் கொள் வாய்மை* அந்தணர் வாழும் நறையூரே.
முனை ஆர் சீயம் ஆகி* அவுணன் முரண் மார்வம்*
புனை வாள் உகிரால்* போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்*
சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்* குயில் கூவும்*
நனை ஆர் சோலை சூழ்ந்து* அழகு ஆய நறையூரே.
ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட*
சேனைத் தொகையைச் சாடி* இலங்கை செற்றான் ஊர்*
மீனைத் தழுவி வீழ்ந்து எழும்* மள்ளர்க்கு அலமந்து*
நானப் புதலில்* ஆமை ஒளிக்கும்நறையூரே.
உறி ஆர் வெண்ணெய் உண்டு* உரலோடும் கட்டுண்டு*
வெறி ஆர் கூந்தல்* பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்*
பொறி ஆர் மஞ்ஞை* பூம் பொழில்தோறும் நடம் ஆட*
நறு நாள்மலர்மேல்* வண்டு இசை பாடும் நறையூரே.
விடை ஏழ் வென்று* மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்*
நடையால் நின்ற* மருதம் சாய்த்த நாதன் ஊர்*
பெடையோடு அன்னம்* பெய்வளையார் தம்பின்சென்று*
நடையோடு இயலி* நாணி ஒளிக்கும் நறையூரே.
பகு வாய் வன் பேய்* கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு*
புகு வாய் நின்ற* போதகம் வீழப் பொருதான் ஊர்*
நெகு வாய் நெய்தல்* பூ மது மாந்தி கமலத்தின்*
நகு வாய் மலர்மேல்* அன்னம் உறங்கும் நறையூரே*
முந்து நூலும் முப்புரி நூலும்* முன் ஈந்த*
அந்தணாளன் பிள்ளையை* அஞ்ஞான்று அளித்தான் ஊர்*
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி* புள் ஓடி*
நந்து வாரும்* பைம் புனல் வாவி நறையூரே.
வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்* விறல் வியூகம்*
விள்ள சிந்துக்கோன் விழ* ஊர்ந்த விமலன் ஊர்*
கொள்ளைக் கொழு மீன்* உண் குருகு ஓடி பெடையோடும்*
நள்ளக் கமலத்* தேறல் உகுக்கும் நறையூரே.
பாரை ஊரும் பாரம் தீரப்* பார்த்தன்தன்*
தேரை ஊரும்* தேவதேவன் சேறும் ஊர்*
தாரை ஊரும்* தண் தளிர் வேலி புடை சூழ*
நாரை ஊரும்* நல் வயல் சூழ்ந்த* நறையூரே.
தாமத் துளப* நீள் முடி மாயன் தான் நின்ற*
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த* நறையூர்மேல்*
காமக் கதிர் வேல் வல்லான்* கலியன் ஒலி மாலை*
சேமத் துணை ஆம்* செப்பும் அவர்க்கு திருமாலே.
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்* அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்*
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்* பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு* மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்*
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்* குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்*
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை* இணைஅடிக்கீழ் இனிது இருப்பீர்! இன வண்டு ஆலும்*
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி* உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள*
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி* பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா*
செவ்வி மாதிரம் எட்டும் தோளா* அண்டம் திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற* கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்*
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பைங் கண் ஆள்அரி உரு ஆய் வெருவ நோக்கி* பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி*
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்* அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற* விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த*
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
அன்று உலகம் மூன்றினையும் அளந்து* வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு*
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு* விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து*
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்* புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்* தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்*
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்* தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்*
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை* விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட*
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி* முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே*
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்* இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய* வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்*
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்* மன் எல்லாம் முன் அவியச் சென்று* வென்றிச்
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்* சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்*
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு* எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட*
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தார் ஆளன் தண் அரங்க ஆளன்* பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேர் ஆளன்* ஆயிரம் பேர் உடைய ஆளன்* பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற* படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த*
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்* திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்*
பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்* புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்* பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி*
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்* விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்* விண்ட நிசாசரரைத்*
தோளும் தலையும் துணிவு எய்தச்* சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*
வேளும் சேயும் அனையாரும்* வேல்கணாரும் பயில் வீதி*
நாளும் விழவின் ஒலி ஓவா* நறையூர் நின்ற நம்பியே.
முனி ஆய் வந்து மூவெழுகால்* முடி சேர் மன்னர் உடல் துணிய*
தனி வாய் மழுவின் படை ஆண்ட* தார் ஆர் தோளான் வார் புறவில்*
பனி சேர் முல்லை பல் அரும்ப* பானல் ஒருபால் கண் காட்ட*
நனி சேர் கமலம் முகங்காட்டும்* நறையூர் நின்ற நம்பியே.
தெள் ஆர் கடல்வாய் விட வாயச்* சின வாள் அரவில் துயில் அமர்ந்து*
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்* இரந்தான் மாவலி மண்*
புள் ஆர் புறவில் பூங் காவி* பொலன் கொள் மாதர் கண் காட்ட*
நள் ஆர் கமலம் முகம் காட்டும்* நறையூர் நின்ற நம்பியே.
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று* உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்*
விளியா ஆர்க்க ஆப்புண்டு* விம்மி அழுதான் மென் மலர்மேல்*
களியா வண்டு கள் உண்ண* காமர் தென்றல் அலர் தூற்ற*
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்* நறையூர் நின்ற நம்பியே.
வில் ஆர் விழவில் வட மதுரை* விரும்பி விரும்பா மல் அடர்த்து*
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்* பாய்ந்தான் காளியன்மேல்*
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்* சோமுச் செய்யும் தொழிலினோர்*
நல்லார் மறையோர் பலர் வாழும்* நறையூர் நின்ற நம்பியே.
வள்ளி கொழுநன் முதலாய* மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட* விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்*
பள்ளி கமலத்திடைப் பட்ட* பகு வாய் அலவன் முகம் நோக்கி*
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த* நறையூர் நின்ற நம்பியே.
மிடையா வந்த வேல் மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
குடையா வரை ஒன்று எடுத்து* ஆயர்கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
படையான்* வேதம் நான்கு ஐந்து வேள்வி* அங்கம் ஆறு இசை ஏழ்*
நடையா வல்ல அந்தணர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே.
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி* கூந்தல் முடிக்க பாரதத்து*
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க* சங்கம் வாய் வைத்தான்*
செந்தாமரைமேல் அயனோடு* சிவனும் அனைய பெருமையோர்*
நந்தா வண் கை மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே.
ஆறும் பிறையும் அரவமும்* அடம்பும் சடைமேல் அணிந்து* உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்* இறையோன் சென்று குறை இரப்ப*
மாறு ஒன்று இல்லா வாச நீர்* வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்*
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய* நறையூர் நின்ற நம்பியே
நன்மை உடைய மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியைக்*
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
பன்னி உலகில் பாடுவார்* பாடு சாரா பழ வினைகள்*
மன்னி உலகம் ஆண்டு போய்* வானோர் வணங்க வாழ்வாரே.
மான் கொண்ட தோல்* மார்வின் மாணி ஆய்* மாவலி மண்
தான் கொண்டு* தாளால் அளந்த பெருமானை*
தேன் கொண்ட சாரல்* திருவேங்கடத்தானை*
நான் சென்று நாடி* நறையூரில் கண்டேனே. (2)
முந்நீரை முன் நாள்* கடைந்தானை* மூழ்த்த நாள்
அந்நீரை மீன் ஆய்* அமைத்த பெருமானை*
தென் ஆலி மேய* திருமாலை எம்மானை*
நல்நீர் சூழ்* நறையூரில் கண்டேனே.
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதிதேவனை* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே.
ஓடா அரி ஆய்* இரணியனை ஊன் இடந்த*
சேடு ஆர் பொழில் சூழ்* திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய்* மாலை முடியானை*
நாள்தோறும் நாடி* நறையூரில் கண்டேனே.
கல் ஆர் மதிள் சூழ்* கதி இலங்கைக் கார் அரக்கன்*
வல் ஆகம் கீள* வரி வெம் சரம் துரந்த
வில்லானை* செல்வ விபீடணற்கு வேறாக*
நல்லானை நாடி* நறையூரில் கண்டேனே .
உம்பர் உலகோடு* உயிர் எல்லாம் உந்தியில்*
வம்பு மலர்மேல்* படைத்தானை மாயோனை*
அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை*
நம்பனை நாடி* நறையூரில் கண்டேனே.
கட்டு ஏறு நீள் சோலைக்* காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை* மெய்யம் அமர்ந்த பெருமானை*
மட்டு ஏறு கற்பகத்தை* மாதர்க்கு ஆய்* வண் துவரை
நட்டானை நாடி* நறையூரில் கண்டேனே.
மண்ணின் மீ பாரம் கெடுப்பான்* மற மன்னர்*
பண்ணின்மேல் வந்த* படை எல்லாம் பாரதத்து*
விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை*
நண்ணி நான் நாடி* நறையூரில் கண்டேனே.
பொங்கு ஏறு நீள் சோதிப்* பொன் ஆழி தன்னோடும்*
சங்கு ஏறு கோலத்* தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்* குடந்தைக் கிடந்தானை*
நம் கோனை நாடி* நறையூரில் கண்டேனே. (2)
மன்னும் மதுரை* வசுதேவர் வாழ் முதலை*
நல் நறையூர்* நின்ற நம்பியை* வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான்* கலியன் ஒலி வல்லார்*
பொன்உலகில் வானவர்க்குப்* புத்தேளிர் ஆகுவரே. (2)
பெடை அடர்த்த மட அன்னம்* பிரியாது* மலர்க் கமல
மடல் எடுத்து மது நுகரும்* வயல் உடுத்த திருநறையூர்*
முடை அடர்த்த சிரம் ஏந்தி* மூவுலகும் பலி திரிவோன்*
இடர் கெடுத்த திருவாளன்* இணைஅடியே அடை நெஞ்சே!
கழி ஆரும் கன சங்கம்* கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்*
பழி ஆரும் விறல் அரக்கன்* பரு முடிகள்அவை சிதற*
அழல் ஆரும் சரம் துரந்தான்* அடிஇணையே அடை நெஞ்சே!
சுளை கொண்ட பலங்கனிகள்* தேன் பாய* கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமித்* திகழ் சோலைத் திருநறையூர்*
வளை கொண்ட வண்ணத்தன்* பின் தோன்றல்* மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன்* அடிஇணையே அடை நெஞ்சே!
துன்று ஒளித் துகில் படலம்* துன்னி எங்கும் மாளிகைமேல்*
நின்று ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
மன்று ஆரக் குடம் ஆடி* வரை எடுத்து மழை தடுத்த*
குன்று ஆரும் திரள் தோளன்* குரை கழலே அடை நெஞ்சே!
அகில் குறடும் சந்தனமும்* அம் பொன்னும் அணி முத்தும்*
மிகக் கொணர்ந்து திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
பகல் கரந்த சுடர் ஆழிப்* படையான் இவ் உலகு ஏழும்*
புகக் கரந்த திரு வயிற்றன்* பொன்அடியே அடை நெஞ்சே !
பொன் முத்தும் அரி உகிரும்* புழைக் கை மா கரிக் கோடும்*
மின்னத் தண் திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
மின் ஒத்த நுண் மருங்குல்* மெல்இயலைத்* திரு மார்வில்
மன்ன தான் வைத்து உகந்தான்* மலர் அடியே அடை நெஞ்சே!
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்* செங் கமலத்து இடை இடையில்*
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்* பயன் விளைக்கும் திருநறையூர்*
கார் தழைத்த திரு உருவன்* கண்ணபிரான் விண்ணவர்கோன்*
தார் தழைத்த துழாய் முடியன்* தளிர் அடியே அடை நெஞ்சே!
குலை ஆர்ந்த பழுக் காயும்* பசுங் காயும் பாளை முத்தும்*
தலை ஆர்ந்த இளங் கமுகின்* தடஞ் சோலைத் திருநறையூர்*
மலை ஆர்ந்த கோலம் சேர்* மணி மாடம் மிக மன்னி*
நிலை ஆர நின்றான்* தன் நீள் கழலே அடை நெஞ்சே!
மறை ஆரும் பெரு வேள்விக்* கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்*
நிறை ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
பிறை ஆரும் சடையானும்* பிரமனும் முன் தொழுது ஏத்த*
இறை ஆகி நின்றான் தன்* இணைஅடியே அடை நெஞ்சே!
திண் களக மதிள் புடை சூழ்* திருநறையூர் நின்றானை*
வண் களகம் நிலவு எறிக்கும்* வயல் மங்கை நகராளன்*
பண்கள் அகம் பயின்ற சீர்ப்* பாடல்இவை பத்தும் வல்லார்*
விண்கள் அகத்து இமையவர் ஆய்* வீற்றிருந்து வாழ்வாரே.
கிடந்த நம்பி குடந்தை மேவி* கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி* எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
விடம்தான் உடைய அரவம் வெருவ* செருவில் முன நாள்* முன்
தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு* மிக்க தாள் ஆளன்*
இடந்தான் வையம் கேழல் ஆகி* உலகை ஈர் அடியால்*
நடந்தானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
பூணாது அனலும்* தறுகண் வேழம் மறுக* வளை மருப்பைப்
பேணான் வாங்கி* அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*
பாணா வண்டு முரலும் கூந்தல்* ஆய்ச்சி தயிர் வெண்ணெய்*
நாணாது உண்டான் நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
கல் ஆர் மதிள் சூழ்* கச்சி நகருள் நச்சி* பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க* இருந்த அம்மான்* இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால்* முனிந்த எந்தை* விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
குடையா வரையால்* நிரை முன் காத்த பெருமான்* மருவாத
விடைதான் ஏழும் வென்றான்* கோவல் நின்றான்* தென் இலங்கை
அடையா அரக்கர் வீயப்* பொருது மேவி வெம் கூற்றம்*
நடையா உண்ணக் கண்டான் நாமம்* நமோ நாராயணமே.
கான எண்கும் குரங்கும்* முசுவும் படையா* அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற* வென்றி அம்மான்* எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய* திருமால் திருநாமம்*
நானும் சொன்னேன் நமரும் உரைமின்* நமோ நாராயணமே.
நின்ற வரையும் கிடந்த கடலும்* திசையும் இரு நிலனும்*
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி* நின்ற அம்மானார்*
குன்று குடையா எடுத்த* அடிகளுடைய திருநாமம்*
நன்று காண்மின் தொண்டீர்! சொன்னேன்* நமோ நாராயணமே.
கடுங் கால் மாரி கல்லே பொழிய* அல்லே எமக்கு என்று
படுங்கால்* நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்*
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி* நிரையைச் சிரமத்தால்*
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்* நமோ நாராயணமே.
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை* நில மா மகள் மலர் மா
மங்கை* பிரமன் சிவன் இந்திரன்* வானவர் நாயகர் ஆய*
எங்கள் அடிகள் இமையோர்* தலைவருடைய திருநாமம்*
நங்கள் வினைகள் தவிர உரைமின்* நமோ நாராயணமே.
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று* நறையூர் நெடுமாலை*
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு* நம்பி நாமத்தை*
காவித் தடங் கண் மடவார் கேள்வன்* கலியன் ஒலி மாலை*
மேவிச் சொல்ல வல்லார் பாவம்* நில்லா வீயுமே.
கறவா மட நாகு* தன் கன்று உள்ளினால்போல்*
மறவாது அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
நறவு ஆர் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பி*
பிறவாமை எனைப் பணி* எந்தை பிரானே!*
வற்றா முதுநீரொடு* மால் வரை ஏழும்*
துற்று ஆக முன் துற்றிய* தொல் புகழோனே*
அற்றேன் அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
பெற்றேன் அருள் தந்திடு* என் எந்தை பிரானே!*
தாரேன் பிறர்க்கு* உன் அருள் என்னிடை வைத்தாய்*
ஆரேன் அதுவே* பருகிக் களிக்கின்றேன்*
கார் ஏய் கடலே மலையே* திருக்கோட்டி*
ஊரே உகந்தாயை* உகந்து அடியேனே*.
புள் வாய் பிளந்த* புனிதா! என்று அழைக்க*
உள்ளே நின்று* என் உள்ளம் குளிரும் ஒருவா!*
கள்வா!* கடல்மல்லைக் கிடந்த கரும்பே*
வள்ளால்! உன்னை* எங்ஙனம் நான் மறக்கேனே*
வில் ஏர் நுதல்* நெடுங் கண்ணியும் நீயும்*
கல் ஆர் கடுங் கானம்* திரிந்த களிறே*
நல்லாய் நர நாரணனே!* எங்கள் நம்பி*
சொல்லாய் உன்னை* யான் வணங்கித் தொழும் ஆறே *
பனி ஏய் பரங் குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய் தொண்டரோம்* பருகும் இன் அமுது ஆய
கனியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*.
கதியேல் இல்லை* நின் அருள் அல்லது எனக்கு*
நிதியே!* திருநீர்மலை நித்திலத் தொத்தே*
பதியே பரவித் தொழும்* தொண்டர் தமக்குக்
கதியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*
அத்தா! அரியே! என்று* உன்னை அழைக்க *
பித்தா என்று பேசுகின்றார்* பிறர் என்னை*
முத்தே! மணி மாணிக்கமே!* முளைக்கின்ற
வித்தே* உன்னை எங்ஙனம் நான் விடுகேனே!*
தூயாய்! சுடர் மா மதிபோல்* உயிர்க்கு எல்லாம்*
தாய் ஆய் அளிக்கின்ற* தண் தாமரைக் கண்ணா!*
ஆயா! அலை நீர் உலகு ஏழும்* முன் உண்ட
வாயா* உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?*
வண்டு ஆர் பொழில் சூழ்* நறையூர் நம்பிக்கு* என்றும்-
தொண்டு ஆய்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
தொண்டீர்! இவை பாடுமின்* பாடி நின்று ஆட*
உண்டே விசும்பு* உம்தமக்கு இல்லை துயரே* (2)
புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து* என்னை உள்ளம் கொண்ட-
கள்வா! என்றலும்* என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*
உள்ளே நின்று உருகி* நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்*
நள்ளேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!*
ஓடா ஆள் அரியின்* உரு ஆய் மருவி என் தன்-
மாடே வந்து* அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா*
பாடேன் தொண்டர் தம்மைக்* கவிதைப் பனுவல்கொண்டு*
நாடேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!*.
எம்மானும் எம் அனையும்* என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்*
அம்மானும் அம்மனையும்* அடியேனுக்கு ஆகி நின்ற*
நல் மான ஒண் சுடரே!* நறையூர் நின்ற நம்பீ!* உன்-
மைம் மான வண்ணம் அல்லால்* மகிழ்ந்து ஏத்தமாட்டேனே*
சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்* உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
உறைவாய்* என் நெஞ்சின் உள்ளே* உறைவாய் உறைந்ததுதான்*
அறியாது இருந்தறியேன் அடியேன்* அணி வண்டு கிண்டும்*
நறை வாரும் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பீயோ!*
நீண்டாயை வானவர்கள்* நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்*
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு* நான் அடிமை
பூண்டேன்* என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்*
நான்தான் உனக்கு ஒழிந்தேன்* நறையூர் நின்ற நம்பீயோ!*
எம் தாதை தாதை அப்பால்* எழுவர் பழ அடிமை
வந்தார்* என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்*
அந்தோ! என் ஆர் உயிரே!* அரசே அருள் எனக்கு*
நந்தாமல் தந்த எந்தாய்!* நறையூர் நின்ற நம்பீயோ!*
மன் அஞ்ச ஆயிரம் தோள்* மழுவில் துணித்த மைந்தா*
என் நெஞ்சத்துள் இருந்து* இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்*
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்* வளைத்து வைத்தேன்*
நல் நெஞ்ச அன்னம் மன்னும்* நறையூர் நின்ற நம்பீயோ!*
எப்போதும் பொன் மலர் இட்டு* இமையோர் தொழுது* தங்கள்-
கைப்போது கொண்டு இறைஞ்சி* கழல்மேல் வணங்க நின்றாய்*
இப்போது என் நெஞ்சின் உள்ளே* புகுந்தாயைப் போகல் ஒட்டேன்-
நல் போது வண்டு கிண்டும்* நறையூர் நின்ற நம்பீயோ!*
ஊன் நேர் ஆக்கைதன்னை* உழந்து ஓம்பி வைத்தமையால்*
யான் ஆய் என்தனக்கு ஆய்* அடியேன் மனம் புகுந்த
தேனே!* தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்*
நானே எய்தப் பெற்றேன்* நறையூர் நின்ற நம்பீயோ!*
நல் நீர் வயல் புடை சூழ்* நறையூர் நின்ற நம்பியைக்*
கல் நீர மால் வரைத் தோள்* கலிகன்றி மங்கையர்கோன்*
சொல் நீர சொல்மாலை* சொல்லுவார்கள் சூழ் விசும்பில்-
நல் நீர்மையால் மகிழ்ந்து* நெடுங் காலம் வாழ்வாரே. (2)
சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்* செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு* என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை* மரம் ஏழ் எய்த மைந்தனை*
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை* நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்*
கனவில் கண்டேன் இன்று கண்டமையால்* என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)
தாய் நினைந்த கன்றே ஒக்க* என்னையும் தன்னையே நினைக்கச் செய்து* தான் எனக்கு
ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை* அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை* மகரக் குழைக் காதனை* மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை* என் அன்பனை அன்றி ஆதரியேனே.
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்* மற்று ஓர் நெஞ்சு அறியான்* அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து* தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்கோவினை* குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை* எம்பிரானை எத்தால் மறக்கேனே?*
உரங்களால் இயன்ற மன்னர் மாள* பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று*
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்* எம்பிரானை* வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி* ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று*
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி* என் மனம் தாழ்ந்து நில்லாதே*.
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது* அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு* தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை* உம்பர்க்கு அணி ஆய் நின்ற*
வேங்கடத்து அரியை பரி கீறியை* வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை* தேனை நன் பாலினை அன்றி* என் மனம் சிந்தை செய்யாதே*.
எள் தனைப்பொழுது ஆகிலும்* என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்*
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்* தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை* கரும்பு ஈன்ற இன் சாற்றை* காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை* பரவைத் துயில் ஏற்றை* என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே*.
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற* பாலை ஆகி இங்கே புகுந்து* என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்* கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*
விண் உளார் பெருமானை எம்மானை* வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன்* மா மணி வண்ணன் எம் அண்ணல்* வண்ணமே அன்றி வாய் உரையாதே*
இனி எப் பாவம் வந்து எய்தும்? சொல்லீர்* எமக்குஇம்மையே அருள்பெற்றமையால்* அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்* தோற்றத் தொல் நெறியை* வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை* பத்தர் தாம் நுகர்கின்றது ஓர்
கனியை* காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே.
என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும்- என் மனத்தே இருக்கும் புகழ்த்*
தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்* அன்று இடந்தவனை தழலே புரை*
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட* சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்*
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி* என் மனம் போற்றி என்னாதே*
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்* தோன்றல் வாள் கலியன்* திரு ஆலி-
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்* நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்* தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்*
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)
கண் சோர வெம் குருதி வந்து இழிய* வெம் தழல்போல் கூந்தலாளை*
மண் சேர முலை உண்ட மா மதலாய்!* வானவர்தம் கோவே! என்று*
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு* மணி மாடம் மல்கு* செல்வத்-
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்* காண்மின் என் தலைமேலாரே*
அம் புருவ வரி நெடுங் கண்* அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்*
கொம்பு உருவ விளங்கனிமேல்* இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்*
வம்பு அலரும் தண் சோலை* வண் சேறை வான் உந்து கோயில் மேய*
எம் பெருமான் தாள் தொழுவார்* எப்பொழுதும்என் மனத்தே இருக்கின்றாரே*.
மீது ஓடி வாள் எயிறு மின் இலக* முன் விலகும் உருவினாளைக்*
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த* கைத்தலத்தா! என்று நின்று*
தாதோடு வண்டு அலம்பும்* தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி*
போதோடு புனல் தூவும் புண்ணியரே* விண்ணவரின் பொலிகின்றாரே*
தேர் ஆளும் வாள் அரக்கன்* தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ*
போர் ஆளும் சிலைஅதனால்* பொரு கணைகள் போக்குவித்தாய் என்று* நாளும்
தார் ஆளும் வரை மார்பன்* தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்*
பேராளன் பேர் ஓதும் பெரியோரை* ஒருகாலும் பிரிகிலேனே*.
வந்திக்கும் மற்றவர்க்கும்* மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்*
முந்திச் சென்று அரி உரு ஆய்* இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*
சந்தப் பூ மலர்ச் சோலைத்* தண் சேறை எம் பெருமான் தாளை* நாளும்-
சிந்திப்பார்க்கு என் உள்ளம்* தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே*.
பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த* பண்பாளா என்று நின்று*
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்* துணை இலேன் சொல்லுகின்றேன்*
வண்டு ஏந்தும் மலர்ப் புறவின்* வண் சேறைஎம் பெருமான் அடியார் தம்மைக்*
கண்டேனுக்கு இது காணீர்* என் நெஞ்சும்கண் இணையும் களிக்கும் ஆறே*.
பை விரியும் வரி அரவில்* படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்*
மை விரியும் மணி வரைபோல்* மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்* திரு வடிவைச் சிந்தித்தேற்கு* என்
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்* என் அன்புதானே*.
உண்ணாது வெம் கூற்றம்* ஓவாதபாவங்கள் சேரா* மேலை-
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்* மென் தளிர்போல் அடியினானை*
பண் ஆர வண்டு இயம்பும்* பைம் பொழில் சூழ்தண் சேறை அம்மான் தன்னை*
கண் ஆரக் கண்டு உருகி* கை ஆரத்தொழுவாரைக் கருதுங்காலே*.
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒருகால் கவலை என்னும்*
வெள்ளத்தேற்கு என்கொலோ* விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்-
தள்ள தேன் மணம் நாறும்* தண் சேறை எம் பெருமான் தாளை* நாளும்-
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்* என் உள்ளம் உருகும் ஆறே*.
பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து* வயல் நின்ற பெடையோடு* அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்* தண் சேறை அம்மான் தன்னை*
வா மான் தேர்ப் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்*
தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்* நும் துணைக் கையால் தொழுது நின்றே*.
தந்தை காலில் பெரு விலங்கு* தாள் அவிழ நள் இருட்கண்-
வந்த எந்தை பெருமானார்* மருவி நின்ற ஊர்போலும்*
முந்தி வானம் மழை பொழியும்* மூவா உருவின் மறையாளர்*
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
பாரித்து எழுந்த* படை மன்னர் தம்மை மாள பாரதத்து-
தேரில் பாகன் ஆய் ஊர்ந்த* தேவதேவன் ஊர்போலும்*
நீரில் பணைத்த நெடு வாளைக்கு* அஞ்சிப் போன குருகு இனங்கள்*
ஆரல் கவுளோடு அருகு அணையும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்* சிரங்கள் ஐஇரண்டும்*
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக* உதிர்த்த உரவோன் ஊர்போலும்*
கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்* கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
அம்பு அராவும் கண் மடவார்* ஐம்பால் அணையும் அழுந்தூரே*.
வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி* அடியேன் மனம் புகுந்து* என்-
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்* நின்றார் நின்ற ஊர்போலும்*
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்* போன காதல் பெடையோடும்*
அள்ளல் செறுவில் கயல் நாடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
பகலும் இரவும் தானே ஆய்* பாரும் விண்ணும் தானே ஆய்*
நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி* நின்றார் நின்ற ஊர்போலும்*
துகிலின் கொடியும் தேர்த் துகளும்* துன்னி மாதர் கூந்தல்வாய்*
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
ஏடு இலங்கு தாமரைபோல்* செவ்வாய் முறுவல் செய்தருளி*
மாடு வந்து என் மனம் புகுந்து* நின்றார் நின்ற ஊர்போலும்*
நீடு மாடத் தனிச் சூலம்* போழக் கொண்டல் துளி தூவ*
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
மாலைப் புகுந்து மலர்அணைமேல்* வைகி அடியேன் மனம் புகுந்து* என்-
நீலக் கண்கள் பனி மல்க* நின்றார் நின்ற ஊர்போலும்*
வேலைக் கடல்போல் நெடு வீதி* விண் தோய் சுதை வெண் மணி மாடத்து*
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்* வீதி அழுந்தூரே*
வஞ்சி மருங்குல் இடை நோவ* மணந்து நின்ற கனவகத்து* என்-
நெஞ்சு நிறையக் கைகூப்பி* நின்றார் நின்ற ஊர்போலும்*
பஞ்சி அன்ன மெல் அடி* நல் பாவைமார்கள்* ஆடகத்தின்-
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு* இங்கே நெருநல் எழுந்தருளி*
பொன் அம் கலைகள் மெலிவு எய்த* போன புனிதர் ஊர்போலும்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்* வரி வண்டு இசை பாட*
அன்னம் பெடையோடு உடன் ஆடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
நெல்லில் குவளை கண் காட்ட* நீரில் குமுதம் வாய் காட்ட *
அல்லிக் கமலம் முகம் காட்டும்* கழனி அழுந்தூர் நின்றானை*
வல்லிப் பொதும்பில் குயில் கூவும்* மங்கை வேந்தன் பரகாலன்*
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை* சொல்ல பாவம் நில்லாவே*. (2)
சிங்கம் அது ஆய் அவுணன்* திறல் ஆகம் முன் கீண்டு உகந்த*
சங்கம் இடத்தானை* தழல்ஆழி வலத்தானை*
செங்கமலத் தயனையார்* தென்ணழுந்தையில் மன்னிநின்ற*
அம் கமலக் கண்ணனை* அடியேன் கண்டு கொண்டேனே*.(2)
கோவானார் மடியக்* கொலையார் மழுக்கொண்டு அருளும்*
மூவா வானவனை* முழுநீர் வண்ணனை* அடியார்க்கு-
ஆ! ஆ! என்று இரங்கித்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
தேவாதி தேவனை* யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.
உடையானை* ஒலி நீர் உலகங்கள் படைத்தானை*
விடையான் ஓட அன்று* விறல் ஆழி விசைத்தானை*
அடையார் தென் இலங்கை அழித்தானை* அணி அழுந்தூர்-
உடையானை* அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே*.
குன்றால் மாரி தடுத்தவனை* குல வேழம் அன்று-
பொன்றாமை* அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*
அன்று ஆவின்நறுநெய்* அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்-
நின்றானை* அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.
கஞ்சனைக் காய்ந்தானை* கண்ணமங்கையுள் நின்றானை*
வஞ்சனப் பேய் முலையூடு* உயிர் வாய் மடுத்து உண்டானை*
செஞ்சொல் நான்மறையோர்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
அஞ்சனக் குன்றம் தன்னை* அடியேன் கண்டுகொண்டேனே*.
பெரியானை* அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்*
உரி யானை உகந்தானவனுக்கும்* உணர்வதனுக்கு
அரியானை* அழுந்தூர் மறையோர்கள்* அடிபணியும்
கரியானை* அடியேன் கண்டுகொண்டு களித்தேனே*.
திருவாழ் மார்வன் தன்னை* திசை மண்நீர் எரிமுதலா*
உருவாய் நின்றவனை* ஒலிசேரும் மாருதத்தை*
அருவாய் நின்றவனை* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
கருவார் கற்பகத்தை* கண்டுகொண்டு களித்தேனே*
நிலையாளாக* என்னை யுகந்தானை* நிலமகள்தன்-
முலையாள் வித்தகனை* முதுநான்மறை வீதிதொறும்*
அலையாரும் கடல்போல் முழங்கும்* தென்னழுந்தையில் மன்னி நின்ற*
கலையார் சொற்பொருளைக்* கண்டு கொண்டு களித்தேனே*.
பேரானை* குடந்தைப் பெருமானை* இலங்கு ஒளிசேர்-
வாரார் வனமுலையாள்* மலர்மங்கை நாயகனை,*
ஆரா இன்னமுதை* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
காரார் கருமுகிலை* கண்டு கொண்டு களித்தேனே*. (2)
திறல் முருகனனையார்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
அறமுதல் வனவனை* அணியாலியர் கோன் மருவார்*
கறைநெடு வேல்வலவன்* கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
முறைவழுவாமை வல்லார்* முழுது ஆள்வர் வானுலகே*.
திருவுக்கும் திருஆகிய செல்வா!* தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா*
உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!* உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*
ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்* உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து* ஒழியாது-
அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* (2)
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி* பாவை பூமகள் தன்னொடும் உடனே-
வந்தாய்* என் மனத்தே மன்னி நின்றாய்* மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*
சந்தோகா! பௌழியா! தைத்திரியா!* சாமவேதியனே! நெடுமாலே*
அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்* நீண்ட தோள்உடையாய்* அடியேனைச்-
செய்யாத உலகத்திடைச் செய்தாய்* சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*
பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்* போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்*
ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்* பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்-
வரனே! மாதவனே! மதுசூதா!* மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*
நரனே! நாரணனே! திருநறையூர்!* நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்-
அரனே* ஆதிவராகம் முன்ஆனாய்!* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்* பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து*
பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்* பண்பாளா! பரனே! பவித்திரனே*
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை* கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்*
அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்* சொல்லி நகும் பரிசே* பெற்ற-
தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்- தாடாளா!* தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-
சேயாய்* கிரேத திரேத துவாபர- கலியுகம்* இவை நான்கும் முன்ஆனாய்*
ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!* கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா*
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!* எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்*
பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து* ஐவர்-
அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*
நெடியானே! கடிஆர் கலிநம்பீ!* நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்*
கடிஆர் காளையர்ஐவர் புகுந்து* காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்* கூறைசோறு இவை தந்து எனக்குஅருளி*
அடியேனைப் பணிஆண்டு கொள் எந்தாய்!* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி* கூறை சோறு இவை தா என்று குமைத்து-
போகார்* நான் அவரைப் பொறுக்ககிலேன்* புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே*
தீவாய் நாகணையில் துயில்வானே!* திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்*
ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*
அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்*
கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி- ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*
சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை* தூய மாலை இவைபத்தும் வல்லார்*
மன்னி மன்னவராய் உலகுஆண்டு* மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே* (2)
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்* திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த*
வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்* வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*
எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்* ஐந்து- வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை*
அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* (2)
முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண* முனிவரொடு தானவர்கள் திசைப்ப* வந்து-
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்* பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்*
செந்நெல் மலிகதிர் கவரி வீச* சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி*
அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு* கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*
நிலத்திகழும் மலர்ச்சுடர்ஏய் சோதீ! என்ன* நெஞ்சுஇடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*
மலைத்திகழ் சந்துஅகில் கனகம்மணியும் கொண்டு* வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள்பாய*
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கல் குன்றம்* திகழ்ந்ததுஎன திருஉருவம் பன்றி ஆகி*
இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி* எயிற்றிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்*
புலம்புசிறை வண்டுஒலிப்ப பூகம் தொக்க* பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்கள் ஆல*
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகுஆர் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
சினம்மேவும் அடல்அரியின் உருவம்ஆகி* திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு*
மனம்மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி- மாள உயிர் வவ்விய எம்மாயோன் காண்மின்*
இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை* ஏய்வாய மரகதம்போல் கிளியின்இன் சொல்*
அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி* மாண்உருஆய் மூவடி மாவலியை வேண்டி*
தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித்* தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*
தேன்அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி* செழுமாட மாளிகைகள் கூடம்தோறும்*
ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
பந்துஅணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகி* பகலவன் மீதுஇயங்காத இலங்கை வேந்தன்*
அந்தம்இல் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ* அடுகணையால் எய்துஉகந்த அம்மான் காண்மின்*
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்* திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க*
அந்தணர்தம் ஆகுதியின் புகைஆர் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு- பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து*
வம்புஅவிழும் மலர்க்குழலாள்ஆய்ச்சி வைத்த- தயிர்வெண்ணெய் உண்டுஉகந்த மாயோன் காண்மின்*
செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்* திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
ஊடுஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்* ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற*
நீடுஏறு பெருவலித் தோள்உடைய வென்றி* நிலவுபுகழ் நேமிஅங்கை நெடியோன் காண்மின்*
சேடுஏறு பொழில்தழுவும் எழில்கொள் வீதி* திருவிழவில் மணிஅணிந்த திண்ணை தோறும்*
ஆடுஏறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்* பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை*
அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*
கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்* கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்*
ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்* ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)
கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிகழல் தொழுவீர்*
வெள்ளம் முதுபரவைத்* திரை விரிய கரை எங்கும்-
தெள்ளும் மணிதிகழும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-
உள்ளும்* எனது உள்ளத்துளும்* உறைவாரை உள்ளீரே* (2)
தெருவில் திரிசிறு நோன்பியர்* செஞ்சோற்றொடு கஞ்சி-
மருவிப்* பிரிந்தவர் வாய்மொழி* மதியாது வந்துஅடைவீர்*
திருவில் பொலிமறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
உருவக் குறள்அடிகள் அடி* உணர்மின் உணர்வீரே
பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்* பணியும் சிறு தொண்டீர்!*
அறையும் புனல் ஒருபால்* வயல் ஒருபால் பொழில் ஒருபால்*
சிறைவண்டுஇனம் அறையும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-
உறையும் இறைஅடிஅல்லது* ஒன்று இறையும் அறியேனே*
வான்ஆர் மதி பொதியும் சடை* மழுவாளியொடு ஒருபால்*
தான்ஆகிய தலைவன் அவன்* அமரர்க்குஅதிபதிஆம்*
தேன்ஆர்பொழில் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன்ஆயனது* அடிஅல்லது* ஒன்று அறியேன் அடியேனே*
நந்தா நெடுநரகத்திடை* நணுகாவகை* நாளும்-
எந்தாய்! என* இமையோர் தொழுதுஏத்தும் இடம்* எறிநீர்ச்-
செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அம்தாமரை அடியாய்!* உனதுஅடியேற்கு அருள் புரியே*
முழுநீலமும் மலர்ஆம்பலும்* அரவிந்தமும் விரவிக்*
கழுநீரொடு மடவார்அவர்* கண்வாய் முகம் மலரும்*
செழுநீர்வயல் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனம்*
தொழும்நீர் மைஅதுஉடையார்* அடி தொழுவார் துயர்இலரே*
சேய்ஓங்கு* தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்-
மாயா* எனக்குஉரையாய் இது* மறை நான்கின்உளாயோ?*
தீஓம் புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்-
தாயோ?* உனதுஅடியார் மனத்தாயோ?* அறியேனே* (2)
மைஆர் வரிநீல* மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு*
உய்வான் உனகழலே* தொழுது எழுவேன்* கிளிமடவார்-
செவ்வாய் மொழி பயிலும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஐவாய் அரவுஅணைமேல்* உறை அமலா! அருளாயே*
கருமாமுகில் உருவா!* கனல் உருவா! புனல் உருவா*
பெருமால் வரை உருவா!* பிறஉருவா! நினதுஉருவா!*
திருமாமகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அருமா கடல்அமுதே!* உனது அடியே சரண்ஆமே* (2)
சீர்ஆர் நெடுமறுகின்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஏர்ஆர்முகில் வண்ணன்தனை* இமையோர் பெருமானை*
கார்ஆர் வயல் மங்கைக்குஇறை* கலியன்ஒலி மாலை*
பாரார் இவை பரவித்தொழப்* பாவம் பயிலாவே* (2)
பெரும் புறக்கடலை அடல்ஏற்றினை* பெண்ணை ஆணை எண்இல் முனிவர்க்குஅருள்-
தரும்தவத்தை முத்தின் திரள் கோவையை* பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை*
அரும்பினை அலரை அடியேன் மனத்துஆசையை* அமுதம் பொதிஇன் சுவைக்*
கரும்பினை கனியை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
மெய்ந்நலத் தவத்தை திவத்தைத் தரும்* மெய்யை பொய்யினை கையில் ஓர்' சங்குஉடை*
மைந்நிறக்கடலை கடல் வண்ணனை* மாலை- ஆல்இலைப் பள்ளி கொள் மாயனை*
நென்னலை பகலை இற்றை நாளினை* நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை*
கன்னலை கரும்பினிடைத் தேறலை* கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே*
எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை* வாசவார் குழலாள் மலைமங்கை தன்-
பங்கனைப்* பங்கில் வைத்து உகந்தான் தன்னை* பான்மையை பனி மா மதியம் தவழ்*
மங்குலை சுடரை வடமாமலை- உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்-
கங்குலை* பகலை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*
பேய்முலைத்தலை நஞ்சுஉண்ட பிள்ளையை* தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*
மாயனை மதிள் கோவல்இடைகழி* மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்*
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை* எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*
காசினை மணியை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை* இம்மையை மறுமைக்கு மருந்தினை,*
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை* கையில்ஆழி ஒன்றுஏந்திய
கூற்றினை* குரு மாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*
காற்றினை புனலை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
துப்பனை துரங்கம் படச்சீறிய தோன்றலை* சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை* திருமங்கை மணாளனை* தேவனை திகழும் பவளத்துஒளி
ஒப்பனை* உலகுஏழினை ஊழியை* ஆழிஏந்திய கையனை அந்தணர்
கற்பினை* கழுநீர் மலரும் வயல்* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
திருத்தனை திசை நான்முகன் தந்தையை* தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை* விளங்கும் சுடர்ச் சோதியை* விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய
அருத்தனை* அரியை பரிகீறிய அப்பனை* அப்பில்ஆர் அழல்ஆய் நின்ற
கருத்தனை* களி வண்டுஅறையும் பொழில்* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
வெம்சினக் களிற்றை விளங்காய் விழக்* கன்று வீசிய ஈசனை* பேய்மகள்-
துஞ்ச நஞ்சு சுவைத்துஉண்ட தோன்றலை* தோன்றல் வாள்அரக்கன் கெடத் தோன்றிய-
நஞ்சினை* அமுதத்தினை நாதனை* நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
பண்ணினை பண்ணில் நின்றதுஓர் பான்மையை* பாலுள் நெய்யினை மால்உருஆய் நின்ற-
விண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை* வேள்வியை விளக்கின்ஒளி தன்னை*
மண்ணினை மலையை அலை நீரினை* மாலை மாமதியை மறையோர் தங்கள்-
கண்ணினை* கண்கள் ஆரளவும் நின்று* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று* காதலால் கலி கன்றி உரைசெய்த*
வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றுஇவை* வல்லர்ஆய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவர்ஆய் மகிழ்வு எய்துவர்* மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய -
கண்ண!* நின் தனக்கும் குறிப்புஆகில்- கற்கலாம்* கவியின் பொருள் தானே* (2)
சிலைஇலங்கு பொன்ஆழி* திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,*
மலைஇலங்கு தோள் நான்கே* மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*
முலைஇலங்கு பூம்பயலை* முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
கலைஇலங்கு மொழியாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! (2)
செருவரை முன்ஆசுஅறுத்த* சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,*
பொருவரைமுன் போர்தொலைத்த* பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*
ஒருவரையும் நின்ஒப்பார்* ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
கருவரைபோல் நின்றானை* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! (2)
துன்னுமா மணிமுடிமேல்* துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,*
மின்னுமா மணிமகர குண்டலங்கள்* வில்வீசும் என்கின்றாளால்*
பொன்னின் மாமணி ஆரம்* அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
கன்னிமா மதிள்புடைசூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
தார்ஆய தண்துளப* வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்*
போர்ஆனைக் கொம்புஒசித்த* புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*
ஆரானும் காண்மின்கள்* அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
கார்வானம் நின்றுஅதிரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
அடித்தலமும் தாமரையே* அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,*
முடித்தலமும் பொன்பூணும்* என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*
வடித்தடங்கண் மலரவளோ* வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்*
கடிக்கமலம் கள்உகுக்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
பேர்ஆயிரம் உடைய பேராளன்* பேராளன் என்கின்றாளால்*
ஏர்ஆர் கனமகர குண்டலத்தன்* எண்தோளன் என்கின்றாளால்*
நீர்ஆர் மழைமுகிலே* நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
கார்ஆர் வயல் மருவும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ!
செவ்அரத்த உடைஆடை* அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்*
அவ்அரத்த அடிஇணையும்* அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
மைவளர்க்கும் மணிஉருவம்* மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்*
கைவளர்க்கும் அழலாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
கொற்றப்புள் ஒன்றுஏறி* மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்*
வெற்றிப்போர் இந்திரற்கும்* இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*
பெற்றக்கால் அவன்ஆகம்* பெண்பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
கற்றநூல் மறையாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
வண்டுஅமரும் வனமாலை* மணிமுடிமேல் மணம்நாறும் என்கின்றாளால்*
உண்டுஇவர் பால் அன்பு எனக்குஎன்று* ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*
பண்டுஇவரைக் கண்டுஅறிவது* எவ்ஊரில் யாம்? என்றே பயில்கின்றாளால்*
கண்டவர்தம் மனம்வழங்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
மாவளரும் மென்நோக்கி* மாதராள் மாயவனைக் கண்டாள் என்று*
காவளரும் கடிபொழில்சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
பாவளரும் தமிழ்மாலை* பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
பூவளரும் கற்பகம்சேர்* பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே. (2)
தெள்ளியீர்! தேவர்க்கும்* தேவர் திருத்தக்கீர்!*
வெள்ளியீர் வெய்ய* விழுநிதி வண்ணர்* ஓ!
துள்ளுநீர்க்* கண்ணபுரம் தொழுதாள் இவள்-
கள்வியோ,* கைவளை கொள்வது தக்கதே? (2)
நீள்நிலா முற்றத்து* நின்றுஇவள் நோக்கினாள்,*
காணுமோ!* கண்ணபுரம் என்று காட்டினாள்,*
பாணனார் திண்ணம் இருக்க* இனிஇவள்-
நாணுமோ,?* நன்று நன்று நறையூரர்க்கே.
அருவிசோர் வேங்கடம்* நீர்மலை என்றுவாய்-
வெருவினாள்* மெய்யம் வினவி இருக்கின்றாள்,*
பெருகுசீர்க்* கண்ணபுரம் என்று பேசினாள்-
உருகினாள்* உள்மெலிந்தாள் இது என்கொலோ! (2)
உண்ணும் நாள்இல்லை* உறக்கமும் தான்இல்லை,*
பெண்மையும் சால* நிறைந்திலள் பேதைதான்,*
கண்ணன்ஊர் கண்ணபுரம்* தொழும் கார்க்கடல்-
வண்ணர்மேல்,* எண்ணம் இவட்கு இது என்கொலோ!
கண்ணன்ஊர்* கண்ணபுரம் தொழும் காரிகை,*
பெண்மைஎன் தன்னுடை* உண்மை உரைக்கின்றாள்,*
வெண்ணெய்உண்டு ஆப்புண்ட* வண்ணம் விளம்பினால்,*
வண்ணமும்* பொன்நிறம் ஆவது ஒழியுமே.
வடவரை நின்றும் வந்து* இன்று கணபுரம்,-
இடவகை கொள்வது* யாம்என்று பேசினாள்,*
மடவரல் மாதர் என் பேதை* இவர்க்குஇவள்-
கடவதுஎன்,?* கண்துயில் இன்று இவர் கொள்ளவே.
தரங்கநீர் பேசினும்* தண்மதி காயினும்,*
இரங்குமோ?* எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை* ஊர்-
அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே.
தொண்டுஎல்லாம் நின்அடியே* தொழுது உய்யுமா-
கண்டு,* தான் கண்ணபுரம்* தொழப் போயினாள்*
வண்டுஉலாம் கோதை என் பேதை* மணிநிறம்-
கொண்டுதான்,* கோயின்மை செய்வது தக்கதே?
முள்எயிறு ஏய்ந்தில,* கூழை முடிகொடா,*
தெள்ளியள் என்பதுஓர்* தேசுஇலள் என்செய்கேன்,*
கள்அவிழ் சோலைக்* கணபுரம் கைதொழும்-
பிள்ளையைப்,* பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?
கார்மலி* கண்ணபுரத்து எம் அடிகளைப்,*
பார்மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்,*
சீர்மலி பாடல்* இவைபத்தும் வல்லவர்,*
நீர்மலி வையத்து* நீடு நிற்பார்களே (2)
கரைஎடுத்த சுரிசங்கும்* கனபவளத்து எழுகொடியும்,*
திரைஎடுத்து வருபுனல்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
விரைஎடுத்த துழாய்அலங்கல்* விறல்வரைத்தோள் புடைபெயர*
வரைஎடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரிவளையே. (2)
அரிவிரவு முகில்கணத்தால்* அகில்புகையால் வரையோடும்*
தெரிவுஅரிய மணிமாடத்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
வரிஅரவின் அணைத்துயின்று* மழைமதத்த சிறுதறுகண்,*
கரிவெருவ மருப்புஒசித்தாற்கு* இழந்தேன்என் கனவளையே.
துங்கமா மணிமாட* நெடுமுகட்டின் சூலிகை, போம்*
திங்கள்மா முகில்துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பைங்கண்மால் விடைஅடர்த்து* பனிமதிகோள் விடுத்துஉகந்த*
செங்கண்மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறிவளையே.
கணம்மருவும் மயில்அகவு* கடிபொழில்சூழ் நெடுமறுகின்,*
திணம்மருவு கனமதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
மணம்மருவு தோள்ஆய்ச்சி* ஆர்க்கபோய், உரலோடும்*
புணர்மருதம் இறநடந்தாற்கு* இழந்தேன் என் பொன்வளையே.
வாய்எடுத்த மந்திரத்தால்* அந்தணர்தம் செய்தொழில்கள்*
தீஎடுத்து மறைவளர்க்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
தாய்எடுத்த சிறுகோலுக்கு* உளைந்துஓடி தயிர்உண்ட,*
வாய்துடைத்த மைந்தனுக்கு* இழந்தேன் என் வரிவளையே.
மடல்எடுத்த நெடுந்தாழை* மருங்குஎல்லாம் வளர்பவளம்,*
திடல்எடுத்து சுடர்இமைக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
அடல்அடர்த்து அன்று இரணியனை* முரண்அழிய அணிஉகிரால்,*
உடல்எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே.
வண்டுஅமரும் மலர்ப்புன்னை* வரிநீழல் அணிமுத்தம்,*
தெண்திரைகள் வரத்திரட்டும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
எண்திசையும் எழுகடலும்* இருநிலனும் பெருவிசும்பும்,*
உண்டுஉமிழ்ந்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே.
கொங்குமலி கருங்குவளை* கண்ஆகத் தெண்கயங்கள்*
செங்கமலம் முகம்அலர்த்தும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
வங்கம்மலி தடங்கடலுள்* வரிஅரவின் அணைத்துயின்ற,*
செங்கமல நாபனுக்கு* இழந்தேன் என் செறிவளையே.
வார்ஆளும் இளங்கொங்கை* நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
சீர்ஆளும் வரைமார்வன்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
பேராளன் ஆயிரம்பேர்* ஆயிரவாய் அரவுஅணைமேல்*
பேராளர் பெருமானுக்கு* இழந்தேன் என் பெய்வளையே.
தேமருவு பொழில்புடைசூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்-
வாமனனை,* மறிகடல்சூழ்* வயல்ஆலி வளநாடன்,*
காமருசீர்க் கலிகன்றி* கண்டுஉரைத்த தமிழ்மாலை,*
நாமருவி இவைபாட* வினைஆய நண்ணாவே. (2)
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்,*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலிபுகழ்சேர்,*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர்முடிமேல்,*
வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.! (2)
வேத முதல்வன்* விளங்கு புரிநூலன்,*
பாதம் பரவிப்* பலரும் பணிந்துஏத்தி,*
காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாது நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
விண்ட மலர்எல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*
அண்ட முதல்வன்* அமரர்கள் எல்லாரும்,*
கண்டு வணங்கும்* கண்ணபுரத்து எம்பெருமான்*
வண்டு நறுந்துழாய்* வந்துஊதாய் கோல்தும்பீ!
நீர் மலிகின்றது ஓர்* மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,*
சீர் மலிகின்றது ஓர்* சிங்க உருஆகி,*
கார்மலி வண்ணன்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தார்மலி தண்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
ஏர்ஆர் மலர்எல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*
பார்ஆர் உலகம்* பரவ பெருங்கடலுள்,*
கார்ஆமை ஆன* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தார்ஆர் நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
மார்வில் திருவன்* வலன்ஏந்து சக்கரத்தன்,*
பாரைப் பிளந்த* பரமன் பரஞ்சோதி,*
காரில் திகழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*
தாரில் நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
வாமனன் கற்கி* மதுசூதன் மாதவன்*
தார்மன்னு* தாசரதிஆய தடமார்வன்,*
காமன்தன் தாதை* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாம நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
நீல மலர்கள்* நெடுநீர் வயல் மருங்கில்,*
சால மலர்எல்லாம்* ஊதாதே,* வாள்அரக்கர்-
காலன்* கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,*
கோல நறுந்துழாய்* கொண்டுஊதாய் கோல்தும்பீ!
நந்தன் மதலை* நிலமங்கை நல்துணைவன்,*
அந்தம் முதல்வன்* அமரர்கள் தம்பெருமான்,*
கந்தம் கமழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*
கொந்து நறுந்துழாய்* கொண்டுஊதாய் கோல்தும்பீ!
வண்டு அமரும் சோலை* வயல்ஆலி நல்நாடன்,*
கண்டசீர் வென்றிக்* கலியன் ஒலிமாலை,*
கொண்டல் நிறவண்ணன்* கண்ண புரத்தானைத்,*
தொண்டரோம் பாட* நினைந்துஊதாய் கோல்தும்பீ! (2)
தந்தை காலில் விலங்குஅற* வந்து தோன்றிய தோன்றல்பின்,* தமியேன் தன்-
சிந்தை போயிற்று* திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*
அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்* அவைசுட அதனோடும்,*
மந்த மாருதம் வனமுலை தடவந்து* வலிசெய்வது ஒழியாதே! (2)
மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்* வரைபுரை திருமார்வில்,*
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்* தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது* ஒளியவன் விசும்புஇயங்கும்,*
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன* செய்வது ஒன்று அறியேனே!
ஆயன் மாயமே அன்றி மற்றுஎன்கையில்* வளைகளும் இறைநில்லா,*
பேயின் ஆர்உயிர் உண்டிடும் பிள்ளை* நம் பெண்உயிர்க்கு இரங்குமோ,*
தூய மாமதிக் கதிர்சுடதுணைஇல்லை* இணைமுலை வேகின்றதால்,*
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்* அஞ்சேல் என்பார் இலையே!
கயம்கொள் புண்தலைக் களிறுஉந்து வெம்திறல்* கழல்மன்னர் பெரும்போரில்,*
மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்* வந்திலன், மறிகடல்நீர்*
தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனிஎனும்* தழல் முகந்து இளமுலைமேல்,*
இயங்கும் மாருதம் விலங்கில்என் ஆவியை* எனக்குஎனப் பெறலாமே!
ஏழு மாமரம் துளைபட சிலைவளைத்து* இலங்கையை மலங்குவித்த-
ஆழியான்,* நமக்கு அருளிய அருளொடும்* பகல்எல்லை கழிகின்றதால்,*
தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணைஇல்லை* சுடர்படு முதுநீரில்,*
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவதுஓர்* அந்தி வந்து அடைகின்றதே!
முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட* முழங்குஅழல் எரிஅம்பின்,*
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்* வந்திலன் என்செய்கேன்,*
எரியும் வெம்கதிர் துயின்றது* பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
கரிய நாழிகை ஊழியின் பெரியன* கழியும்ஆறு அறியேனே!
கலங்க மாக்கடல் கடைந்துஅடைத்து* இலங்கையர் கோனது வரைஆகம்,-
மலங்க வெம்சமத்து அடுசரம் துரந்த* எம் அடிகளும் வாரானால்,*
இலங்கு வெம்கதிர் இளமதி அதனொடும்* விடைமணி அடும்,* ஆயன்-
விலங்கல் வேயினது ஓசையும்ஆய்* இனி விளைவது ஒன்றுஅறியேனே!
முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்* முனிவனும் முனிவுஎய்த,*
மழுவினால் மன்னர் ஆர்உயிர் வவ்விய* மைந்தனும் வாரானால்,*
ஒழுகு நுண்பனிக்கு ஒடுங்கிய பேடையை* அடங்க அம்சிறைகோலித்,*
தழுவும் நள்இருள் தனிமையின் கடியதுஓர்* கொடுவினை அறியேனே!
கனம்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்* கனவினில் அவன்தந்த,*
மனம்செய் இன்பம்வந்து உள்புக வெள்கி* என் வளைநெக இருந்தேனை,*
சினம்செய் மால்விடைச் சிறுமணி ஓசை* என் சிந்தையைச் சிந்துவிக்கும்,*
அனந்தல் அன்றிலின் அரிகுரல்* பாவியேன் ஆவியை அடுகின்றதே!
வார்கொள் மென்முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்துமுன் உரைசெய்த,*
கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி ஒலிவல்லார்,*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையவரொடும் கூடுவரே! (2)
தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்* துளங்கா அரக்கர் துளங்க,* முன்-
திண்தோள் நிமிர சிலைவளைய* சிறிதே முனிந்த திருமார்வன்,*
வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை* வடிக்கண் மடந்தை மாநோக்கம்-
கண்டான்,* கண்டு கொண்டுஉகந்த* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்* பொன்ற அன்று புள்ஊர்ந்து*
பெருந்தோள் மாலி தலைபுரள* பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*
இருந்தார் தம்மைஉடன் கொண்டு* அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப*
கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
வல்லி இடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*
அல்லல் செய்து வெம்சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியைக்*
கல்விச் சிலையால் காத்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
மல்லை முந்நீர் அதர்பட* வரிவெம் சிலைகால் வளைவித்து*
கொல்லை விலங்கு பணிசெய்ய* கொடியோன் இலங்கை புகல்உற்று*
தொல்லை மரங்கள் புகப்பெய்து* துவலை நிமிர்ந்து வான்அணவ*
கல்லால் கடலை அடைத்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
ஆமைஆகி அரிஆகி* அன்னம்ஆகி,* அந்தணர்தம்-
ஓமம்ஆகி ஊழிஆகி* உவரி சூழ்ந்த நெடும்புணரி*
சேமமதிள் சூழ்இலங்கைக்கோன்* சிரமும் கரமும் துணித்து,* முன்-
காமன் பயந்தான் கருதும்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
வருந்தாது இரு நீ மடநெஞ்சே* நம்மேல் வினைகள் வாரா,* முன்-
திருந்தா அரக்கர் தென்இலங்கை* செந்தீ உண்ண சிவந்து ஒருநாள்*
பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து* பின்னை மணாளன்ஆகி* முன்-
கருந்தாள் களிறுஒன்று ஒசித்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்* முதலை-தன்னால் அடர்ப்புண்டு*
கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய* அதனுக்கு அருள்புரிந்தான்*
அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு* இளையோற்கு அரசை அருளி* முன்-
கலைமாச் சிலையால் எய்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
மால்ஆய் மனமே! அருந்துயரில்* வருந்தாது இரு நீ, வலிமிக்க*
கால்ஆர் மருதும் காய்சினத்த கழுதும்* கதமா கழுதையும்*
மால்ஆர் விடையும் மதகரியும்* மல்லர் உயிரும் மடிவித்து*
காலால் சகடம் பாய்ந்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
குன்றால் மாரி பழுதுஆக்கி* கொடிஏர் இடையாள் பொருட்டாக*
வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த* வானோர் பெருமான் மாமாயன்*
சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்* திரிகால் சகடம் சினம்அழித்து*
கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை*
திருமா மகளால் அருள்மாரி* செழு நீர்ஆலி வளநாடன்*
மருவுஆர் புயல்கைக் கலிகன்றி* மங்கை வேந்தன் ஒலிவல்லார்*
இருமா நிலத்துக்கு அரசுஆகி* இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.
வியம்உடை விடைஇனம்* உடைதர மடமகள்*
குயம்மிடை தடவரை* அகலம்அது உடையவர்*
நயம்உடை நடைஅனம்* இளையவர் நடைபயில்*
கயம்மிடை கணபுரம்* அடிகள்தம் இடமே. (2)
இணைமலி மருதுஇற* எருதினொடு இகல்செய்து*
துணைமலி முலையவள்* மணம்மிகு கலவியுள்*
மணம்மலி விழவினொடு* அடியவர் அளவிய*
கணம்மலி கணபுரம்* அடிகள்தம் இடமே.
புயல்உறு வரைமழை* பொழிதர மணிநிரை*
மயல்உற வரைகுடை* எடுவிய நெடியவர்*
முயல்துளர் மிளைமுயல் துள* வள விளைவயல்*
கயல்துளு கணபுரம்* அடிகள்தம் இடமே.
ஏதலர் நகைசெய* இளையவர் அளைவெணெய்*
போதுசெய்து அமரிய* புனிதர்நல் விரை* மலர்-
கோதிய மதுகரம்* குலவிய மலர்மகள்*
காதல்செய் கணபுரம்* அடிகள்தம் இடமே. (2)
தொண்டரும் அமரரும்* முனிவரும் தொழுதுஎழ*
அண்டமொடு அகல்இடம்* அளந்தவர் அமர்செய்து*
விண்டவர் பட* மதிள்இலங்கை முன்எரிஎழக்*
கண்டவர் கணபுரம்* அடிகள்தம் இடமே.
மழுவுஇயல் படைஉடை* அவன்இடம் மழைமுகில்*
தழுவிய உருவினர்* திருமகள் மருவிய,*
கொழுவிய செழுமலர்* முழுசிய பறவைபண்*
எழுவிய கணபுரம்* அடிகள்தம் இடமே.
பரிதியொடு அணிமதி* பனிவரை திசைநிலம்*
எரிதியொடு எனஇன* இயல்வினர் செலவினர்*
சுருதியொடு அருமறை* முறைசொலும் அடியவர்*
கருதிய கணபுரம்* அடிகள்தம் இடமே.
படிபுல்கும் அடிஇணை* பலர்தொழ மலர்வைகு*
கொடிபுல்கு தடவரை* அகலம்அது உடையவர்*
முடிபுல்கு நெடுவயல்* படைசெல அடிமலர்*
கடிபுல்கு கணபுரம்* அடிகள்தம் இடமே
புலம்மனும் மலர்மிசை* மலர்மகள் புணரிய*
நிலமகள்என இன* மகளிர்கள் இவரொடும்*
வலம்மனு படையுடை* மணிவணர் நிதிகுவைக்*
கலம்மனு கணபுரம்* அடிகள்தம் இடமே.
மலிபுகழ் கணபுரம்உடைய* எம் அடிகளை*
வலிகெழு மதிள்அயல்* வயல்அணி மங்கையர்*
கலியன தமிழ்இவை* விழுமிய இசையினொடு*
ஒலிசொலும் அடியவர்* உறுதுயர் இலரே. (2)
வானோர் அளவும் முது முந்நீர்* வளர்ந்த காலம்,* வலிஉருவின்-
மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட* தண்தாமரைக் கண்ணன்*
ஆனா உருவில் ஆன்ஆயன்* அவனை அம்மா விளைவயலுள்*
கான்ஆர் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. (2)
மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக* அங்கு ஓர் வரைநட்டு*
இலங்கு சோதிஆர் அமுதம்* எய்தும் அளவு ஓர்ஆமைஆய்*
விலங்கல் திரியத் தடங்கடலுள்* சுமந்து கிடந்த வித்தகனை*
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
பாரஆர் அளவும் முதுமுந்நீர்* பரந்த காலம்,* வளைமருப்பின்-
ஏர்ஆர் உருவத்து ஏனம்ஆய்* எடுத்த ஆற்றல் அம்மானை*
கூர்ஆர் ஆரல்இரை கருதி* குருகு பாய கயல் இரியும்*
கார்ஆர் புறவன் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
உளைந்த அரியும் மானிடமும்* உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*
விளைந்த சீற்றம் விண்வெதும்ப* வேற்றோன் அகலம் வெம்சமத்துப்*
பிளந்து வளைந்த உகிரானை* பெருந்தண் செந்நெல் குலைதடிந்து*
களம்செய் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே*
தொழும்நீர் வடிவின் குறள்உருவுஆய்* வந்து தோன்றி மாவலிபால்*
முழுநீர் வையம் முன்கொண்ட* மூவா உருவின் அம்மானை*
உழும்நீர் வயலுள் பொன்கிளைப்ப* ஒருபால் முல்லை முகையோடும்*
கழுநீர் மலரும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
வடிவாய் மழுவே படைஆக* வந்து தோன்றி மூவெழுகால்*
படிஆர் அரசு களைகட்ட* பாழி யானை அம்மானை*
குடியா வண்டு கொண்டுஉண்ண8 கோல நீலம் மட்டு உகுக்கும்*
கடிஆர் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
வையம் எல்லாம் உடன்வணங்க* வணங்கா மன்னனாய்த் தோன்றி*
வெய்ய சீற்றக் கடிஇலங்கை* குடிகொண்டு ஓட வெம்சமத்துச்*
செய்த வெம்போர் நம்பரனை* செழுந்தண் கானல் மணம்நாறும்*
கைதை வேலிக் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்* ஒருபால் தோன்ற தான்தோன்றி*
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்* விண்பால் செல்ல வெம்சமத்துச்*
செற்ற கொற்றத் தொழிலானை* செந்தீ மூன்றும் இல்இருப்ப*
கற்ற மறையோர் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
துவரிக் கனிவாய் நிலமங்கை* துயர்தீர்ந்து உய்ய பாரதத்துள்*
இவரித்து அரசர் தடுமாற* இருள்நாள் பிறந்த அம்மானை*
உவரி ஓதம் முத்துஉந்த* ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
கவரி வீசும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்* முன்னும் இராமன்ஆய்
தான்ஆய்* பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்* கற்கியும்
ஆனான் தன்னைக்* கண்ணபுரத்து அடியன்* கலியன் ஒலிசெய்த*
தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை* செப்ப பாவம் நில்லாவே. (2)
கைம்மான மதயானை* இடர்தீர்த்த கருமுகிலை*
மைம்மான மணியை* அணிகொள் மரகதத்தை*
எம்மானை எம்பிரானை ஈசனை* என்மனத்துள்-
அம்மானை* அடியேன் அடைந்து உய்ந்து போனேனே. (2)
தருமான மழைமுகிலை* பிரியாது தன்அடைந்தார்*
வரும்மானம் தவிர்க்கும்* மணியை அணிஉருவின்*
திருமாலை அம்மானை* அமுதத்தை கடல்கிடந்த-
பெருமானை* அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே.
விடைஏழ் அன்றுஅடர்த்து* வெகுண்டு விலங்கல்உறப்*
படையால்ஆழி தட்ட* பரமன் பரஞ்சோதி*
மடைஆர் நீலம்மல்கும் வயல்சூழ்* கண்ணபுரம்ஒன்று-
உடையானுக்கு* அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?
மிக்கானை* மறைஆய் விரிந்த விளக்கை,* என்னுள்-
புக்கானை* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானை கடிகைத்* தடங்குன்றின் மிசைஇருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே. (2)
வந்தாய் என்மனத்தே* வந்துநீ புகுந்தபின்னை,*
எந்தாய்! போய்அறியாய்* இதுவே அமையாதோ*
கொந்துஆர் பைம்பொழில்சூழ்* குடந்தைக் கிடந்துஉகந்த-
மைந்தா,* உன்னைஎன்றும்* மறவாமை பெற்றேனே.
எஞ்சா வெம்நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேல்என்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே! நீநினையாது* இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
மஞ்சுஆர் மாளிகைசூழ்* வயல்ஆலி மைந்தனையே.
பெற்றார் பெற்றுஒழிந்தார்* பின்னும்நின்று அடியேனுக்கு*
உற்றான்ஆய் வளர்த்து* என்உயிர்ஆகி நின்றானை*
முற்றா மாமதிகோள் விடுத்தானை* எம்மானை*
எத்தால் யான்மறக்கேன்* இதுசொல்என் ஏழைநெஞ்சே!
கற்றார் பற்றுஅறுக்கும்* பிறவிப் பெருங்கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்தபின்னை*
வற்றா நீர்வயல்சூழ்* வயல்ஆலி அம்மானைப்-
பெற்றேன்* பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே.
கண்ணார் கண்ணபுரம்* கடிகை கடிகமழும்*
தண்ணார் தாமரைசூழ்* தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாள்மதியை* விரிகின்ற வெம்சுடரை*
கண்ஆரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
செருநீர வேல்வலவன்* கலிகன்றி மங்கையர்கோன்*
கருநீர் முகில்வண்ணன்* கண்ண புரத்தானை*
இருநீர்இன் தமிழ்* இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்*
வரும்நீர் வையம்உய்ய* இவைபாடி ஆடுமினே. (2)
வண்டுஆர்பூ மாமலர் மங்கை* மணநோக்கம்
உண்டானே* உன்னை உகந்துஉகந்து* உன்தனக்கே
தொண்டுஆனேற்கு* என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
கண்டானே* கண்ணபுரத்து உறை அம்மானே! (2)
பெருநீரும் விண்ணும்* மலையும் உலகுஏழும்*
ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய* நின்னை அல்லால்*
வருதேவர் மற்றுஉளர் என்று* என்மனத்து இறையும்-
கருதேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே!
மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று* இருப்பாரோடு-
உற்றிலேன்* உற்றதும்* உன்அடியார்க்கு அடிமை*
மற்றுஎல்லாம் பேசிலும்* நின்திரு எட்டுஎழுத்தும்-
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே! (2)
பெண்ஆனாள்* பேர்இளங் கொங்கையின்ஆர் அழல்போல்,*
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை* உகந்தேன்நான்*
மண்ஆளா! வாள்நெடுங் கண்ணி* மதுமலராள்-
கண்ணாளா* கண்ணபுரத்து உறை அம்மானே!
பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன்நான்*
மற்றுஆரும் பற்றுஇலேன்* ஆதலால் நின்அடைந்தேன்*
உற்றான்என்று உள்ளத்து வைத்து* அருள் செய்கண்டாய்,*
கற்றார்சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே!
ஏத்திஉன் சேவடி* எண்ணி இருப்பாரைப்*
பார்த்திருந்து அங்கு* நமன்தமர் பற்றாது*
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று* தொடாமைநீ,-
காத்திபோல்* கண்ணபுரத்து உறை அம்மானே!
வெள்ளைநீர் வெள்ளத்து* அணைந்த அரவுஅணைமேல்*
துள்ளுநீர் மெள்ளத்* துயின்ற பெருமானே*
வள்ளலே! உன்தமர்க்கு என்றும்* நமன்தமர்-
கள்ளர்போல்* கண்ணபுரத்து உறை அம்மானே!
மாண்ஆகி* வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*
பூண்ஆகம் கீண்டதுவும்* ஈண்டு நினைந்துஇருந்தேன்*
பேணாத வல்வினையேன்* இடர் எத்தனையும்-
காணேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே!
நாட்டினாய் என்னை* உனக்குமுன் தொண்டுஆக*
மாட்டினேன் அத்தனையே கொண்டு* என் வல்வினையை*
பாட்டினால் உன்னை* என் நெஞ்சத்து இருந்தமை-
காட்டினாய்* கண்ணபுரத்து உறை அம்மானே!
கண்டசீர்க்* கண்ணபுரத்து உறை அம்மானை*
கொண்டசீர்த் தொண்டன்* கலியன் ஒலிமாலை*
பண்டமாய்ப் பாடும்* அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
அண்டம்போய் ஆட்சி* அவர்க்கு அது அறிந்தோமே. (2)
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய* வாள்அரவின் அணை மேவி,*
சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி* சாமமா மேனி என் தலைவன்,*
அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்* அருங்கலை பயின்று,* எரி மூன்றும்-
செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே. (2)
கவளமா கதத்த கரி உய்ய* பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-
துவள* மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட* சுடுபடை துரந்தோன்,*
குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்* கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வாதை வந்து அடர வானமும் நிலனும்* மலைகளும் அலைகடல் குளிப்ப,*
மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி* விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*
போதுஅலர் புன்னை மல்லிகை* மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,*
சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி* வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*
பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்* பஞ்சவர் பாகன்*
ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து* உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்* மூவடி நீரொடும் கொண்டு,*
பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து* அலைபுனல் இலைக்குடை நீழல்,*
செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்* மணிமுடி பொடிபடுத்து* உதிரக்-
குழுவுவார் புனலுள் குளித்து* வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*
குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்* குளிர்தரு சூதம்மாதவியும்*
செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வான்உளார் அவரை வலிமையால் நலியும்* மறிகடல் இலங்கையார் கோனை,*
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்* பருமுடி உதிர வில் வளைத்தோன்,*
கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட* கணமுகில் முரசம் நின்றுஅதிர,*
தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை* அஞ்சிடாதே இட,* அதற்கு-
பெரியமா மேனி அண்டம் ஊடுருவ* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
வரையின்மா மணியும் மரகதத் திரளும்* வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,*
திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய* பாரத மாபெரும் போரில்,*
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்* மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்* சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,*
தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்* திருக்கண்ணங் குடியுள் நின்றானே.
கலைஉலா அல்குல் காரிகை திறத்து* கடல்பெரும் படையொடும் சென்று,*
சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற* திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*
மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்* வல்லவர்க்கு இல்லை நல்குரவே. (2)
பொன்இவர் மேனி மரகதத்தின்* பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்* வேதியர் வானவர் ஆவர் தோழீ,*
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி* ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,*
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்* அச்சோ ஒருவர் அழகியவா! (2)
தோடுஅவிழ் நீலம் மணம் கொடுக்கும்* சூழ்புனல்சூழ் குடந்தைக் கிடந்த,*
சேடர்கொல் என்று தெரிக்க மாட்டேன்* செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி,*
பாடக மெல்அடியார் வணங்க* பல்மணி முத்தொடு இலங்குசோதி,*
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்* அச்சோ ஒருவர் அழகியவா!
வேய்இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த* மெய்ய மணாளர் இவ் வையம்எல்லாம்,*
தாயின நாயகர் ஆவர் தோழீ!* தாமரைக் கண்கள் இருந்தஆறு,*
சேய்இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்* செவ்விய ஆகி மலர்ந்தசோதி,*
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்* அச்சோ ஒருவர் அழகியவா!
வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்* கையன ஆழியும் சங்கும் ஏந்தி,*
நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்* நாகரிகர் பெரிதும் இளையர்,*
செம்பவளம் இவர் வாயின் வண்ணம்* தேவர் இவரது உருவம் சொலலில்,*
அம்பவளத்திரளேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*
பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா!
வெம்சின வேழ மருப்புஒசித்த* வேந்தர்கொல் ஏந்திழையார் மனத்தைத்,*
தஞ்சுஉடை ஆளர்கொல் யான் அறியேன்,* தாமரைக் கண்கள் இருந்தஆறு,*
கஞ்சனை அஞ்சமுன் கால் விசைத்த* காளையர் ஆவர் கண்டார் வணங்கும்,*
அஞ்சன மாமலையேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
பிணிஅவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்* பேர்அருளாளர் கொல்? யான் அறியேன்,*
பணியும் என் நெஞ்சம் இதுஎன்கொல் தோழீ!* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
அணிகெழு தாமரை அன்ன கண்ணும்* அம்கையும் பங்கயம் மேனிவானத்து,*
அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
மஞ்சுஉயர் மாமதி தீண்ட நீண்ட* மாலிருஞ் சோலை மணாளர் வந்து,* என்-
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்* நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*
மஞ்சுஉயர் பொன்மலை மேல் எழுந்த* மாமுகில் போன்றுஉளர் வந்துகாணீர்,*
அம்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்* அச்சோ ஒருவர் அழகியவா!
எண்திசையும் எறிநீர்க் கடலும்* ஏழ்உலகும் உடனே விழுங்கி,*
மண்டி ஓர் ஆல்இலைப் பள்ளி கொள்ளும்* மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*
கொண்டல் நல் மால்வரை யேயும் ஒப்பர்* கொங்குஅலர் தாமரை கண்ணும்வாயும்*
அண்டத்து அமரர் பணிய நின்றார்* அச்சோ ஒருவர் அழகியவா!
அன்னமும் கேழலும் மீனும்ஆய* ஆதியை நாகை அழகியாரை,*
கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்* காமரு சீர்க்கலி கன்றி,* குன்றா-
இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை* ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
மன்னவர்ஆய் உலகுஆண்டு* மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே. (2)
தன்னை நைவிக்கிலேன்* வல்வினையேன் தொழுதும்எழு,*
பொன்னை நைவிக்கும்* அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*
என்னை நைவித்து* எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,*
புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து* அழகுஆய புல்லாணியே. (2)
உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?* தொழுதும் எழு,*
முருகுவண்டுஉன் மலர்க் கைதையின்* நீழலில் முன்ஒருநாள்,*
பெருகுகா தன்மை என்உள்ளம்* எய்தப் பிரிந்தான்இடம்,*
பொருதுமுந் நீர்கரைக்கே* மணிஉந்து புல்லாணியே.
ஏது செய்தால் மறக்கேன்* மனமே! தொழுதும் எழு,*
தாது மல்கு தடம்சூழ் பொழில்* தாழ்வர் தொடர்ந்து,* பின்-
பேதை நின்னைப் பிரியேன்இனி* என்று அகன்றான்இடம்,*
போது நாளும் கமழும்* பொழில்சூழ்ந்த புல்லாணியே.
கொங்குஉண் வண்டே கரியாக வந்தான்* கொடியேற்கு,* முன்-
நங்கள்ஈசன்* நமக்கே பணித்த மொழிசெய்திலன்*
மங்கை நல்லாய்! தொழுதும் எழு* போய் அவன் மன்னும்ஊர்,*
பொங்கு முந்நீர் கரைக்கே* மணி உந்து புல்லாணியே
உணரில் உள்ளம் சுடுமால்* வினையேன் தொழுதும் எழு,*
துணரி நாழல் நறும்போது* நம்சூழ் குழல்பெய்து,* பின்-
தணரில் ஆவி தளரும்என* அன்பு தந்தான்இடம்,*
புணரி ஓதம் பணில* மணிஉந்து புல்லாணியே.
எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?* தொழுதும் எழு,*
வள்ளல் மாயன்* மணிவண்ணன் எம்மான் மருவும்இடம்,*
கள் அவிழும் மலர்க் காவியும்* தூமடல் கைதையும்,*
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த* புல்லாணியே.
பரவி நெஞ்சே! தொழுதும்எழு* போய் அவன் பாலம்ஆய்,*
இரவும் நாளும் இனிகண் துயிலாது* இருந்து என்பயன்?*
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,* வெண்திரை*
புரவி என்னப் புதம்செய்து* வந்துஉந்து புல்லாணியே
அலமும் ஆழிப் படையும் உடையார்* நமக்கு அன்பர்ஆய்,*
சலம்அதுஆகி தகவுஒன்று இலர்* நாம் தொழுதும்எழு,*
உலவு கால்நல் கழிஓங்கு* தண்பைம் பொழிலூடு,* இசை-
புலவு கானல்* களிவண்டுஇனம் பாடு புல்லாணியே.
ஓதி நாமம்குளித்து உச்சி தன்னால்,* ஒளிமாமலர்ப்*
பாதம் நாளும் பணிவோம்* நமக்கே நலம்ஆதலின்,*
ஆது தாரான்எனிலும் தரும்,* அன்றியும் அன்பர்ஆய்ப்*
போதும் மாதே! தொழுதும்* அவன்மன்னு புல்லாணியே
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்* எழில்தாமரைப்,*
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த* அழகுஆய புல்லாணிமேல்*
கலங்கல் இல்லாப் புகழான்* கலியன் ஒலிமாலைகள்,*
வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது* பாடுஇல் வைகுந்தமே (2)
காவார் மடல்பெண்ணை* அன்றில்அரி குரலும்,*
ஏவாயின் ஊடுஇயங்கும்* எஃகின் கொடிதாலோ,*
பூஆர் மணம்கமழும்* புல்லாணி கைதொழுதேன்,*
பாவாய்! இதுநமக்குஓர்* பான்மையே ஆகாதே. (2)
முன்னம் குறள்உருஆய்* மூவடிமண் கொண்டுஅளந்த,*
மன்னன் சரிதைக்கே* மால்ஆகி பொன்பயந்தேன்,*
பொன்னம் கழிக்கானல்* புள்இனங்காள்! புல்லாணி*
அன்னம்ஆய் நூல்பயந்தாற்கு* ஆங்குஇதனைச் செப்புமினே
வவ்வி துழாய்அதன்மேல்* சென்ற தனிநெஞ்சம்,*
செவ்வி அறியாது* நிற்கும்கொல் நித்திலங்கள்*
பவ்வத் திரைஉலவு* புல்லாணி கைதொழுதேன்,*
தெய்வச் சிலையாற்கு* என் சிந்தைநோய் செப்புமினே.
பரிய இரணியனது ஆகம்* அணிஉகிரால்,*
அரிஉருஆய்க் கீண்டான் அருள்* தந்தவா! நமக்கு,*
பொருதிரைகள் போந்துஉலவு* புல்லாணி கைதொழுதேன்,*
அரிமலர்க்கண் நீர்ததும்ப* அம்துகிலும் நில்லாவே.
வில்லால் இலங்கை மலங்க* சரம்துரந்த,*
வல்லாளன் பின்போன* நெஞ்சம் வரும் அளவும்,*
எல்லாரும் என்தன்னை* ஏசிலும் பேசிடினும்,*
புல்லாணி எம்பெருமான்* பொய் கேட்டுஇருந்தேனே (2)
சுழன்றுஇலங்கு வெம்கதிரோன்* தேரோடும் போய்மறைந்தான்,*
அழன்று கொடிதுஆகி* அம்சுடரோன் தான்அடுமால்,*
செழுந்தடம் பூஞ்சோலை சூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
இழந்திருந்தேன் என்தன்* எழில்நிறமும் சங்குமே.
கனைஆர் இடிகுரலின்* கார்மணியின் நாஆடல்,*
தினையேனும் நில்லாது* தீயில் கொடிதாலோ,*
புனைஆர் மணிமாடப்* புல்லாணி கைதொழுதேன்,*
வினையேன்மேல் வேலையும்* வெம்தழலே வீசுமே.
தூம்புஉடைக்கை வேழம்* வெருவ மருப்புஒசித்த*
பாம்பின் அணையான்* அருள்தந்தவா நமக்கு,*
பூஞ்செருந்தி பொன்சொரியும்* புல்லாணி கைதொழுதேன்,*
தேம்பல் இளம்பிறையும்* என்தனக்கு ஓர்வெம்தழலே.
வேதமும் வேள்வியும்* விண்ணும் இருசுடரும்,*
ஆதியும் ஆனான்* அருள் தந்தவா நமக்கு,*
போதுஅலரும் புன்னைசூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
ஓதமும் நானும்* உறங்காது இருந்தேனே.
பொன்அலரும் புன்னைசூழ்* புல்லாணி அம்மானை*
மின்இடையார் வேட்கைநோய் கூர* இருந்ததனை,*
கல்நவிலும் திண்தோள்* கலியன் ஒலிவல்லார்,*
மன்னவர்ஆய் மண்ஆண்டு* வான்நாடும் முன்னுவரே (2)
தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்* தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி-
துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்* சூழ்பனி நாள் துயிலாது இருப்பேன்,*
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்* என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
குவளை மலர்நிற வண்ணர்மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த* தண்மதியின் இளவாடை இன்னே,*
ஊதை திரிதந்து உழறிஉண்ண* ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*
பேதையர் பேதைமையால் இருந்து* பேசிலும் பேசுக பெய்வளையார்,*
கோதை நறுமலர் மங்கைமார்வன்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
காலையும் மாலை ஒத்துண்டு* கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*
போல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்* பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*
மாலவன் மாமணி வண்ணன் மாயம்* மற்றும் உள அவை வந்திடாமுன்,*
கோலமயில் பயிலும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
கருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து* கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*
ஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள* ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*
பெருமணி வானவர் உச்சிவைத்த* பேர்அருளாளன் பெருமைபேசி,*
குருமணி நீர்கொழிக்கும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
திண்திமில் ஏற்றின் மணியும்* ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*
கொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற* கோல இளம்பிறையோடு கூடி,*
பண்டைய அல்ல இவை நமக்கு* பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,*
கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
எல்லியும் நன்பகலும் இருந்தே* ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,*
நல்லர் அவர் திறம் நாம்அறியோம்,* நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*
வல்லன சொல்லி மகிழ்வரேலும்* மாமணி வண்ணரை நாம்மறவோம்,*
கொல்லை வளர் இளமுல்லை புல்கு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
செங்கண் நெடிய கரியமேனித்* தேவர் ஒருவர் இங்கே புகுந்து,* என்-
அங்கம் மெலிய வளைகழல* ஆதுகொலோ? என்று சொன்னபின்னை,*
ஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு* ஆடும் அதனை அறியமாட்டேன்,*
கொங்குஅலர் தண்பணை சூழ்புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
கேவலம் அன்று கடலின் ஓசை* கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,* என்-
ஆவி அளவும் அணைந்து நிற்கும்* அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,*
ஏவலம் காட்டி இவன்ஒருவன்* இப்படியே புகுந்து எய்திடாமுன்,*
கோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
சோத்துஎன நின்று தொழ இரங்கான்* தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்*
போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்* போயின ஊர்அறியேன்,* என்கொங்கை-
மூத்திடுகின்றன* மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,*
கூத்தன் இமையவர்கோன் விரும்பும்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
செற்றவன் தென்இலங்கை மலங்க* தேவர்பிரான் திருமாமகளைப்,*
பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட* பேர்அருளாளன் பெருமைபேசக்-
கற்றவன்* காமரு சீர்க் கலியன்* கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
கொற்றவன்,* முற்று உலகுஆளி நின்ற* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
அக்கும் புலியின்* அதளும் உடையார்* அவர்ஒருவர்
பக்கம் நிற்க நின்ற* பண்பர்ஊர் போலும்*
தக்க மரத்தின் தாழ்சினைஏறி,* தாய்வாயில்-
கொக்கின் பிள்ளை* வெள்இறவு உண்ணும் குறுங்குடியே. (2)
துங்கஆர் அரவத் திரைவந்து உலவ* தொடுகடலுள்,-
பொங்குஆர் அரவில் துயிலும்* புனிதர்ஊர் போலும்,*
செங்கால் அன்னம்* திகழ்தண் பணையில் பெடையோடும்,*
கொங்குஆர் கமலத்து* அலரில் சேரும் குறுங்குடியே.
வாழக் கண்டோம்* வந்து காண்மின் தொண்டீர்காள்,*
கேழல் செங்கண்* மாமுகில் வண்ணர் மருவும் ஊர்,*
ஏழைச் செங்கால்* இன்துணை நாரைக்கு இரை தேடி,*
கூழைப் பார்வைக்* கார்வயல் மேயும் குறுங்குடியே.
சிரம்முன் ஐந்தும் ஐந்தும்* சிந்தச் சென்று,* அரக்கன்-
உரமும் கரமும் துணித்த* உரவோன்ஊர் போலும்,*
இரவும் பகலும்* ஈன்தேன் முரல,* மன்றுஎல்லாம்-
குரவின் பூவே தான்* மணம் நாறும் குறுங்குடியே.
கவ்வைக் களிற்று மன்னர் மாள* கலிமாத்தேர்-
ஐவர்க்குஆய்,* அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*
மைவைத்து இலங்கு* கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,*
கொவ்வைக் கனிவாய்க்* கிள்ளை பேசும் குறுங்குடியே.
தீநீர் வண்ண* மாமலர் கொண்டு விரை ஏந்தி,*
தூநீர் பரவித்* தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*
மாநீர் வண்ணர்* மருவி உறையும்இடம்,* வானில்-
கூன்நீர் மதியை* மாடம் தீண்டும் குறுங்குடியே..
வல்லிச்சிறு நுண்இடையாரிடை* நீர்வைக்கின்ற,*
அல்லல் சிந்தை தவிர* அடைமின் அடியீர்காள்!,*
சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,*
கொல்லை முல்லை* மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே.
நார்ஆர்இண்டை* நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,*
ஆரா அன்போடு* எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*
தாரா ஆரும்* வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
கூர்வாய் நாரை* பேடையொடு ஆடும் குறுங்குடியே.
நின்ற வினையும் துயரும் கெட* மாமலர்ஏந்தி,*
சென்று பணிமின் எழுமின்* தொழுமின் தொண்டீர்காள்,*
என்றும் இரவும் பகலும்* வரிவண்டு இசைபாட,*
குன்றின் முல்லை* மன்றிடை நாறும் குறுங்குடியே..
சிலையால் இலங்கை செற்றான்* மற்றுஓர் சினவேழம்,*
கொலைஆர் கொம்பு கொண்டான் மேய* குறுங்குடிமேல்,*
கலைஆர் பனுவல் வல்லான்* கலியன் ஒலிமாலை*
நிலைஆர் பாடல் பாடப்* பாவம் நில்லாவே (2)
தந்தை தாய் மக்களே* சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
பந்தம்ஆர் வாழ்க்கையை* நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*
அந்தம்ஆய் ஆதிஆய்* ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
மைந்தனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!. (2)
மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற* நுண்இடை நுடங்கும்,*
அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி* முன் தூது சென்ற*
மன்னனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
பூண்உலாம் மென்முலைப் பாவைமார்* பொய்யினை 'மெய் இது' என்று,*
பேணுவார் பேசும் அப்பேச்சை* நீ பிழை எனக் கருதினாயேல்,*
நீள்நிலா வெண்குடை வாணனார்* வேள்வியில் மண் இரந்த,*
மாணியார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
பண்உலாம் மென்மொழிப் பாவைமார்* பணைமுலை அணைதும் நாம்என்று*
எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து* நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*
விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற* வேங்கடத்துஉளார்,* வளங்கொள் முந்நீர்-
வண்ணனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்* வாரணம் சூழ வாழ்ந்தார்,*
துஞ்சினார் என்பதுஓர் சொல்லை* நீ துயர்எனக் கருதினாயேல்,*
நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து* அவள் நாளை உண்ட,-
மஞ்சனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
உருவின்ஆர் பிறவிசேர்* ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு*
அருவிநோய் செய்துநின்று* ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*
திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ* வேள்வியோடு அங்கம் ஆறும்,*
மருவினார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை* மெய்எனக் கொண்டு,* வாளா-
பேயர்தாம் பேசும் அப்பேச்சை* நீ பிழைஎனக் கருதினாயேல்,*
தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்* மங்குல் வான்ஆகி நின்ற,*
மாயனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மஞ்சுசேர் வான்எரி* நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
அஞ்சுசேர் ஆக்கையை* அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
சந்துசேர் மென்முலைப்* பொன்மலர்ப் பாவையும் தாமும்,* நாளும்-
வந்துசேர் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
வெள்ளியார் பிண்டியார் போதியார்* என்றுஇவர் ஓது கின்ற,*
கள்ளநூல் தன்னையும்* கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
தெள்ளியார் கைதொழும் தேவனார்* மாமுநீர் அமுது தந்த,*
வள்ளலார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்* வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்* கோலநீள்ஆலி நாடன்,*
கறைஉலாம் வேல்வல* கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு* இன்பம் நன்கு எய்துவாரே. (2)
முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்* கலவியை விடுதடு மாறல்,*
அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய* எம் அடிகள்தம் கோயில்,*
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்* தழுவி வந்து அருவிகள் நிரந்து,*
வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! (2)
இண்டையும் புனலும் கொண்டுஇடை இன்றி* எழுமினோ தொழுதும்என்று,* இமையோர்-
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற* சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*
விண்டுஅலர் தூளி வேய்வளர் புறவில்* விரைமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே
பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த* பெருநிலம் அருளின் முன்அருளி,*
அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும்* அளந்த எம் அடிகள்தம் கோயில்,*
கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்* குறவர்தம் கவணிடைத் துரந்த,*
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
சூர்மையில்ஆய பேய்முலை சுவைத்து* சுடுசரம் அடுசிலைத் துரந்து,*
நீர்மை இலாத தாடகை மாள* நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*
கார்மலி வேங்கை கோங்குஅலர் புறவில்* கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
வார்புனல்சூழ் தண் மாலிருஞ்சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
வணங்கல்இல் அரக்கன் செருக்களத்து அவிய* மணிமுடி ஒருபதும் புரள,*
அணங்குஎழுந்துஅவன் தன் கவந்தம் நின்றுஆட* அமர்செய்த அடிகள்தம் கோயில்,*
பிணங்கலின் நெடுவேய் நுதிமுகம் கிழிப்ப* பிரசம் வந்துஇழிதர பெருந்தேன்,*
மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
விடம்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று* விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
குடம்கலந்துஆடி குரவைமுன் கோத்த* கூத்த எம் அடிகள்தம் கோயில்,*
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிற* தடவரைக் களிறுஎன்று முனிந்து,*
மடங்கல் நின்றுஅதிரும் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
தேனுகன் ஆவி போய்உக* அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,*
தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்* எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
வானகச் சோலை மரகதச் சாயல்* மாமணிக் கல்அதர் நுழைந்து,*
மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
புதம்மிகு விசும்பில் புணரி சென்று அணவ* பொருகடல் அரவணைத் துயின்று,*
பதம்மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த* பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*
கதம்மிகு சினத்த கடதடக் களிற்றின்* கவுள்வழி களிவண்டு பருக,*
மதம்மிகு சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
புந்திஇல் சமணர் புத்தர் என்றுஇவர்கள்* ஒத்தன பேசவும் உவந்திட்டு,*
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்* எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்* தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை* மாமணி வண்ணரை வணங்கும்,*
தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்* சூழ் வயல்ஆலி நல்நாடன்*
கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்* ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)
மூவரில் முன்முதல்வன்* முழங்குஆர் கடலுள்கிடந்து,*
பூவளர்உந்தி தன்னுள்* புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*
தேவர்கள் நாயகனை* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கோவலர் கோவிந்தனை* கொடிஏர்இடை கூடும்கொலோ! (2)
புனைவளர் பூம்பொழில் ஆர்* பொன்னி சூழ் அரங்க நகருள்-
முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*
சினைவளர் பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்றான்*
கனைகழல் காணும்கொலோ?* கயல் கண்ணி எம்காரிகையே! (2)
உண்டு உலகுஏழினையும்* ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
கண்துயில் கொண்டுஉகந்த* கருமாணிக்க மாமலையை,*
திண்திறல் மாகரிசேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
அண்டரதம் கோவினை இன்று* அணுகும் கொல்? என்ஆய்இழையே!
சிங்கம்அதுஆய் அவுணன்* திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,*
பங்கய மாமலர்க் கண்* பரனை எம் பரம்சுடரை,*
திங்கள்நல் மாமுகில் சேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நங்கள் பிரானை இன்று* நணுகும்கொல் என்நல்நுதலே!
தானவன் வேள்வி தன்னில்* தனியே குறள்ஆய் நிமிர்ந்து,*
வானமும் மண்ணகமும்* அளந்த திரி விக்கிரமன்,*
தேன்அமர் பூம்பொழில் சூழ்* திரமாலிருஞ் சோலைநின்ற,*
வானவர் கோனை இன்று* வணங்கித் தொழவல்லள் கொலோ!
நேசம்இலாதவர்க்கும்* நினையாதவர்க்கும் அரியான்,*
வாசமலர்ப் பொழில்சூழ்* வடமா மதுரைப் பிறந்தான்,*
தேசம்எல்லாம் வணங்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கேசவ நம்பி தன்னைக்* கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ! (2)
புள்ளினை வாய்பிளந்து* பொருமா கரி கொம்புஒசித்து,*
கள்ளச் சகடுஉதைத்த* கருமாணிக்க ம மலையை,*
தெள்அருவி கொழிக்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
வள்ளலை வாள்நுதலாள்* வணங்கித் தொழவல்லள் கொலோ!
பார்த்தனுக்கு அன்றுஅருளி* பாரதத்து ஒருதேர்முன்நின்று,*
காத்தவன் தன்னை* விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*
தீர்த்தனை பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
மூர்த்தியைக் கைதொழவும்* முடியும்கொல்? என்மொய்குழற்கே!
வலம்புரி ஆழியனை* வரைஆர் திரள்தோளன் தன்னை,*
புலம்புரி நூலவனை* பொழில் வேங்கட வேதியனை,*
சிலம்புஇயல் ஆறுஉடைய* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நலம்திகழ் நாரணனை* நணுகும்கொல்? என்நல்நுதலே! (2)
தேடற்கு அரியவனை* திருமாலிருஞ் சோலை நின்ற,*
ஆடல் பறவையனை* அணிஆய்இழை காணும்என்று,*
மாடக் கொடிமதிள் சூழ்* மங்கையார் கலிகன்றிசொன்ன,*
பாடல் பனுவல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே! (2)
எங்கள் எம்இறை எம்பிரான்* இமையோர்க்கு நாயகன்,* ஏத்து அடியவர்-
தங்கள் தம்மனத்துப்* பிரியாது அருள்புரிவான்,*
பொங்கு தண்அருவி புதம்செய்ய* பொன்களே சிதற இலங்குஒளி,*
செங்கமலம் மலரும்* திருக்கோட்டியூரானே. ,
எவ்வநோய் தவிர்ப்பான்* எமக்குஇறை இன்நகைத் துவர்வாய்,* நிலமகள்--
செவ்வி தோய வல்லான்* திருமா மகட்குஇனியான்,*
மௌவல் மாலை வண்டுஆடும்* மல்லிகை மாலையொடும் அணைந்த,* மாருதம்-
தெய்வம் நாறவரும்* திருக்கோட்டியூரானே.
வெள்ளியான் கரியான்* மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,* எமக்கு-
ஒள்ளியான் உயர்ந்தான்* உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*
துள்ளுநீர் மொண்டு கொண்டு* சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,*
தெள்ளுநீர்ப் புறவில்* திருக்கோட்டியூரானே.
ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்* ஈசற்கு இசைந்து,* உடம்பில் ஓர்-
கூறுதான் கொடுத்தான்* குலமாமகட்கு இனியான்,*
நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி* இன்இள வண்டு,* நல்நறும்-
தேறல்வாய் மடுக்கும்* திருக்கோட்டியூரானே.
வங்க மாகடல் வண்ணன்* மாமணி வண்ணன் விண்ணவர் கோன்* மதுமலர்த்
தொங்கல் நீள்முடியான்* நெடியான் படிகடந்தான்,*
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி* மாகம்மீது உயர்ந்துஏறி,* வான்உயர்-
திங்கள் தான்அணவும்* திருக்கோட்டியூரானே.
காவலன் இலங்கைக்கு இறைகலங்க* சரம் செல உய்த்து,* மற்றுஅவன்-
ஏவலம் தவிர்த்தான்* என்னை ஆளுடை எம்பிரான்,*
நாவலம் புவிமன்னர் வந்து வணங்க* மால் உறைகின்றது இங்குஎன,*
தேவர் வந்துஇறைஞ்சும்* திருக்கோட்டியூரானே.
கன்று கொண்டு விளங்கனி எறிந்து* ஆநிரைக்கு அழிவுஎன்று,* மாமழை-
நின்று காத்துஉகந்தான்* நிலமாமகட்கு இனியான்,*
குன்றின் முல்லையின் வாசமும்* குளிர்மல்லிகை மணமும் அளைந்து,* இளம்-
தென்றல் வந்துஉலவும்* திருக்கோட்டியூரானே.
பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து* அரிமாச் செகுத்து,* அடியேனை ஆள்உகந்து-
ஈங்கு என்னுள் புகுந்தான்* இமையோர்கள் தம் பெருமான்,*
தூங்கு தண்பலவின்கனி* தொகுவாழையின் கனியொடு மாங்கனி*
தேங்கு தண்புனல் சூழ்* திருக்கோட்டியூரானே.
கோவைஇன் தமிழ் பாடுவார்* குடம்ஆடுவார் தட மாமலர்மிசை,*
மேவும் நான்முகனில்* விளங்கு புரிநூலர்,*
மேவும் நான்மறை வாணர்* ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*
தேவ தேவபிரான்* திருக்கோட்டியூரானே.
ஆலும்மா வலவன் கலிகன்றி* மங்கையர் தலைவன்* அணிபொழில்-
சேல்கள் பாய்கழனித்* திருக்கோட்டியூரானை,*
நீல மாமுகில் வண்ணனை* நெடுமாலை இன்தமிழால் நினைந்த,* இந்-
நாலும் ஆறும் வல்லார்க்கு* இடம்ஆகும் வான்உலகே. (2)
ஒருநல் சுற்றம்* எனக்குஉயிர் ஒண்பொருள்*
வரும்நல் தொல்கதி* ஆகிய மைந்தனை*
நெருநல் கண்டது* நீர்மலை இன்றுபோய்*
கருநெல் சூழ்* கண்ண மங்கையுள் காண்டுமே (2)
பொன்னை மாமணியை* அணி ஆர்ந்ததுஓர்-
மின்னை* வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*
என்னை ஆளுடை ஈசனை* எம்பிரான்-
தன்னை* யாம் சென்று காண்டும்* தண்காவிலே. (2)
வேலை ஆல்இலைப்* பள்ளி விரும்பிய*
பாலை ஆர்அமுதத்தினை* பைந்துழாய்*
மாலை ஆலியில்* கண்டு மகிழ்ந்து போய்*
ஞாலம் உன்னியைக் காண்டும்* நாங்கூரிலே
துளக்கம்இல் சுடரை* அவுணன்உடல்-
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப்போய்*
அளப்புஇல் ஆர்அமுதை* அமரர்க்கு அருள்-
விளக்கினைச்* சென்று வெள்ளறைக் காண்டுமே.
சுடலையில்* சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
நடலை தீர்த்தவனை* நறையூர்க் கண்டு,* என்-
உடலையுள் புகுந்து* உள்ளம் உருக்கிஉண்*
விடலையைச் சென்று காண்டும்* மெய்யத்துள்ளே.
வானை ஆர்அமுதம்* தந்த வள்ளலை*
தேனை நீள்வயல்* சேறையில் கண்டுபோய்*
ஆனை வாட்டி அருளும்* அமரர்தம்-
கோனை,* யாம் குடந்தைச்சென்று காண்டுமே.
கூந்தலார் மகிழ்* கோவலன்ஆய்* வெண்ணெய்-
மாந்துஅழுந்தையில்* கண்டு மகிழ்ந்துபோய்*
பாந்தள் பாழியில்* பள்ளி விரும்பிய*
வேந்தனைச் சென்று காண்டும்* வெஃகாவுளே
பத்தர் ஆவியை* பால்மதியை,* அணித்-
தொத்தை* மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*
முத்தினை மணியை* மணி மாணிக்க-
வித்தினைச்,* சென்று விண்ணகர்க் காண்டுமே
கம்ப மாகளிறு* அஞ்சிக் கலங்க,* ஓர்-
கொம்பு கொண்ட* குரைகழல் கூத்தனை*
கொம்புஉலாம் பொழில்* கோட்டியூர்க் கண்டுபோய்*
நம்பனைச் சென்று காண்டும்* நாவாயுளே.
பெற்றமாளிகைப்* பேரில் மணாளனை*
கற்ற நூல்* கலிகன்றி உரைசெய்த*
சொல்திறம்இவை* சொல்லிய தொண்டர்கட்கு*
அற்றம் இல்லை* அண்டம் அவர்க்கு ஆட்சியே (2)
இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை* இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்*
பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன் பட்டனன்* இனி யாவர்க்கு உரைக்கோம்*
குரக்கு நாயகர்காள்! இளங்கோவே* கோல வல்வில் இராம பிரானே*
அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை* நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ. (2)
பத்து நீள்முடியும் அவற்றுஇரட்டிப்* பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,*
சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்* செய்வது ஒன்றுஅறியா அடியோங்கள்*
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்* ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்*
அத்த! எம் பெருமான்! எம்மைக் கொல்லேல்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
தண்ட காரணியம் புகுந்து* அன்று தையலை தகவிலி எம்கோமான்*
கொண்டு போந்து கெட்டான்* எமக்கு இங்குஓர் குற்றம்இல்லை கொல்லேல் குலவேந்தே*
பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்* பேசுகின்றதுஎன்? தாசரதீ,* உன்-
அண்ட வாணர் உகப்பதே செய்தாய்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
எஞ்சல்இல் இலங்கைக்குஇறை* எம்கோன்தன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே*
நஞ்சுதான் அரக்கர் குடிக்குஎன்று* நங்கையை அவன் தம்பியே சொன்னான்*
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்* வேரிவார் பொழில் மாமயில்அன்ன*
அஞ்சுஅல்ஓதியைக் கொண்டு நடமின்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்* சீதை என்பதுஓர் தெய்வம் கொணர்ந்து*
வம்புஉலாம் கடி காவில் சிறையா வைத்ததே* குற்றம் ஆயிற்றுக் காணீர்*
கும்பனோடு நிகும்பனும் பட்டான்* கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி*
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.
ஓத மாகடலைக் கடந்துஏறி* உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து*
காதல் மக்களும் சுற்றமும் கொன்று* கடி இலங்கை மலங்க எரித்து*
தூது வந்த குரங்குக்கே* உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே*
ஆதர் நின்று படுகின்றது அந்தோ!* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
தாழம்இன்றி முந்நீரை அஞ்ஞான்று* தகைந்ததே கண்டு வஞ்சிநுண் மருங்குல்*
மாழை மான்மட நோக்கியை விட்டு* வாழகில்லா மதிஇல் மனத்தானை*
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை* எங்களை ஒழியக் கொலை அவனை*
சூழு மாநினை மாமணி வண்ணா!* சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
மனம்கொண்டுஏறும் மண்டோதரி முதலா* அம்கயல் கண்ணினார்கள் இருப்ப*
தனம்கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து* தஞ்சமே சில தாபதர்என்று*
புனம்கொள் மென்மயிலைச் சிறை வைத்த* புன்மையாளன் நெஞ்சில் புக எய்த*
அனங்கன் அன்னதிண்தோள் எம்இராமற்கு* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
புரங்கள் மூன்றும்ஓர் மாத்திரைப் போதில்* பொங்குஎரிக்கு இரை கண்டவன் அம்பின்*
சரங்களே கொடிதுஆய் அடுகின்ற* சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்*
இரங்கு நீ எமக்குஎந்தை பிரானே!* இலங்கு வெம்கதிரோன்தன் சிறுவா*
குரங்குகட்குஅரசே! எம்மைக் கொல்லேல்!* கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர* அணி இலங்கை அழித்தவன் தன்னை*
பொங்கு மாவலவன் கலி கன்றி* புகன்ற பொங்கத்தம் கொண்டு,* இவ்உலகினில்-
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!* இம்மையே இடர் இல்லை,* இறந்தால்-
தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்* சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ! (2)
ஏத்துகின்றோம் நாத்தழும்ப* இராமன் திருநாமம்*
சோத்தம் நம்பீ சுக்கிரீவா!* உம்மைத் தொழுகின்றோம்*
வார்த்தை பேசீர் எம்மை* உங்கள் வானரம் கொல்லாமே*
கூத்தர் போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே (2)
எம்பிரானே! என்னை ஆள்வாய்* என்றுஎன்று அலற்றாதே*
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது* இந்திரசித்து அழிந்தான்*
நம்பி அநுமா! சுக்கிரீவா!* அங்கதனே! நளனே*
கும்பகர்ணன் பட்டுப்போனான்* குழமணி தூரமே
ஞாலம் ஆளும் உங்கள் கோமான்* எங்கள் இராவணற்குக்*
காலன்ஆகி வந்தவா* கண்டு அஞ்சி கருமுகில்போல்*
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க* அங்கதன் வாழ்கஎன்று*
கோலம்ஆக ஆடுகின்றோம்* குழமணி தூரமே
மணங்கள் நாறும் வார்குழலார்* மாதர்கள் ஆதரத்தைப்*
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்* பொன்ற வரிசிலையால்*
கணங்கள்உண்ண வாளிஆண்ட* காவலனுக்கு இளையோன்*
குணங்கள் பாடி ஆடுகின்றோம்* குழமணி தூரமே
வென்றி தந்தோம் மானம் வேண்டோம்* தானம் எமக்குஆக*
இன்று தம்மின் எங்கள் வாழ்நாள்* எம்பெருமான் தமர்காள்*
நின்று காணீர் கண்கள்ஆர* நீர் எம்மைக் கொல்லாதே*
குன்று போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே
கல்லின் முந்நீர் மாற்றி வந்து* காவல் கடந்து,* இலங்கை-
அல்லல் செய்தான் உங்கள் கோமான்* எம்மை அமர்க்களத்து*
வெல்ல கில்லாது அஞ்சினோம்காண்* வெம்கதிரோன் சிறுவா,*
கொல்ல வேண்டா ஆடுகின்றோம்* குழமணி தூரமே
மாற்றம்ஆவது இத்தனையே* வம்மின் அரக்கர்உள்ளீர்*
சீற்றம் நும்மேல் தீர வேண்டின்* சேவகம் பேசாதே*
ஆற்றல் சான்ற தொல்பிறப்பின்* அநுமனை வாழ்கஎன்று*
கூற்றம் அன்னார் காண ஆடீர்* குழமணி தூரமே.
கவள யானை பாய்புரவி* தேரொடு அரக்கர்எல்லாம்-
துவள,* வென்ற வென்றியாளன்* தன்தமர் கொல்லாமே*
தவள மாடம் நீடுஅயோத்தி* காவலன் தன்சிறுவன்*
குவளை வண்ணன் காண ஆடீர்* குழமணி தூரமே.
ஏடுஒத்துஏந்தும் நீள்இலைவேல்* எங்கள் இராவணனார்-
ஓடிப் போனார்,* நாங்கள் எய்த்தோம்* உய்வதுஓர் காரணத்தால்*
சூடிப் போந்தோம் உங்கள் கோமான்* ஆணை தொடரேல்மின்*
கூடிக்கூடி ஆடுகின்றோம்* குழமணி தூரமே.
வென்ற தொல்சீர்த் தென்இலங்கை* வெம்சமத்து* அன்றுஅரக்கர்-
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த* குழமணி தூரத்தைக்*
கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்* கலியன் ஒலிமாலை*
ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்* பாடி நின்று ஆடுமினே (2)
சந்த மலர்க்குழல் தாழ* தான் உகந்துஓடி தனியே-
வந்து,* என் முலைத் தடம்தன்னை வாங்கி* நின் வாயில் மடுத்து,*
நந்தன் பெறப்பெற்ற நம்பீ!* நான் உகந்துஉண்ணும் அமுதே,*
எந்தை பெருமானே! உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே (2)
வங்க மறிகடல் வண்ணா!* மாமுகிலே ஒக்கும் நம்பீ*
செங்கண் நெடிய திருவே* செங்கமலம் புரை வாயா,*
கொங்கை சுரந்திட உன்னைக்* கூவியும் காணாது இருந்தேன்*
எங்குஇருந்து ஆயர்களோடும்* என் விளையாடுகின்றாயே
திருவில் பொலிந்த எழில்ஆர்* ஆயர்தம் பிள்ளைகளோடு*
தெருவில் திளைக்கின்ற நம்பீ* செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,*
உருகிஎன் கொங்கையின் தீம்பால்* ஓட்டந்து பாய்ந்திடுகின்ற,*
மருவிக் குடங்கால் இருந்து* வாய்முலை உண்ண நீ வாராய்
மக்கள் பெறுதவம் போலும்* வையத்து வாழும் மடவார்*
மக்கள் பிறர்கண்ணுக்கு ஒக்கும்* முதல்வா மதக்களிறுஅன்னாய்*
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி* நின் கையில் தருவன்*
ஒக்கலை மேல்இருந்து* அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்
மைத்த கருங்குஞ்சி மைந்தா!* மாமருதுஊடு நடந்தாய்,*
வித்தகனே விரையாதே* வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,*
இத்தனை போதுஅன்றி என்தன்* கொங்கை சுரந்து இருக்ககில்லா,*
உத்தமனே! அம்மம் உண்ணாய்* உலகுஅளந்தாய் அம்மம் உண்ணாய்
பிள்ளைகள் செய்வன செய்யாய்* பேசின் பெரிதும் வலியை*
கள்ளம் மனத்தில் உடையை* காணவே தீமைகள் செய்தி*
உள்ளம் உருகி என் கொங்கை* ஓட்டந்து பாய்ந்திடுகின்ற*
பள்ளிக் குறிப்புச் செய்யாதே* பால்அமுது உண்ணநீ வாராய்
தன்மகன்ஆக வன் பேய்ச்சி* தான்முலை உண்ணக் கொடுக்க*
வன்மகன்ஆய் அவள் ஆவிவாங்கி* முலைஉண்ட நம்பீ*
நன்மகள் ஆய்மகளோடு* நானில மங்கை மணாளா*
என்மகனே! அம்மம் உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே
உந்தம் அடிகள் முனிவர்* உன்னைநான் என்கையில் கோலால்*
நொந்திட மோதவும் கில்லேன்* நுங்கள்தம் ஆ-நிரை எல்லாம்*
வந்து புகுதரும் போது* வானிடைத் தெய்வங்கள் காண*
அந்திஅம் போது அங்கு நில்லேல்* ஆழிஅம் கையனே! வாராய்
பெற்றத் தலைவன் எம்கோமான்* பேர்அருளாளன் மதலாய்,*
சுற்றக் குழாத்து இளங்கோவே!* தோன்றிய தொல்புகழாளா,*
கற்றுஇனம் தோறும் மறித்து* கானம் திரிந்த களிறே*
எற்றுக்குஎன் அம்மம் உண்ணாதே* எம்பெருமான் இருந்தாயே
இம்மை இடர்கெட வேண்டி* ஏந்துஎழில் தோள்கலி அன்றி*
செம்மைப் பனுவல்நூல் கொண்டு* செங்கண் நெடியவன் தன்னை*
அம்மம் உண்என்று உரைக்கின்ற* பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
மெய்ம்மை மனத்து வைத்துஏத்த* விண்ணவர் ஆகலும்ஆமே (2)
பூங்கோதை ஆய்ச்சி* கடைவெண்ணெய் புக்குஉண்ண,*
ஆங்குஅவள் ஆர்த்துப்* புடைக்க புடையுண்டு*
ஏங்கி இருந்து* சிணுங்கி விளையாடும்*
ஓங்குஓத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி (2)
தாயர் மனங்கள் தடிப்ப* தயிர்நெய்உண்டு
ஏய்எம்பிராக்கள்* இருநிலத்து எங்கள்தம்*
ஆயர் அழக* அடிகள்* அரவிந்த-
வாயவனே கொட்டாய் சப்பாணி!* மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
தாம்மோர் உருட்டி* தயிர்நெய் விழுங்கிட்டு*
தாமோ தவழ்வர்என்று* ஆய்ச்சியர் தாம்பினால்*
தாம்மோதரக்கையால்* ஆர்க்க தழும்புஇருந்த*
தாமோதரா! கொட்டாய் சப்பாணி!* தாமரைக் கண்ணனே! சப்பாணி
பெற்றார் தளைகழலப்* பேர்ந்துஅங்கு அயல்இடத்து*
உற்றார் ஒருவரும் இன்றி* உலகினில்,*
மற்றாரும் அஞ்சப்போய்* வஞ்சப்பெண் நஞ்சுஉண்ட*
கற்றாயனே! கொட்டாய் சப்பாணி!* கார்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
சோத்து என நின்னைத்* தொழுவன் வரம் தர,*
பேய்ச்சி முலைஉண்ட பிள்ளாய்,* பெரியன-
ஆய்ச்சியர்* அப்பம் தருவர்* அவர்க்காகச்-
சாற்றிஓர் ஆயிரம் சப்பாணி!* தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி
கேவலம் அன்று* உன்வயிறு வயிற்றுக்கு*
நான் அவல் அப்பம் தருவன்* கருவிளைப்-
பூஅலர் நீள்முடி* நந்தன்தன் போர்ஏறே,*
கோவலனே! கொட்டாய் சப்பாணி!* குடம்ஆடீ! கொட்டாய் சப்பாணி.
புள்ளினை வாய்பிளந்து* பூங்குருந்தம் சாய்த்து,*
துள்ளி விளையாடி* தூங்குஉறி வெண்ணெயை,*
அள்ளிய கையால்* அடியேன் முலைநெருடும்*
பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி!* பேய்முலை உண்டானே! சப்பாணி
யாயும் பிறரும்* அறியாத யாமத்து,*
மாய வலவைப்* பெண் வந்து முலைதர,*
பேய்என்று அவளைப்* பிடித்து உயிர் உண்ட,*
வாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.
கள்ளக் குழவிஆய்* காலால் சகடத்தைத்*
தள்ளி உதைத்திட்டு* தாய்ஆய் வருவாளை,*
மெள்ளத் தொடர்ந்து* பிடித்து ஆர்உயிர்உண்ட,*
வள்ளலே! கொட்டாய் சப்பாணி!* மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
கார்ஆர் புயல்கைக்* கலிகன்றி மங்கையர்கோன்,*
பேராளன் நெஞ்சில்* பிரியாது இடம்கொண்ட*
சீராளா செந்தாமரைக் கண்ணா!* தண்துழாய்த்*
தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!* தடமார்வா கொட்டாய் சப்பாணி. (2)
எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?* நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
சிங்காமை விரித்தவன் எம்பெருமான்* அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*
பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக* பொன்மிடறு அத்தனைபோது,*
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே. (2)
குன்றுஒன்று மத்தா அரவம் அளவி* குரைமாகடலைக் கடைந்திட்டு,* ஒருகால்-
நின்று உண்டை கொண்டுஓட்டி வன்கூன் நிமிர* நினைந்த பெருமான் அது அன்றியும்முன்,*
நன்றுஉண்ட தொல்சீர் மகரக் கடல்ஏழ்* மலைஏழ் உலகுஏழ் ஒழியாமை நம்பி,*
அன்றுஉண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள்* உலப்புஇல் வலியார் அவர்பால்,* வயிரம்-
விளைந்திட்டது என்றுஎண்ணி விண்ணோர் பரவ* அவர் நாள்ஒழித்த பெருமான் முனநாள்,*
வளைந்திட்ட வில்லாளி வல் வாள்எயிற்று* மலைபோல் அவுணன் உடல் வள்உகிரால்,*
அளைந்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
தளர்ந்திட்டு இமையோர் சரண் தாஎன* தான் சரண்ஆய் முரண்ஆயவனை* உகிரால்-
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த* பெருமான் திருமால் விரிநீர் உலகை,*
வளர்ந்திட்ட தொல்சீர் விறல் மாவலியை* மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறள்ஆய்,*
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நீண்டான் குறள்ஆய் நெடுவான்அளவும்* அடியார் படும் ஆழ் துயர்ஆய எல்லாம்,*
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்* செல வைத்த பிரான் அதுஅன்றியும்முன்,*
வேண்டாமை நமன் தமர் என்தமரை* வினவப் பெறுவார் அலர், என்று,* உலகுஏழ்-
ஆண்டான்அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
பழித்திட்ட இன்பப் பயன் பற்றுஅறுத்துப்* பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
ஒழித்திட்டு அவரைத் தனக்குஆக்க வல்ல* பெருமான் திருமால் அதுஅன்றியும்முன்,*
தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்* சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
படைத்திட்டுஅது இவ்வையம் உய்ய முனநாள்* பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
துடைத்திட்டு அவரைத் தனக்குஆக்க என்னத்* தெளியா அரக்கர் திறல்போய் அவிய,*
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா* விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம,* கடலை-
அடைத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நெறித்திட்ட மென்கூழை நல்நேர்இழையோடு* உடன்ஆய வில்என்ன வல்ஏய் அதனை,*
இறுத்திட்டு அவள்இன்பம் அன்போடு அணைந்திட்டு* இளங்கொற்றவன்ஆய் துளங்காத முந்நீர்,*
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்* செழுநீள் முடிதோளொடு தாள் துணிய,*
அறுத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங்கு அரிமா* தொலைய பிரியாது சென்றுஎய்தி, எய்தாது*
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத தன்வாய்* இருகூறுசெய்த பெருமான் முனநாள்*
வரிந்திட்ட வில்லால் மரம்ஏழும் எய்து* மலைபோல் உருவத்து ஓர்இராக்கதி மூக்கு,*
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்* வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி* உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*
நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்* கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி* இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே. (2)
மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்* பிறர் மக்கள் தம்மை*
ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று* இரப்பன் உரப்ப கில்லேன்*
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்* நங்கைகாள்! நான்என் செய்கேன்?
தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்* தயிர்கடை கின்றான் போலும்! (2)
காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்* கண்டே போனேன்,*
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன்அல்லால்* மற்று வந்தாரும் இல்லை,*
மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்* வெண்ணெயேஅன்று, இருந்த*
பாலும் பதின்குடம் கண்டிலேன்* பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ!
தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள்!* உறி மேலைத் தடாநிறைந்த,*
வெள்ளி மலைஇருந்தால்ஒத்த வெண்ணெயை* வாரி விழுங்கி யிட்டு,*
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்* கைஎல்லாம் நெய்,* வயிறு-
பிள்ளை பரம்அன்று இவ்ஏழ்உலகும் கொள்ளும்* பேதையேன் என்செய்கேனோ!
மைந்நம்பு வேல்கண்நல்லாள்* முன்னம் பெற்ற வளைவண்ண நல்மா மேனி,*
தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது* அவன் இவை செய்தறியான்*
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்* பொதிஅறை போகின்றவா தவழ்ந்திட்டு,*
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வுஇல்லை* என்செய்கேன் என்செய்கேனோ!
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்* தோழிமார் ஆரும்இல்லை,*
சந்த மலர்க்குழலாள்* தனியே விளையாடும்இடம் குறுகி,*
பந்து பறித்து துகில்பற்றிக் கீறி* படிறன் படிறு செய்யும்,*
நந்தன் மதலைக்கு இங்குஎன்கடவோம்? நங்காய்!* என்செய்கேன் என்செய்கேனோ!
மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்* நந்தன் பெற்ற மதலை,*
அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே* அல்லில்தான் வந்த பின்னை,*
கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மி* கமலச் செவ்வாய் வெளுப்ப,*
என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!* என்செய்கேன் என்செய்கேனோ!
ஆயிரம் கண்உடை இந்திரனாருக்கு அன்று* ஆயர் விழவுஎடுப்ப,*
பாசனம் நல்லன பண்டிகளால்* புகப் பெய்த அதனை எல்லாம்,*
போயிருந்து அங்குஒரு பூத வடிவுகொண்டு* உன்மகன் இன்று நங்காய்,*
மாயன் அதனை எல்லாம் முற்ற* வாரி வளைத்து உண்டுஇருந்தான் போலும்!
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்* ஓர்ஓர்குடம் துற்றிடும்என்று,*
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்* நான்இதற்குஎள்கி இவனை நங்காய்*
சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று* இரப்பன் உரப்பகில்லேன்*
பேய்ச்சி முலைஉண்ட பின்னை* இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே!
ஈடும் வலியும் உடைய* இந் நம்பி பிறந்த எழு திங்களில்,*
ஏடுஅலர் கண்ணியினானை வளர்த்தி* யமுனை நீராடப் போனேன்,*
சேடன் திருமறு மார்வன்* கிடந்து திருவடியால்,* மலை போல்-
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை* உரப்புவது அஞ்சுவனே!
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!* ஆயிரம் நாழி நெய்யை,*
பஞ்சிய மெல்அடிப் பிள்ளைகள் உண்கின்று* பாகம்தான் வையார்களே,*
கஞ்சன் கடியன் கறவுஎட்டு நாளில்* என்கை வலத்துஆதும் இல்லை,*
நெஞ்சத்துஇருப்பன செய்து வைத்தாய் நம்பீ!* என்செய்கேன் என்செய்கேனோ!
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!* ஆயர் மடமக்களை,*
பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்* பின்னே சென்றுஒளித்திருந்து,*
அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு* அரவுஏர்இடையார் இரப்ப,*
மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற* மரம் ஏறி இருந்தாய் போலும்
அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு* ஆண்மையும் சேவகமும்,*
உச்சியில் முத்தி வளர்த்துஎடுத்தேனுக்க* உரைத்திலன் தான்இன்று போய்,*
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி* விசைகொண்டு பாய்ந்து புக்கு* ஆயிரவாய்-
நச்சுஅழல் பொய்கையில் நாகத்தினோடு* பிணங்கி நீ வந்தாய் போலும்!
தம்பரம் அல்லன ஆண்மைகளைத்* தனியேநின்று தாம் செய்வரோ?,
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுஉடையேன்* இனி யான்என் செய்கேன்?,*
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்* அங்குஅனல் செங்கண்உடை,*
வம்புஅவிழ் கானத்து மால்விடையோடு* பிணங்கி நீ வந்தாய் போலும்!
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச* அருவரை போல்,*
மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய* மைந்தனை மாகடல் சூழ்,*
கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்* காமரு சீர்க்கலிகன்றி*
இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு* ஏதும் இடர் இல்லையே. (2)
காதில் கடிப்புஇட்டு* கலிங்கம் உடுத்து,*
தாதுநல்ல* தண்அம் துழாய் கொடுஅணிந்து,*
போது மறுத்து* புறமே வந்து நின்றீர்,*
ஏதுக்கு இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ! (2)
துவர்ஆடை உடுத்து* ஒருசெண்டு சிலுப்பி,*
கவர்ஆக முடித்து* கலிக்கச்சுக் கட்டி,*
சுவர்ஆர் கதவின் புறமே* வந்து நின்றீர்,*
இவர்ஆர்? இதுஎன்? இதுஎன்? இதுஎன்னோ!
கருளக் கொடி ஒன்றுஉடையீர்!* தனிப்பாகீர்,*
உருளச் சகடம் அது* உறுக்கி நிமிர்த்தீர்,*
மருளைக் கொடுபாடி வந்து* இல்லம் புகுந்தீர்,*
இருளத்து இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
நாமம் பலவும் உடை* நாரண நம்பீ,*
தாமத் துளவம்* மிக நாறிடுகின்றீர்,*
காமன்எனப்பாடி வந்து* இல்லம் புகுந்தீர்,*
ஏமத்து இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
சுற்றும் குழல்தாழ* சுரிகை அணைத்து,*
மற்று பல* மாமணி பொன்கொடுஅணிந்து,*
முற்றம் புகுந்து* முறுவல்செய்து நின்றீர்,*
எற்றுக்கு இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
ஆன்ஆயரும்* ஆநிரையும் அங்குஒழிய,*
கூன்ஆயதுஓர்* கொற்ற வில்ஒன்று கைஏந்தி,*
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்,*
ஏனோர்கள் முன்என்?* இதுஎன்? இதுஎன்னோ!
மல்லே பொருத திரள்தோள்* மணவாளீர்,*
அல்லே அறிந்தோம்* நும் மனத்தின் கருத்தை,*
சொல்லாது ஒழியீர்* சொன்ன போதினால் வாரீர்*
எல்லே இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
புக்குஆடுஅரவம்* பிடித்துஆட்டும் புனிதீர்,*
இக்காலங்கள்* யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்,*
தக்கார் பலர்* தேவிமார் சாலஉடையீர்,*
எக்கே! இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
ஆடி அசைந்து* ஆய்மடவாரொடு நீபோய்க்*
கூடிக் குரவை* பிணை கோமளப் பிள்ளாய்,*
தேடி திருமாமகள்* மண்மகள் நிற்ப,*
ஏடி! இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
அல்லிக் கமலக் கண்ணனை* அங்கு ஓர்ஆய்ச்சி*
எல்லிப் பொழுதுஊடிய* ஊடல் திறத்தைக்,*
கல்லின் மலிதோள்* கலியன் சொன்ன மாலை,*
சொல்லித் துதிப்பார் அவர்* துக்கம் இலரே. (2)
புள்உருஆகி நள்இருள் வந்த* பூதனை மாள,* இலங்கை-
ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த* ஊக்கம் அதனை நினைந்தோ,?*
கள்அவிழ் கோதை காதலும்* எங்கள் காரிகை மாதர் கருத்தும்,*
பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்* பேசுவது எந்தை பிரானே! (2)
மன்றில் மலிந்து கூத்து உவந்துஆடி* மால்விடை ஏழும் அடர்த்து,* ஆயர்-
அன்று நடுங்க ஆநிரை காத்த* ஆண்மை கொலோ அறியேன் நான்,*
நின்ற பிரானே! நீள்கடல் வண்ணா!* நீஇவள் தன்னை நின் கோயில்,*
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா* முன் கைவளை கவர்ந்தாயே.
ஆர்மலி ஆழி சங்கொடு பற்றி* ஆற்றலை ஆற்றல் மிகுத்து,*
கார்முகில் வண்ணா! கஞ்சனை முன்னம்* கடந்தநின் கடுந்திறல் தானோ,*
நேர்இழை மாதை நித்திலத் தொத்தை* நெடுங் கடல் அமுதுஅனை யாளை,*
ஆர்எழில் வண்ணா! அம்கையில் வட்டுஆம்* இவள்எனக் கருதுகின்றாயே.
மல்கிய தோளும் மான்உரி அதளும்* உடையவர் தமக்கும்ஓர் பாகம்,*
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த* கரதலத்து அமைதியின் கருத்தோ?*
அல்லிஅம் கோதை அணிநிறம் கொண்டு வந்து* முன்னே நின்று போகாய்,*
சொல்லிஎன் நம்பி இவளை நீ உங்கள்* தொண்டர் கைத் தண்டுஎன்றஆறே.
செருஅழியாத மன்னர்கள் மாள* தேர்வலம் கொண்டு அவர் செல்லும்,*
அருவழி வானம் அதர்படக் கண்ட* ஆண்மைகொலோ? அறியேன் நான்,*
திருமொழி எங்கள் தேமலர்க் கோதை* சீர்மையை நினைந்திலை அந்தோ,*
பெருவழி நாவல் கனியினும் எளியள்* இவள்எனப் பேசுகின்றாயே
அரக்கியர் ஆகம் புல்என வில்லால்* அணிமதிள் இலங்கையார் கோனைச்,*
செருக்குஅழித்து அமரர் பணிய முன்நின்ற* சேவகமோ? செய்ததுஇன்று*
முருக்குஇதழ் வாய்ச்சி முன்கை வெண்சங்கம்* கொண்டு முன்னே நின்று போகாய்,*
எருக்குஇலைக்குஆக எறிமழுஓச்சல்* என்செய்வது? எந்தை பிரானே!
ஆழிஅம் திண்தேர் அரசர் வந்துஇறைஞ்ச* அலைகடல் உலகம்முன் ஆண்ட,*
பாழிஅம் தோள்ஓர் ஆயிரம் வீழ* படைமழுப் பற்றிய வலியோ?*
மாழைமென் நோக்கி மணிநிறம் கொண்டு வந்து* முன்னே நின்று போகாய்,*
கோழிவெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய்!* குறுந்தடி? நெடுங்கடல் வண்ணா!
பொருந்தலன் ஆகம்புள் உவந்துஏற* வள்உகிரால் பிளந்து,* அன்று-
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த* பெருமைகொலோ செய்தது இன்று,*
பெருந்தடங் கண்ணி சுரும்புஉறு கோதை* பெருமையை நினைந்திலை பேசில்,*
கருங்கடல் வண்ணா! கவுள்கொண்ட நீர்ஆம்* இவள்எனக் கருதுகின்றாயே
நீர்அழல் வான்ஆய் நெடுநிலம் கால்ஆய்* நின்றநின் நீர்மையை நினைந்தோ?*
சீர்கெழு கோதை என்அலதுஇலள் என்று* அன்னதுஓர் தேற்றன்மை தானோ?*
பார்கெழு பவ்வத்துஆர் அமுதுஅனை* பாவையைப் பாவம் செய்தேனுக்கு,*
ஆர்அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்ஆக* நின் மனத்து வைத்தாயே
வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி* மெய்ம்மையே நின்று எம்பெருமானை,*
வாள்திறல் தானை மங்கையர் தலைவன்* மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*
தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்* பழமொழியால் பணிந்து உரைத்த,*
பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்* சித்தமும் திருவொடு மிகுமே (2)
திருத்தாய் செம்போத்தே,!*
திருமாமகள் தன்கணவன்,*
மருத்தார் தொல்புகழ்* மாதவனை வர*
திருத்தாய் செம்போத்தே! (2)
கரையாய் காக்கைப்பிள்ளாய்,*
கருமாமுகில் போல்நிறத்தன்,*
உரைஆர் தொல்புகழ்* உத்தமனை வர*
கரையாய் காக்கைப்பிள்ளாய்!
கூவாய் பூங்குயிலே,*
குளிர்மாரி தடுத்துஉகந்த*
மாவாய் கீண்ட* மணிவண்ணனை வர,*
கூவாய் பூங்குயிலே!
கொட்டாய் பல்லிக்குட்டி,*
குடம்ஆடி உலகுஅளந்த,*
மட்டுஆர் பூங்குழல்* மாதவனை வர,*
கொட்டாய் பல்லிக்குட்டி!
சொல்லாய் பைங்கிளியே,*
சுடர்ஆழி வலன்உயர்த்த,*
மல்ஆர் தோள்* வட வேங்கடவனைவர,*
சொல்லாய் பைங்கிளியே! (2)
கோழி கூஎன்னுமால்,*
தோழி! நான்என்செய்கேன்,*
ஆழி வண்ணர்* வரும்பொழுது ஆயிற்று*
கோழி கூஎன்னுமால்.
காமற்கு என்கடவேன்,*
கருமாமுகில் வண்ணற்குஅல்லால்,*
பூமேல் ஐங்கணை* கோத்துப் புகுந்துஎய்ய,*
காமற்கு என்கடவேன்!
இங்கே போதும்கொலோ,*
இனவேல்நெடுங் கண்களிப்ப,*
கொங்குஆர் சோலைக்* குடந்தைக் கிடந்தமால்,*
இங்கே போதும்கொலோ! (2)
இன்னார் என்றுஅறியேன்,*
அன்னே! ஆழியொடும்,*
பொன்ஆர் சார்ங்கம் உடைய அடிகளை,*
இன்னார் என்றுஅறியேன். (2)
தொண்டீர் பாடுமினோ,*
சுரும்புஆர்பொழில் மங்கையர்கோன்,*
ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,*
தொண்டீர்! பாடுமினோ (2)
குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,* மாமழை-
அன்று காத்த அம்மான்,* அரக்கரை-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,?*
தென்றல் வந்து* தீ வீசும் என்செய்கேன்! (2)
காரும் வார்பனிக்* கடலும் அன்னவன்,*
தாரும் மார்வமும்* கண்ட தண்டமோ,*
சோரும் மாமுகில்* துளியின் ஊடுவந்து,*
ஈர வாடைதான்* ஈரும் என்னையே!
சங்கும் மாமையும்* தளரும் மேனிமேல்,*
திங்கள் வெம்கதிர்* சீறும் என்செய்கேன்,*
பொங்கு வெண்திரைப்* புணரி வண்ணனார்,*
கொங்குஅலர்ந்ததார்* கூவும் என்னையே!
அங்குஓர் ஆய்க்குலத்துள்* வளர்ந்து சென்று,*
அங்குஓர்* தாய்உருஆகி வந்தவள்,*
கொங்கை நஞ்சுஉண்ட* கோயின்மை கொலோ,*
திங்கள் வெம்கதிர்* சீறுகின்றதே.
அங்குஓர் ஆள்அரிஆய்,* அவுணனை-
பங்கமா* இருகூறு செய்தவன்,*
மங்குல் மாமதி* வாங்கவே கொலோ*
பொங்கு மாகடல்* புலம்பு கின்றதே!
சென்றுவார்* சிலை வளைத்து இலங்கையை-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,*
முன்றில் பெண்ணைமேல்* முளரிக் கூட்டகத்து,*
அன்றிலின் குரல்* அடரும் என்னையே!
பூவை வண்ணனார்* புள்ளின் மேல்வர,*
மேவி நின்றுநான்* கண்ட தண்டமோ,*
வீவுஇல்ஐங்கணை* வில்லி அம்புகோத்து,*
ஆவியே இலக்குஆக எய்வதே!
மால் இனம்துழாய்* வரும் என் நெஞ்சகம்,*
மாலின் அம்துழாய்* வந்து என்உள்புக,*
கோல வாடையும்* கொண்டு வந்ததுஓர்*
ஆலி வந்ததால்* அரிது காவலே!
கெண்டை ஒண்கணும் துயிலும்,* என்நிறம்-
பண்டு பண்டு போல்ஒக்கும்,* மிக்கசீர்த்
தொண்டர் இட்ட* பூந்துளவின் வாசமே,*
வண்டு கொண்டு வந்து* ஊதுமாகிலே
அன்று பாரதத்து* ஐவர் தூதனாய்ச்,*
சென்ற மாயனை* செங்கண் மாலினை,*
மன்றில்ஆர் புகழ்* மங்கை வாள்கலி,*
கன்றி சொல்வல்லார்க்கு* அல்லல் இல்லையே (2)
குன்றம் எடுத்து மழைதடுத்து* இளையாரொடும்*
மன்றில் குரவை பிணைந்த மால்* என்னை மால்செய்தான்,*
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்* கிடந்தீர்கின்ற*
அன்றிலின் கூட்டைப்* பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ! (2)
பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து* அரிமாச்செகுத்து,*
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு* வன் பேய்முலை-
வாங்கி உண்ட,* அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய்,*
ஏங்கு வேய்ங்குழல்* என்னோடாடும் இளமையே!.
மல்லோடு கஞ்சனும்* துஞ்ச வென்ற மணிவண்ணன்,*
அல்லி மலர்த்தண்துழாய்* நினைந்திருந்தேனையே,*
எல்லியில் மாருதம்* வந்தடும், அதுவன்றியும்,*
கொல்லை வல்லேற்றின் மணியும்* கோயின்மை செய்யுமே!.
பொருந்து மாமரம்* ஏழும் எய்த புனிதனார்*
திருந்து சேவடி* என்மனத்து நினைதொறும்,*
கருந்தண் மாகடல்* மங்குலார்க்கும் அதுவன்றியும்,*
வருந்த வாடை வரும்* இதற்கினி என்செய்கேன்!
அன்னை முனிவதும்* அன்றிலின் குரல் ஈர்வதும்,*
மன்னு மறிகடல் ஆர்ப்பதும்* வளை சோர்வதும்*
பொன்னங் கலையல்குல்* அன்ன மென்னடைப் பூங்குழல்,*
பின்னை மணாளர்* திறத்தவாயின பின்னையே
ஆழியும் சங்கும் உடைய* நங்கள் அடிகள்தாம்,*
பாழிமையான கனவில்* நம்மைப் பகர்வித்தார்,*
தோழியும் நானும் ஒழிய* வையம் துயின்றது,*
கோழியும் கூகின்றதில்லைக்* கூரிருள் ஆயிற்றே!.
காமன் தனக்கு முறையல்லேன்* கடல் வண்ணனார்,*
மாமணவாளர்* எனக்குத் தானும் மகன்சொல்லில்,*
யாமங்கள் தோறும் எரி வீசும்* என்னிளங் கொங்கைகள்,*
மாமணி வண்ணர்* திறத்த வாய் வளர்கின்றவே!
மஞ்சுறு மாலிருஞ் சோலை* நின்ற மணாளனார்,*
நெஞ்சம் நிறைகொண்டு போயினார்* நினைகின்றிலர்,*
வெஞ்சுடர் போய் விடியாமல்* எவ்விடம் புக்கதோ,*
நஞ்சு உடலம் துயின்றால்* நமக்கினி நல்லதே!
காமன் கணைக்கு ஓர்இலக்கம்ஆய்* நலத்தில்மிகு,*
பூமரு கோல* நம் பெண்மை சிந்தித்திராது போய்*
தூமலர் நீர்கொடு* தோழி.நாம் தொழுதேத்தினால்*
கார்முகில் வண்ணரைக்* கண்களால் காணலாம் கொலோ!.
வென்றி விடையுடன்* ஏழடர்த்த அடிகளை,*
மன்றில் மலிபுகழ்* மங்கைமன் கலிகன்றிசொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* உரைப்பவர் தங்கள்மேல்*
என்றும் நில்லா வினை* ஒன்றும் சொல்லில் உலகிலே (2)
மன்னிலங்கு பாரதத்துத்* தேரூர்ந்து,* மாவலியைப்-
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்* பொருகடல்சூழ்*
தென்னிலங்கை ஈடழித்த* தேவர்க்கு இதுகாணீர்*
என்னிலங்கு சங்கோடு* எழில் தோற்றிருந்தேனே!. (2)
இருந்தான் என்னுள்ளத்து* இறைவன், கறைசேர்*
பருந்தாள் களிற்றுக்கு* அருள்செய்த, செங்கண்*
பெருந்தோள் நெடுமாலைப்* பேர்பாடி ஆட*
வருந்தாது என் கொங்கை* ஒளிமன்னும் அன்னே!
அன்னே! இவரை* அறிவன், மறைநான்கும்*
முன்னே உரைத்த* முனிவர் இவர்வந்து*
பொன்னேய் வளைகவர்ந்து* போகார் மனம்புகுந்து*
என்னே இவரெண்ணும்* எண்ணம் அறியோமே!
அறியோமே என்று* உரைக்கலாமே எமக்கு,*
வெறியார் பொழில்சூழ்* வியன்குடந்தை மேவி,*
சிறியான் ஓர் பிள்ளையாய்* மெள்ள நடந்திட்டு*
உறியார் நறுவெண்ணெய்* உண்டுகந்தார் தம்மையே?
தம்மையே நாளும்* வணங்கித் தொழுவார்க்கு,*
தம்மையே ஒக்க* அருள்செய்வர் ஆதலால்,*
தம்மையே நாளும்* வணங்கித் தொழுதிறைஞ்சி,*
தம்மையே பற்றா* மனத்தென்றும் வைத்தோமே.
வைத்தார் அடியார்* மனத்தினில் வைத்து,* இன்பம்-
உற்றார் ஒளிவிசும்பி* ஓரடிவைத்து,* ஓரடிக்கும்-
எய்த்தாது மண்ணென்று* இமையோர் தொழுதிறைஞ்சி,*
கைத்தாமரை குவிக்கும்* கண்ணன் என் கண்ணனையே
கண்ணன் மனத்துள்ளே* நிற்கவும், கைவளைகள்*
என்னோ கழன்ற?* இவையென்ன மாயங்கள்?*
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,* அவன்மேய,-
அண்ணல் மலையும்* அரங்கமும் பாடோமே.
பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே* ஆயிரம் பேரானை? பேர்நினைந்து
சூடோமே* சூடும் துழாயலங்கல்? சூடி,* நாம்
கூடோமே கூடக்* குறிப்பாகில்? நன்னெஞ்சே!
நன்னெஞ்சே! நம்பெருமான்* நாளும் இனிதமரும்,*
அன்னம்சேர் கானல்* அணியாலி கைதொழுது,*
முன்னம்சேர் வல்வினைகள் போக* முகில்வண்ணன்,*
பொன்னம்சேர் சேவடிமேல்* போதணியப் பெற்றோமே!
பெற்றாரார்* ஆயிரம் பேரானைப்,* பேர்பாடப்-
பெற்றான்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*
கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்* இவைகேட்கல்-
உற்றார்க்கு,* உறுதுயர் இல்லை உலகத்தே (2)
நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்* வளநாடு மூட இமையோர்*
தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன* அரண்ஆவன் என்னும் அருளால்*
அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி* அகல் வான்உரிஞ்ச,* முதுகில்-
மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை* மறவாது இறைஞ்சு என் மனனே! (2)
செருமிகு வாள்எயிற்ற அரவுஒன்று சுற்றி* திசைமண்ணும் விண்ணும் உடனே*
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப* இமையோர்கள் நின்று கடைய,*
பருவரை ஒன்று நின்று முதுகில் பரந்து* சுழலக் கிடந்து துயிலும்,*
அருவரை அன்ன தன்மை அடல்ஆமைஆன* திருமால் நமக்கு ஓர் அரணே.
தீதுஅறு திங்கள் பொங்கு சுடர்உம்பர் உம்பர்* உலகுஏழினோடும் உடனே,*
மாதிரம் மண்சுமந்த வடகுன்றும் நின்ற* மலைஆறும் ஏழு கடலும்*
பாதமர் சூழ்குளம்பின் அகமண்ட லத்தின்* ஒருபால் ஒடுங்க வளர்சேர்,*
ஆதிமுன் ஏனம்ஆகி அரண்ஆய மூர்த்தி* அதுநம்மை ஆளும் அரசே.
தளைஅவிழ் கோதை மாலை இருபால் தயங்க* எரிகான்றுஇரண்டு தறுகண்,*
அளவுஎழ வெம்மை மிக்க அரிஆகி அன்று* பரியோன் சினங்கள் அவிழ,*
வளை உகிர்ஆளி மொய்ம்பின் மறவோனதுஆகம்* மதியாது சென்று ஓர்உகிரால்*
பிளவுஎழ விட்ட குட்டம் அதுவையம்மூடு* பெருநீரில் மும்மை பெரிதே.
வெந்திறல் வாணன் வேள்வி இடம்எய்தி* அங்குஓர் குறள்ஆகி மெய்ம்மை உணர*
செந்தொழில் வேத நாவின் முனிஆகி வையம்* அடிமூன்று இரந்து பெறினும்,*
மந்தர மீது போகி மதிநின்று இறைஞ்ச* மலரோன் வணங்க வளர்சேர்,*
அந்தரம் ஏழினூடு செலஉய்த்த பாதம்* அது நம்மை ஆளும் அரசே.
இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும்* ஒருநாலும் ஒன்றும் உடனே,*
செருநுதலூடு போகி அவர்ஆவி மங்க* மழுவாளில் வென்ற திறலோன்,*
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர்* புலமங்கை கேள்வர் புகழ்சேர்,*
பெருநிலம் உண்டு உமிழ்ந்த பெருவாயர்ஆகி* யவர் நம்மை ஆள்வர் பெரிதே.
இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன* இனம்ஆய மான்பின் எழில்சேர்*
அலைமலி வேல் கணாளை அகல்விப்பதற்கு* ஓர்உருஆய மானை அமையா,*
கொலைமலி எய்துவித்த கொடியோன் இலங்கை* பொடிஆக வென்றி அமருள்,*
சிலைமலி செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்* திருமால் நமக்குஓர் அரணே.
முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண* முதலோடு வீடும் அறியாது,*
என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப* எழில் வேதம் இன்றி மறைய,*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி* இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ,*
அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த* அது நம்மை ஆளும் அரசே.
துணைநிலை மற்றுஎமக்குஓர் உளது என்றுஇராது* தொழுமின்கள் தொண்டர்! தொலைய*
உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி* உகஉண்டு வெண்ணெய் மருவி,*
பணைமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட* அதனோடும் ஓடி அடல்சேர்,*
இணை மருதுஇற்று வீழ நடைகற்ற தெற்றல்* வினைப் பற்றுஅறுக்கும் விதியே.
கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று* கொடியோன் இலங்கை பொடியா*
சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்* திருமாலை, வேலை புடைசூழ்*
கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு* கலிகன்றி சொன்ன பனுவல்,*
ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்* அவர்ஆள்வர் உம்பர் உலகே. (2)
மான்அமரும் மென்நோக்கி* வைதேவிஇன் துணையா,*
கான்அமரும் கல்அதர்போய்* காடுஉறைந்தான் காண்ஏடீ*
கான்அமரும் கல்அதர்போய்* காடுஉறைந்த பொன்அடிக்கள்,*
வானவர்-தம் சென்னி* மலர்கண்டாய் சாழலே (2)
தந்தை தளைகழலத்* தோன்றிப்போய்,* ஆய்ப்பாடி-
நந்தன் குலமதலையாய்* வளர்ந்தான் காண்ஏடீ,*
நந்தன் குலமதலையாய்* வளர்ந்தான் நான்முகற்குத்*
தந்தைகாண் எந்தை* பெருமான் காண் சாழலே.
ஆழ்கடல்சூழ் வையகத்தார்* ஏசப்போய்,* ஆய்ப்பாடித்-
தாழ்குழலார் வைத்த* தயிர்உண்டான் காண்ஏடீ,*
தாழ்குழலார் வைத்த* தயிர்உண்ட பொன்வயிறு,* இவ்-
ஏழ்உலகும் உண்டும்* இடம்உடைத்தால் சாழலே.
அறியாதார்க்கு* ஆன்ஆயன் ஆகிப்போய்,* ஆய்ப்பாடி-
உறிஆர் நறுவெண்ணெய்* உண்டுஉகந்தான் காண்ஏடீ*
உறிஆர் நறுவெண்ணெய்* உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,*
எறிநீர் உலகுஅனைத்தும்* எய்தாதால் சாழலே
வண்ணக் கருங்குழல்* ஆய்ச்சியால் மொத்துண்டு,*
கண்ணிக் குறுங்கயிற்றால்* கட்டுண்டான் காண்ஏடீ,*
கண்ணிக் குறுங்கயிற்றால்* கட்டுண்டான் ஆகிலும்,*
எண்ணற்கு அரியன்* இமையோர்க்கும் சாழலே.
கன்றப் பறைகறங்க* கண்டவர்தம் கண்களிப்ப,*
மன்றில் மரக்கால்* கூத்துஆடினான் காண் ஏடீ,*
மன்றில் மரக்கால்* கூத்து ஆடினான் ஆகிலும்,*
என்றும் அரியன்* இமையோர்க்கும் சாழலே.
கோதைவேல் ஐவர்க்குஆய்* மண்அகலம் கூறுஇடுவான்,*
தூதன்ஆய் மன்னவனால்* சொல்லுண்டான் காண்ஏடீ,*
தூதன்ஆய் மன்னவனால்* சொல்லுண்டான் ஆகிலும்,*
ஓதநீர் வையகம்* முன்உண்டு உமிழ்ந்தான் சாழலே.
பார்மன்னர் மங்கப்* படைதொட்டு வெம்சமத்துத்,*
தேர்மன்னற்குஆய்* அன்று தேர்ஊர்ந்தான் காண்ஏடீ,*
தேர்மன்னற்குஆய்* அன்று தேர்ஊர்ந்தான் ஆகிலும்,*
தார்மன்னர் தங்கள்* தலைமேலான் சாழலே.
கண்டார் இரங்க* கழியக் குறள்உருஆய்,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் காண்ஏடீ,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் ஆகிலும்*
விண்டுஏழ் உலகுக்கும்* மிக்கான் காண் சாழலே
கள்ளத்தால் மாவலியை* மூவடி மண் கொண்டு அளந்தான்,*
வெள்ளத்தான் வேங்கடத்தான்* என்பரால் காண்ஏடீ,*
வெள்ளத்தான்* வேங்கடத்தானேலும்,* கலிகன்றி-
உள்ளத்தின் உள்ளே* உளன் கண்டாய் சாழலே. (2)
மைந்நின்ற கருங்கடல் வாய்உலகுஇன்றி* வானவரும் யாமும்எல்லாம்,*
நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்* நெடுங்காலம் கிடந்தது ஓரீர்,*
எந்நன்றி செய்தாரா* ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்?*
செய்ந்நன்றி குன்றேல்மின்* தொண்டர்காள்! அண்டனைய ஏத்தீர்களே (2)
நில்லாத பெருவெள்ளம்* நெடுவிசும்பின் மீதுஓடி நிமிர்ந்த காலம்,*
மல்ஆண்ட தடக்கையால்* பகிரண்டம் அகப்படுத்த காலத்து,* அன்று-
எல்லாரும் அறியாரோ* எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில்தேவர்,*
அல்லாதார் தாம்உளரே?* அவன்அருளே உலகுஆவது அறியீர்களே?
நெற்றிமேல் கண்ணானும்* நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,*
ஒற்றைக்கை வெண்பகட்டின்* ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,*
வெற்றிப்போர்க் கடல்அரையன்* விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,*
கொற்றப் போர்ஆழியான்* குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியஆறே!
பனிப்பரவைத் திரைததும்ப* பார்எல்லாம் நெடுங்கடலே ஆனகாலம்,*
இனிக் களைகண்இவர்க்கு இல்லை என்று* உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி*
முனித்தலைவன் முழங்குஒளிசேர்* திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட*
கனிக்களவத் திருஉருவத்து ஒருவனையே* கழல் தொழுமா கல்லீர்களே.
பார்ஆரும் காணாமே* பரவைமா நெடுங்கடலே ஆனகாலம்,*
ஆரானும் அவனுடைய திருவயிற்றில்* நெடுங்காலம் கிடந்தது,* உள்ளத்து-
ஓராத உணர்விலீர்! உணருதிரேல்* உலகுஅளந்த உம்பர் கோமான்,*
பேராளன் பேரான* பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே.
பேய்இருக்கும் நெடுவெள்ளம்* பெருவிசும்பின் மீதுஓடிப் பெருகுகாலம்,*
தாய்இருக்கும் வண்ணமே* உம்மைத்தன் வயிற்றுஇருத்தி உய்யக்கொண்டான்,*
போய்இருக்க மற்றுஇங்குஓர்* புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,* பெற்ற-
தாய்இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ* மாட்டாத தகவுஅற்றீரே!
மண்நாடும் விண்நாடும்* வானவரும் தானவரும் மற்றும்எல்லாம்*
உண்ணாத பெருவெள்ளம்* உண்ணாமல் தான்விழுங்கி உய்யக்கொண்ட,*
கணணாளன் கண்ணமங்கை நகராளன்* கழல்சூடி, அவனை உள்ளத்து*
எண்ணாத மானிடத்தை* எண்ணாத போதுஎல்லாம் இனியஆறே.
மறம்கிளர்ந்த கருங்கடல் நீர்* உரம்துரந்து பரந்துஏறி அண்டத்துஅப்பால்,*
புறம்கிளர்ந்த காலத்து* பொன்உலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,*
அறம்கிளந்த திருவயிற்றின்* அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,*
நிறம்கிளர்ந்த கருஞ்சோதி* நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.
அண்டத்தின் முகடுஅழுந்த* அலைமுந்நீர்த் திரைததும்ப ஆ! ஆ! என்று,*
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்* தான்அருளி,* உலகம்ஏழும்-
உண்டுஒத்த திருவயிற்றின்* அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,*
கொண்டல்கை மணிவண்ணன்* தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே.
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,*
யாவரையும் ஒழியாமே* எம்பெருமான் உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*
காவளரும் பொழில்மங்கைக்* கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,*
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்* பொன்உலகில் பொலிவர் தாமே. (2)
நீள்நாகம் சுற்றி* நெடுவரைநட்டு,* ஆழ்கடலைப்-
பேணான் கடைந்து* அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*
பூண்ஆர மார்வனை* புள்ஊரும் பொன்மலையை,*
காணாதார் கண்என்றும்* கண்அல்ல கண்டாமே (2)
நீள்வான் குறள்உருஆய்* நின்றுஇரந்து மாவலிமண்,*
தாளால் அளவிட்ட* தக்கணைக்கு மிக்கானை,*
தோளாத மாமணியை* தொண்டர்க்கு இனியானை,*
கேளாச் செவிகள்* செவிஅல்ல கேட்டாமே.
தூயானை* தூய மறையானை,* தென்ஆலி
மேயானை* மேவாள் உயிர்உண்டு அமுதுஉண்ட
வாயானை* மாலை வணங்கி* அவன்பெருமை
பேசாதார்* பேச்சுஎன்றும் பேச்சுஅல்ல கேட்டாமே.
கூடா இரணியனைக்* கூர்உகிரால் மார்வுஇடந்த,*
ஓடா அடல்அரியை* உம்பரார் கோமானை,*
தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,* ஆர்வத்தால்-
பாடாதார் பாட்டுஎன்றும்* பாட்டுஅல்ல கேட்டாமே.
மைஆர் கடலும்* மணிவரையும் மாமுகிலும்,*
கொய்ஆர் குவளையும் காயாவும்* போன்றுஇருண்ட*
மெய்யானை மெய்ய மலையானை* சங்குஏந்தும்
கையானை கைதொழா* கைஅல்ல கண்டாமே.
கள்ஆர் துழாயும்* கணவலரும் கூவிளையும்,*
முள்ஆர் முளரியும்* ஆம்பலும்முன் கண்டக்கால்,*
புள்ஆய் ஓர் ஏனம்ஆய்ப்* புக்குஇடந்தான் பொன்அடிக்குஎன்று,*
உள்ளாதார் உள்ளத்தை* உள்ளமாக் கொள்ளோமே.
கனைஆர் கடலும்* கருவிளையும் காயாவும்*
அனையானை,* அன்பினால் ஆர்வத்தால்,* என்றும்-
சுனைஆர் மலர்இட்டு* தொண்டராய் நின்று,*
நினையாதார் நெஞ்சுஎன்றும்* நெஞ்சுஅல்ல கண்டாமே.
வெறிஆர் கருங்கூந்தல்* ஆய்ச்சியர் வைத்த*
உறிஆர் நறுவெண்ணெய்* தான்உகந்து உண்ட
சிறியானை* செங்கண்* நெடியானை சிந்தித்து-
அறியாதார்* என்றும் அறியாதார் கண்டாமே.
தேனொடு வண்டுஆலும்* திருமாலிருஞ்சோலை,*
தான்இடமாக் கொண்டான்* தடமலர்க் கண்ணிக்காய்,*
ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு* ஆள்ஆனார் அல்லாதார்,*
மானிடவர் அல்லர் என்று* என்மனத்தே வைத்தேனே. (2)
மெய்ந்நின்ற* பாவம் அகல,* திருமாலைக்-
கைந்நின்ற ஆழியான்* சூழும் கழல்சூடிக்,*
கைந்நின்ற வேல்கைக்* கலியன் ஒலிமாலை,*
ஐயொன்றும் ஐந்தும்* இவைபாடி ஆடுமினே. (2)
மாற்றம்உள* ஆகிலும் சொல்லுவன்,* மக்கள்-
தோற்றக் குழி* தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*
ஆற்றங்கரை வாழ் மரம்போல்* அஞ்சுகின்றேன்,*
நாற்றம் சுவை* ஊறு ஒலிஆகிய நம்பீ! (2)
சீற்றம்உள* ஆகிலும் செப்புவன்,* மக்கள்-
தோற்றக்குழி* தோற்றுவிப்பாய் கொல்என்றுஅஞ்சி,*
காற்றத்து இடைப்பட்ட* கலவர் மனம்போல்,*
ஆற்றத்துளங்கா நிற்பன்* ஆழிவலவா!
தூங்குஆர் பிறவிக்கண்* இன்னம் புகப்பெய்து,*
வாங்காய்என்று சிந்தித்து* நான்அதற்கு அஞ்சி,*
பாம்போடு ஒருகூரையிலே* பயின்றால்போல்,*
தாங்காது உள்ளம் தள்ளும்* என் தமரைக்கண்ணா!
உருஆர் பிறவிக்கண்* இன்னம் புகப்பெய்து,*
திரிவாய்என்று சிந்தித்தி* என்றுஅதற்கு அஞ்சி,*
இருபாடு எரிகொள்ளியின்* உள் எறும்பே போல்,*
உருகாநிற்கும்* என்உள்ளம் ஊழி முதல்வா!
கொள்ளக் குறையாத* இடும்பைக் குழியில்,*
தள்ளிப் புகப்பெய்தி கொல்* என்றுஅதற்கு அஞ்சி,*
வெள்ளத்து இடைப்பட்ட* நரிஇனம் போலே,*
உள்ளம் துளங்கா நிற்பன்* ஊழி முதல்வா!
படைநின்ற* பைந்தாமரையோடு* அணிநீலம்-
மடைநின்று அலரும்* வயல்ஆலி மணாளா,*
இடையன் எறிந்த மரமே* ஒத்துஇராமே,*
அடைய அருளாய்* எனக்கு உன்தன் அருளே.
வேம்பின்புழு* வேம்புஅன்றி உண்ணாது,* அடியேன்-
நான்பின்னும்* உன்சேவடிஅன்றி நயவேன்,*
தேம்பல் இளந்திங்கள்* சிறைவிடுத்து,* ஐவாய்ப்-
பாம்பின் அணைப்* பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ! (2)
அணிஆர் பொழில்சூழ்* அரங்க நகர்அப்பா,*
துணியேன் இனி* நின் அருள்அல்லது எனக்கு,*
மணியே! மணிமாணிக்கமே!* மதுசூதா,*
பணியாய் எனக்கு உய்யும்வகை,* பரஞ்சோதீ! (2)
நந்தா நரகத்து அழுந்தா வகை,* நாளும்-
எந்தாய்! தொண்டர்ஆனவர்க்கு* இன்அருள் செய்வாய்,*
சந்தோகா! தலைவனே!* தாமரைக் கண்ணா,*
அந்தோ! அடியேற்கு* அருளாய் உன்அருளே (2)
குன்றம் எடுத்து* ஆநிரை காத்தவன் தன்னை,*
மன்றில் புகழ்* மங்கை மன் கலிகன்றி சொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* வல்லவர்-தம்மேல்,*
என்றும் வினைஆயின* சாரகில்லாவே, (2)
பிணக்கற அறுவகைச் சமயமும்* நெறி உள்ளி உரைத்த*
கணக்கு அறு நலத்தனன்* அந்தம் இல் ஆதி அம் பகவன்*
வணக்கு உடைத் தவநெறி* வழிநின்று புறநெறி களைகட்டு*
உணக்குமின், பசை அற!* அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே.
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று* உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை*
உணர்ந்து உணர்ந்து உணரிலும்* இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்!*
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து* அரி அயன் அரன் என்னும் இவரை*
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து* இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.
ஒன்று எனப் பல என* அறிவு அரும்வடிவினுள் நின்ற*
நன்று எழில் நாரணன்* நான்முகன் அரன் என்னும் இவரை*
ஒன்ற நும் மனத்து வைத்து* உள்ளி நும் இரு பசை அறுத்து*
நன்று என நலம் செய்வது* அவனிடை நம்முடை நாளே.
நாளும் நின்று அடு நம பழமை* அம் கொடுவினை உடனே
மாளும்* ஓர் குறைவு இல்லை;* மனன் அகம் மலம் அறக் கழுவி*
நாளும் நம் திரு உடை அடிகள் தம்* நலம் கழல் வணங்கி*
மாளும் ஓர் இடத்திலும்* வணக்கொடு மாள்வது வலமே.
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,* இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த* நல் உலகமும் தானும்
புலப்பட* பின்னும் தன் உலகத்தில்* அகத்தனன் தானே
சொலப் புகில்* இவை பின்னும் வயிற்று உள;* இவை அவன் துயக்கே.
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்* அமரரைத் துயக்கும்*
மயக்கு உடை மாயைகள்* வானிலும் பெரியன வல்லன்*
புயல் கரு நிறத்தனன்;* பெரு நிலங் கடந்த நல் அடிப் போது*
அயர்ப்பிலன் அலற்றுவன்* தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.
அமரர்கள் தொழுது எழ* அலை கடல் கடைந்தவன் தன்னை*
அமர் பொழில் வளங் குருகூர்ச்* சடகோபன் குற்றேவல்கள்*
அமர் சுவை ஆயிரத்து* அவற்றினுள் இவை பத்தும் வல்லார்*
அமரரோடு உயர்வில் சென்று* அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)
அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!* நீயும் நின்
அம்சிறைய சேவலுமாய்* ஆஆ என்று எனக்கு அருளி*
வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு* என் விடு தூதாய்ச் சென்றக்கால்*
வன்சிறையில் அவன் வைக்கில்* வைப்புண்டால் என் செயுமோ? (2)
என் செய்ய தாமரைக்கண்* பெருமானார்க்கு என் தூதாய்*
என் செய்யும் உரைத்தக்கால்?* இனக் குயில்காள் நீர் அலிரே?*
முன் செய்த முழுவினையால்* திருவடிக்கீழ்க் குற்றேவல்*
முன் செய்ய முயலாதேன்* அகல்வதுவோ? விதியினமே.
விதியினால் பெடை மணக்கும்* மென்நடைய அன்னங்காள்!*
மதியினால் குறள் மாணாய்* உலகு இரந்த கள்வர்க்கு*
மதியிலேன் வல் வினையே* மாளாதோ? என்று ஒருத்தி*
மதி எல்லாம் உள் கலங்கி* மயங்குமால் என்னீரே!
என் நீர்மை கண்டு இரங்கி* இது தகாது என்னாத*
என் நீல முகில் வண்ணற்கு* என் சொல்லி யான் சொல்லுகேனோ?*
நன் நீர்மை இனி அவர்கண்* தங்காது என்று ஒரு வாய்ச்சொல்*
நன் நீல மகன்றில்காள்!* நல்குதிரோ? நல்கீரோ?
நல்கித் தான் காத்து அளிக்கும்* பொழில் ஏழும்; வினையேற்கே*
நல்கத் தான் ஆகாதோ?* நாரணனைக் கண்டக்கால்*
மல்கு நீர்ப் புனல் படப்பை* இரை தேர் வண் சிறு குருகே!*
மல்கு நீர்க் கண்ணேற்கு* ஓர் வாசகம் கொண்டு அருளாயே.
அருளாத நீர் அருளி* அவர் ஆவி துவராமுன்*
அருள் ஆழிப் புட்கடவீர்* அவர் வீதி ஒருநாள் என்று*
அருள் ஆழி அம்மானைக்* கண்டக்கால் இது சொல்லி*
அருள் ஆழி வரி வண்டே!* யாமும் என் பிழைத்தோமே?
என்பு இழை கோப்பது போலப்* பனி வாடை ஈர்கின்றது*
என் பிழையே நினைந்தருளி* அருளாத திருமாலார்க்கு*
என் பிழைத்தாள் திருவடியின்* தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்*
என்பிழைக்கும்? இளங் கிளியே!* யான் வளர்த்த நீ அலையே?
நீயலையே ? சிறு பூவாய்!* நெடுமாலார்க்கு என் தூதாய்*
நோய் எனது நுவல் என்ன,* நுவலாதே இருந்தொழிந்தாய்*
சாயலொடு மணி மாமை* தளர்ந்தேன் நான்* இனி உனது-
வாய் அலகில் இன் அடிசில்* வைப்பாரை நாடாயே.
நாடாத மலர் நாடி* நாள்தோறும் நாரணன் தன்*
வாடாத மலர் அடிக்கீழ்* வைக்கவே வகுக்கின்று*
வீடாடி வீற்றிருத்தல்* வினை அற்றது என் செய்வதோ?*
ஊடாடு பனி வாடாய்!* உரைத்து ஈராய் எனது உடலே.
உடல் ஆழிப் பிறப்பு வீடு* உயிர் முதலா முற்றுமாய்க்*
கடல் ஆழி நீர் தோற்றி* அதனுள்ளே கண்வளரும்*
அடல் ஆழி அம்மானைக்* கண்டக்கால் இது சொல்லி*
விடல் ஆழி மட நெஞ்சே!* வினையோம் ஒன்றாம் அளவே.
அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்* பெருமான் கண்ணனை*
வள வயல் சூழ் வண் குருகூர்ச்* சடகோபன் வாய்ந்து உரைத்த*
அளவு இயன்ற அந்தாதி* ஆயிரத்துள் இப் பத்தின்*
வள உரையால் பெறலாகும்* வான் ஓங்கு பெரு வளமே. (2)
இவையும் அவையும் உவையும்* இவரும் அவரும் உவரும்,*
எவையும் எவரும் தன்னுளே* ஆகியும் ஆக்கியும் காக்கும்,*
அவையுள் தனிமுதல் எம்மான்* கண்ண பிரான் என் அமுதம்,*
சுவையன் திருவின் மணாளன்* என்னுடைச் சூழல் உளானே.
சூழல் பலபல வல்லான்* தொல்லை அம் காலத்து உலகைக்*
கேழல் ஒன்று ஆகி இடந்த* கேசவன் என்னுடை அம்மான்,*
வேழ மருப்பை ஒசித்தான்* விண்ணவர்க்கு எண்ணல் அரியான்*
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்* அவன் என் அருகவிலானே.
அருகல் இலாய பெரும் சீர்* அமரர்கள் ஆதி முதல்வன்,*
கருகிய நீல நன் மேனி வண்ணன்* செந்தாமரைக் கண்ணன்,*
பொரு சிறைப் புள் உவந்து ஏறும்* பூமகளார் தனிக் கேள்வன்,*
ஒருகதியின் சுவை தந்திட்டு* ஒழிவு இலன் என்னோடு உடனே
நாவினுள் நின்று மலரும்* ஞானக் கலைகளுக்கு எல்லாம்,*
ஆவியும் ஆக்கையும் தானே* அழிப்போடு அளிப்பவன் தானே,*
பூ இயல் நால் தடம் தோளன்* பொரு படை ஆழி சங்கு ஏந்தும்,*
காவி நன் மேனிக் கமலக்* கண்ணன் என் கண்ணின் உளானே.
கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்* காண்பன் அவன் கண்களாலே,*
அமலங்கள் ஆக விழிக்கும்* ஐம்புலனும் அவன் மூர்த்தி,*
கமலத்து அயன் நம்பி தன்னைக்* கண்ணுதலானொடும் தோற்றி*
அமலத் தெய்வத்தொடு உலகம்* ஆக்கி என் நெற்றி உளானே.
நெற்றியுள் நின்று என்னை ஆளும்* நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்,*
கற்றைத் துழாய் முடிக் கோலக்* கண்ண பிரானைத் தொழுவார்,*
ஒற்றைப் பிறை அணிந்தானும்* நான்முகனும் இந்திரனும்,*
மற்றை அமரரும் எல்லாம் வந்து* எனது உச்சியுளானே.
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்* கண்ண பிரானுக்கு,*
இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*
இச் சொன்ன ஆயிரத்துள்ளே* இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,*
நிச்சலும் விண்ணப்பம் செய்ய* நீள் கழல் சென்னி பொருமே.