பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,* மாமழை-
அன்று காத்த அம்மான்,* அரக்கரை-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,?*
தென்றல் வந்து* தீ வீசும் என்செய்கேன்! (2)
காரும் வார்பனிக்* கடலும் அன்னவன்,*
தாரும் மார்வமும்* கண்ட தண்டமோ,*
சோரும் மாமுகில்* துளியின் ஊடுவந்து,*
ஈர வாடைதான்* ஈரும் என்னையே!
சங்கும் மாமையும்* தளரும் மேனிமேல்,*
திங்கள் வெம்கதிர்* சீறும் என்செய்கேன்,*
பொங்கு வெண்திரைப்* புணரி வண்ணனார்,*
கொங்குஅலர்ந்ததார்* கூவும் என்னையே!
அங்குஓர் ஆய்க்குலத்துள்* வளர்ந்து சென்று,*
அங்குஓர்* தாய்உருஆகி வந்தவள்,*
கொங்கை நஞ்சுஉண்ட* கோயின்மை கொலோ,*
திங்கள் வெம்கதிர்* சீறுகின்றதே.
அங்குஓர் ஆள்அரிஆய்,* அவுணனை-
பங்கமா* இருகூறு செய்தவன்,*
மங்குல் மாமதி* வாங்கவே கொலோ*
பொங்கு மாகடல்* புலம்பு கின்றதே!
சென்றுவார்* சிலை வளைத்து இலங்கையை-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,*
முன்றில் பெண்ணைமேல்* முளரிக் கூட்டகத்து,*
அன்றிலின் குரல்* அடரும் என்னையே!
பூவை வண்ணனார்* புள்ளின் மேல்வர,*
மேவி நின்றுநான்* கண்ட தண்டமோ,*
வீவுஇல்ஐங்கணை* வில்லி அம்புகோத்து,*
ஆவியே இலக்குஆக எய்வதே!
மால் இனம்துழாய்* வரும் என் நெஞ்சகம்,*
மாலின் அம்துழாய்* வந்து என்உள்புக,*
கோல வாடையும்* கொண்டு வந்ததுஓர்*
ஆலி வந்ததால்* அரிது காவலே!
கெண்டை ஒண்கணும் துயிலும்,* என்நிறம்-
பண்டு பண்டு போல்ஒக்கும்,* மிக்கசீர்த்
தொண்டர் இட்ட* பூந்துளவின் வாசமே,*
வண்டு கொண்டு வந்து* ஊதுமாகிலே
அன்று பாரதத்து* ஐவர் தூதனாய்ச்,*
சென்ற மாயனை* செங்கண் மாலினை,*
மன்றில்ஆர் புகழ்* மங்கை வாள்கலி,*
கன்றி சொல்வல்லார்க்கு* அல்லல் இல்லையே (2)
குன்றம் எடுத்து மழைதடுத்து* இளையாரொடும்*
மன்றில் குரவை பிணைந்த மால்* என்னை மால்செய்தான்,*
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்* கிடந்தீர்கின்ற*
அன்றிலின் கூட்டைப்* பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ! (2)
பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து* அரிமாச்செகுத்து,*
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு* வன் பேய்முலை-
வாங்கி உண்ட,* அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய்,*
ஏங்கு வேய்ங்குழல்* என்னோடாடும் இளமையே!.
மல்லோடு கஞ்சனும்* துஞ்ச வென்ற மணிவண்ணன்,*
அல்லி மலர்த்தண்துழாய்* நினைந்திருந்தேனையே,*
எல்லியில் மாருதம்* வந்தடும், அதுவன்றியும்,*
கொல்லை வல்லேற்றின் மணியும்* கோயின்மை செய்யுமே!.
பொருந்து மாமரம்* ஏழும் எய்த புனிதனார்*
திருந்து சேவடி* என்மனத்து நினைதொறும்,*
கருந்தண் மாகடல்* மங்குலார்க்கும் அதுவன்றியும்,*
வருந்த வாடை வரும்* இதற்கினி என்செய்கேன்!
அன்னை முனிவதும்* அன்றிலின் குரல் ஈர்வதும்,*
மன்னு மறிகடல் ஆர்ப்பதும்* வளை சோர்வதும்*
பொன்னங் கலையல்குல்* அன்ன மென்னடைப் பூங்குழல்,*
பின்னை மணாளர்* திறத்தவாயின பின்னையே
ஆழியும் சங்கும் உடைய* நங்கள் அடிகள்தாம்,*
பாழிமையான கனவில்* நம்மைப் பகர்வித்தார்,*
தோழியும் நானும் ஒழிய* வையம் துயின்றது,*
கோழியும் கூகின்றதில்லைக்* கூரிருள் ஆயிற்றே!.
காமன் தனக்கு முறையல்லேன்* கடல் வண்ணனார்,*
மாமணவாளர்* எனக்குத் தானும் மகன்சொல்லில்,*
யாமங்கள் தோறும் எரி வீசும்* என்னிளங் கொங்கைகள்,*
மாமணி வண்ணர்* திறத்த வாய் வளர்கின்றவே!
மஞ்சுறு மாலிருஞ் சோலை* நின்ற மணாளனார்,*
நெஞ்சம் நிறைகொண்டு போயினார்* நினைகின்றிலர்,*
வெஞ்சுடர் போய் விடியாமல்* எவ்விடம் புக்கதோ,*
நஞ்சு உடலம் துயின்றால்* நமக்கினி நல்லதே!
காமன் கணைக்கு ஓர்இலக்கம்ஆய்* நலத்தில்மிகு,*
பூமரு கோல* நம் பெண்மை சிந்தித்திராது போய்*
தூமலர் நீர்கொடு* தோழி.நாம் தொழுதேத்தினால்*
கார்முகில் வண்ணரைக்* கண்களால் காணலாம் கொலோ!.
வென்றி விடையுடன்* ஏழடர்த்த அடிகளை,*
மன்றில் மலிபுகழ்* மங்கைமன் கலிகன்றிசொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* உரைப்பவர் தங்கள்மேல்*
என்றும் நில்லா வினை* ஒன்றும் சொல்லில் உலகிலே (2)
மன்னிலங்கு பாரதத்துத்* தேரூர்ந்து,* மாவலியைப்-
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்* பொருகடல்சூழ்*
தென்னிலங்கை ஈடழித்த* தேவர்க்கு இதுகாணீர்*
என்னிலங்கு சங்கோடு* எழில் தோற்றிருந்தேனே!. (2)
இருந்தான் என்னுள்ளத்து* இறைவன், கறைசேர்*
பருந்தாள் களிற்றுக்கு* அருள்செய்த, செங்கண்*
பெருந்தோள் நெடுமாலைப்* பேர்பாடி ஆட*
வருந்தாது என் கொங்கை* ஒளிமன்னும் அன்னே!
அன்னே! இவரை* அறிவன், மறைநான்கும்*
முன்னே உரைத்த* முனிவர் இவர்வந்து*
பொன்னேய் வளைகவர்ந்து* போகார் மனம்புகுந்து*
என்னே இவரெண்ணும்* எண்ணம் அறியோமே!
அறியோமே என்று* உரைக்கலாமே எமக்கு,*
வெறியார் பொழில்சூழ்* வியன்குடந்தை மேவி,*
சிறியான் ஓர் பிள்ளையாய்* மெள்ள நடந்திட்டு*
உறியார் நறுவெண்ணெய்* உண்டுகந்தார் தம்மையே?
தம்மையே நாளும்* வணங்கித் தொழுவார்க்கு,*
தம்மையே ஒக்க* அருள்செய்வர் ஆதலால்,*
தம்மையே நாளும்* வணங்கித் தொழுதிறைஞ்சி,*
தம்மையே பற்றா* மனத்தென்றும் வைத்தோமே.
வைத்தார் அடியார்* மனத்தினில் வைத்து,* இன்பம்-
உற்றார் ஒளிவிசும்பி* ஓரடிவைத்து,* ஓரடிக்கும்-
எய்த்தாது மண்ணென்று* இமையோர் தொழுதிறைஞ்சி,*
கைத்தாமரை குவிக்கும்* கண்ணன் என் கண்ணனையே
கண்ணன் மனத்துள்ளே* நிற்கவும், கைவளைகள்*
என்னோ கழன்ற?* இவையென்ன மாயங்கள்?*
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,* அவன்மேய,-
அண்ணல் மலையும்* அரங்கமும் பாடோமே.
பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே* ஆயிரம் பேரானை? பேர்நினைந்து
சூடோமே* சூடும் துழாயலங்கல்? சூடி,* நாம்
கூடோமே கூடக்* குறிப்பாகில்? நன்னெஞ்சே!
நன்னெஞ்சே! நம்பெருமான்* நாளும் இனிதமரும்,*
அன்னம்சேர் கானல்* அணியாலி கைதொழுது,*
முன்னம்சேர் வல்வினைகள் போக* முகில்வண்ணன்,*
பொன்னம்சேர் சேவடிமேல்* போதணியப் பெற்றோமே!
பெற்றாரார்* ஆயிரம் பேரானைப்,* பேர்பாடப்-
பெற்றான்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*
கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்* இவைகேட்கல்-
உற்றார்க்கு,* உறுதுயர் இல்லை உலகத்தே (2)
நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்* வளநாடு மூட இமையோர்*
தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன* அரண்ஆவன் என்னும் அருளால்*
அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி* அகல் வான்உரிஞ்ச,* முதுகில்-
மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை* மறவாது இறைஞ்சு என் மனனே! (2)
செருமிகு வாள்எயிற்ற அரவுஒன்று சுற்றி* திசைமண்ணும் விண்ணும் உடனே*
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப* இமையோர்கள் நின்று கடைய,*
பருவரை ஒன்று நின்று முதுகில் பரந்து* சுழலக் கிடந்து துயிலும்,*
அருவரை அன்ன தன்மை அடல்ஆமைஆன* திருமால் நமக்கு ஓர் அரணே.
தீதுஅறு திங்கள் பொங்கு சுடர்உம்பர் உம்பர்* உலகுஏழினோடும் உடனே,*
மாதிரம் மண்சுமந்த வடகுன்றும் நின்ற* மலைஆறும் ஏழு கடலும்*
பாதமர் சூழ்குளம்பின் அகமண்ட லத்தின்* ஒருபால் ஒடுங்க வளர்சேர்,*
ஆதிமுன் ஏனம்ஆகி அரண்ஆய மூர்த்தி* அதுநம்மை ஆளும் அரசே.
தளைஅவிழ் கோதை மாலை இருபால் தயங்க* எரிகான்றுஇரண்டு தறுகண்,*
அளவுஎழ வெம்மை மிக்க அரிஆகி அன்று* பரியோன் சினங்கள் அவிழ,*
வளை உகிர்ஆளி மொய்ம்பின் மறவோனதுஆகம்* மதியாது சென்று ஓர்உகிரால்*
பிளவுஎழ விட்ட குட்டம் அதுவையம்மூடு* பெருநீரில் மும்மை பெரிதே.
வெந்திறல் வாணன் வேள்வி இடம்எய்தி* அங்குஓர் குறள்ஆகி மெய்ம்மை உணர*
செந்தொழில் வேத நாவின் முனிஆகி வையம்* அடிமூன்று இரந்து பெறினும்,*
மந்தர மீது போகி மதிநின்று இறைஞ்ச* மலரோன் வணங்க வளர்சேர்,*
அந்தரம் ஏழினூடு செலஉய்த்த பாதம்* அது நம்மை ஆளும் அரசே.
இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும்* ஒருநாலும் ஒன்றும் உடனே,*
செருநுதலூடு போகி அவர்ஆவி மங்க* மழுவாளில் வென்ற திறலோன்,*
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர்* புலமங்கை கேள்வர் புகழ்சேர்,*
பெருநிலம் உண்டு உமிழ்ந்த பெருவாயர்ஆகி* யவர் நம்மை ஆள்வர் பெரிதே.
இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன* இனம்ஆய மான்பின் எழில்சேர்*
அலைமலி வேல் கணாளை அகல்விப்பதற்கு* ஓர்உருஆய மானை அமையா,*
கொலைமலி எய்துவித்த கொடியோன் இலங்கை* பொடிஆக வென்றி அமருள்,*
சிலைமலி செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்* திருமால் நமக்குஓர் அரணே.
முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண* முதலோடு வீடும் அறியாது,*
என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப* எழில் வேதம் இன்றி மறைய,*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி* இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ,*
அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த* அது நம்மை ஆளும் அரசே.
துணைநிலை மற்றுஎமக்குஓர் உளது என்றுஇராது* தொழுமின்கள் தொண்டர்! தொலைய*
உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி* உகஉண்டு வெண்ணெய் மருவி,*
பணைமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட* அதனோடும் ஓடி அடல்சேர்,*
இணை மருதுஇற்று வீழ நடைகற்ற தெற்றல்* வினைப் பற்றுஅறுக்கும் விதியே.
கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று* கொடியோன் இலங்கை பொடியா*
சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்* திருமாலை, வேலை புடைசூழ்*
கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு* கலிகன்றி சொன்ன பனுவல்,*
ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்* அவர்ஆள்வர் உம்பர் உலகே. (2)
மான்அமரும் மென்நோக்கி* வைதேவிஇன் துணையா,*
கான்அமரும் கல்அதர்போய்* காடுஉறைந்தான் காண்ஏடீ*
கான்அமரும் கல்அதர்போய்* காடுஉறைந்த பொன்அடிக்கள்,*
வானவர்-தம் சென்னி* மலர்கண்டாய் சாழலே (2)
தந்தை தளைகழலத்* தோன்றிப்போய்,* ஆய்ப்பாடி-
நந்தன் குலமதலையாய்* வளர்ந்தான் காண்ஏடீ,*
நந்தன் குலமதலையாய்* வளர்ந்தான் நான்முகற்குத்*
தந்தைகாண் எந்தை* பெருமான் காண் சாழலே.
ஆழ்கடல்சூழ் வையகத்தார்* ஏசப்போய்,* ஆய்ப்பாடித்-
தாழ்குழலார் வைத்த* தயிர்உண்டான் காண்ஏடீ,*
தாழ்குழலார் வைத்த* தயிர்உண்ட பொன்வயிறு,* இவ்-
ஏழ்உலகும் உண்டும்* இடம்உடைத்தால் சாழலே.
அறியாதார்க்கு* ஆன்ஆயன் ஆகிப்போய்,* ஆய்ப்பாடி-
உறிஆர் நறுவெண்ணெய்* உண்டுஉகந்தான் காண்ஏடீ*
உறிஆர் நறுவெண்ணெய்* உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,*
எறிநீர் உலகுஅனைத்தும்* எய்தாதால் சாழலே
வண்ணக் கருங்குழல்* ஆய்ச்சியால் மொத்துண்டு,*
கண்ணிக் குறுங்கயிற்றால்* கட்டுண்டான் காண்ஏடீ,*
கண்ணிக் குறுங்கயிற்றால்* கட்டுண்டான் ஆகிலும்,*
எண்ணற்கு அரியன்* இமையோர்க்கும் சாழலே.
கன்றப் பறைகறங்க* கண்டவர்தம் கண்களிப்ப,*
மன்றில் மரக்கால்* கூத்துஆடினான் காண் ஏடீ,*
மன்றில் மரக்கால்* கூத்து ஆடினான் ஆகிலும்,*
என்றும் அரியன்* இமையோர்க்கும் சாழலே.
கோதைவேல் ஐவர்க்குஆய்* மண்அகலம் கூறுஇடுவான்,*
தூதன்ஆய் மன்னவனால்* சொல்லுண்டான் காண்ஏடீ,*
தூதன்ஆய் மன்னவனால்* சொல்லுண்டான் ஆகிலும்,*
ஓதநீர் வையகம்* முன்உண்டு உமிழ்ந்தான் சாழலே.
பார்மன்னர் மங்கப்* படைதொட்டு வெம்சமத்துத்,*
தேர்மன்னற்குஆய்* அன்று தேர்ஊர்ந்தான் காண்ஏடீ,*
தேர்மன்னற்குஆய்* அன்று தேர்ஊர்ந்தான் ஆகிலும்,*
தார்மன்னர் தங்கள்* தலைமேலான் சாழலே.
கண்டார் இரங்க* கழியக் குறள்உருஆய்,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் காண்ஏடீ,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் ஆகிலும்*
விண்டுஏழ் உலகுக்கும்* மிக்கான் காண் சாழலே
கள்ளத்தால் மாவலியை* மூவடி மண் கொண்டு அளந்தான்,*
வெள்ளத்தான் வேங்கடத்தான்* என்பரால் காண்ஏடீ,*
வெள்ளத்தான்* வேங்கடத்தானேலும்,* கலிகன்றி-
உள்ளத்தின் உள்ளே* உளன் கண்டாய் சாழலே. (2)
மைந்நின்ற கருங்கடல் வாய்உலகுஇன்றி* வானவரும் யாமும்எல்லாம்,*
நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்* நெடுங்காலம் கிடந்தது ஓரீர்,*
எந்நன்றி செய்தாரா* ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்?*
செய்ந்நன்றி குன்றேல்மின்* தொண்டர்காள்! அண்டனைய ஏத்தீர்களே (2)
நில்லாத பெருவெள்ளம்* நெடுவிசும்பின் மீதுஓடி நிமிர்ந்த காலம்,*
மல்ஆண்ட தடக்கையால்* பகிரண்டம் அகப்படுத்த காலத்து,* அன்று-
எல்லாரும் அறியாரோ* எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில்தேவர்,*
அல்லாதார் தாம்உளரே?* அவன்அருளே உலகுஆவது அறியீர்களே?
நெற்றிமேல் கண்ணானும்* நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,*
ஒற்றைக்கை வெண்பகட்டின்* ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,*
வெற்றிப்போர்க் கடல்அரையன்* விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,*
கொற்றப் போர்ஆழியான்* குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியஆறே!
பனிப்பரவைத் திரைததும்ப* பார்எல்லாம் நெடுங்கடலே ஆனகாலம்,*
இனிக் களைகண்இவர்க்கு இல்லை என்று* உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி*
முனித்தலைவன் முழங்குஒளிசேர்* திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட*
கனிக்களவத் திருஉருவத்து ஒருவனையே* கழல் தொழுமா கல்லீர்களே.
பார்ஆரும் காணாமே* பரவைமா நெடுங்கடலே ஆனகாலம்,*
ஆரானும் அவனுடைய திருவயிற்றில்* நெடுங்காலம் கிடந்தது,* உள்ளத்து-
ஓராத உணர்விலீர்! உணருதிரேல்* உலகுஅளந்த உம்பர் கோமான்,*
பேராளன் பேரான* பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே.
பேய்இருக்கும் நெடுவெள்ளம்* பெருவிசும்பின் மீதுஓடிப் பெருகுகாலம்,*
தாய்இருக்கும் வண்ணமே* உம்மைத்தன் வயிற்றுஇருத்தி உய்யக்கொண்டான்,*
போய்இருக்க மற்றுஇங்குஓர்* புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,* பெற்ற-
தாய்இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ* மாட்டாத தகவுஅற்றீரே!
மண்நாடும் விண்நாடும்* வானவரும் தானவரும் மற்றும்எல்லாம்*
உண்ணாத பெருவெள்ளம்* உண்ணாமல் தான்விழுங்கி உய்யக்கொண்ட,*
கணணாளன் கண்ணமங்கை நகராளன்* கழல்சூடி, அவனை உள்ளத்து*
எண்ணாத மானிடத்தை* எண்ணாத போதுஎல்லாம் இனியஆறே.
மறம்கிளர்ந்த கருங்கடல் நீர்* உரம்துரந்து பரந்துஏறி அண்டத்துஅப்பால்,*
புறம்கிளர்ந்த காலத்து* பொன்உலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,*
அறம்கிளந்த திருவயிற்றின்* அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,*
நிறம்கிளர்ந்த கருஞ்சோதி* நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.
அண்டத்தின் முகடுஅழுந்த* அலைமுந்நீர்த் திரைததும்ப ஆ! ஆ! என்று,*
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்* தான்அருளி,* உலகம்ஏழும்-
உண்டுஒத்த திருவயிற்றின்* அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,*
கொண்டல்கை மணிவண்ணன்* தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே.
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,*
யாவரையும் ஒழியாமே* எம்பெருமான் உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*
காவளரும் பொழில்மங்கைக்* கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,*
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்* பொன்உலகில் பொலிவர் தாமே. (2)
நீள்நாகம் சுற்றி* நெடுவரைநட்டு,* ஆழ்கடலைப்-
பேணான் கடைந்து* அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*
பூண்ஆர மார்வனை* புள்ஊரும் பொன்மலையை,*
காணாதார் கண்என்றும்* கண்அல்ல கண்டாமே (2)
நீள்வான் குறள்உருஆய்* நின்றுஇரந்து மாவலிமண்,*
தாளால் அளவிட்ட* தக்கணைக்கு மிக்கானை,*
தோளாத மாமணியை* தொண்டர்க்கு இனியானை,*
கேளாச் செவிகள்* செவிஅல்ல கேட்டாமே.
தூயானை* தூய மறையானை,* தென்ஆலி
மேயானை* மேவாள் உயிர்உண்டு அமுதுஉண்ட
வாயானை* மாலை வணங்கி* அவன்பெருமை
பேசாதார்* பேச்சுஎன்றும் பேச்சுஅல்ல கேட்டாமே.
கூடா இரணியனைக்* கூர்உகிரால் மார்வுஇடந்த,*
ஓடா அடல்அரியை* உம்பரார் கோமானை,*
தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,* ஆர்வத்தால்-
பாடாதார் பாட்டுஎன்றும்* பாட்டுஅல்ல கேட்டாமே.
மைஆர் கடலும்* மணிவரையும் மாமுகிலும்,*
கொய்ஆர் குவளையும் காயாவும்* போன்றுஇருண்ட*
மெய்யானை மெய்ய மலையானை* சங்குஏந்தும்
கையானை கைதொழா* கைஅல்ல கண்டாமே.
கள்ஆர் துழாயும்* கணவலரும் கூவிளையும்,*
முள்ஆர் முளரியும்* ஆம்பலும்முன் கண்டக்கால்,*
புள்ஆய் ஓர் ஏனம்ஆய்ப்* புக்குஇடந்தான் பொன்அடிக்குஎன்று,*
உள்ளாதார் உள்ளத்தை* உள்ளமாக் கொள்ளோமே.
கனைஆர் கடலும்* கருவிளையும் காயாவும்*
அனையானை,* அன்பினால் ஆர்வத்தால்,* என்றும்-
சுனைஆர் மலர்இட்டு* தொண்டராய் நின்று,*
நினையாதார் நெஞ்சுஎன்றும்* நெஞ்சுஅல்ல கண்டாமே.
வெறிஆர் கருங்கூந்தல்* ஆய்ச்சியர் வைத்த*
உறிஆர் நறுவெண்ணெய்* தான்உகந்து உண்ட
சிறியானை* செங்கண்* நெடியானை சிந்தித்து-
அறியாதார்* என்றும் அறியாதார் கண்டாமே.
தேனொடு வண்டுஆலும்* திருமாலிருஞ்சோலை,*
தான்இடமாக் கொண்டான்* தடமலர்க் கண்ணிக்காய்,*
ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு* ஆள்ஆனார் அல்லாதார்,*
மானிடவர் அல்லர் என்று* என்மனத்தே வைத்தேனே. (2)
மெய்ந்நின்ற* பாவம் அகல,* திருமாலைக்-
கைந்நின்ற ஆழியான்* சூழும் கழல்சூடிக்,*
கைந்நின்ற வேல்கைக்* கலியன் ஒலிமாலை,*
ஐயொன்றும் ஐந்தும்* இவைபாடி ஆடுமினே. (2)
மாற்றம்உள* ஆகிலும் சொல்லுவன்,* மக்கள்-
தோற்றக் குழி* தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*
ஆற்றங்கரை வாழ் மரம்போல்* அஞ்சுகின்றேன்,*
நாற்றம் சுவை* ஊறு ஒலிஆகிய நம்பீ! (2)
சீற்றம்உள* ஆகிலும் செப்புவன்,* மக்கள்-
தோற்றக்குழி* தோற்றுவிப்பாய் கொல்என்றுஅஞ்சி,*
காற்றத்து இடைப்பட்ட* கலவர் மனம்போல்,*
ஆற்றத்துளங்கா நிற்பன்* ஆழிவலவா!
தூங்குஆர் பிறவிக்கண்* இன்னம் புகப்பெய்து,*
வாங்காய்என்று சிந்தித்து* நான்அதற்கு அஞ்சி,*
பாம்போடு ஒருகூரையிலே* பயின்றால்போல்,*
தாங்காது உள்ளம் தள்ளும்* என் தமரைக்கண்ணா!
உருஆர் பிறவிக்கண்* இன்னம் புகப்பெய்து,*
திரிவாய்என்று சிந்தித்தி* என்றுஅதற்கு அஞ்சி,*
இருபாடு எரிகொள்ளியின்* உள் எறும்பே போல்,*
உருகாநிற்கும்* என்உள்ளம் ஊழி முதல்வா!
கொள்ளக் குறையாத* இடும்பைக் குழியில்,*
தள்ளிப் புகப்பெய்தி கொல்* என்றுஅதற்கு அஞ்சி,*
வெள்ளத்து இடைப்பட்ட* நரிஇனம் போலே,*
உள்ளம் துளங்கா நிற்பன்* ஊழி முதல்வா!
படைநின்ற* பைந்தாமரையோடு* அணிநீலம்-
மடைநின்று அலரும்* வயல்ஆலி மணாளா,*
இடையன் எறிந்த மரமே* ஒத்துஇராமே,*
அடைய அருளாய்* எனக்கு உன்தன் அருளே.
வேம்பின்புழு* வேம்புஅன்றி உண்ணாது,* அடியேன்-
நான்பின்னும்* உன்சேவடிஅன்றி நயவேன்,*
தேம்பல் இளந்திங்கள்* சிறைவிடுத்து,* ஐவாய்ப்-
பாம்பின் அணைப்* பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ! (2)
அணிஆர் பொழில்சூழ்* அரங்க நகர்அப்பா,*
துணியேன் இனி* நின் அருள்அல்லது எனக்கு,*
மணியே! மணிமாணிக்கமே!* மதுசூதா,*
பணியாய் எனக்கு உய்யும்வகை,* பரஞ்சோதீ! (2)
நந்தா நரகத்து அழுந்தா வகை,* நாளும்-
எந்தாய்! தொண்டர்ஆனவர்க்கு* இன்அருள் செய்வாய்,*
சந்தோகா! தலைவனே!* தாமரைக் கண்ணா,*
அந்தோ! அடியேற்கு* அருளாய் உன்அருளே (2)
குன்றம் எடுத்து* ஆநிரை காத்தவன் தன்னை,*
மன்றில் புகழ்* மங்கை மன் கலிகன்றி சொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* வல்லவர்-தம்மேல்,*
என்றும் வினைஆயின* சாரகில்லாவே, (2)