பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,*  மாமழை- 
    அன்று காத்த அம்மான்,*  அரக்கரை-

    வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,?*
    தென்றல் வந்து*  தீ வீசும் என்செய்கேன்!  (2)


    காரும் வார்பனிக்*  கடலும் அன்னவன்,* 
    தாரும் மார்வமும்*  கண்ட தண்டமோ,*

    சோரும் மாமுகில்*  துளியின் ஊடுவந்து,* 
    ஈர வாடைதான்*  ஈரும் என்னையே!


    சங்கும் மாமையும்*  தளரும் மேனிமேல்,* 
    திங்கள் வெம்கதிர்*  சீறும் என்செய்கேன்,*

    பொங்கு வெண்திரைப்*  புணரி வண்ணனார்,* 
    கொங்குஅலர்ந்ததார்*  கூவும் என்னையே!


    அங்குஓர் ஆய்க்குலத்துள்*  வளர்ந்து சென்று,* 
    அங்குஓர்*  தாய்உருஆகி வந்தவள்,*

    கொங்கை நஞ்சுஉண்ட*  கோயின்மை கொலோ,*
    திங்கள் வெம்கதிர்*  சீறுகின்றதே.


    அங்குஓர் ஆள்அரிஆய்,*  அவுணனை- 
    பங்கமா*  இருகூறு செய்தவன்,* 

    மங்குல் மாமதி*  வாங்கவே கொலோ* 
    பொங்கு மாகடல்*  புலம்பு கின்றதே!


    சென்றுவார்*  சிலை வளைத்து இலங்கையை- 
    வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,*

    முன்றில் பெண்ணைமேல்*  முளரிக் கூட்டகத்து,* 
    அன்றிலின் குரல்*  அடரும் என்னையே!


    பூவை வண்ணனார்*  புள்ளின் மேல்வர,* 
    மேவி நின்றுநான்*  கண்ட தண்டமோ,*

    வீவுஇல்ஐங்கணை*  வில்லி அம்புகோத்து,* 
    ஆவியே இலக்குஆக எய்வதே!


    மால் இனம்துழாய்*  வரும் என் நெஞ்சகம்,* 
    மாலின் அம்துழாய்*  வந்து என்உள்புக,*

    கோல வாடையும்*  கொண்டு வந்ததுஓர்* 
    ஆலி வந்ததால்*  அரிது காவலே!


    கெண்டை ஒண்கணும் துயிலும்,*  என்நிறம்- 
    பண்டு பண்டு போல்ஒக்கும்,*  மிக்கசீர்த்

    தொண்டர் இட்ட*  பூந்துளவின் வாசமே,* 
    வண்டு கொண்டு வந்து*  ஊதுமாகிலே


    அன்று பாரதத்து*  ஐவர் தூதனாய்ச்,* 
    சென்ற மாயனை*  செங்கண் மாலினை,*

    மன்றில்ஆர் புகழ்*  மங்கை வாள்கலி,*
    கன்றி சொல்வல்லார்க்கு*  அல்லல் இல்லையே  (2)


    குன்றம் எடுத்து மழைதடுத்து*  இளையாரொடும்*
    மன்றில் குரவை பிணைந்த மால்*  என்னை மால்செய்தான்,*

    முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்*  கிடந்தீர்கின்ற*
    அன்றிலின் கூட்டைப்*  பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ!   (2)


    பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து*  அரிமாச்செகுத்து,*
    ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு*  வன் பேய்முலை-

    வாங்கி உண்ட,*  அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய்,*
    ஏங்கு வேய்ங்குழல்*  என்னோடாடும் இளமையே!.


    மல்லோடு கஞ்சனும்*  துஞ்ச வென்ற மணிவண்ணன்,*
    அல்லி மலர்த்தண்துழாய்*  நினைந்திருந்தேனையே,*

    எல்லியில் மாருதம்*  வந்தடும், அதுவன்றியும்,*
    கொல்லை வல்லேற்றின் மணியும்*  கோயின்மை செய்யுமே!.


    பொருந்து மாமரம்*  ஏழும் எய்த புனிதனார்*
    திருந்து சேவடி*  என்மனத்து நினைதொறும்,*

    கருந்தண் மாகடல்*  மங்குலார்க்கும் அதுவன்றியும்,*
    வருந்த வாடை வரும்*  இதற்கினி என்செய்கேன்!


    அன்னை முனிவதும்*  அன்றிலின் குரல் ஈர்வதும்,*
    மன்னு மறிகடல் ஆர்ப்பதும்*  வளை சோர்வதும்*

    பொன்னங் கலையல்குல்*  அன்ன மென்னடைப் பூங்குழல்,*
    பின்னை மணாளர்*  திறத்தவாயின பின்னையே


    ஆழியும் சங்கும் உடைய*  நங்கள் அடிகள்தாம்,*
    பாழிமையான கனவில்*  நம்மைப் பகர்வித்தார்,*

    தோழியும் நானும்  ஒழிய*  வையம் துயின்றது,*
    கோழியும் கூகின்றதில்லைக்*  கூரிருள் ஆயிற்றே!. 


    காமன் தனக்கு முறையல்லேன்*  கடல் வண்ணனார்,*
    மாமணவாளர்*  எனக்குத் தானும் மகன்சொல்லில்,*

    யாமங்கள் தோறும் எரி வீசும்*  என்னிளங் கொங்கைகள்,*
    மாமணி வண்ணர்*  திறத்த வாய் வளர்கின்றவே!


    மஞ்சுறு மாலிருஞ் சோலை*  நின்ற மணாளனார்,*
    நெஞ்சம் நிறைகொண்டு போயினார்*  நினைகின்றிலர்,*

    வெஞ்சுடர் போய் விடியாமல்*  எவ்விடம் புக்கதோ,*
    நஞ்சு உடலம் துயின்றால்*  நமக்கினி நல்லதே! 


    காமன் கணைக்கு ஓர்இலக்கம்ஆய்*  நலத்தில்மிகு,*
    பூமரு கோல*  நம் பெண்மை சிந்தித்திராது போய்*

    தூமலர் நீர்கொடு*  தோழி.நாம் தொழுதேத்தினால்*
    கார்முகில் வண்ணரைக்*  கண்களால் காணலாம் கொலோ!.


    வென்றி விடையுடன்*  ஏழடர்த்த அடிகளை,*
    மன்றில் மலிபுகழ்*  மங்கைமன் கலிகன்றிசொல்,*

    ஒன்று நின்ற ஒன்பதும்*  உரைப்பவர் தங்கள்மேல்*
    என்றும் நில்லா வினை*  ஒன்றும் சொல்லில் உலகிலே  (2) 


    மன்னிலங்கு பாரதத்துத்*  தேரூர்ந்து,*  மாவலியைப்-
    பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்*  பொருகடல்சூழ்*

    தென்னிலங்கை ஈடழித்த*  தேவர்க்கு இதுகாணீர்*
    என்னிலங்கு சங்கோடு*  எழில் தோற்றிருந்தேனே!. (2)


    இருந்தான் என்னுள்ளத்து*  இறைவன், கறைசேர்*
    பருந்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த, செங்கண்*

    பெருந்தோள் நெடுமாலைப்*  பேர்பாடி ஆட*
    வருந்தாது என் கொங்கை*  ஒளிமன்னும் அன்னே! 


    அன்னே! இவரை*  அறிவன், மறைநான்கும்*
    முன்னே உரைத்த*  முனிவர் இவர்வந்து*

    பொன்னேய் வளைகவர்ந்து*  போகார் மனம்புகுந்து*
    என்னே இவரெண்ணும்*  எண்ணம் அறியோமே! 


    அறியோமே என்று*  உரைக்கலாமே எமக்கு,*
    வெறியார் பொழில்சூழ்*  வியன்குடந்தை மேவி,*

    சிறியான் ஓர் பிள்ளையாய்*  மெள்ள நடந்திட்டு*
    உறியார் நறுவெண்ணெய்*  உண்டுகந்தார் தம்மையே?


    தம்மையே நாளும்*  வணங்கித் தொழுவார்க்கு,*
    தம்மையே ஒக்க*  அருள்செய்வர் ஆதலால்,*

    தம்மையே நாளும்*  வணங்கித் தொழுதிறைஞ்சி,*
    தம்மையே பற்றா*  மனத்தென்றும் வைத்தோமே. 


    வைத்தார் அடியார்*  மனத்தினில் வைத்து,*  இன்பம்-
    உற்றார் ஒளிவிசும்பி*  ஓரடிவைத்து,*  ஓரடிக்கும்-

    எய்த்தாது மண்ணென்று*  இமையோர் தொழுதிறைஞ்சி,*
    கைத்தாமரை குவிக்கும்*  கண்ணன் என் கண்ணனையே


    கண்ணன் மனத்துள்ளே*  நிற்கவும், கைவளைகள்*
    என்னோ கழன்ற?*  இவையென்ன மாயங்கள்?*

    பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,*  அவன்மேய,-
    அண்ணல் மலையும்*  அரங்கமும் பாடோமே.


    பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
    ஆடோமே*  ஆயிரம் பேரானை? பேர்நினைந்து

    சூடோமே*  சூடும் துழாயலங்கல்? சூடி,*  நாம்
    கூடோமே கூடக்*  குறிப்பாகில்? நன்னெஞ்சே!


    நன்னெஞ்சே! நம்பெருமான்*  நாளும் இனிதமரும்,*
    அன்னம்சேர் கானல்*  அணியாலி கைதொழுது,*

    முன்னம்சேர் வல்வினைகள் போக*  முகில்வண்ணன்,*
    பொன்னம்சேர் சேவடிமேல்*  போதணியப் பெற்றோமே! 


    பெற்றாரார்*  ஆயிரம் பேரானைப்,*  பேர்பாடப்-
    பெற்றான்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*

    கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்*  இவைகேட்கல்-
    உற்றார்க்கு,*  உறுதுயர் இல்லை உலகத்தே (2)


    நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்*   வளநாடு மூட இமையோர்* 
    தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன*   அரண்ஆவன் என்னும் அருளால்* 

    அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி*   அகல் வான்உரிஞ்ச,*  முதுகில்- 
    மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை*   மறவாது இறைஞ்சு என் மனனே!   (2)


    செருமிகு வாள்எயிற்ற அரவுஒன்று சுற்றி*   திசைமண்ணும் விண்ணும் உடனே* 
    வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப*   இமையோர்கள் நின்று கடைய,*

    பருவரை ஒன்று நின்று முதுகில் பரந்து*   சுழலக் கிடந்து துயிலும்,* 
    அருவரை அன்ன தன்மை அடல்ஆமைஆன*   திருமால் நமக்கு ஓர் அரணே. 


    தீதுஅறு திங்கள் பொங்கு சுடர்உம்பர் உம்பர்*  உலகுஏழினோடும் உடனே,* 
    மாதிரம் மண்சுமந்த வடகுன்றும் நின்ற*  மலைஆறும் ஏழு கடலும்*

    பாதமர் சூழ்குளம்பின் அகமண்ட லத்தின்*  ஒருபால் ஒடுங்க வளர்சேர்,* 
    ஆதிமுன் ஏனம்ஆகி அரண்ஆய மூர்த்தி*  அதுநம்மை ஆளும் அரசே. 


    தளைஅவிழ் கோதை மாலை இருபால் தயங்க*   எரிகான்றுஇரண்டு தறுகண்,* 
    அளவுஎழ வெம்மை மிக்க அரிஆகி அன்று*   பரியோன் சினங்கள் அவிழ,*

    வளை உகிர்ஆளி மொய்ம்பின் மறவோனதுஆகம்*   மதியாது சென்று ஓர்உகிரால்* 
    பிளவுஎழ விட்ட குட்டம் அதுவையம்மூடு*   பெருநீரில் மும்மை பெரிதே.


    வெந்திறல் வாணன் வேள்வி இடம்எய்தி*  அங்குஓர் குறள்ஆகி மெய்ம்மை உணர* 
    செந்தொழில் வேத நாவின் முனிஆகி வையம்*   அடிமூன்று இரந்து பெறினும்,*

    மந்தர மீது போகி மதிநின்று இறைஞ்ச*   மலரோன் வணங்க வளர்சேர்,* 
    அந்தரம் ஏழினூடு செலஉய்த்த பாதம்*  அது நம்மை ஆளும் அரசே.


    இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும்*   ஒருநாலும் ஒன்றும் உடனே,* 
    செருநுதலூடு போகி அவர்ஆவி மங்க*   மழுவாளில் வென்ற திறலோன்,*

    பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர்*   புலமங்கை கேள்வர் புகழ்சேர்,* 
    பெருநிலம் உண்டு உமிழ்ந்த பெருவாயர்ஆகி*  யவர் நம்மை ஆள்வர் பெரிதே.


    இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன*  இனம்ஆய மான்பின் எழில்சேர்* 
    அலைமலி வேல் கணாளை அகல்விப்பதற்கு*   ஓர்உருஆய மானை அமையா,*

    கொலைமலி எய்துவித்த கொடியோன் இலங்கை*   பொடிஆக வென்றி அமருள்,* 
    சிலைமலி செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*   திருமால் நமக்குஓர் அரணே. 


    முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண*  முதலோடு வீடும் அறியாது,* 
    என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப*  எழில் வேதம் இன்றி மறைய,*

    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ,* 
    அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த*  அது நம்மை ஆளும் அரசே.


    துணைநிலை மற்றுஎமக்குஓர் உளது என்றுஇராது*  தொழுமின்கள் தொண்டர்! தொலைய* 
    உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி*   உகஉண்டு வெண்ணெய் மருவி,*

    பணைமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட*  அதனோடும் ஓடி அடல்சேர்,* 
    இணை மருதுஇற்று வீழ நடைகற்ற தெற்றல்*   வினைப் பற்றுஅறுக்கும் விதியே.


    கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று*  கொடியோன் இலங்கை பொடியா* 
    சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*  திருமாலை, வேலை புடைசூழ்*

    கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு*  கலிகன்றி சொன்ன பனுவல்,* 
    ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்*  அவர்ஆள்வர் உம்பர் உலகே.  (2)


    மான்அமரும் மென்நோக்கி*  வைதேவிஇன் துணையா,* 
    கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்தான் காண்ஏடீ*

    கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்த பொன்அடிக்கள்,* 
    வானவர்-தம் சென்னி*  மலர்கண்டாய் சாழலே  (2)


    தந்தை தளைகழலத்*  தோன்றிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் காண்ஏடீ,*

    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் நான்முகற்குத்* 
    தந்தைகாண் எந்தை*  பெருமான் காண் சாழலே.


    ஆழ்கடல்சூழ் வையகத்தார்*  ஏசப்போய்,*  ஆய்ப்பாடித்- 
    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்டான் காண்ஏடீ,*

    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்ட பொன்வயிறு,*  இவ்- 
    ஏழ்உலகும் உண்டும்*  இடம்உடைத்தால் சாழலே.


    அறியாதார்க்கு*  ஆன்ஆயன் ஆகிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்தான் காண்ஏடீ*

    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,* 
    எறிநீர் உலகுஅனைத்தும்*  எய்தாதால் சாழலே


    வண்ணக் கருங்குழல்*  ஆய்ச்சியால் மொத்துண்டு,* 
    கண்ணிக் குறுங்கயிற்றால்*  கட்டுண்டான் காண்ஏடீ,*

    கண்ணிக் குறுங்கயிற்றால்*  கட்டுண்டான் ஆகிலும்,* 
    எண்ணற்கு அரியன்*  இமையோர்க்கும் சாழலே.     


    கன்றப் பறைகறங்க*  கண்டவர்தம் கண்களிப்ப,* 
    மன்றில் மரக்கால்*  கூத்துஆடினான் காண் ஏடீ,*

    மன்றில் மரக்கால்*  கூத்து ஆடினான் ஆகிலும்,* 
    என்றும் அரியன்*  இமையோர்க்கும் சாழலே.  


    கோதைவேல் ஐவர்க்குஆய்*  மண்அகலம் கூறுஇடுவான்,* 
    தூதன்ஆய் மன்னவனால்*  சொல்லுண்டான் காண்ஏடீ,*

    தூதன்ஆய் மன்னவனால்*  சொல்லுண்டான் ஆகிலும்,* 
    ஓதநீர் வையகம்*  முன்உண்டு உமிழ்ந்தான் சாழலே. 


    பார்மன்னர் மங்கப்*  படைதொட்டு வெம்சமத்துத்,* 
    தேர்மன்னற்குஆய்*  அன்று தேர்ஊர்ந்தான் காண்ஏடீ,*

    தேர்மன்னற்குஆய்*  அன்று தேர்ஊர்ந்தான் ஆகிலும்,* 
    தார்மன்னர் தங்கள்*  தலைமேலான் சாழலே. 


    கண்டார் இரங்க*  கழியக் குறள்உருஆய்,* 
    வண்தாரான் வேள்வியில்*  மண்இரந்தான் காண்ஏடீ,*

    வண்தாரான் வேள்வியில்*  மண்இரந்தான் ஆகிலும்* 
    விண்டுஏழ் உலகுக்கும்*  மிக்கான் காண் சாழலே


    கள்ளத்தால் மாவலியை*  மூவடி மண் கொண்டு அளந்தான்,* 
    வெள்ளத்தான் வேங்கடத்தான்*  என்பரால் காண்ஏடீ,*

    வெள்ளத்தான்*  வேங்கடத்தானேலும்,*  கலிகன்றி- 
    உள்ளத்தின் உள்ளே*  உளன் கண்டாய் சாழலே.  (2)


    மைந்நின்ற கருங்கடல் வாய்உலகுஇன்றி*  வானவரும் யாமும்எல்லாம்,* 
    நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்*  நெடுங்காலம் கிடந்தது ஓரீர்,*

    எந்நன்றி செய்தாரா*  ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்?* 
    செய்ந்நன்றி குன்றேல்மின்*  தொண்டர்காள்! அண்டனைய ஏத்தீர்களே  (2)   


    நில்லாத பெருவெள்ளம்*  நெடுவிசும்பின் மீதுஓடி நிமிர்ந்த காலம்,* 
    மல்ஆண்ட தடக்கையால்*  பகிரண்டம்  அகப்படுத்த காலத்து,*  அன்று-

    எல்லாரும் அறியாரோ*  எம்பெருமான்  உண்டு உமிழ்ந்த எச்சில்தேவர்,* 
    அல்லாதார் தாம்உளரே?*  அவன்அருளே  உலகுஆவது அறியீர்களே?     


    நெற்றிமேல் கண்ணானும்*  நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,* 
    ஒற்றைக்கை வெண்பகட்டின்*  ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,*

    வெற்றிப்போர்க் கடல்அரையன்*  விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,* 
    கொற்றப் போர்ஆழியான்*  குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியஆறே!    


    பனிப்பரவைத் திரைததும்ப*  பார்எல்லாம் நெடுங்கடலே ஆனகாலம்,*  
    இனிக் களைகண்இவர்க்கு இல்லை என்று*  உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி*

    முனித்தலைவன் முழங்குஒளிசேர்*  திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட* 
    கனிக்களவத் திருஉருவத்து ஒருவனையே*  கழல் தொழுமா கல்லீர்களே.  


    பார்ஆரும் காணாமே*  பரவைமா நெடுங்கடலே ஆனகாலம்,* 
    ஆரானும் அவனுடைய திருவயிற்றில்*  நெடுங்காலம் கிடந்தது,*  உள்ளத்து-

    ஓராத உணர்விலீர்! உணருதிரேல்*  உலகுஅளந்த உம்பர் கோமான்,* 
    பேராளன் பேரான*  பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே.  


    பேய்இருக்கும் நெடுவெள்ளம்*  பெருவிசும்பின் மீதுஓடிப் பெருகுகாலம்,* 
    தாய்இருக்கும் வண்ணமே*  உம்மைத்தன் வயிற்றுஇருத்தி உய்யக்கொண்டான்,*

    போய்இருக்க மற்றுஇங்குஓர்*  புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,*  பெற்ற- 
    தாய்இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ*  மாட்டாத தகவுஅற்றீரே!


    மண்நாடும் விண்நாடும்*  வானவரும்  தானவரும் மற்றும்எல்லாம்* 
    உண்ணாத பெருவெள்ளம்*  உண்ணாமல்  தான்விழுங்கி உய்யக்கொண்ட,*

     


    கணணாளன் கண்ணமங்கை நகராளன்*   கழல்சூடி, அவனை உள்ளத்து* 
    எண்ணாத மானிடத்தை*  எண்ணாத போதுஎல்லாம் இனியஆறே.


    மறம்கிளர்ந்த கருங்கடல் நீர்*  உரம்துரந்து பரந்துஏறி அண்டத்துஅப்பால்,* 
    புறம்கிளர்ந்த காலத்து*  பொன்உலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,*

    அறம்கிளந்த திருவயிற்றின்*  அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    நிறம்கிளர்ந்த கருஞ்சோதி*  நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.


    அண்டத்தின் முகடுஅழுந்த*  அலைமுந்நீர்த்  திரைததும்ப ஆ! ஆ! என்று,* 
    தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்*  தான்அருளி,*  உலகம்ஏழும்-

    உண்டுஒத்த திருவயிற்றின்*  அகம்படியில்  வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    கொண்டல்கை மணிவண்ணன்*  தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே.


    தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,* 
    யாவரையும் ஒழியாமே*  எம்பெருமான்  உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*

    காவளரும் பொழில்மங்கைக்*  கலிகன்றி  ஒலிமாலை கற்று வல்லார்,* 
    பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்*   பொன்உலகில் பொலிவர் தாமே.  (2)


    நீள்நாகம் சுற்றி*  நெடுவரைநட்டு,*  ஆழ்கடலைப்- 
    பேணான் கடைந்து*  அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*

    பூண்ஆர மார்வனை*  புள்ஊரும் பொன்மலையை,* 
    காணாதார் கண்என்றும்*  கண்அல்ல கண்டாமே   (2)


    நீள்வான் குறள்உருஆய்*  நின்றுஇரந்து மாவலிமண்,* 
    தாளால் அளவிட்ட*  தக்கணைக்கு மிக்கானை,*

    தோளாத மாமணியை*  தொண்டர்க்கு இனியானை,*
    கேளாச் செவிகள்*  செவிஅல்ல கேட்டாமே.


    தூயானை*  தூய மறையானை,*  தென்ஆலி 
    மேயானை*  மேவாள் உயிர்உண்டு அமுதுஉண்ட 

    வாயானை*  மாலை வணங்கி*  அவன்பெருமை 
    பேசாதார்*  பேச்சுஎன்றும் பேச்சுஅல்ல கேட்டாமே.


    கூடா இரணியனைக்*  கூர்உகிரால் மார்வுஇடந்த,* 
    ஓடா அடல்அரியை*  உம்பரார் கோமானை,*

    தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,*  ஆர்வத்தால்- 
    பாடாதார் பாட்டுஎன்றும்*  பாட்டுஅல்ல கேட்டாமே.


    மைஆர் கடலும்*  மணிவரையும் மாமுகிலும்,* 
    கொய்ஆர் குவளையும் காயாவும்*  போன்றுஇருண்ட*

    மெய்யானை மெய்ய மலையானை*  சங்குஏந்தும் 
    கையானை கைதொழா*  கைஅல்ல கண்டாமே.


    கள்ஆர் துழாயும்*  கணவலரும் கூவிளையும்,* 
    முள்ஆர் முளரியும்*  ஆம்பலும்முன் கண்டக்கால்,*

    புள்ஆய் ஓர் ஏனம்ஆய்ப்*  புக்குஇடந்தான் பொன்அடிக்குஎன்று,*
    உள்ளாதார் உள்ளத்தை*  உள்ளமாக் கொள்ளோமே.


    கனைஆர் கடலும்*  கருவிளையும் காயாவும்* 
    அனையானை,*  அன்பினால் ஆர்வத்தால்,*  என்றும்-

    சுனைஆர் மலர்இட்டு*  தொண்டராய் நின்று,* 
    நினையாதார் நெஞ்சுஎன்றும்*  நெஞ்சுஅல்ல கண்டாமே.


    வெறிஆர் கருங்கூந்தல்*  ஆய்ச்சியர் வைத்த* 
    உறிஆர் நறுவெண்ணெய்*  தான்உகந்து உண்ட

    சிறியானை*  செங்கண்*  நெடியானை சிந்தித்து- 
    அறியாதார்*  என்றும் அறியாதார் கண்டாமே.


    தேனொடு வண்டுஆலும்*  திருமாலிருஞ்சோலை,* 
    தான்இடமாக் கொண்டான்*  தடமலர்க் கண்ணிக்காய்,*

    ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு*  ஆள்ஆனார் அல்லாதார்,* 
    மானிடவர் அல்லர் என்று*  என்மனத்தே வைத்தேனே.  (2)


    மெய்ந்நின்ற*  பாவம் அகல,*  திருமாலைக்- 
    கைந்நின்ற ஆழியான்*  சூழும் கழல்சூடிக்,*

    கைந்நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை,* 
    ஐயொன்றும் ஐந்தும்*  இவைபாடி ஆடுமினே. (2)


    மாற்றம்உள*  ஆகிலும் சொல்லுவன்,*  மக்கள்- 
    தோற்றக் குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*

    ஆற்றங்கரை வாழ் மரம்போல்*  அஞ்சுகின்றேன்,* 
    நாற்றம் சுவை*  ஊறு ஒலிஆகிய நம்பீ!  (2)         


    சீற்றம்உள*  ஆகிலும் செப்புவன்,*  மக்கள்- 
    தோற்றக்குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்றுஅஞ்சி,*

    காற்றத்து இடைப்பட்ட*  கலவர் மனம்போல்,*
    ஆற்றத்துளங்கா நிற்பன்*  ஆழிவலவா!     


    தூங்குஆர் பிறவிக்கண்*  இன்னம் புகப்பெய்து,* 
    வாங்காய்என்று சிந்தித்து*  நான்அதற்கு அஞ்சி,*

    பாம்போடு ஒருகூரையிலே*  பயின்றால்போல்,*
    தாங்காது உள்ளம் தள்ளும்*  என் தமரைக்கண்ணா!       


    உருஆர் பிறவிக்கண்*  இன்னம் புகப்பெய்து,* 
    திரிவாய்என்று சிந்தித்தி*  என்றுஅதற்கு அஞ்சி,*

    இருபாடு எரிகொள்ளியின்*  உள் எறும்பே போல்,* 
    உருகாநிற்கும்*  என்உள்ளம் ஊழி முதல்வா!


    கொள்ளக் குறையாத*  இடும்பைக் குழியில்,* 
    தள்ளிப் புகப்பெய்தி கொல்*  என்றுஅதற்கு அஞ்சி,*

    வெள்ளத்து இடைப்பட்ட*  நரிஇனம் போலே,*
    உள்ளம் துளங்கா நிற்பன்*  ஊழி முதல்வா!     


    படைநின்ற*  பைந்தாமரையோடு*  அணிநீலம்- 
    மடைநின்று அலரும்*  வயல்ஆலி மணாளா,*

    இடையன் எறிந்த மரமே*  ஒத்துஇராமே,* 
    அடைய அருளாய்*  எனக்கு உன்தன் அருளே. 


    வேம்பின்புழு*  வேம்புஅன்றி உண்ணாது,*  அடியேன்- 
    நான்பின்னும்*  உன்சேவடிஅன்றி நயவேன்,*

    தேம்பல் இளந்திங்கள்*  சிறைவிடுத்து,*  ஐவாய்ப்- 
    பாம்பின் அணைப்*  பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ!  (2)


    அணிஆர் பொழில்சூழ்*  அரங்க நகர்அப்பா,* 
    துணியேன் இனி*  நின் அருள்அல்லது எனக்கு,*

    மணியே! மணிமாணிக்கமே!*  மதுசூதா,*
    பணியாய் எனக்கு உய்யும்வகை,*  பரஞ்சோதீ!  (2)


    நந்தா நரகத்து அழுந்தா வகை,*  நாளும்- 
    எந்தாய்! தொண்டர்ஆனவர்க்கு*  இன்அருள் செய்வாய்,*

    சந்தோகா! தலைவனே!*  தாமரைக் கண்ணா,*
    அந்தோ! அடியேற்கு*  அருளாய் உன்அருளே  (2)


    குன்றம் எடுத்து*  ஆநிரை காத்தவன் தன்னை,* 
    மன்றில் புகழ்*  மங்கை மன் கலிகன்றி சொல்,*

    ஒன்று நின்ற ஒன்பதும்*  வல்லவர்-தம்மேல்,* 
    என்றும் வினைஆயின*  சாரகில்லாவே,    (2)