பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    ஒருநல் சுற்றம்*  எனக்குஉயிர் ஒண்பொருள்* 
    வரும்நல் தொல்கதி*  ஆகிய மைந்தனை*

    நெருநல் கண்டது*  நீர்மலை இன்றுபோய்* 
    கருநெல் சூழ்*  கண்ண மங்கையுள் காண்டுமே  (2)


    பொன்னை மாமணியை*  அணி ஆர்ந்ததுஓர்-
    மின்னை*  வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*

    என்னை ஆளுடை ஈசனை*  எம்பிரான்-
    தன்னை*  யாம் சென்று காண்டும்*  தண்காவிலே.   (2)


    வேலை ஆல்இலைப்*  பள்ளி விரும்பிய*
    பாலை ஆர்அமுதத்தினை*  பைந்துழாய்*

    மாலை ஆலியில்*  கண்டு மகிழ்ந்து போய்* 
    ஞாலம் உன்னியைக் காண்டும்*  நாங்கூரிலே


    துளக்கம்இல் சுடரை*  அவுணன்உடல்-
    பிளக்கும் மைந்தனைப்*  பேரில் வணங்கிப்போய்*

    அளப்புஇல் ஆர்அமுதை*  அமரர்க்கு அருள்-
    விளக்கினைச்*  சென்று வெள்ளறைக் காண்டுமே.


    சுடலையில்*  சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
    நடலை தீர்த்தவனை*  நறையூர்க் கண்டு,*  என்-

    உடலையுள் புகுந்து*  உள்ளம் உருக்கிஉண்*
    விடலையைச் சென்று காண்டும்*  மெய்யத்துள்ளே.


    வானை ஆர்அமுதம்*  தந்த வள்ளலை* 
    தேனை நீள்வயல்*  சேறையில் கண்டுபோய்*

    ஆனை வாட்டி அருளும்*  அமரர்தம்-
    கோனை,*  யாம் குடந்தைச்சென்று காண்டுமே.


    கூந்தலார் மகிழ்*  கோவலன்ஆய்*  வெண்ணெய்-
    மாந்துஅழுந்தையில்*  கண்டு மகிழ்ந்துபோய்*

    பாந்தள் பாழியில்*  பள்ளி விரும்பிய*
    வேந்தனைச் சென்று காண்டும்*  வெஃகாவுளே


    பத்தர் ஆவியை*  பால்மதியை,*  அணித்-
    தொத்தை*  மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*

    முத்தினை மணியை*  மணி மாணிக்க-
    வித்தினைச்,*  சென்று விண்ணகர்க் காண்டுமே


    கம்ப மாகளிறு*  அஞ்சிக் கலங்க,*  ஓர்-
    கொம்பு கொண்ட*  குரைகழல் கூத்தனை*

    கொம்புஉலாம் பொழில்*  கோட்டியூர்க் கண்டுபோய்* 
    நம்பனைச் சென்று காண்டும்*  நாவாயுளே.  


    பெற்றமாளிகைப்*  பேரில் மணாளனை* 
    கற்ற நூல்*  கலிகன்றி உரைசெய்த*

    சொல்திறம்இவை*  சொல்லிய தொண்டர்கட்கு*
    அற்றம் இல்லை*  அண்டம் அவர்க்கு ஆட்சியே   (2)


    இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை*   இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்* 
    பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன்  பட்டனன்*  இனி யாவர்க்கு உரைக்கோம்*

    குரக்கு நாயகர்காள்! இளங்கோவே*   கோல வல்வில் இராம பிரானே* 
    அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை*  நாங்கள்  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.  (2)


    பத்து நீள்முடியும் அவற்றுஇரட்டிப்*   பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,*
    சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்*   செய்வது ஒன்றுஅறியா அடியோங்கள்*

    ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்*   ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்* 
    அத்த! எம் பெருமான்! எம்மைக் கொல்லேல்*   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    தண்ட காரணியம் புகுந்து*  அன்று  தையலை தகவிலி எம்கோமான்*
    கொண்டு போந்து கெட்டான்*  எமக்கு இங்குஓர்  குற்றம்இல்லை கொல்லேல் குலவேந்தே*

    பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்*  பேசுகின்றதுஎன்? தாசரதீ,*  உன்-
    அண்ட வாணர் உகப்பதே செய்தாய்*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    எஞ்சல்இல் இலங்கைக்குஇறை*  எம்கோன்தன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே*
    நஞ்சுதான் அரக்கர் குடிக்குஎன்று*  நங்கையை அவன் தம்பியே சொன்னான்*

    விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்*  வேரிவார் பொழில் மாமயில்அன்ன*
    அஞ்சுஅல்ஓதியைக் கொண்டு நடமின்*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 


    செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்*  சீதை என்பதுஓர் தெய்வம் கொணர்ந்து* 
    வம்புஉலாம் கடி காவில் சிறையா வைத்ததே*  குற்றம் ஆயிற்றுக் காணீர்*

    கும்பனோடு நிகும்பனும் பட்டான்*  கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி* 
    அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.


    ஓத மாகடலைக் கடந்துஏறி*  உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து* 
    காதல் மக்களும் சுற்றமும் கொன்று*  கடி இலங்கை மலங்க எரித்து*     

    தூது வந்த குரங்குக்கே*  உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே* 
    ஆதர் நின்று படுகின்றது அந்தோ!*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    தாழம்இன்றி முந்நீரை அஞ்ஞான்று*  தகைந்ததே கண்டு வஞ்சிநுண் மருங்குல்*
    மாழை மான்மட நோக்கியை விட்டு*  வாழகில்லா மதிஇல் மனத்தானை*    

    ஏழையை இலங்கைக்கு இறை தன்னை*  எங்களை ஒழியக் கொலை அவனை* 
    சூழு மாநினை மாமணி வண்ணா!*  சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 


    மனம்கொண்டுஏறும் மண்டோதரி முதலா*  அம்கயல் கண்ணினார்கள் இருப்ப* 
    தனம்கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து*  தஞ்சமே சில தாபதர்என்று*

    புனம்கொள் மென்மயிலைச் சிறை வைத்த*  புன்மையாளன் நெஞ்சில் புக எய்த* 
    அனங்கன் அன்னதிண்தோள் எம்இராமற்கு*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ   


    புரங்கள் மூன்றும்ஓர் மாத்திரைப் போதில்*  பொங்குஎரிக்கு இரை கண்டவன் அம்பின்*
    சரங்களே கொடிதுஆய் அடுகின்ற*  சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்*

    இரங்கு நீ எமக்குஎந்தை பிரானே!*  இலங்கு வெம்கதிரோன்தன் சிறுவா* 
    குரங்குகட்குஅரசே! எம்மைக் கொல்லேல்!*  கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர*  அணி இலங்கை அழித்தவன் தன்னை* 
    பொங்கு மாவலவன் கலி கன்றி*  புகன்ற பொங்கத்தம் கொண்டு,*  இவ்உலகினில்-

    எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!*  இம்மையே இடர் இல்லை,*  இறந்தால்- 
    தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்*  சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ!   (2)


    ஏத்துகின்றோம் நாத்தழும்ப*  இராமன் திருநாமம்* 
    சோத்தம் நம்பீ சுக்கிரீவா!*  உம்மைத் தொழுகின்றோம்*

    வார்த்தை பேசீர் எம்மை*  உங்கள் வானரம் கொல்லாமே* 
    கூத்தர் போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே   (2)


    எம்பிரானே! என்னை ஆள்வாய்*  என்றுஎன்று அலற்றாதே* 
    அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது*  இந்திரசித்து அழிந்தான்*

    நம்பி அநுமா! சுக்கிரீவா!*  அங்கதனே! நளனே* 
    கும்பகர்ணன் பட்டுப்போனான்*  குழமணி தூரமே  


    ஞாலம் ஆளும் உங்கள் கோமான்*  எங்கள் இராவணற்குக்*
    காலன்ஆகி வந்தவா*  கண்டு அஞ்சி கருமுகில்போல்*

    நீலன் வாழ்க சுடேணன் வாழ்க*  அங்கதன் வாழ்கஎன்று*
    கோலம்ஆக ஆடுகின்றோம்*  குழமணி தூரமே 


    மணங்கள் நாறும் வார்குழலார்*  மாதர்கள் ஆதரத்தைப்*
    புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்*  பொன்ற வரிசிலையால்*

    கணங்கள்உண்ண வாளிஆண்ட*  காவலனுக்கு இளையோன்*
    குணங்கள் பாடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே


    வென்றி தந்தோம் மானம் வேண்டோம்*  தானம் எமக்குஆக*
    இன்று தம்மின் எங்கள் வாழ்நாள்*  எம்பெருமான் தமர்காள்*

    நின்று காணீர் கண்கள்ஆர*  நீர் எம்மைக் கொல்லாதே*
    குன்று போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே      


    கல்லின் முந்நீர் மாற்றி வந்து*  காவல் கடந்து,*  இலங்கை-
    அல்லல் செய்தான் உங்கள் கோமான்*  எம்மை அமர்க்களத்து*

    வெல்ல கில்லாது அஞ்சினோம்காண்*  வெம்கதிரோன் சிறுவா,* 
    கொல்ல வேண்டா ஆடுகின்றோம்*  குழமணி தூரமே  


    மாற்றம்ஆவது இத்தனையே*  வம்மின் அரக்கர்உள்ளீர்* 
    சீற்றம் நும்மேல் தீர வேண்டின்*  சேவகம் பேசாதே*

    ஆற்றல் சான்ற தொல்பிறப்பின்*  அநுமனை வாழ்கஎன்று* 
    கூற்றம் அன்னார் காண ஆடீர்*  குழமணி தூரமே.


    கவள யானை பாய்புரவி*  தேரொடு அரக்கர்எல்லாம்-
    துவள,*  வென்ற வென்றியாளன்*  தன்தமர் கொல்லாமே*

    தவள மாடம் நீடுஅயோத்தி*  காவலன் தன்சிறுவன்*
    குவளை வண்ணன் காண ஆடீர்*  குழமணி தூரமே.


    ஏடுஒத்துஏந்தும் நீள்இலைவேல்*  எங்கள் இராவணனார்-
    ஓடிப் போனார்,*  நாங்கள் எய்த்தோம்*  உய்வதுஓர் காரணத்தால்*

    சூடிப் போந்தோம் உங்கள் கோமான்*  ஆணை தொடரேல்மின்* 
    கூடிக்கூடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே.


    வென்ற தொல்சீர்த் தென்இலங்கை*  வெம்சமத்து*  அன்றுஅரக்கர்-
    குன்றம் அன்னார் ஆடி உய்ந்த*  குழமணி தூரத்தைக்*

    கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை*
    ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்*  பாடி நின்று ஆடுமினே   (2)


    சந்த மலர்க்குழல் தாழ*  தான் உகந்துஓடி தனியே-
    வந்து,*  என் முலைத் தடம்தன்னை வாங்கி*  நின் வாயில் மடுத்து,*

    நந்தன் பெறப்பெற்ற நம்பீ!*  நான் உகந்துஉண்ணும் அமுதே,* 
    எந்தை பெருமானே! உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே (2)


    வங்க மறிகடல் வண்ணா!*  மாமுகிலே ஒக்கும் நம்பீ* 
    செங்கண் நெடிய திருவே*  செங்கமலம் புரை வாயா,*

    கொங்கை சுரந்திட உன்னைக்*  கூவியும் காணாது இருந்தேன்* 
    எங்குஇருந்து ஆயர்களோடும்*  என் விளையாடுகின்றாயே


    திருவில் பொலிந்த எழில்ஆர்*  ஆயர்தம் பிள்ளைகளோடு* 
    தெருவில் திளைக்கின்ற நம்பீ*  செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,*

    உருகிஎன் கொங்கையின் தீம்பால்*  ஓட்டந்து பாய்ந்திடுகின்ற,* 
    மருவிக் குடங்கால் இருந்து*  வாய்முலை உண்ண நீ வாராய்    


    மக்கள் பெறுதவம் போலும்*  வையத்து வாழும் மடவார்* 
    மக்கள் பிறர்கண்ணுக்கு ஒக்கும்*  முதல்வா மதக்களிறுஅன்னாய்*

    செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி*  நின் கையில் தருவன்* 
    ஒக்கலை மேல்இருந்து*  அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்


    மைத்த கருங்குஞ்சி மைந்தா!*  மாமருதுஊடு நடந்தாய்,* 
    வித்தகனே விரையாதே*  வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,*

    இத்தனை போதுஅன்றி என்தன்*  கொங்கை சுரந்து இருக்ககில்லா,* 
    உத்தமனே! அம்மம் உண்ணாய்*  உலகுஅளந்தாய் அம்மம் உண்ணாய்       


    பிள்ளைகள் செய்வன செய்யாய்*  பேசின் பெரிதும் வலியை* 
    கள்ளம் மனத்தில் உடையை*  காணவே தீமைகள் செய்தி*

    உள்ளம் உருகி என் கொங்கை*  ஓட்டந்து பாய்ந்திடுகின்ற* 
    பள்ளிக் குறிப்புச் செய்யாதே*  பால்அமுது உண்ணநீ வாராய்   


    தன்மகன்ஆக வன் பேய்ச்சி*  தான்முலை உண்ணக் கொடுக்க* 
    வன்மகன்ஆய் அவள் ஆவிவாங்கி*  முலைஉண்ட நம்பீ*

    நன்மகள் ஆய்மகளோடு*  நானில மங்கை மணாளா* 
    என்மகனே! அம்மம் உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே 


    உந்தம் அடிகள் முனிவர்*  உன்னைநான் என்கையில் கோலால்* 
    நொந்திட மோதவும் கில்லேன்*  நுங்கள்தம் ஆ-நிரை எல்லாம்*

    வந்து புகுதரும் போது*  வானிடைத் தெய்வங்கள் காண* 
    அந்திஅம் போது அங்கு நில்லேல்*  ஆழிஅம் கையனே! வாராய்


    பெற்றத் தலைவன் எம்கோமான்*  பேர்அருளாளன் மதலாய்,* 
    சுற்றக் குழாத்து இளங்கோவே!*  தோன்றிய தொல்புகழாளா,*

    கற்றுஇனம் தோறும் மறித்து*  கானம் திரிந்த களிறே* 
    எற்றுக்குஎன் அம்மம் உண்ணாதே*  எம்பெருமான் இருந்தாயே 


    இம்மை இடர்கெட வேண்டி*  ஏந்துஎழில் தோள்கலி அன்றி* 
    செம்மைப் பனுவல்நூல் கொண்டு*  செங்கண் நெடியவன் தன்னை*

    அம்மம் உண்என்று உரைக்கின்ற*  பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
    மெய்ம்மை மனத்து வைத்துஏத்த*  விண்ணவர் ஆகலும்ஆமே   (2)


    பூங்கோதை ஆய்ச்சி*  கடைவெண்ணெய் புக்குஉண்ண,* 
    ஆங்குஅவள் ஆர்த்துப்*  புடைக்க புடையுண்டு*

    ஏங்கி இருந்து*  சிணுங்கி விளையாடும்*
    ஓங்குஓத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி  (2)


    தாயர் மனங்கள் தடிப்ப*  தயிர்நெய்உண்டு 
    ஏய்எம்பிராக்கள்*  இருநிலத்து எங்கள்தம்*

    ஆயர் அழக*  அடிகள்*  அரவிந்த-
    வாயவனே கொட்டாய் சப்பாணி!*  மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி


    தாம்மோர் உருட்டி*  தயிர்நெய் விழுங்கிட்டு* 
    தாமோ தவழ்வர்என்று*  ஆய்ச்சியர் தாம்பினால்*

    தாம்மோதரக்கையால்*  ஆர்க்க தழும்புஇருந்த*
    தாமோதரா! கொட்டாய் சப்பாணி!*  தாமரைக் கண்ணனே! சப்பாணி


    பெற்றார் தளைகழலப்*  பேர்ந்துஅங்கு அயல்இடத்து*
    உற்றார் ஒருவரும் இன்றி*  உலகினில்,*

    மற்றாரும் அஞ்சப்போய்*  வஞ்சப்பெண் நஞ்சுஉண்ட*
    கற்றாயனே! கொட்டாய் சப்பாணி!*  கார்வண்ணனே! கொட்டாய் சப்பாணி   


    சோத்து என நின்னைத்*  தொழுவன் வரம் தர,* 
    பேய்ச்சி முலைஉண்ட பிள்ளாய்,*  பெரியன-

    ஆய்ச்சியர்*  அப்பம் தருவர்*  அவர்க்காகச்-
    சாற்றிஓர் ஆயிரம் சப்பாணி!*  தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி   


    கேவலம் அன்று*  உன்வயிறு வயிற்றுக்கு*
    நான் அவல் அப்பம் தருவன்*  கருவிளைப்-

    பூஅலர் நீள்முடி*  நந்தன்தன் போர்ஏறே,* 
    கோவலனே! கொட்டாய் சப்பாணி!*  குடம்ஆடீ! கொட்டாய் சப்பாணி.  


    புள்ளினை வாய்பிளந்து*  பூங்குருந்தம் சாய்த்து,* 
    துள்ளி விளையாடி*  தூங்குஉறி வெண்ணெயை,*

    அள்ளிய கையால்*  அடியேன் முலைநெருடும்*
    பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி!*  பேய்முலை உண்டானே! சப்பாணி


    யாயும் பிறரும்*  அறியாத யாமத்து,* 
    மாய வலவைப்*  பெண் வந்து முலைதர,*

    பேய்என்று அவளைப்*  பிடித்து உயிர் உண்ட,*
    வாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.


    கள்ளக் குழவிஆய்*  காலால் சகடத்தைத்*
    தள்ளி உதைத்திட்டு*  தாய்ஆய் வருவாளை,*

    மெள்ளத் தொடர்ந்து*  பிடித்து ஆர்உயிர்உண்ட,*
    வள்ளலே! கொட்டாய் சப்பாணி!*  மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி 


    கார்ஆர் புயல்கைக்*  கலிகன்றி மங்கையர்கோன்,* 
    பேராளன் நெஞ்சில்*  பிரியாது இடம்கொண்ட*

    சீராளா செந்தாமரைக் கண்ணா!*  தண்துழாய்த்*
    தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!*  தடமார்வா கொட்டாய் சப்பாணி.  (2)


    எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?*  நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
    சிங்காமை விரித்தவன் எம்பெருமான்*  அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*

    பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக*  பொன்மிடறு அத்தனைபோது,*
    அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.   (2)


    குன்றுஒன்று மத்தா அரவம் அளவி*  குரைமாகடலைக் கடைந்திட்டு,*  ஒருகால்-
    நின்று உண்டை கொண்டுஓட்டி வன்கூன் நிமிர*  நினைந்த பெருமான் அது அன்றியும்முன்,*

    நன்றுஉண்ட தொல்சீர் மகரக் கடல்ஏழ்*  மலைஏழ் உலகுஏழ் ஒழியாமை நம்பி,* 
    அன்றுஉண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள்*   உலப்புஇல் வலியார் அவர்பால்,*  வயிரம்-
    விளைந்திட்டது என்றுஎண்ணி விண்ணோர் பரவ*   அவர் நாள்ஒழித்த பெருமான் முனநாள்,*

    வளைந்திட்ட வில்லாளி வல் வாள்எயிற்று*  மலைபோல் அவுணன் உடல் வள்உகிரால்,*
    அளைந்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.  


    தளர்ந்திட்டு இமையோர் சரண் தாஎன*  தான் சரண்ஆய் முரண்ஆயவனை*  உகிரால்-
    பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த*  பெருமான் திருமால் விரிநீர் உலகை,*

    வளர்ந்திட்ட தொல்சீர் விறல் மாவலியை*  மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறள்ஆய்,*
    அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நீண்டான் குறள்ஆய் நெடுவான்அளவும்*  அடியார் படும் ஆழ் துயர்ஆய எல்லாம்,*
    தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்*  செல வைத்த பிரான் அதுஅன்றியும்முன்,*

    வேண்டாமை நமன் தமர் என்தமரை*   வினவப் பெறுவார் அலர், என்று,* உலகுஏழ்-
    ஆண்டான்அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 


    பழித்திட்ட இன்பப் பயன் பற்றுஅறுத்துப்*  பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
    ஒழித்திட்டு அவரைத் தனக்குஆக்க வல்ல*  பெருமான் திருமால் அதுஅன்றியும்முன்,*

    தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்*  சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*
    அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே


    படைத்திட்டுஅது இவ்வையம் உய்ய முனநாள்*  பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
    துடைத்திட்டு அவரைத் தனக்குஆக்க என்னத்*  தெளியா அரக்கர் திறல்போய் அவிய,*

    மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா*  விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம,*  கடலை-
    அடைத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நெறித்திட்ட மென்கூழை நல்நேர்இழையோடு*  உடன்ஆய வில்என்ன வல்ஏய் அதனை,*
    இறுத்திட்டு அவள்இன்பம் அன்போடு அணைந்திட்டு*  இளங்கொற்றவன்ஆய் துளங்காத முந்நீர்,*

    செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்*  செழுநீள் முடிதோளொடு தாள் துணிய,*
    அறுத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.    


    சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங்கு அரிமா*  தொலைய பிரியாது சென்றுஎய்தி, எய்தாது*
    இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத தன்வாய்*  இருகூறுசெய்த பெருமான் முனநாள்* 

    வரிந்திட்ட வில்லால் மரம்ஏழும் எய்து*  மலைபோல் உருவத்து ஓர்இராக்கதி மூக்கு,*
    அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்*  வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
    அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி*  உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*

    நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
    என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி*  இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே.   (2) 


    மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்*  பிறர் மக்கள் தம்மை*
    ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று*  இரப்பன் உரப்ப கில்லேன்*

    நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்*   நங்கைகாள்! நான்என் செய்கேன்?
    தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்*  தயிர்கடை கின்றான் போலும்!  (2)


    காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்*  கண்டே போனேன்,* 
    மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன்அல்லால்*  மற்று வந்தாரும் இல்லை,*

    மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்*  வெண்ணெயேஅன்று, இருந்த*
    பாலும் பதின்குடம் கண்டிலேன்*  பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ!


    தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள்!*  உறி மேலைத் தடாநிறைந்த,*
    வெள்ளி மலைஇருந்தால்ஒத்த வெண்ணெயை*   வாரி விழுங்கி யிட்டு,*

    கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்*  கைஎல்லாம் நெய்,*  வயிறு-
    பிள்ளை பரம்அன்று இவ்ஏழ்உலகும் கொள்ளும்*  பேதையேன் என்செய்கேனோ!


    மைந்நம்பு வேல்கண்நல்லாள்*  முன்னம் பெற்ற வளைவண்ண நல்மா மேனி,*
    தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது*  அவன் இவை செய்தறியான்*

    பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்*  பொதிஅறை போகின்றவா தவழ்ந்திட்டு,* 
    இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வுஇல்லை*  என்செய்கேன் என்செய்கேனோ!


    தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்*  தோழிமார் ஆரும்இல்லை,* 
    சந்த மலர்க்குழலாள்*  தனியே விளையாடும்இடம் குறுகி,*

    பந்து பறித்து துகில்பற்றிக் கீறி*  படிறன் படிறு செய்யும்,* 
    நந்தன் மதலைக்கு இங்குஎன்கடவோம்? நங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்*  நந்தன் பெற்ற மதலை,* 
    அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே*   அல்லில்தான் வந்த பின்னை,*

    கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மி*  கமலச் செவ்வாய் வெளுப்ப,* 
    என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    ஆயிரம் கண்உடை இந்திரனாருக்கு அன்று*  ஆயர் விழவுஎடுப்ப,* 
    பாசனம் நல்லன பண்டிகளால்*  புகப் பெய்த அதனை எல்லாம்,*

    போயிருந்து அங்குஒரு பூத வடிவுகொண்டு*  உன்மகன் இன்று நங்காய்,* 
    மாயன் அதனை எல்லாம் முற்ற*  வாரி வளைத்து உண்டுஇருந்தான் போலும்! 


    தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்*  ஓர்ஓர்குடம் துற்றிடும்என்று,* 
    ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்*  நான்இதற்குஎள்கி இவனை நங்காய்*

    சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று*  இரப்பன் உரப்பகில்லேன்* 
    பேய்ச்சி முலைஉண்ட பின்னை*  இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே! 


    ஈடும் வலியும் உடைய*  இந் நம்பி பிறந்த எழு திங்களில்,* 
    ஏடுஅலர் கண்ணியினானை வளர்த்தி*  யமுனை நீராடப் போனேன்,*

    சேடன் திருமறு மார்வன்*  கிடந்து  திருவடியால்,*  மலை போல்-
    ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை*  உரப்புவது அஞ்சுவனே!


    அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!*  ஆயிரம் நாழி நெய்யை,*
    பஞ்சிய மெல்அடிப் பிள்ளைகள் உண்கின்று*  பாகம்தான் வையார்களே,*

    கஞ்சன் கடியன் கறவுஎட்டு நாளில்*  என்கை வலத்துஆதும் இல்லை,* 
    நெஞ்சத்துஇருப்பன செய்து வைத்தாய் நம்பீ!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!*  ஆயர் மடமக்களை,*
    பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்*  பின்னே சென்றுஒளித்திருந்து,*

    அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு*  அரவுஏர்இடையார் இரப்ப,* 
    மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற*  மரம் ஏறி இருந்தாய் போலும் 


    அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு*  ஆண்மையும் சேவகமும்,* 
    உச்சியில் முத்தி வளர்த்துஎடுத்தேனுக்க*  உரைத்திலன் தான்இன்று போய்,*

    பச்சிலைப் பூங்கடம்பு ஏறி*  விசைகொண்டு  பாய்ந்து புக்கு*  ஆயிரவாய்-
    நச்சுஅழல் பொய்கையில் நாகத்தினோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   


    தம்பரம் அல்லன ஆண்மைகளைத்*  தனியேநின்று தாம் செய்வரோ?,
    எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுஉடையேன்*  இனி யான்என் செய்கேன்?,*

    அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்*  அங்குஅனல் செங்கண்உடை,*
    வம்புஅவிழ் கானத்து மால்விடையோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   


    அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச*  அருவரை போல்,* 
    மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய*  மைந்தனை மாகடல் சூழ்,*

    கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்*  காமரு சீர்க்கலிகன்றி*
    இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு*  ஏதும் இடர் இல்லையே.  (2)   


    காதில் கடிப்புஇட்டு*  கலிங்கம் உடுத்து,* 
    தாதுநல்ல*  தண்அம் துழாய் கொடுஅணிந்து,*

    போது மறுத்து*  புறமே வந்து நின்றீர்,*
    ஏதுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  (2)   


    துவர்ஆடை உடுத்து*  ஒருசெண்டு சிலுப்பி,* 
    கவர்ஆக முடித்து*  கலிக்கச்சுக் கட்டி,*

    சுவர்ஆர் கதவின் புறமே*  வந்து நின்றீர்,*
    இவர்ஆர்? இதுஎன்? இதுஎன்? இதுஎன்னோ!


    கருளக் கொடி ஒன்றுஉடையீர்!*  தனிப்பாகீர்,* 
    உருளச் சகடம் அது*  உறுக்கி நிமிர்த்தீர்,*

    மருளைக் கொடுபாடி வந்து*  இல்லம் புகுந்தீர்,* 
    இருளத்து இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


    நாமம் பலவும் உடை*  நாரண நம்பீ,* 
    தாமத் துளவம்*  மிக நாறிடுகின்றீர்,*

    காமன்எனப்பாடி வந்து*  இல்லம் புகுந்தீர்,* 
    ஏமத்து இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


    சுற்றும் குழல்தாழ*  சுரிகை அணைத்து,* 
    மற்று பல*  மாமணி பொன்கொடுஅணிந்து,*

    முற்றம் புகுந்து*  முறுவல்செய்து நின்றீர்,*
    எற்றுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


    ஆன்ஆயரும்*  ஆநிரையும் அங்குஒழிய,* 
    கூன்ஆயதுஓர்*  கொற்ற வில்ஒன்று கைஏந்தி,*

    போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்,*
    ஏனோர்கள் முன்என்?*  இதுஎன்? இதுஎன்னோ!


    மல்லே பொருத திரள்தோள்*  மணவாளீர்,* 
    அல்லே அறிந்தோம்*  நும் மனத்தின் கருத்தை,*

    சொல்லாது ஒழியீர்*  சொன்ன போதினால் வாரீர்*
    எல்லே இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!


    புக்குஆடுஅரவம்*  பிடித்துஆட்டும் புனிதீர்,* 
    இக்காலங்கள்*  யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்,*

    தக்கார் பலர்*  தேவிமார் சாலஉடையீர்,*
    எக்கே! இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!


    ஆடி அசைந்து*  ஆய்மடவாரொடு நீபோய்க்*
    கூடிக் குரவை*  பிணை கோமளப் பிள்ளாய்,*

    தேடி திருமாமகள்*  மண்மகள் நிற்ப,*
    ஏடி! இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!   


    அல்லிக் கமலக் கண்ணனை*  அங்கு ஓர்ஆய்ச்சி*
    எல்லிப் பொழுதுஊடிய*  ஊடல் திறத்தைக்,*

    கல்லின் மலிதோள்*  கலியன் சொன்ன மாலை,*
    சொல்லித் துதிப்பார் அவர்*  துக்கம் இலரே.   (2) 


    புள்உருஆகி நள்இருள் வந்த*  பூதனை மாள,*  இலங்கை-
    ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த*  ஊக்கம் அதனை நினைந்தோ,?*

    கள்அவிழ் கோதை காதலும்*  எங்கள் காரிகை மாதர் கருத்தும்,* 
    பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்*  பேசுவது எந்தை பிரானே!  (2)


    மன்றில் மலிந்து கூத்து உவந்துஆடி*  மால்விடை ஏழும் அடர்த்து,*  ஆயர்-
    அன்று நடுங்க ஆநிரை காத்த*  ஆண்மை  கொலோ அறியேன் நான்,*

    நின்ற பிரானே! நீள்கடல் வண்ணா!*  நீஇவள் தன்னை நின் கோயில்,*
    முன்றில் எழுந்த முருங்கையில் தேனா*  முன் கைவளை கவர்ந்தாயே. 


    ஆர்மலி ஆழி சங்கொடு பற்றி*  ஆற்றலை ஆற்றல் மிகுத்து,* 
    கார்முகில் வண்ணா! கஞ்சனை முன்னம்*  கடந்தநின் கடுந்திறல் தானோ,*

    நேர்இழை மாதை நித்திலத் தொத்தை*   நெடுங் கடல் அமுதுஅனை யாளை,* 
    ஆர்எழில் வண்ணா! அம்கையில் வட்டுஆம்*  இவள்எனக் கருதுகின்றாயே.    


    மல்கிய தோளும் மான்உரி அதளும்*  உடையவர் தமக்கும்ஓர் பாகம்,*
    நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த*  கரதலத்து அமைதியின் கருத்தோ?*

    அல்லிஅம் கோதை அணிநிறம் கொண்டு வந்து*  முன்னே நின்று போகாய்,* 
    சொல்லிஎன் நம்பி இவளை நீ உங்கள்*  தொண்டர் கைத் தண்டுஎன்றஆறே. 


    செருஅழியாத மன்னர்கள் மாள*  தேர்வலம் கொண்டு அவர் செல்லும்,*
    அருவழி வானம் அதர்படக் கண்ட*  ஆண்மைகொலோ? அறியேன் நான்,*

    திருமொழி எங்கள் தேமலர்க் கோதை*  சீர்மையை நினைந்திலை அந்தோ,* 
    பெருவழி நாவல் கனியினும் எளியள்*  இவள்எனப் பேசுகின்றாயே


    அரக்கியர் ஆகம் புல்என வில்லால்*  அணிமதிள் இலங்கையார் கோனைச்,*
    செருக்குஅழித்து அமரர் பணிய முன்நின்ற*  சேவகமோ? செய்ததுஇன்று*

    முருக்குஇதழ் வாய்ச்சி முன்கை வெண்சங்கம்*  கொண்டு முன்னே நின்று போகாய்,* 
    எருக்குஇலைக்குஆக எறிமழுஓச்சல்*   என்செய்வது? எந்தை பிரானே!  


    ஆழிஅம் திண்தேர் அரசர் வந்துஇறைஞ்ச*  அலைகடல் உலகம்முன் ஆண்ட,*
    பாழிஅம் தோள்ஓர் ஆயிரம் வீழ*  படைமழுப் பற்றிய வலியோ?*

    மாழைமென் நோக்கி மணிநிறம் கொண்டு வந்து*  முன்னே நின்று போகாய்,*
    கோழிவெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய்!*  குறுந்தடி? நெடுங்கடல் வண்ணா!


    பொருந்தலன் ஆகம்புள் உவந்துஏற*  வள்உகிரால் பிளந்து,*  அன்று- 
    பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த*  பெருமைகொலோ செய்தது இன்று,*

    பெருந்தடங் கண்ணி சுரும்புஉறு கோதை*  பெருமையை நினைந்திலை பேசில்,* 
    கருங்கடல் வண்ணா! கவுள்கொண்ட நீர்ஆம்*  இவள்எனக் கருதுகின்றாயே


    நீர்அழல் வான்ஆய் நெடுநிலம் கால்ஆய்*  நின்றநின் நீர்மையை நினைந்தோ?*
    சீர்கெழு கோதை என்அலதுஇலள் என்று*  அன்னதுஓர் தேற்றன்மை தானோ?*

    பார்கெழு பவ்வத்துஆர் அமுதுஅனை*  பாவையைப் பாவம் செய்தேனுக்கு,* 
    ஆர்அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்ஆக*  நின் மனத்து வைத்தாயே


    வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி*  மெய்ம்மையே நின்று எம்பெருமானை,* 
    வாள்திறல் தானை மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*

    தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்*  பழமொழியால் பணிந்து உரைத்த,*
    பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்*  சித்தமும் திருவொடு மிகுமே  (2) 


    திருத்தாய் செம்போத்தே,!*  
    திருமாமகள் தன்கணவன்,*

    மருத்தார் தொல்புகழ்*  மாதவனை வர*  
    திருத்தாய் செம்போத்தே!  (2)


    கரையாய் காக்கைப்பிள்ளாய்,*  
    கருமாமுகில் போல்நிறத்தன்,*

    உரைஆர் தொல்புகழ்*  உத்தமனை வர*  
    கரையாய் காக்கைப்பிள்ளாய்!  


    கூவாய் பூங்குயிலே,* 
    குளிர்மாரி தடுத்துஉகந்த*

    மாவாய் கீண்ட*  மணிவண்ணனை வர,*
    கூவாய் பூங்குயிலே!


    கொட்டாய் பல்லிக்குட்டி,* 
    குடம்ஆடி உலகுஅளந்த,*

    மட்டுஆர் பூங்குழல்*  மாதவனை வர,*
    கொட்டாய் பல்லிக்குட்டி!  


    சொல்லாய் பைங்கிளியே,* 
    சுடர்ஆழி வலன்உயர்த்த,*

    மல்ஆர் தோள்*  வட வேங்கடவனைவர,*
    சொல்லாய் பைங்கிளியே!  (2) 


    கோழி கூஎன்னுமால்,* 
    தோழி! நான்என்செய்கேன்,*

    ஆழி வண்ணர்*  வரும்பொழுது ஆயிற்று*
    கோழி கூஎன்னுமால். 


    காமற்கு என்கடவேன்,*
    கருமாமுகில் வண்ணற்குஅல்லால்,*

    பூமேல் ஐங்கணை*  கோத்துப் புகுந்துஎய்ய,*
    காமற்கு என்கடவேன்!


    இங்கே போதும்கொலோ,*
    இனவேல்நெடுங் கண்களிப்ப,*

    கொங்குஆர் சோலைக்*  குடந்தைக் கிடந்தமால்,*
    இங்கே போதும்கொலோ!  (2) 


    இன்னார் என்றுஅறியேன்,* 
    அன்னே! ஆழியொடும்,*

    பொன்ஆர் சார்ங்கம் உடைய அடிகளை,*
    இன்னார் என்றுஅறியேன்.   (2)  


    தொண்டீர் பாடுமினோ,* 
    சுரும்புஆர்பொழில் மங்கையர்கோன்,* 

    ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,*
    தொண்டீர்! பாடுமினோ  (2)