பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    கறவா மட நாகு*  தன் கன்று உள்ளினால்போல்* 
    மறவாது அடியேன்*  உன்னையே அழைக்கின்றேன்*

    நறவு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நின்ற நம்பி* 
    பிறவாமை எனைப் பணி*  எந்தை பிரானே!*


    வற்றா முதுநீரொடு*  மால் வரை ஏழும்* 
    துற்று ஆக முன் துற்றிய*  தொல் புகழோனே*

    அற்றேன் அடியேன்*  உன்னையே அழைக்கின்றேன்* 
    பெற்றேன் அருள் தந்திடு*  என் எந்தை பிரானே!*  


    தாரேன் பிறர்க்கு*  உன் அருள் என்னிடை வைத்தாய்* 
    ஆரேன் அதுவே*  பருகிக் களிக்கின்றேன்*

    கார் ஏய் கடலே மலையே*  திருக்கோட்டி* 
    ஊரே உகந்தாயை*  உகந்து அடியேனே*.       


    புள் வாய் பிளந்த*  புனிதா! என்று அழைக்க* 
    உள்ளே நின்று*  என் உள்ளம் குளிரும் ஒருவா!*

    கள்வா!*  கடல்மல்லைக் கிடந்த கரும்பே* 
    வள்ளால்! உன்னை*  எங்ஙனம் நான் மறக்கேனே*


    வில் ஏர் நுதல்*  நெடுங் கண்ணியும் நீயும்* 
    கல் ஆர் கடுங் கானம்*  திரிந்த களிறே*

    நல்லாய் நர நாரணனே!*  எங்கள் நம்பி* 
    சொல்லாய் உன்னை*  யான் வணங்கித் தொழும் ஆறே *


    பனி ஏய் பரங் குன்றின்*  பவளத் திரளே* 
    முனியே*  திருமூழிக்களத்து விளக்கே*

    இனியாய் தொண்டரோம்*  பருகும் இன் அமுது ஆய 
    கனியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*. 


    கதியேல் இல்லை*  நின் அருள் அல்லது எனக்கு* 
    நிதியே!*  திருநீர்மலை நித்திலத் தொத்தே*

    பதியே பரவித் தொழும்*  தொண்டர் தமக்குக் 
    கதியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*     


    அத்தா! அரியே! என்று*  உன்னை அழைக்க *
    பித்தா என்று பேசுகின்றார்*  பிறர் என்னை*

    முத்தே!  மணி மாணிக்கமே!*  முளைக்கின்ற 
    வித்தே*  உன்னை எங்ஙனம் நான் விடுகேனே!* 


    தூயாய்! சுடர் மா மதிபோல்*  உயிர்க்கு எல்லாம்* 
    தாய் ஆய் அளிக்கின்ற*  தண் தாமரைக் கண்ணா!*

    ஆயா! அலை நீர் உலகு ஏழும்*  முன் உண்ட 
    வாயா*  உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?*


    வண்டு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நம்பிக்கு*  என்றும்- 
    தொண்டு ஆய்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 

    தொண்டீர்! இவை பாடுமின்*  பாடி நின்று ஆட* 
    உண்டே விசும்பு*  உம்தமக்கு இல்லை துயரே*   (2)
     


    புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து*  என்னை உள்ளம் கொண்ட- 
    கள்வா! என்றலும்*  என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*

    உள்ளே நின்று உருகி*  நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்* 
    நள்ளேன் உன்னை அல்லால்*  நறையூர் நின்ற நம்பீயோ!*    


    ஓடா ஆள் அரியின்*  உரு ஆய் மருவி என் தன்-
    மாடே வந்து*  அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா*

    பாடேன் தொண்டர் தம்மைக்* கவிதைப் பனுவல்கொண்டு* 
    நாடேன் உன்னை அல்லால்*  நறையூர் நின்ற நம்பீயோ!*.   


    எம்மானும் எம் அனையும்*  என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்* 
    அம்மானும் அம்மனையும்*  அடியேனுக்கு ஆகி நின்ற*

    நல் மான ஒண் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ!*  உன்- 
    மைம் மான வண்ணம் அல்லால்*  மகிழ்ந்து ஏத்தமாட்டேனே*        


    சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்*  உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல் 
    உறைவாய்*  என் நெஞ்சின் உள்ளே*  உறைவாய் உறைந்ததுதான்*

    அறியாது இருந்தறியேன் அடியேன்*  அணி வண்டு கிண்டும்* 
    நறை வாரும் பொழில் சூழ்*  நறையூர் நின்ற நம்பீயோ!*


    நீண்டாயை வானவர்கள்*  நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்* 
    ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு*  நான் அடிமை

    பூண்டேன்*  என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்* 
    நான்தான் உனக்கு ஒழிந்தேன்*  நறையூர் நின்ற நம்பீயோ!*


    எம் தாதை தாதை அப்பால்*  எழுவர் பழ அடிமை 
    வந்தார்*  என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்*

    அந்தோ! என் ஆர் உயிரே!*  அரசே அருள் எனக்கு* 
    நந்தாமல் தந்த எந்தாய்!*  நறையூர் நின்ற நம்பீயோ!* 


    மன் அஞ்ச ஆயிரம் தோள்*  மழுவில் துணித்த மைந்தா* 
    என் நெஞ்சத்துள் இருந்து*  இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்* 

    வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்*  வளைத்து வைத்தேன்* 
    நல் நெஞ்ச அன்னம் மன்னும்*  நறையூர் நின்ற நம்பீயோ!* 


    எப்போதும் பொன் மலர் இட்டு*  இமையோர் தொழுது*  தங்கள்- 
    கைப்போது கொண்டு இறைஞ்சி*  கழல்மேல் வணங்க நின்றாய்*

    இப்போது என் நெஞ்சின் உள்ளே*  புகுந்தாயைப் போகல் ஒட்டேன்- 
    நல் போது வண்டு கிண்டும்*  நறையூர் நின்ற நம்பீயோ!*           


    ஊன் நேர் ஆக்கைதன்னை*  உழந்து ஓம்பி வைத்தமையால்* 
    யான் ஆய் என்தனக்கு ஆய்*  அடியேன் மனம் புகுந்த

    தேனே!*  தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்* 
    நானே எய்தப் பெற்றேன்*  நறையூர் நின்ற நம்பீயோ!*     


    நல் நீர் வயல் புடை சூழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
    கல் நீர மால் வரைத் தோள்*  கலிகன்றி மங்கையர்கோன்*

    சொல் நீர சொல்மாலை*  சொல்லுவார்கள் சூழ் விசும்பில்- 
    நல் நீர்மையால் மகிழ்ந்து*  நெடுங் காலம் வாழ்வாரே.  (2)


    சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்*  செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் 
    மனமுள் கொண்டு*  என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை*  மரம் ஏழ் எய்த மைந்தனை*

    நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை*  நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்* 
    கனவில் கண்டேன் இன்று கண்டமையால்*  என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)


    தாய் நினைந்த கன்றே ஒக்க*  என்னையும் தன்னையே நினைக்கச் செய்து*  தான் எனக்கு 
    ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை*  அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட

    வாயனை*  மகரக் குழைக் காதனை*  மைந்தனை மதிள் கோவல் இடைகழி 
    ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை*  என் அன்பனை அன்றி ஆதரியேனே.      


    வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்*  மற்று ஓர் நெஞ்சு அறியான்*  அடியேனுடைச் 
    சிந்தை ஆய் வந்து*  தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*

    கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்கோவினை*  குடம் ஆடிய கூத்தனை 
    எந்தையை எந்தை தந்தை தம்மானை*  எம்பிரானை எத்தால் மறக்கேனே?* 


    உரங்களால் இயன்ற மன்னர் மாள*  பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று* 
    இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்*  எம்பிரானை*  வம்பு ஆர் புனல் காவிரி

    அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி*  ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று* 
    சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி*  என் மனம் தாழ்ந்து நில்லாதே*.


    ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது*  அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து 
    தாங்கு*  தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை*  உம்பர்க்கு அணி ஆய் நின்ற*

    வேங்கடத்து அரியை பரி கீறியை*  வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட 
    தீங் கரும்பினை*  தேனை நன் பாலினை அன்றி*  என் மனம் சிந்தை செய்யாதே*.


    எள் தனைப்பொழுது ஆகிலும்*  என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்* 
    தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்*  தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்

    கட்டியை*  கரும்பு ஈன்ற இன் சாற்றை*  காதலால் மறை நான்கும் முன் ஓதிய 
    பட்டனை*  பரவைத் துயில் ஏற்றை*  என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே*.     


    பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற*  பாலை ஆகி இங்கே புகுந்து*  என் 
    கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்*  கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*

    விண் உளார் பெருமானை எம்மானை*  வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் 
    வண்ணன்*  மா மணி வண்ணன் எம் அண்ணல்*  வண்ணமே அன்றி வாய் உரையாதே*


    இனி எப் பாவம் வந்து எய்தும்? சொல்லீர்*  எமக்குஇம்மையே அருள்பெற்றமையால்*  அடும் 
    துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்*  தோற்றத் தொல் நெறியை*  வையம் தொழப்படும்

    முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை*  பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் 
    கனியை*  காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே.


    என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும்- என் மனத்தே இருக்கும் புகழ்த்* 
    தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்*  அன்று இடந்தவனை தழலே புரை*

    மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*  சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்* 
    பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி*  என் மனம் போற்றி என்னாதே*


    தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்*  தோன்றல் வாள் கலியன்*  திரு ஆலி- 
    நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்*  நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-

    சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்*  தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்* 
    பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)


    கண் சோர வெம் குருதி வந்து இழிய*  வெம் தழல்போல் கூந்தலாளை* 
    மண் சேர முலை உண்ட மா மதலாய்!*  வானவர்தம் கோவே! என்று*

    விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு*  மணி மாடம் மல்கு*  செல்வத்- 
    தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்*  காண்மின் என் தலைமேலாரே*


    அம் புருவ வரி நெடுங் கண்*  அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்* 
    கொம்பு உருவ விளங்கனிமேல்*  இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்* 

    வம்பு அலரும் தண் சோலை*  வண் சேறை வான் உந்து கோயில் மேய* 
    எம் பெருமான் தாள் தொழுவார்*  எப்பொழுதும்என் மனத்தே இருக்கின்றாரே*.  


    மீது ஓடி வாள் எயிறு மின் இலக*  முன் விலகும் உருவினாளைக்* 
    காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த*  கைத்தலத்தா! என்று நின்று*

    தாதோடு வண்டு அலம்பும்*  தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி* 
    போதோடு புனல் தூவும் புண்ணியரே*  விண்ணவரின் பொலிகின்றாரே*     


    தேர் ஆளும் வாள் அரக்கன்*  தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ* 
    போர் ஆளும் சிலைஅதனால்*  பொரு கணைகள் போக்குவித்தாய் என்று*  நாளும்

    தார் ஆளும் வரை மார்பன்*  தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்* 
    பேராளன் பேர் ஓதும் பெரியோரை*  ஒருகாலும் பிரிகிலேனே*.


    வந்திக்கும் மற்றவர்க்கும்*  மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்* 
    முந்திச் சென்று அரி உரு ஆய்*  இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*

    சந்தப் பூ மலர்ச் சோலைத்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    சிந்திப்பார்க்கு என் உள்ளம்*  தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே*.


    பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த*  பண்பாளா என்று நின்று* 
    தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்*  துணை இலேன் சொல்லுகின்றேன்*

    வண்டு ஏந்தும் மலர்ப் புறவின்*  வண் சேறைஎம் பெருமான் அடியார் தம்மைக்* 
    கண்டேனுக்கு இது காணீர்*  என் நெஞ்சும்கண் இணையும் களிக்கும் ஆறே*.


    பை விரியும் வரி அரவில்*  படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்* 
    மை விரியும் மணி வரைபோல்*  மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*

    செய் விரியும் தண் சேறை எம் பெருமான்*  திரு வடிவைச் சிந்தித்தேற்கு*  என் 
    ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்*  என் அன்புதானே*.


    உண்ணாது வெம் கூற்றம்*  ஓவாதபாவங்கள் சேரா*  மேலை- 
    விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்*  மென் தளிர்போல் அடியினானை*

    பண் ஆர வண்டு இயம்பும்*  பைம் பொழில் சூழ்தண் சேறை அம்மான் தன்னை* 
    கண் ஆரக் கண்டு உருகி*  கை ஆரத்தொழுவாரைக் கருதுங்காலே*.


    கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒருகால் கவலை என்னும்* 
    வெள்ளத்தேற்கு என்கொலோ*  விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்-

    தள்ள தேன் மணம் நாறும்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்*  என் உள்ளம் உருகும் ஆறே*.       


    பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து*  வயல் நின்ற பெடையோடு*  அன்னம் 
    தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்*  தண் சேறை அம்மான் தன்னை*

    வா மான் தேர்ப் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்* 
    தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்*  நும் துணைக் கையால் தொழுது நின்றே*.


    தந்தை காலில் பெரு விலங்கு*  தாள் அவிழ நள் இருட்கண்- 
    வந்த எந்தை பெருமானார்*  மருவி நின்ற ஊர்போலும்*

    முந்தி வானம் மழை பொழியும்*  மூவா உருவின் மறையாளர்* 
    அந்தி மூன்றும் அனல் ஓம்பும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.


    பாரித்து எழுந்த*  படை மன்னர் தம்மை மாள பாரதத்து- 
    தேரில் பாகன் ஆய் ஊர்ந்த*  தேவதேவன் ஊர்போலும்* 

    நீரில் பணைத்த நெடு வாளைக்கு*  அஞ்சிப் போன குருகு இனங்கள்* 
    ஆரல் கவுளோடு அருகு அணையும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   


    செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்*  சிரங்கள் ஐஇரண்டும்* 
    உம்பர் வாளிக்கு இலக்கு ஆக*  உதிர்த்த உரவோன் ஊர்போலும்*

    கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்*  கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
    அம்பு அராவும் கண் மடவார்*  ஐம்பால் அணையும் அழுந்தூரே*.


    வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி*  அடியேன் மனம் புகுந்து*  என்- 
    உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்*  போன காதல் பெடையோடும்* 
    அள்ளல் செறுவில் கயல் நாடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   


    பகலும் இரவும் தானே ஆய்*  பாரும் விண்ணும் தானே ஆய்*
    நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    துகிலின் கொடியும் தேர்த் துகளும்*  துன்னி மாதர் கூந்தல்வாய்* 
    அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     


    ஏடு இலங்கு தாமரைபோல்*  செவ்வாய் முறுவல் செய்தருளி* 
    மாடு வந்து என் மனம் புகுந்து*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    நீடு மாடத் தனிச் சூலம்*  போழக் கொண்டல் துளி தூவ* 
    ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.         


    மாலைப் புகுந்து மலர்அணைமேல்*  வைகி அடியேன் மனம் புகுந்து*  என்- 
    நீலக் கண்கள் பனி மல்க*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    வேலைக் கடல்போல் நெடு வீதி*  விண் தோய் சுதை வெண் மணி மாடத்து* 
    ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்*  வீதி அழுந்தூரே*    


    வஞ்சி மருங்குல் இடை நோவ*  மணந்து நின்ற கனவகத்து*  என்- 
    நெஞ்சு நிறையக் கைகூப்பி*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    பஞ்சி அன்ன மெல் அடி*  நல் பாவைமார்கள்*  ஆடகத்தின்- 
    அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     


    என் ஐம்புலனும் எழிலும் கொண்டு*  இங்கே நெருநல் எழுந்தருளி* 
    பொன் அம் கலைகள் மெலிவு எய்த*  போன புனிதர் ஊர்போலும்*

    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    அன்னம் பெடையோடு உடன் ஆடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.


    நெல்லில் குவளை கண் காட்ட*  நீரில் குமுதம் வாய் காட்ட *
    அல்லிக் கமலம் முகம் காட்டும்*  கழனி அழுந்தூர் நின்றானை*

    வல்லிப் பொதும்பில் குயில் கூவும்*  மங்கை வேந்தன் பரகாலன்* 
    சொல்லில் பொலிந்த தமிழ்மாலை*  சொல்ல பாவம் நில்லாவே*. (2)


    சிங்கம் அது ஆய் அவுணன்*  திறல் ஆகம் முன் கீண்டு உகந்த* 
    சங்கம் இடத்தானை*  தழல்ஆழி வலத்தானை*

    செங்கமலத் தயனையார்*  தென்ணழுந்தையில் மன்னிநின்ற* 
    அம் கமலக் கண்ணனை*  அடியேன் கண்டு கொண்டேனே*.(2)     


    கோவானார் மடியக்*  கொலையார் மழுக்கொண்டு அருளும்* 
    மூவா வானவனை*  முழுநீர் வண்ணனை*  அடியார்க்கு-

    ஆ! ஆ! என்று இரங்கித்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    தேவாதி தேவனை*  யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.


    உடையானை*  ஒலி நீர் உலகங்கள் படைத்தானை* 
    விடையான் ஓட அன்று*  விறல் ஆழி விசைத்தானை*

    அடையார் தென் இலங்கை அழித்தானை*  அணி அழுந்தூர்- 
    உடையானை*  அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே*.     


    குன்றால் மாரி தடுத்தவனை*  குல வேழம் அன்று- 
    பொன்றாமை*  அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*

    அன்று ஆவின்நறுநெய்*  அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்- 
    நின்றானை*  அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.


    கஞ்சனைக் காய்ந்தானை*  கண்ணமங்கையுள் நின்றானை* 
    வஞ்சனப் பேய் முலையூடு*  உயிர் வாய் மடுத்து உண்டானை* 

    செஞ்சொல் நான்மறையோர்*  தென் அழுந்தையில் மன்னி நின்ற* 
    அஞ்சனக் குன்றம் தன்னை*  அடியேன் கண்டுகொண்டேனே*.


    பெரியானை*  அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்* 
    உரி யானை உகந்தானவனுக்கும்*  உணர்வதனுக்கு

    அரியானை*  அழுந்தூர் மறையோர்கள்*  அடிபணியும் 
    கரியானை*  அடியேன் கண்டுகொண்டு களித்தேனே*.      


    திருவாழ் மார்வன் தன்னை*  திசை மண்நீர் எரிமுதலா* 
    உருவாய் நின்றவனை*  ஒலிசேரும் மாருதத்தை*

    அருவாய் நின்றவனை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    கருவார் கற்பகத்தை*  கண்டுகொண்டு களித்தேனே*      


    நிலையாளாக*  என்னை யுகந்தானை*  நிலமகள்தன்-
    முலையாள் வித்தகனை*  முதுநான்மறை வீதிதொறும்*

    அலையாரும் கடல்போல் முழங்கும்*  தென்னழுந்தையில் மன்னி நின்ற*
    கலையார் சொற்பொருளைக்*  கண்டு கொண்டு களித்தேனே*.


    பேரானை*  குடந்தைப் பெருமானை*  இலங்கு ஒளிசேர்- 
    வாரார் வனமுலையாள்*  மலர்மங்கை நாயகனை,*

    ஆரா இன்னமுதை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    காரார் கருமுகிலை*  கண்டு கொண்டு களித்தேனே*. (2)   


    திறல் முருகனனையார்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற*
    அறமுதல் வனவனை*  அணியாலியர் கோன் மருவார்*

    கறைநெடு வேல்வலவன்*  கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
    முறைவழுவாமை வல்லார்*  முழுது ஆள்வர் வானுலகே*.


    திருவுக்கும் திருஆகிய செல்வா!*  தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா* 
    உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!*  உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*

    ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்*  உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து*  ஒழியாது- 
    அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*  (2)


    பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி*  பாவை பூமகள் தன்னொடும் உடனே- 
    வந்தாய்*  என் மனத்தே மன்னி நின்றாய்*  மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*

    சந்தோகா! பௌழியா! தைத்திரியா!*  சாமவேதியனே! நெடுமாலே* 
    அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!* 


    நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்*  நீண்ட தோள்உடையாய்*  அடியேனைச்- 
    செய்யாத உலகத்திடைச் செய்தாய்*  சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*

    பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்*  போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்* 
    ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்*  பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்- 
    வரனே! மாதவனே! மதுசூதா!*  மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*

    நரனே! நாரணனே! திருநறையூர்!*  நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்- 
    அரனே*  ஆதிவராகம் முன்ஆனாய்!*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்*  பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து* 
    பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்*  பண்பாளா! பரனே! பவித்திரனே* 

    கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*  கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்* 
    அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*   


    தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்*  சொல்லி நகும் பரிசே*  பெற்ற- 
    தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்-  தாடாளா!*  தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-

    சேயாய்*  கிரேத திரேத துவாபர-  கலியுகம்*  இவை நான்கும் முன்ஆனாய்* 
    ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*  


    கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!*  கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா* 
    இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!*  எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்* 

    பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து*  ஐவர்- 
    அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* 


    நெடியானே! கடிஆர் கலிநம்பீ!*  நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்* 
    கடிஆர் காளையர்ஐவர் புகுந்து*  காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*

    குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்*   கூறைசோறு இவை தந்து எனக்குஅருளி* 
    அடியேனைப் பணிஆண்டு கொள் எந்தாய்!*   அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி*  கூறை சோறு இவை தா என்று குமைத்து- 
    போகார்*  நான் அவரைப் பொறுக்ககிலேன்*  புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே* 

    தீவாய் நாகணையில் துயில்வானே!*  திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்* 
    ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*


    அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்* 
    கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி-  ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*

    சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை*   தூய மாலை இவைபத்தும் வல்லார்* 
    மன்னி மன்னவராய் உலகுஆண்டு*  மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே*  (2)


    செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்*  திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த* 
    வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்*  வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*

    எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்*  ஐந்து-  வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை* 
    அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   (2)


    முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண*  முனிவரொடு தானவர்கள் திசைப்ப*  வந்து- 
    பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்*  பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்* 

    செந்நெல் மலிகதிர் கவரி வீச*  சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி* 
    அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*


    குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு*  கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*  
    நிலத்திகழும் மலர்ச்சுடர்ஏய் சோதீ! என்ன*  நெஞ்சுஇடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*

    மலைத்திகழ் சந்துஅகில் கனகம்மணியும் கொண்டு*  வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள்பாய*  
    அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*     


    சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கல் குன்றம்*  திகழ்ந்ததுஎன திருஉருவம் பன்றி ஆகி* 
    இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி*  எயிற்றிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்*

    புலம்புசிறை வண்டுஒலிப்ப பூகம் தொக்க*  பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்கள் ஆல* 
    அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகுஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   


    சினம்மேவும் அடல்அரியின் உருவம்ஆகி*  திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு* 
    மனம்மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி-  மாள உயிர் வவ்விய எம்மாயோன் காண்மின்*

    இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை*  ஏய்வாய மரகதம்போல் கிளியின்இன் சொல்* 
    அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   


    வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி*  மாண்உருஆய் மூவடி மாவலியை வேண்டி* 
    தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித்*  தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*

    தேன்அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  செழுமாட மாளிகைகள் கூடம்தோறும்* 
    ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* 


    பந்துஅணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகி*  பகலவன் மீதுஇயங்காத இலங்கை வேந்தன்* 
    அந்தம்இல் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ*  அடுகணையால் எய்துஉகந்த அம்மான் காண்மின்*

    செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்*  திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க* 
    அந்தணர்தம் ஆகுதியின் புகைஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*


    கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு- பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து* 
    வம்புஅவிழும் மலர்க்குழலாள்ஆய்ச்சி வைத்த- தயிர்வெண்ணெய் உண்டுஉகந்த மாயோன் காண்மின்*

    செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்*  திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
    அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*


    ஊடுஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்*  ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற* 
    நீடுஏறு பெருவலித் தோள்உடைய வென்றி*  நிலவுபுகழ் நேமிஅங்கை நெடியோன் காண்மின்*

    சேடுஏறு பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  திருவிழவில் மணிஅணிந்த திண்ணை தோறும்* 
    ஆடுஏறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*      


    பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்*  பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை* 
    அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*

    கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்*  கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்* 
    ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்*  ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)


    கள்ளம் மனம் விள்ளும் வகை*  கருதிகழல் தொழுவீர்* 
    வெள்ளம் முதுபரவைத்*  திரை விரிய கரை எங்கும்-

    தெள்ளும் மணிதிகழும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உள்ளும்*  எனது உள்ளத்துளும்*  உறைவாரை உள்ளீரே*  (2)


    தெருவில் திரிசிறு நோன்பியர்*  செஞ்சோற்றொடு கஞ்சி- 
    மருவிப்*  பிரிந்தவர் வாய்மொழி*  மதியாது வந்துஅடைவீர்*

    திருவில் பொலிமறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    உருவக் குறள்அடிகள் அடி*  உணர்மின் உணர்வீரே


    பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்*  பணியும் சிறு தொண்டீர்!* 
    அறையும் புனல் ஒருபால்*  வயல் ஒருபால் பொழில் ஒருபால்*

    சிறைவண்டுஇனம் அறையும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உறையும் இறைஅடிஅல்லது*  ஒன்று இறையும் அறியேனே* 


    வான்ஆர் மதி பொதியும் சடை*  மழுவாளியொடு ஒருபால்* 
    தான்ஆகிய தலைவன் அவன்*  அமரர்க்குஅதிபதிஆம்*

    தேன்ஆர்பொழில் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து 
    ஆன்ஆயனது*  அடிஅல்லது*  ஒன்று அறியேன் அடியேனே*


    நந்தா நெடுநரகத்திடை*  நணுகாவகை*  நாளும்- 
    எந்தாய்! என*  இமையோர் தொழுதுஏத்தும் இடம்*  எறிநீர்ச்-

    செந்தாமரை மலரும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அம்தாமரை அடியாய்!*  உனதுஅடியேற்கு அருள் புரியே*  


    முழுநீலமும் மலர்ஆம்பலும்*  அரவிந்தமும் விரவிக்* 
    கழுநீரொடு மடவார்அவர்*  கண்வாய் முகம் மலரும்*

    செழுநீர்வயல் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனம்* 
    தொழும்நீர் மைஅதுஉடையார்*  அடி தொழுவார் துயர்இலரே* 


    சேய்ஓங்கு*  தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்- 
    மாயா*  எனக்குஉரையாய் இது*  மறை நான்கின்உளாயோ?*

    தீஓம் புகை மறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்- 
    தாயோ?*  உனதுஅடியார் மனத்தாயோ?*  அறியேனே*   (2)


    மைஆர் வரிநீல*  மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு* 
    உய்வான் உனகழலே*  தொழுது எழுவேன்*  கிளிமடவார்- 

    செவ்வாய் மொழி பயிலும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஐவாய் அரவுஅணைமேல்*  உறை அமலா! அருளாயே* 


    கருமாமுகில் உருவா!*  கனல் உருவா! புனல் உருவா* 
    பெருமால் வரை உருவா!*  பிறஉருவா! நினதுஉருவா!*

    திருமாமகள் மருவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அருமா கடல்அமுதே!*  உனது அடியே சரண்ஆமே*  (2)


    சீர்ஆர் நெடுமறுகின்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஏர்ஆர்முகில் வண்ணன்தனை*  இமையோர் பெருமானை*

    கார்ஆர் வயல் மங்கைக்குஇறை*  கலியன்ஒலி மாலை* 
    பாரார் இவை பரவித்தொழப்*  பாவம் பயிலாவே*  (2)


    பெரும் புறக்கடலை அடல்ஏற்றினை*  பெண்ணை ஆணை எண்இல் முனிவர்க்குஅருள்- 
    தரும்தவத்தை முத்தின் திரள் கோவையை*  பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை*

    அரும்பினை அலரை அடியேன் மனத்துஆசையை*  அமுதம் பொதிஇன் சுவைக்* 
    கரும்பினை கனியை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*   


    மெய்ந்நலத் தவத்தை திவத்தைத் தரும்*  மெய்யை பொய்யினை கையில் ஓர்' சங்குஉடை* 
    மைந்நிறக்கடலை கடல் வண்ணனை*  மாலை- ஆல்இலைப் பள்ளி கொள் மாயனை*

    நென்னலை பகலை இற்றை நாளினை*  நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை* 
    கன்னலை கரும்பினிடைத் தேறலை*  கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே*  


    எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை*  வாசவார் குழலாள் மலைமங்கை தன்- 
    பங்கனைப்*  பங்கில் வைத்து உகந்தான் தன்னை*  பான்மையை பனி மா மதியம் தவழ்* 

    மங்குலை சுடரை வடமாமலை-  உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்- 
    கங்குலை*  பகலை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*  


    பேய்முலைத்தலை நஞ்சுஉண்ட பிள்ளையை*  தெள்ளியார் வணங்கப்படும் தேவனை* 
    மாயனை மதிள் கோவல்இடைகழி*  மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்*

    ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை*  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை* 
    காசினை மணியை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை*  இம்மையை மறுமைக்கு மருந்தினை,* 
    ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்  ஐயனை*  கையில்ஆழி ஒன்றுஏந்திய   

    கூற்றினை*  குரு மாமணிக் குன்றினை  நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை* 
    காற்றினை புனலை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*   


    துப்பனை துரங்கம் படச்சீறிய தோன்றலை*  சுடர் வான் கலன் பெய்தது ஓர் 
    செப்பினை*  திருமங்கை மணாளனை*  தேவனை திகழும் பவளத்துஒளி 

    ஒப்பனை*  உலகுஏழினை ஊழியை*  ஆழிஏந்திய கையனை அந்தணர் 
    கற்பினை*  கழுநீர் மலரும் வயல்*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    திருத்தனை திசை நான்முகன் தந்தையை*  தேவ தேவனை மூவரில் முன்னிய 
    விருத்தனை*  விளங்கும் சுடர்ச் சோதியை*  விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய

    அருத்தனை*  அரியை பரிகீறிய  அப்பனை*  அப்பில்ஆர் அழல்ஆய் நின்ற 
    கருத்தனை* களி வண்டுஅறையும் பொழில்*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    வெம்சினக் களிற்றை விளங்காய் விழக்*  கன்று வீசிய ஈசனை*  பேய்மகள்- 
    துஞ்ச நஞ்சு சுவைத்துஉண்ட தோன்றலை*  தோன்றல் வாள்அரக்கன் கெடத் தோன்றிய-

    நஞ்சினை*  அமுதத்தினை நாதனை*   நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை* 
    கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    பண்ணினை பண்ணில் நின்றதுஓர் பான்மையை*  பாலுள் நெய்யினை மால்உருஆய் நின்ற- 
    விண்ணினை*  விளங்கும் சுடர்ச் சோதியை*  வேள்வியை விளக்கின்ஒளி தன்னை*

    மண்ணினை மலையை அலை நீரினை*  மாலை மாமதியை மறையோர் தங்கள்- 
    கண்ணினை*  கண்கள் ஆரளவும் நின்று*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*  


    கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*  காதலால் கலி கன்றி உரைசெய்த* 
    வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றுஇவை*  வல்லர்ஆய் உரைப்பார் மதியம் தவழ்*

    விண்ணில் விண்ணவர்ஆய் மகிழ்வு எய்துவர்*  மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய -
    கண்ண!*  நின் தனக்கும் குறிப்புஆகில்-  கற்கலாம்*  கவியின் பொருள் தானே*   (2)