பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    சிலைஇலங்கு பொன்ஆழி*  திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,* 
    மலைஇலங்கு தோள் நான்கே*  மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*

    முலைஇலங்கு பூம்பயலை*  முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
    கலைஇலங்கு மொழியாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)


    செருவரை முன்ஆசுஅறுத்த*  சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,* 
    பொருவரைமுன் போர்தொலைத்த*  பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*

    ஒருவரையும் நின்ஒப்பார்*  ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
    கருவரைபோல் நின்றானை*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)


    துன்னுமா மணிமுடிமேல்*  துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,* 
    மின்னுமா மணிமகர குண்டலங்கள்*  வில்வீசும் என்கின்றாளால்*

    பொன்னின் மாமணி ஆரம்*  அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
    கன்னிமா மதிள்புடைசூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! 


    தார்ஆய தண்துளப*  வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்* 
    போர்ஆனைக் கொம்புஒசித்த*  புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*

    ஆரானும் காண்மின்கள்*  அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
    கார்வானம் நின்றுஅதிரும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    அடித்தலமும் தாமரையே*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,* 
    முடித்தலமும் பொன்பூணும்*  என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*

    வடித்தடங்கண் மலரவளோ*  வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்* 
    கடிக்கமலம் கள்உகுக்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    பேர்ஆயிரம் உடைய பேராளன்*  பேராளன் என்கின்றாளால்* 
    ஏர்ஆர் கனமகர குண்டலத்தன்*  எண்தோளன் என்கின்றாளால்*

    நீர்ஆர் மழைமுகிலே*  நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
    கார்ஆர் வயல் மருவும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ!


    செவ்அரத்த உடைஆடை*  அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்* 
    அவ்அரத்த அடிஇணையும்*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*

    மைவளர்க்கும் மணிஉருவம்*  மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்* 
    கைவளர்க்கும் அழலாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    கொற்றப்புள் ஒன்றுஏறி*  மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்* 
    வெற்றிப்போர் இந்திரற்கும்*  இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*

    பெற்றக்கால் அவன்ஆகம்*  பெண்பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
    கற்றநூல் மறையாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    வண்டுஅமரும் வனமாலை*  மணிமுடிமேல் மணம்நாறும் என்கின்றாளால்* 
    உண்டுஇவர் பால் அன்பு எனக்குஎன்று*  ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*

    பண்டுஇவரைக் கண்டுஅறிவது*  எவ்ஊரில் யாம்? என்றே பயில்கின்றாளால்*
    கண்டவர்தம் மனம்வழங்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    மாவளரும் மென்நோக்கி*  மாதராள் மாயவனைக் கண்டாள் என்று* 
    காவளரும் கடிபொழில்சூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*

    பாவளரும் தமிழ்மாலை*  பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    பூவளரும் கற்பகம்சேர்*  பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே.   (2)


    தெள்ளியீர்! தேவர்க்கும்*  தேவர் திருத்தக்கீர்!* 
    வெள்ளியீர் வெய்ய*  விழுநிதி வண்ணர்*  ஓ!

    துள்ளுநீர்க்*  கண்ணபுரம் தொழுதாள் இவள்- 
    கள்வியோ,*  கைவளை கொள்வது தக்கதே?  (2)


    நீள்நிலா முற்றத்து*  நின்றுஇவள் நோக்கினாள்,* 
    காணுமோ!*  கண்ணபுரம் என்று காட்டினாள்,*

    பாணனார் திண்ணம் இருக்க*  இனிஇவள்- 
    நாணுமோ,?*  நன்று நன்று நறையூரர்க்கே. 


    அருவிசோர் வேங்கடம்*  நீர்மலை என்றுவாய்- 
    வெருவினாள்*  மெய்யம் வினவி இருக்கின்றாள்,*

    பெருகுசீர்க்*  கண்ணபுரம் என்று பேசினாள்- 
    உருகினாள்*  உள்மெலிந்தாள் இது என்கொலோ!  (2)


    உண்ணும் நாள்இல்லை*  உறக்கமும் தான்இல்லை,* 
    பெண்மையும் சால*  நிறைந்திலள் பேதைதான்,*

    கண்ணன்ஊர் கண்ணபுரம்*  தொழும் கார்க்கடல்- 
    வண்ணர்மேல்,*  எண்ணம் இவட்கு இது என்கொலோ!


    கண்ணன்ஊர்*  கண்ணபுரம் தொழும் காரிகை,* 
    பெண்மைஎன் தன்னுடை*  உண்மை உரைக்கின்றாள்,*

    வெண்ணெய்உண்டு ஆப்புண்ட*  வண்ணம் விளம்பினால்,* 
    வண்ணமும்*  பொன்நிறம் ஆவது ஒழியுமே. 


    வடவரை நின்றும் வந்து*  இன்று கணபுரம்,- 
    இடவகை கொள்வது*  யாம்என்று பேசினாள்,*

    மடவரல் மாதர் என் பேதை*  இவர்க்குஇவள்- 
    கடவதுஎன்,?*  கண்துயில் இன்று இவர் கொள்ளவே.


    தரங்கநீர் பேசினும்*  தண்மதி காயினும்,* 
    இரங்குமோ?*  எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*

    துரங்கம் வாய் கீண்டு உகந்தான்*  அது தொன்மை*  ஊர்- 
    அரங்கமே என்பது*  இவள் தனக்கு ஆசையே.    


    தொண்டுஎல்லாம் நின்அடியே*  தொழுது உய்யுமா- 
    கண்டு,*  தான் கண்ணபுரம்*  தொழப் போயினாள்*

    வண்டுஉலாம் கோதை என் பேதை*  மணிநிறம்- 
    கொண்டுதான்,*  கோயின்மை செய்வது தக்கதே?


    முள்எயிறு ஏய்ந்தில,*  கூழை முடிகொடா,* 
    தெள்ளியள் என்பதுஓர்*  தேசுஇலள் என்செய்கேன்,*

    கள்அவிழ் சோலைக்*  கணபுரம் கைதொழும்- 
    பிள்ளையைப்,*  பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? 


    கார்மலி*  கண்ணபுரத்து எம் அடிகளைப்,* 
    பார்மலி மங்கையர் கோன்*  பரகாலன் சொல்,*

    சீர்மலி பாடல்*  இவைபத்தும் வல்லவர்,* 
    நீர்மலி வையத்து*  நீடு நிற்பார்களே    (2)


    கரைஎடுத்த சுரிசங்கும்*  கனபவளத்து எழுகொடியும்,* 
    திரைஎடுத்து வருபுனல்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    விரைஎடுத்த துழாய்அலங்கல்*  விறல்வரைத்தோள் புடைபெயர* 
    வரைஎடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.   (2)


    அரிவிரவு முகில்கணத்தால்*  அகில்புகையால் வரையோடும்* 
    தெரிவுஅரிய மணிமாடத்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    வரிஅரவின் அணைத்துயின்று*  மழைமதத்த சிறுதறுகண்,* 
    கரிவெருவ மருப்புஒசித்தாற்கு*  இழந்தேன்என் கனவளையே. 


    துங்கமா மணிமாட*  நெடுமுகட்டின் சூலிகை, போம்* 
    திங்கள்மா முகில்துணிக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*

    பைங்கண்மால் விடைஅடர்த்து*  பனிமதிகோள் விடுத்துஉகந்த* 
    செங்கண்மால் அம்மானுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.


    கணம்மருவும் மயில்அகவு*  கடிபொழில்சூழ் நெடுமறுகின்,* 
    திணம்மருவு கனமதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,* 

    மணம்மருவு தோள்ஆய்ச்சி*  ஆர்க்கபோய், உரலோடும்* 
    புணர்மருதம் இறநடந்தாற்கு*  இழந்தேன் என் பொன்வளையே.


    வாய்எடுத்த மந்திரத்தால்*  அந்தணர்தம் செய்தொழில்கள்* 
    தீஎடுத்து மறைவளர்க்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*

    தாய்எடுத்த சிறுகோலுக்கு*  உளைந்துஓடி தயிர்உண்ட,* 
    வாய்துடைத்த மைந்தனுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.


    மடல்எடுத்த நெடுந்தாழை*  மருங்குஎல்லாம் வளர்பவளம்,* 
    திடல்எடுத்து சுடர்இமைக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    அடல்அடர்த்து அன்று இரணியனை*  முரண்அழிய அணிஉகிரால்,* 
    உடல்எடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.


    வண்டுஅமரும் மலர்ப்புன்னை*   வரிநீழல் அணிமுத்தம்,* 
    தெண்திரைகள் வரத்திரட்டும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    எண்திசையும் எழுகடலும்*  இருநிலனும் பெருவிசும்பும்,* 
    உண்டுஉமிழ்ந்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.


    கொங்குமலி கருங்குவளை*  கண்ஆகத் தெண்கயங்கள்* 
    செங்கமலம் முகம்அலர்த்தும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    வங்கம்மலி தடங்கடலுள்*  வரிஅரவின் அணைத்துயின்ற,* 
    செங்கமல நாபனுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.


    வார்ஆளும் இளங்கொங்கை*  நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
    சீர்ஆளும் வரைமார்வன்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    பேராளன் ஆயிரம்பேர்*  ஆயிரவாய் அரவுஅணைமேல்* 
    பேராளர் பெருமானுக்கு*  இழந்தேன் என் பெய்வளையே.


    தேமருவு பொழில்புடைசூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்- 
    வாமனனை,*  மறிகடல்சூழ்*  வயல்ஆலி வளநாடன்,*

    காமருசீர்க் கலிகன்றி*  கண்டுஉரைத்த தமிழ்மாலை,* 
    நாமருவி இவைபாட*  வினைஆய நண்ணாவே.  (2)


    விண்ணவர் தங்கள் பெருமான்*  திருமார்வன்,* 
    மண்ணவர் எல்லாம் வணங்கும்*  மலிபுகழ்சேர்,*

    கண்ணபுரத்து எம் பெருமான்*  கதிர்முடிமேல்,* 
    வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.!  (2)


    வேத முதல்வன்*  விளங்கு புரிநூலன்,* 
    பாதம் பரவிப்*  பலரும் பணிந்துஏத்தி,*

    காதன்மை செய்யும்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாது நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    விண்ட மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?* 
    அண்ட முதல்வன்*  அமரர்கள் எல்லாரும்,*

    கண்டு வணங்கும்*  கண்ணபுரத்து எம்பெருமான்* 
    வண்டு நறுந்துழாய்*  வந்துஊதாய் கோல்தும்பீ!


    நீர் மலிகின்றது ஓர்*  மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,* 
    சீர் மலிகின்றது ஓர்*  சிங்க உருஆகி,*

    கார்மலி வண்ணன்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்மலி தண்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    ஏர்ஆர் மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?*
    பார்ஆர் உலகம்*  பரவ பெருங்கடலுள்,*

    கார்ஆமை ஆன*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்ஆர் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    மார்வில் திருவன்*  வலன்ஏந்து சக்கரத்தன்,* 
    பாரைப் பிளந்த*  பரமன் பரஞ்சோதி,*

    காரில் திகழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    தாரில் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    வாமனன் கற்கி*  மதுசூதன் மாதவன்* 
    தார்மன்னு*  தாசரதிஆய தடமார்வன்,*

    காமன்தன் தாதை*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாம நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    நீல மலர்கள்*  நெடுநீர் வயல் மருங்கில்,* 
    சால மலர்எல்லாம்*  ஊதாதே,*  வாள்அரக்கர்-

    காலன்*  கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,* 
    கோல நறுந்துழாய்*  கொண்டுஊதாய் கோல்தும்பீ!


    நந்தன் மதலை*  நிலமங்கை நல்துணைவன்,* 
    அந்தம் முதல்வன்*  அமரர்கள் தம்பெருமான்,*

    கந்தம் கமழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    கொந்து நறுந்துழாய்*  கொண்டுஊதாய் கோல்தும்பீ!


    வண்டு அமரும் சோலை*  வயல்ஆலி நல்நாடன்,* 
    கண்டசீர் வென்றிக்*  கலியன் ஒலிமாலை,*

    கொண்டல் நிறவண்ணன்*  கண்ண புரத்தானைத்,* 
    தொண்டரோம் பாட*  நினைந்துஊதாய் கோல்தும்பீ!  (2)


    தந்தை காலில் விலங்குஅற*  வந்து தோன்றிய தோன்றல்பின்,*  தமியேன் தன்- 
    சிந்தை போயிற்று*  திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*

    அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்*  அவைசுட அதனோடும்,* 
    மந்த மாருதம் வனமுலை தடவந்து*  வலிசெய்வது ஒழியாதே!   (2)


    மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்*  வரைபுரை திருமார்வில்,* 
    தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்*  தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*

    ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது*  ஒளியவன் விசும்புஇயங்கும்,* 
    தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன*  செய்வது ஒன்று அறியேனே!


    ஆயன் மாயமே அன்றி மற்றுஎன்கையில்*  வளைகளும் இறைநில்லா,* 
    பேயின் ஆர்உயிர் உண்டிடும் பிள்ளை*  நம் பெண்உயிர்க்கு இரங்குமோ,*

    தூய மாமதிக் கதிர்சுடதுணைஇல்லை*  இணைமுலை வேகின்றதால்,* 
    ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்*  அஞ்சேல் என்பார் இலையே!


    கயம்கொள் புண்தலைக் களிறுஉந்து வெம்திறல்*  கழல்மன்னர் பெரும்போரில்,* 
    மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்*  வந்திலன், மறிகடல்நீர்*

    தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனிஎனும்*  தழல் முகந்து இளமுலைமேல்,* 
    இயங்கும் மாருதம் விலங்கில்என் ஆவியை*  எனக்குஎனப் பெறலாமே!


    ஏழு மாமரம் துளைபட சிலைவளைத்து*  இலங்கையை மலங்குவித்த- 
    ஆழியான்,*  நமக்கு அருளிய அருளொடும்*  பகல்எல்லை கழிகின்றதால்,*

    தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணைஇல்லை*  சுடர்படு முதுநீரில்,* 
    ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவதுஓர்*  அந்தி வந்து அடைகின்றதே!     


    முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட*  முழங்குஅழல் எரிஅம்பின்,* 
    வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்*  வந்திலன் என்செய்கேன்,*

    எரியும் வெம்கதிர் துயின்றது*  பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
    கரிய நாழிகை ஊழியின் பெரியன*  கழியும்ஆறு அறியேனே!  


    கலங்க மாக்கடல் கடைந்துஅடைத்து*  இலங்கையர் கோனது வரைஆகம்,- 
    மலங்க வெம்சமத்து அடுசரம் துரந்த*  எம் அடிகளும் வாரானால்,*

    இலங்கு வெம்கதிர் இளமதி அதனொடும்*  விடைமணி அடும்,*  ஆயன்- 
    விலங்கல் வேயினது ஓசையும்ஆய்*  இனி விளைவது ஒன்றுஅறியேனே!  


    முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்*  முனிவனும் முனிவுஎய்த,* 
    மழுவினால் மன்னர் ஆர்உயிர் வவ்விய*  மைந்தனும் வாரானால்,*

    ஒழுகு நுண்பனிக்கு ஒடுங்கிய பேடையை*  அடங்க அம்சிறைகோலித்,* 
    தழுவும் நள்இருள் தனிமையின் கடியதுஓர்*  கொடுவினை அறியேனே!


    கனம்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்*  கனவினில் அவன்தந்த,* 
    மனம்செய் இன்பம்வந்து உள்புக வெள்கி*  என் வளைநெக இருந்தேனை,*

    சினம்செய் மால்விடைச் சிறுமணி ஓசை*  என் சிந்தையைச் சிந்துவிக்கும்,* 
    அனந்தல் அன்றிலின் அரிகுரல்*  பாவியேன் ஆவியை அடுகின்றதே!   


    வார்கொள் மென்முலை மடந்தையர்*  தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
    ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை*  அறிந்துமுன் உரைசெய்த,*

    கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்*  கலிகன்றி ஒலிவல்லார்,*
    ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு*  இமையவரொடும் கூடுவரே!    (2)


    தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்*  துளங்கா அரக்கர் துளங்க,*  முன்- 
    திண்தோள் நிமிர சிலைவளைய*  சிறிதே முனிந்த திருமார்வன்,*

    வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை*  வடிக்கண் மடந்தை மாநோக்கம்- 
    கண்டான்,*  கண்டு கொண்டுஉகந்த*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   (2)


    பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்*  பொன்ற அன்று புள்ஊர்ந்து* 
    பெருந்தோள் மாலி தலைபுரள*  பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*

    இருந்தார் தம்மைஉடன் கொண்டு*  அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப* 
    கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    வல்லி இடையாள் பொருட்டாக*  மதிள் நீர் இலங்கையார் கோவை* 
    அல்லல் செய்து வெம்சமத்துள்*  ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*

    வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட*  முனி தன் வேள்வியைக்* 
    கல்விச் சிலையால் காத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.  (2)


    மல்லை முந்நீர் அதர்பட*  வரிவெம் சிலைகால் வளைவித்து* 
    கொல்லை விலங்கு பணிசெய்ய*  கொடியோன் இலங்கை புகல்உற்று*

    தொல்லை மரங்கள் புகப்பெய்து*  துவலை நிமிர்ந்து வான்அணவ* 
    கல்லால் கடலை அடைத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    ஆமைஆகி அரிஆகி*  அன்னம்ஆகி,*  அந்தணர்தம்- 
    ஓமம்ஆகி ஊழிஆகி*  உவரி சூழ்ந்த நெடும்புணரி*

    சேமமதிள் சூழ்இலங்கைக்கோன்*  சிரமும் கரமும் துணித்து,*  முன்- 
    காமன் பயந்தான் கருதும்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 


    வருந்தாது இரு நீ மடநெஞ்சே*  நம்மேல் வினைகள் வாரா,*  முன்- 
    திருந்தா அரக்கர் தென்இலங்கை*  செந்தீ உண்ண சிவந்து ஒருநாள்*

    பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து*  பின்னை மணாளன்ஆகி*  முன்- 
    கருந்தாள் களிறுஒன்று ஒசித்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்*  முதலை-தன்னால் அடர்ப்புண்டு* 
    கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய*  அதனுக்கு அருள்புரிந்தான்*

    அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு*  இளையோற்கு அரசை அருளி*  முன்- 
    கலைமாச் சிலையால் எய்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   


    மால்ஆய் மனமே! அருந்துயரில்*  வருந்தாது இரு நீ, வலிமிக்க* 
    கால்ஆர் மருதும் காய்சினத்த கழுதும்*  கதமா கழுதையும்* 

    மால்ஆர் விடையும் மதகரியும்*  மல்லர் உயிரும் மடிவித்து* 
    காலால் சகடம் பாய்ந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 


    குன்றால் மாரி பழுதுஆக்கி*  கொடிஏர் இடையாள் பொருட்டாக* 
    வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த*  வானோர் பெருமான் மாமாயன்*

    சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்*  திரிகால் சகடம் சினம்அழித்து* 
    கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை* 
    திருமா மகளால் அருள்மாரி*  செழு நீர்ஆலி வளநாடன்*

    மருவுஆர் புயல்கைக் கலிகன்றி*  மங்கை வேந்தன் ஒலிவல்லார்* 
    இருமா நிலத்துக்கு அரசுஆகி*  இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. 


    வியம்உடை விடைஇனம்*  உடைதர மடமகள்* 
    குயம்மிடை தடவரை*  அகலம்அது உடையவர்*

    நயம்உடை நடைஅனம்*  இளையவர் நடைபயில்* 
    கயம்மிடை கணபுரம்*  அடிகள்தம் இடமே.  (2)


    இணைமலி மருதுஇற*  எருதினொடு இகல்செய்து*  
    துணைமலி முலையவள்*  மணம்மிகு கலவியுள்*

    மணம்மலி விழவினொடு*  அடியவர் அளவிய* 
    கணம்மலி கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    புயல்உறு வரைமழை*  பொழிதர மணிநிரை* 
    மயல்உற வரைகுடை*  எடுவிய நெடியவர்*

    முயல்துளர் மிளைமுயல் துள*  வள விளைவயல்*
    கயல்துளு கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    ஏதலர் நகைசெய*  இளையவர் அளைவெணெய்* 
    போதுசெய்து அமரிய*  புனிதர்நல் விரை*  மலர்-

    கோதிய மதுகரம்*  குலவிய மலர்மகள்*
    காதல்செய் கணபுரம்*  அடிகள்தம் இடமே.   (2)


    தொண்டரும் அமரரும்*  முனிவரும் தொழுதுஎழ* 
    அண்டமொடு அகல்இடம்*  அளந்தவர் அமர்செய்து*

    விண்டவர் பட*  மதிள்இலங்கை முன்எரிஎழக்*
    கண்டவர் கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    மழுவுஇயல் படைஉடை*  அவன்இடம் மழைமுகில்*
    தழுவிய உருவினர்*  திருமகள் மருவிய,*

    கொழுவிய செழுமலர்*  முழுசிய பறவைபண்*
    எழுவிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.  


    பரிதியொடு அணிமதி*  பனிவரை திசைநிலம்* 
    எரிதியொடு எனஇன*  இயல்வினர் செலவினர்*

    சுருதியொடு அருமறை*  முறைசொலும் அடியவர்*
    கருதிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.      


    படிபுல்கும் அடிஇணை*  பலர்தொழ மலர்வைகு*
    கொடிபுல்கு தடவரை*  அகலம்அது உடையவர்*

    முடிபுல்கு நெடுவயல்*  படைசெல அடிமலர்*
    கடிபுல்கு கணபுரம்*  அடிகள்தம் இடமே


    புலம்மனும் மலர்மிசை*  மலர்மகள் புணரிய*
    நிலமகள்என இன*  மகளிர்கள் இவரொடும்*

    வலம்மனு படையுடை*  மணிவணர் நிதிகுவைக்*
    கலம்மனு கணபுரம்*  அடிகள்தம் இடமே. 


    மலிபுகழ் கணபுரம்உடைய*  எம் அடிகளை*
    வலிகெழு மதிள்அயல்*  வயல்அணி மங்கையர்*

    கலியன தமிழ்இவை*  விழுமிய இசையினொடு*
    ஒலிசொலும் அடியவர்*  உறுதுயர் இலரே.   (2)


    வானோர் அளவும் முது முந்நீர்*  வளர்ந்த காலம்,*  வலிஉருவின்- 
    மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட*  தண்தாமரைக் கண்ணன்*

    ஆனா உருவில் ஆன்ஆயன்*  அவனை அம்மா விளைவயலுள்* 
    கான்ஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.   (2)


    மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக*  அங்கு ஓர் வரைநட்டு* 
    இலங்கு சோதிஆர் அமுதம்*  எய்தும் அளவு ஓர்ஆமைஆய்*

    விலங்கல் திரியத் தடங்கடலுள்*  சுமந்து கிடந்த வித்தகனை*
    கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    பாரஆர் அளவும் முதுமுந்நீர்*  பரந்த காலம்,* வளைமருப்பின்-
    ஏர்ஆர் உருவத்து ஏனம்ஆய்*  எடுத்த ஆற்றல் அம்மானை*

    கூர்ஆர் ஆரல்இரை கருதி*  குருகு பாய கயல் இரியும்*
    கார்ஆர் புறவன் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    உளைந்த அரியும் மானிடமும்*  உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து* 
    விளைந்த சீற்றம் விண்வெதும்ப*  வேற்றோன் அகலம் வெம்சமத்துப்*

    பிளந்து வளைந்த உகிரானை*  பெருந்தண் செந்நெல் குலைதடிந்து* 
    களம்செய் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே* 


    தொழும்நீர் வடிவின் குறள்உருவுஆய்*  வந்து தோன்றி மாவலிபால்*
    முழுநீர் வையம் முன்கொண்ட*  மூவா உருவின் அம்மானை*

    உழும்நீர் வயலுள் பொன்கிளைப்ப*  ஒருபால் முல்லை முகையோடும்*
    கழுநீர் மலரும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    வடிவாய் மழுவே படைஆக*  வந்து தோன்றி மூவெழுகால்* 
    படிஆர் அரசு களைகட்ட*  பாழி யானை அம்மானை*

    குடியா வண்டு கொண்டுஉண்ண8  கோல நீலம் மட்டு உகுக்கும்* 
    கடிஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  


    வையம் எல்லாம் உடன்வணங்க*  வணங்கா மன்னனாய்த் தோன்றி* 
    வெய்ய சீற்றக் கடிஇலங்கை* குடிகொண்டு ஓட வெம்சமத்துச்*

    செய்த வெம்போர் நம்பரனை*  செழுந்தண் கானல் மணம்நாறும்* 
    கைதை வேலிக் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே. 


    ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்*  ஒருபால் தோன்ற தான்தோன்றி*  
    வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்*  விண்பால் செல்ல வெம்சமத்துச்*

    செற்ற கொற்றத் தொழிலானை*  செந்தீ மூன்றும் இல்இருப்ப*  
    கற்ற மறையோர் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    துவரிக் கனிவாய் நிலமங்கை*  துயர்தீர்ந்து உய்ய பாரதத்துள்*
    இவரித்து அரசர் தடுமாற*  இருள்நாள் பிறந்த அம்மானை*

    உவரி ஓதம் முத்துஉந்த*  ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
    கவரி வீசும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  


    மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்*  முன்னும் இராமன்ஆய் 
    தான்ஆய்*  பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்*  கற்கியும்

    ஆனான் தன்னைக்*  கண்ணபுரத்து அடியன்*  கலியன் ஒலிசெய்த*
    தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை*  செப்ப பாவம் நில்லாவே.  (2)


    கைம்மான மதயானை*  இடர்தீர்த்த கருமுகிலை* 
    மைம்மான மணியை*  அணிகொள் மரகதத்தை* 

    எம்மானை எம்பிரானை ஈசனை*  என்மனத்துள்- 
    அம்மானை*  அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.  (2)


    தருமான மழைமுகிலை*  பிரியாது தன்அடைந்தார்*
    வரும்மானம் தவிர்க்கும்*  மணியை அணிஉருவின்*

    திருமாலை அம்மானை*  அமுதத்தை கடல்கிடந்த-
    பெருமானை*  அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே. 


    விடைஏழ் அன்றுஅடர்த்து*  வெகுண்டு விலங்கல்உறப்*
    படையால்ஆழி தட்ட*  பரமன் பரஞ்சோதி*

    மடைஆர் நீலம்மல்கும் வயல்சூழ்*  கண்ணபுரம்ஒன்று-
    உடையானுக்கு*  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?    


    மிக்கானை*  மறைஆய் விரிந்த விளக்கை,*  என்னுள்-
    புக்கானை*  புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*

    தக்கானை கடிகைத்*  தடங்குன்றின் மிசைஇருந்த*
    அக்காரக் கனியை*  அடைந்து உய்ந்து போனேனே.   (2)


    வந்தாய் என்மனத்தே*  வந்துநீ புகுந்தபின்னை,* 
    எந்தாய்! போய்அறியாய்*  இதுவே அமையாதோ*

    கொந்துஆர் பைம்பொழில்சூழ்*  குடந்தைக் கிடந்துஉகந்த-
    மைந்தா,*  உன்னைஎன்றும்*  மறவாமை பெற்றேனே. 


    எஞ்சா வெம்நரகத்து*  அழுந்தி நடுங்குகின்றேற்கு*
    அஞ்சேல்என்று அடியேனை*  ஆட்கொள்ள வல்லானை*

    நெஞ்சே! நீநினையாது*  இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
    மஞ்சுஆர் மாளிகைசூழ்*  வயல்ஆலி மைந்தனையே.


    பெற்றார் பெற்றுஒழிந்தார்*  பின்னும்நின்று அடியேனுக்கு*
    உற்றான்ஆய் வளர்த்து*  என்உயிர்ஆகி நின்றானை*

    முற்றா மாமதிகோள் விடுத்தானை*  எம்மானை*
    எத்தால் யான்மறக்கேன்*  இதுசொல்என் ஏழைநெஞ்சே!


    கற்றார் பற்றுஅறுக்கும்*  பிறவிப் பெருங்கடலே*
    பற்றா வந்து அடியேன்*  பிறந்தேன் பிறந்தபின்னை*

    வற்றா நீர்வயல்சூழ்*  வயல்ஆலி அம்மானைப்-
    பெற்றேன்*  பெற்றதுவும்*  பிறவாமை பெற்றேனே.


    கண்ணார் கண்ணபுரம்*  கடிகை கடிகமழும்*
    தண்ணார் தாமரைசூழ்*  தலைச்சங்கம் மேல்திசையுள்*

    விண்ணோர் நாள்மதியை*  விரிகின்ற வெம்சுடரை*
    கண்ஆரக் கண்டுகொண்டு*  களிக்கின்றது இங்கு என்றுகொலோ?


    செருநீர வேல்வலவன்*  கலிகன்றி மங்கையர்கோன்*
    கருநீர் முகில்வண்ணன்*  கண்ண புரத்தானை*

    இருநீர்இன் தமிழ்*  இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்* 
    வரும்நீர் வையம்உய்ய*  இவைபாடி ஆடுமினே.   (2)


    வண்டுஆர்பூ மாமலர் மங்கை*  மணநோக்கம் 
    உண்டானே*  உன்னை உகந்துஉகந்து*  உன்தனக்கே

    தொண்டுஆனேற்கு*  என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
    கண்டானே*  கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)


    பெருநீரும் விண்ணும்*  மலையும் உலகுஏழும்* 
    ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய*  நின்னை அல்லால்*

    வருதேவர் மற்றுஉளர் என்று*  என்மனத்து இறையும்-
    கருதேன்நான்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று*  இருப்பாரோடு-
    உற்றிலேன்*  உற்றதும்*  உன்அடியார்க்கு அடிமை*

    மற்றுஎல்லாம் பேசிலும்*  நின்திரு எட்டுஎழுத்தும்-
    கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)


    பெண்ஆனாள்*  பேர்இளங் கொங்கையின்ஆர் அழல்போல்,*
    உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை*  உகந்தேன்நான்*

    மண்ஆளா! வாள்நெடுங் கண்ணி*  மதுமலராள்-
    கண்ணாளா*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    பெற்றாரும் சுற்றமும்*  என்று இவை பேணேன்நான்* 
    மற்றுஆரும் பற்றுஇலேன்*  ஆதலால் நின்அடைந்தேன்*

    உற்றான்என்று உள்ளத்து வைத்து*  அருள் செய்கண்டாய்,*
    கற்றார்சேர்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    ஏத்திஉன் சேவடி*  எண்ணி இருப்பாரைப்*
    பார்த்திருந்து அங்கு*  நமன்தமர் பற்றாது*

    சோத்தம் நாம் அஞ்சுதும் என்று*  தொடாமைநீ,-
    காத்திபோல்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    வெள்ளைநீர் வெள்ளத்து*  அணைந்த அரவுஅணைமேல்*
    துள்ளுநீர் மெள்ளத்*  துயின்ற பெருமானே* 

    வள்ளலே! உன்தமர்க்கு என்றும்*  நமன்தமர்-
    கள்ளர்போல்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    மாண்ஆகி*  வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*
    பூண்ஆகம் கீண்டதுவும்*  ஈண்டு நினைந்துஇருந்தேன்*

    பேணாத வல்வினையேன்*  இடர் எத்தனையும்-
    காணேன்நான்*  கண்ணபுரத்து உறை அம்மானே!        


    நாட்டினாய் என்னை*  உனக்குமுன் தொண்டுஆக* 
    மாட்டினேன் அத்தனையே கொண்டு*  என் வல்வினையை*

    பாட்டினால் உன்னை*  என் நெஞ்சத்து இருந்தமை-
    காட்டினாய்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    கண்டசீர்க்*  கண்ணபுரத்து உறை அம்மானை* 
    கொண்டசீர்த் தொண்டன்*  கலியன் ஒலிமாலை*

    பண்டமாய்ப் பாடும்*  அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
    அண்டம்போய் ஆட்சி*  அவர்க்கு அது அறிந்தோமே.   (2)