பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு* தளர்நடைஇட்டு வருவான்*
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு* ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்*
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச* வாய்வைத்த பிரானே!*
அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே* (2)
பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன்* வருமளவு இப்பால்*
வன் பாரச் சகடம் இறச் சாடி* வடக்கில் அகம் புக்கு இருந்து*
மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை* வேற்றுருவம் செய்து வைத்த*
அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்* குடத் தயிர் சாய்த்துப் பருகி*
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்* பொன்றுவித்து இன்று நீ வந்தாய்*
இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ!* உன்னை என்மகனே என்பர் நின்றார்*
அம்மா உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை* மையன்மை செய்து அவர் பின்போய்*
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று* குற்றம் பல பல செய்தாய்*
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ* புத்தகத்துக்கு உள கேட்டேன்*
ஐயா உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு* தயிரும் விழுங்கி*
கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த* கலத்தொடு சாய்த்துப் பருகி*
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல* விம்மி விம்மி அழுகின்ற*
அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்* கற்றாநிரை மண்டித் தின்ன*
விரும்பாக் கன்று ஒன்று கொண்டு* விளங்கனி வீழ எறிந்த பிரானே!*
சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்* சூழ்வலை வைத்துத் திரியும்*
அரம்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு* வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி*
சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்* சுற்றும் தொழ நின்ற சோதி!*
பொருள்- தாயம் இலேன் எம்பெருமான்!* உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு-
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
வாளா ஆகிலும் காணகில்லார்* பிறர் மக்களை மையன்மை செய்து*
தோளால் இட்டு அவரோடு திளைத்து* நீ சொல்லப் படாதன செய்தாய்*
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன்!* வாழ்வில்லை* நந்தன்-
காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
தாய்மார் மோர் விற்கப் போவர்* தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்*
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை* நேர்படவே கொண்டு போதி*
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து* கண்டார் கழறத் திரியும்*
ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்* சோலைத் தடம் கொண்டு புக்கு*
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை* மூவேழு சென்றபின் வந்தாய்*
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்* உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்*
அத்தா உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
காரார் மேனி நிறத்து எம்பிரானைக்* கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி*
ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்* அம்மம் தாரேன் என்ற மாற்றம்*
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்* பட்டர்பிரான் சொன்ன பாடல்*
ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்* இருடிகேசன் அடியாரே* (2)
அஞ்சன வண்ணனை* ஆயர் கோலக் கொழுந்தினை*
மஞ்சனம் ஆட்டி* மனைகள்தோறும் திரியாமே*
கஞ்சனைக் காய்ந்த* கழல் அடி நோவக் கன்றின்பின்*
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லே பாவமே!* (2)
பற்றுமஞ்சள் பூசிப்* பாவைமாரொடு பாடியிற்*
சிற்றில் சிதைத்து எங்கும்* தீமை செய்து திரியாமே*
கற்றுத் தூளியுடை* வேடர் கானிடைக் கன்றின் பின்*
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லே பாவமே!*
நன்மணி மேகலை* நங்கைமாரொடு நாள்தொறும்*
பொன்மணி மேனி* புழுதியாடித் திரியாமே*
கல்மணி நின்று அதிர்* கான்- அதரிடைக் கன்றின்பின்*
என் மணிவண்ணனைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
வண்ணக் கருங்குழல்* மாதர் வந்து அலர் தூற்றிடப்*
பண்ணிப் பல செய்து* இப் பாடி எங்கும் திரியாமே*
கண்ணுக்கு இனியானைக்* கான் -அதரிடைக் கன்றின்பின்*
எண்ணற்கு அரியானைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
அவ்வவ் இடம் புக்கு* அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்*
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்* கூழைமை செய்யாமே*
எவ்வும் சிலை உடை* வேடர் கானிடைக் கன்றின் பின்*
தெய்வத் தலைவனைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
மிடறு மெழுமெழுத்து ஓட* வெண்ணெய் விழுங்கிப் போய்ப்*
படிறு பல செய்து* இப் பாடி எங்கும் திரியாமே*
கடிறு பல திரி* கான் -அதரிடைக் கன்றின் பின்*
இடற என்பிள்ளையைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
வள்ளி நுடங்கு-இடை* மாதர் வந்து அலர் தூற்றிடத்*
துள்ளி விளையாடித்* தோழரோடு திரியாமே*
கள்ளி உணங்கு* வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்*
புள்ளின் தலைவனைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
பன்னிரு திங்கள்* வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்*
என் இளங் கொங்கை* அமுதம் ஊட்டி எடுத்து யான்*
பொன்னடி நோவப்* புலரியே கானிற் கன்றின் பின்*
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
குடையும் செருப்பும் கொடாதே* தாமோதரனை நான்*
உடையும் கடியன ஊன்று* வெம் பரற்கள் உடைக்*
கடிய வெங் கானிடைக்* கால்- அடி நோவக் கன்றின் பின்*
கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்* :எல்லே பாவமே!*
என்றும் எனக்கு இனியானை* என் மணிவண்ணனைக்*
கன்றின் பின் போக்கினேன் என்று* அசோதை கழறிய*
பொன் திகழ் மாடப்* புதுவையர்கோன் பட்டன் சொல்*
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு* இடர் இல்லையே* (2)
சீலைக் குதம்பை ஒருகாது* ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ*
கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்* குளிர் முத்தின் கோடாலமும்*
காலிப் பின்னே வருகின்ற* கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்*
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்* நங்கைமீர்! நானே மற்று ஆரும் இல்லை (2)
கன்னி நன் மா மதில் சூழ்தரு* பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்*
மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன் வாழ்வு உகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என்குட்டனே முத்தம் தா*
காடுகள் ஊடு போய்க்* கன்றுகள் மேய்த்து மறியோடிக்* கார்க்கோடற்பூச்-
சூடி வருகின்ற தாமோதரா!* கற்றுத் தூளி காண் உன் உடம்பு*
பேடை மயிற் சாயற் பின்னை மணாளா!* நீராட்டு அமைத்து வைத்தேன்*
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்* உன்னோடு உடனே உண்பான்*
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா!* கரும் போரேறே!* நீ உகக்கும்-
குடையும் செருப்பும் குழலும்* தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன* சிறுக்குட்டச் செங் கமல*
அடியும் வெதும்பி* உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்!*
பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை* வாய்வைத்த போரேறே!* என்
சிற்றாயர் சிங்கமே! சீதை மணாளா!* சிறுக்குட்டச் செங்கண் மாலே!*
சிற்றாடையும் சிறுப்பத்திரமும்* இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்*
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்* கலந்து உடன் வந்தாய் போலும்*
அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!* நீ பொய்கை புக்கு*
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்* நான் உயிர் வாழ்ந்திருந்தேன்*
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?* ஏதும் ஓர் அச்சம் இல்லை*
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்* காயாம்பூ வண்ணம் கொண்டாய்!*
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய* பாற்கடல் வண்ணா!* உன்மேல்-
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த* கள்ள அசுரர் தம்மைச்*
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே* விளங்காய் எறிந்தாய் போலும்*
என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்* அங்ஙனம் ஆவர்களே*
கேட்டு அறியாதன கேட்கின்றேன்* கேசவா! கோவலர் இந்திரற்குக்*
காட்டிய சோறும் கறியும் தயிரும்* கலந்து உடன் உண்டாய் போலும்*
ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு* ஒருபோதும் எனக்கு அரிது*
வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா!* உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்*
திண் ஆர் வெண்சங்கு உடையாய்!* திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்* முன்-
பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்* பல்லாண்டு கூறுவித்தேன்*
கண்ணாலம் செய்யக்* கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன்*
கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்* கோலம் செய்து இங்கே இரு*
புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி* தன் புத்திரன் கோவிந்தனைக்*
கற்றினம் மேய்த்து வரக் கண்டு* உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்*
செற்றம் இலாதவர் வாழ்தரு* தென்புது வை விட்டுசித்தன் சொல்*
கற்று இவை பாட வல்லார்* கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (2)
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்* தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி*
குழல்களும் கீதமும் ஆகி* எங்கும்- கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு*
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி* மங்கைமார் சாலக வாசல் பற்றி*
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்* உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.* (2)
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு* வசை அறத் திருவரை விரித்து உடுத்து*
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி* பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே*
முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்- அணிந்து* பல் ஆயர் குழாம் நடுவே*
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்* எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே*
சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்* மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட*
ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி* ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்*
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்* மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்*
அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்* அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே.*
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்* கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்*
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு* கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு*
என்றும் இவனை ஒப்பாரை நங்காய்* கண்டறியேன் ஏடி! வந்து காணாய்*
ஒன்றும்நில்லா வளை கழன்று* துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே.*
சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்* சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து*
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே* பாடவும் ஆடக் கண்டேன்* அன்றிப் பின்-
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்* மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்*
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்* கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*
சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்* திருத்திய கோறம்பும் திருக்குழலும்*
அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்* வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச*
அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை* அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்*
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்* பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ !*
சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்* தன் திருமேனிநின்று ஒளி திகழ*
நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து* பல் ஆயர் குழாம் நடுவே*
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்* குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து* ஆயரோடு-
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை* அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே.*
சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்* திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்*
அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை* அழகிய நேத்திரத்தால் அணிந்து*
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை* எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன*
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்* துகிலொடு சரிவளை கழல்கின்றதே.
வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து* மல்லிகை வனமாலை மௌவல் மாலை*
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்* தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி*
அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை* அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு*
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்* வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.*
விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ* மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே*
கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு* இளஆய்க் கன்னிமார் காமுற்ற-
வண்ணம்* வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்* விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்*
பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்* பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்* தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்-
பொட்டத் துற்றி* மாரிப் பகை புணர்த்த* பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை*
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை* வலைவாய்ப் பற்றிக் கொண்டு* குறமகளிர்-
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)
வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்* வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட*
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப* மதுசூதன் எடுத்து மறித்த மலை*
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி* இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்*
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்* ஆனாயரும் ஆநிரையும் அலறி*
எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப* இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை*
தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்* புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று*
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்* கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்*
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு* அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை*
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்* கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி* எங்கும்-
குடவாய்ப் பட நின்று மழை பொழியும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
வானத்தில் உள்ளீர்! வலியீர் உள்ளீரேல்* அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்*
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை* இடவன் எழ வாங்கி எடுத்த மலை*
கானக் களி-யானை தன் கொம்பு இழந்து* கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்*
கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
செப்பாடு உடைய திருமால் அவன் தன்* செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*
கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்* காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை*
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி* இலங்கு மணி முத்துவடம் பிறழக்*
குப்பாயம் என நின்று காட்சிதரும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்* படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்*
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்* தாமோதரன் தாங்கு தடவரைதான்*
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த* அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்*
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
சலமா முகில் பல் கணப் போர்க்களத்துச்* சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு*
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்* நாராயணன் முன் முகம் காத்த மலை*
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்* இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்*
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்* வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை*
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்* தாமோதரன் தாங்கு தடவரை தான்*
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்* முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்*
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்* கோலமும் அழிந்தில வாடிற்று இல*
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல* மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்*
முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்* முன் நெற்றி நரைத்தன போல* எங்கும்-
குடி ஏறி இருந்து மழை பொழியும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு* அரவப்-பகை ஊர்தி அவனுடைய*
குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*
திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்* பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்*
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்* பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)
நாவலம் பெரிய தீவினில் வாழும்* நங்கைமீர்கள்! இது ஓர் அற்புதம் கேளீர்*
தூ வலம்புரி உடைய திருமால்* தூய வாயிற் குழல்-ஓசை வழியே*
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை- குதுகலிப்ப* உடல் உள் அவிழ்ந்து* எங்கும்-
காவலும் கடந்து கயிறுமாலை* ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2)
இட அணரை இடத் தோளொடு சாய்த்து* இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்*
குடவயிறு பட வாய் கடைகூடக்* கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
மட மயில்களொடு மான்பிணை போலே* மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ*
உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி* ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே.*
வான் இளவரசு வைகுந்தக் குட்டன்* வாசுதேவன் மதுரைமன்னன்* நந்த-
கோன் இளவரசு கோவலர் குட்டன்* கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி* மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்*
தேன் அளவு செறி கூந்தல் அவிழச்* சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.*
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்* தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்*
கானகம் படி உலாவி உலாவிக்* கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது*
மேனகையொடு திலோத்தமை அரம்பை* உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி*
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி* ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.*a
முன் நரசிங்கமது ஆகி* அவுணன்- முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்-
மன்னர் அஞ்சும்* மதுசூதனன் வாயிற்* குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க*
நன் நரம்பு உடைய தும்புருவோடு* நாரதனும் தம் தம் வீணை மறந்து*
கின்னர மிதுனங்களும் தம் தம்* கின்னரம் தொடுகிலோம் என்றனரே*
செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்* தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்*
நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்* கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்*
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்* அமுத கீத வலையால் சுருக்குண்டு*
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி* நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.*
புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்* பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து*
அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத* அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப*
அவியுணா மறந்து வானவர் எல்லாம்* ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்*
செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து* கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*
சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்* செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக*
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்* கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
பறவையின் கணங்கள் கூடு துறந்து* வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்*
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்* கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.*
திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்* செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே*
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்* ஊதுகின்ற குழல்-ஓசை வழியே*
மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து* மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர*
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா* எழுது சித்திரங்கள் போல நின்றனவே.*
கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து* கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை*
அருங்கல உருவின் ஆயர் பெருமான்* அவனொருவன் குழல் ஊதின போது*
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்* மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்*
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற- பக்கம் நோக்கி* அவை செய்யும் குணமே.*
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்* கோவிந்தனுடைய கோமள வாயிற்*
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்* கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்*
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்* விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்*
குழலை வென்ற குளிர் வாயினராகிச்* சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2)
ஐய புழுதி உடம்பு அளைந்து* இவள் பேச்சும் அலந்தலையாய்ச்*
செய்ய நூலின் சிற்றாடை* செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்*
கையினில் சிறுதூதை யோடு* இவள் முற்றில் பிரிந்தும் இலள்*
பை அரவணைப் பள்ளியானொடு* கைவைத்து இவள்வருமே.* (2)
வாயிற் பல்லும் எழுந்தில* மயிரும் முடி கூடிற்றில*
சாய்வு இலாத குறுந்தலைச்* சில பிள்ளைகளோடு இணங்கி*
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து* இவள் தன் அன்ன செம்மை சொல்லி*
மாயன் மா மணிவண்ணன்மேல்* இவள் மால் உறுகின்றாளே*
பொங்கு வெண்மணல் கொண்டு* சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்*
சங்கு சக்கரம் தண்டு வாள்* வில்லும் அல்லது இழைக்கலுறாள்*
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில* கோவிந்தனோடு இவளைச்*
சங்கை யாகி என் உள்ளம்* நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே.*
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து* என் பெண்மகளை எள்கி*
தோழிமார் பலர் கொண்டுபோய்ச்* செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்?*
ஆழியான் என்னும் ஆழ மோழையில்* பாய்ச்சி அகப்படுத்தி*
மூழை உப்பு அறியாது என்னும்* மூதுரையும் இலளே*
நாடும் ஊரும் அறியவே போய்* நல்ல துழாய் அலங்கல்-
சூடி* நாரணன் போம் இடம் எல்லாம்* சோதித்து உழிதர்கின்றாள்*
கேடு வேண்டுகின்றார் பலர் உளர்* கேசவனோடு இவளைப்*
பாடிகாவல் இடுமின் என்று என்று* பார் தடுமாறினதே.*
பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து* இவள் பாடகமும் சிலம்பும்*
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு* என்னோடு இருக்கலுறாள்*
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று* இவள் பூவைப் பூவண்ணா என்னும்*
வட்ட வார் குழல் மங்கைமீர்!* இவள் மால் உறுகின்றாளே.*
பேசவும் தரியாத பெண்மையின்* பேதையேன் பேதை இவள்*
கூசமின்றி நின்றார்கள்* தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்*
கேசவா என்றும் கேடிலீ என்றும்* கிஞ்சுக வாய் மொழியாள்*
வாச வார்குழல் மங்கைமீர்!* இவள் மால் உறுகின்றாளே.*
காறை பூணும் கண்ணாடி காணும்* தன் கையில் வளை குலுக்கும்*
கூறை உடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்*
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்* தேவன் திறம் பிதற்றும்*
மாறில் மா மணிவண்ணன்மேல்* இவள் மால் உறுகின்றாளே.*
கைத்தலத்து உள்ள மாடு அழியக்* கண்ணாலங்கள் செய்து* இவளை-
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?* நம்மை வடுப்படுத்தும்*
செய்த்தலை எழு நாற்றுப் போல்* அவன் செய்வன செய்துகொள்ள*
மைத் தடமுகில் வண்ணன் பக்கல்* வளர விடுமின்களே.*
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து* பேணி நம் இல்லத்துள்ளே*
இருத்துவான் எண்ணி நாம் இருக்க* இவளும் ஒன்று எண்ணுகின்றாள்*
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்* வார்த்தை படுவதன்முன்*
ஒருப்படுத்து இடுமின் இவளை* உலகளந்தான் இடைக்கே.*
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்* நாராயணனுக்கு* இவள்-
மாலதாகி மகிழ்ந்தனள் என்று* தாய் உரை செய்ததனை*
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்* விட்டுசித்தன் சொன்ன*
மாலை பத்தும் வல்லவர்கட்கு* இல்லை வரு துயரே.* (2)
நல்லது ஓர் தாமரைப் பொய்கை* நாண்மலர் மேல் பனி சோர*
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு* அழகழிந்தால் ஒத்ததாலோ*
இல்லம் வெறியோடிற்றாலோ* என்மகளை எங்கும் காணேன்*
மல்லரை அட்டவன் பின்போய்* மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?* (2)
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத* உருவறைக் கோபாலர் தங்கள்*
கன்று கால் மாறுமா போலே* கன்னி இருந்தாளைக் கொண்டு*
நன்றும் கிறி செய்து போனான்* நாராயணன் செய்த தீமை*
என்றும் எமர்கள் குடிக்கு* ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ?*
குமரி மணம் செய்து கொண்டு* கோலம் செய்து இல்லத்து இருத்தி*
தமரும் பிறரும் அறியத்* தாமோதரற்கு என்று சாற்றி*
அமரர் பதியுடைத் தேவி* அரசாணியை வழிபட்டு*
துமிலம் எழப் பறை கொட்டித்* தோரணம் நாட்டிடுங் கொல்லோ?*
ஒரு மகள் தன்னை உடையேன்* உலகம் நிறைந்த புகழால்*
திருமகள் போல வளர்த்தேன்* செங்கண் மால் தான் கொண்டு போனான்*
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து* பெரும்பிள்ளை பெற்ற அசோதை*
மருமகளைக் கண்டு உகந்து* மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?*
தம் மாமன் நந்தகோபாலன்* தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்*
செம்மாந்திரே என்று சொல்லி* செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்*
கொம்மை முலையும் இடையும்* கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு*
இம் மகளைப் பெற்ற தாயர்* இனித் தரியார் என்னுங் கொல்லோ?*
வேடர் மறக்குலம் போலே* வேண்டிற்றுச் செய்து என்மகளைக்*
கூடிய கூட்டமே யாகக்* கொண்டு குடி வாழுங் கொல்லோ?*
நாடும் நகரும் அறிய* நல்லது ஓர் கண்ணாலம் செய்து*
சாடு இறப் பாய்ந்த பெருமான்* தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?*
அண்டத்து அமரர் பெருமான்* ஆழியான் இன்று என்மகளைப்*
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்* பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*
கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து* கோவலப் பட்டம் கவித்துப்*
பண்டை மணாட்டிமார் முன்னே* பாதுகாவல் வைக்குங் கொல்லோ?*
குடியிற் பிறந்தவர் செய்யும்* குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ!*
நடை ஒன்றும் செய்திலன் நங்காய்!* நந்தகோபன் மகன் கண்ணன்*
இடை இருபாலும் வணங்க* இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்*
கடைகயிறே பற்றி வாங்கிக்* கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?*
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை* வெள்வரைப்பின் முன் எழுந்து*
கண் உறங்காதே இருந்து* கடையவும் தான்வல்லள் கொல்லோ?*
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்* உலகளந்தான் என்மகளைப்*
பண் அறையாப் பணிகொண்டு* பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*
மாயவன் பின்வழி சென்று* வழியிடை மாற்றங்கள் கேட்டு*
ஆயர்கள் சேரியிலும் புக்கு* அங்குத்தை மாற்றமும் எல்லாம்*
தாயவள் சொல்லிய சொல்லைப்* தண் புதுவைப் பட்டன் சொன்ன*
தூய தமிழ் பத்தும் வல்லார்* தூ மணிவண்ணனுக்கு ஆளரே* (2)
என் நாதன் தேவிக்கு* அன்று இன்பப்பூ ஈயாதாள்*
தன் நாதன் காணவே* தண்பூ மரத்தினை*
வன் நாதப் புள்ளால்* வலியப் பறித்திட்ட*
என் நாதன் வன்மையைப் பாடிப் பற*
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.* (2)
என் வில் வலி கண்டு* போ என்று எதிர்வந்தான்*
தன் வில்லினோடும்* தவத்தை எதிர்வாங்கி*
முன் வில் வலித்து* முதுபெண் உயிருண்டான்*
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற*
தாசரதி தன்மையைப் பாடிப் பற.*
உருப்பிணி நங்கையைத்* தேர் ஏற்றிக் கொண்டு*
விருப்புற்று அங்கு ஏக* விரைந்து எதிர் வந்து*
செருக்கு உற்றான்* வீரம் சிதையத்* தலையைச்-
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற*
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.*
மாற்றுத்தாய் சென்று* வனம்போகே என்றிட*
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து* எம்பிரான்! என்று அழ*
கூற்றுத் தாய் சொல்லக்* கொடிய வனம் போன*
சீற்றம் இலாதானைப் பாடிப் பற*
சீதை மணாளனைப் பாடிப் பற.*
பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கைசெய்து*
நஞ்சு உமிழ் நாகம்* கிடந்த நற் பொய்கை புக்கு*
அஞ்சப் பணத்தின்மேல்* பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற*
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற.*
முடி ஒன்றி* மூவுலகங்களும் ஆண்டு* உன்-
அடியேற்கு அருள் என்று* அவன்பின் தொடர்ந்த*
படியில் குணத்துப்* பரத நம்பிக்கு* அன்று-
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற*
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.*
காளியன் பொய்கை* கலங்கப் பாய்ந்திட்டு* அவன்-
நீள்முடி ஐந்திலும்* நின்று நடம்செய்து*
மீள அவனுக்கு* அருள்செய்த வித்தகன்*
தோள்-வலி வீரமே பாடிப் பற*
தூ மணிவண்ணனைப் பாடிப் பற.*
தார்க்கு இளந்தம்பிக்கு* அரசு ஈந்து* தண்டகம்-
நூற்றவள்* சொற்கொண்டு போகி* நுடங்கு இடைச்-
சூர்ப்பணகாவைச்* செவியொடு மூக்கு* அவள்-
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற*
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.*
மாயச் சகடம் உதைத்து* மருது இறுத்து*
ஆயர்களோடு போய்* ஆநிரை காத்து* அணி-
வேயின் குழல் ஊதி* வித்தகனாய் நின்ற*
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற*
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.*
காரார் கடலை அடைத்திட்டு* இலங்கை புக்கு*
ஓராதான் பொன்முடி* ஒன்பதோடு ஒன்றையும்*
நேரா அவன்தம்பிக்கே* நீள் அரசு ஈந்த*
ஆராவமுதனைப் பாடிப் பற*
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.*
நந்தன் மதலையைக்* காகுத்த னைநவின்று*
உந்தி பறந்த* ஒளியிழை யார்கள்சொல்*
செந்தமிழ்த் தென்புதுவை* விட்டு சித்தன்சொல்*
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு* அல்லல் இல்லையே.* (2)
நெறிந்த கருங்குழல் மடவாய்!* நின் அடியேன் விண்ணப்பம்*
செறிந்த மணி முடிச் சனகன்* சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது-
அறிந்து அரசு களைகட்ட* அருந்தவத்தோன் இடை விலங்கச்*
செறிந்த சிலைகொடு தவத்தைச்* சிதைத்ததும் ஓர் அடையாளம்* (2)
அல்லியம்பூ மலர்க்கோதாய்!* அடிபணிந்தேன் விண்ணப்பம்*
சொல்லுகேன் கேட்டருளாய்* துணைமலர்க் கண் மடமானே!*
எல்லியம் போது இனிதிருத்தல்* இருந்தது ஓர் இட வகையில்*
மல்லிகை மா மாலைகொண்டு* அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்*
கலக்கிய மா மனத்தனளாய்க்* கைகேசி வரம் வேண்ட*
மலக்கிய மா மனத்தனனாய்* மன்னவனும் மறாது ஒழியக்*
குலக்குமரா! காடு உறையப் போ என்று* விடை கொடுப்ப*
இலக்குமணன் தன்னொடும்* அங்கு ஏகியது ஓர் அடையாளம்*
வார் அணிந்த முலை மடவாய்!* வைதேவீ! விண்ணப்பம்*
தேர் அணிந்த அயோத்தியர்கோன்* பெருந்தேவீ! கேட்டருளாய்*
கூர் அணிந்த வேல் வலவன்* குகனோடும் கங்கைதன்னிற்*
சீர் அணிந்த தோழமை* கொண்டதும் ஓர் அடையாளம்*
மான் அமரும் மென்நோக்கி!* வைதேவீ! விண்ணப்பம்*
கான் அமரும் கல்-அதர் போய்க்* காடு உறைந்த காலத்துத்*
தேன் அமரும் பொழிற் சாரல்* சித்திரகூடத்து இருப்பப்*
பால்மொழியாய்! பரதநம்பி* பணிந்ததும் ஓர் அடையாளம*
சித்திரகூடத்து இருப்பச்* சிறுகாக்கை முலை தீண்ட*
அத்திரமே கொண்டு எறிய* அனைத்து உலகும் திரிந்து ஓடி*
வித்தகனே! இராமாவோ!* நின் அபயம் என்று அழைப்ப*
அத்திரமே அதன்கண்ணை* அறுத்ததும் ஓர் அடையாளம்*
மின் ஒத்த நுண்- இடையாய்!* மெய்- அடியேன் விண்ணப்பம்*
பொன் ஒத்த மான் ஒன்று* புகுந்து இனிது விளையாட*
நின் அன்பின் வழிநின்று* சிலை பிடித்து எம்பிரான் ஏகப்*
பின்னே அங்கு இலக்குமணன்* பிரிந்ததும் ஓர் அடையாளம்*
மைத் தகு மா மலர்க்குழலாய்!* வைதேவீ விண்ணப்பம்*
ஒத்த புகழ் வானரக்கோன்* உடன் இருந்து நினைத் தேட*
அத்தகு சீர் அயோத்தியர்கோன்* அடையாளம் இவை மொழிந்தான்*
இத் தகையால் அடையாளம்* ஈது அவன் கைம் மோதிரமே*
திக்கு நிறை புகழாளன்* தீ வேள்விச் சென்ற நாள்*
மிக்க பெரும் சபை நடுவே* வில் இறுத்தான் மோதிரம் கண்டு*
ஒக்குமால் அடையாளம்* அனுமான்! என்று* உச்சிமேல்-
வைத்துக்கொண்டு உகந்தனளால்* மலர்க்குழலாள் சீதையுமே (2)
வார் ஆரும் முலை மடவாள்* வைதேவி தனைக் கண்டு*
சீர் ஆரும் திறல் அனுமன்* தெரிந்து உரைத்த அடையாளம்*
பார் ஆரும் புகழ்ப் புதுவைப்* பட்டர்பிரான் பாடல் வல்லார்*
ஏர் ஆரும் வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே* (2)