பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    வண்ண மாடங்கள் சூழ்*  திருக்கோட்டியூர்க்* 
    கண்ணன் கேசவன்*  நம்பி பிறந்தினில்*

    எண்ணெய் சுண்ணம்*  எதிரெதிர் தூவிடக்* 
    கண்ணன் முற்றம்*  கலந்து அளறு ஆயிற்றே. (2)


    ஓடுவார் விழுவார்*  உகந்து ஆலிப்பார்*
    நாடுவார் நம்பிரான்*  எங்குத்தான் என்பார்*

    பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*
    ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே


    பேணிச் சீர் உடைப்*  பிள்ளை பிறந்தினில்*
    காணத் தாம் புகுவார்*  புக்குப் போதுவார்*

    ஆண் ஒப்பார்*  இவன் நேர் இல்லை காண்*  திரு-
    வோணத்தான்*  உலகு ஆளும் என்பார்களே


    உறியை முற்றத்து*  உருட்டி நின்று ஆடுவார்* 
    நறுநெய் பால் தயிர்*  நன்றாகத் தூவுவார்*

    செறி மென் கூந்தல்*  அவிழத் திளைத்து*  எங்கும் 
    அறிவு அழிந்தனர்*  ஆய்ப்பாடி ஆயரே


    கொண்ட தாள் உறி*  கோலக் கொடுமழுத்*
    தண்டினர்*  பறியோலைச் சயனத்தர்*

    விண்ட முல்லை* அரும்பு அன்ன பல்லினர்*
    அண்டர் மிண்டிப்*  புகுந்து நெய்யாடினார்


    கையும் காலும் நிமிர்த்துக்*  கடார நீர்*
    பைய ஆட்டிப்*  பசுஞ் சிறு மஞ்சளால்*

    ஐய நா வழித்தாளுக்கு*  அங்காந்திட* 
    வையம் ஏழும் கண்டாள்*  பிள்ளை வாயுளே


    வாயுள் வையகம் கண்ட*  மடநல்லார்* 
    ஆயர் புத்திரன் அல்லன்*  அருந்தெய்வம்*

    பாய சீர் உடைப்*  பண்பு உடைப் பாலகன்* 
    மாயன் என்று*  மகிழ்ந்தனர் மாதரே


    பத்து நாளும் கடந்த*  இரண்டாம் நாள்* 
    எத் திசையும்*  சயமரம் கோடித்து*

    மத்த மா மலை*  தாங்கிய மைந்தனை*
    உத்தானம் செய்து*  உகந்தனர் ஆயரே


    கிடக்கில் தொட்டில்*  கிழிய உதைத்திடும்* 
    எடுத்துக் கொள்ளில்*  மருங்கை இறுத்திடும்*

    ஒடுக்கிப் புல்கில்*  உதரத்தே பாய்ந்திடும்* 
    மிடுக்கு இலாமையால்*  நான் மெலிந்தேன் நங்காய்.


    செந்நெல்லார் வயல் சூழ்*  திருக்கோட்டியூர்* 
    மன்னு நாரணன்*  நம்பி பிறந்தமை*

    மின்னு நூல்*  விட்டுசித்தன் விரித்த*  இப் 
    பன்னு பாடல் வல்லார்க்கு*  இல்லை பாவமே (2)   


    சீதக் கடலுள்*  அமுது அன்ன தேவகி* 
    கோதைக் குழலாள்*  அசோதைக்குப் போத்தந்த*

    பேதைக் குழவி*  பிடித்துச் சுவைத்து உண்ணும்*
    பாதக் கமலங்கள் காணீரே* 
      பவள வாயீர் வந்து காணீரே  (2) 


    முத்தும் மணியும்*  வயிரமும் நன்பொன்னும்*
    தத்திப் பதித்துத்*  தலைப்பெய்தாற் போல்*  எங்கும்

    பத்து விரலும்*  மணிவண்ணன் பாதங்கள்* 
    ஒத்திட்டு இருந்தவா காணீரே* 
          ஒண்ணுதலீர்! வந்து காணீரே


    பணைத்தோள் இள ஆய்ச்சி*  பால் பாய்ந்த கொங்கை*
    அணைத்து ஆர உண்டு*  கிடந்த இப் பிள்ளை*

    இணைக்காலில்*  வெள்ளித் தளை நின்று இலங்கும்*
    கணைக்கால் இருந்தவா காணீரே*
          காரிகையீர்! வந்து காணீரே


    உழந்தாள் நறுநெய்*  ஒரோர் தடா உண்ண*
    இழந்தாள் எரிவினால்*  ஈர்த்து எழில் மத்தின்*

    பழந்தாம்பால் ஓச்ச*  பயத்தால் தவழ்ந்தான்**
    முழந்தாள் இருந்தவா காணீரே*
          முகிழ்முலையீர் வந்து காணீரே


    பிறங்கிய பேய்ச்சி*  முலை சுவைத்து உண்டிட்டு*
    உறங்குவான் போலே*  கிடந்த இப்பிள்ளை*

    மறம் கொள் இரணியன்*  மார்வை முன் கீண்டான்*
    குறங்குகளை வந்து காணீரே* 
          குவிமுலையீர் வந்து காணீரே


    மத்தக் களிற்று*  வசுதேவர் தம்முடைச்* 
    சித்தம் பிரியாத*  தேவகிதன் வயிற்றில்*

    அத்தத்தின் பத்தாம் நாள்*  தோன்றிய அச்சுதன்* 
    முத்தம் இருந்தவா காணீரே* 
          முகிழ்நகையீர் வந்து காணீரே


    இருங்கை மதகளிறு*  ஈர்க்கின்றவனைப்* 
    பருங்கிப் பறித்துக்கொண்டு*  ஓடும் பரமன்தன்* 

    நெருங்கு பவளமும்*  நேர்நாணும் முத்தும்* 
    மருங்கும் இருந்தவா காணீரே* 
          வாணுதலீர் வந்து காணீரே


    வந்த மதலைக்*  குழாத்தை வலிசெய்து* 
    தந்தக் களிறு போல்*  தானே விளையாடும்*

    நந்தன் மதலைக்கு*  நன்றும் அழகிய* 
    உந்தி இருந்தவா காணீரே* 
    ஒளியிழையீர்! வந்து காணீரே


    அதிருங் கடல்நிற வண்ணனை*  ஆய்ச்சி 
    மதுரமுலை ஊட்டி*  வஞ்சித்து வைத்துப்*

    பதறப் படாமே*  பழந் தாம்பால் ஆர்த்த* 
    உதரம் இருந்தவா காணீரே* 
    ஒளிவளையீர் வந்து காணீரே


    பெருமா உரலிற்*  பிணிப்புண்டு இருந்து*  அங்கு 
    இரு மா மருதம்*  இறுத்த இப் பிள்ளை*

    குருமா மணிப்பூண்*  குலாவித் திகழும்* 
    திருமார்வு இருந்தவா காணீரே*
    சேயிழையீர் வந்து காணீரே


    நாள்கள் ஓர் நாலைந்து*  திங்கள் அளவிலே*
    தாளை நிமிர்த்துச்*  சகடத்தைச் சாடிப்போய்*

    வாள் கொள் வளைஎயிற்று*  ஆருயிர் வவ்வினான்*
    தோள்கள் இருந்தவா காணீரே*
     சுரிகுழலீர் வந்து காணீரே 


    மைத்தடங்கண்ணி*  யசோதை வளர்க்கின்ற*
    செய்த்தலை நீல நிறத்துச்*  சிறுப்பிள்ளை*

    நெய்த்தலை நேமியும்*  சங்கும் நிலாவிய* 
    கைத்தலங்கள் வந்து காணீரே* 
    கனங்குழையீர் வந்து காணீரே


    வண்டு அமர் பூங்குழல்*  ஆய்ச்சி மகனாகக்* 
    கொண்டு வளர்க்கின்ற*  கோவலக் குட்டற்கு*

    அண்டமும் நாடும்*  அடங்க விழுங்கிய* 
    கண்டம் இருந்தவா காணீரே* 
    காரிகையீர்! வந்து காணீரே


    எம் தொண்டை வாய்ச் சிங்கம்*  வா என்று எடுத்துக்கொண்டு* 
    அந் தொண்டை வாய்*  அமுது ஆதரித்து*  ஆய்ச்சியர்

    தம் தொண்டை வாயால்*  தருக்கிப் பருகும்*  இச் 
    செந் தொண்டை வாய் வந்து காணீரே* 
    சேயிழையீர்! வந்து காணீரே


    நோக்கி யசோதை*  நுணுக்கிய மஞ்சளால்* 
    நாக்கு வழித்து*  நீராட்டும் இந் நம்பிக்கு*

    வாக்கும் நயனமும்*  வாயும் முறுவலும்* 
    மூக்கும் இருந்தவா காணீரே* 
     மொய்குழலீர் வந்து காணீரே


    விண்கொள் அமரர்கள்*  வேதனை தீர*  முன் 
    மண்கொள் வசுதேவர்*  தம் மகனாய் வந்து*

    திண்கொள் அசுரரைத்*  தேய வளர்கின்றான்* 
    கண்கள் இருந்தவா காணீரே* 
     கனவளையீர் வந்து காணீரே


    பருவம் நிரம்பாமே*  பாரெல்லாம் உய்யத்*
    திருவின் வடிவு ஒக்கும்*  தேவகி பெற்ற*

    உருவு கரிய*  ஒளி மணிவண்ணன்*
    புருவம் இருந்தவா காணீரே* 
    பூண்முலையீர்! வந்து காணீரே


    மண்ணும் மலையும்*  கடலும் உலகு ஏழும்* 
    உண்ணுந் திறத்து*  மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு*

    வண்ணம் எழில்கொள்*  மகரக்குழை இவை* 
    திண்ணம் இருந்தவா காணீரே* 
     சேயிழையீர்! வந்து காணீரே


    முற்றிலும் தூதையும்*  முன்கைமேல் பூவையும்* 
    சிற்றில் இழைத்துத்*  திரிதருவோர்களைப்*

    பற்றிப் பறித்துக்கொண்டு*  ஓடும் பரமன்தன்* 
    நெற்றி இருந்தவா காணீரே* 
    நேரிழையீர்! வந்து காணீரே


    அழகிய பைம்பொன்னின்*  கோல் அங்கைக் கொண்டு* 
    கழல்கள் சதங்கை*  கலந்து எங்கும் ஆர்ப்ப* 

    மழ கன்றினங்கள்*  மறித்துத் திரிவான்* 
    குழல்கள் இருந்தவா காணீரே* 
     குவிமுலையீர் வந்து காணீரே


    சுருப்பார் குழலி*  யசோதை முன் சொன்ன* 
    திருப் பாதகேசத்தைத்*  தென்புதுவைப் பட்டன்*

    விருப்பால் உரைத்த*  இருபதோடு ஒன்றும் 
    உரைப்பார் போய்*  வைகுந்தத்து ஒன்றியிருப்பரே (2)


    மாணிக்கம் கட்டி*  வயிரம் இடை கட்டி* 
    ஆணிப் பொன்னால் செய்த*  வண்ணச் சிறுத்தொட்டில்*

    பேணி உனக்குப்*  பிரமன் விடுதந்தான்* 
    மாணிக் குறளனே தாலேலோ* 
    வையம் அளந்தானே தாலேலோ (2)


    உடையார் கனமணியோடு*  ஒண் மாதுளம்பூ* 
    இடை விரவிக் கோத்த*  எழிற் தெழ்கினோடும்*

    விடை ஏறு காபாலி*  ஈசன் விடுதந்தான்* 
    உடையாய்! அழேல் அழேல் தாலேலோ* 
    உலகம் அளந்தானே! தாலேலோ


    என்தம்பிரானார்*  எழிற் திருமார்வற்குச்*
    சந்தம் அழகிய*  தாமரைத் தாளற்கு*

    இந்திரன் தானும்*  எழில் உடைக் கிண்கிணி* 
    தந்து உவனாய் நின்றான் தாலேலோ* 
    தாமரைக் கண்ணனே! தாலேலோ


    சங்கின் வலம்புரியும்*  சேவடிக் கிண்கிணியும்* 
    அங்கைச் சரிவளையும்*  நாணும் அரைத்தொடரும்*

    அங்கண் விசும்பில்*  அமரர்கள் போத்தந்தார்* 
    செங்கண் கருமுகிலே! தாலேலோ* 
     தேவகி சிங்கமே! தாலேலோ   


    எழில் ஆர் திருமார்வுக்கு*  ஏற்கும் இவை என்று*
    அழகிய ஐம்படையும்*  ஆரமும் கொண்டு*

    வழு இல் கொடையான்*  வயிச்சிரவணன்* 
    தொழுது உவனாய் நின்றான் தாலேலோ* 
    தூமணி வண்ணனே தாலேலோ


    ஓதக் கடலின்*  ஒளிமுத்தின் ஆரமும்* 
    சாதிப் பவளமும்*  சந்தச் சரிவளையும்*

    மா தக்க என்று*  வருணன் விடுதந்தான்* 
    சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ* 
    சுந்தரத் தோளனே! தாலேலோ


    கானார் நறுந்துழாய்*  கைசெய்த கண்ணியும்* 
    வானார் செழுஞ்சோலைக்*  கற்பகத்தின் வாசிகையும்*

    தேனார் மலர்மேல்*  திருமங்கை போத்தந்தாள்* 
    கோனே! அழேல் அழேல் தாலேலோ* 
     குடந்தைக் கிடந்தானே! தாலேலோ


    கச்சொடு பொற்சுரிகை*  காம்பு கனகவளை*
    உச்சி மணிச்சுட்டி*  ஒண்தாள் நிரைப் பொற்பூ*

    அச்சுதனுக்கு என்று*  அவனியாள் போத்தந்தாள்*
    நச்சுமுலை உண்டாய்! தாலேலோ*
    நாராயணா! அழேல் தாலேலோ


    மெய் திமிரும் நானப்*  பொடியொடு மஞ்சளும்*
    செய்ய தடங்கண்ணுக்கு*  அஞ்சனமும் சிந்துரமும்*

    வெய்ய கலைப்பாகி*  கொண்டு உவளாய் நின்றாள்*
    ஐயா! அழேல் அழேல் தாலேலோ* 
     அரங்கத்து அணையானே! தாலேலோ


    வஞ்சனையால் வந்த*  பேய்ச்சி முலை உண்ட*
    அஞ்சன வண்ணனை*  ஆய்ச்சி தாலாட்டிய*

    செஞ்சொல் மறையவர் சேர்*  புதுவைப் பட்டன் சொல்*
    எஞ்சாமை வல்லவர்க்கு*  இல்லை இடர்தானே  (2)


    தன்முகத்துச் சுட்டி*  தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்* 
    பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப்*  புழுதி அளைகின்றான்*

    என்மகன் கோவிந்தன்*  கூத்தினை இள மா மதீ!* 
    நின்முகம் கண்ணுள ஆகில்*  நீ இங்கே நோக்கிப் போ (2)


    என் சிறுக்குட்டன்*  எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்*
    தன் சிறுக்கைகளால்*  காட்டிக் காட்டி அழைக்கின்றான்*

    அஞ்சன வண்ணனோடு*  ஆடல் ஆட உறுதியேல்*
    மஞ்சில் மறையாதே*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா 


    சுற்றும் ஒளிவட்டம்*  சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*
    எத்தனை செய்யிலும்*  என்மகன் முகம் நேரொவ்வாய்*

    வித்தகன் வேங்கட வாணன்*  உன்னை விளிக்கின்ற*
    கைத்தலம் நோவாமே*  அம்புலீ! கடிது ஓடி வா      


    சக்கரக் கையன்*  தடங்கண்ணால் மலர விழித்து*
    ஒக்கலைமேல் இருந்து*  உன்னையே சுட்டிக் காட்டும் காண்*

    தக்கது அறிதியேல்*  சந்திரா! சலம் செய்யாதே*
    மக்கட் பெறாத*  மலடன் அல்லையேல் வா கண்டாய்


    அழகிய வாயில்*  அமுத ஊறல் தெளிவுற*
    மழலை முற்றாத இளஞ்சொல்லால்*  உன்னைக் கூகின்றான்*

    குழகன் சிரீதரன்*  கூவக் கூவ நீ போதியேல்*
    புழையில ஆகாதே*  நின்செவி புகர் மா மதீ!


    தண்டொடு சக்கரம்*  சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்*
    கண் துயில்கொள்ளக் கருதிக்*  கொட்டாவி கொள்கின்றான்*

    உண்ட முலைப்பால் அறா கண்டாய்*  உறங் காவிடில்*
    விண்தனில் மன்னிய*  மா மதீ! விரைந்து ஓடி வா


    பாலகன் என்று*  பரிபவம் செய்யேல்*  பண்டு ஓர் நாள்
    ஆலின் இலை வளர்ந்த*  சிறுக்கன் அவன் இவன்*

    மேல் எழப் பாய்ந்து*  பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்*
    மாலை மதியாதே*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா


    சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை*  இகழேல் கண்டாய்*
    சிறுமையின் வார்த்தையை*  மாவலியிடைச் சென்று கேள்*

    சிறுமைப் பிழை கொள்ளில்*  நீயும் உன் தேவைக்கு உரியை காண்*
    நிறைமதீ! நெடுமால்*  விரைந்து உன்னைக் கூகின்றான்


    தாழியில் வெண்ணெய்*  தடங்கை ஆர விழுங்கிய* 
    பேழை வயிற்று எம்பிரான் கண்டாய்*  உன்னைக் கூகின்றான்* 

    ஆழிகொண்டு உன்னை எறியும்*  ஐயுறவு இல்லை காண்* 
    வாழ உறுதியேல்*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா


    மைத்தடங் கண்ணி*  யசோதை தன்மகனுக்கு*  இவை- 
    ஒத்தன சொல்லி*  உரைத்த மாற்றம்*  ஒளிபுத்தூர்-

    வித்தகன் விட்டுசித்தன்*  விரித்த தமிழ் இவை* 
    எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு*  இடர் இல்லையே  (2)      


    உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா *  ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்* 
    பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!*  பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே!*

    செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி*  செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக* 
    ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.(2)  


    கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்*  குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்!* 
    மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி*  மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்*

    காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்*  கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே!* 
    ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.


    நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!*  நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்- 
    தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும்*  தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்* 

    விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்*  விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!* 
    அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 


    வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள*  வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே!* 
    கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்*  கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே!* 

    தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்*  என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்* 
    ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.  


    மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்*  வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி*  ஒருங்கு- 
    ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை*  ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!* 

    முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்*  முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய* 
    அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.


    காய மலர்நிறவா! கருமுகில் போல் உருவா!*  கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே* 
    தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா!*  துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே!* 

    ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை*  அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்!* 
    ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே  


    துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்*  தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய* 
    நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய*  நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே!* 

    தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்*  தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய*  என்- 
    அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 


    உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி*  உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்* 
    கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர*  கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி* 

    மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்-  சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!* 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே 


    பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்*  பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர* 
    கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்*  கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக* 

    நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே*   நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ* 
    ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.    


    செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்*  சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும்*  அரையிற்- 
    தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்*  பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்* 

    மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்*  மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக* 
    எங்கள் குடிக்கு அரசே! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே. 


    அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்*  ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே! 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று* 

    அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு*  ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்* 
    இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.  


    மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப*  மருங்கின் மேல்* 
    ஆணிப் பொன்னாற் செய்த*  ஆய்பொன் உடை மணி* 

    பேணி பவளவாய்*  முத்துஇலங்க*  பண்டு- 
    காணி கொண்ட கைகளால் சப்பாணி* 
    கருங்குழற் குட்டனே! சப்பாணி. (2)  


    பொன் அரைநாணொடு*  மாணிக்கக் கிண்கிணி* 
    தன் அரை ஆட*  தனிச் சுட்டி தாழ்ந்து ஆட* 

    என் அரை மேல்நின்று இழிந்து*  உங்கள் ஆயர்தம்*   
    மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி* 
    மாயவனே*  கொட்டாய் சப்பாணி  


    பல் மணி முத்து*  இன்பவளம் பதித்தன்ன* 
    என் மணிவண்ணன்*  இலங்கு பொற் தோட்டின் மேல்* 

    நின் மணிவாய் முத்து இலங்க*  நின் அம்மைதன்* 
    அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி*
    ஆழியங் கையனே சப்பாணி      


    தூ நிலாமுற்றத்தே*  போந்து விளையாட* 
    வான் நிலா அம்புலீ*  சந்திரா! வா என்று*

    நீ நிலா நிற் புகழாநின்ற*  ஆயர்தம்* 
    கோ நிலாவ கொட்டாய் சப்பாணி* 
    குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.  


    புட்டியிற் சேறும்*  புழுதியும் கொண்டுவந்து* 
    அட்டி அமுக்கி*  அகம் புக்கு அறியாமே* 

    சட்டித் தயிரும்*  தடாவினில் வெண்ணெயும் உண்* 
    பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி* 
    பற்பநாபா! கொட்டாய் சப்பாணி. 


    தாரித்து நூற்றுவர்*  தந்தை சொற் கொள்ளாது* 
    போர் உய்த்து வந்து*  புகுந்தவர் மண் ஆளப்* 

    பாரித்த மன்னர் படப்*  பஞ்சவர்க்கு*  அன்று- 
    தேர் உய்த்த கைகளால் சப்பாணி* 
    தேவகி சிங்கமே! சப்பாணி       


    பரந்திட்டு நின்ற*  படுகடல் தன்னை* 
    இரந்திட்ட கைம்மேல்*  எறிதிரை மோதக்* 

    கரந்திட்டு நின்ற*  கடலைக் கலங்கச்* 
    சரந் தொட்ட கைகளால் சப்பாணி* 
    சார்ங்க விற்கையனே! சப்பாணி.  


    குரக்கு இனத்தாலே*  குரைகடல் தன்னை* 
    நெருக்கி அணை கட்டி*  நீள் நீர் இலங்கை*

    அரக்கர் அவிய*  அடு கணையாலே* 
    நெருக்கிய கைகளால் சப்பாணி* 
    நேமியங் கையனே! சப்பாணி.  


    அளந்து இட்ட தூணை*  அவன் தட்ட* ஆங்கே- 
    வளர்ந்திட்டு*  வாள் உகிர்ச் சிங்க உருவாய்*

    உளந் தொட்டு இரணியன்*  ஒண்மார்வு அகலம்* 
    பிளந்திட்ட கைகளால் சப்பாணி*  
    பேய் முலை உண்டானே! சப்பாணி.


    அடைந்திட்டு அமரர்கள்*  ஆழ்கடல் தன்னை* 
    மிடைந்திட்டு மந்தரம்*  மத்தாக நாட்டி* 

    வடம் சுற்றி*  வாசுகி வன்கயிறு ஆகக்* 
    கடைந்திட்ட கைகளால் சப்பாணி* 
    கார்முகில் வண்ணனே! சப்பாணி    


    ஆட்கொள்ளத் தோன்றிய*  ஆயர்தம் கோவினை* 
    நாட்கமழ் பூம்பொழில்*  வில்லிபுத்தூர்ப் பட்டன்* 

    வேட்கையால் சொன்ன* சப்பாணி ஈரைந்தும்* 
    வேட்கையினால் சொல்லுவார்*  வினை போதுமே (2)   


    தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்*  தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
    படு மும்மதப் புனல் சோர வாரணம்  பைய*  நின்று ஊர்வது போல்* 

    உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப*  உடை மணி பறை கறங்க* 
    தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி*  தளர்நடை நடவானோ    
      


    செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்*   சிறுபிறை முளைப் போல* 
    நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே*   நளிர் வெண்பல் முளை இலக* 

    அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி  பூண்ட*  அனந்தசயனன்* 
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*  தளர்நடை நடவானோ


    மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்*  சூழ் பரிவேடமுமாய்ப்* 
    பின்னற் துலங்கும் அரசிலையும்*  பீதகச் சிற்றாடையொடும்* 

    மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்* கழுத்தினிற் காறையொடும்* 
    தன்னிற் பொலிந்த இருடிகேசன்* தளர்நடை நடவானோ    


     
    கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்*  கணகண சிரித்து உவந்து* 
    முன் வந்து நின்று முத்தம் தரும்*  என் முகில்வண்ணன் திருமார்வன்* 

    தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து* என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
    தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே*  தளர்நடை நடவானோ    


    முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்*   மொடுமொடு விரைந்து ஓடப்* 
    பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்*  பெயர்ந்து அடியிடுவது போல்* 

     பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்*   பலதேவன் என்னும்* 
    தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்* தளர்நடை நடவானோ 


    ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்*  உள்ளடி பொறித்து அமைந்த* 
    இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்*  இலச்சினை பட நடந்து* 

    பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்*  பின்னையும் பெய்து பெய்து* 
    தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை*  தளர்நடை நடவானோ     


    படர் பங்கைய மலர்வாய் நெகிழப்*  பனி படு சிறுதுளி போல்* 
    இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி*  இற்று இற்று வீழநின்று* 

    கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்*  உடை மணி கணகணென* 
    தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி*  தளர்நடை நடவானோ   


    பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே*  அருவிகள் பகர்ந்தனைய* 
    அக்குவடம் இழிந்து ஏறித் தாழ*  அணி அல்குல் புடை பெயர* 

    மக்கள் உலகினிற் பெய்து அறியா*  மணிக் குழவி உருவின்*
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*  தளர்நடை நடவானோ     


    வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்*  வேழத்தின் கருங்கன்று போல்* 
    தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்*  சிறு புகர்பட வியர்த்து* 

    ஒண் போது அலர்கமலச் சிறுக்கால்*  உறைத்து ஒன்றும் நோவாமே* 
    தண் போது கொண்ட தவிசின் மீதே*  தளர்நடை நடவானோ    


    திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்*  செங்கண்மால் கேசவன்*  தன்- 
    திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி*  திகழ்ந்து எங்கும் புடைபெயர* 

    பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்*  பெரியதோர் தீர்த்த பலம்- 
    தரு நீர்ச்*  சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்*  தளர்நடை நடவானோ


    ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய*  அஞ்சனவண்ணன் தன்னைத்* 
    தாயர் மகிழ ஒன்னார் தளரத்*   தளர்நடை நடந்ததனை*   

    வேயர் புகழ் விட்டுசித்தன்*  சீரால் விரித்தன உரைக்கவல்லார்* 
    மாயன் மணிவண்ணன் தாள் பணியும்*  மக்களைப் பெறுவர்களே* (2)


    பொன் இயல் கிண்கிணி*  சுட்டி புறங் கட்டித்* 
    தன் இயல் ஓசை*  சலன்-சலன் என்றிட*

    மின் இயல் மேகம்*  விரைந்து எதிர் வந்தாற்போல்* 
    என் இடைக்கு ஓட்டரா அச்சோ* அச்சோ 
     எம்பெருமான்!  வாராய் அச்சோ அச்சோ  (2)


    செங்கமலப் பூவிற்*  தேன் உண்ணும் வண்டே போல்* 
    பங்கிகள் வந்து*  உன் பவளவாய் மொய்ப்ப*

    சங்கு வில் வாள் தண்டு*  சக்கரம் ஏந்திய* 
    அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ* 
     ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ


    பஞ்சவர் தூதனாய்ப்*  பாரதம் கைசெய்து* 
    நஞ்சு உமிழ் நாகம்*  கிடந்த நற் பொய்கை புக்கு* 

    அஞ்சப் பணத்தின்மேல்*  பாய்ந்திட்டு அருள்செய்த* 
    அஞ்சனவண்ணனே!  அச்சோ அச்சோ* 
     ஆயர் பெருமானே!  அச்சோ அச்சோ


    நாறிய சாந்தம்*  நமக்கு இறை நல்கு என்னத்*
    தேறி அவளும்*  திருவுடம்பிற் பூச*

    ஊறிய கூனினை*   உள்ளே ஒடுங்க*  அன்று_
    ஏற உருவினாய்!  அச்சோ அச்சோ* 
     எம்பெருமான்!  வாராய் அச்சோ அச்சோ  


    கழல் மன்னர் சூழக்*  கதிர் போல் விளங்கி*
    எழலுற்று மீண்டே*  இருந்து உன்னை நோக்கும்*

    சுழலை பெரிது உடைத்*   துச்சோதனனை*
    அழல விழித்தானே!  அச்சோ அச்சோ*
    ஆழி அங் கையனே!  அச்சோ அச்சோ


    போர் ஒக்கப் பண்ணி*   இப் பூமிப்பொறை தீர்ப்பான்* 
    தேர் ஒக்க ஊர்ந்தாய்!*  செழுந்தார் விசயற்காய்* 

    கார் ஒக்கு மேனிக்*  கரும் பெருங் கண்ணனே!* 
    ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ* 
     ஆயர்கள் போரேறே!  அச்சோ அச்சோ 


    மிக்க பெரும்புகழ்*  மாவலி வேள்வியிற்*
    தக்கது இது அன்று என்று*  தானம் விலக்கிய* 

    சுக்கிரன் கண்ணைத்*  துரும்பாற் கிளறிய* 
    சக்கரக் கையனே!  அச்சோ அச்சோ*
     சங்கம் இடத்தானே!  அச்சோ அச்சோ


    என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*
    முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*

    மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய* 
    மின்னு முடியனே!  அச்சோ அச்சோ* 
     வேங்கடவாணனே! அச்சோ அச்சோ  


    கண்ட கடலும்*  மலையும் உலகு ஏழும்*  
    முண்டத்துக்கு ஆற்றா*  முகில்வண்ணா ஓ!  என்று* 

    இண்டைச் சடைமுடி*  ஈசன் இரக்கொள்ள*  
    மண்டை நிறைத்தானே!  அச்சோ அச்சோ*
     மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ 


    துன்னிய பேரிருள்*  சூழ்ந்து உலகை மூட* 
    மன்னிய நான்மறை*  முற்றும் மறைந்திடப்*  

    பின் இவ் உலகினில்*  பேரிருள் நீங்க*  அன்று- 
    அன்னமது ஆனானே!  அச்சோ அச்சோ* 
     அருமறை தந்தானே!  அச்சோ அச்சோ      


    நச்சுவார் முன் நிற்கும்*  நாராயணன் தன்னை*
    அச்சோ வருக என்று*  ஆய்ச்சி உரைத்தன* 

    மச்சு அணி மாடப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
    நிச்சலும் பாடுவார்*  நீள் விசும்பு ஆள்வரே  (2)


    வட்டு நடுவே*  வளர்கின்ற*  மாணிக்க- 
    மொட்டு நுனையில்*  முளைக்கின்ற முத்தே போல்* 

    சொட்டுச் சொட்டு என்னத்*  துளிக்கத் துளிக்க*  என் 
    குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்  கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்* (2)


    கிண்கிணி கட்டிக்*  கிறி கட்டிக் கையினிற்*
    கங்கணம் இட்டுக்*  கழுத்திற் தொடர் கட்டித்* 

    தன் கணத்தாலே*  சதிரா நடந்து வந்து*
    என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்*  எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் 


    கத்தக் கதித்துக்*  கிடந்த பெருஞ்செல்வம்* 
    ஒத்துப் பொருந்திக்கொண்டு*  உண்ணாது மண் ஆள்வான்*

    கொத்துத் தலைவன்*  குடிகெடத் தோன்றிய* 
    அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்*  ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்


    நாந்தகம் ஏந்திய*  நம்பி சரண் என்று*
    தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி*  தரணியில்* 

    வேந்தர்கள் உட்க*   விசயன் மணித் திண்தேர்*
    ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்  உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்


    வெண்கலப் பத்திரம் கட்டி*  விளையாடிக்*
    கண் பல பெய்த*  கருந்தழைக் காவின் கீழ்ப்*

    பண் பல பாடிப்*  பல்லாண்டு இசைப்ப*  பண்டு- 
    மண் பல கொண்டான் புறம்புல்குவான்*  வாமனன் என்னைப் புறம்புல்குவான்


    சத்திரம் ஏந்தித்*  தனி ஒரு மாணியாய்*
    உத்தர வேதியில்*  நின்ற ஒருவனைக்* 

    கத்திரியர் காணக்*  காணி முற்றும் கொண்ட* 
    பத்திராகாரன் புறம்புல்குவான்*  பார் அளந்தான் என் புறம்புல்குவான்


    பொத்த உரலைக் கவிழ்த்து*  அதன்மேல் ஏறி* 
    தித்தித்த பாலும்*  தடாவினில் வெண்ணெயும்*

    மெத்தத் திருவயிறு*  ஆர விழுங்கிய*
    அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்*  ஆழியான் என்னைப் புறம்புல்குவான்


    மூத்தவை காண*  முது மணற்குன்று ஏறிக்* 
    கூத்து உவந்து ஆடிக்*  குழலால் இசை பாடி* 

    வாய்த்த மறையோர் வணங்க*  இமையவர்- 
    ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்*  எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்


    கற்பகக் காவு*  கருதிய காதலிக்கு*
    இப்பொழுது ஈவன் என்று*  இந்திரன் காவினில்*  

    நிற்பன செய்து*  நிலாத் திகழ் முற்றத்துள்* 
    உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்*  உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் 


    ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்*  புறம்புல்கிய* 
    வேய்த் தடந்தோளி சொல்*  விட்டுசித்தன் மகிழ்ந்து* 

    ஈத்த தமிழ் இவை*  ஈரைந்தும் வல்லவர்* 
    வாய்த்த நன்மக்களைப் பெற்று*  மகிழ்வரே (2)