பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
வண்ண மாடங்கள் சூழ்* திருக்கோட்டியூர்க்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளறு ஆயிற்றே. (2)
ஓடுவார் விழுவார்* உகந்து ஆலிப்பார்*
நாடுவார் நம்பிரான்* எங்குத்தான் என்பார்*
பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*
ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே
பேணிச் சீர் உடைப்* பிள்ளை பிறந்தினில்*
காணத் தாம் புகுவார்* புக்குப் போதுவார்*
ஆண் ஒப்பார்* இவன் நேர் இல்லை காண்* திரு-
வோணத்தான்* உலகு ஆளும் என்பார்களே
உறியை முற்றத்து* உருட்டி நின்று ஆடுவார்*
நறுநெய் பால் தயிர்* நன்றாகத் தூவுவார்*
செறி மென் கூந்தல்* அவிழத் திளைத்து* எங்கும்
அறிவு அழிந்தனர்* ஆய்ப்பாடி ஆயரே
கொண்ட தாள் உறி* கோலக் கொடுமழுத்*
தண்டினர்* பறியோலைச் சயனத்தர்*
விண்ட முல்லை* அரும்பு அன்ன பல்லினர்*
அண்டர் மிண்டிப்* புகுந்து நெய்யாடினார்
கையும் காலும் நிமிர்த்துக்* கடார நீர்*
பைய ஆட்டிப்* பசுஞ் சிறு மஞ்சளால்*
ஐய நா வழித்தாளுக்கு* அங்காந்திட*
வையம் ஏழும் கண்டாள்* பிள்ளை வாயுளே
வாயுள் வையகம் கண்ட* மடநல்லார்*
ஆயர் புத்திரன் அல்லன்* அருந்தெய்வம்*
பாய சீர் உடைப்* பண்பு உடைப் பாலகன்*
மாயன் என்று* மகிழ்ந்தனர் மாதரே
பத்து நாளும் கடந்த* இரண்டாம் நாள்*
எத் திசையும்* சயமரம் கோடித்து*
மத்த மா மலை* தாங்கிய மைந்தனை*
உத்தானம் செய்து* உகந்தனர் ஆயரே
கிடக்கில் தொட்டில்* கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில்* மருங்கை இறுத்திடும்*
ஒடுக்கிப் புல்கில்* உதரத்தே பாய்ந்திடும்*
மிடுக்கு இலாமையால்* நான் மெலிந்தேன் நங்காய்.
செந்நெல்லார் வயல் சூழ்* திருக்கோட்டியூர்*
மன்னு நாரணன்* நம்பி பிறந்தமை*
மின்னு நூல்* விட்டுசித்தன் விரித்த* இப்
பன்னு பாடல் வல்லார்க்கு* இல்லை பாவமே (2)
சீதக் கடலுள்* அமுது அன்ன தேவகி*
கோதைக் குழலாள்* அசோதைக்குப் போத்தந்த*
பேதைக் குழவி* பிடித்துச் சுவைத்து உண்ணும்*
பாதக் கமலங்கள் காணீரே*
பவள வாயீர் வந்து காணீரே (2)
முத்தும் மணியும்* வயிரமும் நன்பொன்னும்*
தத்திப் பதித்துத்* தலைப்பெய்தாற் போல்* எங்கும்
பத்து விரலும்* மணிவண்ணன் பாதங்கள்*
ஒத்திட்டு இருந்தவா காணீரே*
ஒண்ணுதலீர்! வந்து காணீரே
பணைத்தோள் இள ஆய்ச்சி* பால் பாய்ந்த கொங்கை*
அணைத்து ஆர உண்டு* கிடந்த இப் பிள்ளை*
இணைக்காலில்* வெள்ளித் தளை நின்று இலங்கும்*
கணைக்கால் இருந்தவா காணீரே*
காரிகையீர்! வந்து காணீரே
உழந்தாள் நறுநெய்* ஒரோர் தடா உண்ண*
இழந்தாள் எரிவினால்* ஈர்த்து எழில் மத்தின்*
பழந்தாம்பால் ஓச்ச* பயத்தால் தவழ்ந்தான்**
முழந்தாள் இருந்தவா காணீரே*
முகிழ்முலையீர் வந்து காணீரே
பிறங்கிய பேய்ச்சி* முலை சுவைத்து உண்டிட்டு*
உறங்குவான் போலே* கிடந்த இப்பிள்ளை*
மறம் கொள் இரணியன்* மார்வை முன் கீண்டான்*
குறங்குகளை வந்து காணீரே*
குவிமுலையீர் வந்து காணீரே
மத்தக் களிற்று* வசுதேவர் தம்முடைச்*
சித்தம் பிரியாத* தேவகிதன் வயிற்றில்*
அத்தத்தின் பத்தாம் நாள்* தோன்றிய அச்சுதன்*
முத்தம் இருந்தவா காணீரே*
முகிழ்நகையீர் வந்து காணீரே
இருங்கை மதகளிறு* ஈர்க்கின்றவனைப்*
பருங்கிப் பறித்துக்கொண்டு* ஓடும் பரமன்தன்*
நெருங்கு பவளமும்* நேர்நாணும் முத்தும்*
மருங்கும் இருந்தவா காணீரே*
வாணுதலீர் வந்து காணீரே
வந்த மதலைக்* குழாத்தை வலிசெய்து*
தந்தக் களிறு போல்* தானே விளையாடும்*
நந்தன் மதலைக்கு* நன்றும் அழகிய*
உந்தி இருந்தவா காணீரே*
ஒளியிழையீர்! வந்து காணீரே
அதிருங் கடல்நிற வண்ணனை* ஆய்ச்சி
மதுரமுலை ஊட்டி* வஞ்சித்து வைத்துப்*
பதறப் படாமே* பழந் தாம்பால் ஆர்த்த*
உதரம் இருந்தவா காணீரே*
ஒளிவளையீர் வந்து காணீரே
பெருமா உரலிற்* பிணிப்புண்டு இருந்து* அங்கு
இரு மா மருதம்* இறுத்த இப் பிள்ளை*
குருமா மணிப்பூண்* குலாவித் திகழும்*
திருமார்வு இருந்தவா காணீரே*
சேயிழையீர் வந்து காணீரே
நாள்கள் ஓர் நாலைந்து* திங்கள் அளவிலே*
தாளை நிமிர்த்துச்* சகடத்தைச் சாடிப்போய்*
வாள் கொள் வளைஎயிற்று* ஆருயிர் வவ்வினான்*
தோள்கள் இருந்தவா காணீரே*
சுரிகுழலீர் வந்து காணீரே
மைத்தடங்கண்ணி* யசோதை வளர்க்கின்ற*
செய்த்தலை நீல நிறத்துச்* சிறுப்பிள்ளை*
நெய்த்தலை நேமியும்* சங்கும் நிலாவிய*
கைத்தலங்கள் வந்து காணீரே*
கனங்குழையீர் வந்து காணீரே
வண்டு அமர் பூங்குழல்* ஆய்ச்சி மகனாகக்*
கொண்டு வளர்க்கின்ற* கோவலக் குட்டற்கு*
அண்டமும் நாடும்* அடங்க விழுங்கிய*
கண்டம் இருந்தவா காணீரே*
காரிகையீர்! வந்து காணீரே
எம் தொண்டை வாய்ச் சிங்கம்* வா என்று எடுத்துக்கொண்டு*
அந் தொண்டை வாய்* அமுது ஆதரித்து* ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால்* தருக்கிப் பருகும்* இச்
செந் தொண்டை வாய் வந்து காணீரே*
சேயிழையீர்! வந்து காணீரே
நோக்கி யசோதை* நுணுக்கிய மஞ்சளால்*
நாக்கு வழித்து* நீராட்டும் இந் நம்பிக்கு*
வாக்கும் நயனமும்* வாயும் முறுவலும்*
மூக்கும் இருந்தவா காணீரே*
மொய்குழலீர் வந்து காணீரே
விண்கொள் அமரர்கள்* வேதனை தீர* முன்
மண்கொள் வசுதேவர்* தம் மகனாய் வந்து*
திண்கொள் அசுரரைத்* தேய வளர்கின்றான்*
கண்கள் இருந்தவா காணீரே*
கனவளையீர் வந்து காணீரே
பருவம் நிரம்பாமே* பாரெல்லாம் உய்யத்*
திருவின் வடிவு ஒக்கும்* தேவகி பெற்ற*
உருவு கரிய* ஒளி மணிவண்ணன்*
புருவம் இருந்தவா காணீரே*
பூண்முலையீர்! வந்து காணீரே
மண்ணும் மலையும்* கடலும் உலகு ஏழும்*
உண்ணுந் திறத்து* மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு*
வண்ணம் எழில்கொள்* மகரக்குழை இவை*
திண்ணம் இருந்தவா காணீரே*
சேயிழையீர்! வந்து காணீரே
முற்றிலும் தூதையும்* முன்கைமேல் பூவையும்*
சிற்றில் இழைத்துத்* திரிதருவோர்களைப்*
பற்றிப் பறித்துக்கொண்டு* ஓடும் பரமன்தன்*
நெற்றி இருந்தவா காணீரே*
நேரிழையீர்! வந்து காணீரே
அழகிய பைம்பொன்னின்* கோல் அங்கைக் கொண்டு*
கழல்கள் சதங்கை* கலந்து எங்கும் ஆர்ப்ப*
மழ கன்றினங்கள்* மறித்துத் திரிவான்*
குழல்கள் இருந்தவா காணீரே*
குவிமுலையீர் வந்து காணீரே
சுருப்பார் குழலி* யசோதை முன் சொன்ன*
திருப் பாதகேசத்தைத்* தென்புதுவைப் பட்டன்*
விருப்பால் உரைத்த* இருபதோடு ஒன்றும்
உரைப்பார் போய்* வைகுந்தத்து ஒன்றியிருப்பரே (2)
மாணிக்கம் கட்டி* வயிரம் இடை கட்டி*
ஆணிப் பொன்னால் செய்த* வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி உனக்குப்* பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே தாலேலோ*
வையம் அளந்தானே தாலேலோ (2)
உடையார் கனமணியோடு* ஒண் மாதுளம்பூ*
இடை விரவிக் கோத்த* எழிற் தெழ்கினோடும்*
விடை ஏறு காபாலி* ஈசன் விடுதந்தான்*
உடையாய்! அழேல் அழேல் தாலேலோ*
உலகம் அளந்தானே! தாலேலோ
என்தம்பிரானார்* எழிற் திருமார்வற்குச்*
சந்தம் அழகிய* தாமரைத் தாளற்கு*
இந்திரன் தானும்* எழில் உடைக் கிண்கிணி*
தந்து உவனாய் நின்றான் தாலேலோ*
தாமரைக் கண்ணனே! தாலேலோ
சங்கின் வலம்புரியும்* சேவடிக் கிண்கிணியும்*
அங்கைச் சரிவளையும்* நாணும் அரைத்தொடரும்*
அங்கண் விசும்பில்* அமரர்கள் போத்தந்தார்*
செங்கண் கருமுகிலே! தாலேலோ*
தேவகி சிங்கமே! தாலேலோ
எழில் ஆர் திருமார்வுக்கு* ஏற்கும் இவை என்று*
அழகிய ஐம்படையும்* ஆரமும் கொண்டு*
வழு இல் கொடையான்* வயிச்சிரவணன்*
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ*
தூமணி வண்ணனே தாலேலோ
ஓதக் கடலின்* ஒளிமுத்தின் ஆரமும்*
சாதிப் பவளமும்* சந்தச் சரிவளையும்*
மா தக்க என்று* வருணன் விடுதந்தான்*
சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ*
சுந்தரத் தோளனே! தாலேலோ
கானார் நறுந்துழாய்* கைசெய்த கண்ணியும்*
வானார் செழுஞ்சோலைக்* கற்பகத்தின் வாசிகையும்*
தேனார் மலர்மேல்* திருமங்கை போத்தந்தாள்*
கோனே! அழேல் அழேல் தாலேலோ*
குடந்தைக் கிடந்தானே! தாலேலோ
கச்சொடு பொற்சுரிகை* காம்பு கனகவளை*
உச்சி மணிச்சுட்டி* ஒண்தாள் நிரைப் பொற்பூ*
அச்சுதனுக்கு என்று* அவனியாள் போத்தந்தாள்*
நச்சுமுலை உண்டாய்! தாலேலோ*
நாராயணா! அழேல் தாலேலோ
மெய் திமிரும் நானப்* பொடியொடு மஞ்சளும்*
செய்ய தடங்கண்ணுக்கு* அஞ்சனமும் சிந்துரமும்*
வெய்ய கலைப்பாகி* கொண்டு உவளாய் நின்றாள்*
ஐயா! அழேல் அழேல் தாலேலோ*
அரங்கத்து அணையானே! தாலேலோ
வஞ்சனையால் வந்த* பேய்ச்சி முலை உண்ட*
அஞ்சன வண்ணனை* ஆய்ச்சி தாலாட்டிய*
செஞ்சொல் மறையவர் சேர்* புதுவைப் பட்டன் சொல்*
எஞ்சாமை வல்லவர்க்கு* இல்லை இடர்தானே (2)
தன்முகத்துச் சுட்டி* தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்*
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப்* புழுதி அளைகின்றான்*
என்மகன் கோவிந்தன்* கூத்தினை இள மா மதீ!*
நின்முகம் கண்ணுள ஆகில்* நீ இங்கே நோக்கிப் போ (2)
என் சிறுக்குட்டன்* எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்*
தன் சிறுக்கைகளால்* காட்டிக் காட்டி அழைக்கின்றான்*
அஞ்சன வண்ணனோடு* ஆடல் ஆட உறுதியேல்*
மஞ்சில் மறையாதே* மா மதீ! மகிழ்ந்து ஓடி வா
சுற்றும் ஒளிவட்டம்* சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*
எத்தனை செய்யிலும்* என்மகன் முகம் நேரொவ்வாய்*
வித்தகன் வேங்கட வாணன்* உன்னை விளிக்கின்ற*
கைத்தலம் நோவாமே* அம்புலீ! கடிது ஓடி வா
சக்கரக் கையன்* தடங்கண்ணால் மலர விழித்து*
ஒக்கலைமேல் இருந்து* உன்னையே சுட்டிக் காட்டும் காண்*
தக்கது அறிதியேல்* சந்திரா! சலம் செய்யாதே*
மக்கட் பெறாத* மலடன் அல்லையேல் வா கண்டாய்
அழகிய வாயில்* அமுத ஊறல் தெளிவுற*
மழலை முற்றாத இளஞ்சொல்லால்* உன்னைக் கூகின்றான்*
குழகன் சிரீதரன்* கூவக் கூவ நீ போதியேல்*
புழையில ஆகாதே* நின்செவி புகர் மா மதீ!
தண்டொடு சக்கரம்* சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்*
கண் துயில்கொள்ளக் கருதிக்* கொட்டாவி கொள்கின்றான்*
உண்ட முலைப்பால் அறா கண்டாய்* உறங் காவிடில்*
விண்தனில் மன்னிய* மா மதீ! விரைந்து ஓடி வா
பாலகன் என்று* பரிபவம் செய்யேல்* பண்டு ஓர் நாள்
ஆலின் இலை வளர்ந்த* சிறுக்கன் அவன் இவன்*
மேல் எழப் பாய்ந்து* பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்*
மாலை மதியாதே* மா மதீ! மகிழ்ந்து ஓடி வா
சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை* இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை* மாவலியிடைச் சென்று கேள்*
சிறுமைப் பிழை கொள்ளில்* நீயும் உன் தேவைக்கு உரியை காண்*
நிறைமதீ! நெடுமால்* விரைந்து உன்னைக் கூகின்றான்
தாழியில் வெண்ணெய்* தடங்கை ஆர விழுங்கிய*
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய்* உன்னைக் கூகின்றான்*
ஆழிகொண்டு உன்னை எறியும்* ஐயுறவு இல்லை காண்*
வாழ உறுதியேல்* மா மதீ! மகிழ்ந்து ஓடி வா
மைத்தடங் கண்ணி* யசோதை தன்மகனுக்கு* இவை-
ஒத்தன சொல்லி* உரைத்த மாற்றம்* ஒளிபுத்தூர்-
வித்தகன் விட்டுசித்தன்* விரித்த தமிழ் இவை*
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு* இடர் இல்லையே (2)
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா * ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்*
பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!* பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே!*
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி* செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக*
ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.(2)
கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்* குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்!*
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி* மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்*
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்* கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே!*
ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!* நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்-
தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும்* தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்*
விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்* விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!*
அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள* வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே!*
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்* கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே!*
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்* என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்*
ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்* வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி* ஒருங்கு-
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை* ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!*
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்* முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய*
அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
காய மலர்நிறவா! கருமுகில் போல் உருவா!* கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே*
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா!* துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே!*
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை* அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்!*
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே
துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்* தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய*
நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய* நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே!*
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்* தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய* என்-
அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி* உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்*
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர* கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி*
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்- சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!*
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்* பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர*
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்* கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக*
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே* நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ*
ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.
செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்* சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும்* அரையிற்-
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்* பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்*
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்* மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக*
எங்கள் குடிக்கு அரசே! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.
அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்* ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று*
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு* ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப* மருங்கின் மேல்*
ஆணிப் பொன்னாற் செய்த* ஆய்பொன் உடை மணி*
பேணி பவளவாய்* முத்துஇலங்க* பண்டு-
காணி கொண்ட கைகளால் சப்பாணி*
கருங்குழற் குட்டனே! சப்பாணி. (2)
பொன் அரைநாணொடு* மாணிக்கக் கிண்கிணி*
தன் அரை ஆட* தனிச் சுட்டி தாழ்ந்து ஆட*
என் அரை மேல்நின்று இழிந்து* உங்கள் ஆயர்தம்*
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி*
மாயவனே* கொட்டாய் சப்பாணி
பல் மணி முத்து* இன்பவளம் பதித்தன்ன*
என் மணிவண்ணன்* இலங்கு பொற் தோட்டின் மேல்*
நின் மணிவாய் முத்து இலங்க* நின் அம்மைதன்*
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி*
ஆழியங் கையனே சப்பாணி
தூ நிலாமுற்றத்தே* போந்து விளையாட*
வான் நிலா அம்புலீ* சந்திரா! வா என்று*
நீ நிலா நிற் புகழாநின்ற* ஆயர்தம்*
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி*
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.
புட்டியிற் சேறும்* புழுதியும் கொண்டுவந்து*
அட்டி அமுக்கி* அகம் புக்கு அறியாமே*
சட்டித் தயிரும்* தடாவினில் வெண்ணெயும் உண்*
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி*
பற்பநாபா! கொட்டாய் சப்பாணி.
தாரித்து நூற்றுவர்* தந்தை சொற் கொள்ளாது*
போர் உய்த்து வந்து* புகுந்தவர் மண் ஆளப்*
பாரித்த மன்னர் படப்* பஞ்சவர்க்கு* அன்று-
தேர் உய்த்த கைகளால் சப்பாணி*
தேவகி சிங்கமே! சப்பாணி
பரந்திட்டு நின்ற* படுகடல் தன்னை*
இரந்திட்ட கைம்மேல்* எறிதிரை மோதக்*
கரந்திட்டு நின்ற* கடலைக் கலங்கச்*
சரந் தொட்ட கைகளால் சப்பாணி*
சார்ங்க விற்கையனே! சப்பாணி.
குரக்கு இனத்தாலே* குரைகடல் தன்னை*
நெருக்கி அணை கட்டி* நீள் நீர் இலங்கை*
அரக்கர் அவிய* அடு கணையாலே*
நெருக்கிய கைகளால் சப்பாணி*
நேமியங் கையனே! சப்பாணி.
அளந்து இட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே-
வளர்ந்திட்டு* வாள் உகிர்ச் சிங்க உருவாய்*
உளந் தொட்டு இரணியன்* ஒண்மார்வு அகலம்*
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*
பேய் முலை உண்டானே! சப்பாணி.
அடைந்திட்டு அமரர்கள்* ஆழ்கடல் தன்னை*
மிடைந்திட்டு மந்தரம்* மத்தாக நாட்டி*
வடம் சுற்றி* வாசுகி வன்கயிறு ஆகக்*
கடைந்திட்ட கைகளால் சப்பாணி*
கார்முகில் வண்ணனே! சப்பாணி
ஆட்கொள்ளத் தோன்றிய* ஆயர்தம் கோவினை*
நாட்கமழ் பூம்பொழில்* வில்லிபுத்தூர்ப் பட்டன்*
வேட்கையால் சொன்ன* சப்பாணி ஈரைந்தும்*
வேட்கையினால் சொல்லுவார்* வினை போதுமே (2)
தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்* தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய* நின்று ஊர்வது போல்*
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப* உடை மணி பறை கறங்க*
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி* தளர்நடை நடவானோ
செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்* சிறுபிறை முளைப் போல*
நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே* நளிர் வெண்பல் முளை இலக*
அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட* அனந்தசயனன்*
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடை நடவானோ
மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்* சூழ் பரிவேடமுமாய்ப்*
பின்னற் துலங்கும் அரசிலையும்* பீதகச் சிற்றாடையொடும்*
மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்* கழுத்தினிற் காறையொடும்*
தன்னிற் பொலிந்த இருடிகேசன்* தளர்நடை நடவானோ
கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்* கணகண சிரித்து உவந்து*
முன் வந்து நின்று முத்தம் தரும்* என் முகில்வண்ணன் திருமார்வன்*
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து* என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே* தளர்நடை நடவானோ
முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்* மொடுமொடு விரைந்து ஓடப்*
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்* பெயர்ந்து அடியிடுவது போல்*
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்* பலதேவன் என்னும்*
தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்* தளர்நடை நடவானோ
ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்* உள்ளடி பொறித்து அமைந்த*
இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்* இலச்சினை பட நடந்து*
பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்* பின்னையும் பெய்து பெய்து*
தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை* தளர்நடை நடவானோ
படர் பங்கைய மலர்வாய் நெகிழப்* பனி படு சிறுதுளி போல்*
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி* இற்று இற்று வீழநின்று*
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்* உடை மணி கணகணென*
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி* தளர்நடை நடவானோ
பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே* அருவிகள் பகர்ந்தனைய*
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ* அணி அல்குல் புடை பெயர*
மக்கள் உலகினிற் பெய்து அறியா* மணிக் குழவி உருவின்*
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடை நடவானோ
வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்* வேழத்தின் கருங்கன்று போல்*
தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்* சிறு புகர்பட வியர்த்து*
ஒண் போது அலர்கமலச் சிறுக்கால்* உறைத்து ஒன்றும் நோவாமே*
தண் போது கொண்ட தவிசின் மீதே* தளர்நடை நடவானோ
திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்* செங்கண்மால் கேசவன்* தன்-
திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி* திகழ்ந்து எங்கும் புடைபெயர*
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்* பெரியதோர் தீர்த்த பலம்-
தரு நீர்ச்* சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்* தளர்நடை நடவானோ
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய* அஞ்சனவண்ணன் தன்னைத்*
தாயர் மகிழ ஒன்னார் தளரத்* தளர்நடை நடந்ததனை*
வேயர் புகழ் விட்டுசித்தன்* சீரால் விரித்தன உரைக்கவல்லார்*
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்* மக்களைப் பெறுவர்களே* (2)
பொன் இயல் கிண்கிணி* சுட்டி புறங் கட்டித்*
தன் இயல் ஓசை* சலன்-சலன் என்றிட*
மின் இயல் மேகம்* விரைந்து எதிர் வந்தாற்போல்*
என் இடைக்கு ஓட்டரா அச்சோ* அச்சோ
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ (2)
செங்கமலப் பூவிற்* தேன் உண்ணும் வண்டே போல்*
பங்கிகள் வந்து* உன் பவளவாய் மொய்ப்ப*
சங்கு வில் வாள் தண்டு* சக்கரம் ஏந்திய*
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ*
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கைசெய்து*
நஞ்சு உமிழ் நாகம்* கிடந்த நற் பொய்கை புக்கு*
அஞ்சப் பணத்தின்மேல்* பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சனவண்ணனே! அச்சோ அச்சோ*
ஆயர் பெருமானே! அச்சோ அச்சோ
நாறிய சாந்தம்* நமக்கு இறை நல்கு என்னத்*
தேறி அவளும்* திருவுடம்பிற் பூச*
ஊறிய கூனினை* உள்ளே ஒடுங்க* அன்று_
ஏற உருவினாய்! அச்சோ அச்சோ*
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ
கழல் மன்னர் சூழக்* கதிர் போல் விளங்கி*
எழலுற்று மீண்டே* இருந்து உன்னை நோக்கும்*
சுழலை பெரிது உடைத்* துச்சோதனனை*
அழல விழித்தானே! அச்சோ அச்சோ*
ஆழி அங் கையனே! அச்சோ அச்சோ
போர் ஒக்கப் பண்ணி* இப் பூமிப்பொறை தீர்ப்பான்*
தேர் ஒக்க ஊர்ந்தாய்!* செழுந்தார் விசயற்காய்*
கார் ஒக்கு மேனிக்* கரும் பெருங் கண்ணனே!*
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ*
ஆயர்கள் போரேறே! அச்சோ அச்சோ
மிக்க பெரும்புகழ்* மாவலி வேள்வியிற்*
தக்கது இது அன்று என்று* தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத்* துரும்பாற் கிளறிய*
சக்கரக் கையனே! அச்சோ அச்சோ*
சங்கம் இடத்தானே! அச்சோ அச்சோ
என் இது மாயம்?* என் அப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே* கொண்டு அளவாய் என்ன*
மன்னு நமுசியை* வானிற் சுழற்றிய*
மின்னு முடியனே! அச்சோ அச்சோ*
வேங்கடவாணனே! அச்சோ அச்சோ
கண்ட கடலும்* மலையும் உலகு ஏழும்*
முண்டத்துக்கு ஆற்றா* முகில்வண்ணா ஓ! என்று*
இண்டைச் சடைமுடி* ஈசன் இரக்கொள்ள*
மண்டை நிறைத்தானே! அச்சோ அச்சோ*
மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ
துன்னிய பேரிருள்* சூழ்ந்து உலகை மூட*
மன்னிய நான்மறை* முற்றும் மறைந்திடப்*
பின் இவ் உலகினில்* பேரிருள் நீங்க* அன்று-
அன்னமது ஆனானே! அச்சோ அச்சோ*
அருமறை தந்தானே! அச்சோ அச்சோ
நச்சுவார் முன் நிற்கும்* நாராயணன் தன்னை*
அச்சோ வருக என்று* ஆய்ச்சி உரைத்தன*
மச்சு அணி மாடப்* புதுவைக்கோன் பட்டன் சொல்*
நிச்சலும் பாடுவார்* நீள் விசும்பு ஆள்வரே (2)
வட்டு நடுவே* வளர்கின்ற* மாணிக்க-
மொட்டு நுனையில்* முளைக்கின்ற முத்தே போல்*
சொட்டுச் சொட்டு என்னத்* துளிக்கத் துளிக்க* என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்* (2)
கிண்கிணி கட்டிக்* கிறி கட்டிக் கையினிற்*
கங்கணம் இட்டுக்* கழுத்திற் தொடர் கட்டித்*
தன் கணத்தாலே* சதிரா நடந்து வந்து*
என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்* எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்
கத்தக் கதித்துக்* கிடந்த பெருஞ்செல்வம்*
ஒத்துப் பொருந்திக்கொண்டு* உண்ணாது மண் ஆள்வான்*
கொத்துத் தலைவன்* குடிகெடத் தோன்றிய*
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்* ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்
நாந்தகம் ஏந்திய* நம்பி சரண் என்று*
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி* தரணியில்*
வேந்தர்கள் உட்க* விசயன் மணித் திண்தேர்*
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்
வெண்கலப் பத்திரம் கட்டி* விளையாடிக்*
கண் பல பெய்த* கருந்தழைக் காவின் கீழ்ப்*
பண் பல பாடிப்* பல்லாண்டு இசைப்ப* பண்டு-
மண் பல கொண்டான் புறம்புல்குவான்* வாமனன் என்னைப் புறம்புல்குவான்
சத்திரம் ஏந்தித்* தனி ஒரு மாணியாய்*
உத்தர வேதியில்* நின்ற ஒருவனைக்*
கத்திரியர் காணக்* காணி முற்றும் கொண்ட*
பத்திராகாரன் புறம்புல்குவான்* பார் அளந்தான் என் புறம்புல்குவான்
பொத்த உரலைக் கவிழ்த்து* அதன்மேல் ஏறி*
தித்தித்த பாலும்* தடாவினில் வெண்ணெயும்*
மெத்தத் திருவயிறு* ஆர விழுங்கிய*
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்* ஆழியான் என்னைப் புறம்புல்குவான்
மூத்தவை காண* முது மணற்குன்று ஏறிக்*
கூத்து உவந்து ஆடிக்* குழலால் இசை பாடி*
வாய்த்த மறையோர் வணங்க* இமையவர்-
ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்* எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்
கற்பகக் காவு* கருதிய காதலிக்கு*
இப்பொழுது ஈவன் என்று* இந்திரன் காவினில்*
நிற்பன செய்து* நிலாத் திகழ் முற்றத்துள்*
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்* உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்
ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்* புறம்புல்கிய*
வேய்த் தடந்தோளி சொல்* விட்டுசித்தன் மகிழ்ந்து*
ஈத்த தமிழ் இவை* ஈரைந்தும் வல்லவர்*
வாய்த்த நன்மக்களைப் பெற்று* மகிழ்வரே (2)