பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    வாக்குத் தூய்மை இலாமையினாலே*  மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்* 
    நாக்கு நின்னைஅல்லால் அறியாது*  நான் அதஞ்சுவன் என் வசமன்று*

    மூர்க்குப் பேசுகின்றான் இவன்என்று*  முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்* 
    காக்கை வாயிலும் கட்டுரைகொள்வர்*  காரணா! கருளக் கொடியானே!  (2)


    சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்*   சங்கு சக்கரம் ஏந்துகையானே!* 
    பிழைப்பர் ஆகிலும் தம்அடியார் சொல்*  பொறுப்பது பெரியோர் கடன்அன்றே*

    விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்*  வேறுஒருவரோடு என் மனம் பற்றாது* 
    உழைக்குஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய்*  ஊழியேழுலகு உண்டுமிழ்ந்தானே!


    நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்*  நாரணா! என்னும் இத்தனைஅல்லால்* 
    புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்*  புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*

    உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்*  ஓவாதே நமோநாரணா! என்பன்* 
    வன்மைஆவது உன் கோயிலில்வாழும்*  வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே.


    நெடுமையால் உலகேழும் அளந்தாய்!*  நின்மலா! நெடியாய்! அடியேனைக்* 
    குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா*  கூறைசோறு இவை வேண்டுவதில்லை*

    அடிமைஎன்னும் அக்கோயின்மையாலே*  அங்கங்கே அவைபோதரும் கண்டாய்* 
    கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை*  கோத்தவன் தளைகோள் விடுத்தானே!


    தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை*  துடவையும் கிணறும் இவைஎல்லாம்* 
    வாட்டம்இன்றி உன்பொன்னடிக் கீழே*  வளைப்புஅகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*

    நாட்டு மானிடத்தோடு எனக்குஅரிது*  நச்சுவார் பலர் கேழலொன்றாகி* 
    கோட்டுமண்கொண்ட கொள்கையினானே!*  குஞ்சரம் விழக் கொம்புஒசித்தானே!


    கண்ணா! நான்முகனைப் படைத்தானே!*  காரணா! கரியாய்! அடியேன் நான்* 
    உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை*  ஓவாதே நமோ நாரணா என்று*

    எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம*  வேத நாள்மலர் கொண்டு உன பாதம்- 
    நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்*  அன்று எனக்கு அவை பட்டினி நாளே.


    வெள்ளை வெள்ளத்தின்மேல் ஒருபாம்பை*  மெத்தையாக விரித்து*  அதன்மேலே- 
    கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்*  காணலாங்கொல் என்றுஆசையினாலே*

    உள்ளம்சோர உகந்துஎதிர்விம்மி*  உரோமகூபங்களாய்க்*  கண்ணநீர்கள்- 
    துள்ளம்சோரத் துயில்அணை கொள்ளேன்*  சொல்லாய்யான் உன்னைத் தத்துறுமாறே.


    வண்ணமால் வரையே குடையாக*  மாரிகாத்தவனே! மதுசூதா!* 
    கண்ணனே! கரிகோள்விடுத்தானே!*  காரணா! களிறுஅட்டபிரானே!*

    எண்ணுவார் இடரைக் களைவானே!*  ஏத்தரும் பெருங்கீர்த்தியினானே!* 
    நண்ணிநான் உன்னை நாள்தொறும் ஏத்தும்*  நன்மையே அருள்செய் எம்பிரானே!  


    நம்பனே! நவின்றுஏத்த வல்லார்கள்*  நாதனே! நரசிங்கமது ஆனாய்!* 
    உம்பர்கோன் உலகுஏழும் அளந்தாய்*  ஊழிஆயினாய்! ஆழிமுன்ஏந்திக்*

    கம்பமா கரிகோள் விடுத்தானே!*  காரணா! கடலைக்கடைந்தானே!* 
    எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!*  ஏழையேன் இடரைக் களையாயே.


    காமர் தாதை கருதலர்சிங்கம்*  காண இனிய கருங்குழற் குட்டன்* 
    வாமனன் என்மரகத வண்ணன்*  மாதவன் மதுசூதனன் தன்னைச்*

    சேமநன்குஅமரும் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்* 
    நாமம்என்று நவின்றுஉரைப்பார்கள்*  நண்ணுவார் ஒல்லை நாரணன்உலகே.


    நெய்க்குடத்தைப்பற்றி*  ஏறும்எறும்புகள்போல் நிரந்து*  எங்கும்- 
    கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!*  காலம்பெற உய்யப்போமின்*

    மெய்க்கொண்டு வந்துபுகுந்து*  வேதப்பிரானார் கிடந்தார்* 
    பைக்கொண்ட பாம்புஅணையோடும்*  பண்டுஅன்று பட்டினம்காப்பே.  (2)


    சித்திரகுத்தன் எழுத்தால்*  தென்புலக்கோன் பொறிஒற்றி* 
    வைத்த இலச்சினை மாற்றித்*  தூதுவர் ஓடிஒளித்தார்*

    முத்துத் திரைக்கடற்சேர்ப்பன்*  மூதறிவாளர் முதல்வன்* 
    பத்தர்க்கு அமுதன்அடியேன்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே.


    வயிற்றில் தொழுவைப்பிரித்து*   வன்புலச் சேவைஅதக்கிக்* 
    கயிற்றும் அக்குஆணி கழித்துக்*   காலிடைப் பாசம்கழற்றி*

    எயிற்றிடை மண்கொண்ட எந்தை*   இராப்பகல் ஓதுவித்து*  என்னைப்- 
    பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்*   பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    மங்கிய வல்வினை நோய்காள்!*  உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்* 
    இங்குப் புகேன்மின் புகேன்மின்*  எளிது அன்று கண்டீர் புகேன்மின்*

    சிங்கப் பிரான் அவன் எம்மான்*  சேரும் திருக்கோயில் கண்டீர்* 
    பங்கப்படாது உய்யப் போமின்*  பண்டு அன்று பட்டினம் காப்பே.


    மாணிக் குறளுருவாய்*  மாயனை என்மனத்துள்ளே* 
    பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்*  பிறிதுஇன்றி*

    மாணிக்கப் பண்டாரம்கண்டீர்*  வலிவன்குறும்பர்கள்உள்ளீர்!* 
    பாணிக்க வேண்டாநடமின்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    உற்றஉறு  பிணிநோய்காள்!*  உமக்கு ஒன்றுசொல்லுகேன் கேண்மின்* 
    பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்*  பேணும் திருக்கோயில்கண்டீர்*

    அற்றம்உரைக்கின்றேன்*  இன்னம் ஆழ்வினைகாள்!*  உமக்குஇங்குஓர்-
    பற்றில்லை கண்டீர்நடமின்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    கொங்கைச் சிறுவரைஎன்னும்*  பொதும்பினில் வீழ்ந்துவழுக்கி* 
    அங்குஓர் முழையினில்புக்கிட்டு*  அழுந்திக் கிடந்துஉழல்வேனை*

    வங்கக் கடல்வண்ணன் அம்மான்*  வல்வினைஆயின மாற்றி* 
    பங்கப்படாவண்ணம் செய்தான்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே.


    ஏதங்கள் ஆயினஎல்லாம்*  இறங்கல்இடுவித்து*  என்னுள்ளே- 
    பீதகவாடைப்பிரனார்*  பிரமகுருவாகிவந்து*

    போதில்கமல வன்நெஞ்சம்*  புகுந்து என்சென்னித்திடரில்* 
    பாத இலச்சினை வைத்தார்*  பண்டன்றுபட்டினம்காப்பே. 


    உறகல் உறகல் உறகல்*  ஒண்சுடராழியே! சங்கே!* 
    அறவெறி நாந்தகவாளே!*  அழகியசார்ங்கமே! தண்டே!*

    இறவுபடாமல்இருந்த*  எண்மர் உலோகபாலீர்காள்!* 
    பறவைஅரையா! உறகல்*  பள்ளியறைக்குறிக் கொண்மின் (2)


    அரவத்து அமளியினோடும்*  அழகிய பாற்கடலோடும்* 
    அரவிந்தப் பாவையும்தானும்*  அகம்படி வந்துபுகுந்து*

    பரவைத் திரைபலமோதப்*  பள்ளி கொள்கின்றபிரானைப்* 
    பரவுகின்றான் விட்டுசித்தன்*  பட்டினம்காவற்பொருட்டே. (2) 


    துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த*  வலையை அறப்பறித்துப்* 
    புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்*  இனிப்போக விடுவதுண்டே?* 

    மக்கள் அறுவரைக் கல்லிடைமோத*  இழந்தவள் தன்வயிற்றில்* 
    சிக்கென வந்து பிறந்து நின்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)


    வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்*  உன்தன் இந்திரஞாலங்களால்* 
    ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்*  நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*

    அளித்தெங்கும் நாடும்நகரமும்*  தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று* 
    தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்,*  இனிப்போய்ஒருவன்- 
    தனக்குப்பணிந்து*  கடைத்தலைநிற்கை*  நின்சாயையழிவுகண்டாய்*

    புனத்தினைக் கிள்ளிப்புதுவவி காட்டி*  உன்பொன்னடிவாழ்கவென்று* 
    இனத்துக்குறவர் புதியதுண்ணும்*  எழில்மாலிருஞ்சோலை எந்தாய்! (2)


    காதம்பலவும் திரிந்து உழன்றேற்கு*  அங்கோர்நிழலில்லை நீருமில்லை*  உன்- 
    பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம்*  நான்எங்கும்காண்கின்றிலேன்* 

    தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய்*  அங்கோர்பொய்ச்சுற்றம்பேசிச்சென்று* 
    பேதஞ்செய்து எங்கும் பிணம்படைத்தாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    காலுமெழா கண்ணநீரும் நில்லா*  உடல்சோர்ந்து நடுங்கி*  குரல்- 
    மேலுமெழா மயிர்க்கூச்சுமறா*  எனதோள்களும் வீழ்வொழியா*

    மாலுகளாநிற்கும் என்மனனே!*  உன்னை வாழத்தலைப்பெய்திட்டேன்* 
    சேலுகளாநிற்கும் நீள்சுனைசூழ்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    எருத்துக் கொடியுடையானும்*  பிரமனும் இந்திரனும்*  மற்றும்- 
    ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு*  மருந்து அறிவாருமில்லை*

    மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்- 
    திருத்தி*  உன்கோயில் கடைப்புகப்பெய்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி*  உன்பேரருளால்* 
    இக்கரையேறி இளைத்திருந்தேனை*  அஞ்சேலென்று கைகவியாய்*

    சக்கரமும் தடக்கைகளும்*  கண்களும் பீதகவாடையொடும்* 
    செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    எத்தனைகாலமும் எத்தனையூழியும்*  இன்றொடுநாளையென்றே* 
    இத்தனைகாலமும் போய்க்கிறிப்பட்டேன்*  இனிஉன்னைப்போகலொட்டேன்* 

    மைத்துனன்மார்களைவாழ்வித்து*  மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்!* 
    சித்தம் நின்பாலதறிதியன்றே*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    அன்று வயிற்றில் கிடந்திருந்தே*  அடிமைசெய்யலுற்றிருப்பன்* 
    இன்றுவந்துஇங்கு உன்னைக்கண்டுகொண்டேன்*  இனிப்போகவிடுவதுண்டே?* 

    சென்றங்குவாணனை ஆயிரந்தோளும்*  திருச்சக்கரமதனால்* 
    தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்*  திருமாலிருஞ்சோலை தன்னுள்- 
    நின்றபிரான்*  அடிமேல் அடிமைத்திறம்*  நேர்படவிண்ணப்பஞ்செய்* 

    பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்*  புதுவைக்கோன்விட்டுசித்தன்* 
    ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்*  உலகமளந்தான்தமரே. (2)


    சென்னியோங்கு*  தண்திருவேங்கடமுடையாய்!*  உலகு- 
    தன்னை வாழநின்ற நம்பீ!*  தாமோதரா! சதிரா!* 

    என்னையும் என்னுடைமையையும்*  உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு* 
    நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)


    பறவையேறு பரமபுருடா!*  நீஎன்னைக் கைக்கொண்டபின்* 
    பிறவியென்னும் கடலும்வற்றிப்*  பெரும்பதம் ஆகின்றதால்* 

    இறவு செய்யும் பாவக்காடு*  தீக்கொளீஇவேகின்றதால்* 
    அறிவையென்னும் அமுதவாறு*  தலைப்பற்றி வாய்க்கொண்டதே.


    எம்மனா! என்குலதெய்வமே!*  என்னுடைய நாயகனே!* 
    நின்னுளேனாய்ப் பெற்றநன்மை*  இவ்வுலகினில் ஆர்பெறுவார்? 

    நம்மன்போலே வீழ்த்தமுக்கும்*  நாட்டிலுள்ளபாவமெல்லாம் 
    சும்மெனாதே கைவிட்டோடித்*  தூறுகள்பாய்ந்தனவே.


    கடல்கடைந்து அமுதம்கொண்டு *  கலசத்தைநிறைத்தாற்போல்* 
    உடலுருகிவாய்திறந்து*  மடுத்து உன்னைநிறைத்துக்கொண்டேன்* 

    கொடுமை செய்யும்கூற்றமும்*  என்கோலாடிகுறுகப்பெறா* 
    தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே!


    பொன்னைக்கொண்டு உரைகல்மீதே*  நிறமெழவுரைத்தாற்போல்* 
    உன்னைக்கொண்டு என்நாவகம்பால்*  மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்*

    உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்*  என்னையும்உன்னிலிட்டேன்* 
    என்னப்பா! என்னிருடீகேசா!*  என்னுயிர்க்காவலனே!


    உன்னுடைய விக்கிரமம்*  ஒன்றோழியாமல் எல்லாம்* 
    என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்* 

    மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட*  இராமநம்பீ!* 
    என்னிடைவந்து எம்பெருமான்!*  இனியெங்குப்போகின்றதே? 


    பருப்பதத்துக் கயல்பொறித்த*  பாண்டியர்குலபதிபோல்* 
    திருப்பொலிந்தசேவடி*  என் சென்னியின் மேல் பொறித்தாய்* 

    மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே* 
    உருப்பொலிந்தநாவினேனை*  உனக்கு உரித்தாக்கினையே. (2)


    அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து*  என்- 
    மனந்தனுள்ளே வந்துவைகி*  வாழச்செய்தாய்எம்பிரான்!* 

    நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்*  கண்கள் அசும்பொழுக* 
    நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்*  நேமி நெடியவனே!


    பனிக்கடலில் பள்ளிகோளைப்*  பழகவிட்டு ஓடிவந்துஎன்- 
    மனக்கடலில் வாழவல்ல*  மாயமணாளநம்பீ!*

    தனிக்கடலே!  தனிச்சுடரே!*  தனியுலகே என்றென்று* 
    உனக்கிடமாய்யிருக்க*  என்னை உனக்கு உரித்தாக்கினையே. 


    தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்*  தவள நெடுங்கொடிபோல்* 
    சுடரொளியாய் நெஞ்சினுள்ளே*  தோன்றும்என்சோதிநம்பீ!*

    வடதடமும் வைகுந்தமும்*  மதிள்துவராபதியும்* 
    இடவகைகள் இகழ்ந்திட்டு*  என்பால் இடவகைகொண்டனையே. (2)


    வேயர் தங்கள் குலத்துதித்த*  விட்டுசித்தன் மனத்தே* 
    கோயில்கொண்ட கோவலனைக்*  கொழுங்குளிர் முகில்வண்ணனை* 

    ஆயரேற்றை அமரர்கோவை*  அந்தணர்தம் அமுதத்தினை* 
    சாயைபோலப் பாடவல்லார்*  தாமும் அணுக்கர்களே. (2)