பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
வாக்குத் தூய்மை இலாமையினாலே* மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்*
நாக்கு நின்னைஅல்லால் அறியாது* நான் அதஞ்சுவன் என் வசமன்று*
மூர்க்குப் பேசுகின்றான் இவன்என்று* முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்*
காக்கை வாயிலும் கட்டுரைகொள்வர்* காரணா! கருளக் கொடியானே! (2)
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்* சங்கு சக்கரம் ஏந்துகையானே!*
பிழைப்பர் ஆகிலும் தம்அடியார் சொல்* பொறுப்பது பெரியோர் கடன்அன்றே*
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்* வேறுஒருவரோடு என் மனம் பற்றாது*
உழைக்குஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய்* ஊழியேழுலகு உண்டுமிழ்ந்தானே!
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்* நாரணா! என்னும் இத்தனைஅல்லால்*
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்* புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்* ஓவாதே நமோநாரணா! என்பன்*
வன்மைஆவது உன் கோயிலில்வாழும்* வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே.
நெடுமையால் உலகேழும் அளந்தாய்!* நின்மலா! நெடியாய்! அடியேனைக்*
குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா* கூறைசோறு இவை வேண்டுவதில்லை*
அடிமைஎன்னும் அக்கோயின்மையாலே* அங்கங்கே அவைபோதரும் கண்டாய்*
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை* கோத்தவன் தளைகோள் விடுத்தானே!
தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை* துடவையும் கிணறும் இவைஎல்லாம்*
வாட்டம்இன்றி உன்பொன்னடிக் கீழே* வளைப்புஅகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*
நாட்டு மானிடத்தோடு எனக்குஅரிது* நச்சுவார் பலர் கேழலொன்றாகி*
கோட்டுமண்கொண்ட கொள்கையினானே!* குஞ்சரம் விழக் கொம்புஒசித்தானே!
கண்ணா! நான்முகனைப் படைத்தானே!* காரணா! கரியாய்! அடியேன் நான்*
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை* ஓவாதே நமோ நாரணா என்று*
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம* வேத நாள்மலர் கொண்டு உன பாதம்-
நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்* அன்று எனக்கு அவை பட்டினி நாளே.
வெள்ளை வெள்ளத்தின்மேல் ஒருபாம்பை* மெத்தையாக விரித்து* அதன்மேலே-
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்* காணலாங்கொல் என்றுஆசையினாலே*
உள்ளம்சோர உகந்துஎதிர்விம்மி* உரோமகூபங்களாய்க்* கண்ணநீர்கள்-
துள்ளம்சோரத் துயில்அணை கொள்ளேன்* சொல்லாய்யான் உன்னைத் தத்துறுமாறே.
வண்ணமால் வரையே குடையாக* மாரிகாத்தவனே! மதுசூதா!*
கண்ணனே! கரிகோள்விடுத்தானே!* காரணா! களிறுஅட்டபிரானே!*
எண்ணுவார் இடரைக் களைவானே!* ஏத்தரும் பெருங்கீர்த்தியினானே!*
நண்ணிநான் உன்னை நாள்தொறும் ஏத்தும்* நன்மையே அருள்செய் எம்பிரானே!
நம்பனே! நவின்றுஏத்த வல்லார்கள்* நாதனே! நரசிங்கமது ஆனாய்!*
உம்பர்கோன் உலகுஏழும் அளந்தாய்* ஊழிஆயினாய்! ஆழிமுன்ஏந்திக்*
கம்பமா கரிகோள் விடுத்தானே!* காரணா! கடலைக்கடைந்தானே!*
எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே.
காமர் தாதை கருதலர்சிங்கம்* காண இனிய கருங்குழற் குட்டன்*
வாமனன் என்மரகத வண்ணன்* மாதவன் மதுசூதனன் தன்னைச்*
சேமநன்குஅமரும் புதுவையர்கோன்* விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்*
நாமம்என்று நவின்றுஉரைப்பார்கள்* நண்ணுவார் ஒல்லை நாரணன்உலகே.
நெய்க்குடத்தைப்பற்றி* ஏறும்எறும்புகள்போல் நிரந்து* எங்கும்-
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!* காலம்பெற உய்யப்போமின்*
மெய்க்கொண்டு வந்துபுகுந்து* வேதப்பிரானார் கிடந்தார்*
பைக்கொண்ட பாம்புஅணையோடும்* பண்டுஅன்று பட்டினம்காப்பே. (2)
சித்திரகுத்தன் எழுத்தால்* தென்புலக்கோன் பொறிஒற்றி*
வைத்த இலச்சினை மாற்றித்* தூதுவர் ஓடிஒளித்தார்*
முத்துத் திரைக்கடற்சேர்ப்பன்* மூதறிவாளர் முதல்வன்*
பத்தர்க்கு அமுதன்அடியேன்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
வயிற்றில் தொழுவைப்பிரித்து* வன்புலச் சேவைஅதக்கிக்*
கயிற்றும் அக்குஆணி கழித்துக்* காலிடைப் பாசம்கழற்றி*
எயிற்றிடை மண்கொண்ட எந்தை* இராப்பகல் ஓதுவித்து* என்னைப்-
பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
மங்கிய வல்வினை நோய்காள்!* உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்*
இங்குப் புகேன்மின் புகேன்மின்* எளிது அன்று கண்டீர் புகேன்மின்*
சிங்கப் பிரான் அவன் எம்மான்* சேரும் திருக்கோயில் கண்டீர்*
பங்கப்படாது உய்யப் போமின்* பண்டு அன்று பட்டினம் காப்பே.
மாணிக் குறளுருவாய்* மாயனை என்மனத்துள்ளே*
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்* பிறிதுஇன்றி*
மாணிக்கப் பண்டாரம்கண்டீர்* வலிவன்குறும்பர்கள்உள்ளீர்!*
பாணிக்க வேண்டாநடமின்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
உற்றஉறு பிணிநோய்காள்!* உமக்கு ஒன்றுசொல்லுகேன் கேண்மின்*
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்* பேணும் திருக்கோயில்கண்டீர்*
அற்றம்உரைக்கின்றேன்* இன்னம் ஆழ்வினைகாள்!* உமக்குஇங்குஓர்-
பற்றில்லை கண்டீர்நடமின்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
கொங்கைச் சிறுவரைஎன்னும்* பொதும்பினில் வீழ்ந்துவழுக்கி*
அங்குஓர் முழையினில்புக்கிட்டு* அழுந்திக் கிடந்துஉழல்வேனை*
வங்கக் கடல்வண்ணன் அம்மான்* வல்வினைஆயின மாற்றி*
பங்கப்படாவண்ணம் செய்தான்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
ஏதங்கள் ஆயினஎல்லாம்* இறங்கல்இடுவித்து* என்னுள்ளே-
பீதகவாடைப்பிரனார்* பிரமகுருவாகிவந்து*
போதில்கமல வன்நெஞ்சம்* புகுந்து என்சென்னித்திடரில்*
பாத இலச்சினை வைத்தார்* பண்டன்றுபட்டினம்காப்பே.
உறகல் உறகல் உறகல்* ஒண்சுடராழியே! சங்கே!*
அறவெறி நாந்தகவாளே!* அழகியசார்ங்கமே! தண்டே!*
இறவுபடாமல்இருந்த* எண்மர் உலோகபாலீர்காள்!*
பறவைஅரையா! உறகல்* பள்ளியறைக்குறிக் கொண்மின் (2)
அரவத்து அமளியினோடும்* அழகிய பாற்கடலோடும்*
அரவிந்தப் பாவையும்தானும்* அகம்படி வந்துபுகுந்து*
பரவைத் திரைபலமோதப்* பள்ளி கொள்கின்றபிரானைப்*
பரவுகின்றான் விட்டுசித்தன்* பட்டினம்காவற்பொருட்டே. (2)
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த* வலையை அறப்பறித்துப்*
புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்* இனிப்போக விடுவதுண்டே?*
மக்கள் அறுவரைக் கல்லிடைமோத* இழந்தவள் தன்வயிற்றில்*
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)
வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்* உன்தன் இந்திரஞாலங்களால்*
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்* நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*
அளித்தெங்கும் நாடும்நகரமும்* தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று*
தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்,* இனிப்போய்ஒருவன்-
தனக்குப்பணிந்து* கடைத்தலைநிற்கை* நின்சாயையழிவுகண்டாய்*
புனத்தினைக் கிள்ளிப்புதுவவி காட்டி* உன்பொன்னடிவாழ்கவென்று*
இனத்துக்குறவர் புதியதுண்ணும்* எழில்மாலிருஞ்சோலை எந்தாய்! (2)
காதம்பலவும் திரிந்து உழன்றேற்கு* அங்கோர்நிழலில்லை நீருமில்லை* உன்-
பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம்* நான்எங்கும்காண்கின்றிலேன்*
தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய்* அங்கோர்பொய்ச்சுற்றம்பேசிச்சென்று*
பேதஞ்செய்து எங்கும் பிணம்படைத்தாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
காலுமெழா கண்ணநீரும் நில்லா* உடல்சோர்ந்து நடுங்கி* குரல்-
மேலுமெழா மயிர்க்கூச்சுமறா* எனதோள்களும் வீழ்வொழியா*
மாலுகளாநிற்கும் என்மனனே!* உன்னை வாழத்தலைப்பெய்திட்டேன்*
சேலுகளாநிற்கும் நீள்சுனைசூழ்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எருத்துக் கொடியுடையானும்* பிரமனும் இந்திரனும்* மற்றும்-
ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு* மருந்து அறிவாருமில்லை*
மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்-
திருத்தி* உன்கோயில் கடைப்புகப்பெய்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி* உன்பேரருளால்*
இக்கரையேறி இளைத்திருந்தேனை* அஞ்சேலென்று கைகவியாய்*
சக்கரமும் தடக்கைகளும்* கண்களும் பீதகவாடையொடும்*
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எத்தனைகாலமும் எத்தனையூழியும்* இன்றொடுநாளையென்றே*
இத்தனைகாலமும் போய்க்கிறிப்பட்டேன்* இனிஉன்னைப்போகலொட்டேன்*
மைத்துனன்மார்களைவாழ்வித்து* மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்!*
சித்தம் நின்பாலதறிதியன்றே* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
அன்று வயிற்றில் கிடந்திருந்தே* அடிமைசெய்யலுற்றிருப்பன்*
இன்றுவந்துஇங்கு உன்னைக்கண்டுகொண்டேன்* இனிப்போகவிடுவதுண்டே?*
சென்றங்குவாணனை ஆயிரந்தோளும்* திருச்சக்கரமதனால்*
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்* திருமாலிருஞ்சோலை தன்னுள்-
நின்றபிரான்* அடிமேல் அடிமைத்திறம்* நேர்படவிண்ணப்பஞ்செய்*
பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்* புதுவைக்கோன்விட்டுசித்தன்*
ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்* உலகமளந்தான்தமரே. (2)
சென்னியோங்கு* தண்திருவேங்கடமுடையாய்!* உலகு-
தன்னை வாழநின்ற நம்பீ!* தாமோதரா! சதிரா!*
என்னையும் என்னுடைமையையும்* உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு*
நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)
பறவையேறு பரமபுருடா!* நீஎன்னைக் கைக்கொண்டபின்*
பிறவியென்னும் கடலும்வற்றிப்* பெரும்பதம் ஆகின்றதால்*
இறவு செய்யும் பாவக்காடு* தீக்கொளீஇவேகின்றதால்*
அறிவையென்னும் அமுதவாறு* தலைப்பற்றி வாய்க்கொண்டதே.
எம்மனா! என்குலதெய்வமே!* என்னுடைய நாயகனே!*
நின்னுளேனாய்ப் பெற்றநன்மை* இவ்வுலகினில் ஆர்பெறுவார்?
நம்மன்போலே வீழ்த்தமுக்கும்* நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதே கைவிட்டோடித்* தூறுகள்பாய்ந்தனவே.
கடல்கடைந்து அமுதம்கொண்டு * கலசத்தைநிறைத்தாற்போல்*
உடலுருகிவாய்திறந்து* மடுத்து உன்னைநிறைத்துக்கொண்டேன்*
கொடுமை செய்யும்கூற்றமும்* என்கோலாடிகுறுகப்பெறா*
தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே!
பொன்னைக்கொண்டு உரைகல்மீதே* நிறமெழவுரைத்தாற்போல்*
உன்னைக்கொண்டு என்நாவகம்பால்* மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்*
உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்* என்னையும்உன்னிலிட்டேன்*
என்னப்பா! என்னிருடீகேசா!* என்னுயிர்க்காவலனே!
உன்னுடைய விக்கிரமம்* ஒன்றோழியாமல் எல்லாம்*
என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்*
மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட* இராமநம்பீ!*
என்னிடைவந்து எம்பெருமான்!* இனியெங்குப்போகின்றதே?
பருப்பதத்துக் கயல்பொறித்த* பாண்டியர்குலபதிபோல்*
திருப்பொலிந்தசேவடி* என் சென்னியின் மேல் பொறித்தாய்*
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே*
உருப்பொலிந்தநாவினேனை* உனக்கு உரித்தாக்கினையே. (2)
அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து* என்-
மனந்தனுள்ளே வந்துவைகி* வாழச்செய்தாய்எம்பிரான்!*
நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்* கண்கள் அசும்பொழுக*
நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்* நேமி நெடியவனே!
பனிக்கடலில் பள்ளிகோளைப்* பழகவிட்டு ஓடிவந்துஎன்-
மனக்கடலில் வாழவல்ல* மாயமணாளநம்பீ!*
தனிக்கடலே! தனிச்சுடரே!* தனியுலகே என்றென்று*
உனக்கிடமாய்யிருக்க* என்னை உனக்கு உரித்தாக்கினையே.
தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்* தவள நெடுங்கொடிபோல்*
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே* தோன்றும்என்சோதிநம்பீ!*
வடதடமும் வைகுந்தமும்* மதிள்துவராபதியும்*
இடவகைகள் இகழ்ந்திட்டு* என்பால் இடவகைகொண்டனையே. (2)
வேயர் தங்கள் குலத்துதித்த* விட்டுசித்தன் மனத்தே*
கோயில்கொண்ட கோவலனைக்* கொழுங்குளிர் முகில்வண்ணனை*
ஆயரேற்றை அமரர்கோவை* அந்தணர்தம் அமுதத்தினை*
சாயைபோலப் பாடவல்லார்* தாமும் அணுக்கர்களே. (2)