பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
கதிர் ஆயிரம் இரவி* கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்*
எதிர் இல் பெருமை இராமனை* இருக்கும் இடம் நாடுதிரேல்*
அதிரும் கழற் பொரு தோள்* இரணியன் ஆகம் பிளந்து* அரியாய்-
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை* உள்ளவா கண்டார் உளர் (2)
நாந்தகம்சங்குதண்டு* நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்*
ஏந்துபெருமை இராமனை* இருக்குமிடம் நாடுதிரேல்*
காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக்* கடுஞ்சிலை சென்றிறுக்க*
வேந்தர்தலைவன் சனகராசன்தன்* வேள்வியில் கண்டாருளர்.
கொலையானைக் கொம்பு பறித்துக்* கூடலர் சேனை பொருது அழியச்*
சிலையால் மராமரம் எய்த தேவனைச்* சிக்கென நாடுதிரேல்*
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று* தடவரை கொண்டு அடைப்ப*
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை* அங்குத்தைக் கண்டார் உளர்
தோயம்பரந்த நடுவுசூழலில்* தொல்லை வடிவுகொண்ட*
மாயக்குழவியதனை நாடுறில்* வம்மின்சுவடுஉரைக்கேன்*
ஆயர்மடமகள் பின்னைக்காகி* அடல்விடைஏழினையும்*
வீயப்பொருது வியர்த்துநின்றானை* மெய்ம்மையேகண்டார்உளர்.
நீரேறுசெஞ்சடை நீலகண்டனும்* நான்முகனும் முறையால்*
சீரேறுவாசகஞ்செய்யநின்ற* திருமாலைநாடுதிரேல்*
வாரேறுகொங்கை உருப்பிணியை* வலியப்பிடித்துக்கொண்டு-
தேரேற்றிச் சேனைநடுவு போர்செய்யச்* சிக்கெனக்கண்டார்உளர்.
பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்* புணர்முலைவாய்மடுக்க-
வல்லானை* மாமணிவண்ணனை* மருவும்இடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு* பௌவம்எறிதுவரை*
எல்லாரும் சூழச்சிங்காசனத்தே* இருந்தானைக்கண்டாருளர்.
வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம்* ஏந்துகையன்*
உள்ளவிடம்வினவில்* உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்*
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித்* தேர்மிசைமுன்புநின்று*
கள்ளப்படைத்துணையாகிப்* பாரதம்கைசெய்யக்கண்டார்உளர்.
நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற* அரசர்கள்தம்முகப்பே*
நாழிகைபோகப்படைபொருதவன்* தேவகிதன்சிறுவன்*
ஆழிகொண்டு அன்றுஇரவிமறைப்பச்* சயத்திரதனதலையை*
பாழிலுருளப்படைபொருதவன்* பக்கமேகண்டார்உளர்.
மண்ணும்மலையும்மறிகடல்களும்* மற்றும்யாவும்எல்லாம்*
திண்ணம்விழுங்கிஉமிழ்ந்ததேவனைச்* சிக்கெனநாடுதிரேல்*
எண்ணற்கரியதோரேனமாகி* இருநிலம்புக்கிடந்து*
வண்ணக்கருங்குழல்மாதரோடு* மணந்தானைக்கண்டாருளர்
கரியமுகில்புரைமேனிமாயனைக்* கண்டசுவடுஉரைத்துப்*
புரவிமுகம்செய்துசெந்நெல்ஓங்கி* விளைகழனிப்புதுவைத்*
திருவிற்பொலிமறைவாணன்* பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்*
பரவும்மனமுடைப்பத்தருள்ளார்* பரமனடிசேர்வர்களே (2)
அலம்பாவெருட்டாக்* கொன்றுதிரியும் அரக்கரை*
குலம்பாழ்படுத்துக்* குலவிளக்காய் நின்றகோன்மலை*
சிலம்பார்க்கவந்து* தெய்வமகளிர்களாடும்சீர்*
சிலம்பாறுபாயும்* தென்திருமாலிருஞ்சோலையே. (2)
வல்லாளன்தோளும்* வாளரக்கன்முடியும்* தங்கை-
பொல்லாதமூக்கும்* போக்குவித்தான்பொருந்தும்மலை*
எல்லாஇடத்திலும்* எங்கும்பரந்து பல்லாண்டுஒலி-
செல்லாநிற்கும் சீர்த்* தென்திருமாலிருஞ்சோலையே.
தக்கார்மிக்கார்களைச்* சஞ்சலம்செய்யும்சலவரை*
தெக்காநெறியே போக்குவிக்கும்* செல்வன்பொன்மலை*
எக்காலமும்சென்று* சேவித்திருக்கும் அடியரை*
அக்கான்நெறியைமாற்றும்* தண் மாலிருஞ்சோலையே.
ஆனாயர்கூடி* அமைத்தவிழவை* அமரர்தம்-
கோனார்க்கொழியக்* கோவர்த்தனத்துச்செய்தான்மலை*
வான்நாட்டினின்று* மாமலர்க்கற்பகத்தொத்துஇழி*
தேனாறுபாயும்* தென்திருமாலிருஞ்சோலையே.
ஒருவாரணம் பணிகொண்டவன்* பொய்கையில் கஞ்சன்தன்-
ஒருவாரணம் உயிர்உண்டவன்* சென்றுறையும்மலை*
கருவாரணம்* தன்பிடிதுறந்துஓடக்* கடல்வண்ணன்-
திருவாணைகூறத்திரியும்* தண் மாலிருஞ்சோலையே.
ஏவிற்றுச்செய்வான்* ஏன்றுஎதிர்ந்துவந்தமல்லரைச்*
சாவத்தகர்த்த* சாந்தணிதோள்சதுரன்மலை*
ஆவத்தனமென்று* அமரர்களும்நன்முனிவரும்*
சேவித்திருக்கும்* தென்திருமாலிருஞ்சோலையே.
மன்னர்மறுக* மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்*
முன்னங்குநின்று* மோழைஎழுவித்தவன் மலை*
கொன்னவில்கூர்வேற்கோன்* நெடுமாறன்தென்கூடற்கோன்*
தென்னன்கொண்டாடும்* தென்திருமாலிருஞ்சோலையே
குறுகாதமன்னரைக்* கூடுகலக்கி* வெங்கானிடைச்-
சிறுகால்நெறியே போக்குவிக்கும்* செல்வன்பொன்மலை*
அறுகால்வரிவண்டுகள்* ஆயிரநாமம்சொல்லிச்*
சிறுகாலைப்பாடும்* தென்திருமாலிருஞ்சோலையே.
சிந்தப்புடைத்துச்* செங்குருதிகொண்டு* பூதங்கள்-
அந்திப்பலிகொடுத்து* ஆவத்தனம்செய் அப்பன்மலை*
இந்திரகோபங்கள்* எம்பெருமான் கனிவாய்ஒப்பான்*
சிந்தும்புறவிற்* தென்திருமாலிருஞ்சோலையே
எட்டுத் திசையும்* எண்- இறந்த பெருந் தேவிமார்*
விட்டு விளங்க* வீற்றிருந்த விமலன் மலை*
பட்டிப்பிடிகள்* பகடுறிஞ்சிச் சென்று* மாலைவாய்த்-
தெட்டித்திளைக்கும்* தென்திருமாலிருஞ் சோலையே.
மருதப்பொழிலணி* மாலிருஞ்சோலைமலைதன்னைக்*
கருதி உறைகின்ற* கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை*
விரதம்கொண்டேத்தும்* வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்*
கருதியுரைப்பவர்* கண்ணன்கழலிணை காண்பர்களே (2)
உருப்பிணிநங்கை தன்னைமீட்பான்* தொடர்ந்துஓடிச்சென்ற*
உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு* உறைத்திட்டஉறைப்பன்மலை*
பொருப்பிடைக்கொன்றைநின்று* முறிஆழியும்காசும்கொண்டு*
விருப்பொடுபொன்வழங்கும்* வியன்மாலிருஞ்சோலையதே. (2)
கஞ்சனும்காளியனும்* களிறும்மருதும்எருதும்*
வஞ்சனையில்மடிய* வளர்ந்தமணிவண்ணன்மலை*
நஞ்சுஉமிழ்நாகம்எழுந்துஅணவி* நளிர்மாமதியைச்*
செஞ்சுடர்நாவளைக்கும்* திருமாலிருஞ்சோலையதே.
மன்னுநரகன்தன்னைச்* சூழ்போகிவளைத்துஎறிந்து*
கன்னிமகளிர்தம்மைக்* கவர்ந்தகடல்வண்ணன்மலை*
புன்னைசெருந்தியொடு* புனவேங்கையும்கோங்கும்நின்று*
பொன்அரிமாலைகள்சூழ்* பொழில்மாலிருஞ்சோலையதே.
மாவலிதன்னுடைய* மகன்வாணன்மகள்இருந்த*
காவலைக்கட்டழித்த* தனிக் காளை கருதும் மலை*
கோவலர்கோவிந்தனைக்* குற மாதர்கள் பண் குறிஞ்சிப்*
பாஒலிபாடிநடம்பயில்* மாலிருஞ் சோலையதே.
பலபலநாழம்சொல்லிப்* பழித்தசிசுபாலன்தன்னை*
அலைவலைமை தவிர்த்த* அழகன்அலங்காரன்மலை*
குலமலைகோலமலை* குளிர்மாமலைகொற்றமலை*
நிலமலைநீண்டமலை* திருமாலிருஞ்சோலையதே.
பாண்டவர்தம்முடைய* பாஞ்சாலிமறுக்கம்எல்லாம்*
ஆண்டுஅங்கு நூற்றுவர்தம்* பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை*
பாண்தகு வண்டினங்கள்* பண்கள்பாடிமதுப்பருக*
தோண்டல்உடையமலை* தொல்லைமாலிருஞ்சோலையதே.
கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து* அரக்கர்தங்கள்-
இனம்கழுஏற்றுவித்த* ஏழிற்தோள்எம்இராமன்மலை*
கனம்கொழிதெள்அருவி* வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்*
இனம்குழுஆடும்மலை* எழில்மாலிருஞ்சோலையதே.
எரிசிதறும்சரத்தால்* இலங்கையினைத்* தன்னுடைய-
வரிசிலைவாயிற்பெய்து* வாய்க்கோட்டம்தவிர்த்துஉகந்த*
அரையன்அமரும்மலை* அமரரொடுகோனும்சென்று*
திரிசுடர்சூழும்மலை* திருமாலிருஞ்சோலையதே.
கோட்டுமண்கொண்டுஇடந்து* குடங்கையில்மண்கொண்டுஅளந்து*
மீட்டும்அதுஉண்டுஉமிழ்ந்து* விளையாடும்விமலன்மலை*
ஈட்டியபல்பொருள்கள்* எம்பிரானுக்குஅடியுறைஎன்று*
ஓட்டரும்தண்சிலம்பாறுஉடை* மாலிருஞ்சோலையதே.
ஆயிரம்தோள்பரப்பி* முடிஆயிரம்மின்இலக*
ஆயிரம்பைந்தலைய* அனந்தசயனன்ஆளும்மலை*
ஆயிரம்ஆறுகளும்* சுனைகள்பலஆயிரமும்*
ஆயிரம்பூம்பொழிலும்உடை* மாலிருஞ்சோலையதே (2)
மாலிருஞ்சோலைஎன்னும்* மலையைஉடையமலையை*
நாலிருமூர்த்திதன்னை* நால்வேதக்-கடல்அமுதை*
மேல்இருங்கற்பகத்தை* வேதாந்தவிழுப்பொருளின்*
மேல்இருந்தவிளக்கை* விட்டுசித்தன்விரித்தனனே (2)
நாவகாரியம்சொல்இலாதவர்* நாள்தொறும்விருந்துஓம்புவார்*
தேவகாரியம்செய்து* வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*
மூவர்காரியமும்திருத்தும்* முதல்வனைச்சிந்தியாத* அப்-
பாவகாரிகளைப்படைத்தவன்* எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)
குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்* குருக்களுக்குஅனுகூலராய்*
செற்றம்ஒன்றும்இலாத* வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*
துற்றிஏழ்உலகுஉண்ட* தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்*
பெற்றதாயர்வயிற்றினைப்* பெருநோய்செய்வான்பிறந்தார்களே.
வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி* நிழல்எழும்-
திண்ணைசூழ்* திருக்கோட்டியூர்த்* திருமாலவன்திருநாமங்கள்*
எண்ணக்கண்டவிரல்களால்* இறைப்போதும்எண்ணகிலாதுபோய்*
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்* கவளம்உந்துகின்றார்களே.
உரகமெல்அணையான்கையில்* உறைசங்கம்போல்மடஅன்னங்கள்*
நிரைகணம்பரந்துஏறும்* செங்கமலவயற் திருக்கோட்டியூர்*
நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத* மானிடசாதியர்*
பருகுநீரும்உடுக்குங்கூறையும்* பாவம்செய்தனதாம்கொலோ!
ஆமையின்முதுகத் திடைக்குதிகொண்டு* தூமலர்சாடிப்போய்த்*
தீமைசெய்து இளவாளைகள்* விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*
நேமிசேர்தடங்கையினானை* நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை*
பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.
பூதம்ஐந்தொடு வேள்விஐந்து* புலன்கள்ஐந்துபொறிகளால்*
ஏதம்ஒன்றும்இலாத* வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*
நாதனை நரசிங்கனை* நவின்றுஏத்துவார்கள்உழக்கிய*
பாததூளிபடுதலால்* இவ்உலகம்பாக்கியம்செய்ததே.
குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று* கூடிஆடிவிழாச்செய்து*
திருந்துநான்மறையோர்* இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*
கருந்தடமுகில்வண்ணனைக்* கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்*
இருந்தஊரில்இருக்கும்மானிடர்* எத்தவங்கள்செய்தார்கொலோ!
நளிர்ந்தசீலன்நயாசலன்* அபிமானதுங்கனை* நாள்தொறும்-
தெளிந்தசெல்வனைச்* சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*
குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்* குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்*
விளைந்ததானியமும் இராக்கதர்* மீதுகொள்ளகிலார்களே.
கொம்பின்ஆர்பொழில்வாய்க்* குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*
செம்பொன்ஆர்மதில்சூழ்* செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*
நம்பனைநரசிங்கனை* நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்*
எம்பிரான் தனசின்னங்கள்* இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே .
காசின்வாய்க்கரம்விற்கிலும்* கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு*
தேசவார்த்தைபடைக்கும்* வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*
கேசவா! புருடோத்தமா!* கிளர்சோதியாய்! குறளா! என்று*
பேசுவார்அடியார்கள்* எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.
சீதநீர்புடைசூழ்* செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*
ஆதியான்அடியாரையும்* அடிமையின்றித்திரிவாரையும்*
கோதில்பட்டர்பிரான்* குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்*
ஏதம்இன்றிஉரைப்பவர்* இருடீகேசனுக்குஆளரே (2)
ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி* அன்னை அத்தன் என் புத்திரர்பூமி*
வாசவார் குழலாள் என்றுமயங்கி* மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*
கேசவா! புருடோத்தமா! என்றும்* கேழல்ஆகியகேடிலீ! என்றும்*
பேசுவார் அவர் எய்தும் பெருமை* பேசுவான் புகில் நம்பரம்அன்றே (2)
சீயினால் செறிந்துஏறிய புண்மேல்* செற்றல்ஏறிக் குழம்புஇருந்து* எங்கும்-
ஈயினால் அரிப்புஉண்டு மயங்கி* எல்லைவாய்ச்சென்று சேர்வதன்முன்னம்*
வாயினால் நமோநாரணா என்று* மத்தகத்திடைக் கைகளைக்கூப்பிப்*
போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்* பிணைக்கொடுக்கிலும் போகஒட்டாரே.
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்* சொல்லு சொல்லு என்றுசுற்றும்இருந்து*
ஆர்வினவிலும் வாய் திறவாதே* அந்தகாலம் அடைவதன்முன்னம்*
மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து* மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி*
ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு* அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.
மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து* மேல்மிடற்றினை உள்எழவாங்கிக்*
காலும் கையும் விதிர்விதிர்த்துஏறிக்* கண்உறக்கமது ஆவதன்முன்னம்*
மூலம்ஆகிய ஒற்றைஎழுத்தை* மூன்றுமாத்திரை உள்ளெழவாங்கி*
வேலைவண்ணனை மேவுதிர்ஆகில்* விண்ணகத்தினில் மேவலும்மாமே.
மடிவழி வந்து நீர்புலன்சோர* வாயில்அட்டிய கஞ்சியும் மீண்டே*
கடைவழிவாரக் கண்டம்அடைப்பக்* கண்உறக்கமது ஆவதன்முன்னம்*
தொடைவழி உம்மை நாய்கள்கவரா* சூலத்தால் உம்மைப் பாய்வதும்செய்யார்*
இடைவழியில் நீர் கூறையும் இழவீர்* இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே.
அங்கம்விட்டுஅவை ஐந்தும் அகற்றி* ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை*
சங்கம்விட்டுஅவர் கையைமறித்துப்* பையவே தலை சாய்ப்பதன்முன்னம்*
வங்கம்விட்டுஉலவும் கடற்பள்ளி மாயனை* மதுசூதனை மார்பில்-
தங்க விட்டு வைத்து* ஆவதுஓர் கருமம் சாதிப்பார்க்கு* என்றும் சாதிக்கலாமே.
தென்னவன் தமர் செப்பம்இலாதார்* சேவதக்குவார் போலப்புகுந்து*
பின்னும் வன்கயிற்றால் பிணித்துஎற்றிப்* பின்முன்ஆக இழுப்பதன் முன்னம்*
இன்னவன் இனையான் என்றுசொல்லி* எண்ணி உள்ளத்து இருள்அறநோக்கி*
மன்னவன் மதுசூதனன் என்பார்* வானகத்துமன்றாடிகள்தாமே.
கூடிக்கூடி உற்றார்கள் இருந்து* குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து*
பாடிப்பாடி ஓர் பாடையில்இட்டு* நரிப்படைக்கு ஒரு பாகுடம்போலே*
கோடி மூடிஎடுப்பதன் முன்னம்* கௌத்துவம்உடைக் கோவிந்தனோடு*
கூடிஆடிய உள்ளத்தர்ஆனால்* குறிப்பிடம் கடந்து உய்யலும்ஆமே.
வாயொரு பக்கம் வாங்கிவலிப்ப* வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற*
தாய்ஒருபக்கம் தந்தைஒருபக்கம்* தாரமும் ஒருபக்கம் அலற்ற*
தீஒருபக்கம் சேர்வதன் முன்னம்* செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற-
மாய்* ஒருபக்கம் நிற்கவல்லார்க்கு* அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.
செத்துப்போவதோர் போதுநினைந்து* செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்*
பத்தராய்இறந்தார் பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*
சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்*
சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)
காசும் கறைஉடைக் கூறைக்கும்* அங்குஓர் கற்றைக்கும்-
ஆசையினால்* அங்குஅவத்தப் பேர்இடும்* ஆதர்காள்!*
கேசவன் பேர்இட்டு* நீங்கள் தேனித்துஇருமினோ*
நாயகன் நாரணன்* தம் அன்னை நரகம்புகாள் (2)
அங்குஒருகூறை* அரைக்கு உடுப்பதன் ஆசையால்*
மங்கிய மானிடசாதியின்* பேர்இடும் ஆதர்காள்!*
செங்கண்நெடுமால்!* சிரீதரா! என்று அழைத்தக்கால்*
நங்கைகாள்! நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
உச்சியில் எண்ணெயும்* சுட்டியும் வளையும் உகந்து*
எச்சம் பொலிந்தீர்காள்!* என் செய்வான் பிறர்பேர்இட்டீர்?*
பிச்சைபுக்குஆகிலும்* எம்பிரான் திருநாமமே-
நச்சுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
மானிட சாதியில் தோன்றிற்று* ஓர் மானிடசாதியை*
மானிட சாதியின் பேர்இட்டால்* மறுமைக்குஇல்லை*
வானுடை மாதவா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நானுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
மலமுடை ஊத்தையில் தோன்றிற்று* ஓர் மல ஊத்தையை*
மலமுடை ஊத்தையின் பேர்இட்டால்* மறுமைக்குஇல்லை*
குலமுடைக் கோவிந்தா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நலமுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
நாடும் நகரும் அறிய* மானிடப் பேர்இட்டு*
கூடிஅழுங்கிக்* குழியில் வீழ்ந்து வழுக்காதே*
சாடிறப் பாய்ந்த தலைவா!* தாமோதரா! என்று-
நாடுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர்இட்டு அங்கு-
எண்ணம்ஒன்று எண்ணியிருக்கும்* ஏழை மனிசர்காள்!*
கண்ணுக்குஇனிய* கருமுகில் வண்ணன் நாமமே-
நண்ணுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்
நம்பி பிம்பிஎன்று* நாட்டு மானிடப் பேர்இட்டால்*
நம்பும் பிம்பும்எல்லாம்* நாலுநாளில் அழுங்கிப்போம்*
செம்பெருந்தாமரைக் கண்ணன்* பேர்இட்டுஅழைத்தக்கால்*
நம்பிகாள் நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
ஊத்தைக்குழியில்* அமுதம் பாய்வதுபோல்* உங்கள்-
மூத்திரப்பிள்ளையை* என் முகில்வண்ணன் பேர் இட்டு*
கோத்துக் குழைத்துக்* குணாலம்ஆடித் திரிமினோ*
நாத்தகு நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
சீர்அணி மால்* திருநாமமே இடத்தேற்றிய*
வீர்அணி தொல்புகழ்* விட்டுசித்தன் விரித்த*
ஓரணியொண்தமிழ்* ஒன்பதோடுஒன்றும் வல்லவர்*
பேர்அணி வைகுந்தத்து* என்றும் பேணியிருப்பரே. (2)
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த* எம் தாசரதிபோய்*
எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட* எம் புருடோத்தமன் இருக்கை*
கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே* கடுவினை களைந்திடுகிற்கும்*
கங்கையின் கரைமேல் கைதொழநின்ற* கண்டம்என்னும் கடிநகரே. (2)
சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்* சந்திரன் வெங்கதிர் அஞ்ச*
மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்* மால் புருடோத்தமன் வாழ்வு*
நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்* நாரணன் பாதத்துழாயும்*
கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்* கண்டம்என்னும் கடிநகரே.
அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி* அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து* அங்கு-
எதிர்முக அசுரர் தலைகளை இடறும்* எம் புருடோத்தமன் இருக்கை*
சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*
கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்* கண்டம்என்னும் கடிநகரே
இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள* ஏற்று வந்துஎதிர் பொருசேனை*
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்* நம் புருடோத்தமன் நகர்தான்*
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்* கண்டம்என்னும் கடிநகரே.
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்* ஒண் சுடர்ஆழியும் சங்கும்*
மழுவொடு வாளும் படைக்கலம்உடைய* மால் புருடோத்தமன் வாழ்வு*
எழுமையும் கூடி ஈண்டிய பாவம்* இறைப்பொழுது அளவினில் எல்லாம்*
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்* கண்டம்என்னும் கடிநகரே.
தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்* சலசல பொழிந்திடக்கண்டு*
மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை* மால் புருடோத்தமன் வாழ்வு*
அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்* அவபிரதம் குடைந்தாட*
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்* கண்டம்என்னும் கடிநகரே.
விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி* மேல்இருந்தவன் தலைசாடி*
மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த* மால் புருடோத்தமன் வாழ்வு*
அற்புதம்உடைய ஐராவதமதமும்* அவர் இளம்படியர் ஒண்சாந்தும்*
கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்* கண்டம்என்னும் கடிநகரே.
திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து* தன்மைத்துனன் மார்க்காய்*
அரசினையவிய அரசினையருளும்* அரிபுருடோத்தமன் அமர்வு*
நிரைநிரையாக நெடியனயூபம்* நிரந்தரம் ஒழுக்குவிட்டு* இரண்டு-
கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை* கண்டமென்னும் கடிநகரே.
வடதிசை மதுரை சாளக்கிராமம்* வைகுந்தம் துவரை அயோத்தி*
இடமுடை வதரி இடவகையுடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
தடவரை அதிரத் தரணி விண்டிடியத்* தலைப்பற்றிக் கரைமரம்சாடி*
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே. (2)
மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்* மூன்றெழுத்தாக்கி* மூன்றெழுத்தை-
ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி* மூன்றினில் மூன்றருவானான்*
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே. (2)
பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து* உறை புருடோத்தமனடிமேல்*
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்* விட்டுசித்தன் விருப்புற்று*
தங்கிய அன்பால் செய்த தமிழ்மாலை* தங்கிய நாவுடையார்க்கு*
கங்கையில் திருமால் கழலிணைக்கீழே* குளித்திருந்த கணக்காமே. (2)
மாதவத்தோன் புத்திரன்போய்* மறிகடல்வாய் மாண்டானை*
ஓதுவித்த தக்கணையா* உருவுருவே கொடுத்தானுர்*
தோதவத்தித் தூய்மறையோர்* துறைபடியத் துளும்பிஎங்கும்*
போதில் வைத்த தேன்சொரியும்* புனலரங்கம் என்பதுவே. (2)
பிறப்பகத்தே மாண்டொழிந்த* பிள்ளைகளை நால்வரையும்*
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து* ஒருப்படித்த உறைப்பனுர்*
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்* வருவிருந்தை அளித்திருப்பார்*
சிறப்புடைய மறையவர்வாழ்* திருவரங்கம் என்பதுவே.
மருமகன் தன் சந்ததியை* உயிர்மீட்டு மைத்துனன்மார்*
உருமகத்தே வீழாமே* குருமுகமாய்க் காத்தானுர்*
திருமுகமாய்ச் செங்கமலம்* திருநிறமாய்க் கருங்குவளை*
பொருமுகமாய் நின்றலரும்* புனலரங்கம் என்பதுவே.
கூன்தொழுத்தை சிதகுரைப்பக்* கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்றெடுத்த தாயரையும்* இராச்சியமும் ஆங்கொழிய*
கான்தொடுத்த நெறிபோகிக்* கண்டகரைக் களைந்தானுர்*
தேன்தொடுத்த மலர்ச்சோலைத்* திருவரங்கம் என்பதுவே.
பெருவரங்கள் அவைபற்றிப்* பிழக்குடைய இராவணனை*
உருவரங்கப் பொருதழித்து* இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர்
குரவரும்பக் கோங்கலரக்* குயில்கூவும் குளிர்பொழில்சூழ்*
திருவரங்கம் என்பதுவே* என் திருமால் சேர்விடமே.
கீழுலகில் அசுரர்களைக்* கிழங்கிருந்து கிளராமே*
ஆழிவிடுத்து அவருடைய* கருவழித்த அழிப்பனுர்*
தாழைமடல் ஊடுரிஞ்சித்* தவளவண்ணப் பொடியணிந்து*
யாழின் இசை வண்டினங்கள்* ஆளம்வைக்கும் அரங்கமே.
கொழுப்புடைய செழுங்குருதி* கொழித்திழிந்து குமிழ்த்தெறிய*
பிழக்குடைய அசுரர்களைப்* பிணம்படுத்த பெருமானுர்*
தழுப்பரிய சந்தனங்கள்* தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு*
தெழிப்புடைய காவிரிவந்து* அடிதொழும் சீரரங்கமே.
வல்யிற்றுக் கேழலுமாய்* வாளேயிற்றுச் சீயமுமாய்*
எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு* எம்பெருமான் குணம்பாடி*
மல்லிகை வெண்சங்கூதும்* மதிளரங்கம் என்பதுவே.
குன்றாடு கொழுமுகில்போல்* குவளைகள்போல் குரைகடல்போல்*
நின்றாடு கணமயில்போல்* நிறமுடைய நெடுமாலூர்*
குன்றாடு பொழில்நுழைந்து* கொடியிடையார் முலையணவி*
மன்றாடு தென்றலுமாம்* மதிளரங்கம் என்பதுவே.
பருவரங்கள் அவைபற்றிப்* படையாலித் தெழுந்தானை*
செருவரங்கப் பொருதழித்த* திருவாளன் திருப்பதிமேல்*
திருவரங்கத் தமிழ்மாலை* விட்டுசித்தன் விரித்தனகொண்டு*
இருவரங்கம் எரித்தானை* ஏத்தவல்லார் அடியோமே. (2)
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்* வானோர்வாழ*
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட* திருமால்கோயில்*
திருவடிதன் திருவுருவும்* திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று*
உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட* ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)
தன்னடியார் திறத்தகத்துத்* தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்*
என்னடியார் அதுசெய்யார்* செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்*
மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த*
என்னுடைய திருவரங்கற்கன்றியும்* மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)
கருளுடைய பொழில்மருதும்* கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்*
உருளுடைய சகடரையும் மல்லரையும்* உடையவிட்டு ஓசைகேட்டான்*
இருளகற்றும் எறிகதிரோன்* மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி*
அருள்கொடுத்திட்டு அடியவரை* ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.
பதினாறாம் ஆயிரவர்* தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்*
அதில் நாயகராகி வீற்றிருந்த* மணவாளர் மன்னுகோயில்*
புதுநான் மலர்க்கமலம்* எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்*
பொதுநாயகம் பாவித்து* இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.
ஆமையாய்க் கங்கையாய்* ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்*
நான்முகனாய் நான்மறையாய்* வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்*
சேமமுடை நாரதனார்* சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்*
பூமருவிப் புள்ளினங்கள்* புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.
மைத்துனன்மார் காதலியை* மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி*
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட* உயிராளன் உறையும்கோயில்*
பத்தர்களும் பகவர்களும்* பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்*
சித்தர்களும் தொழுதிறைஞ்சத்* திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.
குறட்பிரமசாரியாய்* மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி*
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை* கொடுத்துகந்த எம்மான்கோயில்*
எறிப்புடைய மணிவரைமேல்* இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்*
சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.
உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி*
சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க* வாயலறத் தெழித்தான்கோயில்*
உரம்பெற்ற மலர்க்கமலம்* உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட*
வரம்புற்ற கதிர்ச்செந்நெல்* தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே.
தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அறியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்க்* கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்*
சேவலொடு பெடையன்னம்* செங்கமல மலரேறி ஊசடிலாப்*
பூவணைமேல் துதைந்தெழு* செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.
செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்* செருச்செய்யும் நாந்தகமென்னும்*
ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்* விழுக்கையாளன்*
இரவாளன் பகலாளன் எனையாளன்* ஏழுலகப் பெரும் புரவாளன்*
திருவாளன் இனிதாகத்* திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.
கைந்நாகத்திடர் கடிந்த* கனலாழிப் படையுயான் கருதும்கோயில்*
தென்நாடும் வடநாடும் தொழநின்ற* திருவரங்கம் திருப்பதியின்மேல்*
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்* விரித்ததமிழ் உரைக்கவல்லார்*
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்* இணைபிரியாது இருப்பர் தாமே.(2)
துப்புடையாரை அடைவது எல்லாம்* சோர்விடத்துத் துணை ஆவர் என்றே*
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்* ஆனைக்கு நீ அருள் செய்தமையால்*
எய்ப்பு என்னை வந்து நலியும்போது* அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்* அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்* சங்கொடு சக்கரம் ஏந்தினானே!*
நாமடித்து என்னை அனேக தண்டம்* செய்வதா நிற்பர் நமன்தமர்கள்*
போமிடத்து உன்திறத்து எத்தனையும்* புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை*
ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
எல்லையில் வாசல் குறுகச்சென்றால்* எற்றிநமன்தமர் பற்றும்போது*
நில்லுமின் என்னும் உபாயமில்லை* நேமியும் சங்கமும் ஏந்தினானே!
சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்* சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்*
அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்* அரங்கத்து அரவணைப் பள்ளியானே!
ஒற்றைவிடையனும் நான்முகனும்* உன்னையறியாப் பெருமையோனே!*
முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*
அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி* அஞ்சநமன்தமர் பற்றலுற்ற*
அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
பையரவினனைப் பாற்கடலுள்* பள்ளிகொள்கின்ற பரமமுர்த்தி!*
உய்யஉலகு படைக்கவேண்டி* உந்தியிற் தோற்றினாய் நான்முகனை*
வையமனிசரைப் பொய்யென்றெண்ணிக்* காலனையும் உடனே படைத்தாய்*
ஐய!இனி என்னைக் காக்க வேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
தண்ணெனவில்லை நமன்தமர்கள்* சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்*
மண்ணொடு நீரும் எரியும் காலும்* மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*
எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்*
அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற* தேவர்கள்நாயகனே! எம்மானே!*
எஞ்சலில் என்னுடை இன்னமுதே!* ஏழலகுமுடையாய்! என்னப்பா!*
வஞ்சவுருவின் நமன்தமர்கள்* வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது*
அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்* நமன்தமர்பற்றி நலிந்திட்டு*
இந்த ஊனேபுகேயென்று மோதும்போது* அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*
வானேய் வானவர் தங்கள் ஈசா!* மதுரைப் பிறந்த மாமாயனே!* என்-
ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!* கோநிரை மேய்த்தவனே! எம்மானே!*
அன்றுமுதல் இன்றறுதியாக* ஆதியஞ்சோதி மறந்தறியேன்*
நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது*
அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
மாயவனை மதுசூதனனை* மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்* விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனாகி வல்லார்* தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)