பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    கதிர் ஆயிரம் இரவி*  கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்* 
    எதிர் இல் பெருமை இராமனை*  இருக்கும் இடம் நாடுதிரேல்*

    அதிரும் கழற் பொரு தோள்*  இரணியன் ஆகம் பிளந்து*  அரியாய்- 
    உதிரம் அளைந்த கையோடு இருந்தானை*  உள்ளவா கண்டார் உளர் (2)


    நாந்தகம்சங்குதண்டு*  நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்* 
    ஏந்துபெருமை இராமனை*  இருக்குமிடம் நாடுதிரேல்*

    காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக்*  கடுஞ்சிலை சென்றிறுக்க* 
    வேந்தர்தலைவன் சனகராசன்தன்*  வேள்வியில் கண்டாருளர். 


    கொலையானைக் கொம்பு பறித்துக்*  கூடலர் சேனை பொருது அழியச்* 
    சிலையால் மராமரம் எய்த தேவனைச்*  சிக்கென நாடுதிரேல்*

    தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று*  தடவரை கொண்டு அடைப்ப* 
    அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை*  அங்குத்தைக் கண்டார் உளர் 


    தோயம்பரந்த நடுவுசூழலில்*  தொல்லை வடிவுகொண்ட* 
    மாயக்குழவியதனை நாடுறில்*  வம்மின்சுவடுஉரைக்கேன்*

    ஆயர்மடமகள் பின்னைக்காகி*  அடல்விடைஏழினையும்* 
    வீயப்பொருது வியர்த்துநின்றானை*  மெய்ம்மையேகண்டார்உளர். 


    நீரேறுசெஞ்சடை நீலகண்டனும்*  நான்முகனும் முறையால்* 
    சீரேறுவாசகஞ்செய்யநின்ற*  திருமாலைநாடுதிரேல்*

    வாரேறுகொங்கை உருப்பிணியை*  வலியப்பிடித்துக்கொண்டு- 
    தேரேற்றிச் சேனைநடுவு போர்செய்யச்*  சிக்கெனக்கண்டார்உளர்.   


    பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்*  புணர்முலைவாய்மடுக்க- 
    வல்லானை*  மாமணிவண்ணனை*  மருவும்இடம்நாடுதிரேல்

    பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு*  பௌவம்எறிதுவரை* 
    எல்லாரும் சூழச்சிங்காசனத்தே*  இருந்தானைக்கண்டாருளர்.  


    வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம்*  ஏந்துகையன்* 
    உள்ளவிடம்வினவில்*  உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்*

    வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித்*  தேர்மிசைமுன்புநின்று* 
    கள்ளப்படைத்துணையாகிப்*  பாரதம்கைசெய்யக்கண்டார்உளர். 


    நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற*  அரசர்கள்தம்முகப்பே* 
    நாழிகைபோகப்படைபொருதவன்*  தேவகிதன்சிறுவன்*

    ஆழிகொண்டு அன்றுஇரவிமறைப்பச்*  சயத்திரதனதலையை*
    பாழிலுருளப்படைபொருதவன்*  பக்கமேகண்டார்உளர். 


    மண்ணும்மலையும்மறிகடல்களும்*  மற்றும்யாவும்எல்லாம்* 
    திண்ணம்விழுங்கிஉமிழ்ந்ததேவனைச்*  சிக்கெனநாடுதிரேல்*

    எண்ணற்கரியதோரேனமாகி*  இருநிலம்புக்கிடந்து*
    வண்ணக்கருங்குழல்மாதரோடு*  மணந்தானைக்கண்டாருளர் 


    கரியமுகில்புரைமேனிமாயனைக்*  கண்டசுவடுஉரைத்துப்* 
    புரவிமுகம்செய்துசெந்நெல்ஓங்கி*  விளைகழனிப்புதுவைத்*

    திருவிற்பொலிமறைவாணன்*  பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்* 
    பரவும்மனமுடைப்பத்தருள்ளார்*  பரமனடிசேர்வர்களே (2)


    அலம்பாவெருட்டாக்*  கொன்றுதிரியும் அரக்கரை* 
    குலம்பாழ்படுத்துக்*  குலவிளக்காய் நின்றகோன்மலை*

    சிலம்பார்க்கவந்து*  தெய்வமகளிர்களாடும்சீர்* 
    சிலம்பாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே.  (2)


    வல்லாளன்தோளும்*  வாளரக்கன்முடியும்*  தங்கை- 
    பொல்லாதமூக்கும்*  போக்குவித்தான்பொருந்தும்மலை*

    எல்லாஇடத்திலும்*  எங்கும்பரந்து பல்லாண்டுஒலி- 
    செல்லாநிற்கும் சீர்த்*  தென்திருமாலிருஞ்சோலையே.


    தக்கார்மிக்கார்களைச்*  சஞ்சலம்செய்யும்சலவரை*
    தெக்காநெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை*

    எக்காலமும்சென்று*  சேவித்திருக்கும் அடியரை* 
    அக்கான்நெறியைமாற்றும்*  தண் மாலிருஞ்சோலையே.


    ஆனாயர்கூடி*  அமைத்தவிழவை*  அமரர்தம்- 
    கோனார்க்கொழியக்*  கோவர்த்தனத்துச்செய்தான்மலை*

    வான்நாட்டினின்று*  மாமலர்க்கற்பகத்தொத்துஇழி* 
    தேனாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 


    ஒருவாரணம் பணிகொண்டவன்*  பொய்கையில் கஞ்சன்தன்- 
    ஒருவாரணம் உயிர்உண்டவன்*  சென்றுறையும்மலை*

    கருவாரணம்*  தன்பிடிதுறந்துஓடக்*  கடல்வண்ணன்- 
    திருவாணைகூறத்திரியும்*  தண் மாலிருஞ்சோலையே. 


    ஏவிற்றுச்செய்வான்*  ஏன்றுஎதிர்ந்துவந்தமல்லரைச்* 
    சாவத்தகர்த்த*  சாந்த‌ணிதோள்சதுரன்மலை*

    ஆவத்தனமென்று*  அமரர்களும்நன்முனிவரும்* 
    சேவித்திருக்கும்*  தென்திருமாலிருஞ்சோலையே.


    மன்னர்மறுக*  மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்* 
    முன்னங்குநின்று*  மோழைஎழுவித்தவன் மலை* 

    கொன்னவில்கூர்வேற்கோன்*  நெடுமாறன்தென்கூடற்கோன்* 
    தென்னன்கொண்டாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே


    குறுகாதமன்னரைக்*  கூடுகலக்கி*  வெங்கானிடைச்-
    சிறுகால்நெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை* 

    அறுகால்வரிவண்டுகள்*  ஆயிரநாமம்சொல்லிச்* 
    சிறுகாலைப்பாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 


    சிந்தப்புடைத்துச்*  செங்குருதிகொண்டு*  பூதங்கள்- 
    அந்திப்பலிகொடுத்து*  ஆவத்தனம்செய் அப்பன்மலை* 


    இந்திரகோபங்கள்*  எம்பெருமான் கனிவாய்ஒப்பான்* 
    சிந்தும்புறவிற்*  தென்திருமாலிருஞ்சோலையே    



    எட்டுத் திசையும்*  எண்- இறந்த பெருந் தேவிமார்*  
    விட்டு விளங்க*  வீற்றிருந்த விமலன் மலை*  

    பட்டிப்பிடிகள்*  பகடுறிஞ்சிச் சென்று*  மாலைவாய்த்- 
    தெட்டித்திளைக்கும்*  தென்திருமாலிருஞ் சோலையே.



    மருதப்பொழில‌ணி*  மாலிருஞ்சோலைமலைதன்னைக்* 
    கருதி உறைகின்ற*  கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை* 

    விரதம்கொண்டேத்தும்*  வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்* 
    கருதியுரைப்பவர்*  கண்ணன்கழலிணை காண்பர்களே (2)


    உருப்பிணிநங்கை  தன்னைமீட்பான்*  தொடர்ந்துஓடிச்சென்ற* 
    உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு*  உறைத்திட்டஉறைப்பன்மலை*

    பொருப்பிடைக்கொன்றைநின்று*  முறிஆழியும்காசும்கொண்டு* 
    விருப்பொடுபொன்வழங்கும்*  வியன்மாலிருஞ்சோலையதே.  (2)


    கஞ்சனும்காளியனும்*  களிறும்மருதும்எருதும்* 
    வஞ்சனையில்மடிய*  வளர்ந்தமணிவண்ணன்மலை*

    நஞ்சுஉமிழ்நாகம்எழுந்துஅணவி*  நளிர்மாமதியைச்* 
    செஞ்சுடர்நாவளைக்கும்*  திருமாலிருஞ்சோலையதே.


    மன்னுநரகன்தன்னைச்*  சூழ்போகிவளைத்துஎறிந்து* 
    கன்னிமகளிர்தம்மைக்*  கவர்ந்தகடல்வண்ணன்மலை*

    புன்னைசெருந்தியொடு*  புனவேங்கையும்கோங்கும்நின்று* 
    பொன்அரிமாலைகள்சூழ்*  பொழில்மாலிருஞ்சோலையதே.


    மாவலிதன்னுடைய*  மகன்வாணன்மகள்இருந்த* 
    காவலைக்கட்டழித்த*  தனிக் காளை கருதும் மலை*

    கோவலர்கோவிந்தனைக்*  குற மாதர்கள் பண் குறிஞ்சிப்* 
    பாஒலிபாடிநடம்பயில்*  மாலிருஞ் சோலையதே.


    பலபலநாழம்சொல்லிப்*  பழித்தசிசுபாலன்தன்னை* 
    அலைவலைமை தவிர்த்த*  அழகன்அலங்காரன்மலை*

    குலமலைகோலமலை*  குளிர்மாமலைகொற்றமலை* 
    நிலமலைநீண்டமலை*  திருமாலிருஞ்சோலையதே.


    பாண்டவர்தம்முடைய*  பாஞ்சாலிமறுக்கம்எல்லாம்* 
    ஆண்டுஅங்கு நூற்றுவர்தம்*  பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை*

    பாண்தகு வண்டினங்கள்*  பண்கள்பாடிமதுப்பருக* 
    தோண்டல்உடையமலை*  தொல்லைமாலிருஞ்சோலையதே.


    கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து*  அரக்கர்தங்கள்- 
    இனம்கழுஏற்றுவித்த*  ஏழிற்தோள்எம்இராமன்மலை*

    கனம்கொழிதெள்அருவி*  வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்* 
    இனம்குழுஆடும்மலை*  எழில்மாலிருஞ்சோலையதே.


    எரிசிதறும்சரத்தால்*  இலங்கையினைத்*  தன்னுடைய- 
    வரிசிலைவாயிற்பெய்து*  வாய்க்கோட்டம்தவிர்த்துஉகந்த*

    அரையன்அமரும்மலை*  அமரரொடுகோனும்சென்று* 
    திரிசுடர்சூழும்மலை*  திருமாலிருஞ்சோலையதே.


    கோட்டுமண்கொண்டுஇடந்து*  குடங்கையில்மண்கொண்டுஅளந்து* 
    மீட்டும்அதுஉண்டுஉமிழ்ந்து*  விளையாடும்விமலன்மலை*

    ஈட்டியபல்பொருள்கள்*  எம்பிரானுக்குஅடியுறைஎன்று* 
    ஓட்டரும்தண்சிலம்பாறுஉடை*  மாலிருஞ்சோலையதே.


    ஆயிரம்தோள்பரப்பி*  முடிஆயிரம்மின்இலக* 
    ஆயிரம்பைந்தலைய*  அனந்தசயனன்ஆளும்மலை*

    ஆயிரம்ஆறுகளும்*  சுனைகள்பலஆயிரமும்* 
    ஆயிரம்பூம்பொழிலும்உடை*  மாலிருஞ்சோலையதே (2)


    மாலிருஞ்சோலைஎன்னும்*  மலையைஉடையமலையை* 
    நாலிருமூர்த்திதன்னை*  நால்வேதக்-கடல்அமுதை*

    மேல்இருங்கற்பகத்தை*  வேதாந்தவிழுப்பொருளின்* 
    மேல்இருந்தவிளக்கை*  விட்டுசித்தன்விரித்தனனே (2)


    நாவகாரியம்சொல்இலாதவர்*  நாள்தொறும்விருந்துஓம்புவார்* 
    தேவகாரியம்செய்து*  வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*

    மூவர்காரியமும்திருத்தும்*  முதல்வனைச்சிந்தியாத*  அப்- 
    பாவகாரிகளைப்படைத்தவன்*  எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)


    குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்*  குருக்களுக்குஅனுகூலராய்* 
    செற்றம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*

    துற்றிஏழ்உலகுஉண்ட*  தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்* 
    பெற்றதாயர்வயிற்றினைப்*  பெருநோய்செய்வான்பிறந்தார்களே.


    வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி*  நிழல்எழும்- 
    திண்ணைசூழ்*  திருக்கோட்டியூர்த்*  திருமாலவன்திருநாமங்கள்*

    எண்ணக்கண்டவிரல்களால்*  இறைப்போதும்எண்ணகிலாதுபோய்* 
    உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்*  கவளம்உந்துகின்றார்களே.


    உரகமெல்அணையான்கையில்*  உறைசங்கம்போல்மடஅன்னங்கள்* 
    நிரைகணம்பரந்துஏறும்*  செங்கமலவயற் திருக்கோட்டியூர்*

    நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத*  மானிடசாதியர்* 
    பருகுநீரும்உடுக்குங்கூறையும்*  பாவம்செய்தனதாம்கொலோ!    


    ஆமையின்முதுகத்  திடைக்குதிகொண்டு*  தூமலர்சாடிப்போய்த்* 
    தீமைசெய்து இளவாளைகள்*  விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*

    நேமிசேர்தடங்கையினானை*  நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை* 
    பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.   


    பூதம்ஐந்தொடு வேள்விஐந்து*  புலன்கள்ஐந்துபொறிகளால்* 
    ஏதம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*

    நாதனை நரசிங்கனை*  நவின்றுஏத்துவார்கள்உழக்கிய* 
    பாததூளிபடுதலால்*  இவ்உலகம்பாக்கியம்செய்ததே.


    குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று*  கூடிஆடிவிழாச்செய்து* 
    திருந்துநான்மறையோர்*  இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*

    கருந்தடமுகில்வண்ணனைக்*  கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்* 
    இருந்தஊரில்இருக்கும்மானிடர்*  எத்தவங்கள்செய்தார்கொலோ!  


    நளிர்ந்தசீலன்நயாசலன்*  அபிமானதுங்கனை*  நாள்தொறும்- 
    தெளிந்தசெல்வனைச்*  சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*

    குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்*  குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்* 
    விளைந்ததானியமும் இராக்கதர்*  மீதுகொள்ளகிலார்களே.


    கொம்பின்ஆர்பொழில்வாய்க்*  குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*
    செம்பொன்ஆர்மதில்சூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*

    நம்பனைநரசிங்கனை*  நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்* 
    எம்பிரான் தனசின்னங்கள்*  இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே . 


    காசின்வாய்க்கரம்விற்கிலும்*  கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு* 
    தேசவார்த்தைபடைக்கும்*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*

    கேசவா! புருடோத்தமா!*  கிளர்சோதியாய்! குறளா! என்று* 
    பேசுவார்அடியார்கள்*  எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.


    சீதநீர்புடைசூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்* 
    ஆதியான்அடியாரையும்*  அடிமையின்றித்திரிவாரையும்* 

    கோதில்பட்டர்பிரான்*  குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்* 
    ஏதம்இன்றிஉரைப்பவர்*  இருடீகேசனுக்குஆளரே (2)


    ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி*  அன்னை அத்தன் என் புத்திரர்பூமி* 
    வாசவார் குழலாள் என்றுமயங்கி*  மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*

    கேசவா! புருடோத்தமா! என்றும்*  கேழல்ஆகியகேடிலீ! என்றும்* 
    பேசுவார் அவர் எய்தும் பெருமை*  பேசுவான் புகில் நம்பரம்அன்றே (2) 


    சீயினால் செறிந்துஏறிய புண்மேல்*  செற்றல்ஏறிக் குழம்புஇருந்து*  எங்கும்- 
    ஈயினால் அரிப்புஉண்டு மயங்கி*  எல்லைவாய்ச்சென்று சேர்வதன்முன்னம்*

    வாயினால் நமோநாரணா என்று*  மத்தகத்திடைக் கைகளைக்கூப்பிப்* 
    போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்*  பிணைக்கொடுக்கிலும் போகஒட்டாரே.


    சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்*  சொல்லு சொல்லு என்றுசுற்றும்இருந்து* 
    ஆர்வினவிலும் வாய் திறவாதே*  அந்தகாலம் அடைவதன்முன்னம்*

    மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து*  மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி* 
    ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு*  அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.


    மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து*  மேல்மிடற்றினை உள்எழவாங்கிக்* 
    காலும் கையும் விதிர்விதிர்த்துஏறிக்*  கண்உறக்கமது ஆவதன்முன்னம்*

    மூலம்ஆகிய ஒற்றைஎழுத்தை*  மூன்றுமாத்திரை உள்ளெழவாங்கி* 
    வேலைவண்ணனை மேவுதிர்ஆகில்*  விண்ணகத்தினில் மேவலும்மாமே.  


    மடிவழி வந்து நீர்புலன்சோர*  வாயில்அட்டிய கஞ்சியும் மீண்டே* 
    கடைவழிவாரக் கண்டம்அடைப்பக்*  கண்உறக்கமது ஆவதன்முன்னம்*

    தொடைவழி உம்மை நாய்கள்கவரா*  சூலத்தால் உம்மைப் பாய்வதும்செய்யார்* 
    இடைவழியில் நீர் கூறையும் இழவீர்*  இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே.  


    அங்கம்விட்டுஅவை ஐந்தும் அகற்றி*  ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை* 
    சங்கம்விட்டுஅவர் கையைமறித்துப்*  பையவே தலை சாய்ப்பதன்முன்னம்*

    வங்கம்விட்டுஉலவும் கடற்பள்ளி மாயனை*  மதுசூதனை மார்பில்- 
    தங்க விட்டு வைத்து*  ஆவதுஓர் கருமம் சாதிப்பார்க்கு*  என்றும் சாதிக்கலாமே.


    தென்னவன் தமர் செப்பம்இலாதார்*  சேவதக்குவார் போலப்புகுந்து* 
    பின்னும் வன்கயிற்றால் பிணித்துஎற்றிப்*  பின்முன்ஆக இழுப்பதன் முன்னம்*

    இன்னவன் இனையான் என்றுசொல்லி*  எண்ணி உள்ளத்து இருள்அறநோக்கி* 
    மன்னவன் மதுசூதனன் என்பார்*  வானகத்துமன்றாடிகள்தாமே. 


    கூடிக்கூடி உற்றார்கள் இருந்து*  குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து* 
    பாடிப்பாடி ஓர் பாடையில்இட்டு*  நரிப்படைக்கு ஒரு பாகுடம்போலே*

    கோடி மூடிஎடுப்பதன் முன்னம்*  கௌத்துவம்உடைக் கோவிந்தனோடு* 
    கூடிஆடிய உள்ளத்தர்ஆனால்*  குறிப்பிடம் கடந்து உய்யலும்ஆமே.


    வாயொரு பக்கம் வாங்கிவலிப்ப*  வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற* 
    தாய்ஒருபக்கம் தந்தைஒருபக்கம்*  தாரமும் ஒருபக்கம் அலற்ற*

    தீஒருபக்கம் சேர்வதன் முன்னம்*  செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற-
    மாய்*  ஒருபக்கம் நிற்கவல்லார்க்கு*  அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.


    செத்துப்போவதோர் போதுநினைந்து*  செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்* 
    பத்தராய்இறந்தார் பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*

    சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்* 
    சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே  (2)


    காசும் கறைஉடைக் கூறைக்கும்*  அங்குஓர் கற்றைக்கும்- 
    ஆசையினால்*  அங்குஅவத்தப் பேர்இடும்*  ஆதர்காள்!*

    கேசவன் பேர்இட்டு*  நீங்கள் தேனித்துஇருமினோ* 
    நாயகன் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்  (2)


    அங்குஒருகூறை*  அரைக்கு உடுப்பதன் ஆசையால்* 
    மங்கிய மானிடசாதியின்*  பேர்இடும் ஆதர்காள்!*

    செங்கண்நெடுமால்!*  சிரீதரா! என்று அழைத்தக்கால்* 
    நங்கைகாள்! நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    உச்சியில் எண்ணெயும்*  சுட்டியும் வளையும் உகந்து* 
    எச்சம் பொலிந்தீர்காள்!*  என் செய்வான் பிறர்பேர்இட்டீர்?*

    பிச்சைபுக்குஆகிலும்*  எம்பிரான் திருநாமமே- 
    நச்சுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.  


    மானிட சாதியில் தோன்றிற்று*  ஓர் மானிடசாதியை* 
    மானிட சாதியின் பேர்இட்டால்*  மறுமைக்குஇல்லை*

    வானுடை மாதவா!*  கோவிந்தா! என்று அழைத்தக்கால்* 
    நானுடை நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    மலமுடை ஊத்தையில் தோன்றிற்று*  ஓர் மல ஊத்தையை* 
    மலமுடை ஊத்தையின் பேர்இட்டால்*  மறுமைக்குஇல்லை*

    குலமுடைக் கோவிந்தா!*  கோவிந்தா! என்று அழைத்தக்கால்* 
    நலமுடை நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள். 


    நாடும் நகரும் அறிய*  மானிடப் பேர்இட்டு* 
    கூடிஅழுங்கிக்*  குழியில் வீழ்ந்து வழுக்காதே*

    சாடிறப் பாய்ந்த தலைவா!*  தாமோதரா! என்று- 
    நாடுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர்இட்டு அங்கு- 
    எண்ணம்ஒன்று எண்ணியிருக்கும்*  ஏழை மனிசர்காள்!*

    கண்ணுக்குஇனிய*  கருமுகில் வண்ணன் நாமமே- 
    நண்ணுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்


    நம்பி பிம்பிஎன்று*  நாட்டு மானிடப் பேர்இட்டால்* 
    நம்பும் பிம்பும்எல்லாம்*  நாலுநாளில் அழுங்கிப்போம்*

    செம்பெருந்தாமரைக் கண்ணன்*  பேர்இட்டுஅழைத்தக்கால்* 
    நம்பிகாள் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    ஊத்தைக்குழியில்*  அமுதம் பாய்வதுபோல்*  உங்கள்- 
    மூத்திரப்பிள்ளையை*  என் முகில்வண்ணன் பேர் இட்டு*

    கோத்துக் குழைத்துக்*  குணாலம்ஆடித் திரிமினோ* 
    நாத்தகு நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    சீர்அணி மால்*  திருநாமமே இடத்தேற்றிய* 
    வீர்அணி தொல்புகழ்*  விட்டுசித்தன் விரித்த*

    ஓரணியொண்தமிழ்*  ஒன்பதோடுஒன்றும் வல்லவர்* 
    பேர்அணி வைகுந்தத்து*  என்றும் பேணியிருப்பரே. (2)


    தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த*  எம் தாசரதிபோய்* 
    எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட*  எம் புருடோத்தமன் இருக்கை*

    கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே*  கடுவினை களைந்திடுகிற்கும்* 
    கங்கையின் கரைமேல் கைதொழநின்ற*  கண்டம்என்னும் கடிநகரே.  (2)


    சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்*  சந்திரன் வெங்கதிர் அஞ்ச* 
    மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்*  நாரணன் பாதத்துழாயும்* 
    கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே.  


    அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி*  அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து*  அங்கு- 
    எதிர்முக அசுரர் தலைகளை இடறும்*  எம் புருடோத்தமன் இருக்கை*

    சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*
    கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே 


    இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள*  ஏற்று வந்துஎதிர் பொருசேனை* 
    நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்*  நம் புருடோத்தமன் நகர்தான்*

    இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*
    கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்*  ஒண் சுடர்ஆழியும் சங்கும்* 
    மழுவொடு வாளும் படைக்கலம்உடைய*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    எழுமையும் கூடி ஈண்டிய பாவம்*  இறைப்பொழுது அளவினில் எல்லாம்* 
    கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்*  சலசல பொழிந்திடக்கண்டு* 
    மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்*  அவபிரதம் குடைந்தாட* 
    கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி*   மேல்இருந்தவன் தலைசாடி* 
    மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    அற்புதம்உடைய ஐராவதமதமும்*  அவர் இளம்படியர் ஒண்சாந்தும்* 
    கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே. 


    திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து*  தன்மைத்துனன் மார்க்காய்* 
    அரசினையவிய அரசினையருளும்*  அரிபுருடோத்தமன் அமர்வு*

    நிரைநிரையாக நெடியனயூபம்*  நிரந்தரம் ஒழுக்குவிட்டு*  இரண்டு- 
    கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை*  கண்டமென்னும் கடிநகரே.


     வடதிசை மதுரை சாளக்கிராமம்*  வைகுந்தம் துவரை அயோத்தி* 
    இடமுடை வதரி இடவகையுடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

    தடவரை அதிரத் தரணி விண்டிடியத்*  தலைப்பற்றிக் கரைமரம்சாடி* 
    கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்*  கண்டமென்னும் கடிநகரே. (2)


     மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்*  மூன்றெழுத்தாக்கி*  மூன்றெழுத்தை- 
    ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

    மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி*  மூன்றினில் மூன்றருவானான்* 
    கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்*  கண்டமென்னும் கடிநகரே. (2)


    பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து*  உறை புருடோத்தமனடிமேல்* 
    வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்*  விட்டுசித்தன் விருப்புற்று*

    தங்கிய அன்பால் செய்த‌ தமிழ்மாலை*  தங்கிய நாவுடையார்க்கு* 
    கங்கையில் திருமால் கழலிணைக்கீழே*  குளித்திருந்த கணக்காமே. (2)


    மாதவத்தோன் புத்திரன்போய்*  மறிகடல்வாய் மாண்டானை* 
    ஓதுவித்த தக்கணையா*  உருவுருவே கொடுத்தானுர்* 

    தோதவத்தித் தூய்மறையோர்*  துறைபடியத் துளும்பிஎங்கும்* 
    போதில் வைத்த தேன்சொரியும்*  புனலரங்கம் என்பதுவே. (2)


    பிறப்பகத்தே மாண்டொழிந்த*  பிள்ளைகளை நால்வரையும்* 
    இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து*  ஒருப்படித்த உறைப்பனுர்*

    மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்*  வருவிருந்தை அளித்திருப்பார்* 
    சிறப்புடைய மறையவர்வாழ்*  திருவரங்கம் என்பதுவே.


    மருமகன் தன் சந்ததியை*  உயிர்மீட்டு மைத்துனன்மார்* 
    உருமகத்தே வீழாமே*  குருமுகமாய்க் காத்தானுர்* 

    திருமுகமாய்ச் செங்கமலம்*  திருநிறமாய்க் கருங்குவளை* 
    பொருமுகமாய் நின்றலரும்*  புனலரங்கம் என்பதுவே.


    கூன்தொழுத்தை சிதகுரைப்பக்*  கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு 
    ஈன்றெடுத்த தாயரையும்*  இராச்சியமும் ஆங்கொழிய* 

    கான்தொடுத்த நெறிபோகிக்*  கண்டகரைக் களைந்தானுர்* 
    தேன்தொடுத்த மலர்ச்சோலைத்*  திருவரங்கம் என்பதுவே.


    பெருவரங்கள் அவைபற்றிப்*  பிழக்குடைய இராவணனை* 
    உருவரங்கப் பொருதழித்து*  இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர் 

    குரவரும்பக் கோங்கலரக்*  குயில்கூவும் குளிர்பொழில்சூழ்* 
    திருவரங்கம் என்பதுவே*  என் திருமால் சேர்விடமே.


    கீழுலகில் அசுரர்களைக்*  கிழங்கிருந்து கிளராமே* 
    ஆழிவிடுத்து அவருடைய*  கருவழித்த அழிப்பனுர்*

    தாழைமடல் ஊடுரிஞ்சித்*  தவளவண்ணப் பொடியணிந்து* 
    யாழின் இசை வண்டினங்கள்*  ஆளம்வைக்கும் அரங்கமே.


    கொழுப்புடைய செழுங்குருதி*  கொழித்திழிந்து குமிழ்த்தெறிய* 
    பிழக்குடைய அசுரர்களைப்*  பிணம்படுத்த பெருமானுர்* 

    தழுப்பரிய சந்தனங்கள்*  தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு* 
    தெழிப்புடைய காவிரிவந்து*  அடிதொழும் சீரரங்கமே.


    வல்யிற்றுக் கேழலுமாய்*  வாளேயிற்றுச் சீயமுமாய்* 
    எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*

    எல்லியம்போது இருஞ்சிறைவண்டு*  எம்பெருமான் குணம்பாடி* 
    மல்லிகை வெண்சங்கூதும்*  மதிளரங்கம் என்பதுவே.


    குன்றாடு கொழுமுகில்போல்*  குவளைகள்போல் குரைகடல்போல்* 
    நின்றாடு கணமயில்போல்*  நிறமுடைய நெடுமாலூர்* 

    குன்றாடு பொழில்நுழைந்து*  கொடியிடையார் முலையணவி* 
    மன்றாடு தென்றலுமாம்*  மதிளரங்கம் என்பதுவே.


    பருவரங்கள் அவைபற்றிப்*  படையாலித் தெழுந்தானை* 
    செருவரங்கப் பொருதழித்த*  திருவாளன் திருப்பதிமேல்*

    திருவரங்கத் தமிழ்மாலை*  விட்டுசித்தன் விரித்தனகொண்டு* 
    இருவரங்கம் எரித்தானை*  ஏத்தவல்லார் அடியோமே. (2)


    மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்*  வானோர்வாழ* 
    செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட*  திருமால்கோயில்*

    திருவடிதன் திருவுருவும்*  திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று* 
    உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட*  ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)


    தன்னடியார் திறத்தகத்துத்*  தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* 
    என்னடியார் அதுசெய்யார்*  செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்* 

    மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த* 
    என்னுடைய திருவரங்கற்கன்றியும்*  மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)


    கருளுடைய பொழில்மருதும்*  கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்* 
    உருளுடைய சகடரையும் மல்லரையும்*  உடையவிட்டு ஓசைகேட்டான்* 

    இருளகற்றும் எறிகதிரோன்*  மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி* 
    அருள்கொடுத்திட்டு அடியவரை*  ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.


    பதினாறாம் ஆயிரவர்*  தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்* 
    அதில் நாயகராகி வீற்றிருந்த*  மணவாளர் மன்னுகோயில்* 

    புதுநான் மலர்க்கமலம்*  எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்* 
    பொதுநாயகம் பாவித்து*  இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.


    ஆமையாய்க் கங்கையாய்*  ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்* 
    நான்முகனாய் நான்மறையாய்*  வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்* 

    சேமமுடை நாரதனார்*  சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்* 
    பூமருவிப் புள்ளினங்கள்*  புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.


    மைத்துனன்மார் காதலியை*  மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி* 
    உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட*  உயிராளன் உறையும்கோயில்* 

    பத்தர்களும் பகவர்களும்*  பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்* 
    சித்தர்களும் தொழுதிறைஞ்சத்*  திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.


    குறட்பிரமசாரியாய்*  மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி* 
    இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை*  கொடுத்துகந்த எம்மான்கோயில்* 

    எறிப்புடைய மணிவரைமேல்*  இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்* 
    சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.


    உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி* 
    சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க*  வாயலறத் தெழித்தான்கோயில்*

    உரம்பெற்ற மலர்க்கமலம்*  உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட* 
    வரம்புற்ற கதிர்ச்செந்நெல்*  தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே.


    தேவுடைய மீனமாய் ஆமையாய்*  ஏனமாய் அறியாய்க்  குறளாய்* 
    மூவுருவில் இராமனாய்க்*  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்* 

    சேவலொடு பெடையன்னம்*  செங்கமல மலரேறி ஊசடிலாப்* 
    பூவணைமேல் துதைந்தெழு*  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.


    செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்*  செருச்செய்யும் நாந்தகமென்னும்* 
    ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்*  விழுக்கையாளன்* 

    இரவாளன் பகலாளன் எனையாளன்*  ஏழுலகப் பெரும்  புரவாளன்* 
    திருவாளன் இனிதாகத்*  திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.


    கைந்நாகத்திடர் கடிந்த*  கனலாழிப் படையுயான் கருதும்கோயில்* 
    தென்நாடும் வடநாடும் தொழநின்ற*  திருவரங்கம் திருப்பதியின்மேல்* 

    மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்*  விரித்ததமிழ் உரைக்கவல்லார்* 
    எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்*  இணைபிரியாது இருப்பர் தாமே.(2)


    துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
    ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 

    எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
    அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)


    சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்*  சங்கொடு சக்கரம் ஏந்தினானே!* 
    நாமடித்து என்னை அனேக தண்டம்*  செய்வதா நிற்பர் நமன்தமர்கள்* 

    போமிடத்து உன்திறத்து எத்தனையும்*  புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை* 
    ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    எல்லையில் வாசல் குறுகச்சென்றால்*  எற்றிநமன்தமர் பற்றும்போது* 
    நில்லுமின் என்னும் உபாயமில்லை*  நேமியும் சங்கமும் ஏந்தினானே!

    சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்*  சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்* 
    அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே!


    ஒற்றைவிடையனும் நான்முகனும்*  உன்னையறியாப் பெருமையோனே!* 
    முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*

    அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி*   அஞ்சநமன்தமர் பற்றலுற்ற* 
    அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    பையரவினனைப் பாற்கடலுள்*  பள்ளிகொள்கின்ற பரமமுர்த்தி!* 
    உய்யஉலகு படைக்கவேண்டி*  உந்தியிற் தோற்றினாய் நான்முகனை* 

    வையமனிசரைப் பொய்யென்றெண்ணிக்*  காலனையும் உடனே படைத்தாய்* 
    ஐய!இனி என்னைக் காக்க வேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    தண்ணெனவில்லை நமன்தமர்கள்*  சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்* 
    மண்ணொடு நீரும் எரியும் காலும்*  மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*

    எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்* 
    அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற*  தேவர்கள்நாயகனே! எம்மானே!* 
    எஞ்சலில் என்னுடை இன்னமுதே!*  ஏழலகுமுடையாய்! என்னப்பா!*

    வஞ்சவுருவின் நமன்தமர்கள்*  வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது* 
    அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்*  நமன்தமர்பற்றி நலிந்திட்டு* 
    இந்த ஊனேபுகேயென்று மோதும்போது*  அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 

    வானேய் வானவர் தங்கள் ஈசா!*  மதுரைப் பிறந்த மாமாயனே!*  என்- 
    ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!*  கோநிரை மேய்த்தவனே! எம்மானே!* 
    அன்றுமுதல் இன்றறுதியாக*  ஆதியஞ்சோதி மறந்தறியேன்* 

    நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது* 
    அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    மாயவனை மதுசூதனனை*  மாதவனை மறையோர்கள் ஏத்தும்* 
    ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*

    வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்*  விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்* 
    தூய மனத்தனாகி வல்லார்*  தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)