பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
ஐய புழுதி உடம்பு அளைந்து* இவள் பேச்சும் அலந்தலையாய்ச்*
செய்ய நூலின் சிற்றாடை* செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்*
கையினில் சிறுதூதை யோடு* இவள் முற்றில் பிரிந்தும் இலள்*
பை அரவணைப் பள்ளியானொடு* கைவைத்து இவள்வருமே.* (2)
வாயிற் பல்லும் எழுந்தில* மயிரும் முடி கூடிற்றில*
சாய்வு இலாத குறுந்தலைச்* சில பிள்ளைகளோடு இணங்கி*
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து* இவள் தன் அன்ன செம்மை சொல்லி*
மாயன் மா மணிவண்ணன்மேல்* இவள் மால் உறுகின்றாளே*
பொங்கு வெண்மணல் கொண்டு* சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்*
சங்கு சக்கரம் தண்டு வாள்* வில்லும் அல்லது இழைக்கலுறாள்*
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில* கோவிந்தனோடு இவளைச்*
சங்கை யாகி என் உள்ளம்* நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே.*
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து* என் பெண்மகளை எள்கி*
தோழிமார் பலர் கொண்டுபோய்ச்* செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்?*
ஆழியான் என்னும் ஆழ மோழையில்* பாய்ச்சி அகப்படுத்தி*
மூழை உப்பு அறியாது என்னும்* மூதுரையும் இலளே*
நாடும் ஊரும் அறியவே போய்* நல்ல துழாய் அலங்கல்-
சூடி* நாரணன் போம் இடம் எல்லாம்* சோதித்து உழிதர்கின்றாள்*
கேடு வேண்டுகின்றார் பலர் உளர்* கேசவனோடு இவளைப்*
பாடிகாவல் இடுமின் என்று என்று* பார் தடுமாறினதே.*
பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து* இவள் பாடகமும் சிலம்பும்*
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு* என்னோடு இருக்கலுறாள்*
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று* இவள் பூவைப் பூவண்ணா என்னும்*
வட்ட வார் குழல் மங்கைமீர்!* இவள் மால் உறுகின்றாளே.*
பேசவும் தரியாத பெண்மையின்* பேதையேன் பேதை இவள்*
கூசமின்றி நின்றார்கள்* தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்*
கேசவா என்றும் கேடிலீ என்றும்* கிஞ்சுக வாய் மொழியாள்*
வாச வார்குழல் மங்கைமீர்!* இவள் மால் உறுகின்றாளே.*
காறை பூணும் கண்ணாடி காணும்* தன் கையில் வளை குலுக்கும்*
கூறை உடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்*
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்* தேவன் திறம் பிதற்றும்*
மாறில் மா மணிவண்ணன்மேல்* இவள் மால் உறுகின்றாளே.*
கைத்தலத்து உள்ள மாடு அழியக்* கண்ணாலங்கள் செய்து* இவளை-
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?* நம்மை வடுப்படுத்தும்*
செய்த்தலை எழு நாற்றுப் போல்* அவன் செய்வன செய்துகொள்ள*
மைத் தடமுகில் வண்ணன் பக்கல்* வளர விடுமின்களே.*
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து* பேணி நம் இல்லத்துள்ளே*
இருத்துவான் எண்ணி நாம் இருக்க* இவளும் ஒன்று எண்ணுகின்றாள்*
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்* வார்த்தை படுவதன்முன்*
ஒருப்படுத்து இடுமின் இவளை* உலகளந்தான் இடைக்கே.*
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்* நாராயணனுக்கு* இவள்-
மாலதாகி மகிழ்ந்தனள் என்று* தாய் உரை செய்ததனை*
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்* விட்டுசித்தன் சொன்ன*
மாலை பத்தும் வல்லவர்கட்கு* இல்லை வரு துயரே.* (2)
கள்வன்கொல் யான் அறியேன்* கரியான் ஒரு காளை வந்து*
வள்ளி மருங்குல்* என்தன் மடமானினைப் போத என்று*
வெள்ளி வளைக் கைப் பற்ற* பெற்ற தாயரை விட்டு அகன்று*
அள்ளல் அம் பூங் கழனி* அணி ஆலி புகுவர்கொலோ! (2)
பண்டு இவன் ஆயன் நங்காய்!* படிறன் புகுந்து*
என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்* நுகர்ந்தானை உகந்து*
அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர* கிளிபோல் மிழற்றி நடந்து*
வண்டு அமர் கானல் மல்கும்* வயல் ஆலி புகுவர்கொலோ!
அஞ்சுவன் வெம் சொல் நங்காய்!* அரக்கர் குலப் பாவை தன்னை*
வெம் சின மூக்கு அரிந்த* விறலோன் திறம் கேட்கில் மெய்யே*
பஞ்சிய மெல் அடி* எம் பணைத் தோளி பரக்கழிந்து*
வஞ்சி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ!
ஏது அவன் தொல் பிறப்பு?* இளையவன் வளை ஊதி*
மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்* சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*
மாதவன் தன் துணையா நடந்தாள்* தடம் சூழ் புறவில்*
போது வண்டு ஆடு செம்மல்* புனல் ஆலி புகுவர்கொலோ!
தாய் எனை என்று இரங்காள்* தடந் தோளி தனக்கு அமைந்த*
மாயனை மாதவனை* மதித்து என்னை அகன்ற இவள்*
வேய் அன தோள் விசிறி* பெடை அன்னம் என நடந்து*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர்கொலோ!
என் துணை என்று எடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்*
தன் துணை ஆய என்தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்* வரம் செற்று அரங்கத்து உறையும்*
இன் துணைவனொடும் போய்* எழில் ஆலி புகுவர்கொலோ! (2)
அன்னையும் அத்தனும் என்று* அடியோமுக்கு இரங்கிற்றிலள்*
பின்னைதன் காதலன்தன்* பெருந் தோள் நலம் பேணினளால்*
மின்னையும் வஞ்சியையும்* வென்று இலங்கும் இடையாள் நடந்து*
புன்னையும் அன்னமும் சூழ்* புனல் ஆலி புகுவர்கொலோ!
முற்றிலும் பைங் கிளியும்* பந்தும் ஊசலும் பேசுகின்ற*
சிற்றில் மென் பூவையும்* விட்டு அகன்ற செழுங் கோதைதன்னைப்*
பெற்றிலேன் முற்று இழையை* பிறப்பிலி பின்னே நடந்து*
மற்று எல்லாம் கைதொழப் போய்* வயல் ஆலி புகுவர்கொலோ!
காவி அம் கண்ணி எண்ணில்* கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்*
பாவியேன் பெற்றமையால்* பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்* நெடுமாலொடும் போய்*
வாவி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ!
தாய் மனம் நின்று இரங்க* தனியே நெடுமால் துணையா*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்*
மேவிய நெஞ்சு உடையார்* தஞ்சம் ஆவது விண் உலகே. (2)
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை* பங்கயக் கண்ணனை,*
பயில இனிய* நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,*
பயிலும் திரு உடையார்* எவரேலும் அவர் கண்டீர்,*
பயிலும் பிறப்பிடை தோறு* எம்மை ஆளும் பரமரே. (2)
ஆளும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான் தன்னை,*
தோளும் ஓர் நான்கு உடைத்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை*
தாளும் தடக் கையும் கூப்பிப்* பணியும் அவர் கண்டீர்,*
நாளும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளுடை நாதரே.
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்* நறும் துழாய்ப்
போதனை* பொன் நெடும் சக்கரத்து* எந்தை பிரான் தன்னை*
பாதம் பணிய வல்லாரைப்* பணியும் அவர் கண்டீர்,*
ஓதும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளுடையார்களே.
உடை ஆர்ந்த ஆடையன்* கண்டிகையன் உடை நாணினன்*
புடை ஆர் பொன் நூலினன்* பொன் முடியன் மற்றும் பல்கலன்,*
நடையா உடைத் திருநாரணன்* தொண்டர் தொண்டர் கண்டீர்,*
இடை ஆர் பிறப்பிடைதோறு* எமக்கு எம் பெருமக்களே.
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,* அமரர்கட்கு*
அருமை ஒழிய* அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை,*
பெருமை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
வருமையும் இம்மையும்* நம்மை அளிக்கும் பிராக்களே.
அளிக்கும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான் தன்னை,*
துளிக்கும் நறும் கண்ணித்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை,*
ஒளிக் கொண்ட சோதியை* உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்,*
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச்* சன்ம சன்மாந்தரம் காப்பரே.
சன்ம சன்மாந்தரம் காத்து* அடியார்களைக் கொண்டுபோய்,*
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்* கொள்ளும் அப்பனை,*
தொன்மை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
நன்மை பெறுத்து எம்மை* நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே.
நம்பனை ஞாலம் படைத்தவனை* திரு மார்பனை,*
உம்பர் உலகினில் யார்க்கும்* உணர்வு அரியான் தன்னை,*
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்* அவர் கண்டீர்,*
எம் பல் பிறப்பிடைதோறு* எம் தொழுகுலம் தாங்களே.
குலம் தாங்கு சாதிகள்* நாலிலும் கீழ் இழிந்து,* எத்தனை
நலம் தான் இலாத* சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,*
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்* மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார்,* அடியார் தம் அடியார் எம் அடிகளே.
அடி ஆர்ந்த வையம் உண்டு* ஆல் இலை அன்னவசம் செய்யும,*
படி யாதும் இல் குழவிப்படி* எந்தை பிரான் தனக்கு,*
அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*
அடியார் அடியார் தம்* அடியார் அடியோங்களே.
அடி ஓங்கு நூற்றுவர் வீய* அன்று ஐவர்க்கு அருள்செய்த-
நெடியோனைத்,* தென் குருகூர்ச் சடகோபன்* குற்றேவல்கள்,*
அடி ஆர்ந்த ஆயிரத்துள்* இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு,* ஆரக் கற்கிற்கில்* சன்மம் செய்யாமை முடியுமே. (2)