பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
கொண்ட பெண்டிர் மக்கள்உற்றார்* சுற்றத்தவர் பிறரும்*
கண்டதோடு பட்டதுஅல்லால்* காதல்மற்றுயாதும்இல்லை*
எண்திசையும் கீழும்மேலும்* முற்றவும் உண்டபிரான்*
தொண்டரோமாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர் துணையே (2)
துணையும் சார்வும்ஆகுவார்போல்* சுற்றத்தவர்பிறரும்*
அணையவந்த ஆக்கம்உண்டேல்* அட்டைகள்போல் சுவைப்பர்*
கணைஒன்றாலே ஏழ்மரமும் எய்த* எம்கார்முகிலைப்*
புணைஎன்றுஉய்யப் போகல்அல்லால்* இல்லைகண்டீர்பொருளே.
பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்* போற்றிஎன்றுஏற்றுஎழுவர்*
இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்* என்னே என்பாரும்இல்லை*
மருள்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப் பிறந்தாற்கு*
அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்* இல்லைகண்டீர்அரணே.
அரணம்ஆவர் அற்றகாலைக்கு* என்றென்று அமைக்கப்பட்டார்*
இரணம்கொண்ட தெப்பர்ஆவர்* இன்றியிட்டாலும் அஃதே*
வருணித்துஎன்னே?* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்* இல்லைகண்டீர் சதிரே.
சதுரம்என்று தம்மைத்தாமே* சம்மதித்து இன்மொழியார்*
மதுரபோகம் துற்றவரே* வைகிமற்றுஒன்றுஉறுவர்*
அதிர்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப்பிறந்தாற்கு*
எதிர்கொள்ஆளாய் உய்யல்அல்லால்* இல்லைகண்டீர் இன்பமே.
இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!* உள்ளது நினையாதே*
தொல்லையார்கள் எத்தனைவர்* தோன்றிக் கழிந்தொழிந்தார்?*
மல்லை மூதூர்* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சொல்லிஉய்யப் போகல்அல்லால்* மற்றொன்றுஇல்லைசுருக்கே.
மற்றொன்றுஇல்லை சுருங்கச்சொன்னோம்* மாநிலத்துஎவ்உயிர்க்கும்*
சிற்றவேண்டா சிந்திப்பேஅமையும்* கண்டீர்கள்அந்தோ!*
குற்றம்அன்றுஎங்கள் பெற்றத்தாயன்* வடமதுரைப்பிறந்தான்*
குற்றம்இல்சீர் கற்றுவைகல்* வாழ்தல்கண்டீர்குணமே.
வாழ்தல்கண்டீர் குணம்இது அந்தோ!* மாயவன் அடிபரவிப்*
போழ்துபோக உள்ளகிற்கும்* புன்மைஇலாதவர்க்கு*
வாழ்துணையா* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
வீழ்துணையாப் போம்இதனில்* யாதும்இல்லைமிக்கதே.
யாதும்இல்லை மிக்குஅதனில்* என்றுஎன்று அதுகருதி*
காதுசெய்வான் கூதைசெய்து* கடைமுறை வாழ்க்கையும்போம்*
மாதுகிலின் கொடிக்கொள்மாட* வடமதுரைப்பிறந்த*
தாதுசேர்தோள் கண்ணன் அல்லால்* இல்லை கண்டீர் சரணே.
கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்* சரண்அதுநிற்கவந்து*
மண்ணின் பாரம் நீக்குதற்கே* வடமதுரைப்பிறந்தான்*
திண்ணமாநும் உடைமை உண்டேல்* அவன்அடி சேர்த்துஉய்ம்மினோ*
எண்ணவேண்டா நும்மதுஆதும்* அவன்அன்றிமற்றுஇல்லையே.
ஆதும்இல்லை மற்றுஅவனில்* என்றுஅதுவே துணிந்து*
தாதுசேர்தோள் கண்ணனைக்* குருகூர்ச்சடகோபன்சொன்ன*
தீதுஇலாத ஒண்தமிழ்கள்* இவைஆயிரத்துள் இப்பத்தும்*
ஓதவல்லபிராக்கள்* நம்மை ஆளுடையார்கள் பண்டே. (2)
பண்டைநாளாலே நின்திருஅருளும்* பங்கயத்தாள் திருஅருளும்
கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்* குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்*
தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து* உன்தாமரைக்கண்களால் நோக்காய்*
தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த* திருப்புளிங்குடிக் கிடந்தானே! (2)
குடிக்கிடந்து ஆக்கம்செய்து* நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து* உன்பொன்
அடிக்கடவாதே வழிவருகின்ற* அடியரோர்க்கு அருளி* நீஒருநாள்
படிக்குஅளவாக நிமிர்த்த* நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்*
கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை* திருப்புளிங் குடிக்கிடந்தானே.
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி* உன்திருஉடம்புஅசைய*
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்* தொண்டரோர்க்கு அருளி*
தடம்கொள் தாமரைக்கண்விழித்து* நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்*
இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்* திருப்புளிங்குடிக்கிடந்தானே!
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து* வைகுந்தத்துள் நின்று*
தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே* என்னைஆள்வாய் எனக்குஅருளி*
நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப* நாங்கள்கூத்துஆடி நின்றுஆர்ப்ப*
பளிங்குநீர் முகிலின்பவளம்போல்* கனிவாய்சிவப்பநீ காணவாராயே
பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து* நின்பல்நிலா முத்தம்*
தவழ்கதிர்முறுவல்செய்து* நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*
பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்* காய்சினப்பறவைஊர்ந்தானே!
காய்சினப்பறவைஊர்ந்து* பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல*
மாசினமாலி மாலிமான்என்று* அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*
காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்*
காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி* எம்இடர்கடிவானே!
எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!* இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்*
செம்மடல்மலருந் தாமரைப்பழனத்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து* நாம்களித்து உளம்நலம்கூர*
இம்மடஉலகர்காண நீஒருநாள்* இருந்திடாய் எங்கள்கண் முகப்பே.
எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்* இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி*
தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்* தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*
திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!* திருவைகுந்தத்துள்ளாய்! தேவா*
இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்* இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.
வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து* இதனுளும் இருந்திடாய்* அடியோம்
போற்றி ஓவாதே கண்இணை குளிர* புதுமலர்ஆகத்தைப்பருக*
சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்* செழும்பனைத் திருப்புளிங்குடியாய்*
கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த* கொடுவினைப்படைகள் வல்லானே!
கொடுவினைப்படைகள் வல்லையாய்* அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்*
கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே* கலிவயல் திருப்புளிங்குடியாய்*
வடிவுஇணைஇல்லா மலர்மகள்* மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்*
கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்* கூவுதல்வருதல் செய்யாயே.
'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று* குரைகடல் கடைந்தவன் தன்னை*
மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்* வழுதிநாடன் சடகோபன்*
நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்* இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்*
ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்* அடிஇணை உள்ளத்துஓர்வாரே (2)
ஓராயிரமாய்* உலகுஏழ்அளிக்கும்*
பேராயிரம்கொண்டதுஓர்* பீடுஉடையன்*
காராயின* காளநல்மேனியினன்*
நாரயணன்* நங்கள்பிரான்அவனே. (2)
அவனேஅகல்ஞாலம்* படைத்துஇடந்தான்*
அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான் அளந்தான்*
அவனேஅவனும்* அவனும்அவனும்*
அவனே மற்றுஎல்லாமும்* அறிந்தனமே.
அறிந்தனவேத* அரும்பொருள்நூல்கள்*
அறிந்தனகொள்க* அரும்பொருள்ஆதல்*
அறிந்தனர்எல்லாம்* அரியைவணங்கி*
அறிந்தனர்* நோய்கள்அறுக்கும்மருந்தே.
மருந்தேநங்கள்* போக மகிழ்ச்சிக்குஎன்று*
பெரும்தேவர் குழாங்கள்* பிதற்றும்பிரான்*
கரும்தேவன்எம்மான்* கண்ணன்விண்உலகம்*
தரும்தேவனைச்* சோரேல்கண்டாய்மனமே!
மனமே! உன்னை* வல்வினையேன்இரந்து*
கனமேசொல்லினேன்* இதுசோரேல்கண்டாய்*
புனம்மேவிய* பூந்தண்துழாய் அலங்கல்*
இனம்ஏதும்இலானை* அடைவதுமே.
அடைவதும்அணியார்* மலர்மங்கைதோள்*
மிடைவதும்* அசுரர்க்குவெம்போர்களே*
கடைவதும்* கடலுள்அமுதம்* என்மனம்
உடைவதும்* அவற்கேஒருங்காகவே.
ஆகம்சேர்* நரசிங்கம்அதுஆகி ஓர்*
ஆகம்வள்உகிரால்* பிளந்தான்உறை*
மாகவைகுந்தம்* காண்பதற்கு என்மனம்*
ஏகம்எண்ணும்* இராப்பகல்இன்றியே (2)
இன்றிப்போக* இருவினையும்கெடுத்து*
ஒன்றியாக்கைபுகாமை* உய்யக்கொள்வான்*
நின்றவேங்கடம்* நீள்நிலத்துஉள்ளது,
சென்றதேவர்கள்* கைதொழுவார்களே.
தொழுதுமாமலர்* நீர்சுடர்தூபம்கொண்டு*
எழுதும்என்னும்இது* மிகைஆதலின்*
பழுதுஇல்தொல்புகழ்ப்* பாம்புஅணைப்பள்ளியாய்*
தழுவுமாறுஅறியேன்* உனதாள்களே
தாளதாமரையான்* உனதுஉந்தியான்*
வாள்கொள் நீளமழுஆளி* உன்ஆகத்தான்*
ஆளராய்த்தொழுவாரும்* அமரர்கள்*
நாளும் என்புகழ்கோ* உனசீலமே?
சீலம்எல்லைஇலான்* அடிமேல்* அணி
கோலம்நீள்* குருகூர்ச்சடகோபன்* சொல்
மாலைஆயிரத்துள்* இவை பத்தினின்
பாலர்* வைகுந்தம்ஏறுதல் பான்மையே (2)
மையார்கருங்கண்ணி* கமல மலர்மேல்*
செய்யாள் திருமார்வினில்சேர்* திருமாலே*
வெய்யார்சுடர்ஆழி* சுரிசங்கம்ஏந்தும்*
கையா உன்னைக்காணக்* கருதும் என்கண்ணே. (2)
கண்ணேஉன்னைக் காணக்கருதி* என்நெஞ்சம்
எண்ணேகொண்ட* சிந்தையதாய் நின்றுஇயம்பும்*
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்புஅரியாயை*
நண்ணாது ஒழியேன் என்று* நான் அழைப்பனே
அழைக்கின்ற அடிநாயேன்* நாய்கூழை வாலால்*
குழைக்கின்றது போல* என்உள்ளம் குழையும்*
மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து* ஆநிரைகாத்தாய்.
பிழைக்கின்றதுஅருள்என்று* பேதுறுவனே
உறுவது இதுஎன்று* உனக்கு ஆள்பட்டு* நின்கண்
பெறுவது எதுகொல்என்று* பேதையேன் நெஞ்சம்*
மறுகல்செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்*
அறிவதுஅரிய* அரியாய அம்மானே!
அரியாய அம்மானை* அமரர் பிரானை*
பெரியானை* பிரமனை முன்படைத்தானை*
வரிவாள் அரவின்அணைப்* பள்ளிகொள்கின்ற*
கரியான்கழல் காணக்* கருதும் கருத்தே.
கருத்தே உன்னைக்* காணக்கருதி* என்நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன்* தேவர்கட்குஎல்லாம்*
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி* உயரத்து
ஒருத்தா* உன்னைஉள்ளும்* என்உள்ளம் உகந்தே
உகந்தேஉன்னை* உள்ளும் என்உள்ளத்து அகம்பால்*
அகம்தான் அமர்ந்தே* இடம்கொண்ட அமலா*
மிகும்தானவன் மார்வுஅகலம்* இருகூறா*
நகந்தாய் நரசிங்கம்அதுஆய உருவே!
உருவாகிய* ஆறுசமயங்கட்குஎல்லாம்*
பொருவாகி நின்றான்* அவன் எல்லாப்பொருட்கும்*
அருவாகிய ஆதியை* தேவர்கட்குஎல்லாம்*
கருவாகிய கண்ணனை* கண்டுகொண்டேனே.
கண்டுகொண்டு* என்கண்இணை ஆரக்களித்து*
பண்டைவினையாயின* பற்றோடுஅறுத்து*
தொண்டர்க்கு அமுதுஉண்ணச்* சொல்மாலைகள் சொன்னேன்*
அண்டத்துஅமரர் பெருமான்!* அடியேனே.
அடியான் இவன்என்று* எனக்குஆர்அருள்செய்யும்
நெடியானை* நிறைபுகழ் அம்சிறைப்* புள்ளின்
கொடியானை* குன்றாமல்* உலகம்அளந்த
அடியானை* அடைந்து அடியேன்* உய்ந்தவாறே
ஆறாமதயானை* அடர்த்தவன்தன்னை*
சேறுஆர்வயல்* தென்குருகூர்ச் சடகோபன்*
நூறேசொன்ன* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
ஏறேதரும்* வானவர்தம் இன்உயிர்க்கே (2)
இன்னுயிர்சேவலும் நீரும் கூவிக்கொண்டு* இங்கு எத்தனை*
என்னுயிர் நோவ மிழற்றேல்மின்* குயில் பேடைகாள்*
என்னுயிர்க் கண்ணபிரானை* நீர் வரக்கூவுகிலீர்*
என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்* இத்தனை வேண்டுமோ? (2)
இத்தனை வேண்டுவதுஅன்றுஅந்தோ!* அன்றில் பேடைகாள்*
எத்தனை நீரும் நும்சேவலும்* கரைந்துஏங்குதிர்*
வித்தகன் கோவிந்தன்* மெய்யன்அல்லன் ஒருவர்க்கும்*
அத்தனைஆம் இனி* என்உயிர் அவன்கையதே.
அவன்கையதே எனதுஆர்உயிர்* அன்றில் பேடைகாள்*
எவன்சொல்லி நீர்குடைந்துஆடுதிர்* புடைசூழவே*
தவம்செய்தில்லா* வினையாட்டியேன் உயிர் இங்குஉண்டோ*
எவன்சொல்லி நிற்றும்* நும்ஏங்கு கூக்குரல் கேட்டுமே.
கூக்குரல்கேட்டும்* நம்கண்ணன் மாயன் வெளிப்படான்*
மேல்கிளை கொள்ளேல்மின்* நீரும் சேவலும் கோழிகாள்*
வாக்கும்மனமும்* கருமமும் நமக்குஆங்கதே*
ஆக்கையும் ஆவியும்* அந்தரம் நின்றுஉழலுமே
அந்தரம் நின்றுஉழல்கின்ற* யானுடைப் பூவைகாள்*
நும்திறத்துஏதும் இடைஇல்லை* குழறேல்மினோ*
இந்திரஞாலங்கள் காட்டி* இவ்ஏழ்உலகும் கொண்ட*
நம் திருமார்பன்* நம்ஆவி உண்ண நன்குஎண்ணினான்.
நன்குஎண்ணி நான்வளர்த்த* சிறுகிளிப்பைதலே*
இன்குரல் நீ மிழற்றேல்* என்ஆர்உயிர்க் காகுத்தன்*
நின்செய்ய வாய்ஒக்கும் வாயன்* கண்ணன்கை காலினன்*
நின்பசும்சாம நிறத்தன்* கூட்டுண்டு நீங்கினான்.
கூட்டுண்டு நீங்கிய* கோலத்தாமரைக் கண்செவ்வாய்*
வாட்டம்இல்என் கருமாணிக்கம்* கண்ணன் மாயன்போல்*
கோட்டிய வில்லொடு* மின்னும் மேகக்குழாங்கள்காள்*
காட்டேல்மின் நும்உரு* என்உயிர்க்கு அதுகாலனே.
உயிர்க்குஅது காலன்என்று* உம்மை யான்இரந்தேற்குநீர்*
குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*
தயிர்ப்பழஞ்சோற்றொடு* பால்அடிசிலும் தந்து* சொல்
பயிற்றிய நல்வளம்ஊட்டினீர்* பண்புஉடையீரே!
பண்புடை வண்டொடு தும்பிகாள்* பண்மிழற்றேல்மின்*
புண்புரை வேல்கொடு* குத்தால்ஒக்கும் நும்இன்குரல்
தண்பெருநீர்த் தடம்தாமரை* மலர்ந்தால்ஒக்கும்
கண்பெரும்கண்ணன்* நம்ஆவிஉண்டுஎழ நண்ணினான்
எழநண்ணி நாமும்* நம்வானநாடனோடு ஒன்றினோம்*
பழன நல்நாரைக் குழாங்கள்காள்* பயின்றுஎன்இனி*
இழைநல்லஆக்கையும்* பையவே புயக்குஅற்றது*
தழைநல்ல இன்பம் தலைப்பெய்து* எங்கும் தழைக்கவே.
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த* பல்ஊழிக்குத்*
தன்புகழ்ஏத்தத்* தனக்குஅருள் செய்தமாயனைத்*
தென்குருகூர்ச் சடகோபன்* சொல்ஆயிரத்துள் இவை*
ஒன்பதோடு ஒன்றுக்கும்* மூவுலகும் உருகுமே (2)
உருகுமால் நெஞ்சம்* உயிரின் பரமன்றி*
பெருகுமால் வேட்கையும்* என்செய்கேன் தொண்டனேன்*
தெருவுஎல்லாம் காவிகமழ்* திருக்காட்கரை*
மருவிய மாயன்தன்* மாயம் நினைதொறே. (2)
நினைதொறும் சொல்லும்தொறும்* நெஞ்சு இடிந்துஉகும்*
வினைகொள்சீர் பாடிலும்* வேம்எனதுஆர்உயிர்*
சுனைகொள் பூஞ்சோலைத்* தென்காட்கரைஎன்அப்பா*
நினைகிலேன் நான்உனக்கு* ஆட்செய்யும் நீர்மையே.
நீர்மையால் நெஞ்சம்* வஞ்சித்துப் புகுந்து* என்னை
ஈர்மைசெய்து* என்உயிர்ஆய் என்உயிர் உண்டான்*
சீர்மல்குசோலைத்* தென்காட்கரைஎன்அப்பன்*
கார்முகில் வண்ணன்தன்* கள்வம் அறிகிலேன்.
அறிகிலேன் தன்னுள்* அனைத்துஉலகும் நிற்க*
நெறிமையால் தானும்* அவற்றுள் நிற்கும் பிரான்*
வெறிகமழ்சோலைத்* தென்காட்கரை என்அப்பன்*
சிறியவென்னாயிருண்ட திருஅருளே.
திருவருள் செய்பவன்போல* என்னுள்புகுந்து*
உருவமும் ஆருயிரும்* உடனே உண்டான்*
திருவளர்சோலைத்* தென்காட்கரைஎன்அப்பன்*
கருவளர்மேனி* என்கண்ணன் கள்வங்களே.
என்கண்ணன் கள்வம்* எனக்குச் செம்மாய்நிற்கும்*
அம்கண்ணன் உண்ட* என்ஆர்உயிர்க்கோதுஇது*
புன்கண்மை எய்தி* புலம்பி இராப்பகல்*
என்கண்ணன் என்று* அவன்காட்கரைஏத்துமே
காட்கரைஏத்தும்* அதனுள் கண்ணாஎன்னும்*
வேட்கை நோய்கூர* நினைந்து கரைந்துகும்*
ஆட்கொள் வான்ஒத்து* என்னுயிருண்ட மாயனால்*
கோள்குறைபட்டது* என்னாருயிர் கோள்உண்டே.
கோள்உண்டான் அன்றிவந்து* என்உயிர் தான்உண்டான்*
நாளும்நாள்வந்து* என்னை முற்றவும் தான்உண்டான்*
காளநீர்மேகத்* தென்காட்கரை என்அப்பற்கு*
ஆள்அன்றேபட்டது* என்ஆர்உயிர் பட்டதே.
ஆருயிர் பட்டது* எனதுஉயிர் பட்டது*
பேர்இதழ்த் தாமரைக்கண்* கனிவாயதுஓர்*
கார்எழில் மேகத்* தென்காட்கரை கோயில்கொள்,
சீர்எழில் நால்தடம்தோள்* தெய்வ வாரிக்கே.
வாரிக்கொண்டு* உன்னைவிழுங்குவன் காணில்' என்று*
ஆர்வுஉற்ற என்னை ஒழிய* என்னில் முன்னம்
பாரித்துத்* தான்என்னை* முற்றப் பருகினான்*
கார்ஒக்கும்* காட்கரைஅப்பன் கடியனே.
கடியனாய்க் கஞ்சனைக்* கொன்றபிரான் தன்னை*
கொடிமதிள் தென்குருகூர்ச்* சடகோபன்சொல்*
வடிவுஅமைஆயிரத்து* இப்பத்தினால் சன்மம்-
முடிவுஎய்தி* நாசம்கண்டீர்கள் எம்கானலே (2)
எம்கானல் அகம்கழிவாய்* இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்*
செங்கால மடநாராய்!* திருமூழிக்களத்து உறையும்*
கொங்குஆர் பூந்துழாய்முடி* எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்*
நும்கால்கள் என்தலைமேல்* கெழுமீரோ நுமரோடே. (2)
நுமரோடும் பிரியாதே* நீரும் நும் சேவலுமாய்*
அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*
எமராலும் பழிப்புண்டு* இங்கு என்தம்மால் இழிப்புண்டு*
தமரோடுஅங்கு உறைவார்க்குத்* தக்கிலமே! கேளீரே.
தக்கிலமே கேளீர்கள்* தடம்புனல்வாய் இரைதேரும்*
கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!* குளிர் மூழிக்களத்து உறையும்*
செக்கமலத்துஅலர் போலும்* கண்கைகால் செங்கனிவாய்*
அக்கமலத்துஇலைப்போலும்* திருமேனி அடிகளுக்கே.
திருமேனி அடிகளுக்குத்* தீவினையேன் விடுதூதாய்*
திருமூழிக்களம் என்னும்* செழுநகர்வாய் அணிமுகில்காள்*
திருமேனி அவட்குஅருளீர்* என்றக்கால் உம்மைத்தன்*
திருமேனி ஒளிஅகற்றி* தெளிவிசும்பு கடியுமே?
தெளிவிசும்பு கடிதுஓடி* தீவளைத்து மின்இலகும்*
ஒளிமுகில்காள்!* திருமூழிக்களத்துஉறையும் ஒண்சுடர்க்கு*
தெளிவிசும்பு திருநாடாத்* தீவினையேன் மனத்துஉறையும்*
துளிவார்கள்குழலார்க்கு* என்தூதுஉரைத்தல் செப்புமினே.
தூதுஉரைத்தல் செப்புமின்கள்* தூமொழிவாய் வண்டுஇனங்காள்*
போதுஇரைத்து மதுநுகரும்* பொழில் மூழிக்களத்துஉறையும்*
மாதரைத்தம் மார்வகத்தே* வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*
தூதுஉரைத்தல் செப்புதிரேல்* சுடர்வளையும் கலையுமே.
சுடர்வளையும் கலையும்கொண்டு* அருவினையேன் தோள்துறந்த*
படர்புகழான்* திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்*
சுடர்பவள வாயனைக்கண்டு* ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*
படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!* எனக்கு ஒன்று பணியீரே.
எனக்குஒன்று பணியீர்கள்* இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*
மனக்குஇன்பம் படமேவும்* வண்டுஇனங்காள்! தும்பிகாள்*
கனக்கொள் திண்மதிள்புடைசூழ்* திருமூழிக் களத்துஉறையும்*
புனக்கொள் காயாமேனிப்* பூந்துழாய் முடியார்க்கே.
பூந்துழாய் முடியார்க்கு* பொன்ஆழிக் கையாருக்கு*
ஏந்துநீர் இளம்குருகே!* திருமூழிக்களத்தாருக்கு*
ஏந்துபூண் முலைபயந்து* என்இணைமலர்க்கண் நீர்ததும்ப*
தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்* தகவுஅன்றுஎன்று உரையீரே
தகவுஅன்றுஎன்று உரையீர்கள்* தடம்புனல்வாய் இரைதேர்ந்து*
மிகஇன்பம் படமேவும்* மேல்நடைய அன்னங்காள்*
மிகமேனி மெலிவுஎய்தி* மேகலையும் ஈடுஅழிந்து* என்
அகமேனி ஒழியாமே* திருமூழிக் களத்தார்க்கே.
ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்* ஒண்சுடரை*
ஒழிவுஇல்லா அணிமழலைக்* கிளிமொழியாள் அலற்றியசொல்*
வழுஇல்லா வண்குருகூர்ச்* சடகோபன் வாய்ந்துஉரைத்த*
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்* நோய் அறுக்குமே (2)
அறுக்கும் வினையாயின* ஆகத்து அவனை*
நிறுத்தும் மனத்துஒன்றிய* சிந்தையினார்க்கு*
வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
குறுக்கும்வகை உண்டுகொலோ* கொடியேற்கே? (2)
கொடிஏர்இடைக்* கோகனகத்தவள் கேள்வன்*
வடிவேல் தடம்கண்* மடப்பின்னை மணாளன்*
நெடியான்உறை சோலைகள்சூழ்* திருநாவாய்*
அடியேன் அணுகப்பெறும்நாள்* எவைகொலோ!
எவைகொல் அணுகப் பெறும்நாள்?'* என்று எப்போதும்*
கவையில் மனம்இன்றி* கண்ணீர்கள் கலுழ்வன்*
நவைஇல் திருநாரணன்சேர்* திருநாவாய்*
அவையுள் புகலாவதுஓர்* நாள் அறியேனே
நாளேல் அறியேன்* எனக்குஉள்ளன* நானும்
மீளா அடிமைப்* பணி செய்யப் புகுந்தேன்*
நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வாள்ஏய் தடம்கண்* மடப்பின்னை மணாளா!
மணாளன் மலர்மங்கைக்கும்* மண் மடந்தைக்கும்*
கண்ணாளன் உலகத்துஉயிர்* தேவர்கட்குஎல்லாம்*
விண்ணாளன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
கண்ஆரக் களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்டே?
கண்டே களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்கள்*
தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்* துரிசுஇன்றி*
வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
கொண்டே உறைகின்ற* எம்கோவலர்கோவே!
கோவாகிய* மாவலியை நிலம்கொண்டாய்*
தேவாசுரம் செற்றவனே!* திருமாலே*
நாவாய்உறைகின்ற* என்நாரணநம்பீ*
'ஆஆ அடியான்* இவன் என்று அருளாயே.
அருளாது ஒழிவாய்* அருள்செய்து* அடியேனைப்
பொருளாக்கி* உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*
மருளேஇன்றி* உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்*
தெருளேதரு* தென்திருநாவாய் என்தேவே!
தேவர் முனிவர்க்குஎன்றும்* காண்டற்குஅரியன்*
மூவர் முதல்வன்* ஒருமூவுலகுஆளி*
தேவன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
யாவர் அணுகப்பெறுவார்* இனிஅந்தோ!
அந்தோ! அணுகப்பெறும்நாள்* என்றுஎப்போதும்*
சிந்தை கலங்கித்* திருமால் என்றுஅழைப்பன்*
கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வந்தே உறைகின்ற* எம்மா மணிவண்ணா!.
வண்ணம் மணிமாட* நல்நாவாய் உள்ளானைத்*
திண்ணம் மதிள்* தென்குருகூர்ச் சடகோபன்*
பண்ணார் தமிழ்* ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*
மண்ணாண்டு* மணம்கமழ்வர் மல்லிகையே. (2)
மல்லிகைகமழ் தென்றல் ஈரும்ஆலோ!* வண்குறிஞ்சி இசைதவரும்ஆலோ*
செல்கதிர் மாலையும் மயக்கும்ஆலோ!* செக்கர்நல் மேகங்கள் சிதைக்கும்ஆலோ*
அல்லிஅம் தாமரைக் கண்ணன் எம்மான்* ஆயர்கள்ஏறு அரிஏறு எம்மாயோன்*
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு* புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ! (2)
புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ! புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ*
பகலடுமாலைவண் சாந்தமாலோ!* பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*
அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து- அளந்து* எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்*
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்* இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?
இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்* இணைமுலை நமுக நுண்இடை நுடங்க*
துனிஇரும்கலவி செய்து ஆகம்தோய்ந்து* துறந்துஎம்மை இட்டுஅகல் கண்ணன்கள்வன்*
தனிஇளம்சிங்கம் எம்மாயன்வாரான்* தாமரைக் ண்ணும் செவ்வாயும் நீலப்*
பனிஇரும்குழல்களும் நான்கு தோளும்* பாவியேன் மனத்தே நின்றுஈரும்ஆலோ!
பாவியேன் மனத்தே நின்றுஈருமாலோ!* வாடை தண்வாடை வெவ்வாயாலோ*
மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!* மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*
தூவிஅம் புள்உடைத் தெய்வ வண்டுதுதைந்த* எம்பெண்மைஅம் பூஇதுதாலோ*
ஆவியின் பரம்அல்ல வகைகள்ஆலோ!* யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*
யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!* ஆ புகுமாலையும் ஆகின்றுஆலோ,*
யாமுடை ஆயன்தன் மனம் கல்ஆலோ!* அவனுடைத் தீம்குழல் ஈரும்ஆலோ*
யாமுடைத் துணைஎன்னும் தோழிமாரும்* எம்மில் முன்அவனுக்கு மாய்வர்ஆலோ*
யாமுடை ஆர்உயிர் காக்குமாறுஎன்? அவனுடை அருள் பெறும்போது அரிதே.
அவனுடைஅருள் பெறும்போது அரிதால்* அவ்அருள்அல்லன அருளும் அல்ல*
அவன்அருள் பெறுமளவு ஆவிநில்லாது* அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்*
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை* சேர்திருஆகம் எம்ஆவிஈரும்*
எவன் இனிப்புகும்இடம்? எவன் செய்கேனோ? ஆருக்குஎன் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னைமீர்காள்!* ஆர்உயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை*
கார்ஒக்கும்மேனி நம்கண்ணன் கள்வம்* கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கண் அஃதே*
சீர்உற்றஅகில் புகையாழ்நரம்பு* பஞ்சமம்தண் பசும்சாந்துஅணைந்து*
போர்உற்றவாடைதண் மல்லிகைப்பூப்* புதுமணம்முகந்துகொண்டு எறியும்ஆலோ!
புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ!* பொங்குஇளவாடை புன்செக்கர்ஆலோ*
அதுமணந்துஅகன்றநம் கண்ணன்கள்வம்* கண்ணனில் கொடிது இனிஅதனில்உம்பர்*
மதுமண மல்லிகை மந்தக்கோவை* வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து*
அதுமணந்து இன்அருள் ஆய்ச்சியர்க்கே* ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!
ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!* அதுமொழிந்துஇடை இடைதன் செய்கோலத்*
தூதுசெய் கண்கள் கொண்டுஒன்று பேசி* தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து* பேதைநெஞ்சுஅறவுஅறப் பாடும்பாட்டை*
யாதும்ஒன்று அறிகிலம் அம்மஅம்ம!* மாலையும்வந்தது மாயன்வாரான்.
மாலையும்வந்தது மாயன்வாரான்* மாமணிபுலம்ப வல்ஏறுஅணைந்த*
கோல நல்நாகுகள் உகளும்ஆலோ! கொடியன குழல்களும் குழறும்ஆலோ*
வால்ஒளி வளர்முல்லை கருமுகைகள்* மல்லிகை அலம்பி வண்டுஆலும்ஆலோ*
வேலையும் விசும்பில் விண்டுஅலறும்ஆலோ!* என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே?
அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா* அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்*
அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி* அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*
அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த* ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு*
அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்! அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே! (2)
மாலைநண்ணித்* தொழுதுஎழுமினோ வினைகெட*
காலைமாலை* கமலமலர் இட்டு நீர்*
வேலைமோதும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து*
ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்* அடிஇணைகளே. (2)
கள்அவிழும் மலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
நள்ளிசேரும் வயல்சூழ்* கிடங்கின்புடை*
வெள்ளிஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்
உள்ளி* நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!
தொண்டர் நும்தம்* துயர்போகநீர் கமாய்*
விண்டுவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
வண்டுபாடும் பொழில்சூழ்* திருக்கண்ணபுரத்து
அண்டவாணன்* அமரர்பெருமானையே
மானைநோக்கி* மடப்பின்னைதன் கேள்வனை*
தேனைவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
வானைஉந்தும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்*
தான்நயந்த பெருமான்* சரண்ஆகுமே.
சரணம்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
மரணம்ஆனால்* வைகுந்தம் கொடுக்கும்பிரான்*
அரண்அமைந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்
தரணியாளன்* தனதுஅன்பர்க்கு அன்புஆகுமே.
அன்பன்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
செம்பொன்ஆகத்து* அவுணன்உடல் கீண்டவன்,
நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து
அன்பன்* நாளும் தன* மெய்யர்க்கு மெய்யனே
மெய்யன்ஆகும்* விரும்பித் தொழுவார்க்குஎல்லாம்*
பொய்யன்ஆகும்* புறமே தொழுவார்க்குஎல்லாம்*
செய்யில்வாளைஉகளும்* திருக்கண்ணபுரத்து
ஐயன்* ஆகத்துஅணைப்பார்கட்கு அணியனே.
அணியன்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
பிணியும்சாரா* பிறவிகெடுத்துஆளும்*
மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்* திருக்கண்ணரம்
பணிமின்* நாளும் பரமேட்டிதன் பாதமே
பாதம்நாளும்* பணிய தணியும்பிணி*
ஏதம்சாரா* எனக்கேல் இனிஎன்குறை?*
வேதநாவர் விரும்பும்* திருக்கண்ணபுரத்து
ஆதியானை* அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.
இல்லை அல்லல்* எனக்கேல்இனி என்குறை?
அல்லிமாதர் அமரும்* திருமார்பினன்*
கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்
சொல்ல* நாளும் துயர் பாடுசாராவே.
பாடுசாரா* வினைபற்றுஅற வேண்டுவீர்*
மாடம்நீடு* குருகூர்ச்சடகோபன்* சொல்
பாடலானதமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்-
பாடிஆடிப்* பணிமின் அவன் தாள்களே (2)