பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு* தளர்நடைஇட்டு வருவான்*
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு* ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்*
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச* வாய்வைத்த பிரானே!*
அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே* (2)
பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன்* வருமளவு இப்பால்*
வன் பாரச் சகடம் இறச் சாடி* வடக்கில் அகம் புக்கு இருந்து*
மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை* வேற்றுருவம் செய்து வைத்த*
அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்* குடத் தயிர் சாய்த்துப் பருகி*
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்* பொன்றுவித்து இன்று நீ வந்தாய்*
இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ!* உன்னை என்மகனே என்பர் நின்றார்*
அம்மா உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை* மையன்மை செய்து அவர் பின்போய்*
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று* குற்றம் பல பல செய்தாய்*
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ* புத்தகத்துக்கு உள கேட்டேன்*
ஐயா உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு* தயிரும் விழுங்கி*
கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த* கலத்தொடு சாய்த்துப் பருகி*
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல* விம்மி விம்மி அழுகின்ற*
அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்* கற்றாநிரை மண்டித் தின்ன*
விரும்பாக் கன்று ஒன்று கொண்டு* விளங்கனி வீழ எறிந்த பிரானே!*
சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்* சூழ்வலை வைத்துத் திரியும்*
அரம்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு* வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி*
சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்* சுற்றும் தொழ நின்ற சோதி!*
பொருள்- தாயம் இலேன் எம்பெருமான்!* உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு-
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
வாளா ஆகிலும் காணகில்லார்* பிறர் மக்களை மையன்மை செய்து*
தோளால் இட்டு அவரோடு திளைத்து* நீ சொல்லப் படாதன செய்தாய்*
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன்!* வாழ்வில்லை* நந்தன்-
காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
தாய்மார் மோர் விற்கப் போவர்* தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்*
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை* நேர்படவே கொண்டு போதி*
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து* கண்டார் கழறத் திரியும்*
ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்* சோலைத் தடம் கொண்டு புக்கு*
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை* மூவேழு சென்றபின் வந்தாய்*
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்* உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்*
அத்தா உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
காரார் மேனி நிறத்து எம்பிரானைக்* கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி*
ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்* அம்மம் தாரேன் என்ற மாற்றம்*
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்* பட்டர்பிரான் சொன்ன பாடல்*
ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்* இருடிகேசன் அடியாரே* (2)
இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்* வளைமருப்பினில் அகத்துஒடுக்கி*
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்* கமலநல்மலர்த்தேறல் அருந்தி*
இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி* அம் பொழிலூடே*
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு* திருவயிந்திரபுரமே. (2)
மின்னும் ஆழி அங்கையவன்* செய்யவள் உறை தரு திரு மார்பன்*
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய* பரன் இடம் வரைச் சாரல்*
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர* பிணி அவிழ் கமலத்துத்*
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு* திருவயிந்திரபுரமே.
வையம் ஏழும் உண்டு ஆல் இலை* வைகிய மாயவன்*
அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்* மெய்தகு வரைச் சாரல்*
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய* முல்லை அம் கொடி ஆட*
செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு* திருவயிந்திரபுரமே.
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்தன்* மார்புஅகம் இரு பிளவாக்*
கூறு கொண்டு அவன் குலமகற்கு* இன் அருள் கொடுத்தவன் இடம்*
மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை* விசும்பு உற மணி நீழல்*
சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்* திருவயிந்திரபுரமே.
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல் இடம் அளந்து*
ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்* பொன் மலர் திகழ்*
வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்* குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி*
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு* திருவயிந்திரபுரமே.
கூன் உலாவிய மடந்தைதன்* கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்* கவின் ஆரும்*
வான் உலாவிய மதி தவழ் மால் வரை* மா மதிள் புடை சூழ*
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய* திருவயிந்திரபுரமே.
மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்* விலங்கலின்மிசை இலங்கை மன்னன்*
நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்* மணி வரை நீழல்*
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்* பெடையொடும் இனிது அமர*
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு* தண் திருவயிந்திரபுரமே.
விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்* வில் இறுத்து* அடல் மழைக்கு-
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்* நிலவிய இடம் தடம் ஆர்*
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு* மலை வளர் அகில் உந்தித்*
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே.
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்* விசயனுக்கு ஆய்*
மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்* குலவு தண் வரைச் சாரல்*
கால் கொள் கண் கொடி கைஎழ* கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்*
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே.
மூவர் ஆகிய ஒருவனை* மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை*
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச* தண் திருவயிந்திரபுரத்து*
மேவு சோதியை வேல் வலவன்* கலிகன்றி விரித்து உரைத்த*
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்* பாவங்கள் பயிலாவே (2)
முடிச்சோதியாய்* உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,*
அடிச்சோதி நீநின்ற* தாமரையாய் அலர்ந்ததுவோ,*
படிச்சோதி ஆடையொடும்* பல் கலனாய்,* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ?* திருமாலே! கட்டுரையே. (2)
கட்டுரைக்கில் தாமரை* நின் கண் பாதம் கை ஒவ்வா,*
சுட்டு உரைத்த நன்பொன்* உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்* புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,*
பட்டுரையாய் புற்கு என்றே* காட்டுமால் பரஞ்சோதீ!
பரஞ்சோதி! நீ பரமாய்* நின் இகழ்ந்து பின்,* மற்று ஓர்
பரம் சோதி இன்மையின்* படி ஓவி நிகழ்கின்ற,*
பரஞ்சோதி நின்னுள்ளே* படர் உலகம் படைத்த,* எம்
பரஞ்சோதி கோவிந்தா!* பண்பு உரைக்கமாட்டேனே.
மாட்டாதே ஆகிலும்* இம் மலர் தலை மாஞாலம்,* நின்
மாட்டு ஆய மலர்புரையும்* திருவுருவம் மனம் வைக்க*
மாட்டாத பலசமய* மதி கொடுத்தாய், மலர்த்துழாய்*
மாட்டேநீ மனம் வைத்தாய்* மாஞாலம் வருந்தாதே?
வருந்தாத அரும்தவத்த* மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,*
வருந்தாத ஞானம் ஆய்* வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*
வரும் காலம் நிகழ் காலம்* கழி காலம் ஆய்,* உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர்* எங்கு உலக்க ஓதுவனே?
ஓதுவார் ஓத்து எல்லாம்* எவ் உலகத்து எவ் எவையும்,*
சாதுவாய் நின் புகழின்* தகை அல்லால் பிறிது இல்லை,*
போது வாழ் புனம் துழாய்* முடியினாய்,* பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய்!* என் சொல்லி யான் வாழ்த்துவனே?
வாழ்த்துவார் பலர் ஆக* நின்னுள்ளே நான்முகனை,*
மூழ்த்த நீர் உலகு எல்லாம்* படை என்று முதல் படைத்தாய்*
கேழ்த்த சீர் அரன் முதலாக்* கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,*
சூழ்த்து அமரர் துதித்தால்* உன் தொல் புகழ் மாசூணாதே?
மாசூணாச் சுடர் உடம்புஆய்* மலராது குவியாது,*
மாசூணா ஞானம் ஆய்* முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*
மாசூணா வான் கோலத்து* அமரர் கோன் வழிப்பட்டால்,*
மாசூணா உனபாத* மலர்ச் சோதி மழுங்காதே?
மழுங்காத வைந் நுதிய* சக்கர நல் வலத்தையாய்,*
தொழும் காதல் களிறு அளிப்பான்* புள் ஊர்ந்து தோன்றினையே,*
மழுங்காத ஞானமே* படை ஆக மலர் உலகில்*
தொழும்பாயார்க்கு அளித்தால்* உன் சுடர்ச் சோதி மறையாதே?
மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,*
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய்
பிறை ஏறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறை ஆதல் அறிந்து ஏத்த* வீற்றிருத்தல் இது வியப்பே?
வியப்பாய வியப்புஇல்லா* மெய்ஞ் ஞான வேதியனைச்,*
சயப்புகழார் பலர் வாழும்* தடம் குருகூர்ச் சடகோபன்,*
துயக்கு இன்றித் தொழுது உரைத்த* ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்* ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)