பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
அஞ்சன வண்ணனை* ஆயர் கோலக் கொழுந்தினை*
மஞ்சனம் ஆட்டி* மனைகள்தோறும் திரியாமே*
கஞ்சனைக் காய்ந்த* கழல் அடி நோவக் கன்றின்பின்*
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லே பாவமே!* (2)
பற்றுமஞ்சள் பூசிப்* பாவைமாரொடு பாடியிற்*
சிற்றில் சிதைத்து எங்கும்* தீமை செய்து திரியாமே*
கற்றுத் தூளியுடை* வேடர் கானிடைக் கன்றின் பின்*
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லே பாவமே!*
நன்மணி மேகலை* நங்கைமாரொடு நாள்தொறும்*
பொன்மணி மேனி* புழுதியாடித் திரியாமே*
கல்மணி நின்று அதிர்* கான்- அதரிடைக் கன்றின்பின்*
என் மணிவண்ணனைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
வண்ணக் கருங்குழல்* மாதர் வந்து அலர் தூற்றிடப்*
பண்ணிப் பல செய்து* இப் பாடி எங்கும் திரியாமே*
கண்ணுக்கு இனியானைக்* கான் -அதரிடைக் கன்றின்பின்*
எண்ணற்கு அரியானைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
அவ்வவ் இடம் புக்கு* அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்*
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்* கூழைமை செய்யாமே*
எவ்வும் சிலை உடை* வேடர் கானிடைக் கன்றின் பின்*
தெய்வத் தலைவனைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
மிடறு மெழுமெழுத்து ஓட* வெண்ணெய் விழுங்கிப் போய்ப்*
படிறு பல செய்து* இப் பாடி எங்கும் திரியாமே*
கடிறு பல திரி* கான் -அதரிடைக் கன்றின் பின்*
இடற என்பிள்ளையைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
வள்ளி நுடங்கு-இடை* மாதர் வந்து அலர் தூற்றிடத்*
துள்ளி விளையாடித்* தோழரோடு திரியாமே*
கள்ளி உணங்கு* வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்*
புள்ளின் தலைவனைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
பன்னிரு திங்கள்* வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்*
என் இளங் கொங்கை* அமுதம் ஊட்டி எடுத்து யான்*
பொன்னடி நோவப்* புலரியே கானிற் கன்றின் பின்*
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
குடையும் செருப்பும் கொடாதே* தாமோதரனை நான்*
உடையும் கடியன ஊன்று* வெம் பரற்கள் உடைக்*
கடிய வெங் கானிடைக்* கால்- அடி நோவக் கன்றின் பின்*
கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்* :எல்லே பாவமே!*
என்றும் எனக்கு இனியானை* என் மணிவண்ணனைக்*
கன்றின் பின் போக்கினேன் என்று* அசோதை கழறிய*
பொன் திகழ் மாடப்* புதுவையர்கோன் பட்டன் சொல்*
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு* இடர் இல்லையே* (2)
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு* உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா* தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே* கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்*
தேன் ஆட மாடக் கொடி ஆடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2)
காயோடு நீடு கனி உண்டு வீசு* கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா* திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்* மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்* விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த*
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்* அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து* படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த*
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்* அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*
பெருமான் திருநாமம் பிதற்றி* நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து* கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்*
திருமால் திருமங்கையொடு ஆடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய* குல மன்னர் அங்கம் மழுவில் துணிய*
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்* தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*
பூமங்கை தங்கி புலமங்கை மன்னி* புகழ்மங்கை எங்கும் திகழ*
புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
நெய் வாய் அழல் அம்பு துரந்து* முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*
இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி* நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*
அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்* அரு மா மறை அந்தணர் சிந்தை புக*
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து* மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த*
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு* திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்* கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்*
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
மா வாயின் அங்கம் மதியாது கீறி* மழை மா முது குன்று எடுத்து*
ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்* குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*
மூவாயிரம் நான்மறையாளர்* நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்*
தேவாதிதேவன் திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்* சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்*
அரு நீல பாவம் அகல புகழ் சேர்* அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து* எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*
திரு நீலம் நின்று திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய* தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு*
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப* அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி* குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்* பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)
முந்நீர் ஞாலம் படைத்த* எம் முகில் வண்ணனே,*
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*
வெம் நாள் நோய் வீய* வினைகளை வேர் அறப் பாய்ந்து,*
எந் நாள் யான் உன்னை* இனி வந்து கூடுவனே? (2)
வன் மா வையம் அளந்த* எம் வாமனா,* நின்
பல்மா மாயப்* பல் பிறவியில் படிகின்ற யான்,*
தொல் மா வல்வினைத்* தொடர்களை முதல் அரிந்து,*
நின் மா தாள் சேர்ந்து* நிற்பது எஞ்ஞான்றுகொலோ?
கொல்லா மாக்கோல்* கொலைசெய்து பாரதப் போர்,*
எல்லாச் சேனையும்* இரு நிலத்து அவித்த எந்தாய்,*
பொல்லா ஆக்கையின்* புணர்வினை அறுக்கல் அறா,*
சொல்லாய் யான் உன்னைச்* சார்வது ஓர் சூழ்ச்சியே.
சூழ்ச்சி ஞானச்* சுடர் ஒளி ஆகி,* என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி* எங்கணும் நிறைந்த எந்தாய்,*
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து* நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி,* யான் சேரும்* வகை அருளாய் வந்தே.
வந்தாய் போலே* வந்தும் என் மனத்தினை நீ,*
சிந்தாமல் செய்யாய்* இதுவே இது ஆகில்,*
கொந்து ஆர் காயாவின்* கொழு மலர்த் திருநிறத்த
எந்தாய்,* யான் உன்னை* எங்கு வந்து அணுகிற்பனே?
கிற்பன் கில்லேன்* என்று இலன் முனம் நாளால்,*
அற்ப சாரங்கள்* அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*
பற்பல் ஆயிரம்* உயிர் செய்த பரமா,* நின்
நற் பொன் சோதித்தாள்* நணுகுவது எஞ்ஞான்றே?
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து* இரங்கி நெஞ்சே!*
மெய்ஞ்ஞானம் இன்றி* வினை இயல் பிறப்பு அழுந்தி,*
எஞ்ஞான்றும் எங்கும்* ஒழிவு அற நிறைந்து நின்ற,*
மெய்ஞ் ஞானச் சோதிக்* கண்ணனை மேவுதுமே?
மேவு துன்ப வினைகளை* விடுத்துமிலேன்,*
ஓவுதல் இன்றி* உன் கழல் வணங்கிற்றிலேன்,*
பாவு தொல் சீர்க் கண்ணா!* என் பரஞ்சுடரே,*
கூவுகின்றேன் காண்பான்* எங்கு எய்தக் கூவுவனே?
கூவிக் கூவிக்* கொடுவினைத் தூற்றுள் நின்று*
பாவியேன் பல காலம்* வழி திகைத்து அலமர்கின்றேன்,*
மேவி அன்று ஆ நிரை காத்தவன்* உலகம் எல்லாம்,*
தாவிய அம்மானை* எங்கு இனித் தலைப்பெய்வனே?
தலைப்பெய் காலம்* நமன்தமர் பாசம் விட்டால்,*
அலைப்பூண் உண்ணும்* அவ் அல்லல் எல்லாம் அகல,*
கலைப் பல் ஞானத்து* என் கண்ணனைக் கண்டுகொண்டு,*
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது* நீடு உயிரே
உயிர்கள் எல்லா* உலகமும் உடையவனைக்,*
குயில் கொள் சோலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசை மாலை* ஆயிரத்துள் இப் பத்தும்,*
உயிரின்மேல் ஆக்கை* ஊனிடை ஒழிவிக்குமே. (2)