பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
நல்லது ஓர் தாமரைப் பொய்கை* நாண்மலர் மேல் பனி சோர*
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு* அழகழிந்தால் ஒத்ததாலோ*
இல்லம் வெறியோடிற்றாலோ* என்மகளை எங்கும் காணேன்*
மல்லரை அட்டவன் பின்போய்* மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?* (2)
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத* உருவறைக் கோபாலர் தங்கள்*
கன்று கால் மாறுமா போலே* கன்னி இருந்தாளைக் கொண்டு*
நன்றும் கிறி செய்து போனான்* நாராயணன் செய்த தீமை*
என்றும் எமர்கள் குடிக்கு* ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ?*
குமரி மணம் செய்து கொண்டு* கோலம் செய்து இல்லத்து இருத்தி*
தமரும் பிறரும் அறியத்* தாமோதரற்கு என்று சாற்றி*
அமரர் பதியுடைத் தேவி* அரசாணியை வழிபட்டு*
துமிலம் எழப் பறை கொட்டித்* தோரணம் நாட்டிடுங் கொல்லோ?*
ஒரு மகள் தன்னை உடையேன்* உலகம் நிறைந்த புகழால்*
திருமகள் போல வளர்த்தேன்* செங்கண் மால் தான் கொண்டு போனான்*
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து* பெரும்பிள்ளை பெற்ற அசோதை*
மருமகளைக் கண்டு உகந்து* மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?*
தம் மாமன் நந்தகோபாலன்* தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்*
செம்மாந்திரே என்று சொல்லி* செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்*
கொம்மை முலையும் இடையும்* கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு*
இம் மகளைப் பெற்ற தாயர்* இனித் தரியார் என்னுங் கொல்லோ?*
வேடர் மறக்குலம் போலே* வேண்டிற்றுச் செய்து என்மகளைக்*
கூடிய கூட்டமே யாகக்* கொண்டு குடி வாழுங் கொல்லோ?*
நாடும் நகரும் அறிய* நல்லது ஓர் கண்ணாலம் செய்து*
சாடு இறப் பாய்ந்த பெருமான்* தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?*
அண்டத்து அமரர் பெருமான்* ஆழியான் இன்று என்மகளைப்*
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்* பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*
கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து* கோவலப் பட்டம் கவித்துப்*
பண்டை மணாட்டிமார் முன்னே* பாதுகாவல் வைக்குங் கொல்லோ?*
குடியிற் பிறந்தவர் செய்யும்* குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ!*
நடை ஒன்றும் செய்திலன் நங்காய்!* நந்தகோபன் மகன் கண்ணன்*
இடை இருபாலும் வணங்க* இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்*
கடைகயிறே பற்றி வாங்கிக்* கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?*
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை* வெள்வரைப்பின் முன் எழுந்து*
கண் உறங்காதே இருந்து* கடையவும் தான்வல்லள் கொல்லோ?*
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்* உலகளந்தான் என்மகளைப்*
பண் அறையாப் பணிகொண்டு* பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*
மாயவன் பின்வழி சென்று* வழியிடை மாற்றங்கள் கேட்டு*
ஆயர்கள் சேரியிலும் புக்கு* அங்குத்தை மாற்றமும் எல்லாம்*
தாயவள் சொல்லிய சொல்லைப்* தண் புதுவைப் பட்டன் சொன்ன*
தூய தமிழ் பத்தும் வல்லார்* தூ மணிவண்ணனுக்கு ஆளரே* (2)
நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!* நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
எமக்கே அருளாய் எனநின்று* இமையோர் பரவும்இடம்*
எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே* களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து*
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)
முதலைத் தனி மா முரண் தீர அன்று* முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய*
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி* வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்*
பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்* பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்*
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய* அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்*
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு* அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்*
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்* அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி*
மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று* திசை நான்கும் நான்கும் இரிய* செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய* கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்தான்*
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்* ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்*
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு* இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து*
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து* தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்தான்*
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே* குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு*
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்* பகு வாய்க் கழுதுக்கு இரங்காது* அவள்தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்* உடனே சுவைத்தான் இடம்*
ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி* கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து*
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்* தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்*
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்* அடி வைத்த அம்மான் இடம்*
மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்* செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*
முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!
துளைஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்* துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்* விளைவித்த அம்மான் இடம்*
வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று* மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல்*
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த* விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும்*
படையோடு சங்கு ஒன்று உடையாய்! 'என நின்று* இமையோர் பரவும் இடம்*
பைந் தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்ப* தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்*
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்* மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*
கண்டார் வணங்கக் களி யானை மீதே* கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்*
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்* விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)
முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்* சீர்
அடியானே,* ஆழ் கடலைக் கடைந்தாய்!* புள் ஊர்
கொடியானே,* கொண்டல் வண்ணா!* அண்டத்து உம்பரில்
நெடியானே!,* என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)
நெஞ்சமே! நீள் நகர் ஆக* இருந்த என்
தஞ்சனே,* தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே,* ஞாலம் கொள்வான்* குறள் ஆகிய
வஞ்சனே,* என்னும் எப்போதும்,* என் வாசகமே
வாசகமே ஏத்த அருள் செய்யும்* வானவர் தம்-
நாயகனே,* நாள் இளம் திங்களைக்* கோள் விடுத்து,*
வேய் அகம் பால் வெண்ணெய்* தொடு உண்ட ஆன் ஆயர்-
தாயவனே,* என்று தடவும் என் கைகளே.
கைகளால் ஆரத்* தொழுது தொழுது உன்னை,*
வைகலும் மாத்திரைப்* போதும் ஓர் வீடு இன்றி,*
பை கொள் பாம்பு ஏறி* உறை பரனே,* உன்னை
மெய்கொள்ளக் காண( விரும்பும் என் கண்களே.
கண்களால் காண* வருங்கொல்? என்று ஆசையால்,*
மண் கொண்ட வாமனன்* ஏற மகிழ்ந்து செல்,*
பண் கொண்ட புள்ளின்* சிறகு ஒலி பாவித்து,*
திண் கொள்ள ஓர்க்கும்* கிடந்து என் செவிகளே.
செவிகளால் ஆர* நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே* காலப் பண் தேன்* உறைப்பத் துற்று,*
புவியின்மேல்* பொன் நெடும் சக்கரத்து உன்னையே.*
அவிவு இன்றி ஆதரிக்கும்* எனது ஆவியே.
ஆவியே! ஆர் அமுதே!* என்னை ஆளுடைத்,*
தூவி அம் புள் உடையாய்!* சுடர் நேமியாய்,*
பாவியேன் நெஞ்சம்* புலம்பப் பலகாலும்,*
கூவியும் காணப்பெறேன்* உன கோலமே.
கோலமே! தாமரைக் கண்ணது ஓர்* அஞ்சன
நீலமே,* நின்று எனது ஆவியை* ஈர்கின்ற
சீலமே,* சென்று செல்லாதன* முன் நிலாம்
காலமே,* உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?
கொள்வன் நான் மாவலி* மூவடி தா என்ற
கள்வனே,* கஞ்சனை வஞ்சித்து* வாணனை
உள் வன்மை தீர,* ஓர் ஆயிரம் தோள் துணித்த*
புள் வல்லாய்,* உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?
பொருந்திய மா மருதின் இடை போய* எம்
பெருந்தகாய்,* உன் கழல்* காணிய பேதுற்று,*
வருந்திநான்* வாசகமாலை கொண்டு* உன்னையே
இருந்து இருந்து* எத்தனை காலம் புலம்புவனே?
புலம்பு சீர்ப்* பூமி அளந்த பெருமானை,*
நலம்கொள்சீர்* நன் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்து,
இலங்குவான்* யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)