பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    ஒரு நாயகமாய்*  ஓட உலகு உடன் ஆண்டவர்,* 
    கரு நாய் கவர்ந்த காலர்*  சிதைகிய பானையர்,*

    பெரு நாடு காண*  இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,* 
    திருநாரணன் தாள்*  காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.


    உய்ம்மின் திறைகொணர்ந்து*  என்று உலகு ஆண்டவர்,*  இம்மையே 
    தம் இன்சுவை மடவாரைப்*  பிறர் கொள்ளத் தாம் விட்டு* 

    வெம் மின் ஒளிவெயில்*  கானகம் போய்க் குமைதின்பர்கள்,* 
    செம்மின் முடித் திருமாலை*  விரைந்து அடி சேர்மினோ. 


    அடி சேர் முடியினர் ஆகி*  அரசர்கள் தாம் தொழ,* 
    இடி சேர் முரசங்கள்*  முற்றத்து இயம்ப இருந்தவர்,* 

    பொடி சேர் துகளாய்ப் போவர்கள்*  ஆதலில் நொக்கெனக்,* 
    கடி சேர் துழாய்முடிக்*  கண்ணன் கழல்கள் நினைமினோ. 


    நினைப்பான் புகில் கடல் எக்கலின்*  நுண்மணலில் பலர்,* 
    எனைத்தோர் உகங்களும்*  இவ் உலகு ஆண்டு கழிந்தவர்,* 

    மனைப்பால் மருங்கு*  அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,* 
    பனைத் தாள் மத களிறு அட்டவன்*  பாதம் பணிமினோ.


    பணிமின் திருவருள் என்னும்*  அம் சீதப் பைம் பூம் பள்ளி,* 
    அணி மென் குழலார்*  இன்பக் கலவி அமுது உண்டார்,* 

    துணி முன்பு நால*  பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்,* 
    மணி மின்னு மேனி*  நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.  


    வாழ்ந்தார்கள் வாழ்ந்தது*  மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,* 
    ஆழ்ந்தார் என்று அல்லால்*  அன்று முதல் இன்று அறுதியா,*

    வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்*  என்பது இல்லை நிற்குறில்,* 
    ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி*  அண்ணல் அடியவர் ஆமினோ.  


    ஆம் இன் சுவை அவை*  ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்,* 
    தூ மென் மொழி மடவார்*  இரக்கப் பின்னும் துற்றுவார்,* 

    ஈமின் எமக்கு ஒரு துற்று என்று*  இடறுவர் ஆதலின்,* 
    கோமின் துழாய் முடி*  ஆதி அம் சோதி குணங்களே.        


    குணம் கொள் நிறை புகழ் மன்னர்*  கொடைக்கடன் பூண்டிருந்து,* 
    இணங்கி உலகு உடன் ஆக்கிலும்*  ஆங்கு அவனை இல்லார்,*

    மணம் கொண்ட போகத்து மன்னியும்*  மீள்வர்கள் மீள்வு இல்லை,* 
    பணம் கொள் அரவு அணையான்*  திருநாமம் படிமினோ.


    படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து*  ஐம்புலன் வென்று,* 
    செடி மன்னு காயம் செற்றார்களும்*  ஆங்கு அவனை இல்லார்,* 

    குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும்*  மீள்வர்கள் மீள்வு இல்லை,* 
    கொடி மன்னு புள் உடை*  அண்ணல் கழல்கள் குறுகுமினோ.


    குறுக மிக உணர்வத்தொடு நோக்கி*  எல்லாம்விட்ட,* 
    இறுகல் இறப்பு என்னும்*  ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,* 

    சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்*  பின்னும் வீடு இல்லை,* 
    மறுகல் இல் ஈசனைப் பற்றி*  விடாவிடில் வீடு அஃதே. 


    அஃதே உய்யப் புகும் ஆறு என்று*  கண்ணன் கழல்கள் மேல்,* 
    கொய் பூம் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,* 

    செய் கோலத்து ஆயிரம்*  சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,* 
    அஃகாமல் கற்பவர்*  ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.      


    பாலன் ஆய்*  ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,* 
    ஆல் இலை*  அன்னவசம் செய்யும் அண்ணலார்,* 

    தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
    மாலுமால்,*  வல்வினையேன்*  மட வல்லியே. (2)  


    வல்லி சேர் நுண் இடை*  ஆய்ச்சியர் தம்மொடும்,* 
    கொல்லைமை செய்து*  குரவை பிணைந்தவர்,* 

    நல் அடிமேல் அணி*  நாறு துழாய் என்றே 
    சொல்லுமால்,*  சூழ் வினையாட்டியேன் பாவையே.   


    பா இயல் வேத*  நல் மாலை பல கொண்டு,* 
    தேவர்கள் மா முனிவர்*  இறைஞ்ச நின்ற* 

    சேவடிமேல் அணி*  செம் பொன் துழாய் என்றே 
    கூவுமால்,*  கோள் வினையாட்டியேன் கோதையே.   


    கோது இல வண்புகழ்*  கொண்டு சமயிகள்,* 
    பேதங்கள் சொல்லிப்*  பிதற்றும் பிரான்பரன்,*

    பாதங்கள் மேல் அணி*  பைம் பொன் துழாய் என்றே 
    ஓதுமால்,*  ஊழ்வினையேன்*  தடந் தோளியே.     


    தோளி சேர் பின்னை பொருட்டு*  எருது ஏழ் தழீஇக் 
    கோளியார்*  கோவலனார்*  குடக் கூத்தனார்,* 

    தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
    நாளும்நாள்,*  நைகின்றதால்*  என்தன் மாதரே       


    மாதர் மா மண்மடந்தைபொருட்டு*  ஏனம் ஆய்,* 
    ஆதி அம் காலத்து*  அகல் இடம் கீண்டவர்,* 

    பாதங்கள்மேல் அணி*  பைம் பொன் துழாய் என்றே 
    ஓதுமால்,*  எய்தினள் என் தன் மடந்தையே.    


    மடந்தையை*  வண் கமலத் திருமாதினை,* 
    தடம் கொள் தார் மார்பினில்*  வைத்தவர் தாளின்மேல்,* 

    வடம் கொள் பூம் தண் அம் துழாய்மலர்க்கே*  இவள் 
    மடங்குமால்*  வாள் நுதலீர்!! என் மடக்கொம்பே. 


    கொம்பு போல் சீதைபொருட்டு*  இலங்கை நகர்* 
    அம்பு எரி உய்த்தவர்*  தாள் இணைமேல் அணி,*

    வம்பு அவிழ் தண் அம் துழாய்*  மலர்க்கே இவள்- 
    நம்புமால்,*  நான் இதற்கு என்செய்கேன்* நங்கைமீர்!


    நங்கைமீர்! நீரும்*  ஓர் பெண் பெற்று நல்கினீர்,* 
    எங்ஙனே சொல்லுகேன்*  யான் பெற்ற ஏழையை,* 

    சங்கு என்னும் சக்கரம் என்னும்*  துழாய் என்னும்,* 
    இங்ஙனே சொல்லும்*  இராப் பகல் என்செய்கேன்?   


    என் செய்கேன்? என்னுடைப் பேதை*  என் கோமளம்,* 
    என் சொல்லும்*  என் வசமும் அல்லள் நங்கைமீர்,*

    மின் செய் பூண் மார்பினன்*  கண்ணன் கழல் துழாய்,* 
    பொன் செய்பூண்*  மென்முலைக்கு என்று மெலியுமே


    மெலியும் நோய் தீர்க்கும்*  நம் கண்ணன் கழல்கள்மேல்,* 
    மலி புகழ் வண் குருகூர்ச்*  சடகோபன் சொல்,*

    ஒலி புகழ் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்* 
    மலி புகழ் வானவர்க்கு ஆவர்*  நல் கோவையே. (2)    


    கோவை வாயாள் பொருட்டு*  ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,*  மதிள் இலங்கைக் 
    கோவை வீயச் சிலை குனித்தாய்!*  குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,* 

    பூவை வீயா நீர் தூவிப்*  போதால் வணங்கேனேலும்,*  நின் 
    பூவை வீயாம் மேனிக்குப்*  பூசும் சாந்து என் நெஞ்சமே. 


    பூசும் சாந்து என் நெஞ்சமே*  புனையும் கண்ணி எனதுடைய,* 
    வாசகம் செய் மாலையே*  வான் பட்டு ஆடையும் அஃதே,*

    தேசம் ஆன அணிகலனும்*  என் கைகூப்புச் செய்கையே,* 
    ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த*  எந்தை ஏக மூர்த்திக்கே.  


    ஏக மூர்த்தி இரு மூர்த்தி*  மூன்று மூர்த்தி பல மூர்த்தி- 
    ஆகி,*  ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,* 

    நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற*  நாராயணனே உன்- 
    ஆகம் முற்றும் அகத்து அடக்கி*  ஆவி அல்லல் மாய்த்ததே. 


    மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த*  மாயப் பேய் உயிர்- 
    மாய்த்த,*  ஆய மாயனே! வாமனனே மாதவா,* 

    பூத்தண் மாலை கொண்டு*  உன்னைப் போதால் வணங்கேனேலும்,*  நின் 
    பூத்தண் மாலை நெடுமுடிக்குப்*  புனையும் கண்ணி எனது உயிரே.  


    கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,* 
    எண் இல் பல்கலன்களும்*  ஏலும் ஆடையும் அஃதே,*

    நண்ணி மூவுலகும்*  நவிற்றும் கீர்த்தியும் அஃதே,* 
    கண்ணன் எம் பிரான் எம்மான்*  கால சக்கரத்தானுக்கே.   


    கால சக்கரத்தொடு*  வெண் சங்கம் கை ஏந்தினாய்,* 
    ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாராயணனே என்று என்று,* 

    ஓலம் இட்டு நான் அழைத்தால்*  ஒன்றும் வாராயாகிலும்,* 
    கோலம் ஆம் என் சென்னிக்கு*  உன் கமலம் அன்ன குரைகழலே.


    குரைகழல்கள் நீட்டி*  மண் கொண்ட கோல வாமனா,* 
    குரை கழல் கைகூப்புவார்கள்*  கூட நின்ற மாயனே,* 

    விரை கொள் பூவும் நீரும்கொண்டு*  ஏத்தமாட்டேனேலும்,*  உன் 
    உரை கொள் சோதித் திரு உருவம்*  என்னது ஆவி மேலதே.  


    என்னது ஆவி மேலையாய்*  ஏர் கொள் ஏழ் உலகமும்,* 
    துன்னி முற்றும் ஆகி நின்ற*  சோதி ஞான மூர்த்தியாய்,* 

    உன்னது என்னது ஆவியும்,*  என்னது உன்னது ஆவியும்* 
    இன்ன வண்ணமே நின்றாய்*  என்று உரைக்க வல்லேனே?   


    உரைக்க வல்லேன் அல்லேன்*  உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்* 
    கரைக்கண் என்று செல்வன் நான்?*  காதல் மையல் ஏறினேன்,*

    புரைப்பு இலாத பரம்பரனே!*  பொய் இலாத பரஞ்சுடரே,* 
    இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த*  யானும் ஏத்தினேன்.       


    யானும் ஏத்தி*  ஏழ் உலகும் முற்றும் ஏத்தி,*  பின்னையும் 
    தானும் ஏத்திலும்*  தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்,*

    தேனும் பாலும் கன்னலும்*  அமுதும் ஆகித் தித்திப்ப,* 
    யானும் எம் பிரானையே ஏத்தினேன்*  யான் உய்வானே


    உய்வு உபாயம் மற்று இன்மை தேறி*  கண்ணன் ஒண் கழல்கள் மேல்* 
    செய்ய தாமரைப் பழனத்*  தென்னன் குருகூர்ச் சடகோபன்,*

    பொய் இல் பாடல் ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்,* 
    வையம் மன்னி வீற்றிருந்து*  விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)


    மண்ணை இருந்து துழாவி*  'வாமனன் மண் இது' என்னும்,* 
    விண்ணைத் தொழுது அவன் மேவு*  வைகுந்தம் என்று கை காட்டும்,* 

    கண்ணை உள்நீர் மல்க நின்று*  'கடல்வண்ணன்' என்னும் அன்னே!*  என் 
    பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு*  என் செய்கேன் பெய் வளையீரே? (2)      


    பெய்வளைக் கைகளைக் கூப்பி*  'பிரான்கிடக்கும் கடல்' என்னும்,* 
    செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி,*  'சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,* 

    நையும் கண்ணீர் மல்க நின்று*  'நாரணன்' என்னும் அன்னே,*  என் 
    தெய்வ உருவில் சிறுமான்*  செய்கின்றது ஒன்று அறியேனே.


    அறியும் செந்தீயைத் தழுவி*  'அச்சுதன்' என்னும்மெய்வேவாள்,* 
    எறியும்தண் காற்றைத் தழுவி*  'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,*

    வெறிகொள் துழாய் மலர் நாறும்*  வினையுடையாட்டியேன் பெற்ற* 
    செறிவளை முன்கைச் சிறுமான்*  செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?   


    ஒன்றிய திங்களைக் காட்டி*  'ஒளிமணி வண்ணனே' என்னும்* 
    நின்ற குன்றத்தினை நோக்கி* நெடுமாலே! வா 'என்று கூவும்,* 

    நன்று பெய்யும் மழை காணில்*  நாரணன் வந்தான் என்று ஆலும்,* 
    என்று இன மையல்கள் செய்தான்*  என்னுடைக் கோமளத்தையே?


    கோமள வான் கன்றைப் புல்கி*  கோவிந்தன் மேய்த்தன' என்னும்,* 
    போம் இள நாகத்தின் பின்போய்*  அவன் கிடக்கை ஈது என்னும்,*

    ஆம் அளவு ஒன்றும் அறியேன்*  அருவினையாட்டியேன் பெற்ற,* 
    கோமள வல்லியை மாயோன்*  மால் செய்து செய்கின்ற கூத்தே.


    கூத்தர் குடம் எடுத்து ஆடில்*  'கோவிந்தன்ஆம்' எனா ஓடும்,* 
    வாய்த்த குழல் ஓசை கேட்கில்*  'மாயவன்' என்று மையாக்கும்,*

    ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்*  அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,* 
    பேய்ச்சி முலை சுவைத்தாற்கு*  என் பெண்கொடி ஏறிய பித்தே!


    ஏறிய பித்தினோடு*  எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,* 
    நீறு செவ்வே இடக் காணில்*  நெடுமால் அடியார்' என்று ஓடும்,*

    நாறு துழாய் மலர் காணில்*  நாரணன் கண்ணி ஈது என்னும்,* 
    தேறியும் தேறாதும் மாயோன்*  திறத்தனளே இத் திருவே.


    திரு உடை மன்னரைக் காணில்,*  திருமாலைக் கண்டேனே என்னும்,* 
    உரு உடை வண்ணங்கள் காணில்*  'உலகு அளந்தான்' என்று துள்ளும்,*

    கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்*  'கடல்வண்ணன் கோயிலே' என்னும்* 
    வெருவிலும் வீழ்விலும் ஓவாள்*  கண்ணன் கழல்கள் விரும்புமே.      


    விரும்பிப் பகவரைக் காணில்*  'வியல் இடம் உண்டானே!' என்னும்,* 
    கரும் பெரு மேகங்கள் காணில்*  'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்,*

    பெரும் புல ஆ நிரை காணில்*  'பிரான் உளன்' என்று பின் செல்லும்,* 
    அரும் பெறல் பெண்ணினை மாயோன்*  அலற்றி அயர்ப்பிக்கின்றானே!    


    அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி*  அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,* 
    வியர்க்கும் மழைக்கண் துளும்ப*  வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்,* 
     

    பெயர்த்தும் கண்ணா! என்று பேசும்,*  பெருமானே! வா! என்று கூவும்,* 
    மயல் பெருங் காதல் என் பேதைக்கு*  என்செய்கேன் வல்வினையேனே!   


    வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,* 
    சொல் வினையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இவை பத்தும்,*

    நல் வினை என்று கற்பார்கள்*  நலனிடை வைகுந்தம் நண்ணி,*
    தொல்வினை தர எல்லாரும்*  தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)


    வீற்றிருந்து ஏழ் உலகும்*  தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,* 
    ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை*  வெம் மா பிளந்தான் தன்னை,* 

    போற்றி என்றே கைகள் ஆரத்*  தொழுது சொல் மாலைகள்,* 
    ஏற்ற நோற்றேற்கு*  இனி என்ன குறை எழுமையுமே?   (2)


    மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்*  உறை மார்பினன்,* 
    செய்ய கோலத் தடங் கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,* 

    மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி*  உள்ளப்பெற்றேன்,* 
    வெய்ய நோய்கள் முழுதும்*  வியன் ஞாலத்து வீயவே. 


    வீவு இல் இன்பம்மிக*  எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்,* 
    வீவு இல் சீரன் மலர்க் கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,*

    வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி*  மேவப்பெற்றேன்,* 
    வீவு இல் இன்பம்மிக*  எல்லை நிகழ்ந்தனன் மேவியே.   


    மேவி நின்று தொழுவார்*  வினை போக மேவும் பிரான்,* 
    தூவி அம் புள் உடையான்*  அடல் ஆழி அம்மான் தன்னை,

    நா இயலால் இசைமாலைகள் ஏத்தி*  நண்ணப் பெற்றேன்,* 
    ஆவி என் ஆவியை*  யான் அறியேன் செய்த ஆற்றையே.


    ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை,*  அமரர்தம்- 
    ஏற்றை*  எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை,* 

    மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி*  நாளும் மகிழ்வு எய்தினேன்,* 
    காற்றின் முன்னம் கடுகி*  வினை நோய்கள் கரியவே.


    கரிய மேனிமிசை*  வெளிய நீறு சிறிதே இடும்,* 
    பெரிய கோலத் தடங்கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,* 

    உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி*  உள்ளப்பெற்றேற்கு,* 
    அரியது உண்டோ எனக்கு*  இன்று தொட்டும் இனி என்றுமே?    


    என்றும் ஒன்று ஆகி*  ஒத்தாரும் மிக்கார்களும்,*  தன் தனக்கு -
    இன்றி நின்றானை*  எல்லா உலகும் உடையான் தன்னை,* 

    குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை*  சொல் மாலைகள்,* 
    நன்று சூட்டும் விதி எய்தினம்*  என்ன குறை நமக்கே?          


    நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்*  இன்பனை,*  ஞாலத்தார்- 
    தமக்கும்*  வானத்தவர்க்கும் பெருமானை,*  தண் தாமரை- 

    சுமக்கும்*  பாதப் பெருமானை*  சொல்மாலைகள் சொல்லுமாறு- 
    அமைக்க வல்லேற்கு*  இனி யாவர் நிகர் அகல் வானத்தே?


    வானத்தும் வானத்துள் உம்பரும்*  மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த் 
    தானத்தும்,*  எண் திசையும் தவிராது*  நின்றான் தன்னை,*  

    கூனல் சங்கத் தடக்கையவனை*  குடம் ஆடியை 
    வானக் கோனை,*  கவி சொல்ல வல்லேற்கு*  இனி மாறுஉண்டே?   


    உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்*  கிடந்தும் நின்றும்,* 
    கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்*  மணம் கூடியும்,* 

    கண்ட ஆற்றால் தனதே*  உலகு என நின்றான் தன்னை,* 
    வண் தமிழ் நூற்க நோற்றேன்*  அடியார்க்கு இன்ப மாரியே.


    மாரி மாறாத தண் அம் மலை*  வேங்கடத்து அண்ணலை,* 
    வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்*  குருகூர் நகர்க்,* 

    காரி மாறன் சடகோபன்*  சொல் ஆயிரத்து இப் பத்தால்,* 
    வேரி மாறாத பூமேல் இருப்பாள்*  வினை தீர்க்குமே.


    தீர்ப்பாரை யாம் இனி*  எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
    ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்*  உற்ற நல் நோய் இது தேறினோம்,* 

    போர்ப்பாகு தான் செய்து*  அன்று ஐவரை வெல்வித்த,*  மாயப்போர்த் 
    தேர்ப்பாகனார்க்கு*  இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?


    திசைக்கின்றதே இவள் நோய்*  இது மிக்க பெருந் தெய்வம்,* 
    இசைப்பு இன்றி*  நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது,*

    திசைப்பு இன்றியே*  சங்கு சக்கரம் என்று இவள் கேட்க,*  நீர் 
    இசைக்கிற்றிராகில்*  நன்றே இல் பெறும் இது காண்மினே.  


    இது காண்மின் அன்னைமீர்!*  இக் கட்டுவிச்சி சொல் கொண்டு,*  நீர் 
    எதுவானும் செய்து*  அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,* 

    மது வார் துழாய்முடி*  மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்,* 
    அதுவே இவள் உற்ற நோய்க்கும்*  அரு மருந்து ஆகுமே.


    மருந்து ஆகும் என்று அங்கு ஓர்*  மாய வலவை சொல் கொண்டு,*  நீர் 
    கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும்*  களன் இழைத்து என் பயன்?* 

    ஒருங்காகவே உலகு ஏழும்*  விழுங்கி உமிழ்ந்திட்ட,* 
    பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில்*  இவளைப் பெறுதிரே. 


    இவளைப் பெறும்பரிசு*  இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ,* 
    குவளைத் தடங் கண்ணும்*  கோவைச் செவ்வாயும் பயந்தனள்,* 

    கவளக் கடாக் களிறு அட்ட பிரான்*  திருநாமத்தால்,* 
    தவளப் பொடிக்கொண்டு*  நீர்இட்டிடுமின் தணியுமே.     


    தணியும் பொழுது இல்லை*  நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்,* 
    பிணியும் ஒழிகின்றது இல்லை*  பெருகும் இது அல்லால்,* 

    மணியின் அணிநிற மாயன்*  தமர் அடி நீறுகொண்டு* 
    அணிய முயலின்*  மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.


    அணங்குக்கு அரு மருந்து என்று*  அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்* 
    துணங்கை எறிந்து*  நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*

    உணங்கல் கெடக்*  கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? 
    வணங்கீர்கள் மாயப் பிரான்*  தமர் வேதம் வல்லாரையே.


    வேதம் வல்லார்களைக் கொண்டு*  விண்ணோர் பெருமான் திருப்- 
    பாதம் பணிந்து,*  இவள் நோய்*  இது தீர்த்துக் கொள்ளாது போய்*

    ஏதம் பறைந்து அல்ல செய்து*  கள் ஊடு கலாய்த் தூய்,* 
    கீதம் முழவு இட்டு*  நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.  


    கீழ்மையினால் அங்கு ஓர்*  கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,* 
    நாழ்மை பல சொல்லி*  நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்,*

    ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்*  இந் நோய்க்கும் ஈதே மருந்து,* 
    ஊழ்மையில் கண்ணபிரான்*  கழல் வாழ்த்துமின் உன்னித்தே.


    உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள்*  அவனை அல்லால்,* 
    நும் இச்சை சொல்லி*  நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,* 

    மன்னப்படும் மறைவாணனை*  வண் துவராபதி- 
    மன்னனை,*  ஏத்துமின் ஏத்துதலும்*  தொழுது ஆடுமே.   


    தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு*  ஆட்செய்து நோய் தீர்ந்த* 
    வழுவாத தொல்புகழ்  வண் குருகூர்ச் சடகோபன்,*  சொல்

    வழுவாத ஆயிரத்துள்*  இவை பத்து வெறிகளும்,* 
    தொழுது ஆடிப் பாடவல்லார்*  துக்க சீலம் இலர்களே.    


    சீலம் இல்லாச் சிறியனேலும்*  செய்வினையோ பெரிதால்,* 
    ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி*  'நாராயணா! என்று என்று,*

    காலந்தோறும் யான் இருந்து*  கைதலைபூசல் இட்டால்* 
    கோல மேனி காண வாராய்*  கூவியும் கொள்ளாயே.


    கொள்ள மாளா இன்ப வெள்ளம்*  கோது இல தந்திடும்,*  என் 
    வள்ளலேயோ! வையம் கொண்ட*  வாமனாவோ! என்று என்று,* 

    நள் இராவும் நன் பகலும்*  நான் இருந்து ஓலம் இட்டால்,* 
    கள்ள மாயா! உன்னை*  என் கண் காண வந்து ஈயாயே.


    'ஈவு இலாத தீவினைகள்*  எத்தனை செய்தனன்கொல்?* 
    தாவி வையம் கொண்ட எந்தாய்!*  தாமோதரா! என்று என்று* 

    கூவிக் கூவி நெஞ்சு உருகி*  கண்பனி சோர நின்றால்,* 
    பாவி நீ என்று ஒன்று சொல்லாய்*  பாவியேன் காண வந்தே.   


    'காண வந்து என் கண்முகப்பே*  தாமரைக்கண் பிறழ,* 
    ஆணி செம்பொன் மேனி எந்தாய்!*  நின்று அருளாய் என்று என்று,* 

    நாணம் இல்லாச் சிறு தகையேன்*  நான் இங்கு அலற்றுவது என்,* 
    பேணி வானோர் காணமாட்டாப்*  பீடு உடை அப்பனையே? 


    அப்பனே! அடல் ஆழியானே,*  ஆழ் கடலைக் கடைந்த 
    துப்பனே,*  உன் தோள்கள் நான்கும்*  கண்டிடக்கூடுங்கொல்? என்று*

    எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு*  ஆவி துவர்ந்து துவர்ந்து,* 
    இப்பொழுதே வந்திடாய் என்று*  ஏழையேன் நோக்குவனே.    


    நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்*  யான் எனது ஆவியுள்ளே,* 
    நாக்கு நீள்வன் ஞானம் இல்லை*  நாள்தோறும் என்னுடைய,* 

    ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்*  அல்ல புறத்தினுள்ளும்,* 
    நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்!*  நின்னை அறிந்து அறிந்தே.


    அறிந்து அறிந்து தேறித் தேறி*  யான் எனது ஆவியுள்ளே,* 
    நிறைந்த ஞான மூர்த்தியாயை*  நின்மலமாக வைத்து,* 

    பிறந்தும் செத்தும் நின்று இடறும்*  பேதைமை தீர்ந்தொழிந்தேன்* 
    நறுந் துழாயின் கண்ணி அம்மா!*  நான் உன்னைக் கண்டுகொண்டே!


    கண்டுகொண்டு என் கைகள் ஆர*  நின் திருப்பாதங்கள்மேல்,* 
    எண் திசையும் உள்ள பூக்கொண்டு*  ஏத்தி உகந்து உகந்து,* 

    தொண்டரோங்கள் பாடி ஆட*  சூழ் கடல் ஞாலத்துள்ளே,* 
    வண் துழாயின் கண்ணி வேந்தே!*  வந்திடகில்லாயே.   


    இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன்*  ஐம்புலன் வெல்ல கில்லேன்,* 
    கடவன் ஆகி காலந்தோறும்*  பூப்பறித்து ஏத்த கில்லேன்,*

    மட வல் நெஞ்சம் காதல் கூர*  வல்வினையேன் அயர்ப்பாய்த்,* 
    தடவுகின்றேன் எங்குக் காண்பன்*  சக்கரத்து அண்ணலையே?  


    சக்கரத்து அண்ணலே என்று*  தாழ்ந்து கண்ணீர் ததும்ப,* 
    பக்கம் நோக்கி நின்று அலந்தேன்*  பாவியேன் காண்கின்றிலேன்,* 

    மிக்க ஞான மூர்த்தி ஆய*  வேத விளக்கினை*  என் 
    தக்க ஞானக் கண்களாலே*  கண்டு தழுவுவனே.          


    தழுவிநின்ற காதல் தன்னால்*  தாமரைக் கண்ணன் தன்னை,* 
    குழுவு மாடத் தென் குருகூர்*  மாறன் சடகோபன்,*  சொல் 

    வழுவு இலாத ஒண் தமிழ்கள்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    தழுவப் பாடி ஆட வல்லார்*  வைகுந்தம் ஏறுவரே.


    ஏறு ஆளும் இறையோனும்*  திசைமுகனும் திருமகளும்,* 
    கூறு ஆளும் தனி உடம்பன்*  குலம் குலமா அசுரர்களை,* 

    நீறு ஆகும்படியாக*  நிருமித்து படை தொட்ட,* 
    மாறாளன் கவராத*  மணி மாமை குறைவு இலமே. (2)


    மணி மாமை குறைவு இல்லா*  மலர்மாதர் உறை மார்பன்,* 
    அணி மானத் தட வரைத்தோள்*  அடல் ஆழித் தடக்கையன்,* 

    பணி மானம் பிழையாமே*  அடியேனைப் பணிகொண்ட,* 
    மணிமாயன் கவராத*  மட நெஞ்சால் குறைவு இலமே.       


    மட நெஞ்சால் குறைவு இல்லா*  மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி,* 
    விட நஞ்ச முலை சுவைத்த*  மிகு ஞானச் சிறு குழவி,* 

    பட நாகத்து அணைக் கிடந்த*  பரு வரைத் தோள் பரம்புருடன்,* 
    நெடுமாயன் கவராத*  நிறையினால் குறைவு இலமே.


    நிறையினால் குறைவு இல்லா*  நெடும் பணைத் தோள் மடப் பின்னை,* 
    பொறையினால் முலை அணைவான்*  பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த,* 

    கறையினார் துவர் உடுக்கை*  கடை ஆவின் கழி கோல் கைச்,* 
    சறையினார் கவராத*  தளிர் நிறத்தால் குறைவு இலமே


    தளிர் நிறத்தால் குறைவு இல்லாத்*  தனிச் சிறையில் விளப்பு உற்ற,* 
    கிளிமொழியாள் காரணமாக்*  கிளர் அரக்கன் நகர் எரித்த,* 

    களி மலர்த் துழாய் அலங்கல்*  கமழ் முடியன் கடல் ஞாலத்து,* 
    அளிமிக்கான் கவராத,*  அறிவினால் குறைவு இலமே. 


    அறிவினால் குறைவு இல்லா*  அகல் ஞாலத்தவர் அறிய,* 
    நெறி எல்லாம் எடுத்து உரைத்த*  நிறை ஞானத்து ஒருமூர்த்தி,* 

    குறிய மாண் உரு ஆகி*  கொடுங் கோளால் நிலம் கொண்ட,* 
    கிறி அம்மான் கவராத*  கிளர் ஒளியால் குறைவு இலமே.  


    கிளர் ஒளியால் குறைவு இல்லா*  அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,* 
    கிளர் ஒளிய இரணியனது*  அகல் மார்பம் கிழித்து உகந்த,* 

    வளர் ஒளிய கனல் ஆழி*  வலம்புரியன் மணி நீல,* 
    வளர் ஒளியான் கவராத*  வரி வளையால் குறைவு இலமே.


    வரி வளையால் குறைவு இல்லாப்*  பெரு முழக்கால் அடங்காரை,* 
    எரி அழலம் புக ஊதி*  இரு நிலம் முன் துயர் தவிர்த்த,* 

    தெரிவு அரிய சிவன் பிரமன்*  அமரர் கோன் பணிந்து ஏத்தும்,* 
    விரி புகழான் கவராத*  மேகலையால் குறைவு இலமே.


    மேகலையால் குறைவு இல்லா*  மெலிவு உற்ற அகல் அல்குல்,* 
    போகமகள் புகழ்த் தந்தை*  விறல் வாணன் புயம் துணித்து,* 

    நாகமிசைத் துயில்வான்போல்*  உலகு எல்லாம் நன்கு ஒடுங்க,* 
    யோகு அணைவான் கவராத*  உடம்பினால் குறைவு இலமே.


    உடம்பினால் குறைவு இல்லா*  உயிர் பிரிந்த மலைத்துண்டம்,* 
    கிடந்தனபோல் துணி பலவா*  அசுரர் குழாம் துணித்து உகந்த,* 

    தடம் புனல சடைமுடியன்*  தனி ஒருகூறு அமர்ந்து உறையும்,* 
    உடம்பு உடையான் கவராத*  உயிரினால் குறைவு இலமே. 


    உயிரினால் குறைவு இல்லா*  உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,* 
    தயிர் வெண்ணெய் உண்டானைத்,*  தடம் குருகூர்ச் சடகோபன்,* 

    செயிர் இல் சொல் இசைமாலை*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
    வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2) 


    நண்ணாதார் முறுவலிப்ப*  நல் உற்றார் கரைந்து ஏங்க,* 
    எண் ஆராத் துயர் விளைக்கும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 

    கண்ணாளா! கடல் கடைந்தாய்!*  உன கழற்கே வரும் பரிசு,* 
    தண்ணாவாது அடியேனைப்*  பணி கண்டாய் சாமாறே. (2)        


    சாம் ஆறும் கெடும் ஆறும்*  தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து,* 
    ஏமாறிக் கிடந்து அலற்றும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 

    ஆம் ஆறு ஒன்று அறியேன் நான்*  அரவு அணையாய்! அம்மானே,* 
    கூமாறே விரைகண்டாய்*  அடியேனை குறிக்கொண்டே.


    கொண்டாட்டும் குலம் புனைவும்*  தமர் உற்றார் விழு நிதியும்,* 
    வண்டு ஆர் பூங் குழலாளும்,*  மனை ஒழிய உயிர் மாய்தல்,* 

    கண்டு ஆற்றேன் உலகு இயற்கை*  கடல்வண்ணா! அடியேனைப்* 
    பண்டேபோல் கருதாது*  உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே.


    கொள் என்று கிளர்ந்து எழுந்த*  பெரும் செல்வம் நெருப்பு ஆக,* 
    கொள் என்று தமம் மூடும்*  இவை என்ன உலகு இயற்கை?* 

    வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும்பரிசு,* 
    வள்ளல் செய்து அடியேனை*  உனது அருளால் வாங்காயே. 


    வாங்கு நீர் மலர் உலகில்*  நிற்பனவும் திரிவனவும்,* 
    ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப்*  பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்,* 

    ஈங்கு இதன்மேல் வெம் நரகம்*  இவை என்ன உலகு இயற்கை?* 
    வாங்கு எனை நீ மணிவண்ணா!*  அடியேனை மறுக்கேலே.    


    மறுக்கி வல் வலைப்படுத்தி*  குமைத்திட்டு கொன்று உண்பர்,* 
    அறப்பொருளை அறிந்து ஓரார்*  இவை என்ன உலகு இயற்கை?* 

    வெறித் துளவ முடியானே!*  வினையேனை உனக்கு அடிமை- 
    அறக்கொண்டாய்,*  இனி என் ஆர் அமுதே!*  கூயருளாயே.  


    ஆயே! இவ் உலகத்து*  நிற்பனவும் திரிவனவும்* 
    நீயே மற்று ஒரு பொருளும்*  இன்றி நீ நின்றமையால்,* 

    நோயே மூப்பு இறப்பு பிறப்பு*  பிணியே என்று இவை ஒழிய,* 
    கூயேகொள் அடியேனை*  கொடு உலகம் காட்டேலே.


    காட்டி நீ கரந்து உமிழும்*  நிலம் நீர் தீ விசும்பு கால்,* 
    ஈட்டி நீ வைத்து அமைத்த*  இமையோர் வாழ் தனி முட்டைக்,* 

    கோட்டையினில் கழித்து*  என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,* 
    கூட்டு அரிய திருவடிக்கள்*  எஞ்ஞான்று கூட்டுதியே?   


    கூட்டுதி நின் குரை கழல்கள்*  இமையோரும் தொழாவகைசெய்து,* 
    ஆட்டுதி நீ அரவு அணையாய்!*  அடியேனும் அஃது அறிவன்,* 

    வேட்கை எல்லாம் விடுத்து*  என்னை உன் திருவடியே சுமந்து உழலக்,* 
    கூட்டு அரிய திருவடிக்கள்*  கூட்டினை நான் கண்டேனே.   


    கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்*  ஐங்கருவி 
    கண்ட இன்பம்,*  தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,*

    ஒண் தொடியாள் திருமகளும்*  நீயுமே நிலாநிற்ப,* 
    கண்ட சதிர் கண்டொழிந்தேன்*  அடைந்தேன் உன் திருவடியே. 


    திருவடியை நாரணனை*  கேசவனை பரஞ்சுடரை,* 
    திருவடி சேர்வது கருதி*  செழுங் குருகூர்ச் சடகோபன்,* 

    திருவடிமேல் உரைத்த தமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    திருவடியே அடைவிக்கும்*  திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)      


    ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்*  யாதும் இல்லா 
    அன்று,*  நான்முகன் தன்னொடு*  தேவர் உலகோடு உயிர் படைத்தான்,* 

    குன்றம்போல் மணிமாடம் நீடு*   திருக்குருகூர் அதனுள்,* 
    நின்ற ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)


    நாடி நீர் வணங்கும் தெய்வமும்*  உம்மையும் முன்படைத்தான்,* 
    வீடு இல் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்*  அவன் மேவி உறைகோயில்,* 

    மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனைப்* 
    பாடி ஆடி பரவிச் செல்மின்கள்*  பல் உலகீர்! பரந்தே.       


    பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து*  அன்று உடனே விழுங்கி,* 
    கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது*  கண்டும் தெளியகில்லீர்,* 

    சிரங்களால் அமரர் வணங்கும்*  திருக்குருகூர் அதனுள்,* 
    பரன் திறம் அன்றி பல் உலகீர்!*  தெய்வம் மற்று இல்லை பேசுமினே!   


    பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்*  பிறர்க்கும் 
    நாயகன் அவனே,*  கபால நல் மோக்கத்துக்*  கண்டுகொண்மின்,* 

    தேச மாமதிள் சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஈசன்பால் ஓர் அவம் பறைதல்*  என் ஆவது இலிங்கியர்க்கே?


    இலிங்கத்து இட்ட புராணத்தீரும்*  சமணரும் சாக்கியரும்* 
    வலிந்து வாது செய்வீர்களும்*  மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்* 

    மலிந்து செந்நெல் கவரி வீசும்*  திருக்குருகூர் அதனுள்,* 
    பொலிந்து நின்ற பிரான் கண்டீர்*  ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)     


    போற்றி மற்று ஓர் தெய்வம்*  பேணப் புறத்திட்டு*  உம்மை இன்னே 
    தேற்றி வைத்தது*  எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே,* 

    சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்*  அது அறிந்து அறிந்து ஓடுமினே.  


    ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து*  மற்று ஓர் தெய்வம், 
    பாடி ஆடிப் பணிந்து*  பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்,*

    கூடி வானவர் ஏத்த நின்ற*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு*  அடிமைபுகுவதுவே


    புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட*  மார்க்கண்டேயன் அவனை* 
    நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது*  நாராயணன் அருளே*

    கொக்கு அலர் தடம் தாழை வேலித்*  திருக்குருகூர் அதனுள்* 
    மிக்க ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் விளம்புதிரே   


    விளம்பும் ஆறு சமயமும்*  அவைஆகியும் மற்றும் தன்பால்,* 
    அளந்து காண்டற்கு அரியன் ஆகிய*  ஆதிப்பிரான் அமரும்,* 

    வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனை,* 
    உளம் கொள் ஞானத்து வைம்மின்*  உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.  


    உறுவது ஆவது எத்தேவும்*  எவ் உலகங்களும் மற்றும்தன்பால்,* 
    மறு இல் மூர்த்தியோடு ஒத்து*  இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,* 

    செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு*  திருக்குருகூர் அதனுள்* 
    குறிய மாண் உரு ஆகிய*  நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே. 


    ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்*  வண் குருகூர்நகரான்*
    நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்*  மாறன் சடகோபன்,* 

    வேட்கையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,* 
    மீட்சி இன்றி வைகுந்த மாநகர்*  மற்றது கையதுவே. (2)