பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
கை ஆர் சக்கரத்து* என் கருமாணிக்கமே! என்று என்று,*
பொய்யே கைம்மைசொல்லி* புறமே புறமே ஆடி.*
மெய்யே பெற்றொழிந்தேன்,* விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
ஐயோ கண்ணபிரான்!* அறையோ இனிப்போனாலே. (2)
போனாய் மாமருதின் நடுவே* என் பொல்லா மணியே,*
தேனே! இன்அமுதே!'* என்று என்றே சில கூத்துச்சொல்ல,*
தானேல் எம்பெருமான்* அவன் என் ஆகி ஒழிந்தான்,*
வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.
உள்ளன மற்று உளவா* புறமே சில மாயம் சொல்லி,*
வள்ளல் மணிவண்ணனே!* என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*
கள்ள மனம் தவிர்ந்தே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,*
வெள்ளத்து அணைக்கிடந்தாய்* இனி உன்னை விட்டு என் கொள்வனே?
என் கொள்வன் உன்னை விட்டு என்னும்* வாசகங்கள் சொல்லியும்,*
வன் கள்வனேன் மனத்தை வலித்து* கண்ண நீர் கரந்து,*
நின்கண் நெருங்கவைத்தே* எனது ஆவியை நீக்ககில்லேன்,*
என்கண் மலினம் அறுத்து* என்னைக்கூவி அருளாய்கண்ணனே!
கண்ணபிரானை* விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,*
நண்ணியும் நண்ணகில்லேன்* நடுவே ஓர் உடம்பில் இட்டு,*
திண்ணம் அழுந்தக் கட்டிப்* பல செய்வினை வன் கயிற்றால்,*
புண்ணை மறையவரிந்து* என்னைப் போர வைத்தாய் புறமே.
புறம் அறக் கட்டிக்கொண்டு* இரு வல்வினையார் குமைக்கும்,*
முறை முறை யாக்கை புகல்ஒழியக்* கண்டு கொண்டொழிந்தேன்,*
நிறம் உடை நால்தடம்தோள்* செய்யவாய் செய்ய தாமரைக்கண்,*
அறம்முயல் ஆழிஅங்கைக்* கருமேனி அம்மான் தன்னையே.
அம்மான் ஆழிப்பிரான்* அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,*
எம் மா பாவியர்க்கும்* விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,*
'கைம்மா துன்பு ஒழித்தாய்!' என்று கைதலைபூசல் இட்டே,*
மெய்ம் மால் ஆயொழிந்தேன்* எம்பிரானும் என் மேலானே.
மேலாத் தேவர்களும்* நிலத் தேவரும் மேவித் தொழும்,*
மாலார் வந்து இனநாள்* அடியேன் மனத்தே மன்னினார்,*
சேல் ஏய் கண்ணியரும்* பெரும் செல்வமும் நன்மக்களும்,*
மேலாத் தாய் தந்தையும்* அவரே இனி ஆவாரே.
ஆவார் ஆர் துணை என்று* அலை நீர்க் கடலுள் அழுந்தும்-
நாவாய் போல்,* பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,*
தேவு ஆர் கோலத்தொடும்* திருச் சக்கரம் சங்கினொடும்,*
ஆஆ என்று அருள்செய்து* அடியேனொடும் ஆனானே.
ஆனான் ஆளுடையான் என்று* அஃதே கொண்டு உகந்துவந்து*
தானே இன்அருள் செய்து* என்னை முற்றவும் தான் ஆனான்,*
மீன் ஆய் ஆமையும் ஆய்* நரசிங்கமும் ஆய் குறள் ஆய்,*
கான் ஆர் ஏனமும் ஆய்* கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே.
கார்வண்ணன் கண்ண பிரான்* கமலத்தடங்கண்ணன் தன்னை,*
ஏர்வள ஒண்கழனிக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்*
ஆர்வண்ணத்தால் உரைப்பார்* அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.
பொலிக பொலிக பொலிக!* போயிற்று வல் உயிர்ச் சாபம்*
நலியும் நரகமும் நைந்த* நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*
கலியும் கெடும் கண்டுகொண்மின்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
மலியப் புகுந்து இசைபாடி* ஆடி உழிதரக் கண்டோம்*. (2)
கண்டோம் கண்டோம் கண்டோம்* கண்ணுக்கு இனியன கண்டோம்*
தொண்டீர்! எல்லீரும் வாரீர்* தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*
வண்டுஆர் தண் அம் துழாயான்* மாதவன் பூதங்கள் மண்மேல்*
பண் தான் பாடி நின்று ஆடி* பரந்து திரிகின்றனவே*
திரியும் கலியுகம் நீங்கி* தேவர்கள் தாமும் புகுந்து*
பெரிய கிதயுகம் பற்றி* பேரின்ப வெள்ளம் பெருக*
கரிய முகில்வண்ணன் எம்மான்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
இரியப் புகுந்து இசை பாடி* எங்கும் இடம் கொண்டனவே*
இடம் கொள் சமயத்தை எல்லாம்* எடுத்துக் களைவன போலே*
தடம் கடல் பள்ளிப் பெருமான்* தன்னுடைப் பூதங்களே ஆய்*
கிடந்தும் இருந்தும் எழுந்தும்* கீதம் பலபல பாடி*
நடந்தும் பறந்தும் குனித்தும்* நாடகம் செய்கின்றனவே*.
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே* ஒக்கின்றது இவ் உலகத்து*
வைகுந்தன் பூதங்களே ஆய்* மாயத்தினால் எங்கும் மன்னி*
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்* அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்*
உய்யும் வகை இல்லை தொண்டீர்!* ஊழி பெயர்த்திடும் கொன்றே*
கொன்று உயிர் உண்ணும் விசாதி* பகை பசி தீயன எல்லாம்*
நின்று இவ் உலகில் கடிவான்* நேமிப் பிரான் தமர் போந்தார்*
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும்* ஞாலம் பரந்தார்*
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!* சிந்தையைச் செந்நிறுத்தியே*.
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்* தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்*
மறுத்தும் அவனோடே கண்டீர்* மார்க்கண்டேயனும் கரியே*
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா* கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை*
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி* யாயவர்க்கே இறுமினே*.
இறுக்கும் இறை இறுத்து உண்ண* எவ் உலகுக்கும் தன் மூர்த்தி*
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக* அத் தெய்வ நாயகன் தானே*
மறுத் திரு மார்வன் அவன் தன்* பூதங்கள் கீதங்கள் பாடி*
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்* மேவித் தொழுது உய்ம்மின் நீரே*.
மேவித் தொழுது உய்ம்மின்நீர்கள்* வேதப் புனித இருக்கை*
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை* ஞானவிதி பிழையாமே*
பூவில் புகையும் விளக்கும்* சாந்தமும் நீரும் மலிந்து*
மேவித் தொழும் அடியாரும்* பகவரும் மிக்கது உலகே*.
மிக்க உலகுகள் தோறும்* மேவி கண்ணன் திருமூர்த்தி*
நக்க பிரானோடு* அயனும் இந்திரனும் முதலாகத்*
தொக்க அமரர் குழாங்கள்* எங்கும் பரந்தன தொண்டீர்!*
ஒக்கத் தொழ கிற்றிராகில்* கலியுகம் ஒன்றும் இல்லையே*.
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே* தன்அடியார்க்கு அருள்செய்யும்*
மலியும் சுடர் ஒளி மூர்த்தி* மாயப் பிரான் கண்ணன் தன்னை*
கலிவயல் தென் நன் குருகூர்க்* காரிமாறன் சடகோபன்*
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து* உள்ளத்தை மாசு அறுக்குமே*.
மாசு அறு சோதி* என் செய்ய வாய் மணிக்குன்றத்தை*
ஆசு அறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே*
பாசறவு எய்தி* அறிவு இழந்து எனை நாளையம்?*
ஏசு அறும் ஊரவர் கவ்வை* தோழீ என் செய்யுமே?*
என் செய்யும் ஊரவர் கவ்வை* தோழீ இனி நம்மை*
என் செய்ய தாமரைக் கண்ணன்* என்னை நிறை கொண்டான்*
முன் செய்ய மாமை இழந்து* மேனி மெலிவு எய்தி*
என் செய்ய வாயும் கருங்கண்ணும்* பயப்பு ஊர்ந்தவே*.
ஊர்ந்த சகடம்* உதைத்த பாதத்தன்* பேய்முலை-
சார்ந்து சுவைத்த செவ்வாயன்* என்னை நிறை கொண்டான்*
பேர்ந்தும் பெயர்ந்தும்* அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்*
தீர்ந்த என் தோழீ!* என் செய்யும் ஊரவர் கவ்வையே?*
ஊரவர் கவ்வை எரு இட்டு* அன்னை சொல் நீர் படுத்து*
ஈர நெல் வித்தி முளைத்த* நெஞ்சப் பெருஞ் செய்யுள்*
பேர் அமர் காதல்* கடல் புரைய விளைவித்த*
கார் அமர் மேனி* நம் கண்ணன் தோழீ! கடியனே*
கடியன் கொடியன்* நெடிய மால் உலகம் கொண்ட-
அடியன்* அறிவு அரு மேனி மாயத்தன்* ஆகிலும்-
கொடிய என் நெஞ்சம்* அவன் என்றே கிடக்கும் எல்லே*
துடி கொள் இடை மடத் தோழீ!* அன்னை என் செய்யுமே?
அன்னை என் செய்யில் என்?* ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்*
என்னை இனி உமக்கு ஆசை இல்லை* அகப்பட்டேன்*
முன்னை அமரர் முதல்வன்* வண் துவராபதி-
மன்னன்* மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.
வலையுள் அகப்படுத்து* என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு*
அலை கடல் பள்ளி அம்மானை* ஆழிப்பிரான் தன்னை*
கலை கொள் அகல் அல்குல் தோழீ!* நம் கண்களால் கண்டு*
தலையில் வணங்கவும் ஆம் கொலோ?* தையலார் முன்பே*.
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து* மருது இடை-
போய் முதல் சாய்த்து* புள் வாய் பிளந்து களிறு அட்ட*
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை* எந் நாள்கொலோ*
யாம் உறுகின்றது தோழீ!* அன்னையர் நாணவே?*
நாணும் நிறையும் கவர்ந்து* என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு*
சேண் உயர் வானத்து இருக்கும்* தேவ பிரான் தன்னை*
ஆணை என் தோழீ!* உலகுதோறு அலர் தூற்றி* ஆம்-
கோணைகள் செய்து* குதிரியாய் மடல் ஊர்துமே*.
யாம் மடல் ஊர்ந்தும்* எம் ஆழி அங்கைப் பிரான் உடை*
தூ மடல் தண் அம் துழாய்* மலர் கொண்டு சூடுவோம்*
ஆம் மடம் இன்றி* தெருவுதோறு அயல் தையலார்*
நா மடங்காப் பழி தூற்றி* நாடும் இரைக்கவே*.
இரைக்கும் கருங் கடல் வண்ணன்* கண்ண பிரான் தன்னை*
விரைக் கொள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
நிரைக் கொள் அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரைக்க வல்லார்க்கு* வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்* (2)
ஊர் எல்லாம் துஞ்சி* உலகு எல்லாம் நள் இருள் ஆய்*
நீர் எல்லாம் தேறி* ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்*
பார் எல்லாம் உண்ட* நம் பாம்பு அணையான் வாரானால்*
ஆர் எல்லே! வல்வினையேன்* ஆவி காப்பார் இனியே?* (2)
ஆவி காப்பார் இனி யார்?* ஆழ் கடல் மண் விண் மூடி*
மா விகாரம் ஆய்* ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்*
காவி சேர் வண்ணன்* என் கண்ணனும் வாரானால்*
பாவியேன் நெஞ்சமே!* நீயும் பாங்கு அல்லையே?*.
நீயும் பாங்கு அல்லைகாண்* நெஞ்சமே நீள் இரவும்*
ஓயும் பொழுது இன்றி* ஊழி ஆய் நீண்டதால்*
காயும் கடும் சிலை* என் காகுத்தன் வாரானால்*
மாயும் வகை அறியேன்* வல்வினையேன் பெண் பிறந்தே*
பெண் பிறந்தார் எய்தும்* பெரும் துயர் காண்கிலேன் என்று*
ஒண் சுடரோன்* வாராது ஒளித்தான்* இம்மண்அளந்த-
கண் பெரிய செவ்வாய்* எம் கார் ஏறு வாரானால்*
எண் பெரிய சிந்தைநோய்* தீர்ப்பார் ஆர் என்னையே?*
ஆர் என்னை ஆராய்வார்?* அன்னையரும் தோழியரும்*
'நீர் என்னே?' என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்*
கார் அன்ன மேனி* நம் கண்ணனும் வாரானால்*
பேர் என்னை மாயாதால்* வல்வினையேன் பின் நின்றே*.
பின்நின்று காதல் நோய்* நெஞ்சம் பெரிது அடுமால்*
முன்நின்று இரா ஊழி* கண் புதைய மூடிற்றால்*
மன் நின்ற சக்கரத்து* எம் மாயவனும் வாரானால்*
இந் நின்ற நீள் ஆவி* காப்பார் ஆர் இவ் இடத்தே?*
காப்பார் ஆர் இவ் இடத்து?* கங்கு இருளின் நுண் துளி ஆய்*
சேண் பாலது ஊழி ஆய்* செல்கின்ற கங்குல்வாய்த்*
தூப் பால வெண்சங்கு* சக்கரத்தன் தோன்றானால்*
தீப் பால வல்வினையேன்* தெய்வங்காள்! என் செய்கேனோ?*
தெய்வங்காள்! என் செய்கேன்?* ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்*
மெய் வந்து நின்று* எனது ஆவி மெலிவிக்கும்,*
கைவந்த சக்கரத்து* என் கண்ணனும் வாரானால்*
தைவந்த தண் தென்றல்* வெம் சுடரில் தான் அடுமே*
வெம் சுடரில் தான் அடுமால்* வீங்கு இருளின் நுண் துளி ஆய்*
அம் சுடர வெய்யோன்* அணி நெடும் தேர் தோன்றாதால்*
செஞ் சுடர்த் தாமரைக்கண்* செல்வனும் வாரானால்*
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனியார்?* நின்று உருகுகின்றேனே!*
நின்று உருகுகின்றேனே போல* நெடு வானம்*
சென்று உருகி நுண் துளி ஆய்* செல்கின்ற கங்குல்வாய்*
அன்று ஒருகால் வையம்* அளந்த பிரான் வாரான் என்று*
ஒன்று ஒருகால் சொல்லாது* உலகோ உறங்குமே*
உறங்குவான் போல்* யோகுசெய்த பெருமானை*
சிறந்த பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிறம் கிளர்ந்த அந்தாதி* ஆயிரத்துள் இப்பத்தால்*
இறந்து போய் வைகுந்தம்* சேராவாறு எங்ஙனேயோ?*
எங்ஙனேயோ அன்னைமீர்காள்!* என்னை முனிவது நீர்?*
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சங்கினோடும் நேமியோடும்* தாமரைக் கண்களோடும்*
செங்கனி வாய் ஒன்றினோடும்* செல்கின்றது என்நெஞ்சமே*. (2)
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்* என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
மின்னு நூலும் குண்டலமும்* மார்பில் திருமறுவும்*
மன்னு பூணும் நான்கு தோளும்* வந்து எங்கும் நின்றிடுமே*.
நின்றிடும் திசைக்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
வென்றி வில்லும் தண்டும் வாளும்* சக்கரமும் சங்கமும்*
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா* நெஞ்சுள்ளும் நீங்காவே*.
நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று* அன்னையரும் முனிதிர்*
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
பூந்தண் மாலைத் தண் துழாயும்* பொன் முடியும் வடிவும்*
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்* பாவியேன் பக்கத்தவே*.
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
தொக்க சோதித் தொண்டை வாயும்* நீண்ட புருவங்களும்*
தக்க தாமரைக் கண்ணும்* பாவியேன் ஆவியின் மேலனவே*.
மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
கோலநீள் கொடி மூக்கும்* தாமரைக் கண்ணும் கனிவாயும்*
நீலமேனியும் நான்கு தோளும்* என் நெஞ்சம் நிறைந்தனவே*.
நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த* நீண்ட பொன் மேனியொடும்*
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்* நேமி அங்கை உளதே*.
கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று* அன்னையரும் முனிதிர்*
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்* சிற்றிடையும் வடிவும்*
மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்* பாவியேன் முன் நிற்குமே*.
முன் நின்றாய் என்று தோழிமார்களும்* அன்னையரும் முனிதிர்*
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சென்னி நீள்முடி ஆதிஆய* உலப்பு இல் அணிகலத்தன்*
கன்னல் பால் அமுதுஆகி வந்து* என் நெஞ்சம் கழியானே*.
கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
குழுமித் தேவர் குழாங்கள்* கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே*
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்* ஆர்க்கும் அறிவு அரிதே*.
அறிவு அரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*
நறிய நன் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன்மேல்*
அறியக் கற்று வல்லார் வைட்டவர்* ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்* கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்* கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்* கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?*
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்* கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?*
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்* காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்*
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்* காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்*
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்* காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,* காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?*
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்* செய்வான் நின்றனகளும் யானே என்னும்*
செய்து முன் இறந்தவும் யானே என்னும்* செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்*
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்* செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?*
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* செய்ய கனி வாய் இள மான் திறத்தே?*
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்* திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்*
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்* திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்*
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்* திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்* திறம்பாது என் திருமகள் எய்தினவே?*
இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்* இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்*
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்* இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்*
இன ஆயர் தலைவனும் யானே என்னும்* இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?*
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்* இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?*
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்* உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்*
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்* உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்*
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்* உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?*
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?* உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?*
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்* உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்*
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்* உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்*
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்* உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?,
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே*.
கொடிய வினை யாதும் இலனே என்னும்* கொடிய வினை ஆவேனும் யானே என்னும்*
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்* கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்*
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்* கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?*
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கொடியேன் கொடி என் மகள் கோலங்களே?*
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்* கோலம் இல் நரகமும் யானே என்னும்*
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்* கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்*
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்* கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே!*
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்* குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை*
வாய்ந்த வழுதி வள நாடன்* மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து*
ஆய்ந்த தமிழ் மாலை* ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்* உலகில்-
ஏந்து பெரும் செல்வத்தராய்த்* திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்* ஆகிலும் இனி உன்னை விட்டு*
ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்* அரவின் அணை அம்மானே*
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்* சிரீவரமங்கல நகர்*
வீற்றிருந்த எந்தாய்!* உனக்கு மிகை அல்லேன் அங்கே*.
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்* உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து* நான்
எங்குற்றேனும் அல்லேன்* இலங்கை செற்ற அம்மானே*
திங்கள் சேர் மணி மாடம் நீடு* சிரீவரமங்கலநகர் உறை*
சங்கு சக்கரத்தாய்!* தமியேனுக்கு அருளாயே*.
கருளப் புள் கொடி சக்கரப் படை* வான நாட! என் கார்முகில் வண்ணா*
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி* அடிமைகொண்டாய்*
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்* சிரீவரமங்கலநகர்க்கு*
அருள்செய்து அங்கு இருந்தாய்!* அறியேன் ஒரு கைம்மாறே*
மாறு சேர் படை நூற்றுவர் மங்க* ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி*
நீறு செய்த எந்தாய்!* நிலம் கீண்ட அம்மானே*
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்* சிரீவரமங்கலநகர்*
ஏறி வீற்றிருந்தாய்!* உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?* எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று*
கைதவங்கள் செய்யும்* கரு மேனி அம்மானே*
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்* சிரீவரமங்கலநகர்*
கைதொழ இருந்தாய்* அது நானும் கண்டேனே*.
ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!* என்றும் என்னை ஆளுடை*
வான நாயகனே!* மணி மாணிக்கச்சுடரே*
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்* கைதொழ உறை*
வானமாமலையே!* அடியேன் தொழ வந்தருளே*. (2)
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட* வானவர் கொழுந்தே!* உலகுக்கு ஓர்-
முந்தைத் தாய் தந்தையே!* முழு ஏழ் உலகும் உண்டாய்!*
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்* சிரீவரமங்கலநகர்*
அந்தம் இல் புகழாய்!* அடியேனை அகற்றேலே*.
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை* நன்கு அறிந்தனன்*
அகற்றி என்னையும் நீ* அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்*
பகல் கதிர் மணி மாடம் நீடு* சிரீவரமங்கை வாணனே* என்றும்-
புகற்கு அரிய எந்தாய்!* புள்ளின் வாய் பிளந்தானே!*
புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!* எருது ஏழ் அடர்த்த* என்-
கள்ள மாயவனே!* கருமாணிக்கச் சுடரே*
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்* மலி தண் சிரீவரமங்கை*
யுள் இருந்த எந்தாய்!* அருளாய் உய்யுமாறு எனக்கே*.
ஆறு எனக்கு நின் பாதமே* சரண் ஆகத் தந்தொழிந்தாய்* உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன்* எனது ஆவியும் உனதே*
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்* மலி தண் சிரீவரமங்கை*
நாறு பூந் தண் துழாய் முடியாய்!* தெய்வ நாயகனே!*.
தெய்வ நாயகன் நாரணன்* திரிவிக்கிரமன் அடி இணைமிசை*
கொய் கொள் பூம் பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன்*
செய்த ஆயிரத்துள் இவை* தண் சிரீவரமங்கை மேய பத்துடன்*
வைகல் பாட வல்லார்* வானோர்க்கு ஆரா அமுதே*. (2)
ஆரா அமுதே! அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்* செழு நீர்த் திருக்குடந்தை*
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!* (2)
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!* என்னை ஆள்வானே*
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்* ஆவாய் எழில் ஏறே*
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்* திருக்குடந்தை*
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)
என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
உன்னால் அல்லால் யாவராலும்* ஒன்றும் குறை வேண்டேன்*
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!* அடியேன் அரு வாழ்நாள்*
செல் நாள் எந் நாள்? அந்நாள்* உன தாள் பிடித்தே செலக்காணே*
செலக் காண்கிற்பார் காணும் அளவும்* செல்லும் கீர்த்தியாய்*
உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய* ஒரு மூர்த்தி*
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!* உன்னைக் காண்பான் நான்-
அலப்பு ஆய்* ஆகாசத்தை நோக்கி* அழுவன் தொழுவனே*.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்* பாடி அலற்றுவன்*
தழு வல்வினையால் பக்கம் நோக்கி* நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!* செந்தாமரைக் கண்ணா!*
தொழுவனேனை உன தாள் சேரும்* வகையே சூழ்கண்டாய்*.
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து* உன் அடிசேரும்-
ஊழ் கண்டிருந்தே* தூராக்குழி தூர்த்து* எனை நாள் அகன்று இருப்பன்?*
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!* வானோர் கோமானே*
யாழின் இசையே! அமுதே!* அறிவின் பயனே! அரிஏறே!*.
அரிஏறே! என் அம் பொன் சுடரே!* செங்கண் கருமுகிலே!*
எரி ஏய்! பவளக் குன்றே!* நால் தோள் எந்தாய் உனது அருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்* குடந்தைத் திருமாலே*
தரியேன் இனி உன் சரணம் தந்து* என் சன்மம் களையாயே*.
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்* களைகண் மற்று இலேன்*
வளை வாய் நேமிப் படையாய்!* குடந்தைக் கிடந்த மா மாயா*
தளரா உடலம் எனது ஆவி* சரிந்து போம்போது*
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்* போத இசை நீயே*.
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்* இருத்தும் அம்மானே*
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா* ஆதிப் பெரு மூர்த்தி*
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்* திருக்குடந்தை*
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!* காண வாராயே*.
வாரா அருவாய் வரும் என் மாயா!* மாயா மூர்த்தியாய்*
ஆரா அமுதாய் அடியேன் ஆவி* அகமே தித்திப்பாய்*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!* திருக்குடந்தை-
ஊராய்!* உனக்கு ஆள் பட்டும்* அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு* அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)
மான் ஏய் நோக்கு நல்லீர்!* வைகலும் வினையேன் மெலிய*
வான் ஆர் வண் கமுகும்* மது மல்லிகை கமழும்*
தேன் ஆர் சோலைகள் சூழ்* திருவல்லவாழ் உறையும்-
கோனாரை* அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)
என்று கொல்? தோழிமீர்காள்* எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*
பொன்திகழ் புன்னை மகிழ்* புது மாதவி மீது அணவி*
தென்றல் மணம் கமழும்* திருவல்லவாழ் நகருள்-
நின்ற பிரான்* அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*
சூடு மலர்க்குழலீர்!* துயராட்டியேன் மெலிய*
பாடும் நல் வேத ஒலி* பரவைத் திரை போல் முழங்க*
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்* தண் திருவல்லவாழ்*
நீடு உறைகின்ற பிரான்* கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*
நிச்சலும் தோழிமீர்காள்!* எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*
பச்சிலை நீள் கமுகும்* பலவும் தெங்கும் வாழைகளும்*
மச்சு அணி மாடங்கள் மீது அணவும்* தண் திருவல்லவாழ்*
நச்சு அரவின் அணைமேல்* நம்பிரானது நல் நலமே*.
நல் நலத் தோழிமீர்காள்!* நல்ல அந்தணர் வேள்விப் புகை*
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்* தண் திருவல்லவாழ்*
கன்னல் அம் கட்டி தன்னை* கனியை இன் அமுதம் தன்னை*
என் நலம் கொள் சுடரை* என்றுகொல் கண்கள் காண்பதுவே?*
காண்பது எஞ்ஞான்றுகொலோ?* வினையேன் கனிவாய் மடவீர்*
பாண் குரல் வண்டினொடு* பசுந் தென்றலும் ஆகி எங்கும்*
சேண் சினை ஓங்கு மரச்* செழுங் கானல் திருவல்லவாழ்*
மாண் குறள் கோலப் பிரான்* மலர்த் தாமரைப் பாதங்களே?*
பாதங்கள்மேல் அணி* பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்*
ஓத நெடுந் தடத்துள்* உயர் தாமரை செங்கழுநீர்*
மாதர்கள் வாள் முகமும்* கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்*
நாதன் இஞ் ஞாலம் உண்ட* நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*
நாள்தொறும் வீடு இன்றியே* தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்*
ஆடு உறு தீங் கரும்பும்* விளை செந்நெலும் ஆகி எங்கும்*
மாடு உறு பூந் தடம் சேர்* வயல் சூழ் தண் திருவல்லவாழ்*
நீடு உறைகின்ற பிரான்* நிலம் தாவிய நீள் கழலே?*
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு* கைதொழக் கூடுங்கொலோ*
குழல் என்ன யாழும் என்ன* குளிர் சோலையுள் தேன் அருந்தி*
மழலை வரி வண்டுகள் இசை பாடும்* திருவல்லவாழ்*
சுழலின் மலி சக்கரப் பெருமானது* தொல் அருளே?*
தொல் அருள் நல் வினையால்* சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்*
தொல் அருள் மண்ணும் விண்ணும்* தொழ நின்ற திருநகரம்*
நல் அருள் ஆயிரவர்* நலன் ஏந்தும் திருவல்லவாழ்*
நல் அருள் நம் பெருமான்* நாராயணன் நாமங்களே?*
நாமங்கள் ஆயிரம் உடைய* நம் பெருமான் அடிமேல்*
சேமம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த*
நாமங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் திருவல்லவாழ்*
சேமம் கொள் தென் நகர்மேல்* செப்புவார் சிறந்தார் பிறந்தே*
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும்* பெரிய பாரதம் கைசெய்து* ஐவர்க்குத்-
திறங்கள் காட்டியிட்டுச்* செய்து போன மாயங்களும்*
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை* நின்று நின்று உருக்கி உண்கின்ற* இச்-
சிறந்தவான் சுடரே!* உன்னை என்றுகொல் சேர்வதுவே!* (2)
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்* மாய மாவினை வாய் பிளந்ததும்*
மதுவை வார் குழலார்* குரவை பிணைந்த குழகும்*
அது இது உது என்னலாவன அல்ல* என்னை உன் செய்கை நைவிக்கும்*
முது வைய முதல்வா!* உன்னை என்று தலைப்பெய்வனே?*
பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட* பிள்ளைத் தேற்றமும்* பேர்ந்து ஓர் சாடு இறச்-
செய்ய பாதம் ஒன்றால்* செய்த நின் சிறுச் சேவகமும்*
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள* நீ உன் தாமரைக் கண்கள் நீர்மல்க*
பையவே நிலையும் வந்து* என் நெஞ்சை உருக்குங்களே*
கள்ள வேடத்தைக் கொண்டு போய்* புரம்புக்க ஆறும்* கலந்து அசுரரை-
உள்ளம் பேதம் செய்திட்டு* உயிர் உண்ட உபாயங்களும்*
வெள்ள நீர்ச் சடையானும்* நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்*
உள்ளம் உள் குடைந்து* என் உயிரை உருக்கி உண்ணுமே*.
உண்ண வானவர் கோனுக்கு* ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்*
வண்ண மால் வரையை எடுத்து* மழை காத்தலும்*
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து* கடந்து இடந்து மணந்த மாயங்கள்*
எண்ணும்தோறும் என் நெஞ்சு* எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே*.
நின்ற ஆறும் இருந்த ஆறும்/* கிடந்த ஆறும் நினைப்பு அரியன*
ஒன்று அலா உருவு ஆய்* அருவு ஆய நின் மாயங்கள்*
நின்று நின்று நினைக்கின்றேன்* உன்னை எங்ஙனம் நினைகிற்பன்* பாவியேற்கு-
ஒன்று நன்கு உரையாய்* உலகம் உண்ட ஒண் சுடரே!*
ஒண் சுடரோடு இருளுமாய்* நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து* என்-
கண் கொளாவகை* நீ கரந்து என்னைச் செய்கின்றன*
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்* என் கரிய மாணிக்கமே!* என் கண்கட்குத்-
திண் கொள்ள ஒரு நாள்* அருளாய் உன் திரு உருவே*.
திரு உருவு கிடந்த ஆறும்* கொப்பூழ்ச் செந்தாமரைமேல்* திசைமுகன்-
கருவுள் வீற்றிருந்து* படைத்திட்ட கருமங்களும்*
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்* என் நெஞ்சம் நின்று நெக்கு*
அருவி சோரும் கண்ணீர்* என் செய்கேன் அடியேனே!*
அடியை மூன்றை இரந்த ஆறும்* அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்-
முடிய* ஈர் அடியால்* முடித்துக்கொண்ட முக்கியமும் *
நொடியுமாறு அவை கேட்கும்தோறும்* என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்*
கொடிய வல்வினையேன்* உன்னை என்றுகொல் கூடுவதே?*
கூடி நீரைக் கடைந்த ஆறும்* அமுதம் தேவர் உண்ண* அசுரரை-
வீடும் வண்ணங்களே* செய்து போன வித்தகமும்*
ஊடு புக்கு எனது ஆவியை* உருக்கி உண்டிடுகின்ற* நின் தன்னை-
நாடும் வண்ணம் சொல்லாய்* நச்சு நாகு அணையானே!*
நாகு அணைமிசை நம் பிரான்* சரணே சரண் நமக்கு என்று* நாள்தொறும்-
ஏக சிந்தையனாய்க்* குருகூர்ச் சடகோபன் மாறன்*
ஆக நூற்ற அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்*
மாக வைகுந்தத்து* மகிழ்வு எய்துவர் வைகலுமே*.