பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    கை ஆர் சக்கரத்து*  என் கருமாணிக்கமே! என்று என்று,* 
    பொய்யே கைம்மைசொல்லி*  புறமே புறமே ஆடி.* 

    மெய்யே பெற்றொழிந்தேன்,*  விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
    ஐயோ கண்ணபிரான்!*  அறையோ இனிப்போனாலே. (2)


    போனாய் மாமருதின் நடுவே*  என் பொல்லா மணியே,* 
    தேனே! இன்அமுதே!'*  என்று என்றே சில கூத்துச்சொல்ல,* 

    தானேல் எம்பெருமான்*  அவன் என் ஆகி ஒழிந்தான்,* 
    வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.


    உள்ளன மற்று உளவா*  புறமே சில மாயம் சொல்லி,* 
    வள்ளல் மணிவண்ணனே!*  என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*

    கள்ள மனம் தவிர்ந்தே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,* 
    வெள்ளத்து அணைக்கிடந்தாய்*  இனி உன்னை விட்டு என் கொள்வனே? 


    என் கொள்வன் உன்னை விட்டு என்னும்*  வாசகங்கள் சொல்லியும்,* 
    வன் கள்வனேன் மனத்தை வலித்து*  கண்ண நீர் கரந்து,* 

    நின்கண் நெருங்கவைத்தே*  எனது ஆவியை நீக்ககில்லேன்,* 
    என்கண் மலினம் அறுத்து*  என்னைக்கூவி அருளாய்கண்ணனே!         


    கண்ணபிரானை*  விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,* 
    நண்ணியும் நண்ணகில்லேன்*  நடுவே ஓர் உடம்பில் இட்டு,* 

    திண்ணம் அழுந்தக் கட்டிப்*  பல செய்வினை வன் கயிற்றால்,* 
    புண்ணை மறையவரிந்து*  என்னைப் போர வைத்தாய் புறமே.


    புறம் அறக் கட்டிக்கொண்டு*  இரு வல்வினையார் குமைக்கும்,* 
    முறை முறை யாக்கை புகல்ஒழியக்*  கண்டு கொண்டொழிந்தேன்,*

    நிறம் உடை நால்தடம்தோள்*  செய்யவாய் செய்ய தாமரைக்கண்,* 
    அறம்முயல் ஆழிஅங்கைக்*  கருமேனி அம்மான் தன்னையே.      


    அம்மான் ஆழிப்பிரான்*  அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,* 
    எம் மா பாவியர்க்கும்*  விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,* 

    'கைம்மா துன்பு ஒழித்தாய்!'  என்று கைதலைபூசல் இட்டே,* 
    மெய்ம் மால் ஆயொழிந்தேன்*  எம்பிரானும் என் மேலானே.   


    மேலாத் தேவர்களும்*  நிலத் தேவரும் மேவித் தொழும்,* 
    மாலார் வந்து இனநாள்*  அடியேன் மனத்தே மன்னினார்,*

    சேல் ஏய் கண்ணியரும்*  பெரும் செல்வமும் நன்மக்களும்,* 
    மேலாத் தாய் தந்தையும்*  அவரே இனி ஆவாரே.   


    ஆவார் ஆர் துணை என்று*  அலை நீர்க் கடலுள் அழுந்தும்- 
    நாவாய் போல்,*  பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,* 

    தேவு ஆர் கோலத்தொடும்*  திருச் சக்கரம் சங்கினொடும்,* 
    ஆஆ என்று அருள்செய்து*  அடியேனொடும் ஆனானே.    


    ஆனான் ஆளுடையான் என்று*  அஃதே கொண்டு உகந்துவந்து*
    தானே இன்அருள் செய்து*  என்னை முற்றவும் தான் ஆனான்,* 

    மீன் ஆய் ஆமையும் ஆய்*  நரசிங்கமும் ஆய் குறள் ஆய்,* 
    கான் ஆர் ஏனமும் ஆய்*  கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே.    


    கார்வண்ணன் கண்ண பிரான்*  கமலத்தடங்கண்ணன் தன்னை,* 
    ஏர்வள ஒண்கழனிக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஆர்வண்ணத்தால் உரைப்பார்*  அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.


    பொலிக பொலிக பொலிக!*  போயிற்று வல் உயிர்ச் சாபம்* 
    நலியும் நரகமும் நைந்த*  நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*

    கலியும் கெடும் கண்டுகொண்மின்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
    மலியப் புகுந்து இசைபாடி*  ஆடி உழிதரக் கண்டோம்*. (2) 


    கண்டோம் கண்டோம் கண்டோம்*  கண்ணுக்கு இனியன கண்டோம்* 
    தொண்டீர்! எல்லீரும் வாரீர்*  தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*

    வண்டுஆர் தண் அம் துழாயான்*  மாதவன் பூதங்கள் மண்மேல்* 
    பண் தான் பாடி நின்று ஆடி*   பரந்து திரிகின்றனவே*


    திரியும் கலியுகம் நீங்கி*  தேவர்கள் தாமும் புகுந்து* 
    பெரிய கிதயுகம் பற்றி*  பேரின்ப வெள்ளம் பெருக* 

    கரிய முகில்வண்ணன் எம்மான்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
    இரியப் புகுந்து இசை பாடி*  எங்கும் இடம் கொண்டனவே*


    இடம் கொள் சமயத்தை எல்லாம்*  எடுத்துக் களைவன போலே* 
    தடம் கடல் பள்ளிப் பெருமான்*  தன்னுடைப் பூதங்களே ஆய்* 

    கிடந்தும் இருந்தும் எழுந்தும்*  கீதம் பலபல பாடி* 
    நடந்தும் பறந்தும் குனித்தும்*  நாடகம் செய்கின்றனவே*.  


    செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே*  ஒக்கின்றது இவ் உலகத்து* 
    வைகுந்தன் பூதங்களே ஆய்*  மாயத்தினால் எங்கும் மன்னி*

    ஐயம் ஒன்று இல்லை அரக்கர்*  அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்* 
    உய்யும் வகை இல்லை தொண்டீர்!*  ஊழி பெயர்த்திடும் கொன்றே*


    கொன்று உயிர் உண்ணும் விசாதி*  பகை பசி தீயன எல்லாம்* 
    நின்று இவ் உலகில் கடிவான்*  நேமிப் பிரான் தமர் போந்தார்* 

    நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும்*  ஞாலம் பரந்தார்* 
    சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!*  சிந்தையைச் செந்நிறுத்தியே*.


    நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்*  தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்* 
    மறுத்தும் அவனோடே கண்டீர்*  மார்க்கண்டேயனும் கரியே* 

    கறுத்த மனம் ஒன்றும் வேண்டா*  கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை* 
    இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி*  யாயவர்க்கே இறுமினே*.    


    இறுக்கும் இறை இறுத்து உண்ண*  எவ் உலகுக்கும் தன் மூர்த்தி* 
    நிறுத்தினான் தெய்வங்கள் ஆக*  அத் தெய்வ நாயகன் தானே* 

    மறுத் திரு மார்வன் அவன் தன்*  பூதங்கள் கீதங்கள் பாடி* 
    வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்*  மேவித் தொழுது உய்ம்மின் நீரே*.


    மேவித் தொழுது உய்ம்மின்நீர்கள்*  வேதப் புனித இருக்கை* 
    நாவில் கொண்டு அச்சுதன் தன்னை*  ஞானவிதி பிழையாமே* 

    பூவில் புகையும் விளக்கும்*  சாந்தமும் நீரும் மலிந்து* 
    மேவித் தொழும் அடியாரும்*  பகவரும் மிக்கது உலகே*.     


    மிக்க உலகுகள் தோறும்*  மேவி கண்ணன் திருமூர்த்தி* 
    நக்க பிரானோடு*  அயனும் இந்திரனும் முதலாகத்* 

    தொக்க அமரர் குழாங்கள்*  எங்கும் பரந்தன தொண்டீர்!* 
    ஒக்கத் தொழ கிற்றிராகில்*  கலியுகம் ஒன்றும் இல்லையே*.      


    கலியுகம் ஒன்றும் இன்றிக்கே*  தன்அடியார்க்கு அருள்செய்யும்* 
    மலியும் சுடர் ஒளி மூர்த்தி*  மாயப் பிரான் கண்ணன் தன்னை*

    கலிவயல் தென் நன் குருகூர்க்*  காரிமாறன் சடகோபன்* 
    ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து*  உள்ளத்தை மாசு அறுக்குமே*.        


    மாசு அறு சோதி*  என் செய்ய வாய் மணிக்குன்றத்தை* 
    ஆசு அறு சீலனை*  ஆதி மூர்த்தியை நாடியே* 

    பாசறவு எய்தி*  அறிவு இழந்து எனை நாளையம்?* 
    ஏசு அறும் ஊரவர் கவ்வை*  தோழீ என் செய்யுமே?*     


    என் செய்யும் ஊரவர் கவ்வை*  தோழீ இனி நம்மை* 
    என் செய்ய தாமரைக் கண்ணன்*  என்னை நிறை கொண்டான்*

    முன் செய்ய மாமை இழந்து*  மேனி மெலிவு எய்தி* 
    என் செய்ய வாயும் கருங்கண்ணும்*  பயப்பு ஊர்ந்தவே*.           


    ஊர்ந்த சகடம்*  உதைத்த பாதத்தன்*  பேய்முலை- 
    சார்ந்து சுவைத்த செவ்வாயன்*  என்னை நிறை கொண்டான்*

    பேர்ந்தும் பெயர்ந்தும்*  அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்* 
    தீர்ந்த என் தோழீ!*  என் செய்யும் ஊரவர் கவ்வையே?* 


    ஊரவர் கவ்வை எரு இட்டு*  அன்னை சொல் நீர் படுத்து* 
    ஈர நெல் வித்தி முளைத்த*  நெஞ்சப் பெருஞ் செய்யுள்*

    பேர் அமர் காதல்*  கடல் புரைய விளைவித்த* 
    கார் அமர் மேனி*  நம் கண்ணன் தோழீ! கடியனே* 


    கடியன் கொடியன்*  நெடிய மால் உலகம் கொண்ட-
    அடியன்*  அறிவு அரு மேனி மாயத்தன்*  ஆகிலும்

    கொடிய என் நெஞ்சம்*  அவன் என்றே கிடக்கும் எல்லே* 
    துடி கொள் இடை மடத் தோழீ!*  அன்னை என் செய்யுமே?


    அன்னை என் செய்யில் என்?*  ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்* 
    என்னை இனி உமக்கு ஆசை இல்லை*  அகப்பட்டேன்*

    முன்னை அமரர் முதல்வன்*  வண் துவராபதி- 
    மன்னன்*  மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.   


    வலையுள் அகப்படுத்து*  என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு* 
    அலை கடல் பள்ளி அம்மானை*  ஆழிப்பிரான் தன்னை* 

    கலை கொள் அகல் அல்குல் தோழீ!*  நம் கண்களால் கண்டு* 
    தலையில் வணங்கவும் ஆம் கொலோ?*  தையலார் முன்பே*.  


    பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து*  மருது இடை- 
    போய் முதல் சாய்த்து*  புள் வாய் பிளந்து களிறு அட்ட*

    தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை*  எந் நாள்கொலோ* 
    யாம் உறுகின்றது தோழீ!*  அன்னையர் நாணவே?*      


    நாணும் நிறையும் கவர்ந்து*  என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு* 
    சேண் உயர் வானத்து இருக்கும்*  தேவ பிரான் தன்னை*

    ஆணை என் தோழீ!*  உலகுதோறு அலர் தூற்றி*  ஆம்- 
    கோணைகள் செய்து*  குதிரியாய் மடல் ஊர்துமே*.


    யாம் மடல் ஊர்ந்தும்*  எம் ஆழி அங்கைப் பிரான் உடை*
    தூ மடல் தண் அம் துழாய்*  மலர் கொண்டு சூடுவோம்*

    ஆம் மடம் இன்றி*  தெருவுதோறு அயல் தையலார்*
    நா மடங்காப் பழி தூற்றி*  நாடும் இரைக்கவே*.            


    இரைக்கும் கருங் கடல் வண்ணன்*  கண்ண பிரான் தன்னை* 
    விரைக் கொள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    நிரைக் கொள் அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
    உரைக்க வல்லார்க்கு*  வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்*  (2)


    ஊர் எல்லாம் துஞ்சி*  உலகு எல்லாம் நள் இருள் ஆய்* 
    நீர் எல்லாம் தேறி*  ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்* 

    பார் எல்லாம் உண்ட*  நம் பாம்பு அணையான் வாரானால்* 
    ஆர் எல்லே! வல்வினையேன்*  ஆவி காப்பார் இனியே?* (2)   


    ஆவி காப்பார் இனி யார்?*  ஆழ் கடல் மண் விண் மூடி* 
    மா விகாரம் ஆய்*  ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்*

    காவி சேர் வண்ணன்*  என் கண்ணனும் வாரானால்* 
    பாவியேன் நெஞ்சமே!*  நீயும் பாங்கு அல்லையே?*.      


    நீயும் பாங்கு அல்லைகாண்*  நெஞ்சமே நீள் இரவும்* 
    ஓயும் பொழுது இன்றி*  ஊழி ஆய் நீண்டதால்* 

    காயும் கடும் சிலை*  என் காகுத்தன் வாரானால்* 
    மாயும் வகை அறியேன்*  வல்வினையேன் பெண் பிறந்தே*


    பெண் பிறந்தார் எய்தும்*  பெரும் துயர் காண்கிலேன் என்று* 
    ஒண் சுடரோன்*  வாராது ஒளித்தான்*  இம்மண்அளந்த-

    கண் பெரிய செவ்வாய்*  எம் கார் ஏறு வாரானால்* 
    எண் பெரிய சிந்தைநோய்*  தீர்ப்பார் ஆர் என்னையே?*


    ஆர் என்னை ஆராய்வார்?*  அன்னையரும் தோழியரும்* 
    'நீர் என்னே?' என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்* 

    கார் அன்ன மேனி*  நம் கண்ணனும் வாரானால்* 
    பேர் என்னை மாயாதால்*  வல்வினையேன் பின் நின்றே*.


    பின்நின்று காதல் நோய்*  நெஞ்சம் பெரிது அடுமால்* 
    முன்நின்று இரா ஊழி*  கண் புதைய மூடிற்றால்* 

    மன் நின்ற சக்கரத்து*  எம் மாயவனும் வாரானால்* 
    இந் நின்ற நீள் ஆவி*  காப்பார் ஆர் இவ் இடத்தே?*


    காப்பார் ஆர் இவ் இடத்து?*  கங்கு இருளின் நுண் துளி ஆய்* 
    சேண் பாலது ஊழி ஆய்*  செல்கின்ற கங்குல்வாய்த்* 

    தூப் பால வெண்சங்கு*  சக்கரத்தன் தோன்றானால்* 
    தீப் பால வல்வினையேன்*  தெய்வங்காள்! என் செய்கேனோ?*   


    தெய்வங்காள்! என் செய்கேன்?*  ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்* 
    மெய் வந்து நின்று*  எனது ஆவி மெலிவிக்கும்,* 

    கைவந்த சக்கரத்து*  என் கண்ணனும் வாரானால்* 
    தைவந்த தண் தென்றல்*  வெம் சுடரில் தான் அடுமே* 


    வெம் சுடரில் தான் அடுமால்*  வீங்கு இருளின் நுண் துளி ஆய்* 
    அம் சுடர வெய்யோன்*  அணி நெடும் தேர் தோன்றாதால்* 

    செஞ் சுடர்த் தாமரைக்கண்*  செல்வனும் வாரானால்* 
    நெஞ்சு இடர் தீர்ப்பார் இனியார்?*  நின்று உருகுகின்றேனே!*            


    நின்று உருகுகின்றேனே போல*  நெடு வானம்* 
    சென்று உருகி நுண் துளி ஆய்*  செல்கின்ற கங்குல்வாய்* 

    அன்று ஒருகால் வையம்*  அளந்த பிரான் வாரான் என்று* 
    ஒன்று ஒருகால் சொல்லாது*  உலகோ உறங்குமே*      


    உறங்குவான் போல்*  யோகுசெய்த பெருமானை* 
    சிறந்த பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொல்*

    நிறம் கிளர்ந்த அந்தாதி*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
    இறந்து போய் வைகுந்தம்*  சேராவாறு எங்ஙனேயோ?*    


    எங்ஙனேயோ அன்னைமீர்காள்!*  என்னை முனிவது நீர்?* 
    நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    சங்கினோடும் நேமியோடும்*  தாமரைக் கண்களோடும்* 
    செங்கனி வாய் ஒன்றினோடும்*  செல்கின்றது என்நெஞ்சமே*. (2)     


    என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்*  என்னை முனியாதே 
    தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    மின்னு நூலும் குண்டலமும்*  மார்பில் திருமறுவும்* 
    மன்னு பூணும் நான்கு தோளும்*  வந்து எங்கும் நின்றிடுமே*.  


    நின்றிடும் திசைக்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    வென்றி வில்லும் தண்டும் வாளும்*  சக்கரமும் சங்கமும்* 
    நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா*  நெஞ்சுள்ளும் நீங்காவே*.


    நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    பூந்தண் மாலைத் தண் துழாயும்*  பொன் முடியும் வடிவும்* 
    பாங்கு தோன்றும் பட்டும் நாணும்*  பாவியேன் பக்கத்தவே*.      


    பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    தொக்க சோதித் தொண்டை வாயும்*  நீண்ட புருவங்களும்* 
    தக்க தாமரைக் கண்ணும்*  பாவியேன் ஆவியின் மேலனவே*.     


    மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    கோலநீள் கொடி மூக்கும்*  தாமரைக் கண்ணும் கனிவாயும்* 
    நீலமேனியும் நான்கு தோளும்*  என் நெஞ்சம் நிறைந்தனவே*.  


    நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த*  நீண்ட பொன் மேனியொடும்* 
    நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்*  நேமி அங்கை உளதே*.      


    கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்*  சிற்றிடையும் வடிவும்* 
    மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்*  பாவியேன் முன் நிற்குமே*.     


    முன் நின்றாய் என்று தோழிமார்களும்*  அன்னையரும் முனிதிர்* 
    மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    சென்னி நீள்முடி ஆதிஆய*  உலப்பு இல் அணிகலத்தன்* 
    கன்னல் பால் அமுதுஆகி வந்து*  என் நெஞ்சம் கழியானே*.     


    கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    குழுமித் தேவர் குழாங்கள்*  கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே* 
    எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்*  ஆர்க்கும் அறிவு அரிதே*. 


    அறிவு அரிய பிரானை*  ஆழியங்கையனையே அலற்றி* 
    நறிய நன் மலர் நாடி*  நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*

    குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருக்குறுங்குடி அதன்மேல்* 
    அறியக் கற்று வல்லார் வைட்டவர்*  ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)     


    கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்* 
    கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*

    கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
    கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*


    கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்*  கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்* 
    கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்*  கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்* 

    கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்*  கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?*
    கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?*


    காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்* 
    காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்* 

    காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
    காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,*  காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?* 


    செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்*  செய்வான் நின்றனகளும் யானே என்னும்* 
    செய்து முன் இறந்தவும் யானே என்னும்*  செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்*

    செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்*  செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?*
    செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  செய்ய கனி வாய் இள மான் திறத்தே?*


    திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்*  திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்* 
    திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்*  திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்*

    திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்*  திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?* 
    திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்*  திறம்பாது என் திருமகள் எய்தினவே?*


    இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்*  இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்* 
    இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்*  இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்*

    இன ஆயர் தலைவனும் யானே என்னும்*  இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?* 
    இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்*  இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?*  


    உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்*  உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்* 
    உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்*  உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்* 

    உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்*  உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?* 
    உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?*  உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?* 


    உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்*  உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்* 
    உரைக்கின்ற அமரரும் யானே என்னும்*  உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்*

    உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்*  உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?,
    உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?  உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே*.


    கொடிய வினை யாதும் இலனே என்னும்*  கொடிய வினை ஆவேனும் யானே என்னும்* 
    கொடிய வினை செய்வேனும் யானே என்னும்*  கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்*

    கொடியான் இலங்கை செற்றேனே என்னும்*  கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?* 
    கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கொடியேன் கொடி என் மகள் கோலங்களே?*   


    கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்*  கோலம் இல் நரகமும் யானே என்னும்* 
    கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்*  கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்* 

    கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்*  கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
    கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்  கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே!*


    கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்*  குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை* 
    வாய்ந்த வழுதி வள நாடன்*  மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து* 

    ஆய்ந்த தமிழ் மாலை*  ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்*  உலகில்- 
    ஏந்து பெரும் செல்வத்தராய்த்*  திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)


    நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்*  ஆகிலும் இனி உன்னை விட்டு* 
    ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்*  அரவின் அணை அம்மானே* 

    சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்*  சிரீவரமங்கல நகர்* 
    வீற்றிருந்த எந்தாய்!*  உனக்கு மிகை அல்லேன் அங்கே*.    


    அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்*  உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து*  நான் 
    எங்குற்றேனும் அல்லேன்*  இலங்கை செற்ற அம்மானே* 

    திங்கள் சேர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கலநகர் உறை* 
    சங்கு சக்கரத்தாய்!*  தமியேனுக்கு அருளாயே*.         


    கருளப் புள் கொடி சக்கரப் படை*  வான நாட! என் கார்முகில் வண்ணா* 
    பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி*  அடிமைகொண்டாய்*

    தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்*  சிரீவரமங்கலநகர்க்கு* 
    அருள்செய்து அங்கு இருந்தாய்!*  அறியேன் ஒரு கைம்மாறே*


    மாறு சேர் படை நூற்றுவர் மங்க*  ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி* 
    நீறு செய்த எந்தாய்!*  நிலம் கீண்ட அம்மானே* 

    தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    ஏறி வீற்றிருந்தாய்!*  உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*    


    எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?*  எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று* 
    கைதவங்கள் செய்யும்*  கரு மேனி அம்மானே*

    செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    கைதொழ இருந்தாய்*  அது நானும் கண்டேனே*.


    ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!*  என்றும் என்னை ஆளுடை* 
    வான நாயகனே!*  மணி மாணிக்கச்சுடரே*

    தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்*  கைதொழ உறை* 
    வானமாமலையே!*  அடியேன் தொழ வந்தருளே*. (2)    


    வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட*  வானவர் கொழுந்தே!*  உலகுக்கு ஓர்- 
    முந்தைத் தாய் தந்தையே!*  முழு ஏழ் உலகும் உண்டாய்!* 

    செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    அந்தம் இல் புகழாய்!*  அடியேனை அகற்றேலே*.       


    அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை*  நன்கு அறிந்தனன்* 
    அகற்றி என்னையும் நீ*  அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்* 

    பகல் கதிர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கை வாணனே*  என்றும்- 
    புகற்கு அரிய எந்தாய்!*  புள்ளின் வாய் பிளந்தானே!*    


    புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!*  எருது ஏழ் அடர்த்த*  என்- 
    கள்ள மாயவனே!*  கருமாணிக்கச் சுடரே*

    தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்*  மலி தண் சிரீவரமங்கை* 
    யுள் இருந்த எந்தாய்!*  அருளாய் உய்யுமாறு எனக்கே*.  


    ஆறு எனக்கு நின் பாதமே*  சரண் ஆகத் தந்தொழிந்தாய்*  உனக்கு ஓர்கைம் 
    மாறு நான் ஒன்று இலேன்*  எனது ஆவியும் உனதே*

    சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்*  மலி தண் சிரீவரமங்கை* 
    நாறு பூந் தண் துழாய் முடியாய்!*  தெய்வ நாயகனே!*.


    தெய்வ நாயகன் நாரணன்*  திரிவிக்கிரமன் அடி இணைமிசை* 
    கொய் கொள் பூம் பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன்*

    செய்த ஆயிரத்துள் இவை*  தண் சிரீவரமங்கை மேய பத்துடன்* 
    வைகல் பாட வல்லார்*  வானோர்க்கு ஆரா அமுதே*. (2)   


    ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே* 
    நீராய் அலைந்து கரைய*  உருக்குகின்ற நெடுமாலே* 

    சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை* 
    ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!* (2)  


    எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!*  என்னை ஆள்வானே* 
    எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்*  ஆவாய் எழில் ஏறே* 

    செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்*  திருக்குடந்தை* 
    அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)   


    என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
    உன்னால் அல்லால் யாவராலும்*  ஒன்றும் குறை வேண்டேன்* 

    கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!*  அடியேன் அரு வாழ்நாள்* 
    செல் நாள் எந் நாள்? அந்நாள்*  உன தாள் பிடித்தே செலக்காணே*


    செலக் காண்கிற்பார் காணும் அளவும்*  செல்லும் கீர்த்தியாய்* 
    உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய*  ஒரு மூர்த்தி* 

    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!*  உன்னைக் காண்பான் நான்- 
    அலப்பு ஆய்*  ஆகாசத்தை நோக்கி*  அழுவன் தொழுவனே*.


    அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்*  பாடி அலற்றுவன்* 
    தழு வல்வினையால் பக்கம் நோக்கி*  நாணிக் கவிழ்ந்திருப்பன்*

    செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!*  செந்தாமரைக் கண்ணா!* 
    தொழுவனேனை உன தாள் சேரும்*  வகையே சூழ்கண்டாய்*.    


    சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து*  உன் அடிசேரும்- 
    ஊழ் கண்டிருந்தே*  தூராக்குழி தூர்த்து*  எனை நாள் அகன்று இருப்பன்?*

    வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!*  வானோர் கோமானே* 
    யாழின் இசையே! அமுதே!*  அறிவின் பயனே! அரிஏறே!*.


    அரிஏறே! என் அம் பொன் சுடரே!*  செங்கண் கருமுகிலே!* 
    எரி ஏய்! பவளக் குன்றே!*  நால் தோள் எந்தாய் உனது அருளே*

    பிரியா அடிமை என்னைக் கொண்டாய்*  குடந்தைத் திருமாலே* 
    தரியேன் இனி உன் சரணம் தந்து*  என் சன்மம் களையாயே*.


    களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்*  களைகண் மற்று இலேன்* 
    வளை வாய் நேமிப் படையாய்!*  குடந்தைக் கிடந்த மா மாயா* 

    தளரா உடலம் எனது ஆவி*  சரிந்து போம்போது* 
    இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்*  போத இசை நீயே*.  


    இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்*  இருத்தும் அம்மானே* 
    அசைவு இல் அமரர் தலைவர் தலைவா*  ஆதிப் பெரு மூர்த்தி* 

    திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்*  திருக்குடந்தை* 
    அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!*  காண வாராயே*.


    வாரா அருவாய் வரும் என் மாயா!*  மாயா மூர்த்தியாய்* 
    ஆரா அமுதாய் அடியேன் ஆவி*  அகமே தித்திப்பாய்* 

    தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!*  திருக்குடந்தை- 
    ஊராய்!*  உனக்கு ஆள் பட்டும்*  அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)


    உழலை என்பில் பேய்ச்சி முலையூடு*  அவளை உயிர் உண்டான்* 
    கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட*  குருகூர்ச் சடகோபன்* 

    குழலின் மலியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
    மழலை தீர வல்லார்*  காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)


    மான் ஏய் நோக்கு நல்லீர்!*  வைகலும் வினையேன் மெலிய* 
    வான் ஆர் வண் கமுகும்*  மது மல்லிகை கமழும்*

    தேன் ஆர் சோலைகள் சூழ்*  திருவல்லவாழ் உறையும்- 
    கோனாரை*  அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)   


    என்று கொல்? தோழிமீர்காள்*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பொன்திகழ் புன்னை மகிழ்*  புது மாதவி மீது அணவி* 

    தென்றல் மணம் கமழும்*  திருவல்லவாழ் நகருள்- 
    நின்ற பிரான்*  அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*    


    சூடு மலர்க்குழலீர்!*  துயராட்டியேன் மெலிய* 
    பாடும் நல் வேத ஒலி*  பரவைத் திரை போல் முழங்க* 

    மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்*  தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*      


    நிச்சலும் தோழிமீர்காள்!*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பச்சிலை நீள் கமுகும்*  பலவும் தெங்கும் வாழைகளும்* 

    மச்சு அணி மாடங்கள் மீது அணவும்*  தண் திருவல்லவாழ்* 
    நச்சு அரவின் அணைமேல்*  நம்பிரானது நல் நலமே*.             


    நல் நலத் தோழிமீர்காள்!*  நல்ல அந்தணர் வேள்விப் புகை* 
    மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்*  தண் திருவல்லவாழ்* 

    கன்னல் அம் கட்டி தன்னை*  கனியை இன் அமுதம் தன்னை* 
    என் நலம் கொள் சுடரை*  என்றுகொல் கண்கள் காண்பதுவே?*   


    காண்பது எஞ்ஞான்றுகொலோ?*  வினையேன் கனிவாய் மடவீர்* 
    பாண் குரல் வண்டினொடு*  பசுந் தென்றலும் ஆகி எங்கும்* 

    சேண் சினை ஓங்கு மரச்*  செழுங் கானல் திருவல்லவாழ்* 
    மாண் குறள் கோலப் பிரான்*  மலர்த் தாமரைப் பாதங்களே?*


    பாதங்கள்மேல் அணி*  பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்* 
    ஓத நெடுந் தடத்துள்*  உயர் தாமரை செங்கழுநீர்*

    மாதர்கள் வாள் முகமும்*  கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நாதன் இஞ் ஞாலம் உண்ட*  நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*


    நாள்தொறும் வீடு இன்றியே*  தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்* 
    ஆடு உறு தீங் கரும்பும்*  விளை செந்நெலும் ஆகி எங்கும்*

    மாடு உறு பூந் தடம் சேர்*  வயல் சூழ் தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  நிலம் தாவிய நீள் கழலே?*    


    கழல் வளை பூரிப்ப யாம் கண்டு*  கைதொழக் கூடுங்கொலோ* 
    குழல் என்ன யாழும் என்ன*  குளிர் சோலையுள் தேன் அருந்தி*

    மழலை வரி வண்டுகள் இசை பாடும்*  திருவல்லவாழ்* 
    சுழலின் மலி சக்கரப் பெருமானது*  தொல் அருளே?*  


    தொல் அருள் நல் வினையால்*  சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்* 
    தொல் அருள் மண்ணும் விண்ணும்*  தொழ நின்ற திருநகரம்* 

    நல் அருள் ஆயிரவர்*  நலன் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நல் அருள் நம் பெருமான்*  நாராயணன் நாமங்களே?*   


    நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்* 
    சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த* 

    நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்* 
    சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*    


    பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும்*  பெரிய பாரதம் கைசெய்து*  ஐவர்க்குத்-
    திறங்கள் காட்டியிட்டுச்*  செய்து போன மாயங்களும்* 

    நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை*  நின்று நின்று உருக்கி உண்கின்ற*  இச்- 
    சிறந்தவான் சுடரே!*  உன்னை என்றுகொல் சேர்வதுவே!* (2)


    வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்*  மாய மாவினை வாய் பிளந்ததும்* 
    மதுவை வார் குழலார்*  குரவை பிணைந்த குழகும்* 

    அது இது உது என்னலாவன அல்ல*  என்னை உன் செய்கை நைவிக்கும்* 
    முது வைய முதல்வா!*  உன்னை என்று தலைப்பெய்வனே?* 


    பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட*  பிள்ளைத் தேற்றமும்*  பேர்ந்து ஓர் சாடு இறச்- 
    செய்ய பாதம் ஒன்றால்*  செய்த நின் சிறுச் சேவகமும்* 

    நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள*  நீ உன் தாமரைக் கண்கள் நீர்மல்க* 
    பையவே நிலையும் வந்து*  என் நெஞ்சை உருக்குங்களே*


    கள்ள வேடத்தைக் கொண்டு போய்*  புரம்புக்க ஆறும்*  கலந்து அசுரரை- 
    உள்ளம் பேதம் செய்திட்டு*  உயிர் உண்ட உபாயங்களும்* 

    வெள்ள நீர்ச் சடையானும்*  நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்* 
    உள்ளம் உள் குடைந்து*  என் உயிரை உருக்கி உண்ணுமே*.   


    உண்ண வானவர் கோனுக்கு*  ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்* 
    வண்ண மால் வரையை எடுத்து*  மழை காத்தலும்* 

    மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து*  கடந்து இடந்து மணந்த மாயங்கள்* 
    எண்ணும்தோறும் என் நெஞ்சு*  எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே*.


    நின்ற ஆறும் இருந்த ஆறும்/*  கிடந்த ஆறும் நினைப்பு அரியன* 
    ஒன்று அலா உருவு ஆய்*  அருவு ஆய நின் மாயங்கள்* 

    நின்று நின்று நினைக்கின்றேன்*  உன்னை எங்ஙனம் நினைகிற்பன்*  பாவியேற்கு- 
    ஒன்று நன்கு உரையாய்*  உலகம் உண்ட ஒண் சுடரே!*      


    ஒண் சுடரோடு இருளுமாய்*  நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து*  என்- 
    கண் கொளாவகை*  நீ கரந்து என்னைச் செய்கின்றன* 

    எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்*  என் கரிய மாணிக்கமே!*  என் கண்கட்குத்- 
    திண் கொள்ள ஒரு நாள்*  அருளாய் உன் திரு உருவே*.


    திரு உருவு கிடந்த ஆறும்*  கொப்பூழ்ச் செந்தாமரைமேல்*  திசைமுகன்- 
    கருவுள் வீற்றிருந்து*  படைத்திட்ட கருமங்களும்* 

    பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்*  என் நெஞ்சம் நின்று நெக்கு* 
    அருவி சோரும் கண்ணீர்*  என் செய்கேன் அடியேனே!*     


    அடியை மூன்றை இரந்த ஆறும்*  அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்- 
    முடிய*  ஈர் அடியால்*  முடித்துக்கொண்ட முக்கியமும் *

    நொடியுமாறு அவை கேட்கும்தோறும்*  என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்* 
    கொடிய வல்வினையேன்*  உன்னை என்றுகொல் கூடுவதே?*    


    கூடி நீரைக் கடைந்த ஆறும்*  அமுதம் தேவர் உண்ண*  அசுரரை- 
    வீடும் வண்ணங்களே*  செய்து போன வித்தகமும்* 

    ஊடு புக்கு எனது ஆவியை*  உருக்கி உண்டிடுகின்ற*  நின் தன்னை- 
    நாடும் வண்ணம் சொல்லாய்*  நச்சு நாகு அணையானே!*


    நாகு அணைமிசை நம் பிரான்*  சரணே சரண் நமக்கு என்று*  நாள்தொறும்- 
    ஏக சிந்தையனாய்க்*  குருகூர்ச் சடகோபன் மாறன்* 

    ஆக நூற்ற அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்* 
    மாக வைகுந்தத்து*  மகிழ்வு எய்துவர் வைகலுமே*.