பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
தேவிமார் ஆவார் திருமகள்பூமி* ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்*
மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி* வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்* பவளவாய் மணியே*
ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே!* காணுமாறு அருளாய் (2)
காணுமாறுஅருளாய் என்றுஎன்றே கலங்கி* கண்ணநீர் அலமர* வினையேன்
பேணுமாறுஎல்லாம் பேணி* நின்பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ*
காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!* தொண்டனேன் கற்பகக்கனியே*
பேணுவார் அமுதே! பெரிய தண்புனல்சூழ்* பெருநிலம் எடுத்த பேராளா!
எடுத்தபேராளன் நந்தகோபன்தன்* இன்உயிர்ச் சிறுவனே* அசோதைக்கு
அடுத்தபேரின்பக் குலஇளம்களிறே* அடியனேன் பெரிய அம்மானே*
கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்* கைஉகிர் ஆண்ட எம்கடலே,*
அடுத்ததுஓர் உருவாய் இன்று நீ வாராய்* எங்ஙனம் தேறுவர் உமரே?
உமர்உகந்துஉகந்த உருவம்நின்உருவம்ஆகி* உன்தனக்கு அன்பர் ஆனார்*
அவர் உகந்துஅமர்ந்த செய்கை உன்மாயை* அறிவுஒன்றும் சங்கிப்பன் வினையேன்*
அமர்அதுபண்ணி அகல்இடம்புடைசூழ்* அடுபடை அவித்த அம்மானே*
அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே* என்னுடை ஆர்உயிரேயோ!
ஆர்உயிரேயோ அகல்இடம்முழுதும்* படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்துஅளந்த*
பேர்உயிரேயோ பெரியநீர் படைத்து* அங்கு உறைந்து அது கடைந்துஅடைத்து உடைத்த*
சீர்உயிரேயோ மனிசர்க்குத்தேவர் போலத்* தேவர்க்கும்தேவாவோ*
ஓர்உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்து உறுகோ?
எங்குவந்துஉறுகோ என்னைஆள்வானே* ஏழ்உலகங்களும் நீயே*
அங்கு அவர்க்குஅமைத்த தெய்வமும்நீயே* அவற்றுஅவை கருமமும் நீயே*
பொங்கியபுறம்பால் பொருள்உளவேலும்* அவையுமோ நீ இன்னேஆனால்*
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே* வான்புலன் இறந்ததும் நீயே.
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே* நிகழ்வதோ நீ இன்னேஆனால்*
சிறந்தநின் தன்மை அதுஇதுஉதுஎன்று* அறிவுஒன்றும் சங்கிப்பன்வினையேன்*
கறந்தபால் நெய்யே நெய்யின் சுவையே!* கடலினுள் அமுதமே அமுதில்*
பிறந்த இன்சுவையே சுவையதுபயனே!* பின்னைதோள் மணந்தபேர்ஆயா!
மணந்தபேர்ஆயா! மாயத்தால்முழுதும்* வல்வினையேனை ஈர்கின்ற*
குணங்களை உடையாய் அசுரர் வன்கையர்கூற்றமே!* கொடிய புள்உயர்த்தாய்*
பணங்கள்ஆயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!* பாற்கடல் சேர்ப்பா*
வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்* செய்கையும் யானும் நீதானே.
யானும் நீதானே ஆவதோமெய்யே* அருநரகுஅவையும் நீ ஆனால்*
வான்உயர் இன்பம் எய்தில்என்* மற்றை நரகமே எய்தில்என்? எனினும்,*
யானும் நீதானாய்த் தெளிதொறும், நன்றும் அஞ்சுவன்* நரகம் நான்அடைதல்*
வான்உயர்இன்பம் மன்னிவீற்றிருந்தாய்* அருளுநின் தாள்களைஎனக்கே.
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்* த பேர்உதவிக்கைம்மாறாத்*
தோள்களை ஆரத்தழுவி என்உயிரை* அறவிலை செய்தனன் சோதீ,
தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்* துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்*
தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்* தமியனேன் பெரிய அப்பனே!
பெரிய அப்பனை பிரமன் அப்பனை* உருத்திரன் அப்பனை* முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை* உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*
பெரியவண்குருகூர் வண்சடகோபன்* பேணின ஆயிரத்துள்ளும்*
உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்* உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (2)
நங்கள் வரிவளையாய் அங்காளோ* நம்முடை ஏதலர் முன்பு நாணி*
நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்* நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*
சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்* தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்*
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்* வேங்கடவாணனை வேண்டிச்சென்றே. (2)
வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்* என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்*
ஈண்டுஇதுஉரைக்கும்படியை அந்தோ* காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*
காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்* விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்*
ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்* எத்தனைகாலம் இளைக்கின்றேனே!
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன்* கண்டு கொள்மின்*
ஞாலம் அறியப் பழிசுமந்தேன்* நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*
நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த* நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட*
கோலவளையொடும் மாமைகொள்வான்* எத்தனைகாலமும் கூடச்சென்றே?
கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?* கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்*
பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்* பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*
மாடக்கொடிமதிள் தென்குளந்தை* வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்*
ஆடல்பறவை உயர்த்தவெல்போர்* ஆழிவலவனை ஆதரித்தே.
ஆழிவலவனை ஆதரிப்பும்* ஆங்குஅவன் நம்மில் வரவும் எல்லாம்*
தோழியர்காள்! நம்உடையமேதான்?* சொல்லுவதோ இங்கு அரியதுதான்*
ஊழிதோறுஊழி ஒருவனாக* நன்குஉணர்வார்க்கும் உணரலாகாச்*
சூழல்உடைய சுடர்கொள்ஆதித்* தொல்லைஅம்சோதி நினைக்குங்காலே.
தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்* என் சொல்அளவன்று இமையோர் தமக்கும்*
எல்லைஇலாதன கூழ்ப்புச்செய்யும்* அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*
அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்* ஆர்க்கு இடுகோ இனிப்பூசல்? சொல்லீர்*
வல்லிவளவயல்சூழ் குடந்தை* மாமலர்க்கண் வளர்கின்றமாலே.
மாலரிகேசவன் நாரணன்* சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று*
ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு* ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*
ஏலமலர் குழல் அன்னைமீர்காள்!* என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?*
காலம்பலசென்றும் காண்பதுஆணை* உங்களோடு எங்கள் இடைஇல்லையே.
இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்* பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்* ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்* அஞ்சனவெற்பும் அவைநணிய*
கடையறப்பாசங்கள் விட்டபின்னை* அன்றி அவன்அவை காண்கொடானே.
காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை* கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்*
மாண்குறள் கோலவடிவுகாட்டி* மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*
சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த* தேவபிராற்கு என் நிறைவினோடு*
நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்* என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்
என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!* யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை*
நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி* நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*
பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு* பால்மதி ஏந்தி ஓர்கோலநீல*
நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்* நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே
பாதம் அடைவதன் பாசத்தாலே* மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு*
கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்* வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*
தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்* இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்*
ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி* இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே. (2)
அங்கும் இங்கும்* வானவர் தானவர் யாவரும்*
எங்கும் இனையைஎன்று* உன்னைஅறியகிலாதுஅலற்றி*
அங்கம்சேரும்* பூமகள் மண்மகள் ஆய்மகள்*
சங்குசக்கரக் கையவன் என்பர்* சரணமே. (2)
சரணமாகிய* நான்மறை நூல்களும் சாராதே*
மரணம் தோற்றம்* வான்பிணி மூப்புஎன்றுஇவை மாய்த்தோம்*
கரணப்பல்படை* பற்றறஓடும் கனல்ஆழி*
அரணத்திண் படைஏந்திய* ஈசற்கு ஆளாயே.
ஆளும் ஆளார் ஆழியும்* சங்கும் சுமப்பார்தாம்*
வாளும் வில்லும் கொண்டு* பின் செல்வார் மற்றுஇல்லை*
தாளும் தோளும்* கைகளைஆரத் தொழக்காணேன்*
நாளும் நாளும் நாடுவன்* அடியேன் ஞாலத்தே
ஞாலம் போனகம்பற்றி* ஓர்முற்றா உருஆகி*
ஆலம்பேர்இலை* அன்னவசம்செய்யும் அம்மானே*
காலம்பேர்வதுஓர்* கார்இருள் ஊழி ஒத்துஉளதால்* உன்
கோலம்கார்எழில்* காணலுற்று ஆழும் கொடியேற்கே
கொடியார்மாடக்* கோளூர்அகத்தும் புளியங்குடியும்*
மடியாதுஇன்னே* நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*
அடியார் அல்லல்தவிர்த்த* அசைவோ? அன்றேல்* இப்
படிதான் நீண்டுதாவிய* அசைவோ? பணியாயே.
பணியாஅமரர்* பணிவும் பண்பும் தாமேஆம்*
அணியார் ஆழியும்* சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்*
தணியா வெம்நோய்* உலகில் தவிர்ப்பான்* திருநீல
மணியார்மேனியோடு* என்மனம் சூழவருவாரே.
வருவார் செல்வார்* வண்பரிசாரத்து இருந்த* என்
திருவாழ்மார்வற்கு* என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
உருவார் சக்கரம்* சங்குசுமந்து இங்குஉம்மோடு*
ஒருபாடுஉழல்வான்* ஓர்அடியானும் உளன்என்றே.
என்றே என்னை* உன்ஏர்ஆர்கோலத்திருந்து அடிக்கீழ்*
நின்றே ஆட்செய்ய* நீகொண்டருள நினைப்பதுதான்*
குன்றுஏழ் பார்ஏழ்* சூழ்கடல்ஞாலம் முழுஏழும்*
நின்றே தாவிய* நீள்கழல் ஆழித் திருமாலே!
திருமால் நான்முகன்* செஞ்சடையான் என்றுஇவர்கள்* எம்
பெருமான் தன்மையை* யார் அறிகிற்பார்? பேசிஎன்*
ஒருமாமுதல்வா!* ஊழிப்பிரான் என்னை ஆளுடைக்*
கருமாமேனியன்! என்பன்* என்காதல் கலக்கவே.
கலக்கம் இல்லா* நல்தவமுனிவர் கரைகண்டோர்*
துளக்கம் இல்லா* வானவர் எல்லாம் தொழுவார்கள்*
மலக்கம் எய்த* மாகடல்தன்னைக் கடைந்தானை*
உலக்க நாம் புகழ்கிற்பது* என்செய்வது உரையீரே.
உரையா வெம்நோய்தவிர* அருள் நீள்முடியானை*
வரையார்மாடம்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
உரையேய் சொல்தொடை* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
நிரையே வல்லார்* நீடு உலகத்துப் பிறவாரே. (2)
வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட* மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (2)
எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்* இமையவர் அப்பன் என்அப்பன்*
பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்* பொருந்துமூவுருவன் எம்அருவன்*
செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்* திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு-
அங்கு அமர்கின்ற* ஆதியான் அல்லால்* யாவர்மற்றுஎன்அமர் துணையே?
என்அமர்பெருமான் இமையவர்பெருமான்* இருநிலம் இடந்த எம்பெருமான்*
முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள* என்னைஆள்கின்ற எம்பெருமான்*
தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரைமீபால்-
நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண் நினைப்பிலும்* பிறிதுஇல்லை எனக்கே.
பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்* நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த*
குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த* கோலமாணிக்கம் என்அம்மான்*
செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்* திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய* மெய்ம்மையே நின்ற எம்பெருமான்* அடிஇணை அல்லதுஓர் அரணே.
அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை* அது பொருள்ஆகிலும்* அவனை
அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது* ஆதலால் அவன் உறைகின்ற*
நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த* நறும்புகை விசும்புஒளி மறைக்கும்*
நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.
எனக்கு நல்அரணை எனதுஆருயிரை* இமையவர் தந்தைதாய் தன்னை*
தனக்கும் தன் தன்மை அறிவரியானை* தடம்கடல்பள்ளி அம்மானை*
மனக்கொள்சீர் மூவாயிரவர்* வண்சிவனும் அயனும்தானும் ஒப்பார்வாழ்*
கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே.
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட* அத்திருவடி என்றும்*
திருச்செய்ய கமலக்கண்ணும்* செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*
திருச்செய்யகமல உந்தியும்* செய்யகமலை மார்பும் செய்யஉடையும்*
திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்* திகழ என் சிந்தையுளானே.
திகழ என்சிந்தையுள் இருந்தானை* செழுநிலத்தேவர் நான்மறையோர்*
திசை கைகூப்பி ஏத்தும்* திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையானை*
புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை* அசுரர்வன்கையர் வெம்கூற்றை*
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்* படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்* பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே*
இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே* புகழ்வுஇல்லையாவையும் தானே*
கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்* கூரியவிச்சையோடு ஒழுக்கம்*
நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.
அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி* அவர்க்குஅருள் அருளும் அம்மானை*
அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரையானை*
அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்* தம்பதி அவனிதேவர் வாழ்வு*
அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை* நான்முகனை அமர்ந்தேனே.
தேனைநன்பாலை கன்னலைஅமுதை* திருந்துஉலகுஉண்ட அம்மானை*
வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்* மலர்மிசைப் படைத்தமாயோனை*
கோனை வண்குருகூர் வண்சடகோபன்* சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்*
வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்* பிறவிமாமாயக் கூத்தினையே. (2)
மாயக்கூத்தா!வாமனா!* வினையேன்கண்ணா! கண்கைகால்*
தூயசெய்ய மலர்களா* சோதிச்செவ்வாய் முகிழதா*
சாயல்சாமத் திருமேனி* தண்பாசடையா* தாமரைநீள்
வாசத்தடம்போல் வருவானே!* ஒருநாள் காண வாராயே.
'காணவாராய்' என்றுஎன்று* கண்ணும்வாயும் துவர்ந்து* அடியேன்
நாணி நல்நாட்டு அலமந்தால்* இரங்கி ஒருநாள் நீஅந்தோ*
காணவாராய்! கருநாயிறுஉதிக்கும்* கருமாமாணிக்க*
நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி* முடிசேர் சென்னி அம்மானே!
'முடிசேர் சென்னி அம்மா!* நின்மொய்பூம்தாமத் தண்துழாய்க்*
கடிசேர் கண்ணிப் பெருமானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
படிசேர்மகரக் குழைகளும்* பவளவாயும் நால்தோளும்*
துடிசேர் இடையும் அமைந்தது ஓர்* தூநீர் முகில்போல் தோன்றாயே.
தூநீர் முகில்போல் தோன்றும்* நின்சுடர்கொள் வடிவும் கனிவாயும்*
தேநீர்க்கமலக் கண்களும்* வந்து என்சிந்தை நிறைந்தவா*
மாநீர்வெள்ளிமலை தன்மேல்* வண்கார் நீல முகில்போல*
தூநீர்க்கடலுள் துயில்வானே!* எந்தாய்! சொல்லமாட்டேனே.
சொல்லமாட்டேன் அடியேன்* உன்துளங்குசோதித் திருப்பாதம்*
எல்லைஇல் சீர்இள நாயிறு* இரண்டுபோல் என்உள்ளவா!*
அல்லல் என்னும் இருள்சேர்தற்கு* உபாயம் என்னே? ஆழிசூழ்*
மல்லை ஞாலம் முழுதுஉண்ட* மாநீர்க் கொண்டல் வண்ணனே!
'கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!* வினையேன் கண்ணா! கண்ணா* என்
அண்டவாணா!' என்றுஎன்னை* ஆளக் கூப்பிட்டுஅழைத்தக்கால்*
விண்தன்மேல்தான் மண்மேல்தான்* விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்*
தொண்டனேன் உன்கழல்காண* ஒருநாள்வந்து தோன்றாயே.
வந்து தோன்றாய்அன்றேல்* உன் வையம்தாய மலர்அடிக்கீழ்*
முந்தி வந்து யான்நிற்ப* முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்*
செந்தண்கமலக் கண்கைகால்* சிவந்தவாய்ஓர் கருநாயிறு*
அந்தம் இல்லாக் கதிர்பரப்பி* அலர்ந்ததுஒக்கும் அம்மானே!
ஒக்கும் அம்மான் உருவம்என்று* உள்ளம் குழைந்து நாள்நாளும்*
தொக்க மேகப் பல்குழாங்கள்* காணும்தோறும் தொலைவன்நான்*
தக்க ஐவர் தமக்காய்அன்று* ஈர்ஐம்பதின்மர் தாள்சாயப்*
புக்கநல்தேர்த் தனிப்பாகா!* வாராய் இதுவோ பொருத்தமே?
'இதுவோ பொருத்தம்? மின்ஆழிப் படையாய்!* ஏறும் இரும்சிறைப்புள்*
அதுவே கொடியா உயர்த்தானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
எதுவேயாகக் கருதுங்கொல்* இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்*
மதுவார் சோலை* உத்தர மதுரைப் பிறந்த மாயனே?
பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!* நீஇன்னே*
சிறந்தகால் தீநீர்வான்* மண்பிறவும்ஆய பெருமானே*
கறந்த பாலுள் நெய்யேபோல்* இவற்றுள்எங்கும் கண்டுகொள்*
இறந்து நின்ற பெருமாயா!* உன்னை எங்கே காண்கேனே?
'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை* யான்?' என்றுஎன்று*
அங்கே தாழ்ந்த சொற்களால்* அம்தண் குருகூர்ச் சடகோபன்*
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்* எல்லியும் காலையே. (2)
எல்லியும் காலையும்* தன்னை நினைந்துஎழ*
நல்ல அருள்கள்* நமக்கேதந்து அருள்செய்வான்*
அல்லிஅம் தண்ணம்துழாய்* முடிஅப்பன்ஊர்*
செல்வர்கள் வாழும்* திருக்கடித் தானமே (2)
திருக்கடித் தானமும்* என்னுடையச் சிந்தையும்*
ஒருக்கடுத்துஉள்ளே* உறையும்பிரான் கண்டீர்*
செருக்கடுத்துஅன்று* திகைத்த அரக்கரை*
உருக்கெடவாளி* பொழிந்த ஒருவனே.
ஒருவர் இருவர் ஓர்* மூவர்என நின்று*
உருவுகரந்து* உள்ளும்தோறும் தித்திப்பான்*
திருஅமர் மார்வன்* திருக்கடித்தானத்தை*
மருவிஉறைகின்ற* மாயப்பிரானே.
மாயப்பிரான்* எனவல்வினை மாய்ந்துஅற*
நேசத்தினால் நெஞ்சம்* நாடு குடிகொண்டான்*
தேசத்துஅமரர்* திருக்கடித்தானத்தை*
வாசப்பொழில்மன்னு* கோயில்கொண்டானே.
கோயில் கொண்டான்தன்* திருக்கடித் தானத்தை*
கோயில்கொண்டான்* அதனோடும் என்நெஞ்சகம்*;
கோயில்கொள்* தெய்வம்எல்லாம் தொழ* வைகுந்தம்
கோயில்கொண்ட* குடக்கூத்த அம்மானே.
கூத்தஅம்மான்* கொடியேன்இடர் முற்றவும்*
மாய்த்தஅம்மான்* மதுசூத அம்மான்உறை*
பூத்தபொழில்தண்* திருக்கடித் தானத்தை*
ஏத்தநில்லா* குறிக்கொள்மின் இடரே.
கொண்டமின் இடர்கெட* உள்ளத்து கோவிந்தன்*
மண்விண் முழுதும்* அளந்தஒண்தாமரை*
மண்ணவர் தாம்தொழ* வானவர் தாம்வந்து*
நண்ணு திருக்கடித்தான நகரே
தான நகர்கள்* தலைச்சிறந்து எங்கெங்கும்*
வான்இந் நிலம்கடல்* முற்றும் எம்மாயற்கே*
ஆனவிடத்தும் என் நெஞ்சும்* திருக்கடித்
தான நகரும்* தனதாயப் பதியே.
தாயப்பதிகள்* தலைச்சிறந்து எங்கெங்கும்*
மாயத்தினால் மன்னி* வீற்றிருந்தான்உறை*
தேசத்துஅமரர்* திருக்கடித்தானத்துள்*
ஆயர்க்குஅதிபதி* அற்புதன்தானே.
அற்புதன் நாராயணன்* அரி வாமனன்*
நிற்பது மேவி* இருப்பது என்நெஞ்சகம்*
நல்புகழ் வேதியர்* நான்மறை நின்றுஅதிர்*
கற்பகச் சோலைத்* திருக்கடித் தானமே. (2)
சோலைத் திருக்கடித்தானத்து* உறைதிரு
மாலை* மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*
பாலோடு அமுதுஅன்ன* ஆயிரத்து இப்பத்தும்*
மேலை வைகுந்தத்து* இருத்தும் வியந்தே. (2)
இருத்தும் வியந்து என்னைத்* தன் பொன்அடிக்கீழ் என்று*
அருத்தித்து எனைத்துஓர்* பலநாள் அழைத்தேற்கு*
பொருத்தம்உடை* வாமனன்தான் புகுந்து* என்தன்
கருத்தைஉற* வீற்றிருந்தான் கண்டுகொண்டே. (2)
இருந்தான் கண்டுகொண்டு* எனதுஏழை நெஞ்சுஆளும்*
திருந்தாத ஓர்ஐவரைத்* தேய்ந்துஅறமன்னி*
பெரும்தாள் களிற்றுக்கு* அருள்செய்த பெருமான்*
தரும்தான் அருள்தான்* இனியான் அறியேனே. (2)
அருள்தான் இனியான் அறியேன்* அவன்என்உள்*
இருள்தான்அற* வீற்றிருந்தான் இதுஅல்லால்*
பொருள் தான்எனில்* மூவுலகும் பொருளல்ல*
மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே.
மாயமயக்கு மயக்கான்* என்னை வஞ்சித்து*
ஆயன் அமரர்க்கு* அரிஏறு எனதுஅம்மான்*
தூய சுடர்ச்சோதி* தனதுஎன்னுள் வைத்தான்*
தேசம் திகழும்* தன்திருவருள் செய்தே.
திகழும்தன் திருவருள் செய்து* உலகத்தார்-
புகழும் புகழ்* தானதுகாட்டித் தந்து என்உள்-
திகழும்* மணிக்குன்றம்ஒன்றே ஒத்துநின்றான்*
புகழும் புகழ்* மற்றுஎனக்கும் ஓர்பொருளே?
பொருள்மற்றுஎனக்கும் ஓர்பொருள்தன்னில்* சீர்க்கத்
தருமேல்* பின்னையார்க்குஅவன் தன்னைக் கொடுக்கும்?*
கருமாணிக்கக் குன்றத்துத்* தாமரைபோல்*
திருமார்பு கால்கண்கை* செவ்வாய் உந்தியானே.
செவ்வாய்உந்தி* வெண்பல் சுடர்க்குழை தம்மோடு*
எவ்வாய்ச் சுடரும்* தம்மில்முன்வளாய்க் கொள்ள*
செவ்வாய் முறுவலோடு* எனதுஉள்ளத்துஇருந்த*
அவ்வாயன்றி* யான் அறியேன் மற்றுஅருளே.
அறியேன் மற்றருள்* என்னைஆளும் பிரானார்*
வெறிதே அருள்செய்வர்* செய்வார்கட்கு உகந்து*
சிறியேனுடைச்* சிந்தையுள் மூவுலகும்* தன்
நெறியா வயிற்றில்கொண்டு* நின்றொழிந்தாரே.
வயிற்றில் கொண்டு* நின்றொழிந்தாரும் எவரும்*
வயிற்றில் கொண்டு* நின்று ஒருமூவுலகும்* தம்
வயிற்றில் கொண்டு* நின்றவண்ணம் நின்றமாலை*
வயிற்றில் கொண்டு* மன்னவைத்தேன் மதியாலே.
வைத்தேன் மதியால்* எனதுஉள்ளத்துஅகத்தே*
எய்த்தே ஒழிவேன்அல்லேன்* என்றும் எப்போதும்*
மொய்த்துஏய்திரை* மோது தண்பாற் கடலுளால்*
பைத்துஏய் சுடர்ப்பாம்பணை* நம்பரனையே
சுடர்ப்பாம்பணை நம்பரனை* திருமாலை*
அடிச்சேர்வகை* வண்குருகூர்ச் சடகோபன்*
முடிப்பான் சொன்னஆயிரத்து* இப்பத்தும் சன்மம்
விடத்* தேய்ந்தற நோக்கும்* தன்கண்கள் சிவந்தே (2)
கண்கள் சிவந்து பெரியவாய்* வாயும் சிவந்து கனிந்து* உள்ளே
வெண்பல் இலகு சுடர்இலகு* விலகு மகர குண்டலத்தன்*
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்* நான்கு தோளன் குனிசார்ங்கன்*
ஒண் சங்கதை வாள்ஆழியான்* ஒருவன் அடியேன் உள்ளானே. (2)
அடியேன்உள்ளான் உடல்உள்ளான்* அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்*
படியேஇது என்றுஉரைக்கலாம் படியன்* அல்லன் பரம்பரன்*
கடிசேர் நாற்றத்துள்ஆலை* இன்பத் துன்பக் கழிநேர்மை*
ஒடியா இன்பப் பெருமையோன்* உணர்வில்உம்பர் ஒருவனே
உணர்வில்உம்பர் ஒருவனை* அவனது அருளால் உறற்பொருட்டு* என்
உணர்வின்உள்ளே இருத்தினேன்* அதுவும் அவனது இன்அருளே*
உணர்வும் உயிரும் உடம்பும்* மற்று உலப்பிலனவும் பழுதேயாம்*
உணர்வைப் பெறஊர்ந்துறஏறி* யானும் தானாய் ஒழிந்தானே.
யானும் தானாய் ஒழிந்தானை* யாதும் எவர்க்கும் முன்னோனை*
தானும் சிவனும் பிரமனும்ஆகிப்* பணைத்த தனிமுதலை*
தேனும் பாலும் கன்னலும்* அமுதும்ஆகித் தித்தித்து* என்
ஊனில் உயிரில் உணர்வினில்* நின்ற ஒன்றை உணர்ந்தேனே
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு* அதனுள் நேர்மை அதுஇதுஎன்று*
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது* உணர்ந்தும் மேலும் காண்புஅரிது*
சென்று சென்று பரம்பரமாய்* யாதும்இன்றித் தேய்ந்துஅற்று*
நன்று தீதுஎன்று அறிவரிதாய்* நன்றாய் ஞானம் கடந்ததே
நன்றாய் ஞானம் கடந்துபோய்* நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து*
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்* உலப்புஇல் அதனை உணர்ந்துஉணர்ந்து*
சென்றுஆங்கு இன்பத் துன்பங்கள்* செற்றுக் களைந்து பசைஅற்றால்*
அன்றே அப்போதேவீடு* அதுவே வீடு வீடாமே.
அதுவே வீடு வீடு பேற்று* இன்பம்தானும் அதுதேறி*
எதுவே தானும் பற்றுஇன்றி* யாதும் இலிகள்ஆகிற்கில்*
அதுவே வீடு வீடு பேற்று* இன்பம்தானும் அதுதேறாது*
'எதுவே வீடு ஏது இன்பம்?' என்று* எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே.
எய்த்தார் எய்த்தார் எய்த்தார்என்று* இல்லத்தாரும் புறத்தாரும்-
மொய்த்து* ஆங்கு அறிமுயங்க* தாம் போகும் போது* உன்மத்தர்போல்
பித்தேஏறி அநுராகம் பொழியும்போது* எம் பெம்மானோடு-
ஒத்தேசென்று* அங்குஉள்ளம்கூடக்* கூடிற்றாகில் நல்உறைப்பே.
கூடிற்றாகில் நல்உறைப்பு* கூடாமையைக் கூடினால்*
ஆடல் பறவை உயர்கொடி* எம்மாயன் ஆவதது அதுவே*
வீடைப் பண்ணி ஒருபரிசே* எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்*
ஓடித் திரியும் யோகிகளும்* உளரும்இல்லை அல்லரே.
உளரும்இல்லை அல்லராய்* உளராய்இல்லை ஆகியே*
உளர்எம்ஒருவர் அவர்வந்து* என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*
வளரும் பிறையும் தேய்பிறையும்போல* அசைவும் ஆக்கமும்*
வளரும் சுடரும் இருளும்போல்* தெருளும் மருளும் மாய்த்தோமே.
தெருளும் மருளும் மாய்த்து* தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்*
அருளிஇருத்தும் அம்மானாம்* அயனாம் சிவனாம்* திருமாலால்
அருளப்பட்ட சடகோபன்* ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்*
அருளி அடிக்கீழ் இருத்தும்* நம்அண்ணல் கருமாணிக்கமே (2)
கருமாணிக்க மலைமேல்* மணித்தடம் தாமரைக் காடுகள்போல்*
திருமார்வு வாய்கண்கை* உந்திகால்உடை ஆடைகள் செய்யபிரான்*
திருமால் எம்மான் செழுநீர்வயல்* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்* அன்னைமீர்! இதற்கு என்செய்கேனோ. (2)
அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?* அணிமேருவின் மீதுஉலவும்*
துன்னுசூழ் சுடர் ஞாயிறும்* அன்றியும் பல்சுடர்களும்போல்*
மின்னு நீள்முடிஆரம் பல்கலன்* தான்உடை எம்பெருமான்*
புன்னைஅம் பொழில்சூழ்* திருப்புலியூர் புகழும்இவளே.
புகழும் இவள்நின்று இராப்பகல்* பொருநீர்க்கடல் தீப்பட்டு* எங்கும்
திகழும்எரியொடு செல்வதுஒப்ப* செழும்கதிர்ஆழிமுதல்*
புகழும் பொருபடை ஏந்தி* போர்புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்*
திகழும் மணிநெடு மாடம்நீடு* திருப்புலியூர் வளமே.
ஊர்வளம்கிளர் சோலையும்* கரும்பும் பெரும்செந்நெலும் சூழ்ந்து*
ஏர்வளம்கிளர் தண்பணைக்* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
சீர்வளம்கிளர் மூவுலகுஉண்டுஉமிழ்* தேவபிரான்*
பேர்வளம்கிளர்ந்தன்றிப் பேச்சுஇலள்* இன்று இப்புனைஇழையே.
புனைஇழைகள் அணிவும் ஆடைஉடையும்* புதுக்கணிப்பும்*
நினையும் நீர்மையதுஅன்று இவட்குஇது* நின்று நினைக்கப்புக்கால்*
சுனையினுள் தடம்தாமரை மலரும்* தண் திருப்புலியூர்*
முனைவன் மூவுலகுஆளி* அப்பன் திருஅருள் மூழ்கினளே.
திருஅருள் மூழ்கி வைகலும்* செழுநீர்நிறக் கண்ணபிரான்*
திருஅருள்களும் சேர்ந்தமைக்கு* அடையாளம் திருந்தஉள*
திருஅருள் அருளால் அவன்* சென்று சேர்தண் திருப்புலியூர்*
திருஅருள் கமுகுஒண் பழத்தது* மெல்லியல் செவ்விதழே
மெல்இலைச் செல்வவண் கொடிப்புல்க* வீங்குஇளம்தாள்கமுகின்*
மல்இலை மடல்வாழை* ஈன்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து*
புல்இலைத் தெங்கினூடு* கால் உலவும்தண் திருப்புலியூர்*
மல்லல்அம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்* இம் மடவரலே
மடவரல் அன்னைமீர்கட்கு* என்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ*
வடமொழி மறைவாணர்* வேள்வியுள் நெய்அழல்வான் புகைபோய்த்*
திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்* தண் திருப்புலியூர்*
படஅரவுஅணையான் தன்நாமம் அல்லால்* பரவாள் இவளே.
பரவாள் இவள் நின்று இராப்பகல்* பனிநீர்நிறக் கண்ணபிரான்*
விரவார்இசை மறை வேதியர்ஒலி* வேலையின் நின்றுஒலிப்ப*
கரவார் தடம்தொறும் தாமரைக்கயம்* தீவிகை நின்றுஅலரும்*
புரவார் கழனிகள் சூழ்* திருப்புலியூர்ப் புகழ்அன்றிமற்றே
அன்றி மற்றோர் உபாயம்என்* இவள்அம்தண் துழாய்கமழ்தல்*
குன்றமாமணி மாடமாளிகைக்* கோலக் குழாங்கள் மல்கி*
தென்திசைத் திலதம்புரை* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
நின்ற மாயப்பிரான் திருவருளாம்* இவள் நேர்பட்டதே.
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்* நாயகன் தன்அடிமை*
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன் சொல்*
நேர்பட்ட தமிழ்மாலை* ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார்* அவர் நேர்பட்டார்* நெடுமாற்கு அடிமை செய்யவே. (2)
நெடுமாற்குஅடிமை செய்வேன்போல்* அவனைக் கருத வஞ்சித்து*
தடுமாற்றுஅற்ற தீக்கதிகள்* முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்*
கொடுமாவினையேன் அவன்அடியார் அடியே* கூடும் இதுஅல்லால்*
விடுமாறுஎன்பதுஎன்? அந்தோ!* வியன் மூவுலகு பெறினுமே?. (2)
வியன் மூவுலகு பெறினும்போய்* தானே தானே ஆனாலும்*
புயல் மேகம்போல் திருமேனிஅம்மான்* புனைபூம் கழல்அடிக்கீழ்ச்*
சயமே அடிமை தலைநின்றார்* திருத்தாள் வணங்கி* இம்மையே
பயனே இன்பம் யான்பெற்றது* உறுமோ பாவியேனுக்கே?
உறுமோ பாவியேனுக்கு* இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய*
சிறுமாமேனி நிமிர்த்த* என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*
நறுமாவிரைநாள் மலர்அடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவன்அடியார்*
சிறுமா மனிசராய் என்னைஆண்டார்* இங்கே திரியவே.
இங்கே திரிந்தேற்கு இழுக்குஉற்றுஎன்!* இருமாநிலம் முன்உண்டுஉமிழ்ந்த*
செங்கோலத்த பவளவாய்ச்* செந்தாமரைக்கண் என்அம்மான்*
பொங்குஏழ் புகழ்கள் வாயவாய்* புலன்கொள் வடிவு என்மனத்ததாய்*
அங்குஏய் மலர்கள் கையவாய்* வழிபட்டுஓட அருளிலே?
வழிபட்டுஓட அருள்பெற்று* மாயன் கோல மலர்அடிக்கீழ்ச்*
சுழிபட்டுஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து* இன்புற்றுஇருந்தாலும்*
இழிபட்டுஓடும் உடலினில்பிறந்து* தன்சீர் யான்கற்று*
மொழிபட்டுஓடும் கவிஅமுதம்* நுகர்ச்சி உறுமோ முழுதுமே?
நுகர்ச்சி உறுமோ மூவுலகின்* வீடு பேறு தன்கேழ்இல்*
புகர்ச்செம்முகத்த களிறுஅட்ட* பொன்ஆழிக்கை என்அம்மான்*
நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்* நீண்ட அசுரர் உயிர்எல்லாம்*
தகர்த்துஉண்டுஉழலும் புள்பாகன்* பெரிய தனிமாப் புகழே?
தனிமாப் புகழே எஞ்ஞான்றும்* நிற்கும் படியாத் தான்தோன்றி*
முனிமாப் பிரம முதல்வித்தாய்* உலகம் மூன்றும் முளைப்பித்த*
தனிமாத் தெய்வத் தளிர்அடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவன்அடியார்*
நனிமாக் கலவி இன்பமே* நாளும் வாய்க்க நங்கட்கே
நாளும் வாய்க்க நங்கட்கு* நளிர்நீர்க் கடலைப் படைத்து* தன்
தாளும் தோளும் முடிகளும்* சமன் இலாத பலபரப்பி*
நீளும் படர்பூங் கற்பகக்காவும்* நிறைபல்நாயிற்றின்*
கோளும்உடைய மணிமலைபோல்* கிடந்தான் தமர்கள் கூட்டமே.
தமர்கள் கூட்ட வல்வினையை* நாசம் செய்யும் சதுமூர்த்தி*
அமர்கொள் ஆழி சங்குவாள்* வில்தண்டுஆதி பல்படையன்*
குமரன் கோல ஐங்கணைவேள்தாதை* கோதுஇல் அடியார்தம்*
தமர்கள் தமர்கள் தமர்களாம்* சதிரே வாய்க்க தமியேற்கே
வாய்க்க தமியேற்கு* ஊழிதோறுஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்குதோள்* பொன்ஆழிக்கை என்அம்மான்*
நீக்கம்இல்லா அடியார்தம்* அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள்* அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்* நல்ல கோட்பாடே
நல்ல கோட்பாட்டு உலகங்கள்* மூன்றினுள்ளும் தான்நிறைந்த*
அல்லிக் கமலக் கண்ணனை* அம்தண் குருகூர்ச் சடகோபன்*
சொல்லப் பட்ட ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
நல்ல பதத்தால் மனைவாழ்வர்* கொண்ட பெண்டீர் மக்களே. (2)