பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    தேவிமார் ஆவார் திருமகள்பூமி*   ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்* 
    மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி*  வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*

    பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்*  பவளவாய் மணியே* 
    ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த  அப்பனே!*  காணுமாறு அருளாய்   (2)


    காணுமாறுஅருளாய் என்றுஎன்றே கலங்கி*   கண்ணநீர் அலமர*  வினையேன் 
    பேணுமாறுஎல்லாம் பேணி*  நின்பெயரே  பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ*

    காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!*  தொண்டனேன் கற்பகக்கனியே* 
    பேணுவார் அமுதே! பெரிய தண்புனல்சூழ்*   பெருநிலம் எடுத்த பேராளா!         


    எடுத்தபேராளன் நந்தகோபன்தன்*   இன்உயிர்ச் சிறுவனே*  அசோதைக்கு 
    அடுத்தபேரின்பக் குலஇளம்களிறே*   அடியனேன் பெரிய அம்மானே*

    கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்*   கைஉகிர் ஆண்ட எம்கடலே,* 
    அடுத்ததுஓர் உருவாய் இன்று நீ வாராய்*  எங்ஙனம் தேறுவர் உமரே?


    உமர்உகந்துஉகந்த உருவம்நின்உருவம்ஆகி*  உன்தனக்கு அன்பர் ஆனார்* 
    அவர் உகந்துஅமர்ந்த செய்கை உன்மாயை*   அறிவுஒன்றும் சங்கிப்பன் வினையேன்*

    அமர்அதுபண்ணி அகல்இடம்புடைசூழ்*   அடுபடை அவித்த அம்மானே* 
    அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே*   என்னுடை ஆர்உயிரேயோ!    


    ஆர்உயிரேயோ அகல்இடம்முழுதும்*  படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்துஅளந்த* 
    பேர்உயிரேயோ பெரியநீர் படைத்து*  அங்கு உறைந்து அது கடைந்துஅடைத்து உடைத்த*

    சீர்உயிரேயோ மனிசர்க்குத்தேவர் போலத்*  தேவர்க்கும்தேவாவோ* 
    ஓர்உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்*   உன்னை நான் எங்கு வந்து உறுகோ?       


    எங்குவந்துஉறுகோ என்னைஆள்வானே*   ஏழ்உலகங்களும் நீயே* 
    அங்கு அவர்க்குஅமைத்த தெய்வமும்நீயே*  அவற்றுஅவை கருமமும் நீயே*

    பொங்கியபுறம்பால் பொருள்உளவேலும்*   அவையுமோ நீ இன்னேஆனால்* 
    மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே*   வான்புலன் இறந்ததும் நீயே.  


    இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே*   நிகழ்வதோ நீ இன்னேஆனால்* 
    சிறந்தநின் தன்மை அதுஇதுஉதுஎன்று*  அறிவுஒன்றும் சங்கிப்பன்வினையேன்*

    கறந்தபால் நெய்யே நெய்யின்  சுவையே!*  கடலினுள் அமுதமே அமுதில்* 
    பிறந்த இன்சுவையே சுவையதுபயனே!*   பின்னைதோள் மணந்தபேர்ஆயா!


    மணந்தபேர்ஆயா! மாயத்தால்முழுதும்*   வல்வினையேனை ஈர்கின்ற* 
    குணங்களை உடையாய் அசுரர் வன்கையர்கூற்றமே!*  கொடிய புள்உயர்த்தாய்*

    பணங்கள்ஆயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!*  பாற்கடல் சேர்ப்பா* 
    வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்*   செய்கையும் யானும் நீதானே.   


    யானும் நீதானே ஆவதோமெய்யே*   அருநரகுஅவையும் நீ ஆனால்* 
    வான்உயர் இன்பம் எய்தில்என்*  மற்றை   நரகமே எய்தில்என்? எனினும்,*

    யானும் நீதானாய்த் தெளிதொறும், நன்றும் அஞ்சுவன்*  நரகம் நான்அடைதல்* 
    வான்உயர்இன்பம் மன்னிவீற்றிருந்தாய்*  அருளுநின் தாள்களைஎனக்கே.


    தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்* த பேர்உதவிக்கைம்மாறாத்* 
    தோள்களை ஆரத்தழுவி என்உயிரை*  அறவிலை செய்தனன் சோதீ,

    தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்*   துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்* 
    தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்*   தமியனேன் பெரிய அப்பனே!


    பெரிய அப்பனை பிரமன் அப்பனை*   உருத்திரன் அப்பனை*  முனிவர்க்கு 
    உரிய அப்பனை அமரர் அப்பனை*   உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*

    பெரியவண்குருகூர் வண்சடகோபன்*   பேணின ஆயிரத்துள்ளும்* 
    உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்*   உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே  (2)


    நங்கள் வரிவளையாய் அங்காளோ*   நம்முடை ஏதலர் முன்பு நாணி* 
    நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்*   நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*

    சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்*   தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்* 
    வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்*  வேங்கடவாணனை வேண்டிச்சென்றே.   (2)


    வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்*   என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்* 
    ஈண்டுஇதுஉரைக்கும்படியை அந்தோ*  காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*

    காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்*  விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்* 
    ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்*  எத்தனைகாலம் இளைக்கின்றேனே!


    காலம் இளைக்கில் அல்லால் வினையேன்  நான் இளைக்கின்றிலன்*  கண்டு கொள்மின்* 
    ஞாலம் அறியப் பழிசுமந்தேன்*  நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*

    நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த*   நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட* 
    கோலவளையொடும் மாமைகொள்வான்*  எத்தனைகாலமும் கூடச்சென்றே? 


    கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?*  கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்* 
    பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்*   பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*

    மாடக்கொடிமதிள் தென்குளந்தை*   வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்* 
    ஆடல்பறவை உயர்த்தவெல்போர்*  ஆழிவலவனை ஆதரித்தே.


    ஆழிவலவனை ஆதரிப்பும்*  ஆங்குஅவன் நம்மில் வரவும் எல்லாம்* 
    தோழியர்காள்! நம்உடையமேதான்?*  சொல்லுவதோ இங்கு அரியதுதான்*

    ஊழிதோறுஊழி ஒருவனாக*   நன்குஉணர்வார்க்கும் உணரலாகாச்* 
    சூழல்உடைய சுடர்கொள்ஆதித்*  தொல்லைஅம்சோதி நினைக்குங்காலே.  


    தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்*  என்  சொல்அளவன்று இமையோர் தமக்கும்* 
    எல்லைஇலாதன கூழ்ப்புச்செய்யும்*  அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*

    அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்*  ஆர்க்கு இடுகோ இனிப்பூசல்? சொல்லீர்* 
    வல்லிவளவயல்சூழ் குடந்தை*  மாமலர்க்கண் வளர்கின்றமாலே.


    மாலரிகேசவன் நாரணன்*  சீமாதவன்  கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று* 
    ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு*   ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*

    ஏலமலர்  குழல் அன்னைமீர்காள்!*  என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?* 
    காலம்பலசென்றும் காண்பதுஆணை*  உங்களோடு எங்கள் இடைஇல்லையே.


    இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்*  பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
    உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்*  ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*

    அடையும் வைகுந்தமும் பாற்கடலும்*   அஞ்சனவெற்பும் அவைநணிய* 
    கடையறப்பாசங்கள் விட்டபின்னை*  அன்றி அவன்அவை காண்கொடானே.  


    காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை*  கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்* 
    மாண்குறள் கோலவடிவுகாட்டி*  மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*

    சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த*  தேவபிராற்கு என் நிறைவினோடு* 
    நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்*  என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்


    என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!*   யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை* 
    நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி*  நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*

    பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு*   பால்மதி ஏந்தி ஓர்கோலநீல* 
    நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்*   நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே


    பாதம் அடைவதன் பாசத்தாலே*   மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு* 
    கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்*   வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*

    தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்*  இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்* 
    ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி*  இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே.      (2)


    அங்கும் இங்கும்*  வானவர் தானவர் யாவரும்* 
    எங்கும் இனையைஎன்று*  உன்னைஅறியகிலாதுஅலற்றி*

    அங்கம்சேரும்*  பூமகள் மண்மகள் ஆய்மகள்* 
    சங்குசக்கரக் கையவன் என்பர்*  சரணமே.  (2)


    சரணமாகிய*  நான்மறை நூல்களும் சாராதே* 
    மரணம் தோற்றம்*  வான்பிணி மூப்புஎன்றுஇவை மாய்த்தோம்*

    கரணப்பல்படை*  பற்றறஓடும் கனல்ஆழி* 
    அரணத்திண் படைஏந்திய*  ஈசற்கு ஆளாயே.


    ஆளும் ஆளார் ஆழியும்*  சங்கும் சுமப்பார்தாம்* 
    வாளும் வில்லும் கொண்டு*  பின் செல்வார் மற்றுஇல்லை*

    தாளும் தோளும்*  கைகளைஆரத் தொழக்காணேன்* 
    நாளும் நாளும் நாடுவன்*  அடியேன் ஞாலத்தே


    ஞாலம் போனகம்பற்றி*  ஓர்முற்றா உருஆகி* 
    ஆலம்பேர்இலை*  அன்னவசம்செய்யும் அம்மானே*

    காலம்பேர்வதுஓர்*  கார்இருள் ஊழி ஒத்துஉளதால்*  உன் 
    கோலம்கார்எழில்*  காணலுற்று ஆழும் கொடியேற்கே


    கொடியார்மாடக்*  கோளூர்அகத்தும் புளியங்குடியும்* 
    மடியாதுஇன்னே*  நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*

    அடியார் அல்லல்தவிர்த்த*  அசைவோ? அன்றேல்*  இப் 
    படிதான் நீண்டுதாவிய*  அசைவோ? பணியாயே.


    பணியாஅமரர்*  பணிவும் பண்பும் தாமேஆம்* 
    அணியார் ஆழியும்*  சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்*

    தணியா வெம்நோய்*  உலகில் தவிர்ப்பான்*  திருநீல 
    மணியார்மேனியோடு*  என்மனம் சூழவருவாரே. 


    வருவார் செல்வார்*  வண்பரிசாரத்து இருந்த*  என் 
    திருவாழ்மார்வற்கு*  என்திறம் சொல்லார் செய்வதுஎன்*

    உருவார் சக்கரம்*  சங்குசுமந்து இங்குஉம்மோடு* 
    ஒருபாடுஉழல்வான்*  ஓர்அடியானும் உளன்என்றே.  


    என்றே என்னை*  உன்ஏர்ஆர்கோலத்திருந்து அடிக்கீழ்* 
    நின்றே ஆட்செய்ய*  நீகொண்டருள நினைப்பதுதான்*

    குன்றுஏழ் பார்ஏழ்*  சூழ்கடல்ஞாலம் முழுஏழும்* 
    நின்றே தாவிய*  நீள்கழல் ஆழித் திருமாலே!


    திருமால் நான்முகன்*  செஞ்சடையான் என்றுஇவர்கள்*  எம் 
    பெருமான் தன்மையை*  யார் அறிகிற்பார்? பேசிஎன்*

    ஒருமாமுதல்வா!*  ஊழிப்பிரான் என்னை ஆளுடைக்* 
    கருமாமேனியன்! என்பன்*  என்காதல் கலக்கவே. 


    கலக்கம் இல்லா*  நல்தவமுனிவர் கரைகண்டோர்* 
    துளக்கம் இல்லா*  வானவர் எல்லாம் தொழுவார்கள்*

    மலக்கம் எய்த*  மாகடல்தன்னைக் கடைந்தானை* 
    உலக்க நாம் புகழ்கிற்பது*  என்செய்வது உரையீரே.   


    உரையா வெம்நோய்தவிர*  அருள் நீள்முடியானை* 
    வரையார்மாடம்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*

    உரையேய் சொல்தொடை*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    நிரையே வல்லார்*  நீடு உலகத்துப் பிறவாரே.   (2)


    வார்கடா அருவி யானை மாமலையின்*   மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி* 
    ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து*  அரங்கின்  மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*

    போர்கடா அரசர் புறக்கிட*  மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த* 
    சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே  (2)  


    எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்*   இமையவர் அப்பன் என்அப்பன்* 
    பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்*   பொருந்துமூவுருவன் எம்அருவன்*

    செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்*   திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு- 
    அங்கு அமர்கின்ற*  ஆதியான் அல்லால்*   யாவர்மற்றுஎன்அமர் துணையே?  


    என்அமர்பெருமான் இமையவர்பெருமான்*   இருநிலம் இடந்த எம்பெருமான்* 
    முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள*   என்னைஆள்கின்ற எம்பெருமான்*

    தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாற்றங்கரைமீபால்- 
    நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண்   நினைப்பிலும்*  பிறிதுஇல்லை எனக்கே.


    பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்*   நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த* 
    குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த*   கோலமாணிக்கம் என்அம்மான்*

    செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்*  திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு 
    அறிய*  மெய்ம்மையே நின்ற எம்பெருமான்*   அடிஇணை அல்லதுஓர் அரணே.  


    அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை*   அது பொருள்ஆகிலும்*  அவனை 
    அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது*   ஆதலால் அவன் உறைகின்ற*

    நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த*   நறும்புகை விசும்புஒளி மறைக்கும்* 
    நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.


    எனக்கு நல்அரணை எனதுஆருயிரை*   இமையவர் தந்தைதாய் தன்னை* 
    தனக்கும் தன் தன்மை அறிவரியானை*   தடம்கடல்பள்ளி அம்மானை*

    மனக்கொள்சீர் மூவாயிரவர்*  வண்சிவனும்  அயனும்தானும் ஒப்பார்வாழ்* 
    கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே. 


    திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட*  அத்திருவடி என்றும்* 
    திருச்செய்ய கமலக்கண்ணும்*  செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*

    திருச்செய்யகமல உந்தியும்*  செய்யகமலை மார்பும் செய்யஉடையும்* 
    திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்*   திகழ என் சிந்தையுளானே.  


    திகழ என்சிந்தையுள் இருந்தானை*  செழுநிலத்தேவர் நான்மறையோர்* 
    திசை கைகூப்பி ஏத்தும்*  திருச்செங்குன்றூரில்  திருச்சிற்றாற்றங்கரையானை*

    புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை*   அசுரர்வன்கையர் வெம்கூற்றை* 
    புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்*   படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!


    படைப்பொடு கெடுப்புக் காப்பவன்*  பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே* 
    இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே*  புகழ்வுஇல்லையாவையும் தானே*

    கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்*  கூரியவிச்சையோடு ஒழுக்கம்* 
    நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.


    அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி*  அவர்க்குஅருள் அருளும் அம்மானை* 
    அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாற்றங்கரையானை*

    அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்*   தம்பதி அவனிதேவர் வாழ்வு* 
    அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை*   நான்முகனை அமர்ந்தேனே. 


    தேனைநன்பாலை கன்னலைஅமுதை*  திருந்துஉலகுஉண்ட அம்மானை* 
    வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்*  மலர்மிசைப் படைத்தமாயோனை*

    கோனை வண்குருகூர் வண்சடகோபன்*  சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்* 
    வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்*  பிறவிமாமாயக் கூத்தினையே.   (2)


    மாயக்கூத்தா!வாமனா!*  வினையேன்கண்ணா! கண்கைகால்* 
    தூயசெய்ய மலர்களா*  சோதிச்செவ்வாய் முகிழதா*

    சாயல்சாமத் திருமேனி*  தண்பாசடையா*  தாமரைநீள் 
    வாசத்தடம்போல் வருவானே!*  ஒருநாள் காண வாராயே.    


    'காணவாராய்' என்றுஎன்று*   கண்ணும்வாயும் துவர்ந்து*  அடியேன் 
    நாணி நல்நாட்டு அலமந்தால்*  இரங்கி ஒருநாள் நீஅந்தோ*

    காணவாராய்! கருநாயிறுஉதிக்கும்*  கருமாமாணிக்க* 
    நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி*  முடிசேர் சென்னி அம்மானே!  


    'முடிசேர் சென்னி அம்மா!* நின்மொய்பூம்தாமத் தண்துழாய்க்* 
    கடிசேர் கண்ணிப் பெருமானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*

    படிசேர்மகரக் குழைகளும்*  பவளவாயும் நால்தோளும்* 
    துடிசேர் இடையும் அமைந்தது ஓர்*  தூநீர் முகில்போல் தோன்றாயே. 


    தூநீர் முகில்போல் தோன்றும்*  நின்சுடர்கொள் வடிவும் கனிவாயும்* 
    தேநீர்க்கமலக் கண்களும்*  வந்து என்சிந்தை நிறைந்தவா*

    மாநீர்வெள்ளிமலை தன்மேல்*  வண்கார் நீல முகில்போல* 
    தூநீர்க்கடலுள் துயில்வானே!*  எந்தாய்! சொல்லமாட்டேனே.    


    சொல்லமாட்டேன் அடியேன்*  உன்துளங்குசோதித் திருப்பாதம்* 
    எல்லைஇல் சீர்இள நாயிறு*  இரண்டுபோல் என்உள்ளவா!*

    அல்லல் என்னும் இருள்சேர்தற்கு*  உபாயம் என்னே? ஆழிசூழ்* 
    மல்லை ஞாலம் முழுதுஉண்ட*  மாநீர்க் கொண்டல் வண்ணனே! 


    'கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!*  வினையேன் கண்ணா! கண்ணா* என் 
    அண்டவாணா!' என்றுஎன்னை*   ஆளக் கூப்பிட்டுஅழைத்தக்கால்*

    விண்தன்மேல்தான் மண்மேல்தான்*  விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்* 
    தொண்டனேன் உன்கழல்காண*  ஒருநாள்வந்து தோன்றாயே.


    வந்து தோன்றாய்அன்றேல்*  உன் வையம்தாய மலர்அடிக்கீழ்* 
    முந்தி வந்து யான்நிற்ப*   முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்*

    செந்தண்கமலக் கண்கைகால்*  சிவந்தவாய்ஓர் கருநாயிறு* 
    அந்தம் இல்லாக் கதிர்பரப்பி*  அலர்ந்ததுஒக்கும் அம்மானே!   


    ஒக்கும் அம்மான் உருவம்என்று*  உள்ளம் குழைந்து நாள்நாளும்* 
    தொக்க மேகப் பல்குழாங்கள்*  காணும்தோறும் தொலைவன்நான்*

    தக்க ஐவர் தமக்காய்அன்று*  ஈர்ஐம்பதின்மர் தாள்சாயப்* 
    புக்கநல்தேர்த் தனிப்பாகா!*  வாராய் இதுவோ பொருத்தமே?


    'இதுவோ பொருத்தம்? மின்ஆழிப்  படையாய்!* ஏறும் இரும்சிறைப்புள்* 
    அதுவே கொடியா உயர்த்தானே!'*  என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*

    எதுவேயாகக் கருதுங்கொல்*  இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்* 
    மதுவார் சோலை*  உத்தர  மதுரைப் பிறந்த மாயனே?  


    பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!*  நீஇன்னே* 
    சிறந்தகால் தீநீர்வான்*  மண்பிறவும்ஆய பெருமானே*

    கறந்த பாலுள் நெய்யேபோல்*  இவற்றுள்எங்கும் கண்டுகொள்* 
    இறந்து நின்ற பெருமாயா!*  உன்னை எங்கே காண்கேனே?  


    'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை*  யான்?' என்றுஎன்று* 
    அங்கே தாழ்ந்த சொற்களால்*  அம்தண் குருகூர்ச் சடகோபன்*

    செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்* 
    இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்*  எல்லியும் காலையே.  (2)


    எல்லியும் காலையும்*  தன்னை நினைந்துஎழ* 
    நல்ல அருள்கள்*  நமக்கேதந்து அருள்செய்வான்*

    அல்லிஅம் தண்ணம்துழாய்*  முடிஅப்பன்ஊர்* 
    செல்வர்கள் வாழும்*  திருக்கடித் தானமே   (2)


    திருக்கடித் தானமும்*  என்னுடையச் சிந்தையும்* 
    ஒருக்கடுத்துஉள்ளே*  உறையும்பிரான் கண்டீர்*

    செருக்கடுத்துஅன்று*  திகைத்த அரக்கரை* 
    உருக்கெடவாளி*  பொழிந்த ஒருவனே. 


    ஒருவர் இருவர் ஓர்*  மூவர்என நின்று* 
    உருவுகரந்து*  உள்ளும்தோறும் தித்திப்பான்*

    திருஅமர் மார்வன்*  திருக்கடித்தானத்தை* 
    மருவிஉறைகின்ற*  மாயப்பிரானே.    


    மாயப்பிரான்*  எனவல்வினை மாய்ந்துஅற* 
    நேசத்தினால் நெஞ்சம்*  நாடு குடிகொண்டான்*

    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்தை* 
    வாசப்பொழில்மன்னு*  கோயில்கொண்டானே.       


    கோயில் கொண்டான்தன்*  திருக்கடித் தானத்தை* 
    கோயில்கொண்டான்*  அதனோடும் என்நெஞ்சகம்*;

    கோயில்கொள்*  தெய்வம்எல்லாம் தொழ*  வைகுந்தம் 
    கோயில்கொண்ட*  குடக்கூத்த அம்மானே. 


    கூத்தஅம்மான்*  கொடியேன்இடர் முற்றவும்* 
    மாய்த்தஅம்மான்*  மதுசூத அம்மான்உறை*

    பூத்தபொழில்தண்*  திருக்கடித் தானத்தை* 
    ஏத்தநில்லா*  குறிக்கொள்மின் இடரே.   


    கொண்டமின் இடர்கெட*  உள்ளத்து கோவிந்தன்* 
    மண்விண் முழுதும்*  அளந்தஒண்தாமரை*

    மண்ணவர் தாம்தொழ*  வானவர் தாம்வந்து* 
    நண்ணு திருக்கடித்தான நகரே


    தான நகர்கள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    வான்இந் நிலம்கடல்*  முற்றும் எம்மாயற்கே*

    ஆனவிடத்தும் என் நெஞ்சும்*  திருக்கடித் 
    தான நகரும்*  தனதாயப் பதியே.


    தாயப்பதிகள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    மாயத்தினால் மன்னி*  வீற்றிருந்தான்உறை*

    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்துள்* 
    ஆயர்க்குஅதிபதி*  அற்புதன்தானே. 


    அற்புதன் நாராயணன்*  அரி வாமனன்* 
    நிற்பது மேவி*  இருப்பது என்நெஞ்சகம்*

    நல்புகழ் வேதியர்*  நான்மறை நின்றுஅதிர்* 
    கற்பகச் சோலைத்*  திருக்கடித் தானமே.  (2)


    சோலைத் திருக்கடித்தானத்து*  உறைதிரு 
    மாலை*  மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*

    பாலோடு அமுதுஅன்ன*  ஆயிரத்து இப்பத்தும்* 
    மேலை வைகுந்தத்து*  இருத்தும் வியந்தே.  (2)


    இருத்தும் வியந்து என்னைத்*  தன் பொன்அடிக்கீழ் என்று* 
    அருத்தித்து எனைத்துஓர்*  பலநாள் அழைத்தேற்கு*

    பொருத்தம்உடை*  வாமனன்தான் புகுந்து*  என்தன் 
    கருத்தைஉற*  வீற்றிருந்தான் கண்டுகொண்டே.       (2)


    இருந்தான் கண்டுகொண்டு*  எனதுஏழை நெஞ்சுஆளும்* 
    திருந்தாத ஓர்ஐவரைத்*  தேய்ந்துஅறமன்னி*

    பெரும்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த பெருமான்* 
    தரும்தான் அருள்தான்*  இனியான் அறியேனே.   (2)


    அருள்தான் இனியான் அறியேன்*  அவன்என்உள்* 
    இருள்தான்அற*  வீற்றிருந்தான் இதுஅல்லால்*

    பொருள் தான்எனில்*  மூவுலகும் பொருளல்ல* 
    மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே.


    மாயமயக்கு மயக்கான்*  என்னை வஞ்சித்து* 
    ஆயன் அமரர்க்கு*  அரிஏறு எனதுஅம்மான்*     

    தூய சுடர்ச்சோதி*  தனதுஎன்னுள் வைத்தான்* 
    தேசம் திகழும்*  தன்திருவருள் செய்தே.      


    திகழும்தன் திருவருள் செய்து*  உலகத்தார்- 
    புகழும் புகழ்*  தானதுகாட்டித் தந்து என்உள்-

    திகழும்*  மணிக்குன்றம்ஒன்றே ஒத்துநின்றான்* 
    புகழும் புகழ்*  மற்றுஎனக்கும் ஓர்பொருளே? 


    பொருள்மற்றுஎனக்கும் ஓர்பொருள்தன்னில்*  சீர்க்கத் 
    தருமேல்*  பின்னையார்க்குஅவன் தன்னைக் கொடுக்கும்?*

    கருமாணிக்கக் குன்றத்துத்*  தாமரைபோல்* 
    திருமார்பு கால்கண்கை*  செவ்வாய் உந்தியானே.   


    செவ்வாய்உந்தி*  வெண்பல் சுடர்க்குழை தம்மோடு* 
    எவ்வாய்ச் சுடரும்*  தம்மில்முன்வளாய்க் கொள்ள*

    செவ்வாய் முறுவலோடு*  எனதுஉள்ளத்துஇருந்த* 
    அவ்வாயன்றி*  யான் அறியேன் மற்றுஅருளே.


    அறியேன் மற்றருள்*  என்னைஆளும் பிரானார்* 
    வெறிதே அருள்செய்வர்*  செய்வார்கட்கு உகந்து*

    சிறியேனுடைச்*  சிந்தையுள் மூவுலகும்*  தன் 
    நெறியா வயிற்றில்கொண்டு*  நின்றொழிந்தாரே. 


    வயிற்றில் கொண்டு*  நின்றொழிந்தாரும் எவரும்* 
    வயிற்றில் கொண்டு*  நின்று ஒருமூவுலகும்* தம்

    வயிற்றில் கொண்டு*  நின்றவண்ணம் நின்றமாலை* 
    வயிற்றில் கொண்டு*  மன்னவைத்தேன் மதியாலே.  


    வைத்தேன் மதியால்*  எனதுஉள்ளத்துஅகத்தே* 
    எய்த்தே ஒழிவேன்அல்லேன்*  என்றும் எப்போதும்*

    மொய்த்துஏய்திரை*  மோது தண்பாற் கடலுளால்* 
    பைத்துஏய் சுடர்ப்பாம்பணை*  நம்பரனையே  


    சுடர்ப்பாம்பணை நம்பரனை*  திருமாலை* 
    அடிச்சேர்வகை*  வண்குருகூர்ச் சடகோபன்*

    முடிப்பான் சொன்னஆயிரத்து*  இப்பத்தும் சன்மம் 
    விடத்*  தேய்ந்தற நோக்கும்*  தன்கண்கள் சிவந்தே  (2)


    கண்கள் சிவந்து பெரியவாய்*  வாயும் சிவந்து கனிந்து*  உள்ளே 
    வெண்பல் இலகு சுடர்இலகு*  விலகு மகர குண்டலத்தன்*

    கொண்டல் வண்ணன் சுடர்முடியன்*  நான்கு தோளன் குனிசார்ங்கன்* 
    ஒண் சங்கதை வாள்ஆழியான்*  ஒருவன் அடியேன் உள்ளானே.  (2)


    அடியேன்உள்ளான் உடல்உள்ளான்*  அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்* 
    படியேஇது என்றுஉரைக்கலாம்  படியன்*  அல்லன் பரம்பரன்*

    கடிசேர் நாற்றத்துள்ஆலை*   இன்பத் துன்பக் கழிநேர்மை* 
    ஒடியா இன்பப் பெருமையோன்*  உணர்வில்உம்பர் ஒருவனே    


    உணர்வில்உம்பர் ஒருவனை*  அவனது அருளால் உறற்பொருட்டு*  என் 
    உணர்வின்உள்ளே இருத்தினேன்*  அதுவும் அவனது இன்அருளே*

    உணர்வும் உயிரும் உடம்பும்*  மற்று உலப்பிலனவும் பழுதேயாம்* 
    உணர்வைப் பெறஊர்ந்துறஏறி*  யானும் தானாய் ஒழிந்தானே.


    யானும் தானாய் ஒழிந்தானை*  யாதும் எவர்க்கும் முன்னோனை* 
    தானும் சிவனும் பிரமனும்ஆகிப்*  பணைத்த தனிமுதலை*

    தேனும் பாலும் கன்னலும்*  அமுதும்ஆகித் தித்தித்து*  என் 
    ஊனில் உயிரில் உணர்வினில்*  நின்ற ஒன்றை உணர்ந்தேனே 


    நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு*  அதனுள் நேர்மை அதுஇதுஎன்று* 
    ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது*   உணர்ந்தும் மேலும் காண்புஅரிது*

    சென்று சென்று பரம்பரமாய்*  யாதும்இன்றித் தேய்ந்துஅற்று* 
    நன்று தீதுஎன்று அறிவரிதாய்*  நன்றாய் ஞானம் கடந்ததே


    நன்றாய் ஞானம் கடந்துபோய்*  நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து* 
    ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்*  உலப்புஇல் அதனை உணர்ந்துஉணர்ந்து*

    சென்றுஆங்கு இன்பத் துன்பங்கள்*  செற்றுக் களைந்து பசைஅற்றால்* 
    அன்றே அப்போதேவீடு*  அதுவே வீடு வீடாமே.


    அதுவே வீடு வீடு பேற்று*  இன்பம்தானும் அதுதேறி* 
    எதுவே தானும் பற்றுஇன்றி*  யாதும் இலிகள்ஆகிற்கில்*

    அதுவே வீடு வீடு பேற்று*  இன்பம்தானும் அதுதேறாது* 
    'எதுவே வீடு ஏது இன்பம்?' என்று*  எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே. 


    எய்த்தார் எய்த்தார் எய்த்தார்என்று*  இல்லத்தாரும் புறத்தாரும்- 
    மொய்த்து*  ஆங்கு அறிமுயங்க*  தாம் போகும் போது*  உன்மத்தர்போல்

    பித்தேஏறி அநுராகம்  பொழியும்போது*  எம் பெம்மானோடு- 
    ஒத்தேசென்று*  அங்குஉள்ளம்கூடக்*  கூடிற்றாகில் நல்உறைப்பே.     


    கூடிற்றாகில் நல்உறைப்பு*   கூடாமையைக் கூடினால்* 
    ஆடல் பறவை உயர்கொடி*  எம்மாயன் ஆவதது அதுவே*

    வீடைப் பண்ணி ஒருபரிசே*  எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்* 
    ஓடித் திரியும் யோகிகளும்*  உளரும்இல்லை அல்லரே.


    உளரும்இல்லை அல்லராய்*  உளராய்இல்லை ஆகியே* 
    உளர்எம்ஒருவர் அவர்வந்து*  என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*

    வளரும் பிறையும் தேய்பிறையும்போல*  அசைவும் ஆக்கமும்* 
    வளரும் சுடரும் இருளும்போல்*  தெருளும் மருளும் மாய்த்தோமே.  


    தெருளும் மருளும் மாய்த்து*  தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்* 
    அருளிஇருத்தும் அம்மானாம்*  அயனாம் சிவனாம்*  திருமாலால்

    அருளப்பட்ட சடகோபன்*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்* 
    அருளி அடிக்கீழ் இருத்தும்*  நம்அண்ணல் கருமாணிக்கமே   (2)


    கருமாணிக்க மலைமேல்*  மணித்தடம் தாமரைக் காடுகள்போல்* 
    திருமார்வு வாய்கண்கை*  உந்திகால்உடை  ஆடைகள் செய்யபிரான்*

    திருமால் எம்மான் செழுநீர்வயல்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்*  அன்னைமீர்!  இதற்கு என்செய்கேனோ.   (2)


    அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?*  அணிமேருவின் மீதுஉலவும்* 
    துன்னுசூழ் சுடர் ஞாயிறும்*  அன்றியும்  பல்சுடர்களும்போல்*

    மின்னு நீள்முடிஆரம் பல்கலன்*  தான்உடை எம்பெருமான்* 
    புன்னைஅம் பொழில்சூழ்*  திருப்புலியூர்  புகழும்இவளே.


    புகழும் இவள்நின்று இராப்பகல்*  பொருநீர்க்கடல் தீப்பட்டு*  எங்கும் 
    திகழும்எரியொடு செல்வதுஒப்ப*  செழும்கதிர்ஆழிமுதல்*

    புகழும் பொருபடை ஏந்தி*  போர்புக்கு  அசுரரைப் பொன்றுவித்தான்* 
    திகழும் மணிநெடு மாடம்நீடு*   திருப்புலியூர் வளமே.      


    ஊர்வளம்கிளர் சோலையும்*  கரும்பும்   பெரும்செந்நெலும் சூழ்ந்து* 
    ஏர்வளம்கிளர் தண்பணைக்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்*

    சீர்வளம்கிளர் மூவுலகுஉண்டுஉமிழ்*  தேவபிரான்* 
    பேர்வளம்கிளர்ந்தன்றிப் பேச்சுஇலள்*  இன்று இப்புனைஇழையே.   


    புனைஇழைகள் அணிவும் ஆடைஉடையும்*   புதுக்கணிப்பும்* 
    நினையும் நீர்மையதுஅன்று இவட்குஇது*  நின்று  நினைக்கப்புக்கால்*

    சுனையினுள் தடம்தாமரை மலரும்*  தண் திருப்புலியூர்* 
    முனைவன் மூவுலகுஆளி*  அப்பன்  திருஅருள் மூழ்கினளே.  


    திருஅருள் மூழ்கி வைகலும்*  செழுநீர்நிறக் கண்ணபிரான்* 
    திருஅருள்களும் சேர்ந்தமைக்கு*  அடையாளம் திருந்தஉள*

    திருஅருள் அருளால் அவன்*  சென்று   சேர்தண் திருப்புலியூர்* 
    திருஅருள் கமுகுஒண் பழத்தது*  மெல்லியல் செவ்விதழே


    மெல்இலைச் செல்வவண் கொடிப்புல்க*   வீங்குஇளம்தாள்கமுகின்* 
    மல்இலை மடல்வாழை*  ஈன்கனி சூழ்ந்து  மணம்கமழ்ந்து*

    புல்இலைத் தெங்கினூடு*  கால் உலவும்தண் திருப்புலியூர்* 
    மல்லல்அம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்*   இம் மடவரலே   


    மடவரல் அன்னைமீர்கட்கு*  என்சொல்லிச் சொல்லுகேன்?  மல்லைச்செல்வ* 
    வடமொழி மறைவாணர்*  வேள்வியுள் நெய்அழல்வான் புகைபோய்த்*

    திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்*  தண் திருப்புலியூர்* 
    படஅரவுஅணையான் தன்நாமம் அல்லால்*  பரவாள் இவளே.


    பரவாள் இவள் நின்று இராப்பகல்*  பனிநீர்நிறக் கண்ணபிரான்* 
    விரவார்இசை மறை வேதியர்ஒலி*  வேலையின்  நின்றுஒலிப்ப*

    கரவார் தடம்தொறும் தாமரைக்கயம்*  தீவிகை நின்றுஅலரும்* 
    புரவார் கழனிகள் சூழ்*  திருப்புலியூர்ப்  புகழ்அன்றிமற்றே 


    அன்றி மற்றோர் உபாயம்என்*  இவள்அம்தண் துழாய்கமழ்தல்* 
    குன்றமாமணி மாடமாளிகைக்*  கோலக்  குழாங்கள் மல்கி*

    தென்திசைத் திலதம்புரை*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    நின்ற மாயப்பிரான் திருவருளாம்*  இவள் நேர்பட்டதே.  


    நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்*  நாயகன் தன்அடிமை* 
    நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன் சொல்*

    நேர்பட்ட தமிழ்மாலை*  ஆயிரத்துள் இவை பத்தும் 
    நேர்பட்டார்*  அவர் நேர்பட்டார்*  நெடுமாற்கு அடிமை செய்யவே.   (2)


    நெடுமாற்குஅடிமை செய்வேன்போல்*   அவனைக் கருத வஞ்சித்து* 
    தடுமாற்றுஅற்ற தீக்கதிகள்*  முற்றும்  தவிர்ந்த சதிர்நினைந்தால்*

    கொடுமாவினையேன் அவன்அடியார்  அடியே*  கூடும் இதுஅல்லால்* 
    விடுமாறுஎன்பதுஎன்? அந்தோ!*  வியன் மூவுலகு பெறினுமே?.  (2)


    வியன் மூவுலகு பெறினும்போய்*  தானே தானே ஆனாலும்* 
    புயல் மேகம்போல் திருமேனிஅம்மான்*  புனைபூம் கழல்அடிக்கீழ்ச்*

    சயமே அடிமை தலைநின்றார்*  திருத்தாள் வணங்கி*  இம்மையே 
    பயனே இன்பம் யான்பெற்றது*  உறுமோ பாவியேனுக்கே? 


    உறுமோ பாவியேனுக்கு*  இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய* 
    சிறுமாமேனி நிமிர்த்த*  என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*

    நறுமாவிரைநாள் மலர்அடிக்கீழ்ப்*   புகுதல் அன்றி அவன்அடியார்* 
    சிறுமா மனிசராய் என்னைஆண்டார்*  இங்கே திரியவே. 


    இங்கே திரிந்தேற்கு இழுக்குஉற்றுஎன்!*  இருமாநிலம் முன்உண்டுஉமிழ்ந்த* 
    செங்கோலத்த பவளவாய்ச்*  செந்தாமரைக்கண் என்அம்மான்*

    பொங்குஏழ் புகழ்கள் வாயவாய்*  புலன்கொள் வடிவு என்மனத்ததாய்* 
    அங்குஏய் மலர்கள் கையவாய்*  வழிபட்டுஓட அருளிலே?  


    வழிபட்டுஓட அருள்பெற்று*  மாயன் கோல மலர்அடிக்கீழ்ச்* 
    சுழிபட்டுஓடும் சுடர்ச்சோதி  வெள்ளத்து*  இன்புற்றுஇருந்தாலும்*

    இழிபட்டுஓடும் உடலினில்பிறந்து*  தன்சீர் யான்கற்று* 
    மொழிபட்டுஓடும் கவிஅமுதம்*  நுகர்ச்சி உறுமோ முழுதுமே?  


    நுகர்ச்சி உறுமோ மூவுலகின்*  வீடு பேறு தன்கேழ்இல்* 
    புகர்ச்செம்முகத்த களிறுஅட்ட*  பொன்ஆழிக்கை என்அம்மான்*

    நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்*  நீண்ட அசுரர் உயிர்எல்லாம்* 
    தகர்த்துஉண்டுஉழலும் புள்பாகன்*  பெரிய தனிமாப் புகழே?  


    தனிமாப் புகழே எஞ்ஞான்றும்*   நிற்கும் படியாத் தான்தோன்றி* 
    முனிமாப் பிரம முதல்வித்தாய்*  உலகம் மூன்றும் முளைப்பித்த*

    தனிமாத் தெய்வத் தளிர்அடிக்கீழ்ப்*  புகுதல் அன்றி அவன்அடியார்* 
    நனிமாக் கலவி இன்பமே*  நாளும் வாய்க்க நங்கட்கே


    நாளும் வாய்க்க நங்கட்கு*  நளிர்நீர்க் கடலைப் படைத்து*  தன் 
    தாளும் தோளும் முடிகளும்*  சமன் இலாத பலபரப்பி*

    நீளும் படர்பூங் கற்பகக்காவும்*  நிறைபல்நாயிற்றின்* 
    கோளும்உடைய மணிமலைபோல்*  கிடந்தான் தமர்கள் கூட்டமே.   


    தமர்கள் கூட்ட வல்வினையை*   நாசம் செய்யும் சதுமூர்த்தி* 
    அமர்கொள் ஆழி சங்குவாள்*  வில்தண்டுஆதி பல்படையன்*

    குமரன் கோல ஐங்கணைவேள்தாதை*  கோதுஇல் அடியார்தம்* 
    தமர்கள் தமர்கள் தமர்களாம்*  சதிரே வாய்க்க தமியேற்கே 


    வாய்க்க தமியேற்கு*  ஊழிதோறுஊழி ஊழி மாகாயாம்- 
    பூக்கொள் மேனி நான்குதோள்*  பொன்ஆழிக்கை என்அம்மான்*

    நீக்கம்இல்லா அடியார்தம்*  அடியார் அடியார் அடியார் எம் 
    கோக்கள்*  அவர்க்கே குடிகளாய்ச்  செல்லும்*  நல்ல கோட்பாடே  


    நல்ல கோட்பாட்டு உலகங்கள்*  மூன்றினுள்ளும் தான்நிறைந்த* 
    அல்லிக் கமலக் கண்ணனை*  அம்தண் குருகூர்ச் சடகோபன்*

    சொல்லப் பட்ட ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்* 
    நல்ல பதத்தால் மனைவாழ்வர்*  கொண்ட பெண்டீர் மக்களே.  (2)