பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி* என்னை உன் பாதபங்கயம்,*
நண்ணிலாவகையே* நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,*
எண் இலாப் பெறுமாயனே! இமையோர்கள் ஏத்தும்* உலகம் மூன்று உடை,*
அண்ணலே! அமுதே! அப்பனே!* என்னை ஆள்வானே! (2)
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து* இராப்பகல் மோதுவித்திட்டு,*
உன்னை நான் அணுகாவகை* செய்து போதிகண்டாய்,*
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!* கடல் ஞாலம் காக்கின்ற*
மின்னு நேமியினாய்!* வினையேனுடை வேதியனே!
வேதியாநிற்கும் ஐவரால்* வினையேனை மோதுவித்து* உன் திருவடிச்
சாதியாவகை* நீ தடுத்து என் பெறுதிஅந்தோ,*
ஆதி ஆகி அகல் இடம் படைத்து* உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட-
சோதி நீள் முடியாய்!* தொண்டனேன் மதுசூதனனே!
சூது நான் அறியாவகை* சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி* உன் அடிப்போது-
நான் அணுகாவகை* செய்து போதிகண்டாய்,*
யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி* ஓர் ஆலின் நீள் இலை,*
மீது சேர் குழவி!* வினையேன் வினைதீர் மருந்தே!
தீர் மருந்து இன்றி ஐந்து நோய்* அடும் செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை,*
நேர் மருங்கு உடைத்தா அடைத்து* நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,*
ஆர் மருந்து இனி ஆகுவார்?* அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம்,*
வேர் மருங்கு அறுத்தாய்!* விண்ணுளார் பெருமானே? ஓ!
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்* ஐம்புலன் இவை,
மண்ணுள் என்னைப் பெற்றால்* என் செய்யா மற்று நீயும் விட்டால்?*
பண்ணுளாய் கவி தன்னுளாய்!* பத்தியின் உள்ளாய்! பரமீசனே,* வந்து என்-
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத* ஓர் ஐவர் வன் கயவரை,*
என்று யான் வெல்கிற்பன்* உன் திருவருள் இல்லையேல்?,*
அன்று தேவர் அசுரர் வாங்க* அலைகடல் அரவம் அளாவி,* ஓர்
குன்றம் வைத்த எந்தாய்!* கொடியேன் பருகு இன் அமுதே!
இன் அமுது எனத் தோன்றி* ஓர் ஐவர் யாவரையும் மயக்க,* நீ வைத்த-
முன்னம் மாயம் எல்லாம்* முழு வேர் அரிந்து* என்னை உன்-
சின்னமும் திரு மூர்த்தியும்* சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு,*
என் அம்மா! என் கண்ணா!* இமையோர் தம் குலமுதலே !
குலம் முதல் அடும் தீவினைக்* கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை*
வலம் முதல் கெடுக்கும்* வரமே தந்தருள்கண்டாய்,*
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும்* நிற்பன செல்வன எனப்,* பொருள்-
பல முதல் படைத்தாய்!* என் கண்ணா! என் பரஞ்சுடரே!
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி* உன் இணைத் தாமரைகட்கு,*
அன்பு உருகி நிற்கும்* அது நிற்க சுமடு தந்தாய்,*
வன் பரங்கள் எடுத்து ஐவர்* திசை திசை வலித்து எற்றுகின்றனர்:*
முன் பரவை கடைந்து* அமுதம் கொண்ட மூர்த்தி ஓ!
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்* குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,* அப்
புண்டரீகக் கொப்பூழ்ப்* புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்
தொண்டர் தொண்டர் தொண்டன்* சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,*
கண்டு பாட வல்லார்* வினை போம் கங்குலும் பகலே. (2)
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்* கண்ண நீர் கைகளால் இறைக்கும்,*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்,*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்* இரு நிலம் கை துழா இருக்கும்,*
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்கின்றாயே? (2)
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா! என்னும்* கண்ணீர்மல்க இருக்கும்,*
என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்? என்னும்* வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*
முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்* முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,*
முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!* என்கொலோமுடிகின்றது இவட்கே?
வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்* வானமே நோக்கும் மையாக்கும்,*
உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள்உருகும்,*
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்,*
திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் செய்திட்டாயே?
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்* எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,*
கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்* கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*
வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் சிந்தித்தாயே?
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்* திருவரங் கத்துள்ளாய்! என்னும்
வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!* அலை கடல் கடைந்த ஆர்அமுதே,*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே!
மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,*
செய்யவாய் மணியே! என்னும்* தண் புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்* விண்ணோர் முதல்! என்னும்,*
பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்* பாவியேன் செயற்பாலதுவே.
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பற்றிலார் பற்றநின்றானே,*
காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட* கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*
சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்! என்னும்* என்தீர்த்தனே என்னும்,*
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்* என்னுடைக் கோமளக் கொழுந்தே
கொழுந்து வானவர்கட்கு என்னும்* குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,*
அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்,*
எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்* எங்ஙனே நோக்குகேன்? என்னும்,*
செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!* என்செய்கேன் என்திருமகட்கே?
என் திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே! என்னும்,*
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே! என்னும்,*
அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்,*
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே. (2)
முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்* மூவுலகுஆளியே! என்னும்,*
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்* நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்* வண் திருவரங்கனே! என்னும்,*
அடிஅடையாதாள் போல்இவள் அணுகி அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே
முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி உய்ந்தவன்* மொய்புனல் பொருநல்,*
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்* வண்பொழில்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,*
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே (2)
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி* தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,*
புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்* என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*
வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த* வேத ஒலியும் விழா ஒலியும்,*
பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும் அறா* திருப்பேரெயில் சேர்வன் நானே! (2)
நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,*
நான்இத் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்* என்வசம் அன்றுஇதுஇராப்பகல்போய்,*
தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ்* தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,*
வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்* செங்கனி வாயின் திறத்ததுவே.
செங்கனி வாயின் திறத்ததாயும்* செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்,*
சங்கொடு சக்கரம் கண்டுஉகந்தும்* தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*
திங்களும் நாளும் விழாஅறாத* தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,*
நங்கள்பிரானுக்குஎன் நெஞ்சம் தோழீ!* நாணும் நிறையும் இழந்ததுவே.
இழந்த எம்மாமைத் திறத்துப் போன* என்நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,*
உழந்து இனியாரைக் கொண்டுஎன்உசாகோ?* ஓதக் கடல்ஒலி போல* எங்கும்
எழுந்தநல் வேதத்துஒலி நின்றுஓங்கு* தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,*
முழங்கு சங்கக்கையன் மாயத்துஆழ்ந்தேன்* அன்னையர்காள் என்னை என்முனிந்தே?
முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலைஉண்டு* மருதுஇடைபோய்,*
கனிந்த விளவுக்குக் கன்றுஎறிந்த* கண்ண பிரானுக்குஎன் பெண்மை தோற்றேன்,*
முனிந்துஇனி என்செய்தீர் அன்னைமீர்காள்!* முன்னிஅவன் வந்து வீற்றிருந்த,*
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே* காலம் பெறஎன்னைக் காட்டுமினே
காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்* காதல் கடலின் மிகப் பெரிதால்,*
நீல முகில்வண்ணத்து எம்பெருமான்* நிற்கும்முன்னே வந்துஎன் கைக்கும் எய்தான்,*
ஞாலத்துஅவன் வந்து வீற்றிருந்த* நான்மறையாளரும் வேள்வி ஓவா,*
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்* கூடுபுனல் திருப்பேரெயிற்கே.
பேர்எயில் சூழ்கடல் தென்இலங்கை* செற்றபிரான் வந்து வீற்றிருந்த,*
பேரெயிற்கே புக்குஎன்நெஞ்சம் நாடி* பேர்த்து வரஎங்கும் காண மாட்டேன்,*
ஆரை இனிஇங்குஉடையம் தோழீ!* என்நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,*
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?* என்நெஞ்சம் கண்டதுவே கண்டேனே
கண்டதுவே கொண்டுஎல்லாரும் கூடி* கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக்
கொண்டு,* அலர் தூற்றிற்றுஅது முதலாக்* கொண்டஎன் காதல் உரைக்கில் தோழீ,*
மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்* நீள்விசும்பும் கழியப் பெரிதால்,*
தெண்திரை சூழ்ந்துஅவன் வீற்றிருந்த* தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே
சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!* அன்னையர்காள்! என்னைத்தேற்ற வேண்டா,*
நீர்கள் உரைக்கின்றது என்இதற்கு?* நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை,*
கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட* கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,*
ஏர்வள ஒண்கழனிப் பழன* தென்திருப்பேரெயில் மாநகரே.
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்* நாண்எனக்கு இல்லைஎன் தோழி மீர்காள்,*
சிகர மணிநெடு மாடம் நீடு* தென்திருப் பேரெயில் வீற்றிருந்த,*
மகர நெடுங்குழைக் காதன் மாயன்* நூற்றுவரை அன்று மங்க நூற்ற,*
நிகர்இல் முகில்வண்ணன் நேமியான்* என் நெஞ்சம் கவர்ந்துஎனை ஊழியானே?
ஊழிதோறுஊழி உருவும் பேரும் செய்கையும்* வேறவன் வையம் காக்கும்,*
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை* அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்* இவை திருப்பேரெயில் மேய பத்தும்,*
ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்* அவர்அடிமைத் திறத்து ஆழியாரே. (2)
ஆழிஎழ* சங்கும் வில்லும்எழ,* திசை
வாழிஎழ* தண்டும் வாளும்எழ,* அண்டம்
மோழைஎழ* முடி பாதம்எழ,* அப்பன்
ஊழிஎழ* உலகம் கொண்டவாறே (2)
ஆறு மலைக்கு* எதிர்ந்துஓடும் ஒலி,* அரவு
ஊறு சுலாய்* மலை தேய்க்கும் ஒலி,* கடல்
மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,* அப்பன்
சாறுபட* அமுதம்கொண்ட நான்றே.
நான்றிலஏழ்* மண்ணும் தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழ்* மலை தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழ்* கடல் தானத்தவே,* அப்பன்
ஊன்றி இடந்து* எயிற்றில் கொண்ட நாளே.
நாளும்எழ* நிலம் நீரும்எழ* விண்ணும்
கோளும்எழ* எரி காலும்எழ,* மலை
தாளும்எழ* சுடர் தானும்எழ,* அப்பன்
ஊளிஎழ* உலகம்உண்ட ஊணே
ஊணுடை மல்லர்* ததர்ந்த ஒலி,* மன்னர்
ஆண்உடைச் சேனை* நடுங்கும் ஒலி,* விண்ணுள்
ஏண்உடைத் தேவர்* வெளிப்பட்ட ஒலி,* அப்பன்
காணுடைப் பாரதம்* கைஅறை போழ்தே
போழ்து மெலிந்த* புன் செக்கரில்,* வான்திசை
சூழும் எழுந்து* உதிரப்புனலா,* மலை
கீழ்து பிளந்த* சிங்கம்ஒத்ததால்,* அப்பன்
ஆழ்துயர் செய்து* அசுரரைக் கொல்லுமாறே.
மாறு நிரைத்து* இரைக்கும் சரங்கள்,* இன
நூறு பிணம்* மலை போல் புரள,* கடல்
ஆறு மடுத்து* உதிரப்புனலா,* அப்பன்
நீறுபட* இலங்கை செற்ற நேரே
நேர்சரிந்தான்* கொடிக் கோழிகொண்டான்,* பின்னும்
நேர்சரிந்தான்* எரியும் அனலோன்,* பின்னும்
நேர்சரிந்தான்* முக்கண் மூர்த்திகண்டீர்,* அப்பன்
நேர்சரி வாணன்* திண்தோள் கொண்ட அன்றே
அன்றுமண் நீர்எரிகால்* விண் மலைமுதல்,*
அன்று சுடர்* இரண்டு பிறவும்,* பின்னும்
அன்று மழை* உயிர் தேவும் மற்றும்,* அப்பன்
அன்று முதல்* உலகம் செய்ததுமே
மேய்நிரை கீழ்புக* மாபுரள,* சுனை
வாய்நிறை நீர்* பிளிறிச்சொரிய,* இன
ஆநிரை பாடி* அங்கேஒடுங்க,* அப்பன்
தீமழை காத்து* குன்றம் எடுத்தானே
குன்றம் எடுத்தபிரான்* அடியாரொடும்,*
ஒன்றிநின்ற* சடகோபன்உரைசெயல்,*
நன்றி புனைந்த* ஓர்ஆயிரத்துள் இவை*
வென்றி தரும்பத்தும்* மேவிக் கற்பார்க்கே (2)
கற்பார் இராம பிரானை அல்லால்* மற்றும் கற்பரோ?,*
புல்பா முதலா* புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*
நல்பால் அயோத்தியில் வாழும்* சராசரம் முற்றவும்,*
நல்பாலுக்கு உய்த்தனன்* நான்முக னார்பெற்ற நாட்டுளே? (2)
நாட்டில் பிறந்தவர்* நாரணற்கு ஆள்அன்றி ஆவரோ,*
நாட்டில் பிறந்து படாதன பட்டு* மனிசர்க்காய்,*
நாட்டை நலியும் அரக்கரை* நாடித் தடிந்திட்டு,*
நாட்டை அளித்துஉய்யச் செய்து* நடந்தமை கேட்டுமே?
கேட்பார்கள் கேசவன் கீர்த்திஅல்லால்* மற்றும் கேட்பரோ,*
கேட்பார் செவிசுடு* கீழ்மை வசைவுகளே வையும்,*
சேண்பால் பழம்பகைவன்* சிசு பாலன்,* திருவடி
தாள்பால் அடைந்த* தன்மை அறிவாரை அறிந்துமே?
தன்மை அறிபவர்* தாம் அவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
பன்மைப் படர்பொருள்* ஆதும்இல்பாழ் நெடும்காலத்து,*
நன்மைப் புனல்பண்ணி* நான்முகனைப்பண்ணி தன்னுள்ளே*
தொன்மை மயக்கிய தோற்றிய* சூழல்கள் சிந்தித்தே?
சூழல்கள் சிந்திக்கில்* மாயன் கழல்அன்றி சூழ்வரோ,*
ஆழப் பெரும்புனல்* தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்,*
தாழப் படாமல்* தன் பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட,*
கேழல் திருஉருஆயிற்றுக்* கேட்டும் உணர்ந்துமே?
கேட்டும் உணர்ந்தவர்* கேசவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
வாட்டம்இலா வண்கை* மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*
ஈட்டம்கொள் தேவர்கள்* சென்றுஇரந்தார்க்கு இடர் நீக்கிய,*
கோட்டுஅங்கை வாமனன்ஆய்* செய்த கூத்துக்கள் கண்டுமே?
கண்டும் தெளிந்தும் கற்றார்* கண்ணற்கு ஆளன்றி ஆவரோ,*
வண்டுஉண் மலர்த்தொங்கல்* மார்க்கண்டேயனுக்கு வாழும்நாள்*
இண்டைச் சடைமுடி* ஈசன்உடன்கொண்டு உசாச்செல்ல,*
கொண்டுஅங்கு தன்னொடும் கொண்டு* உடன்சென்றது உணர்ந்துமே?
செல்ல உணர்ந்தவர்* செல்வன்தன் சீர்அன்றி கற்பரோ,*
எல்லை இலாத பெரும்தவத்தால்* பல செய்மிறை,*
அல்லல் அமரரைச் செய்யும்* இரணியன் ஆகத்தை,*
மல்லல் அரிஉருஆய்* செய்த மாயம் அறிந்துமே?
மாயம் அறிபவர்* மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க* ஓர்ஐவர்க்குஆய்,*
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று* சேனையை
நாசம் செய்திட்டு,* நடந்த நல் வார்த்தை அறிந்துமே?
வார்த்தை அறிபவர்* மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு* இறப்புஇவை
பேர்த்து,* பெரும்துன்பம் வேர்அற நீக்கி* தன் தாளின்கீழ்ச்
சேர்த்து,* அவன் செய்யும்* சேமத்தைஎண்ணித் தெளிவுற்றே?
தெளிவுற்று வீவுஇன்றி* நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,*
தெளிவுற்ற கண்ணனைத்* தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*
தெளிவுற்ற ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்,* அவர்
தெளிவுற்ற சிந்தையர்* பாமரு மூவுலகத்துள்ளே (2)
பாமரு மூவுலகும் படைத்த* பற்ப நாபாவோ,*
பாமரு மூவுலகும் அளந்த* பற்ப பாதாவோ,*
தாமரைக் கண்ணாவோ!* தனியேன் தனிஆளாவோ,*
தாமரைக் கையாவோ!* உன்னை என்றுகொல் சேர்வதுவே? (2)
என்றுகொல் சேர்வது அந்தோ* அரன் நான்முகன் ஏத்தும்,* செய்ய
நின் திருப்பாதத்தை* யான்நிலம் நீர்எரி கால்,* விண்உயிர்
என்றுஇவை தாம்முதலா* முற்றுமாய் நின்ற எந்தாய்யோ,*
குன்றுஎடுத்து ஆநிரை மேய்த்து* அவை காத்த எம்கூத்தாவோ!
காத்த எம்கூத்தாவோ!* மலைஏந்திக் கல்மாரி தன்னை,*
பூத்தண் துழாய்முடியாய்!* புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*
வாய்த்த என் நான்முகனே!* வந்துஎன் ஆர்உயிர் நீஆனால்,*
ஏத்துஅரும் கீர்த்தியினாய்!* உன்னை எங்குத் தலைப்பெய்வனே?
எங்குத் தலைப்பெய்வன் நான்?* எழில் மூவுலகும் நீயே,*
அங்கு உயர் முக்கண்பிரான்* பிரம பெருமான் அவன்நீ,*
வெங்கதிர் வச்சிரக் கை* இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*
கொங்குஅலர் தண்அம் துழாய்முடி* என்னுடைக் கோவலனே?
என்னுடைக் கோவலனே!* என் பொல்லாக் கருமாணிக்கமே,*
உன்னுடை உந்தி மலர்* உலகம் அவைமூன்றும் பரந்து,*
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்* உன்னைக் கண்டுகொண்டிட்டு,*
என்னுடை ஆர்உயிரார்* எங்ஙனேகொல் வந்து எய்துவரே?
வந்துஎய்து மாறுஅறியேன்* மல்கு நீலச் சுடர்தழைப்ப,*
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து* ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*
அந்தரமேல் செம்பட்டோடு* அடி உந்திகை மார்புகண்வாய்,*
செஞ்சுடர்ச் சோதி விடஉறை* என்திரு மார்பனையே.
என்திரு மார்பன் தன்னை* என் மலைமகள் கூறன்தன்னை,*
என்றும் என்நாமகளை* அகம்பால்கொண்ட நான்முகனை,*
நின்ற சசிபதியை* நிலம்கீண்டு எயில் மூன்றுஎரித்த,*
வென்று புலன்துரந்த* விசும்புஆளியை காணேனோ!
ஆளியைக் காண்பரியாய்* அரிகாண் நரியாய்,* அரக்கர்
ஊளைஇட்டு அன்று இலங்கைகடந்து* பிலம்புக்குஒளிப்ப,*
மீளியம் புள்ளைக்கடாய்* விறல் மாலியைக் கொன்று,* பின்னும்
ஆள்உயர் குன்றங்கள் செய்து* அடர்த்தானையும் காண்டும்கொலோ?
காண்டும்கொலோ நெஞ்சமே!* கடிய வினையே முயலும்,*
ஆண்திறல் மீளிமொய்ம்பின்* அரக்கன் குலத்தைத் தடிந்து,*
மீண்டும் அவன் தம்பிக்கே* விரி நீர்இலங்கைஅருளி,*
ஆண்டு தன் சோதிபுக்க* அமரர் அரியேற்றினையே?
ஏற்றுஅரும் வைகுந்தத்தை* அருளும் நமக்கு,* ஆயர்குலத்து
ஈற்றுஇளம் பிள்ளைஒன்றாய்ப்புக்கு* மாயங்களே இயற்றி,*
கூற்றுஇயல் கஞ்சனைக் கொன்று* ஐவர்க்காய் ஆக்கொடும்சேனைதடிந்து,*
ஆற்றல் மிக்கான் பெரிய* பரஞ்சோதி புக்க அரியே
புக்க அரிஉருஆய்* அவுணன்உடல் கீண்டுஉகந்த,*
சக்கரச் செல்வன்தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
மிக்க ஓர்ஆயிரத்துள்* இவைபத்தும் வல்லார் அவரைத்,*
தொக்கு பல்லாண்டுஇசைத்து* கவரி செய்வர் ஏழையரே (2)
ஏழையர் ஆவிஉண்ணும்* இணைக் கூற்றம்கொலோ அறியேன்,*
ஆழிஅம் கண்ணபிரான்* திருக்கண்கள் கொலோ அறியேன்,*
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,*
தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே? (2)
ஆட்டியும் தூற்றியும் நின்று* அன்னைமீர் என்னை நீர்நலிந்துஎன்?*
மாட்டு உயர் கற்பகத்தின்* வல்லியோ? கொழுந்தோ? அறியேன்,*
ஈட்டிய வெண்ணெய்உண்டான்* திருமூக்கு எனதுஆவியுள்ளே,*
மாட்டிய வல்விளக்கின்* சுடராய்நிற்கும் வாலியதே.
வாலியதுஓர் கனிகொல்* வினையாட்டியேன் வல்வினைகொல்,*
கோலம் திரள்பவளக்* கொழும்துண்டம்கொலோ? அறியேன்,*
நீல நெடுமுகில்போல்* திருமேனி அம்மான் தொண்டைவாய்,*
ஏலும் திசையுள்எல்லாம்* வந்து தோன்றும் என்இன்உயிர்க்கே.
இன்உயிர்க்கு ஏழையர்மேல்* வளையும் இணை நீலவிற்கொல்,*
மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,* மதனன்
தன்உயிர்த் தாதை* கண்ணபெருமான் புருவம்அவையே,*
என்உயிர் மேலனவாய்* அடுகின்றன என்றும் நின்றே
என்றும் நின்றேதிகழும்* செய்ய ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்,*
அன்றி என்ஆவிஅடும்* அணி முத்தம்கொலோ? அறியேன்,*
குன்றம் எடுத்தபிரான்* முறுவல் எனதுஆவிஅடும்*
ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்வுஇடமே
உய்விடம் ஏழையர்க்கும்* அசுரர்க்கும் அரக்கர்கட்கும்*
எவ்விடம் என்றுஇலங்கி* மகரம் தழைக்கும் தளிர்கொல்,*
பைவிடப் பாம்புஅணையான்* திருக்குண்டலக் காதுகளே?*
கைவிடல் ஒன்றும்இன்றி* அடுகின்றன காண்மின்களே
காண்மின்கள் அன்னையர்காள்*! என்று காட்டும் வகைஅறியேன்,*
நாள்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு நச்சுஇலைகொல்,*
சேண்மன்னு நால்தடம்தோள்* பெருமான்தன் திருநுதலே?,*
கோள்மன்னி ஆவிஅடும்* கொடியேன் உயிர் கோள்இழைத்தே
கோள்இழைத் தாமரையும்* கொடியும் பவளமும் வில்லும்,.*
கோள்இழைத் தண் முத்தமும்* தளிரும் குளிர்வான் பிறையும்,*
கோள்இழையாஉடைய* கொழும்சோதி வட்டம்கொல் கண்ணன்,
கோள்இழை வாள் முகமாய்* கொடியேன் உயிர் கொள்கின்றதே?
கொள்கின்ற கோள் இருளைச்* சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்,*
உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்?* அன்று மாயன் குழல்,*
விள்கின்ற பூந்தண்துழாய்* விரை நாற வந்து என் உயிரைக்,*
கள்கின்றவாறு அறியீர்* அன்னைமீர்! கழறாநிற்றிரே.
நிற்றி முற்றத்துள் என்று* நெரித்த கையர் ஆய்*
என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும்* வைதிர் சுடர்ச் சோதி மணிநிறம்ஆய்,*
முற்ற இம்மூவுலகும்* விரிகின்ற சுடர்முடிக்கே,*
ஒற்றுமை கொண்டது உள்ளம்* அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?
கட்கு அரிய பிரமன் சிவன்* இந்திரன் என்று இவர்க்கும்,*
கட்கு அரிய கண்ணனைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
உட்கு உடை ஆயிரத்துள்* இவையும் ஒரு பத்தும் வல்லார்,*
உட்கு உடை வானவரோடு* உடனாய் என்றும் மாயாரே. (2)
மாயா! வாமனனே!* மதுசூதா நீ அருளாய்,*
தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்* விசும்பு ஆய் கால் ஆய்,*
தாயாய் தந்தையாய்* மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,*
நீயாய் நீ நின்றவாறு* இவை என்ன நியாயங்களே! (2)
அங்கண் மலர்த் தண் துழாய்முடி* அச்சுதனே! அருளாய்,*
திங்களும் ஞாயிறும் ஆய்* செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்,*
பொங்கு பொழி மழை ஆய்* புகழ் ஆய் பழி ஆய் பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றமும் ஆம்* இவை என்ன விசித்திரமே!
சித்திரத் தேர் வலவா!* திருச் சக்கரத்தாய்! அருளாய்,*
எத்தனை ஓர் உகமும்* அவை ஆய் அவற்றுள் இயலும்,*
ஒத்த ஓண் பல் பொருள்கள்* உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*
வித்தகத்தாய் நிற்றி நீ* இவை என்ன விடமங்களே!
கள் அவிழ் தாமரைக்கண்* கண்ணனே! எனக்கு ஒன்று அருளாய்,*
உள்ளதும் இல்லதும் ஆய்* உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*
வெள்ளத் தடம் கடலுள்* விட நாகு அணைமேல் மருவி,*
உள்ளப் பல் யோகு செய்தி* இவை என்ன உபாயங்களே!
பாசங்கள் நீக்கி* என்னை உனக்கே அறக் கொண்டிட்டு,* நீ
வாச மலர்த் தண் துழாய்முடி* மாயவனே! அருளாய்,*
காயமும் சீவனும் ஆய்* கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும்நீ,*
மாயங்கள் செய்துவைத்தி* இவை என்ன மயக்குக்களே!
மயக்கா! வாமனனே!* மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,*
அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய்* அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்,*
வியப்பு ஆய் வென்றிகள் ஆய்* வினை ஆய் பயன் ஆய் பின்னும்நீ,*
துயக்கு ஆய் நீ நின்றவாறு* இவை என்ன துயரங்களே!
துயரங்கள் செய்யும் கண்ணா!* சுடர் நீள் முடியாய் அருளாய்,*
துயரம் செய் மானங்கள் ஆய்* மதன் ஆகி உகவைகள் ஆய்,*
துயரம் செய் காமங்கள் ஆய்* துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,*
துயரங்கள் செய்துவைத்தி* இவை என்ன சுண்டாயங்களே.
என்ன சுண்டாயங்களால்* நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா,*
இன்னது ஓர் தன்மையை என்று* உன்னை யாவர்க்கும் தேற்றரியை,*
முன்னிய மூவுலகும்* அவை ஆய் அவற்றைப் படைத்து,*
பின்னும் உள்ளாய்! புறத்தாய்*! இவை என்ன இயற்கைகளே!
என்ன இயற்கைகளால்* எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?,*
துன்னு கரசரணம் முதலாக* எல்லா உறுப்பும்,*
உன்னு சுவை ஒளி* ஊறு ஒலி நாற்றம் முற்றும்நீயே,*
உன்னை உணரவுறில்* உலப்பு இல்லை நுணுக்கங்களே.
இல்லை நுணுக்கங்களே* இதனில் பிறிது என்னும் வண்ணம்*
தொல்லை நல் நூலில் சொன்ன* உருவும் அருவும் நீயே:*
அல்லித் துழாய் அலங்கல்* அணி மார்ப என் அச்சுதனே,*
வல்லது ஓர் வண்ணம் சொன்னால்* அதுவே உனக்கு ஆம்வண்ணமே.
ஆம் வண்ணம் இன்னது ஒன்று* என்று அறிவது அரிய அரியை,*
ஆம் வண்ணத்தால்* குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த*
ஆம் வண்ண ஒண் தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்,*
ஆம் வண்ணத்தால் உரைப்பார்* அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)
என்றைக்கும் என்னை* உய்யக்கொண்டு போகிய,*
அன்றைக்கு அன்று என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
இன் தமிழ் பாடிய ஈசனை* ஆதியாய்-
நின்ற என் சோதியை,* என் சொல்லி நிற்பனோ? (2)
என்சொல்லி நிற்பன்* என் இன் உயிர் இன்று ஒன்றாய்,*
என்சொல்லால் யான்சொன்ன* இன்கவி என்பித்து,*
தன்சொல்லால் தான்தன்னைக்* கீர்த்தித்த மாயன்,* என்
முன்சொல்லும்* மூவுருவாம் முதல்வனே.
ஆம் முதல்வன் இவன் என்று* தன் தேற்றி,* என்
நா முதல் வந்து புகுந்து* நல் இன் கவி,*
தூ முதல் பத்தர்க்குத்* தான் தன்னைச் சொன்ன,* என்
வாய் முதல் அப்பனை* என்று மறப்பனோ?
அப்பனை என்று மறப்பன்* என் ஆகியே,*
தப்புதல் இன்றி* தனைக் கவி தான் சொல்லி,*
ஒப்பிலாத் தீவினையேனை* உய்யக்கொண்டு*
செப்பமே செய்து* திரிகின்ற சீர்கண்டே?
சீர் கண்டுகொண்டு* திருந்து நல் இன்கவி,*
நேர்பட யான் சொல்லும்* நீர்மை இலாமையில்,*
ஏர்வு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னைப்,*
பார் பரவு இன்கவி* பாடும் பரமரே.
இன் கவி பாடும்* பரம் கவிகளால்,*
தன் கவி தான் தன்னைப்* பாடுவியாது இன்று*
நன்கு வந்து என்னுடன் ஆக்கி* என்னால் தன்னை,*
வன் கவி பாடும்* என் வைகுந்த நாதனே.
வைகுந்த நாதன்* என வல்வினை மாய்ந்து அறச்,*
செய் குந்தன் தன்னை* என் ஆக்கி என்னால் தன்னை,*
வைகுந்தன் ஆகப்* புகழ வண் தீம்கவி,*
செய் குந்தன் தன்னை* எந்நாள் சிந்தித்து ஆர்வனோ!
ஆர்வனோ ஆழிஅங்கை* எம் பிரான் புகழ்,*
பார் விண் நீர் முற்றும்* கலந்து பருகிலும்,*
ஏர்வு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னைச்,*
சீர்பெற இன்கவி* சொன்ன திறத்துக்கே?
திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம்* திருமாலின் சீர்,*
இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வனோ,*
மறப்பு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
உறப் பல இன்கவி* சொன்ன உதவிக்கே?
உதவிக் கைம்மாறு* என் உயிர் என்ன உற்று எண்ணில்,*
அதுவும் மற்று ஆங்கவன்* தன்னது என்னால் தன்னைப்,*
பதவிய இன்கவி* பாடிய அப்பனுக்கு,*
எதுவும் ஒன்றும் இல்லை* செய்வது இங்கும் அங்கே.
இங்கும் அங்கும்* திருமால் அன்றி இன்மை கண்டு,*
அங்ஙனே வண் குருகூர்ச்* சடகோபன்,*
இங்ஙனே சொன்ன* ஓர் ஆயிரத்து இப்பத்தும்,*
எங்ஙனே சொல்லினும்* இன்பம் பயக்குமே. (2)
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்* தானும் இவ் ஏழ் உலகை,*
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து* ஆள்கின்ற எங்கள் பிரான்,*
அன்புற்று அமர்ந்து உறைகின்ற* அணி பொழில் சூழ் திருவாறன்விளை,*
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து* கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)
ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி* அகல் இடம் முற்றவும் ஈர் அடியே*
ஆகும்பரிசு நிமிர்ந்த* திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்*
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு* மதிள் திருவாறன்விளை,*
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து* கைதொழக் கூடும்கொலோ!
கூடும் கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*
ஆடும் பறவைமிசைக் கண்டு* கைதொழுது அன்றி அவன் உறையும்,*
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி* ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*
நீடு பொழில் திருவாறன்விளை தொழ* வாய்க்கும்கொல் நிச்சலுமே!
வாய்க்கும்கொல் நிச்சலும்* எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற*
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்* வயல் சூழ் திருவாறன்விளை,*
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்* வடமதுரைப் பிறந்த,*
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்* மலர் அடிப்போதுகளே.
மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்* இருத்தி வணங்க,*
பலர் அடியார் முன்பு அருளிய* பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,*
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு* மதிள் திருவாறன்விளை,*
உலகம் மலி புகழ் பாட* நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்* தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை* அணி நெடும் தோள் புணர்ந்தான்,*
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப* உள்ளே இருக்கின்ற பிரான்,*
நின்ற அணி திருவாறன்விளை என்னும்* நீள் நகரம் அதுவே.
நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்* திருவாறன்விளை,*
நீள் நகரத்து உறைகின்ற பிரான்* நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்*
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய* வெம் போர்கள் செய்து.,*
வாணனை ஆயிரம் தோள் துணித்தான்* சரண் அன்றி மற்று ஒன்று இலமே.
அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று* அகல் இரும் பொய்கையின்வாய்,*
நின்று தன் நீள் கழல் ஏத்திய* ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,*
சென்று அங்கு இனிது உறைகின்ற* செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,*
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?* தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி* தெளி விசும்பு ஏறலுற்றால்,*
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்* அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,*
யாவரும் வந்து வணங்கும் பொழில்* திருவாறன்விளை அதனை,*
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்* என்னும் என் சிந்தனையே.
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை* தேவபிரான் அறியும்,*
சிந்தையினால் செய்வ தான் அறியாதன* மாயங்கள் ஒன்றும் இல்லை,*
சிந்தையினால் சொல்லினால் செய்கையால்* நிலத்தேவர் குழுவணங்கும்,*
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை* தீர்த்தனுக்கு அற்ற பின்னே.
தீர்த்தனுக்கு அற்றபின்* மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி* தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகி* செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தீர்த்தங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்களைத்,* தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்* தம் தேவியர்க்கே. (2)