பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்* தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி*
குழல்களும் கீதமும் ஆகி* எங்கும்- கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு*
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி* மங்கைமார் சாலக வாசல் பற்றி*
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்* உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.* (2)
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு* வசை அறத் திருவரை விரித்து உடுத்து*
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி* பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே*
முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்- அணிந்து* பல் ஆயர் குழாம் நடுவே*
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்* எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே*
சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்* மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட*
ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி* ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்*
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்* மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்*
அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்* அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே.*
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்* கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்*
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு* கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு*
என்றும் இவனை ஒப்பாரை நங்காய்* கண்டறியேன் ஏடி! வந்து காணாய்*
ஒன்றும்நில்லா வளை கழன்று* துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே.*
சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்* சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து*
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே* பாடவும் ஆடக் கண்டேன்* அன்றிப் பின்-
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்* மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்*
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்* கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*
சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்* திருத்திய கோறம்பும் திருக்குழலும்*
அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்* வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச*
அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை* அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்*
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்* பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ !*
சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்* தன் திருமேனிநின்று ஒளி திகழ*
நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து* பல் ஆயர் குழாம் நடுவே*
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்* குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து* ஆயரோடு-
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை* அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே.*
சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்* திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்*
அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை* அழகிய நேத்திரத்தால் அணிந்து*
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை* எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன*
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்* துகிலொடு சரிவளை கழல்கின்றதே.
வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து* மல்லிகை வனமாலை மௌவல் மாலை*
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்* தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி*
அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை* அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு*
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்* வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.*
விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ* மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே*
கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு* இளஆய்க் கன்னிமார் காமுற்ற-
வண்ணம்* வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்* விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்*
பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்* பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி* உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த* தாடாளன் தாள் அணைவீர்*
தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்* அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்* சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2)
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை* நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*
நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை* ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*
உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்* தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*
எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்* மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து*
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்* நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*
நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்* மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்*
செய் அணைந்து களை களையாது ஏறும்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து* முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்*
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட* நின்மலன் தாள் அணைகிற்பீர்*
நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே* தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்*
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு* திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து*
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட* விண்ணவர் கோன் தாள் அணைவீர்*
விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட* அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்*
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள* படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை*
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த* விண்ணவர் கோன் தாள் அணைவீர்*
வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்* துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்*
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்* புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த*
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்* திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*
திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி* வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி*
தெருவில் வலம்புரி தரளம் ஈனும்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்* பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்*
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்* மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*
அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ* நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*
பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்* காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே.
பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து* பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*
கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்* கலந்தவன் தாள்அணைகிற்பீர்*
கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று* கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி*
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்* காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.
செங்கமலத்து அயன்அனைய மறையோர்* காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை*
அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்* அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்* கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன*
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்* தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2)
புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,*
திகழும் தண் பரவை என்கோ!* தீ என்கோ! வாயு என்கோ,*
நிகழும் ஆகாசம் என்கோ!* நீள் சுடர் இரண்டும் என்கோ,*
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ* கண்ணனைக் கூவும் ஆறே!
கூவும் ஆறு அறியமாட்டேன்* குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
மேவு சீர் மாரி என்கோ!* விளங்கு தாரகைகள் என்கோ,*
நா இயல் கலைகள் என்கோ!* ஞான நல்ஆவி என்கோ,*
பாவு சீர்க் கண்ணன் எம்மான்* பங்கயக் கண்ணனையே!
பங்கயக் கண்ணன் என்கோ!* பவளச் செவ்வாயன் என்கோ,*
அம் கதிர் அடியன் என்கோ!* அஞ்சன வண்ணன் என்கோ,*
செங்கதிர் முடியன் என்கோ!* திரு மறு மார்பன் என்கோ,*
சங்கு சக்கரத்தன் என்கோ!* சாதி மாணிக்கத்தையே!
சாதி மாணிக்கம் என்கோ!* சவி கொள் பொன் முத்தம் என்கோ*
சாதி நல் வயிரம் என்கோ,* தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,*
ஆதி அம் சோதி என்கோ!* ஆதி அம் புருடன் என்கோ,*
ஆதும் இல் காலத்து எந்தை* அச்சுதன் அமலனையே!
அச்சுதன் அமலன் என்கோ,* அடியவர் வினை கெடுக்கும்,*
நச்சும் மா மருந்தம் என்கோ!* நலங் கடல் அமுதம் என்கோ,*
அச்சுவைக் கட்டி என்கோ!* அறுசுவை அடிசில் என்கோ,*
நெய்ச் சுவைத் தேறல் என்கோ!* கனி என்கோ! பால் என்கேனோ!
பால் என்கோ!* நான்கு வேதப் பயன் என்கோ,* சமய நீதி
நூல் என்கோ!* நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ,* வினையின் மிக்க பயன் என்கோ,* கண்ணன் என்கோ!-
மால் என்கோ! மாயன் என்கோ* வானவர் ஆதியையே!
வானவர் ஆதி என்கோ!* வானவர் தெய்வம் என்கோ,*
வானவர் போகம் என்கோ!* வானவர் முற்றும் என்கோ,*
ஊனம் இல் செல்வம் என்கோ!* ஊனம் இல் சுவர்க்கம் என்கோ,*
ஊனம் இல் மோக்கம் என்கோ!* ஒளி மணி வண்ணனையே!
ஒளி மணி வண்ணன் என்கோ!* ஒருவன் என்று ஏத்த நின்ற*
நளிர் மதிச் சடையன் என்கோ!* நான்முகக் கடவுள் என்கோ,*
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்* படைத்து அவை ஏத்த நின்ற,*
களி மலர்த் துளவன் எம்மான்* கண்ணனை மாயனையே!
கண்ணனை மாயன் தன்னை* கடல் கடைந்து அமுதம் கொண்ட,*
அண்ணலை அச்சுதனை* அனந்தனை அனந்தன் தன்மேல்,*
நண்ணி நன்கு உறைகின்றானை* ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை,*
எண்ணும் ஆறு அறியமாட்டேன்,* யாவையும் எவரும் தானே.
யாவையும் எவரும் தானாய்* அவரவர் சமயம் தோறும்,*
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*
ஆவி சேர் உயிரின் உள்ளால்* ஆதும் ஓர் பற்று இலாத,*
பாவனை அதனைக் கூடில்* அவனையும் கூடலாமே.
கூடி வண்டு அறையும் தண் தார்க்* கொண்டல் போல் வண்ணன் தன்னை*
மாடு அலர் பொழில்* குருகூர் வண் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்தும் வல்லார்,*
வீடு இல போகம் எய்தி* விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)