பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்* தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்-
பொட்டத் துற்றி* மாரிப் பகை புணர்த்த* பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை*
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை* வலைவாய்ப் பற்றிக் கொண்டு* குறமகளிர்-
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)
வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்* வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட*
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப* மதுசூதன் எடுத்து மறித்த மலை*
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி* இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்*
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்* ஆனாயரும் ஆநிரையும் அலறி*
எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப* இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை*
தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்* புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று*
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்* கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்*
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு* அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை*
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்* கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி* எங்கும்-
குடவாய்ப் பட நின்று மழை பொழியும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
வானத்தில் உள்ளீர்! வலியீர் உள்ளீரேல்* அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்*
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை* இடவன் எழ வாங்கி எடுத்த மலை*
கானக் களி-யானை தன் கொம்பு இழந்து* கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்*
கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
செப்பாடு உடைய திருமால் அவன் தன்* செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*
கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்* காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை*
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி* இலங்கு மணி முத்துவடம் பிறழக்*
குப்பாயம் என நின்று காட்சிதரும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்* படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்*
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்* தாமோதரன் தாங்கு தடவரைதான்*
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த* அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்*
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
சலமா முகில் பல் கணப் போர்க்களத்துச்* சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு*
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்* நாராயணன் முன் முகம் காத்த மலை*
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்* இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்*
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்* வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை*
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்* தாமோதரன் தாங்கு தடவரை தான்*
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்* முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்*
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்* கோலமும் அழிந்தில வாடிற்று இல*
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல* மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்*
முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்* முன் நெற்றி நரைத்தன போல* எங்கும்-
குடி ஏறி இருந்து மழை பொழியும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு* அரவப்-பகை ஊர்தி அவனுடைய*
குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*
திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்* பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்*
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்* பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்* புகுந்ததன்பின் வணங்கும் என்*
சிந்தனைக்கு இனியாய்!* திருவே என் ஆர் உயிரே*
அம் தளிர் அணி ஆர் அசோகின்* இளந்தளிர்கள் கலந்து*
அவை எங்கும் செந் தழல் புரையும்* திருவாலி அம்மானே! (2)
நீலத்தடவரை* மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்* அடியேன் மனத்து இருந்தாய்*
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட* மழை முகில் போன்று எழுந்து*
எங்கும் ஆலைப் புகை கமழும்* அணி ஆலி அம்மானே!
நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை* என் மனத்தே புகுந்தது*
இம்மைக்கு என்று இருந்தேன்* எறி நீர் வளஞ் செறுவில்*
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ* அரிவார் முகத்து எழு வாளை போய்*
கரும்பு அந் நல் நாடு அணையும்* அணி ஆலி அம்மானே!
மின்னின் மன்னும் நுடங்கு இடை* மடவார்தம் சிந்தை மறந்துவந்து*
நின்மன்னு சேவடிக்கே* மறவாமை வைத்தாயால்*
புன்னை மன்னு செருந்தி* வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
எங்கும் அன்னம் மன்னும் வயல்* அணி ஆலி அம்மானே!
நீடு பல்மலர் மாலைஇட்டு* நின் இணைஅடி தொழுதுஏத்தும்*
என் மனம் வாட நீ நினையேல்* மரம் எய்த மா முனிவா!*
பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து* பல் பணையால் மலிந்து*
எங்கும் ஆடல் ஓசை அறா* அணி ஆலி அம்மானே!
கந்த மாமலர் எட்டும்இட்டு* நின்காமர் சேவடி கைதொழுது எழும்*
புந்தியேன் மனத்தே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
சந்தி வேள்வி சடங்கு நான்மறை* ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்*
அந்தணாளர் அறா* அணி ஆலி அம்மானே!
உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து* உன் அடியேன் மனம் புகுந்த*
அப்புலவ! புண்ணியனே!* புகுந்தாயைப் போகலொட்டேன்*
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்* தண் தாமரை மலரின்மிசை*
மலி அலவன் கண்படுக்கும்* அணி ஆலி அம்மானே!
சங்கு தங்கு தடங் கடல் கடல்* மல்லையுள் கிடந்தாய்*
அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்* இனிப் போயினால் அறையோ!*
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி* இன் இள வண்டு போய்*
இளந்தெங்கின் தாது அளையும்* திருவாலி அம்மானே!
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி* நின் அடைந்தேற்கு*
ஒரு பொருள் வேதியா! அரையா!* உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!*
நீதி ஆகிய வேதமாமுனியாளர்* தோற்றம் உரைத்து*
மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!* அணி ஆலி அம்மானே!
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்* தென் ஆலி இருந்த மாயனை*
கல்லின் மன்னு திண் தோள்* கலியன் ஒலிசெய்த*
நல்ல இன் இசை மாலை* நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு* இடம் ஆகும் வான்உலகே. (2)
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை* முதலைச் சிறைப்பட்டு நின்ற,*
கைம்மாவுக்கு அருள் செய்த* கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,*
எம்மானைச் சொல்லிப் பாடி* எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,*
தம்மாம் கருமம் என் சொல்லீர்* தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)
தண்கடல் வட்டத்து உள்ளாரைத்* தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்,*
திண்கழல்கால் அசுரர்க்குத்* தீங்கு இழைக்கும் திருமாலைப்,*
பண்கள் தலைக்கொள்ளப் பாடி* பறந்தும் குனித்தும் உழலாதார்,*
மண்கொள் உலகில் பிறப்பார்* வல்வினை மோத மலைந்தே.
மலையை எடுத்து கல்மாரி* காத்து* பசுநிரை தன்னைத்,*
தொலைவு தவிர்த்த பிரானைச்* சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*
தலையினோடு ஆதனம் தட்டத்* தடுகுட்டமாய்ப் பறவாதார்,*
அலை கொள் நரகத்து அழுந்திக்* கிடந்து உழைக்கின்ற வம்பரே.
வம்பு அவிழ் கோதைபொருட்டா* மால்விடை ஏழும் அடர்த்த,*
செம்பவளத் திரள் வாயன்* சிரீதரன் தொல்புகழ் பாடி,*
கும்பிடு நட்டம் இட்டு ஆடி* கோகு உகட்டுண்டு உழலாதார்,*
தம்பிறப்பால் பயன் என்னே* சாது சனங்களிடையே?
சாது சனத்தை நலியும்* கஞ்சனைச் சாதிப்பதற்கு,*
ஆதி அம் சோதி உருவை* அங்கு வைத்து இங்குப் பிறந்த,,*
வேத முதல்வனைப் பாடி* வீதிகள் தோறும் துள்ளாதார்,*
ஓதி உணர்ந்தவர் முன்னா* என் சவிப்பார் மனிசரே?
மனிசரும் மற்றும் முற்றும் ஆய்* மாயப் பிறவி பிறந்த,*
தனியன் பிறப்பிலி தன்னை* தடங்கடல் சேர்ந்த பிரானை,*
கனியை கரும்பின் இன் சாற்றை* கட்டியை தேனை அமுதை,*
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்* முழுது உணர் நீர்மையினார.
நீர்மை இல் நூற்றுவர் வீய* ஐவர்க்கு அருள்செய்து நின்று,*
பார்மல்கு சேனை அவித்த* பரஞ்சுடரை நினைந்து ஆடி*
நீர்மல்கு கண்ணினர் ஆகி* நெஞ்சம் குழைந்து நையாதே,*
ஊன் மல்கி மோடு பருப்பார்* உத்தமர்கட்கு என் செய்வாரே?
வார்புனல் அம் தண் அருவி* வடதிருவேங்கடத்து எந்தை,*
பேர்பல சொல்லிப் பிதற்றி* பித்தர் என்றே பிறர்கூற,*
ஊர்பல புக்கும் புகாதும்* உலோகர் சிரிக்க நின்று ஆடி,*
ஆர்வம் பெருகிக் குனிப்பார்* அமரர் தொழப்படுவாரே.
அமரர் தொழப்படுவானை* அனைத்து உலகுக்கும் பிரானை,*
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து* அவன் தன்னோடு ஒன்று ஆக,*
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய* அல்லாதவர் எல்லாம்,*
அமர நினைந்து எழுந்து ஆடி* அலற்றுவதே கருமமே.
கருமமும் கரும பலனும் ஆகிய* காரணன் தன்னை,*
திருமணி வண்ணனை செங்கண் மாலினை* தேவபிரானை,*
ஒருமை மனத்தினுள் வைத்து* உள்ளம் குழைந்து எழுந்து ஆடி,*
பெருமையும் நாணும் தவிர்ந்து* பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.
தீர்ந்த அடியவர் தம்மைத்* திருத்திப் பணிகொள்ளவல்ல,*
ஆர்ந்த புகழ் அச்சுதனை* அமரர் பிரானை எம்மானை,*
வாய்ந்த வளவயல்சூழ்* தண் வளங் குருகூர்ச்சடகோபன்,*
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து* அருவினை நீறு செய்யுமே. (2)