2 எண்ணிக்கை பாடல் பாட

உயர்வு அற உயர் நலம்*  உடையவன் எவன் அவன்* 
மயர்வு அற மதி நலம்*  அருளினன் எவன் அவன்*
அயர்வு அறும் அமரர்கள்*  அதிபதி எவன் அவன்* 
துயர் அறு சுடர் அடி*  தொழுது எழு என் மனனே! (2)   

கர விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசை* 
வரன் நவில் திறல் வலி*  அளி பொறை ஆய்நின்ற*
பரன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொல்* 
நிரல் நிறை ஆயிரத்து*  இவை பத்தும் வீடே. (2)

வீடுமின் முற்றவும்* வீடு செய்து*  உம் உயிர்
வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)  

சேர்த்தடத்*  தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*
சீர்த் தொடை ஆயிரத்து*  ஓர்த்த இப்பத்தே. (2)

பத்து உடை அடியவர்க்கு எளியவன்;*  பிறர்களுக்கு அரிய 
வித்தகன்*  மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
மத்து உறு கடை வெண்ணெய்*  களவினில் உரவிடை யாப்புண்டு* 
எத்திறம், உரலினோடு*  இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)   

வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை*  அருவினையேன்- 
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட*  கள்வா! என்பன்; பின்னையும்* 
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்*  வல் ஆன் ஆயர் தலைவனாய்* 
இள ஏறு ஏழும் தழுவிய*  எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.

மாலே மாயப் பெருமானே!*  மா மாயவனே! என்று என்று* 
மாலே ஏறி மால் அருளால்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*
பால் ஏய் தமிழர் இசைகாரர்*  பத்தர் பரவும் ஆயிரத்தின்- 
பாலே பட்ட இவை பத்தும்*  வல்லார்க்கு இல்லை பரிவதே.

பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*
பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)

மாதவன்பால் சடகோபன்*   தீது அவம் இன்றி உரைத்த*
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து*  ஓத வல்லார் பிறவாரே.  

பிறவித்துயர் அற*  ஞானத்துள் நின்று.* 
துறவிச் சுடர் விளக்கம்*  தலைப்பெய்வார்,*
அறவனை*  ஆழிப்படை அந்தணனை,* 
மறவியை இன்றி*  மனத்து வைப்பாரே.

குடைந்து வண்டு உண்ணும்*  துழாய் முடியானை,* 
அடைந்த தென் குருகூர்ச்*  சடகோபன்,*
மிடைந்த சொல் தொடை*  ஆயிரத்து இப்பத்து,* 
உடைந்து நோய்களை*  ஓடுவிக்குமே.

ஓடும் புள் ஏறி,*  சூடும் தண் துழாய்,*
நீடு நின்றவை,*  ஆடும் அம்மானே.

நீர்புரைவண்ணன்,*  சீர்சடகோபன்,*
நேர்தல் ஆயிரத்து,*  ஓர்தல்இவையே.

பொருமா நீள் படை*  ஆழி சங்கத்தொடு,* 
திருமா நீள் கழல்*  ஏழ் உலகும் தொழ,*
ஒரு மாணிக் குறள் ஆகி,*  நிமிர்ந்த,*  அக் 
கரு மாணிக்கம்*  என் கண்ணுளது ஆகுமே.

மணியை வானவர் கண்ணனை*  தன்னது ஓர்- 
அணியை,*  தென் குருகூர்ச் சடகோபன்,*  சொல்
பணிசெய் ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
தணிவிலர் கற்பரேல்,*  கல்வி வாயுமே.   

வாயும் திரை உகளும்*  கானல் மடநாராய்,* 
ஆயும் அமர் உலகும்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,* 
நோயும் பயலைமையும்*  மீது ஊர எம்மேபோல்,* 
நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.  

சோராத எப் பொருட்கும்*  ஆதியாம் சோதிக்கே,* 
ஆராத காதல்*  குருகூர்ச் சடகோபன்,*
ஓராயிரம் சொன்ன*  அவற்றுள் இவை பத்தும்,* 
சோரார் விடார் கண்டீர்*  வைகுந்தம் திண்ணனவே.

திண்ணன் வீடு*  முதல் முழுதும் ஆய்,* 
எண்ணின் மீதியன்*  எம் பெருமான்,*
மண்ணும் விண்ணும் எல்லாம்*  உடன் உண்ட,*  நம் 
கண்ணன் கண் அல்லது*  இல்லை ஓர் கண்ணே.

ஏத்த ஏழ் உலகும் கொண்ட*  கோலக் 
கூத்தனைக்,*  குருகூர்ச் சடகோபன் சொல்,*
வாய்த்த ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
ஏத்த வல்லவர்க்கு*  இல்லை ஓர் ஊனமே.   

குழாம் கொள் பேர் அரக்கன்*  குலம் வீய முனிந்தவனை,* 
குழாம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த,*
குழாம் கொள் ஆயிரத்துள்*  இவை பத்தும் உடன் பாடி,* 
குழாங்களாய் அடியீர் உடன்*  கூடிநின்று ஆடுமினே. 

ஆடி ஆடி*  அகம் கரைந்து,*  இசை 
பாடிப் பாடிக்*  கண்ணீர் மல்கி,*  எங்கும்
நாடி நாடி*  நரசிங்கா என்று,* 
வாடி வாடும்*  இவ் வாள் நுதலே.   

வாட்டம் இல் புகழ்*  வாமனனை*  இசை 
கூட்டி*  வண் சடகோபன் சொல்,*  அமை 
பாட்டு*  ஓர் ஆயிரத்து இப் பத்தால்,*  அடி 
சூட்டலாகும்*  அம் தாமமே.      

அம் தாமத்து அன்பு செய்து*  என் ஆவி சேர் அம்மானுக்கு,* 
அம் தாமம் வாழ் முடி சங்கு*  ஆழி நூல் ஆரம் உள,*
செந்தாமரைத்தடம் கண்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
செந்தாமரை அடிகள்*  செம்பொன் திரு உடம்பே.

கூறுதல் ஒன்று ஆராக்*  குடக் கூத்த அம்மானைக்,* 
கூறுதலே மேவிக்*  குருகூர்ச் சடகோபன்,*
கூறின அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
கூறுதல் வல்லார் உளரேல்*  கூடுவர் வைகுந்தமே.     

வைகுந்தா மணிவண்ணனே*  என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,* 
வைகும் வைகல் தோறும்*  அமுது ஆய வான் ஏறே,
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து*  அசுரர்க்குத் தீமைகள்- 
செய் குந்தா*  உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..     

கண்ணித் தண் அம் துழாய் முடிக்*  கமலத் தடம் பெருங் கண்ணனைப்,*  புகழ் 
நண்ணி தென் குருகூர்ச்*  சடகோபன் மாறன் சொன்ன,* 
எண்ணில் சோர்வு இல் அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,* 
பண்ணில் பாட வல்லார்*  அவர் கேசவன் தமரே. 

கேசவன் தமர்*  கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
மா சதிர் இது பெற்று*  நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்*  விண்ணோர் 
நாயகன்,*  எம் பிரான் எம்மான்*  நாராயணனாலே.

பற்பநாபன் உயர்வு அற உயரும்*  பெரும் திறலோன்,* 
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு*  எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்,*  என் அமுதம் கார் முகில் போலும்*  வேங்கட நல் 
வெற்பன்,*  விசும்போர் பிரான்*  எந்தை தாமோதரனே.     

வண்ண மா மணிச் சோதியை*  அமரர் தலைமகனை,* 
கண்ணனை நெடுமாலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*
பண்ணிய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,* 
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு*  அண்ணல் தாள் அணைவிக்குமே. 

அணைவது அரவு அணைமேல்*  பூம்பாவை ஆகம் 
புணர்வது,*  இருவர் அவர் முதலும் தானே,*
இணைவன்*  ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,* 
புணைவன்*  பிறவிக்கடல் நீந்துவார்க்கே.

எங்கும் உளன் கண்ணன் என்ற*  மகனைக் காய்ந்து,* 
இங்கு இல்லையால் என்று*  இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே*  அவன் வீயத் தோன்றிய,*  என் 
சிங்கப் பிரான் பெருமை*  ஆராயும் சீர்மைத்தே? 

கண் தலங்கள் செய்ய*  கரு மேனி அம்மானை,* 
வண்டு அலம்பும் சோலை*  வழுதி வள நாடன்,*
பண் தலையில் சொன்ன தமிழ்*  ஆயிரத்து இப் பத்தும் வலார்,* 
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்*  எம் மா வீடே.     

எம்மாவீட்டுத்*  திறமும் செப்பம்,*  நின் 
செம்மா பாடபற்புத்*  தலைசேர்த்து ஒல்லை,-
கைம்மா துன்பம்*  கடிந்த பிரானே,* 
அம்மா அடியேன்*  வேண்டுவது ஈதே.     

விடல் இல் சக்கரத்து*  அண்ணலை மேவல்* 
விடல் இல் வண் குருகூர்ச்*  சடகோபன்,*
கெடல் இல் ஆயிரத்துள்*  இவை பத்தும்,* 
கெடல் இல் வீடு செய்யும்*  கிளர்வார்க்கே.

பொருள் என்று இவ் உலகம்*  படைத்தவன் புகழ்மேல்,* 
மருள் இல் வண் குருகூர்*  வண் சடகோபன்,*
தெருள் கொள்ளச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்து,* 
அருளுடையவன் தாள்*  அணைவிக்கும் முடித்தே.

முடிச்சோதியாய்*  உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,* 
அடிச்சோதி நீநின்ற*  தாமரையாய் அலர்ந்ததுவோ,*
படிச்சோதி ஆடையொடும்*  பல் கலனாய்,*  நின்பைம்பொன் 
கடிச்சோதி கலந்ததுவோ?*  திருமாலே! கட்டுரையே. (2)   

வியப்பாய வியப்புஇல்லா*  மெய்ஞ் ஞான வேதியனைச்,* 
சயப்புகழார் பலர் வாழும்*  தடம் குருகூர்ச் சடகோபன்,*
துயக்கு இன்றித் தொழுது உரைத்த*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்*  ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)

முந்நீர் ஞாலம் படைத்த*  எம் முகில் வண்ணனே,* 
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*
வெம் நாள் நோய் வீய*  வினைகளை வேர் அறப் பாய்ந்து,* 
எந் நாள் யான் உன்னை*  இனி வந்து கூடுவனே? (2)

உயிர்கள் எல்லா*  உலகமும் உடையவனைக்,* 
குயில் கொள் சோலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசை மாலை*  ஆயிரத்துள் இப் பத்தும்,* 
உயிரின்மேல் ஆக்கை*  ஊனிடை ஒழிவிக்குமே. (2)      

ஒழிவு இல் காலம் எல்லாம்*  உடனாய் மன்னி,* 
வழு இலா*  அடிமை செய்யவேண்டும் நாம்,*
தெழி குரல் அருவித்*  திருவேங்கடத்து,* 
எழில் கொள் சோதி*  எந்தை தந்தை தந்தைக்கே. (2)

குன்றம் ஏந்திக்*  குளிர் மழை காத்தவன்,* 
அன்று ஞாலம்*  அளந்த பிரான்,*  பரன்
சென்று சேர்*  திருவேங்கட மா மலை,* 
ஒன்றுமே தொழ*  நம் வினை ஓயுமே. (2)

தாள் பரப்பி*  மண் தாவிய ஈசனை,* 
நீள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொல்,*
கேழ் இல் ஆயிரத்து*  இப் பத்தும் வல்லவர்* 
வாழ்வர் வாழ்வு எய்தி*  ஞாலம் புகழவே. (2)   

புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,* 
திகழும் தண் பரவை என்கோ!*  தீ என்கோ! வாயு என்கோ,*
நிகழும் ஆகாசம் என்கோ!*  நீள் சுடர் இரண்டும் என்கோ,* 
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ*  கண்ணனைக் கூவும் ஆறே! 

கூடி வண்டு அறையும் தண் தார்க்*  கொண்டல் போல் வண்ணன் தன்னை* 
மாடு அலர் பொழில்*  குருகூர் வண் சடகோபன் சொன்ன,* 
பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்தும் வல்லார்,* 
வீடு இல போகம் எய்தி*  விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)   

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை*  முதலைச் சிறைப்பட்டு நின்ற,* 
கைம்மாவுக்கு அருள் செய்த*  கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,* 
எம்மானைச் சொல்லிப் பாடி*  எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,* 
தம்மாம் கருமம் என் சொல்லீர்*  தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)

தீர்ந்த அடியவர் தம்மைத்*  திருத்திப் பணிகொள்ளவல்ல,* 
ஆர்ந்த புகழ் அச்சுதனை*  அமரர் பிரானை எம்மானை,*
வாய்ந்த வளவயல்சூழ்*  தண் வளங் குருகூர்ச்சடகோபன்,* 
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து*  அருவினை நீறு செய்யுமே. (2)

செய்ய தாமரைக் கண்ணன் ஆய்*  உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,* 
வையம் வானம் மனிசர் தெய்வம்*  மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்*  வெளிப் பட்டு இவை படைத்தான்*  பின்னும் 
மொய்கொள் சோதியோடு ஆயினான்*  ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)

கண்கள் காண்டற்கு அரியன் ஆய்*  கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,* 
மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்*  வானவர் ஈசனை,* 
பண்கொள் சோலை வழுதி நாடன்*  குருகைக்கோன் சடகோபன் சொல்,* 
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)    

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை*  பங்கயக் கண்ணனை,* 
பயில இனிய*  நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,* 
பயிலும் திரு உடையார்*  எவரேலும் அவர் கண்டீர்,* 
பயிலும் பிறப்பிடை தோறு*  எம்மை ஆளும் பரமரே. (2)

அடி ஓங்கு நூற்றுவர் வீய*  அன்று ஐவர்க்கு அருள்செய்த- 
நெடியோனைத்,*  தென் குருகூர்ச் சடகோபன்*  குற்றேவல்கள்,* 
அடி ஆர்ந்த ஆயிரத்துள்*  இவை பத்து அவன் தொண்டர்மேல் 
முடிவு,*  ஆரக் கற்கிற்கில்*  சன்மம் செய்யாமை முடியுமே. (2) 

முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்*  சீர் 
அடியானே,*  ஆழ் கடலைக் கடைந்தாய்!*  புள் ஊர் 
கொடியானே,*  கொண்டல் வண்ணா!*  அண்டத்து உம்பரில் 
நெடியானே!,*  என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)

சொன்னால் விரோதம் இது*  ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,* 
என் நாவில் இன்கவி*  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*
தென்னா தெனா என்று*  வண்டு முரல் திருவேங்கடத்து,* 
என் ஆனை என் அப்பன்*  எம் பெருமான் உளனாகவே. 

ஏற்கும் பெரும்புகழ்*  வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,* 
ஏற்கும் பெரும்புகழ்*  வண் குருகூர்ச் சடகோபன் சொல்,* 
ஏற்கும் பெரும்புகழ்  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,* 
ஏற்கும் பெரும்புகழ்*  சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு*  சங்கொடு சக்கரம்வில்,* 
ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்*  தண்டு கொண்டு புள் ஊர்ந்து,*  உலகில் 
வன்மை உடைய அரக்கர்*  அசுரரை மாளப் படைபொருத,* 
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற*  நான் ஓர் குறைவு இலனே. (2)

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,*  அவன் 
நாடும் நகரமும் நன்குடன் காண*  நலனிடை ஊர்தி பண்ணி,* 
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்*  ஒரு நாயகமே. (2)

ஒரு நாயகமாய்*  ஓட உலகு உடன் ஆண்டவர்,* 
கரு நாய் கவர்ந்த காலர்*  சிதைகிய பானையர்,*
பெரு நாடு காண*  இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,* 
திருநாரணன் தாள்*  காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.

அஃதே உய்யப் புகும் ஆறு என்று*  கண்ணன் கழல்கள் மேல்,* 
கொய் பூம் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,* 
செய் கோலத்து ஆயிரம்*  சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,* 
அஃகாமல் கற்பவர்*  ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.      

பாலன் ஆய்*  ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,* 
ஆல் இலை*  அன்னவசம் செய்யும் அண்ணலார்,* 
தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
மாலுமால்,*  வல்வினையேன்*  மட வல்லியே. (2)  

மெலியும் நோய் தீர்க்கும்*  நம் கண்ணன் கழல்கள்மேல்,* 
மலி புகழ் வண் குருகூர்ச்*  சடகோபன் சொல்,*
ஒலி புகழ் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்* 
மலி புகழ் வானவர்க்கு ஆவர்*  நல் கோவையே. (2)    

கோவை வாயாள் பொருட்டு*  ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,*  மதிள் இலங்கைக் 
கோவை வீயச் சிலை குனித்தாய்!*  குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,* 
பூவை வீயா நீர் தூவிப்*  போதால் வணங்கேனேலும்,*  நின் 
பூவை வீயாம் மேனிக்குப்*  பூசும் சாந்து என் நெஞ்சமே. 

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி*  கண்ணன் ஒண் கழல்கள் மேல்* 
செய்ய தாமரைப் பழனத்*  தென்னன் குருகூர்ச் சடகோபன்,*
பொய் இல் பாடல் ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்,* 
வையம் மன்னி வீற்றிருந்து*  விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)

மண்ணை இருந்து துழாவி*  'வாமனன் மண் இது' என்னும்,* 
விண்ணைத் தொழுது அவன் மேவு*  வைகுந்தம் என்று கை காட்டும்,* 
கண்ணை உள்நீர் மல்க நின்று*  'கடல்வண்ணன்' என்னும் அன்னே!*  என் 
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு*  என் செய்கேன் பெய் வளையீரே? (2)      

வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,* 
சொல் வினையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இவை பத்தும்,*
நல் வினை என்று கற்பார்கள்*  நலனிடை வைகுந்தம் நண்ணி,*
தொல்வினை தர எல்லாரும்*  தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)

வீற்றிருந்து ஏழ் உலகும்*  தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,* 
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை*  வெம் மா பிளந்தான் தன்னை,* 
போற்றி என்றே கைகள் ஆரத்*  தொழுது சொல் மாலைகள்,* 
ஏற்ற நோற்றேற்கு*  இனி என்ன குறை எழுமையுமே?   (2)

மாரி மாறாத தண் அம் மலை*  வேங்கடத்து அண்ணலை,* 
வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்*  குருகூர் நகர்க்,* 
காரி மாறன் சடகோபன்*  சொல் ஆயிரத்து இப் பத்தால்,* 
வேரி மாறாத பூமேல் இருப்பாள்*  வினை தீர்க்குமே.

தீர்ப்பாரை யாம் இனி*  எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்*  உற்ற நல் நோய் இது தேறினோம்,* 
போர்ப்பாகு தான் செய்து*  அன்று ஐவரை வெல்வித்த,*  மாயப்போர்த் 
தேர்ப்பாகனார்க்கு*  இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?

தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு*  ஆட்செய்து நோய் தீர்ந்த* 
வழுவாத தொல்புகழ்  வண் குருகூர்ச் சடகோபன்,*  சொல்
வழுவாத ஆயிரத்துள்*  இவை பத்து வெறிகளும்,* 
தொழுது ஆடிப் பாடவல்லார்*  துக்க சீலம் இலர்களே.    

சீலம் இல்லாச் சிறியனேலும்*  செய்வினையோ பெரிதால்,* 
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி*  'நாராயணா! என்று என்று,*
காலந்தோறும் யான் இருந்து*  கைதலைபூசல் இட்டால்* 
கோல மேனி காண வாராய்*  கூவியும் கொள்ளாயே.

தழுவிநின்ற காதல் தன்னால்*  தாமரைக் கண்ணன் தன்னை,* 
குழுவு மாடத் தென் குருகூர்*  மாறன் சடகோபன்,*  சொல் 
வழுவு இலாத ஒண் தமிழ்கள்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
தழுவப் பாடி ஆட வல்லார்*  வைகுந்தம் ஏறுவரே.

ஏறு ஆளும் இறையோனும்*  திசைமுகனும் திருமகளும்,* 
கூறு ஆளும் தனி உடம்பன்*  குலம் குலமா அசுரர்களை,* 
நீறு ஆகும்படியாக*  நிருமித்து படை தொட்ட,* 
மாறாளன் கவராத*  மணி மாமை குறைவு இலமே. (2)

உயிரினால் குறைவு இல்லா*  உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,* 
தயிர் வெண்ணெய் உண்டானைத்,*  தடம் குருகூர்ச் சடகோபன்,* 
செயிர் இல் சொல் இசைமாலை*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2) 

நண்ணாதார் முறுவலிப்ப*  நல் உற்றார் கரைந்து ஏங்க,* 
எண் ஆராத் துயர் விளைக்கும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 
கண்ணாளா! கடல் கடைந்தாய்!*  உன கழற்கே வரும் பரிசு,* 
தண்ணாவாது அடியேனைப்*  பணி கண்டாய் சாமாறே. (2)        

திருவடியை நாரணனை*  கேசவனை பரஞ்சுடரை,* 
திருவடி சேர்வது கருதி*  செழுங் குருகூர்ச் சடகோபன்,* 
திருவடிமேல் உரைத்த தமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
திருவடியே அடைவிக்கும்*  திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)      

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்*  யாதும் இல்லா 
அன்று,*  நான்முகன் தன்னொடு*  தேவர் உலகோடு உயிர் படைத்தான்,* 
குன்றம்போல் மணிமாடம் நீடு*   திருக்குருகூர் அதனுள்,* 
நின்ற ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)

இலிங்கத்து இட்ட புராணத்தீரும்*  சமணரும் சாக்கியரும்* 
வலிந்து வாது செய்வீர்களும்*  மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்* 
மலிந்து செந்நெல் கவரி வீசும்*  திருக்குருகூர் அதனுள்,* 
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்*  ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)     

ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்*  வண் குருகூர்நகரான்*
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்*  மாறன் சடகோபன்,* 
வேட்கையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,* 
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்*  மற்றது கையதுவே. (2)  

கை ஆர் சக்கரத்து*  என் கருமாணிக்கமே! என்று என்று,* 
பொய்யே கைம்மைசொல்லி*  புறமே புறமே ஆடி.* 
மெய்யே பெற்றொழிந்தேன்,*  விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
ஐயோ கண்ணபிரான்!*  அறையோ இனிப்போனாலே. (2)

கார்வண்ணன் கண்ண பிரான்*  கமலத்தடங்கண்ணன் தன்னை,* 
ஏர்வள ஒண்கழனிக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்* 
ஆர்வண்ணத்தால் உரைப்பார்*  அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.

பொலிக பொலிக பொலிக!*  போயிற்று வல் உயிர்ச் சாபம்* 
நலியும் நரகமும் நைந்த*  நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*
கலியும் கெடும் கண்டுகொண்மின்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
மலியப் புகுந்து இசைபாடி*  ஆடி உழிதரக் கண்டோம்*. (2) 

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே*  தன்அடியார்க்கு அருள்செய்யும்* 
மலியும் சுடர் ஒளி மூர்த்தி*  மாயப் பிரான் கண்ணன் தன்னை*
கலிவயல் தென் நன் குருகூர்க்*  காரிமாறன் சடகோபன்* 
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து*  உள்ளத்தை மாசு அறுக்குமே*.        

மாசு அறு சோதி*  என் செய்ய வாய் மணிக்குன்றத்தை* 
ஆசு அறு சீலனை*  ஆதி மூர்த்தியை நாடியே* 
பாசறவு எய்தி*  அறிவு இழந்து எனை நாளையம்?* 
ஏசு அறும் ஊரவர் கவ்வை*  தோழீ என் செய்யுமே?*     

இரைக்கும் கருங் கடல் வண்ணன்*  கண்ண பிரான் தன்னை* 
விரைக் கொள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
நிரைக் கொள் அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
உரைக்க வல்லார்க்கு*  வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்*  (2)

ஊர் எல்லாம் துஞ்சி*  உலகு எல்லாம் நள் இருள் ஆய்* 
நீர் எல்லாம் தேறி*  ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்* 
பார் எல்லாம் உண்ட*  நம் பாம்பு அணையான் வாரானால்* 
ஆர் எல்லே! வல்வினையேன்*  ஆவி காப்பார் இனியே?* (2)   

உறங்குவான் போல்*  யோகுசெய்த பெருமானை* 
சிறந்த பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொல்*
நிறம் கிளர்ந்த அந்தாதி*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
இறந்து போய் வைகுந்தம்*  சேராவாறு எங்ஙனேயோ?*    

எங்ஙனேயோ அன்னைமீர்காள்!*  என்னை முனிவது நீர்?* 
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 
சங்கினோடும் நேமியோடும்*  தாமரைக் கண்களோடும்* 
செங்கனி வாய் ஒன்றினோடும்*  செல்கின்றது என்நெஞ்சமே*. (2)     

அறிவு அரிய பிரானை*  ஆழியங்கையனையே அலற்றி* 
நறிய நன் மலர் நாடி*  நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருக்குறுங்குடி அதன்மேல்* 
அறியக் கற்று வல்லார் வைட்டவர்*  ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)     

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்* 
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்*  குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை* 
வாய்ந்த வழுதி வள நாடன்*  மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து* 
ஆய்ந்த தமிழ் மாலை*  ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்*  உலகில்- 
ஏந்து பெரும் செல்வத்தராய்த்*  திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்*  ஆகிலும் இனி உன்னை விட்டு* 
ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்*  அரவின் அணை அம்மானே* 
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்*  சிரீவரமங்கல நகர்* 
வீற்றிருந்த எந்தாய்!*  உனக்கு மிகை அல்லேன் அங்கே*.    

ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!*  என்றும் என்னை ஆளுடை* 
வான நாயகனே!*  மணி மாணிக்கச்சுடரே*
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்*  கைதொழ உறை* 
வானமாமலையே!*  அடியேன் தொழ வந்தருளே*. (2)    

தெய்வ நாயகன் நாரணன்*  திரிவிக்கிரமன் அடி இணைமிசை* 
கொய் கொள் பூம் பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன்*
செய்த ஆயிரத்துள் இவை*  தண் சிரீவரமங்கை மேய பத்துடன்* 
வைகல் பாட வல்லார்*  வானோர்க்கு ஆரா அமுதே*. (2)   

ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே* 
நீராய் அலைந்து கரைய*  உருக்குகின்ற நெடுமாலே* 
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை* 
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!* (2)  

வாரா அருவாய் வரும் என் மாயா!*  மாயா மூர்த்தியாய்* 
ஆரா அமுதாய் அடியேன் ஆவி*  அகமே தித்திப்பாய்* 
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!*  திருக்குடந்தை- 
ஊராய்!*  உனக்கு ஆள் பட்டும்*  அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு*  அவளை உயிர் உண்டான்* 
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட*  குருகூர்ச் சடகோபன்* 
குழலின் மலியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
மழலை தீர வல்லார்*  காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)

மான் ஏய் நோக்கு நல்லீர்!*  வைகலும் வினையேன் மெலிய* 
வான் ஆர் வண் கமுகும்*  மது மல்லிகை கமழும்*
தேன் ஆர் சோலைகள் சூழ்*  திருவல்லவாழ் உறையும்- 
கோனாரை*  அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)   

நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்* 
சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த* 
நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்* 
சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*    

பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும்*  பெரிய பாரதம் கைசெய்து*  ஐவர்க்குத்-
திறங்கள் காட்டியிட்டுச்*  செய்து போன மாயங்களும்* 
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை*  நின்று நின்று உருக்கி உண்கின்ற*  இச்- 
சிறந்தவான் சுடரே!*  உன்னை என்றுகொல் சேர்வதுவே!* (2)

நாகு அணைமிசை நம் பிரான்*  சரணே சரண் நமக்கு என்று*  நாள்தொறும்- 
ஏக சிந்தையனாய்க்*  குருகூர்ச் சடகோபன் மாறன்* 
ஆக நூற்ற அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்* 
மாக வைகுந்தத்து*  மகிழ்வு எய்துவர் வைகலுமே*.

வைகல் பூங் கழிவாய்*  வந்து மேயும் குருகினங்காள்* 
செய் கொள் செந்நெல் உயர்*  திருவண்வண்டூர் உறையும்* 
கை கொள் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
கைகள் கூப்பி சொல்லீர்*  வினையாட்டியேன் காதன்மையே*. (2)   

மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்*  முன்பு நான் அது அஞ்சுவன்* 
மன்உடை இலங்கை*  அரண் காய்ந்த மாயவனே* 
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்*  இனி அதுகொண்டு செய்வது என்? 
என்னுடைய பந்தும் கழலும்*  தந்து போகு நம்பீ!*. (2) 

ஆய்ச்சி ஆகிய அன்னையால்*  அன்று வெண்ணெய் வார்த்தையுள்*  சீற்ற முண்டு அழு- 
கூத்த அப்பன் தன்னை*  குருகூர்ச் சடகோபன்* 
ஏத்திய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்* 
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு*  இல்லை நல்குரவே*. (2)  

நல்குரவும் செல்வும்*  நரகும் சுவர்க்கமும் ஆய்* 
வெல்பகையும் நட்பும்*  விடமும் அமுதமும் ஆய்* 
பல்வகையும் பரந்த*  பெருமான் என்னை ஆள்வானை* 
செல்வம் மல்குகுடித்*  திருவிண்ணகர்க் கண்டேனே*. (2) 

நகரமும் நாடுகளும்*  ஞானமும் மூடமும் ஆய்* 
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய்*  நிலன் ஆய் விசும்பு ஆய்* 
சிகர மாடங்கள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை*  யாவர்க்கும் புண்ணியமே*.   

என் அப்பன் எனக்கு ஆய்*  இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்* 
பொன் அப்பன் மணி அப்பன்*  முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*
மின்னப் பொன் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்* 
தன் ஒப்பார் இல் அப்பன்*  தந்தனன் தன தாள் நிழலே*. (2) 

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்*  குன்றம் ஒன்று ஏந்தியதும்* 
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்*  உட்பட மற்றும் பல* 
அரவில் பள்ளிப் பிரான்தன்*  மாய வினைகளையே அலற்றி,* 
இரவும் நன் பகலும் தவிர்கிலன்*  என்ன குறை எனக்கே?        

நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய்*  முழு ஏழ் உலகும்,*  தன் 
வாயகம் புக வைத்து உமிழ்ந்து*  அவை ஆய் அவை அல்லனும் ஆம்,* 
கேசவன் அடி இணைமிசைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
தூய ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆவர் துவள் இன்றியே.         

துவள் இல் மா மணி மாடம் ஓங்கு*  தொலைவில்லிமங்கலம் தொழும் 
இவளை நீர் இனி அன்னைமீர்!*  உமக்கு ஆசை இல்லை விடுமினோ,* 
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்*  தாமரைத் தடம் கண் என்றும்,* 
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க*  நின்று நின்று குமுறுமே.      

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்*  தேவ பிரானையே,* 
தந்தை தாய் என்று அடைந்த*  வண் குருகூரவர் சடகோபன்,* 
முந்தை ஆயிரத்துள் இவை*  தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,* 
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்*  அடிமைசெய்வார் திருமாலுக்கே

மாலுக்கு*  வையம் அளந்த மணாளற்கு,* 
நீலக் கருநிற*  மேக நியாயற்கு,* 
கோலச் செந்தாமரைக்*  கண்ணற்கு,*
என் கொங்குஅலர்ஏலக் குழலி*  இழந்தது சங்கே.

கட்டு எழில் சோலை*  நல் வேங்கடவாணனைக்,* 
கட்டு எழில் தென் குருகூர்ச்*  சடகோபன் சொல்,* 
கட்டு எழில் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்,* 
கட்டு எழில் வானவர்*  போகம் உண்பாரே.  

உண்ணும் சோறு பருகும்நீர்*  தின்னும் வெற்றிலையும் எல்லாம் 
கண்ணன்,*  எம்பெருமான் என்று என்றே*  கண்கள் நீர்மல்கி,* 
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,* 
திண்ணம் என் இளமான் புகும் ஊர்*  திருக்கோளூரே.  

ஊரும் நாடும் உலகமும்*  தன்னைப்போல் அவனுடைய* 
பேரும் தார்களுமே பிதற்ற*  கற்பு வான் இடறி,* 
சேரும் நல் வளம்சேர்*  பழனத் திருக்கோளூர்க்கே,* 
போரும் கொல் உரையீர்*  கொடியேன் கொடி பூவைகளே!    

வைத்த மா நிதியாம்*  மதுசூதனையே அலற்றி,* 
கொத்து அலர் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
பத்து நூற்றுள் இப்பத்து*  அவன்சேர் திருக்கோளூர்க்கே,* 
சித்தம் வைத்து உரைப்பார்*  திகழ் பொன் உலகு ஆள்வாரே.    

பொன் உலகு ஆளீரோ?*  புவனி முழுது ஆளீரோ?,* 
நல் நலப் புள்ளினங்காள்!*  வினையாட்டியேன் நான் இரந்தேன்,*
முன் உலகங்கள் எல்லாம் படைத்த*  முகில்வண்ணன் கண்ணன்,* 
என் நலம் கொண்ட பிரான் தனக்கு*  என் நிலைமை உரைத்தே?.

மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு*  மதுசூத பிரான் அடிமேல்,* 
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
தோற்றங்கள் ஆயிரத்துள்*  இவையும் ஒருபத்தும் வல்லார்* 
ஊற்றின்கண் நுண் மணல்போல்*  உருகாநிற்பர் நீராயே.     

நீராய் நிலனாய்*  தீயாய் காலாய் நெடுவானாய்,* 
சீரார் சுடர்கள் இரண்டாய்*  சிவனாய் அயனானாய்,* 
கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி*  கொடியேன்பால் 
வாராய்,*  ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 

தெரிதல் நினைதல்*  எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,* 
உரிய தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன்,* 
தெரியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
உரிய தொண்டர் ஆக்கும்*  உலகம் உண்டாற்கே.       

உலகம் உண்ட பெருவாயா!*  உலப்பு இல் கீர்த்தி அம்மானே,* 
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!*  நெடியாய் அடியேன் ஆர் உயிரே,* 
திலதம் உலகுக்கு ஆய் நின்ற*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.

அகலகில்லேன் இறையும் என்று*  அலர்மேல் மங்கை உறை மார்பா,* 
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!*  என்னை ஆள்வானே,* 
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
புகல் ஒன்று இல்லா அடியேன்*  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.        

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து*  அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்* 
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்*  பழனக் குருகூர்ச் சடகோபன்,* 
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்*  திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,* 
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து*  பெரிய வானுள் நிலாவுவரே.

உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி*  என்னை உன் பாதபங்கயம்,* 
நண்ணிலாவகையே*  நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,* 
எண் இலாப் பெறுமாயனே!  இமையோர்கள் ஏத்தும்*  உலகம் மூன்று உடை,* 
அண்ணலே! அமுதே! அப்பனே!*  என்னை ஆள்வானே! (2)

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்*  குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,*  அப் 
புண்டரீகக் கொப்பூழ்ப்*  புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்
தொண்டர் தொண்டர் தொண்டன்*  சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,* 
கண்டு பாட வல்லார்*  வினை போம் கங்குலும் பகலே. (2)

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்*  கண்ண நீர் கைகளால் இறைக்கும்,* 
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்*  தாமரைக் கண் என்றே தளரும்,* 
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்*  இரு நிலம் கை துழா இருக்கும்,* 
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!*  இவள் திறத்து என் செய்கின்றாயே?  (2)   

என் திருமகள் சேர்மார்வனே! என்னும்*  என்னுடை ஆவியே! என்னும்,* 
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட*  நிலமகள் கேள்வனே! என்னும்,*
அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட*  ஆய்மகள் அன்பனே! என்னும்,* 
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!*  தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.  (2)

முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்*  மூவுலகுஆளியே! என்னும்,* 
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்*  நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்*  வண் திருவரங்கனே! என்னும்,* 
அடிஅடையாதாள் போல்இவள் அணுகி  அடைந்தனள்*  முகில்வண்ணன் அடியே 

முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி  உய்ந்தவன்*  மொய்புனல் பொருநல்,* 
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*  வண்பொழில்சூழ்  வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*  ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,* 
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ  இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே   (2)

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி*  தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,* 
புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்*  என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*
வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த*  வேத ஒலியும் விழா ஒலியும்,* 
பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும்  அறா*  திருப்பேரெயில் சேர்வன் நானே!  (2)

ஊழிதோறுஊழி உருவும் பேரும்  செய்கையும்*  வேறவன் வையம் காக்கும்,* 
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை*  அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்*  இவை திருப்பேரெயில் மேய பத்தும்,* 
ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்*  அவர்அடிமைத் திறத்து ஆழியாரே.  (2)

ஆழிஎழ*  சங்கும் வில்லும்எழ,*  திசை 
வாழிஎழ*  தண்டும் வாளும்எழ,*  அண்டம்
மோழைஎழ*  முடி பாதம்எழ,*  அப்பன் 
ஊழிஎழ*  உலகம் கொண்டவாறே   (2)

குன்றம் எடுத்தபிரான்*  அடியாரொடும்,* 
ஒன்றிநின்ற*  சடகோபன்உரைசெயல்,*
நன்றி புனைந்த*  ஓர்ஆயிரத்துள் இவை* 
வென்றி தரும்பத்தும்*  மேவிக் கற்பார்க்கே (2)

கற்பார் இராம பிரானை அல்லால்*  மற்றும் கற்பரோ?,* 
புல்பா முதலா*  புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*
நல்பால் அயோத்தியில் வாழும்*  சராசரம் முற்றவும்,* 
நல்பாலுக்கு உய்த்தனன்*  நான்முக னார்பெற்ற நாட்டுளே?  (2)

தெளிவுற்று வீவுஇன்றி*  நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,* 
தெளிவுற்ற கண்ணனைத்*  தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*
தெளிவுற்ற ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்,*  அவர் 
தெளிவுற்ற சிந்தையர்*  பாமரு மூவுலகத்துள்ளே   (2)

பாமரு மூவுலகும் படைத்த*  பற்ப நாபாவோ,* 
பாமரு மூவுலகும் அளந்த*  பற்ப பாதாவோ,*
தாமரைக் கண்ணாவோ!*  தனியேன் தனிஆளாவோ,* 
தாமரைக் கையாவோ!*  உன்னை என்றுகொல் சேர்வதுவே?  (2)

புக்க அரிஉருஆய்*  அவுணன்உடல் கீண்டுஉகந்த,* 
சக்கரச் செல்வன்தன்னைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
மிக்க ஓர்ஆயிரத்துள்*  இவைபத்தும் வல்லார் அவரைத்,* 
தொக்கு பல்லாண்டுஇசைத்து*  கவரி செய்வர் ஏழையரே  (2)

ஏழையர் ஆவிஉண்ணும்*  இணைக் கூற்றம்கொலோ அறியேன்,* 
ஆழிஅம் கண்ணபிரான்*  திருக்கண்கள் கொலோ அறியேன்,*
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,* 
தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே?  (2)

கட்கு அரிய பிரமன் சிவன்*  இந்திரன் என்று இவர்க்கும்,* 
கட்கு அரிய கண்ணனைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
உட்கு உடை ஆயிரத்துள்*  இவையும் ஒரு பத்தும் வல்லார்,* 
உட்கு உடை வானவரோடு*  உடனாய் என்றும் மாயாரே. (2)        

மாயா! வாமனனே!*  மதுசூதா நீ அருளாய்,* 
தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்*  விசும்பு ஆய் கால் ஆய்,* 
தாயாய்  தந்தையாய்*  மக்களாய்  மற்றுமாய் முற்றுமாய்,* 
நீயாய்  நீ நின்றவாறு*  இவை என்ன நியாயங்களே! (2) 

ஆம் வண்ணம் இன்னது ஒன்று*  என்று அறிவது அரிய அரியை,* 
ஆம் வண்ணத்தால்*  குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த* 
ஆம் வண்ண ஒண் தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்,* 
ஆம் வண்ணத்தால் உரைப்பார்*  அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)  

என்றைக்கும் என்னை*  உய்யக்கொண்டு போகிய,* 
அன்றைக்கு அன்று என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 
இன் தமிழ் பாடிய ஈசனை*  ஆதியாய்- 
நின்ற என் சோதியை,*  என் சொல்லி நிற்பனோ? (2)         

இங்கும் அங்கும்*  திருமால் அன்றி இன்மை கண்டு,* 
அங்ஙனே வண் குருகூர்ச்*  சடகோபன்,* 
இங்ஙனே சொன்ன*  ஓர் ஆயிரத்து இப்பத்தும்,* 
எங்ஙனே சொல்லினும்*  இன்பம் பயக்குமே. (2)

இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்*  தானும் இவ் ஏழ் உலகை,* 
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து*  ஆள்கின்ற எங்கள் பிரான்,* 
அன்புற்று அமர்ந்து உறைகின்ற*  அணி பொழில் சூழ் திருவாறன்விளை,* 
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து*  கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)      

தீர்த்தனுக்கு அற்றபின்*  மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி*  தீர்த்தனுக்கே 
தீர்த்த மனத்தனன் ஆகி*  செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
தீர்த்தங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்களைத்,*  தேவர் வைகல் 
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்*  தம் தேவியர்க்கே. (2)   

தேவிமார் ஆவார் திருமகள்பூமி*   ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்* 
மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி*  வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்*  பவளவாய் மணியே* 
ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த  அப்பனே!*  காணுமாறு அருளாய்   (2)

பெரிய அப்பனை பிரமன் அப்பனை*   உருத்திரன் அப்பனை*  முனிவர்க்கு 
உரிய அப்பனை அமரர் அப்பனை*   உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*
பெரியவண்குருகூர் வண்சடகோபன்*   பேணின ஆயிரத்துள்ளும்* 
உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்*   உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே  (2)

நங்கள் வரிவளையாய் அங்காளோ*   நம்முடை ஏதலர் முன்பு நாணி* 
நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்*   நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*
சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்*   தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்* 
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்*  வேங்கடவாணனை வேண்டிச்சென்றே.   (2)

வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்*   என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்* 
ஈண்டுஇதுஉரைக்கும்படியை அந்தோ*  காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*
காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்*  விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்* 
ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்*  எத்தனைகாலம் இளைக்கின்றேனே!

காலம் இளைக்கில் அல்லால் வினையேன்  நான் இளைக்கின்றிலன்*  கண்டு கொள்மின்* 
ஞாலம் அறியப் பழிசுமந்தேன்*  நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*
நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த*   நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட* 
கோலவளையொடும் மாமைகொள்வான்*  எத்தனைகாலமும் கூடச்சென்றே? 

கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?*  கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்* 
பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்*   பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*
மாடக்கொடிமதிள் தென்குளந்தை*   வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்* 
ஆடல்பறவை உயர்த்தவெல்போர்*  ஆழிவலவனை ஆதரித்தே.

ஆழிவலவனை ஆதரிப்பும்*  ஆங்குஅவன் நம்மில் வரவும் எல்லாம்* 
தோழியர்காள்! நம்உடையமேதான்?*  சொல்லுவதோ இங்கு அரியதுதான்*
ஊழிதோறுஊழி ஒருவனாக*   நன்குஉணர்வார்க்கும் உணரலாகாச்* 
சூழல்உடைய சுடர்கொள்ஆதித்*  தொல்லைஅம்சோதி நினைக்குங்காலே.  

தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்*  என்  சொல்அளவன்று இமையோர் தமக்கும்* 
எல்லைஇலாதன கூழ்ப்புச்செய்யும்*  அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*
அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்*  ஆர்க்கு இடுகோ இனிப்பூசல்? சொல்லீர்* 
வல்லிவளவயல்சூழ் குடந்தை*  மாமலர்க்கண் வளர்கின்றமாலே.

மாலரிகேசவன் நாரணன்*  சீமாதவன்  கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று* 
ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு*   ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*
ஏலமலர்  குழல் அன்னைமீர்காள்!*  என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?* 
காலம்பலசென்றும் காண்பதுஆணை*  உங்களோடு எங்கள் இடைஇல்லையே.

இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்*  பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்*  ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்*   அஞ்சனவெற்பும் அவைநணிய* 
கடையறப்பாசங்கள் விட்டபின்னை*  அன்றி அவன்அவை காண்கொடானே.  

காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை*  கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்* 
மாண்குறள் கோலவடிவுகாட்டி*  மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*
சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த*  தேவபிராற்கு என் நிறைவினோடு* 
நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்*  என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்

என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!*   யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை* 
நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி*  நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*
பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு*   பால்மதி ஏந்தி ஓர்கோலநீல* 
நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்*   நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே

பாதம் அடைவதன் பாசத்தாலே*   மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு* 
கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்*   வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*
தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்*  இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்* 
ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி*  இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே.      (2)

அங்கும் இங்கும்*  வானவர் தானவர் யாவரும்* 
எங்கும் இனையைஎன்று*  உன்னைஅறியகிலாதுஅலற்றி*
அங்கம்சேரும்*  பூமகள் மண்மகள் ஆய்மகள்* 
சங்குசக்கரக் கையவன் என்பர்*  சரணமே.  (2)

உரையா வெம்நோய்தவிர*  அருள் நீள்முடியானை* 
வரையார்மாடம்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*
உரையேய் சொல்தொடை*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
நிரையே வல்லார்*  நீடு உலகத்துப் பிறவாரே.   (2)

வார்கடா அருவி யானை மாமலையின்*   மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி* 
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து*  அரங்கின்  மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட*  மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த* 
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே  (2)  

தேனைநன்பாலை கன்னலைஅமுதை*  திருந்துஉலகுஉண்ட அம்மானை* 
வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்*  மலர்மிசைப் படைத்தமாயோனை*
கோனை வண்குருகூர் வண்சடகோபன்*  சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்* 
வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்*  பிறவிமாமாயக் கூத்தினையே.   (2)

மாயக்கூத்தா!வாமனா!*  வினையேன்கண்ணா! கண்கைகால்* 
தூயசெய்ய மலர்களா*  சோதிச்செவ்வாய் முகிழதா*
சாயல்சாமத் திருமேனி*  தண்பாசடையா*  தாமரைநீள் 
வாசத்தடம்போல் வருவானே!*  ஒருநாள் காண வாராயே.    

'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை*  யான்?' என்றுஎன்று* 
அங்கே தாழ்ந்த சொற்களால்*  அம்தண் குருகூர்ச் சடகோபன்*
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்* 
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்*  எல்லியும் காலையே.  (2)

எல்லியும் காலையும்*  தன்னை நினைந்துஎழ* 
நல்ல அருள்கள்*  நமக்கேதந்து அருள்செய்வான்*
அல்லிஅம் தண்ணம்துழாய்*  முடிஅப்பன்ஊர்* 
செல்வர்கள் வாழும்*  திருக்கடித் தானமே   (2)

அற்புதன் நாராயணன்*  அரி வாமனன்* 
நிற்பது மேவி*  இருப்பது என்நெஞ்சகம்*
நல்புகழ் வேதியர்*  நான்மறை நின்றுஅதிர்* 
கற்பகச் சோலைத்*  திருக்கடித் தானமே.  (2)

சோலைத் திருக்கடித்தானத்து*  உறைதிரு 
மாலை*  மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*
பாலோடு அமுதுஅன்ன*  ஆயிரத்து இப்பத்தும்* 
மேலை வைகுந்தத்து*  இருத்தும் வியந்தே.  (2)

இருத்தும் வியந்து என்னைத்*  தன் பொன்அடிக்கீழ் என்று* 
அருத்தித்து எனைத்துஓர்*  பலநாள் அழைத்தேற்கு*
பொருத்தம்உடை*  வாமனன்தான் புகுந்து*  என்தன் 
கருத்தைஉற*  வீற்றிருந்தான் கண்டுகொண்டே.       (2)

இருந்தான் கண்டுகொண்டு*  எனதுஏழை நெஞ்சுஆளும்* 
திருந்தாத ஓர்ஐவரைத்*  தேய்ந்துஅறமன்னி*
பெரும்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த பெருமான்* 
தரும்தான் அருள்தான்*  இனியான் அறியேனே.   (2)

சுடர்ப்பாம்பணை நம்பரனை*  திருமாலை* 
அடிச்சேர்வகை*  வண்குருகூர்ச் சடகோபன்*
முடிப்பான் சொன்னஆயிரத்து*  இப்பத்தும் சன்மம் 
விடத்*  தேய்ந்தற நோக்கும்*  தன்கண்கள் சிவந்தே  (2)

கண்கள் சிவந்து பெரியவாய்*  வாயும் சிவந்து கனிந்து*  உள்ளே 
வெண்பல் இலகு சுடர்இலகு*  விலகு மகர குண்டலத்தன்*
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்*  நான்கு தோளன் குனிசார்ங்கன்* 
ஒண் சங்கதை வாள்ஆழியான்*  ஒருவன் அடியேன் உள்ளானே.  (2)

அடியேன்உள்ளான் உடல்உள்ளான்*  அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்* 
படியேஇது என்றுஉரைக்கலாம்  படியன்*  அல்லன் பரம்பரன்*
கடிசேர் நாற்றத்துள்ஆலை*   இன்பத் துன்பக் கழிநேர்மை* 
ஒடியா இன்பப் பெருமையோன்*  உணர்வில்உம்பர் ஒருவனே    

உணர்வில்உம்பர் ஒருவனை*  அவனது அருளால் உறற்பொருட்டு*  என் 
உணர்வின்உள்ளே இருத்தினேன்*  அதுவும் அவனது இன்அருளே*
உணர்வும் உயிரும் உடம்பும்*  மற்று உலப்பிலனவும் பழுதேயாம்* 
உணர்வைப் பெறஊர்ந்துறஏறி*  யானும் தானாய் ஒழிந்தானே.

யானும் தானாய் ஒழிந்தானை*  யாதும் எவர்க்கும் முன்னோனை* 
தானும் சிவனும் பிரமனும்ஆகிப்*  பணைத்த தனிமுதலை*
தேனும் பாலும் கன்னலும்*  அமுதும்ஆகித் தித்தித்து*  என் 
ஊனில் உயிரில் உணர்வினில்*  நின்ற ஒன்றை உணர்ந்தேனே 

தெருளும் மருளும் மாய்த்து*  தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்* 
அருளிஇருத்தும் அம்மானாம்*  அயனாம் சிவனாம்*  திருமாலால்
அருளப்பட்ட சடகோபன்*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்* 
அருளி அடிக்கீழ் இருத்தும்*  நம்அண்ணல் கருமாணிக்கமே   (2)

கருமாணிக்க மலைமேல்*  மணித்தடம் தாமரைக் காடுகள்போல்* 
திருமார்வு வாய்கண்கை*  உந்திகால்உடை  ஆடைகள் செய்யபிரான்*
திருமால் எம்மான் செழுநீர்வயல்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்*  அன்னைமீர்!  இதற்கு என்செய்கேனோ.   (2)

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்*  நாயகன் தன்அடிமை* 
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன் சொல்*
நேர்பட்ட தமிழ்மாலை*  ஆயிரத்துள் இவை பத்தும் 
நேர்பட்டார்*  அவர் நேர்பட்டார்*  நெடுமாற்கு அடிமை செய்யவே.   (2)

நெடுமாற்குஅடிமை செய்வேன்போல்*   அவனைக் கருத வஞ்சித்து* 
தடுமாற்றுஅற்ற தீக்கதிகள்*  முற்றும்  தவிர்ந்த சதிர்நினைந்தால்*
கொடுமாவினையேன் அவன்அடியார்  அடியே*  கூடும் இதுஅல்லால்* 
விடுமாறுஎன்பதுஎன்? அந்தோ!*  வியன் மூவுலகு பெறினுமே?.  (2)

நல்ல கோட்பாட்டு உலகங்கள்*  மூன்றினுள்ளும் தான்நிறைந்த* 
அல்லிக் கமலக் கண்ணனை*  அம்தண் குருகூர்ச் சடகோபன்*
சொல்லப் பட்ட ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்* 
நல்ல பதத்தால் மனைவாழ்வர்*  கொண்ட பெண்டீர் மக்களே.  (2)

கொண்ட பெண்டிர் மக்கள்உற்றார்*  சுற்றத்தவர் பிறரும்* 
கண்டதோடு பட்டதுஅல்லால்*  காதல்மற்றுயாதும்இல்லை*
எண்திசையும் கீழும்மேலும்*  முற்றவும் உண்டபிரான்* 
தொண்டரோமாய் உய்யலல்லால்*  இல்லைகண்டீர் துணையே  (2)

ஆதும்இல்லை மற்றுஅவனில்*  என்றுஅதுவே துணிந்து* 
தாதுசேர்தோள் கண்ணனைக்*  குருகூர்ச்சடகோபன்சொன்ன*
தீதுஇலாத ஒண்தமிழ்கள்*  இவைஆயிரத்துள் இப்பத்தும்* 
ஓதவல்லபிராக்கள்*  நம்மை ஆளுடையார்கள் பண்டே.   (2)

பண்டைநாளாலே நின்திருஅருளும்*  பங்கயத்தாள் திருஅருளும்
கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்*  குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்* 
தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து*  உன்தாமரைக்கண்களால் நோக்காய்* 
தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த*  திருப்புளிங்குடிக் கிடந்தானே!  (2)  

'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று*  குரைகடல் கடைந்தவன் தன்னை* 
மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்*  வழுதிநாடன் சடகோபன்*
நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்*  இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்* 
ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்*  அடிஇணை உள்ளத்துஓர்வாரே  (2)

ஓராயிரமாய்*  உலகுஏழ்அளிக்கும்* 
பேராயிரம்கொண்டதுஓர்*  பீடுஉடையன்*
காராயின*  காளநல்மேனியினன்* 
நாரயணன்*  நங்கள்பிரான்அவனே.   (2)

ஆகம்சேர்*  நரசிங்கம்அதுஆகி ஓர்* 
ஆகம்வள்உகிரால்*  பிளந்தான்உறை*
மாகவைகுந்தம்*  காண்பதற்கு என்மனம்* 
ஏகம்எண்ணும்*  இராப்பகல்இன்றியே   (2)  

சீலம்எல்லைஇலான்*  அடிமேல்*  அணி 
கோலம்நீள்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்
மாலைஆயிரத்துள்*  இவை பத்தினின் 
பாலர்*  வைகுந்தம்ஏறுதல் பான்மையே  (2)

மையார்கருங்கண்ணி*  கமல மலர்மேல்* 
செய்யாள் திருமார்வினில்சேர்*  திருமாலே*
வெய்யார்சுடர்ஆழி*  சுரிசங்கம்ஏந்தும்*  
கையா உன்னைக்காணக்*  கருதும் என்கண்ணே.    (2)

ஆறாமதயானை*  அடர்த்தவன்தன்னை* 
சேறுஆர்வயல்*  தென்குருகூர்ச் சடகோபன்*
நூறேசொன்ன*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
ஏறேதரும்*  வானவர்தம் இன்உயிர்க்கே   (2)

இன்னுயிர்சேவலும் நீரும் கூவிக்கொண்டு*  இங்கு எத்தனை* 
என்னுயிர் நோவ மிழற்றேல்மின்*  குயில் பேடைகாள்*
என்னுயிர்க் கண்ணபிரானை*  நீர் வரக்கூவுகிலீர்* 
என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்*  இத்தனை வேண்டுமோ?   (2)

இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த*  பல்ஊழிக்குத்* 
தன்புகழ்ஏத்தத்*  தனக்குஅருள் செய்தமாயனைத்*
தென்குருகூர்ச் சடகோபன்*  சொல்ஆயிரத்துள் இவை* 
ஒன்பதோடு ஒன்றுக்கும்*  மூவுலகும் உருகுமே   (2)   

உருகுமால் நெஞ்சம்*  உயிரின் பரமன்றி* 
பெருகுமால் வேட்கையும்*  என்செய்கேன் தொண்டனேன்*
தெருவுஎல்லாம் காவிகமழ்*  திருக்காட்கரை*  
மருவிய மாயன்தன்*  மாயம் நினைதொறே.   (2)

கடியனாய்க் கஞ்சனைக்*  கொன்றபிரான் தன்னை* 
கொடிமதிள் தென்குருகூர்ச்*  சடகோபன்சொல்*
வடிவுஅமைஆயிரத்து*  இப்பத்தினால் சன்மம்- 
முடிவுஎய்தி*  நாசம்கண்டீர்கள் எம்கானலே   (2)

எம்கானல் அகம்கழிவாய்*  இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்* 
செங்கால மடநாராய்!*  திருமூழிக்களத்து உறையும்*
கொங்குஆர் பூந்துழாய்முடி*  எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்* 
நும்கால்கள் என்தலைமேல்*  கெழுமீரோ நுமரோடே.  (2)

ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்*  ஒண்சுடரை* 
ஒழிவுஇல்லா அணிமழலைக்*  கிளிமொழியாள் அலற்றியசொல்* 
வழுஇல்லா வண்குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்துஉரைத்த*  
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்*  நோய் அறுக்குமே   (2) 

அறுக்கும் வினையாயின*  ஆகத்து அவனை* 
நிறுத்தும் மனத்துஒன்றிய*  சிந்தையினார்க்கு*
வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
குறுக்கும்வகை உண்டுகொலோ*  கொடியேற்கே?  (2)

கொடிஏர்இடைக்*  கோகனகத்தவள் கேள்வன்* 
வடிவேல் தடம்கண்*  மடப்பின்னை மணாளன்*
நெடியான்உறை சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
அடியேன் அணுகப்பெறும்நாள்*  எவைகொலோ!

வண்ணம் மணிமாட*  நல்நாவாய் உள்ளானைத்*  
திண்ணம் மதிள்*  தென்குருகூர்ச் சடகோபன்* 
பண்ணார் தமிழ்*  ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*  
மண்ணாண்டு*  மணம்கமழ்வர் மல்லிகையே.   (2)

மல்லிகைகமழ் தென்றல் ஈரும்ஆலோ!*  வண்குறிஞ்சி இசைதவரும்ஆலோ* 
செல்கதிர் மாலையும் மயக்கும்ஆலோ!*   செக்கர்நல் மேகங்கள் சிதைக்கும்ஆலோ*
அல்லிஅம் தாமரைக் கண்ணன் எம்மான்*  ஆயர்கள்ஏறு அரிஏறு எம்மாயோன்* 
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு*  புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!   (2)

புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!  புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ* 
பகலடுமாலைவண் சாந்தமாலோ!*  பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*
அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து-  அளந்து*  எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்* 
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்*  இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?

இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்*  இணைமுலை நமுக நுண்இடை நுடங்க* 
துனிஇரும்கலவி செய்து ஆகம்தோய்ந்து*   துறந்துஎம்மை இட்டுஅகல் கண்ணன்கள்வன்*  
தனிஇளம்சிங்கம் எம்மாயன்வாரான்*   தாமரைக் ண்ணும் செவ்வாயும் நீலப்* 
பனிஇரும்குழல்களும் நான்கு தோளும்*  பாவியேன் மனத்தே நின்றுஈரும்ஆலோ!  

அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா*  அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்* 
அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி*  அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*
அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த*   ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு* 
அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்!   அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே!    (2)

மாலைநண்ணித்*  தொழுதுஎழுமினோ வினைகெட* 
காலைமாலை*  கமலமலர் இட்டு நீர்*
வேலைமோதும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து* 
ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்*  அடிஇணைகளே.   (2)

பாடுசாரா*  வினைபற்றுஅற வேண்டுவீர்* 
மாடம்நீடு*  குருகூர்ச்சடகோபன்*  சொல்
பாடலானதமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
பாடிஆடிப்*  பணிமின் அவன் தாள்களே   (2)

தாள தாமரைத்*  தடம்அணி வயல் திருமோகூர்* 
நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று*  அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குஉடைச்*  சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்* 
காள மேகத்தை அன்றி*  மற்றொன்றுஇலம் கதியே.  (2)

ஏத்துமின் நமர்காள்*  என்றுதான் குடம்ஆடு- 
கூத்தனைக்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*
வாய்த்த ஆயிரத்துள் இவை*  வண் திருமோகூர்க்கு* 
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு*  இடர் கெடுமே.   (2)

கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 
கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 
தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே     (2)

அந்தம்இல் புகழ்*  அனந்தபுர நகர் ஆதிதன்னைக்* 
கொந்துஅலர் பொழில்*  குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*
ஐந்தினோடு ஐந்தும்வல்லார்*  அணைவர்போய் அமர்உலகில்* 
பைந்தொடி மடந்தையர்தம்*  வேய்மரு தோள்இணையே.   (2)

வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!*   மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்* 
காமரு குயில்களும் கூவும் ஆலோ!*  கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*
ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு*  ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ* 
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!*   தகவிலை தகவிலையே நீ கண்ணா!    (2)

செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவு*  அத்திருவடி திருவடிமேல்*  பொருநல்- 
சங்குஅணி துறைவன் வண்தென் குருகூர்*  வண்சட கோபன் சொல் ஆயிரத்துள்*
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை*  அவனொடும் பிரிவதற்கு இரங்கி*  தையல்- 
அங்குஅவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான்-  உரைத்தன*  இவையும் பத்து அவற்றின் சார்வே.   (2)

சார்வே தவநெறிக்குத்*  தாமோதரன் தாள்கள்* 
கார்மேக வண்ணன்*  கமல நயனத்தன்*
நீர்வானம் மண்எரி கால்ஆய்*  நின்ற நேமியான்* 
பேர் வானவர்கள்*  பிதற்றும் பெருமையனே.   (2)

பற்றுஎன்று பற்றி*  பரம பரம்பரனை* 
மல் திண்தோள் மாலை*  வழுதி வளநாடன்*
சொல் தொடைஅந்தாதி*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
கற்றார்க்கு ஓர்பற்றாகும்*  கண்ணன் கழல்இணையே.   (2)

கண்ணன் கழல்இணை*  நண்ணும் மனம்உடையீர்*
எண்ணும் திருநாமம்*  திண்ணம் நாரணமே.  (2)

மேயான் வேங்கடம்*  காயாமலர் வண்ணன்*
பேயார் முலைஉண்ட*  வாயான் மாதவனே.   (2)

மாதவன் என்றுஎன்று*  ஓத வல்லீரேல்*
தீதுஒன்றும் அடையா*  ஏதம் சாராவே.

சாரா ஏதங்கள்*  நீரார் முகில்வண்ணன்*
பேர் ஆர் ஓதுவார்*  ஆரார் அமரரே.

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்துஇப்பத்து  அடியார்க்கு அருள்பேறே  (2) 

அருள்பெறுவார் அடியார் தம்*  அடியனேற்கு*  ஆழியான்- 
அருள்தருவான் அமைகின்றான்*  அதுநமது விதிவகையே*
இருள்தருமா ஞாலத்துள்*  இனிப்பிறவி யான்வேண்டேன்* 
மருள்ஒழி நீமடநெஞ்சே!*  வாட்டாற்றான் அடிவணங்கே.   (2)

வாட்டாற்றான் அடிவணங்கி*  மாஞாலப் பிறப்புஅறுப்பான்* 
கேட்டாயே மடநெஞ்சே!*  கேசவன் எம் பெருமானைப்*
பாட்டுஆய பலபாடி*  பழவினைகள் பற்றுஅறுத்து* 
நாட்டாரோடு இயல்வுஒழிந்து*  நாரணனை நண்ணினமே.

நண்ணினம் நாராயணனை*  நாமங்கள் பலசொல்லி* 
மண்உலகில் வளம்மிக்க*  வாட்டாற்றான் வந்துஇன்று*
விண்உலகம் தருவானாய்*  விரைகின்றான் விதிவகையே* 
எண்ணின வாறுகா*  இக்கருமங்கள் என்நெஞ்சே!

காட்டித்தன் கனைகழல்கள்*  கடுநரகம் புகல்ஒழித்த* 
வாட்டாற்று எம்பெருமானை*  வளங்குருகூர்ச் சடகோபன்*
பாட்டாய தமிழ்மாலை*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
கேட்டு ஆரார் வானவர்கள்*  செவிக்குஇனிய செஞ்சொல்லே.   (2)

செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்*  திருமாலிருஞ்சோலை* 
வஞ்சக் கள்வன் மாமாயன்*  மாயக் கவியாய் வந்து*  என்-
நெஞ்சும் உயிரும் உள்கலந்து*  நின்றார் அறியா வண்ணம்*  என்- 
நெஞ்சும் உயிரும் அவைஉண்டு*  தானே ஆகி நிறைந்தானே.   (2) 

திருமாலிருஞ்சோலை மலையே*  திருப்பாற் கடலே என்தலையே* 
திருமால்வைகுந்தமே*  தண் திருவேங்கடமே எனதுஉடலே*
அருமாமாயத்து எனதுஉயிரே*  மனமே வாக்கே கருமமே* 
ஒருமா நொடியும் பிரியான்*  என் ஊழி முதல்வன் ஒருவனே.  (2)

மான்ஆங்காரம் மனம்கெட*  ஐவர் வன்கையர் மங்க* 
தான்ஆங்கார மாய்ப்புக்கு*  தானே தானே ஆனானைத்*
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்*  சடகோபன் சொல்ஆயிரத்துள்* 
மான்ஆங்காரத்துஇவை பத்தும்*  திருமாலிருஞ் சோலைமலைக்கே.  (2)

திருமாலிருஞ்சோலை மலை*  என்றேன் என்ன* 
திருமால்வந்து*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
குருமா மணிஉந்து புனல்*  பொன்னித் தென்பால்* 
திருமால்சென்று சேர்விடம்*  தென் திருப்பேரே.   (2)

உற்றேன் உகந்து பணிசெய்து*  உன்பாதம்- 
பெற்றேன்*  ஈதே இன்னம்*  வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்சூழ்*  திருப்பேராற்கு* 
அற்றார் அடியார் தமக்கு*  அல்லல் நில்லாவே.  (2)

நில்லா அல்லல்*  நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்* 
நல்லார் பலர்வாழ்*  குருகூர்ச் சடகோபன்*
சொல்லார் தமிழ்*  ஆயிரத்துள் இவைபத்தும்- 
வல்லார்*  தொண்டர்ஆள்வது*  சூழ்பொன் விசும்பே.  (2)

சூழ்விசும் பணிமுகில்*  தூரியம் முழக்கின*  
ஆழ்கடல் அலைதிரைக்*  கைஎடுத்து ஆடின*
ஏழ்பொழிலும்*  வளம்ஏந்திய என்அப்பன்* 
வாழ்புகழ் நாரணன்*  தமரைக் கண்டுஉகந்தே.  (2)

நாரணன் தமரைக் கண்டுஉகந்து*  நல்நீர்முகில்* 
பூரண பொன்குடம்*  பூரித்தது உயர்விண்ணில்*
நீரணி கடல்கள்*  நின்றுஆர்த்தன*  நெடுவரைத்- 
தோரணம் நிரைத்து*  எங்கும் தொழுதனர்உலகே.

வந்துஅவர் எதிர்கொள்ள*  மாமணி மண்டபத்து* 
அந்தம்இல் பேரின்பத்து*  அடியரோடு இருந்தமை*
கொந்துஅலர் பொழில்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்- 
சந்தங்கள்ஆயிரத்து*  இவைவல்லார் முனிவரே.   (2)

முனியே! நான்முகனே!*  முக்கண்ணப்பா*  என்பொல்லாக்- 
கனிவாய்த்*  தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*
தனியேன்ஆர்உயிரே!*  என்தலை மிசையாய் வந்திட்டு* 
இனிநான் போகல்ஒட்டேன்*  ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே.   (2)

கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய*  என் அன்பேயோ* 
நீலவரை இரண்டு பிறைகவ்வி*  நிமிர்ந்தது ஒப்ப*
கோல வராகம்ஒன்றாய்*  நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்* 
நீலக் கடல்கடைந்தாய்!*  உன்னைபெற்று இனிப் போக்குவனோ?  (2)

சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவில் பெரும் பாழேயோ* 
சூழ்ந்ததனில் பெரிய*  பரநல் மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில் பெரிய*  சுடர்ஞான இன்பமேயோ!*
சூழ்ந்ததனில் பெரிய*  என் அவாஅறச் சூழ்ந்தாயே!   (2)

அவாஅறச் சூழ்*  அரியை அயனை அரனை அலற்றி* 
அவாஅற்று வீடுபெற்ற*  குருகூர்ச் சடகோபன் சொன்ன*
அவாஇல் அந்தாதிகளால்*  இவைஆயிரமும்*  முடிந்த- 
அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்*  பிறந்தார் உயர்ந்தே.  (2)