பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்* துளங்கா அரக்கர் துளங்க,* முன்-
திண்தோள் நிமிர சிலைவளைய* சிறிதே முனிந்த திருமார்வன்,*
வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை* வடிக்கண் மடந்தை மாநோக்கம்-
கண்டான்,* கண்டு கொண்டுஉகந்த* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்* பொன்ற அன்று புள்ஊர்ந்து*
பெருந்தோள் மாலி தலைபுரள* பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*
இருந்தார் தம்மைஉடன் கொண்டு* அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப*
கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
வல்லி இடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*
அல்லல் செய்து வெம்சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியைக்*
கல்விச் சிலையால் காத்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
மல்லை முந்நீர் அதர்பட* வரிவெம் சிலைகால் வளைவித்து*
கொல்லை விலங்கு பணிசெய்ய* கொடியோன் இலங்கை புகல்உற்று*
தொல்லை மரங்கள் புகப்பெய்து* துவலை நிமிர்ந்து வான்அணவ*
கல்லால் கடலை அடைத்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
ஆமைஆகி அரிஆகி* அன்னம்ஆகி,* அந்தணர்தம்-
ஓமம்ஆகி ஊழிஆகி* உவரி சூழ்ந்த நெடும்புணரி*
சேமமதிள் சூழ்இலங்கைக்கோன்* சிரமும் கரமும் துணித்து,* முன்-
காமன் பயந்தான் கருதும்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
வருந்தாது இரு நீ மடநெஞ்சே* நம்மேல் வினைகள் வாரா,* முன்-
திருந்தா அரக்கர் தென்இலங்கை* செந்தீ உண்ண சிவந்து ஒருநாள்*
பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து* பின்னை மணாளன்ஆகி* முன்-
கருந்தாள் களிறுஒன்று ஒசித்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்* முதலை-தன்னால் அடர்ப்புண்டு*
கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய* அதனுக்கு அருள்புரிந்தான்*
அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு* இளையோற்கு அரசை அருளி* முன்-
கலைமாச் சிலையால் எய்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
மால்ஆய் மனமே! அருந்துயரில்* வருந்தாது இரு நீ, வலிமிக்க*
கால்ஆர் மருதும் காய்சினத்த கழுதும்* கதமா கழுதையும்*
மால்ஆர் விடையும் மதகரியும்* மல்லர் உயிரும் மடிவித்து*
காலால் சகடம் பாய்ந்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
குன்றால் மாரி பழுதுஆக்கி* கொடிஏர் இடையாள் பொருட்டாக*
வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த* வானோர் பெருமான் மாமாயன்*
சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்* திரிகால் சகடம் சினம்அழித்து*
கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை*
திருமா மகளால் அருள்மாரி* செழு நீர்ஆலி வளநாடன்*
மருவுஆர் புயல்கைக் கலிகன்றி* மங்கை வேந்தன் ஒலிவல்லார்*
இருமா நிலத்துக்கு அரசுஆகி* இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.
எல்லியும் காலையும்* தன்னை நினைந்துஎழ*
நல்ல அருள்கள்* நமக்கேதந்து அருள்செய்வான்*
அல்லிஅம் தண்ணம்துழாய்* முடிஅப்பன்ஊர்*
செல்வர்கள் வாழும்* திருக்கடித் தானமே (2)
திருக்கடித் தானமும்* என்னுடையச் சிந்தையும்*
ஒருக்கடுத்துஉள்ளே* உறையும்பிரான் கண்டீர்*
செருக்கடுத்துஅன்று* திகைத்த அரக்கரை*
உருக்கெடவாளி* பொழிந்த ஒருவனே.
ஒருவர் இருவர் ஓர்* மூவர்என நின்று*
உருவுகரந்து* உள்ளும்தோறும் தித்திப்பான்*
திருஅமர் மார்வன்* திருக்கடித்தானத்தை*
மருவிஉறைகின்ற* மாயப்பிரானே.
மாயப்பிரான்* எனவல்வினை மாய்ந்துஅற*
நேசத்தினால் நெஞ்சம்* நாடு குடிகொண்டான்*
தேசத்துஅமரர்* திருக்கடித்தானத்தை*
வாசப்பொழில்மன்னு* கோயில்கொண்டானே.
கோயில் கொண்டான்தன்* திருக்கடித் தானத்தை*
கோயில்கொண்டான்* அதனோடும் என்நெஞ்சகம்*;
கோயில்கொள்* தெய்வம்எல்லாம் தொழ* வைகுந்தம்
கோயில்கொண்ட* குடக்கூத்த அம்மானே.
கூத்தஅம்மான்* கொடியேன்இடர் முற்றவும்*
மாய்த்தஅம்மான்* மதுசூத அம்மான்உறை*
பூத்தபொழில்தண்* திருக்கடித் தானத்தை*
ஏத்தநில்லா* குறிக்கொள்மின் இடரே.
கொண்டமின் இடர்கெட* உள்ளத்து கோவிந்தன்*
மண்விண் முழுதும்* அளந்தஒண்தாமரை*
மண்ணவர் தாம்தொழ* வானவர் தாம்வந்து*
நண்ணு திருக்கடித்தான நகரே
தான நகர்கள்* தலைச்சிறந்து எங்கெங்கும்*
வான்இந் நிலம்கடல்* முற்றும் எம்மாயற்கே*
ஆனவிடத்தும் என் நெஞ்சும்* திருக்கடித்
தான நகரும்* தனதாயப் பதியே.
தாயப்பதிகள்* தலைச்சிறந்து எங்கெங்கும்*
மாயத்தினால் மன்னி* வீற்றிருந்தான்உறை*
தேசத்துஅமரர்* திருக்கடித்தானத்துள்*
ஆயர்க்குஅதிபதி* அற்புதன்தானே.
அற்புதன் நாராயணன்* அரி வாமனன்*
நிற்பது மேவி* இருப்பது என்நெஞ்சகம்*
நல்புகழ் வேதியர்* நான்மறை நின்றுஅதிர்*
கற்பகச் சோலைத்* திருக்கடித் தானமே. (2)
சோலைத் திருக்கடித்தானத்து* உறைதிரு
மாலை* மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*
பாலோடு அமுதுஅன்ன* ஆயிரத்து இப்பத்தும்*
மேலை வைகுந்தத்து* இருத்தும் வியந்தே. (2)