பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
சிலைஇலங்கு பொன்ஆழி* திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,*
மலைஇலங்கு தோள் நான்கே* மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*
முலைஇலங்கு பூம்பயலை* முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
கலைஇலங்கு மொழியாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! (2)
செருவரை முன்ஆசுஅறுத்த* சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,*
பொருவரைமுன் போர்தொலைத்த* பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*
ஒருவரையும் நின்ஒப்பார்* ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
கருவரைபோல் நின்றானை* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! (2)
துன்னுமா மணிமுடிமேல்* துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,*
மின்னுமா மணிமகர குண்டலங்கள்* வில்வீசும் என்கின்றாளால்*
பொன்னின் மாமணி ஆரம்* அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
கன்னிமா மதிள்புடைசூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
தார்ஆய தண்துளப* வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்*
போர்ஆனைக் கொம்புஒசித்த* புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*
ஆரானும் காண்மின்கள்* அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
கார்வானம் நின்றுஅதிரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
அடித்தலமும் தாமரையே* அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,*
முடித்தலமும் பொன்பூணும்* என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*
வடித்தடங்கண் மலரவளோ* வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்*
கடிக்கமலம் கள்உகுக்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
பேர்ஆயிரம் உடைய பேராளன்* பேராளன் என்கின்றாளால்*
ஏர்ஆர் கனமகர குண்டலத்தன்* எண்தோளன் என்கின்றாளால்*
நீர்ஆர் மழைமுகிலே* நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
கார்ஆர் வயல் மருவும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ!
செவ்அரத்த உடைஆடை* அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்*
அவ்அரத்த அடிஇணையும்* அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
மைவளர்க்கும் மணிஉருவம்* மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்*
கைவளர்க்கும் அழலாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
கொற்றப்புள் ஒன்றுஏறி* மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்*
வெற்றிப்போர் இந்திரற்கும்* இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*
பெற்றக்கால் அவன்ஆகம்* பெண்பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
கற்றநூல் மறையாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
வண்டுஅமரும் வனமாலை* மணிமுடிமேல் மணம்நாறும் என்கின்றாளால்*
உண்டுஇவர் பால் அன்பு எனக்குஎன்று* ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*
பண்டுஇவரைக் கண்டுஅறிவது* எவ்ஊரில் யாம்? என்றே பயில்கின்றாளால்*
கண்டவர்தம் மனம்வழங்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
மாவளரும் மென்நோக்கி* மாதராள் மாயவனைக் கண்டாள் என்று*
காவளரும் கடிபொழில்சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
பாவளரும் தமிழ்மாலை* பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
பூவளரும் கற்பகம்சேர்* பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே. (2)
தேவிமார் ஆவார் திருமகள்பூமி* ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்*
மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி* வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்* பவளவாய் மணியே*
ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே!* காணுமாறு அருளாய் (2)
காணுமாறுஅருளாய் என்றுஎன்றே கலங்கி* கண்ணநீர் அலமர* வினையேன்
பேணுமாறுஎல்லாம் பேணி* நின்பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ*
காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!* தொண்டனேன் கற்பகக்கனியே*
பேணுவார் அமுதே! பெரிய தண்புனல்சூழ்* பெருநிலம் எடுத்த பேராளா!
எடுத்தபேராளன் நந்தகோபன்தன்* இன்உயிர்ச் சிறுவனே* அசோதைக்கு
அடுத்தபேரின்பக் குலஇளம்களிறே* அடியனேன் பெரிய அம்மானே*
கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்* கைஉகிர் ஆண்ட எம்கடலே,*
அடுத்ததுஓர் உருவாய் இன்று நீ வாராய்* எங்ஙனம் தேறுவர் உமரே?
உமர்உகந்துஉகந்த உருவம்நின்உருவம்ஆகி* உன்தனக்கு அன்பர் ஆனார்*
அவர் உகந்துஅமர்ந்த செய்கை உன்மாயை* அறிவுஒன்றும் சங்கிப்பன் வினையேன்*
அமர்அதுபண்ணி அகல்இடம்புடைசூழ்* அடுபடை அவித்த அம்மானே*
அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே* என்னுடை ஆர்உயிரேயோ!
ஆர்உயிரேயோ அகல்இடம்முழுதும்* படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்துஅளந்த*
பேர்உயிரேயோ பெரியநீர் படைத்து* அங்கு உறைந்து அது கடைந்துஅடைத்து உடைத்த*
சீர்உயிரேயோ மனிசர்க்குத்தேவர் போலத்* தேவர்க்கும்தேவாவோ*
ஓர்உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்து உறுகோ?
எங்குவந்துஉறுகோ என்னைஆள்வானே* ஏழ்உலகங்களும் நீயே*
அங்கு அவர்க்குஅமைத்த தெய்வமும்நீயே* அவற்றுஅவை கருமமும் நீயே*
பொங்கியபுறம்பால் பொருள்உளவேலும்* அவையுமோ நீ இன்னேஆனால்*
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே* வான்புலன் இறந்ததும் நீயே.
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே* நிகழ்வதோ நீ இன்னேஆனால்*
சிறந்தநின் தன்மை அதுஇதுஉதுஎன்று* அறிவுஒன்றும் சங்கிப்பன்வினையேன்*
கறந்தபால் நெய்யே நெய்யின் சுவையே!* கடலினுள் அமுதமே அமுதில்*
பிறந்த இன்சுவையே சுவையதுபயனே!* பின்னைதோள் மணந்தபேர்ஆயா!
மணந்தபேர்ஆயா! மாயத்தால்முழுதும்* வல்வினையேனை ஈர்கின்ற*
குணங்களை உடையாய் அசுரர் வன்கையர்கூற்றமே!* கொடிய புள்உயர்த்தாய்*
பணங்கள்ஆயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!* பாற்கடல் சேர்ப்பா*
வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்* செய்கையும் யானும் நீதானே.
யானும் நீதானே ஆவதோமெய்யே* அருநரகுஅவையும் நீ ஆனால்*
வான்உயர் இன்பம் எய்தில்என்* மற்றை நரகமே எய்தில்என்? எனினும்,*
யானும் நீதானாய்த் தெளிதொறும், நன்றும் அஞ்சுவன்* நரகம் நான்அடைதல்*
வான்உயர்இன்பம் மன்னிவீற்றிருந்தாய்* அருளுநின் தாள்களைஎனக்கே.
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்* த பேர்உதவிக்கைம்மாறாத்*
தோள்களை ஆரத்தழுவி என்உயிரை* அறவிலை செய்தனன் சோதீ,
தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்* துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்*
தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்* தமியனேன் பெரிய அப்பனே!
பெரிய அப்பனை பிரமன் அப்பனை* உருத்திரன் அப்பனை* முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை* உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*
பெரியவண்குருகூர் வண்சடகோபன்* பேணின ஆயிரத்துள்ளும்*
உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்* உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (2)