பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
தெள்ளியீர்! தேவர்க்கும்* தேவர் திருத்தக்கீர்!*
வெள்ளியீர் வெய்ய* விழுநிதி வண்ணர்* ஓ!
துள்ளுநீர்க்* கண்ணபுரம் தொழுதாள் இவள்-
கள்வியோ,* கைவளை கொள்வது தக்கதே? (2)
நீள்நிலா முற்றத்து* நின்றுஇவள் நோக்கினாள்,*
காணுமோ!* கண்ணபுரம் என்று காட்டினாள்,*
பாணனார் திண்ணம் இருக்க* இனிஇவள்-
நாணுமோ,?* நன்று நன்று நறையூரர்க்கே.
அருவிசோர் வேங்கடம்* நீர்மலை என்றுவாய்-
வெருவினாள்* மெய்யம் வினவி இருக்கின்றாள்,*
பெருகுசீர்க்* கண்ணபுரம் என்று பேசினாள்-
உருகினாள்* உள்மெலிந்தாள் இது என்கொலோ! (2)
உண்ணும் நாள்இல்லை* உறக்கமும் தான்இல்லை,*
பெண்மையும் சால* நிறைந்திலள் பேதைதான்,*
கண்ணன்ஊர் கண்ணபுரம்* தொழும் கார்க்கடல்-
வண்ணர்மேல்,* எண்ணம் இவட்கு இது என்கொலோ!
கண்ணன்ஊர்* கண்ணபுரம் தொழும் காரிகை,*
பெண்மைஎன் தன்னுடை* உண்மை உரைக்கின்றாள்,*
வெண்ணெய்உண்டு ஆப்புண்ட* வண்ணம் விளம்பினால்,*
வண்ணமும்* பொன்நிறம் ஆவது ஒழியுமே.
வடவரை நின்றும் வந்து* இன்று கணபுரம்,-
இடவகை கொள்வது* யாம்என்று பேசினாள்,*
மடவரல் மாதர் என் பேதை* இவர்க்குஇவள்-
கடவதுஎன்,?* கண்துயில் இன்று இவர் கொள்ளவே.
தரங்கநீர் பேசினும்* தண்மதி காயினும்,*
இரங்குமோ?* எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை* ஊர்-
அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே.
தொண்டுஎல்லாம் நின்அடியே* தொழுது உய்யுமா-
கண்டு,* தான் கண்ணபுரம்* தொழப் போயினாள்*
வண்டுஉலாம் கோதை என் பேதை* மணிநிறம்-
கொண்டுதான்,* கோயின்மை செய்வது தக்கதே?
முள்எயிறு ஏய்ந்தில,* கூழை முடிகொடா,*
தெள்ளியள் என்பதுஓர்* தேசுஇலள் என்செய்கேன்,*
கள்அவிழ் சோலைக்* கணபுரம் கைதொழும்-
பிள்ளையைப்,* பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?
கார்மலி* கண்ணபுரத்து எம் அடிகளைப்,*
பார்மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்,*
சீர்மலி பாடல்* இவைபத்தும் வல்லவர்,*
நீர்மலி வையத்து* நீடு நிற்பார்களே (2)
நங்கள் வரிவளையாய் அங்காளோ* நம்முடை ஏதலர் முன்பு நாணி*
நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்* நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*
சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்* தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்*
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்* வேங்கடவாணனை வேண்டிச்சென்றே. (2)
வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்* என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்*
ஈண்டுஇதுஉரைக்கும்படியை அந்தோ* காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*
காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்* விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்*
ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்* எத்தனைகாலம் இளைக்கின்றேனே!
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன்* கண்டு கொள்மின்*
ஞாலம் அறியப் பழிசுமந்தேன்* நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*
நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த* நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட*
கோலவளையொடும் மாமைகொள்வான்* எத்தனைகாலமும் கூடச்சென்றே?
கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?* கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்*
பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்* பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*
மாடக்கொடிமதிள் தென்குளந்தை* வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்*
ஆடல்பறவை உயர்த்தவெல்போர்* ஆழிவலவனை ஆதரித்தே.
ஆழிவலவனை ஆதரிப்பும்* ஆங்குஅவன் நம்மில் வரவும் எல்லாம்*
தோழியர்காள்! நம்உடையமேதான்?* சொல்லுவதோ இங்கு அரியதுதான்*
ஊழிதோறுஊழி ஒருவனாக* நன்குஉணர்வார்க்கும் உணரலாகாச்*
சூழல்உடைய சுடர்கொள்ஆதித்* தொல்லைஅம்சோதி நினைக்குங்காலே.
தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்* என் சொல்அளவன்று இமையோர் தமக்கும்*
எல்லைஇலாதன கூழ்ப்புச்செய்யும்* அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*
அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்* ஆர்க்கு இடுகோ இனிப்பூசல்? சொல்லீர்*
வல்லிவளவயல்சூழ் குடந்தை* மாமலர்க்கண் வளர்கின்றமாலே.
மாலரிகேசவன் நாரணன்* சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று*
ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு* ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*
ஏலமலர் குழல் அன்னைமீர்காள்!* என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?*
காலம்பலசென்றும் காண்பதுஆணை* உங்களோடு எங்கள் இடைஇல்லையே.
இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்* பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்* ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்* அஞ்சனவெற்பும் அவைநணிய*
கடையறப்பாசங்கள் விட்டபின்னை* அன்றி அவன்அவை காண்கொடானே.
காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை* கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்*
மாண்குறள் கோலவடிவுகாட்டி* மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*
சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த* தேவபிராற்கு என் நிறைவினோடு*
நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்* என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்
என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!* யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை*
நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி* நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*
பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு* பால்மதி ஏந்தி ஓர்கோலநீல*
நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்* நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே
பாதம் அடைவதன் பாசத்தாலே* மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு*
கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்* வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*
தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்* இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்*
ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி* இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே. (2)