பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
தந்தை காலில் விலங்குஅற* வந்து தோன்றிய தோன்றல்பின்,* தமியேன் தன்-
சிந்தை போயிற்று* திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*
அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்* அவைசுட அதனோடும்,*
மந்த மாருதம் வனமுலை தடவந்து* வலிசெய்வது ஒழியாதே! (2)
மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்* வரைபுரை திருமார்வில்,*
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்* தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது* ஒளியவன் விசும்புஇயங்கும்,*
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன* செய்வது ஒன்று அறியேனே!
ஆயன் மாயமே அன்றி மற்றுஎன்கையில்* வளைகளும் இறைநில்லா,*
பேயின் ஆர்உயிர் உண்டிடும் பிள்ளை* நம் பெண்உயிர்க்கு இரங்குமோ,*
தூய மாமதிக் கதிர்சுடதுணைஇல்லை* இணைமுலை வேகின்றதால்,*
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்* அஞ்சேல் என்பார் இலையே!
கயம்கொள் புண்தலைக் களிறுஉந்து வெம்திறல்* கழல்மன்னர் பெரும்போரில்,*
மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்* வந்திலன், மறிகடல்நீர்*
தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனிஎனும்* தழல் முகந்து இளமுலைமேல்,*
இயங்கும் மாருதம் விலங்கில்என் ஆவியை* எனக்குஎனப் பெறலாமே!
ஏழு மாமரம் துளைபட சிலைவளைத்து* இலங்கையை மலங்குவித்த-
ஆழியான்,* நமக்கு அருளிய அருளொடும்* பகல்எல்லை கழிகின்றதால்,*
தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணைஇல்லை* சுடர்படு முதுநீரில்,*
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவதுஓர்* அந்தி வந்து அடைகின்றதே!
முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட* முழங்குஅழல் எரிஅம்பின்,*
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்* வந்திலன் என்செய்கேன்,*
எரியும் வெம்கதிர் துயின்றது* பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
கரிய நாழிகை ஊழியின் பெரியன* கழியும்ஆறு அறியேனே!
கலங்க மாக்கடல் கடைந்துஅடைத்து* இலங்கையர் கோனது வரைஆகம்,-
மலங்க வெம்சமத்து அடுசரம் துரந்த* எம் அடிகளும் வாரானால்,*
இலங்கு வெம்கதிர் இளமதி அதனொடும்* விடைமணி அடும்,* ஆயன்-
விலங்கல் வேயினது ஓசையும்ஆய்* இனி விளைவது ஒன்றுஅறியேனே!
முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்* முனிவனும் முனிவுஎய்த,*
மழுவினால் மன்னர் ஆர்உயிர் வவ்விய* மைந்தனும் வாரானால்,*
ஒழுகு நுண்பனிக்கு ஒடுங்கிய பேடையை* அடங்க அம்சிறைகோலித்,*
தழுவும் நள்இருள் தனிமையின் கடியதுஓர்* கொடுவினை அறியேனே!
கனம்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்* கனவினில் அவன்தந்த,*
மனம்செய் இன்பம்வந்து உள்புக வெள்கி* என் வளைநெக இருந்தேனை,*
சினம்செய் மால்விடைச் சிறுமணி ஓசை* என் சிந்தையைச் சிந்துவிக்கும்,*
அனந்தல் அன்றிலின் அரிகுரல்* பாவியேன் ஆவியை அடுகின்றதே!
வார்கொள் மென்முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்துமுன் உரைசெய்த,*
கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி ஒலிவல்லார்,*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையவரொடும் கூடுவரே! (2)
மாயக்கூத்தா!வாமனா!* வினையேன்கண்ணா! கண்கைகால்*
தூயசெய்ய மலர்களா* சோதிச்செவ்வாய் முகிழதா*
சாயல்சாமத் திருமேனி* தண்பாசடையா* தாமரைநீள்
வாசத்தடம்போல் வருவானே!* ஒருநாள் காண வாராயே.
'காணவாராய்' என்றுஎன்று* கண்ணும்வாயும் துவர்ந்து* அடியேன்
நாணி நல்நாட்டு அலமந்தால்* இரங்கி ஒருநாள் நீஅந்தோ*
காணவாராய்! கருநாயிறுஉதிக்கும்* கருமாமாணிக்க*
நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி* முடிசேர் சென்னி அம்மானே!
'முடிசேர் சென்னி அம்மா!* நின்மொய்பூம்தாமத் தண்துழாய்க்*
கடிசேர் கண்ணிப் பெருமானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
படிசேர்மகரக் குழைகளும்* பவளவாயும் நால்தோளும்*
துடிசேர் இடையும் அமைந்தது ஓர்* தூநீர் முகில்போல் தோன்றாயே.
தூநீர் முகில்போல் தோன்றும்* நின்சுடர்கொள் வடிவும் கனிவாயும்*
தேநீர்க்கமலக் கண்களும்* வந்து என்சிந்தை நிறைந்தவா*
மாநீர்வெள்ளிமலை தன்மேல்* வண்கார் நீல முகில்போல*
தூநீர்க்கடலுள் துயில்வானே!* எந்தாய்! சொல்லமாட்டேனே.
சொல்லமாட்டேன் அடியேன்* உன்துளங்குசோதித் திருப்பாதம்*
எல்லைஇல் சீர்இள நாயிறு* இரண்டுபோல் என்உள்ளவா!*
அல்லல் என்னும் இருள்சேர்தற்கு* உபாயம் என்னே? ஆழிசூழ்*
மல்லை ஞாலம் முழுதுஉண்ட* மாநீர்க் கொண்டல் வண்ணனே!
'கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!* வினையேன் கண்ணா! கண்ணா* என்
அண்டவாணா!' என்றுஎன்னை* ஆளக் கூப்பிட்டுஅழைத்தக்கால்*
விண்தன்மேல்தான் மண்மேல்தான்* விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்*
தொண்டனேன் உன்கழல்காண* ஒருநாள்வந்து தோன்றாயே.
வந்து தோன்றாய்அன்றேல்* உன் வையம்தாய மலர்அடிக்கீழ்*
முந்தி வந்து யான்நிற்ப* முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்*
செந்தண்கமலக் கண்கைகால்* சிவந்தவாய்ஓர் கருநாயிறு*
அந்தம் இல்லாக் கதிர்பரப்பி* அலர்ந்ததுஒக்கும் அம்மானே!
ஒக்கும் அம்மான் உருவம்என்று* உள்ளம் குழைந்து நாள்நாளும்*
தொக்க மேகப் பல்குழாங்கள்* காணும்தோறும் தொலைவன்நான்*
தக்க ஐவர் தமக்காய்அன்று* ஈர்ஐம்பதின்மர் தாள்சாயப்*
புக்கநல்தேர்த் தனிப்பாகா!* வாராய் இதுவோ பொருத்தமே?
'இதுவோ பொருத்தம்? மின்ஆழிப் படையாய்!* ஏறும் இரும்சிறைப்புள்*
அதுவே கொடியா உயர்த்தானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
எதுவேயாகக் கருதுங்கொல்* இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்*
மதுவார் சோலை* உத்தர மதுரைப் பிறந்த மாயனே?
பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!* நீஇன்னே*
சிறந்தகால் தீநீர்வான்* மண்பிறவும்ஆய பெருமானே*
கறந்த பாலுள் நெய்யேபோல்* இவற்றுள்எங்கும் கண்டுகொள்*
இறந்து நின்ற பெருமாயா!* உன்னை எங்கே காண்கேனே?
'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை* யான்?' என்றுஎன்று*
அங்கே தாழ்ந்த சொற்களால்* அம்தண் குருகூர்ச் சடகோபன்*
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்* எல்லியும் காலையே. (2)