பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வண்டுஆர்பூ மாமலர் மங்கை* மணநோக்கம்
உண்டானே* உன்னை உகந்துஉகந்து* உன்தனக்கே
தொண்டுஆனேற்கு* என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
கண்டானே* கண்ணபுரத்து உறை அம்மானே! (2)
பெருநீரும் விண்ணும்* மலையும் உலகுஏழும்*
ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய* நின்னை அல்லால்*
வருதேவர் மற்றுஉளர் என்று* என்மனத்து இறையும்-
கருதேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே!
மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று* இருப்பாரோடு-
உற்றிலேன்* உற்றதும்* உன்அடியார்க்கு அடிமை*
மற்றுஎல்லாம் பேசிலும்* நின்திரு எட்டுஎழுத்தும்-
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே! (2)
பெண்ஆனாள்* பேர்இளங் கொங்கையின்ஆர் அழல்போல்,*
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை* உகந்தேன்நான்*
மண்ஆளா! வாள்நெடுங் கண்ணி* மதுமலராள்-
கண்ணாளா* கண்ணபுரத்து உறை அம்மானே!
பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன்நான்*
மற்றுஆரும் பற்றுஇலேன்* ஆதலால் நின்அடைந்தேன்*
உற்றான்என்று உள்ளத்து வைத்து* அருள் செய்கண்டாய்,*
கற்றார்சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே!
ஏத்திஉன் சேவடி* எண்ணி இருப்பாரைப்*
பார்த்திருந்து அங்கு* நமன்தமர் பற்றாது*
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று* தொடாமைநீ,-
காத்திபோல்* கண்ணபுரத்து உறை அம்மானே!
வெள்ளைநீர் வெள்ளத்து* அணைந்த அரவுஅணைமேல்*
துள்ளுநீர் மெள்ளத்* துயின்ற பெருமானே*
வள்ளலே! உன்தமர்க்கு என்றும்* நமன்தமர்-
கள்ளர்போல்* கண்ணபுரத்து உறை அம்மானே!
மாண்ஆகி* வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*
பூண்ஆகம் கீண்டதுவும்* ஈண்டு நினைந்துஇருந்தேன்*
பேணாத வல்வினையேன்* இடர் எத்தனையும்-
காணேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே!
நாட்டினாய் என்னை* உனக்குமுன் தொண்டுஆக*
மாட்டினேன் அத்தனையே கொண்டு* என் வல்வினையை*
பாட்டினால் உன்னை* என் நெஞ்சத்து இருந்தமை-
காட்டினாய்* கண்ணபுரத்து உறை அம்மானே!
கண்டசீர்க்* கண்ணபுரத்து உறை அம்மானை*
கொண்டசீர்த் தொண்டன்* கலியன் ஒலிமாலை*
பண்டமாய்ப் பாடும்* அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
அண்டம்போய் ஆட்சி* அவர்க்கு அது அறிந்தோமே. (2)
நெடுமாற்குஅடிமை செய்வேன்போல்* அவனைக் கருத வஞ்சித்து*
தடுமாற்றுஅற்ற தீக்கதிகள்* முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்*
கொடுமாவினையேன் அவன்அடியார் அடியே* கூடும் இதுஅல்லால்*
விடுமாறுஎன்பதுஎன்? அந்தோ!* வியன் மூவுலகு பெறினுமே?. (2)
வியன் மூவுலகு பெறினும்போய்* தானே தானே ஆனாலும்*
புயல் மேகம்போல் திருமேனிஅம்மான்* புனைபூம் கழல்அடிக்கீழ்ச்*
சயமே அடிமை தலைநின்றார்* திருத்தாள் வணங்கி* இம்மையே
பயனே இன்பம் யான்பெற்றது* உறுமோ பாவியேனுக்கே?
உறுமோ பாவியேனுக்கு* இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய*
சிறுமாமேனி நிமிர்த்த* என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*
நறுமாவிரைநாள் மலர்அடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவன்அடியார்*
சிறுமா மனிசராய் என்னைஆண்டார்* இங்கே திரியவே.
இங்கே திரிந்தேற்கு இழுக்குஉற்றுஎன்!* இருமாநிலம் முன்உண்டுஉமிழ்ந்த*
செங்கோலத்த பவளவாய்ச்* செந்தாமரைக்கண் என்அம்மான்*
பொங்குஏழ் புகழ்கள் வாயவாய்* புலன்கொள் வடிவு என்மனத்ததாய்*
அங்குஏய் மலர்கள் கையவாய்* வழிபட்டுஓட அருளிலே?
வழிபட்டுஓட அருள்பெற்று* மாயன் கோல மலர்அடிக்கீழ்ச்*
சுழிபட்டுஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து* இன்புற்றுஇருந்தாலும்*
இழிபட்டுஓடும் உடலினில்பிறந்து* தன்சீர் யான்கற்று*
மொழிபட்டுஓடும் கவிஅமுதம்* நுகர்ச்சி உறுமோ முழுதுமே?
நுகர்ச்சி உறுமோ மூவுலகின்* வீடு பேறு தன்கேழ்இல்*
புகர்ச்செம்முகத்த களிறுஅட்ட* பொன்ஆழிக்கை என்அம்மான்*
நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்* நீண்ட அசுரர் உயிர்எல்லாம்*
தகர்த்துஉண்டுஉழலும் புள்பாகன்* பெரிய தனிமாப் புகழே?
தனிமாப் புகழே எஞ்ஞான்றும்* நிற்கும் படியாத் தான்தோன்றி*
முனிமாப் பிரம முதல்வித்தாய்* உலகம் மூன்றும் முளைப்பித்த*
தனிமாத் தெய்வத் தளிர்அடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவன்அடியார்*
நனிமாக் கலவி இன்பமே* நாளும் வாய்க்க நங்கட்கே
நாளும் வாய்க்க நங்கட்கு* நளிர்நீர்க் கடலைப் படைத்து* தன்
தாளும் தோளும் முடிகளும்* சமன் இலாத பலபரப்பி*
நீளும் படர்பூங் கற்பகக்காவும்* நிறைபல்நாயிற்றின்*
கோளும்உடைய மணிமலைபோல்* கிடந்தான் தமர்கள் கூட்டமே.
தமர்கள் கூட்ட வல்வினையை* நாசம் செய்யும் சதுமூர்த்தி*
அமர்கொள் ஆழி சங்குவாள்* வில்தண்டுஆதி பல்படையன்*
குமரன் கோல ஐங்கணைவேள்தாதை* கோதுஇல் அடியார்தம்*
தமர்கள் தமர்கள் தமர்களாம்* சதிரே வாய்க்க தமியேற்கே
வாய்க்க தமியேற்கு* ஊழிதோறுஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்குதோள்* பொன்ஆழிக்கை என்அம்மான்*
நீக்கம்இல்லா அடியார்தம்* அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள்* அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்* நல்ல கோட்பாடே
நல்ல கோட்பாட்டு உலகங்கள்* மூன்றினுள்ளும் தான்நிறைந்த*
அல்லிக் கமலக் கண்ணனை* அம்தண் குருகூர்ச் சடகோபன்*
சொல்லப் பட்ட ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
நல்ல பதத்தால் மனைவாழ்வர்* கொண்ட பெண்டீர் மக்களே. (2)