பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
கைம்மான மதயானை* இடர்தீர்த்த கருமுகிலை*
மைம்மான மணியை* அணிகொள் மரகதத்தை*
எம்மானை எம்பிரானை ஈசனை* என்மனத்துள்-
அம்மானை* அடியேன் அடைந்து உய்ந்து போனேனே. (2)
தருமான மழைமுகிலை* பிரியாது தன்அடைந்தார்*
வரும்மானம் தவிர்க்கும்* மணியை அணிஉருவின்*
திருமாலை அம்மானை* அமுதத்தை கடல்கிடந்த-
பெருமானை* அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே.
விடைஏழ் அன்றுஅடர்த்து* வெகுண்டு விலங்கல்உறப்*
படையால்ஆழி தட்ட* பரமன் பரஞ்சோதி*
மடைஆர் நீலம்மல்கும் வயல்சூழ்* கண்ணபுரம்ஒன்று-
உடையானுக்கு* அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?
மிக்கானை* மறைஆய் விரிந்த விளக்கை,* என்னுள்-
புக்கானை* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானை கடிகைத்* தடங்குன்றின் மிசைஇருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே. (2)
வந்தாய் என்மனத்தே* வந்துநீ புகுந்தபின்னை,*
எந்தாய்! போய்அறியாய்* இதுவே அமையாதோ*
கொந்துஆர் பைம்பொழில்சூழ்* குடந்தைக் கிடந்துஉகந்த-
மைந்தா,* உன்னைஎன்றும்* மறவாமை பெற்றேனே.
எஞ்சா வெம்நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேல்என்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே! நீநினையாது* இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
மஞ்சுஆர் மாளிகைசூழ்* வயல்ஆலி மைந்தனையே.
பெற்றார் பெற்றுஒழிந்தார்* பின்னும்நின்று அடியேனுக்கு*
உற்றான்ஆய் வளர்த்து* என்உயிர்ஆகி நின்றானை*
முற்றா மாமதிகோள் விடுத்தானை* எம்மானை*
எத்தால் யான்மறக்கேன்* இதுசொல்என் ஏழைநெஞ்சே!
கற்றார் பற்றுஅறுக்கும்* பிறவிப் பெருங்கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்தபின்னை*
வற்றா நீர்வயல்சூழ்* வயல்ஆலி அம்மானைப்-
பெற்றேன்* பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே.
கண்ணார் கண்ணபுரம்* கடிகை கடிகமழும்*
தண்ணார் தாமரைசூழ்* தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாள்மதியை* விரிகின்ற வெம்சுடரை*
கண்ஆரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
செருநீர வேல்வலவன்* கலிகன்றி மங்கையர்கோன்*
கருநீர் முகில்வண்ணன்* கண்ண புரத்தானை*
இருநீர்இன் தமிழ்* இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்*
வரும்நீர் வையம்உய்ய* இவைபாடி ஆடுமினே. (2)
கருமாணிக்க மலைமேல்* மணித்தடம் தாமரைக் காடுகள்போல்*
திருமார்வு வாய்கண்கை* உந்திகால்உடை ஆடைகள் செய்யபிரான்*
திருமால் எம்மான் செழுநீர்வயல்* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்* அன்னைமீர்! இதற்கு என்செய்கேனோ. (2)
அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?* அணிமேருவின் மீதுஉலவும்*
துன்னுசூழ் சுடர் ஞாயிறும்* அன்றியும் பல்சுடர்களும்போல்*
மின்னு நீள்முடிஆரம் பல்கலன்* தான்உடை எம்பெருமான்*
புன்னைஅம் பொழில்சூழ்* திருப்புலியூர் புகழும்இவளே.
புகழும் இவள்நின்று இராப்பகல்* பொருநீர்க்கடல் தீப்பட்டு* எங்கும்
திகழும்எரியொடு செல்வதுஒப்ப* செழும்கதிர்ஆழிமுதல்*
புகழும் பொருபடை ஏந்தி* போர்புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்*
திகழும் மணிநெடு மாடம்நீடு* திருப்புலியூர் வளமே.
ஊர்வளம்கிளர் சோலையும்* கரும்பும் பெரும்செந்நெலும் சூழ்ந்து*
ஏர்வளம்கிளர் தண்பணைக்* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
சீர்வளம்கிளர் மூவுலகுஉண்டுஉமிழ்* தேவபிரான்*
பேர்வளம்கிளர்ந்தன்றிப் பேச்சுஇலள்* இன்று இப்புனைஇழையே.
புனைஇழைகள் அணிவும் ஆடைஉடையும்* புதுக்கணிப்பும்*
நினையும் நீர்மையதுஅன்று இவட்குஇது* நின்று நினைக்கப்புக்கால்*
சுனையினுள் தடம்தாமரை மலரும்* தண் திருப்புலியூர்*
முனைவன் மூவுலகுஆளி* அப்பன் திருஅருள் மூழ்கினளே.
திருஅருள் மூழ்கி வைகலும்* செழுநீர்நிறக் கண்ணபிரான்*
திருஅருள்களும் சேர்ந்தமைக்கு* அடையாளம் திருந்தஉள*
திருஅருள் அருளால் அவன்* சென்று சேர்தண் திருப்புலியூர்*
திருஅருள் கமுகுஒண் பழத்தது* மெல்லியல் செவ்விதழே
மெல்இலைச் செல்வவண் கொடிப்புல்க* வீங்குஇளம்தாள்கமுகின்*
மல்இலை மடல்வாழை* ஈன்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து*
புல்இலைத் தெங்கினூடு* கால் உலவும்தண் திருப்புலியூர்*
மல்லல்அம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்* இம் மடவரலே
மடவரல் அன்னைமீர்கட்கு* என்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ*
வடமொழி மறைவாணர்* வேள்வியுள் நெய்அழல்வான் புகைபோய்த்*
திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்* தண் திருப்புலியூர்*
படஅரவுஅணையான் தன்நாமம் அல்லால்* பரவாள் இவளே.
பரவாள் இவள் நின்று இராப்பகல்* பனிநீர்நிறக் கண்ணபிரான்*
விரவார்இசை மறை வேதியர்ஒலி* வேலையின் நின்றுஒலிப்ப*
கரவார் தடம்தொறும் தாமரைக்கயம்* தீவிகை நின்றுஅலரும்*
புரவார் கழனிகள் சூழ்* திருப்புலியூர்ப் புகழ்அன்றிமற்றே
அன்றி மற்றோர் உபாயம்என்* இவள்அம்தண் துழாய்கமழ்தல்*
குன்றமாமணி மாடமாளிகைக்* கோலக் குழாங்கள் மல்கி*
தென்திசைத் திலதம்புரை* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
நின்ற மாயப்பிரான் திருவருளாம்* இவள் நேர்பட்டதே.
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்* நாயகன் தன்அடிமை*
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன் சொல்*
நேர்பட்ட தமிழ்மாலை* ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார்* அவர் நேர்பட்டார்* நெடுமாற்கு அடிமை செய்யவே. (2)