பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்,*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலிபுகழ்சேர்,*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர்முடிமேல்,*
வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.! (2)
வேத முதல்வன்* விளங்கு புரிநூலன்,*
பாதம் பரவிப்* பலரும் பணிந்துஏத்தி,*
காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாது நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
விண்ட மலர்எல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*
அண்ட முதல்வன்* அமரர்கள் எல்லாரும்,*
கண்டு வணங்கும்* கண்ணபுரத்து எம்பெருமான்*
வண்டு நறுந்துழாய்* வந்துஊதாய் கோல்தும்பீ!
நீர் மலிகின்றது ஓர்* மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,*
சீர் மலிகின்றது ஓர்* சிங்க உருஆகி,*
கார்மலி வண்ணன்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தார்மலி தண்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
ஏர்ஆர் மலர்எல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*
பார்ஆர் உலகம்* பரவ பெருங்கடலுள்,*
கார்ஆமை ஆன* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தார்ஆர் நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
மார்வில் திருவன்* வலன்ஏந்து சக்கரத்தன்,*
பாரைப் பிளந்த* பரமன் பரஞ்சோதி,*
காரில் திகழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*
தாரில் நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
வாமனன் கற்கி* மதுசூதன் மாதவன்*
தார்மன்னு* தாசரதிஆய தடமார்வன்,*
காமன்தன் தாதை* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாம நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
நீல மலர்கள்* நெடுநீர் வயல் மருங்கில்,*
சால மலர்எல்லாம்* ஊதாதே,* வாள்அரக்கர்-
காலன்* கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,*
கோல நறுந்துழாய்* கொண்டுஊதாய் கோல்தும்பீ!
நந்தன் மதலை* நிலமங்கை நல்துணைவன்,*
அந்தம் முதல்வன்* அமரர்கள் தம்பெருமான்,*
கந்தம் கமழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*
கொந்து நறுந்துழாய்* கொண்டுஊதாய் கோல்தும்பீ!
வண்டு அமரும் சோலை* வயல்ஆலி நல்நாடன்,*
கண்டசீர் வென்றிக்* கலியன் ஒலிமாலை,*
கொண்டல் நிறவண்ணன்* கண்ண புரத்தானைத்,*
தொண்டரோம் பாட* நினைந்துஊதாய் கோல்தும்பீ! (2)
வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட* மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (2)
எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்* இமையவர் அப்பன் என்அப்பன்*
பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்* பொருந்துமூவுருவன் எம்அருவன்*
செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்* திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு-
அங்கு அமர்கின்ற* ஆதியான் அல்லால்* யாவர்மற்றுஎன்அமர் துணையே?
என்அமர்பெருமான் இமையவர்பெருமான்* இருநிலம் இடந்த எம்பெருமான்*
முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள* என்னைஆள்கின்ற எம்பெருமான்*
தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரைமீபால்-
நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண் நினைப்பிலும்* பிறிதுஇல்லை எனக்கே.
பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்* நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த*
குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த* கோலமாணிக்கம் என்அம்மான்*
செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்* திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய* மெய்ம்மையே நின்ற எம்பெருமான்* அடிஇணை அல்லதுஓர் அரணே.
அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை* அது பொருள்ஆகிலும்* அவனை
அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது* ஆதலால் அவன் உறைகின்ற*
நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த* நறும்புகை விசும்புஒளி மறைக்கும்*
நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.
எனக்கு நல்அரணை எனதுஆருயிரை* இமையவர் தந்தைதாய் தன்னை*
தனக்கும் தன் தன்மை அறிவரியானை* தடம்கடல்பள்ளி அம்மானை*
மனக்கொள்சீர் மூவாயிரவர்* வண்சிவனும் அயனும்தானும் ஒப்பார்வாழ்*
கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே.
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட* அத்திருவடி என்றும்*
திருச்செய்ய கமலக்கண்ணும்* செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*
திருச்செய்யகமல உந்தியும்* செய்யகமலை மார்பும் செய்யஉடையும்*
திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்* திகழ என் சிந்தையுளானே.
திகழ என்சிந்தையுள் இருந்தானை* செழுநிலத்தேவர் நான்மறையோர்*
திசை கைகூப்பி ஏத்தும்* திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையானை*
புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை* அசுரர்வன்கையர் வெம்கூற்றை*
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்* படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்* பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே*
இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே* புகழ்வுஇல்லையாவையும் தானே*
கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்* கூரியவிச்சையோடு ஒழுக்கம்*
நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.
அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி* அவர்க்குஅருள் அருளும் அம்மானை*
அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரையானை*
அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்* தம்பதி அவனிதேவர் வாழ்வு*
அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை* நான்முகனை அமர்ந்தேனே.
தேனைநன்பாலை கன்னலைஅமுதை* திருந்துஉலகுஉண்ட அம்மானை*
வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்* மலர்மிசைப் படைத்தமாயோனை*
கோனை வண்குருகூர் வண்சடகோபன்* சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்*
வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்* பிறவிமாமாயக் கூத்தினையே. (2)