பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
மாற்றம்உள* ஆகிலும் சொல்லுவன்,* மக்கள்-
தோற்றக் குழி* தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*
ஆற்றங்கரை வாழ் மரம்போல்* அஞ்சுகின்றேன்,*
நாற்றம் சுவை* ஊறு ஒலிஆகிய நம்பீ! (2)
சீற்றம்உள* ஆகிலும் செப்புவன்,* மக்கள்-
தோற்றக்குழி* தோற்றுவிப்பாய் கொல்என்றுஅஞ்சி,*
காற்றத்து இடைப்பட்ட* கலவர் மனம்போல்,*
ஆற்றத்துளங்கா நிற்பன்* ஆழிவலவா!
தூங்குஆர் பிறவிக்கண்* இன்னம் புகப்பெய்து,*
வாங்காய்என்று சிந்தித்து* நான்அதற்கு அஞ்சி,*
பாம்போடு ஒருகூரையிலே* பயின்றால்போல்,*
தாங்காது உள்ளம் தள்ளும்* என் தமரைக்கண்ணா!
உருஆர் பிறவிக்கண்* இன்னம் புகப்பெய்து,*
திரிவாய்என்று சிந்தித்தி* என்றுஅதற்கு அஞ்சி,*
இருபாடு எரிகொள்ளியின்* உள் எறும்பே போல்,*
உருகாநிற்கும்* என்உள்ளம் ஊழி முதல்வா!
கொள்ளக் குறையாத* இடும்பைக் குழியில்,*
தள்ளிப் புகப்பெய்தி கொல்* என்றுஅதற்கு அஞ்சி,*
வெள்ளத்து இடைப்பட்ட* நரிஇனம் போலே,*
உள்ளம் துளங்கா நிற்பன்* ஊழி முதல்வா!
படைநின்ற* பைந்தாமரையோடு* அணிநீலம்-
மடைநின்று அலரும்* வயல்ஆலி மணாளா,*
இடையன் எறிந்த மரமே* ஒத்துஇராமே,*
அடைய அருளாய்* எனக்கு உன்தன் அருளே.
வேம்பின்புழு* வேம்புஅன்றி உண்ணாது,* அடியேன்-
நான்பின்னும்* உன்சேவடிஅன்றி நயவேன்,*
தேம்பல் இளந்திங்கள்* சிறைவிடுத்து,* ஐவாய்ப்-
பாம்பின் அணைப்* பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ! (2)
அணிஆர் பொழில்சூழ்* அரங்க நகர்அப்பா,*
துணியேன் இனி* நின் அருள்அல்லது எனக்கு,*
மணியே! மணிமாணிக்கமே!* மதுசூதா,*
பணியாய் எனக்கு உய்யும்வகை,* பரஞ்சோதீ! (2)
நந்தா நரகத்து அழுந்தா வகை,* நாளும்-
எந்தாய்! தொண்டர்ஆனவர்க்கு* இன்அருள் செய்வாய்,*
சந்தோகா! தலைவனே!* தாமரைக் கண்ணா,*
அந்தோ! அடியேற்கு* அருளாய் உன்அருளே (2)
குன்றம் எடுத்து* ஆநிரை காத்தவன் தன்னை,*
மன்றில் புகழ்* மங்கை மன் கலிகன்றி சொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* வல்லவர்-தம்மேல்,*
என்றும் வினைஆயின* சாரகில்லாவே, (2)