பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
மான்அமரும் மென்நோக்கி* வைதேவிஇன் துணையா,*
கான்அமரும் கல்அதர்போய்* காடுஉறைந்தான் காண்ஏடீ*
கான்அமரும் கல்அதர்போய்* காடுஉறைந்த பொன்அடிக்கள்,*
வானவர்-தம் சென்னி* மலர்கண்டாய் சாழலே (2)
தந்தை தளைகழலத்* தோன்றிப்போய்,* ஆய்ப்பாடி-
நந்தன் குலமதலையாய்* வளர்ந்தான் காண்ஏடீ,*
நந்தன் குலமதலையாய்* வளர்ந்தான் நான்முகற்குத்*
தந்தைகாண் எந்தை* பெருமான் காண் சாழலே.
ஆழ்கடல்சூழ் வையகத்தார்* ஏசப்போய்,* ஆய்ப்பாடித்-
தாழ்குழலார் வைத்த* தயிர்உண்டான் காண்ஏடீ,*
தாழ்குழலார் வைத்த* தயிர்உண்ட பொன்வயிறு,* இவ்-
ஏழ்உலகும் உண்டும்* இடம்உடைத்தால் சாழலே.
அறியாதார்க்கு* ஆன்ஆயன் ஆகிப்போய்,* ஆய்ப்பாடி-
உறிஆர் நறுவெண்ணெய்* உண்டுஉகந்தான் காண்ஏடீ*
உறிஆர் நறுவெண்ணெய்* உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,*
எறிநீர் உலகுஅனைத்தும்* எய்தாதால் சாழலே
வண்ணக் கருங்குழல்* ஆய்ச்சியால் மொத்துண்டு,*
கண்ணிக் குறுங்கயிற்றால்* கட்டுண்டான் காண்ஏடீ,*
கண்ணிக் குறுங்கயிற்றால்* கட்டுண்டான் ஆகிலும்,*
எண்ணற்கு அரியன்* இமையோர்க்கும் சாழலே.
கன்றப் பறைகறங்க* கண்டவர்தம் கண்களிப்ப,*
மன்றில் மரக்கால்* கூத்துஆடினான் காண் ஏடீ,*
மன்றில் மரக்கால்* கூத்து ஆடினான் ஆகிலும்,*
என்றும் அரியன்* இமையோர்க்கும் சாழலே.
கோதைவேல் ஐவர்க்குஆய்* மண்அகலம் கூறுஇடுவான்,*
தூதன்ஆய் மன்னவனால்* சொல்லுண்டான் காண்ஏடீ,*
தூதன்ஆய் மன்னவனால்* சொல்லுண்டான் ஆகிலும்,*
ஓதநீர் வையகம்* முன்உண்டு உமிழ்ந்தான் சாழலே.
பார்மன்னர் மங்கப்* படைதொட்டு வெம்சமத்துத்,*
தேர்மன்னற்குஆய்* அன்று தேர்ஊர்ந்தான் காண்ஏடீ,*
தேர்மன்னற்குஆய்* அன்று தேர்ஊர்ந்தான் ஆகிலும்,*
தார்மன்னர் தங்கள்* தலைமேலான் சாழலே.
கண்டார் இரங்க* கழியக் குறள்உருஆய்,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் காண்ஏடீ,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் ஆகிலும்*
விண்டுஏழ் உலகுக்கும்* மிக்கான் காண் சாழலே
கள்ளத்தால் மாவலியை* மூவடி மண் கொண்டு அளந்தான்,*
வெள்ளத்தான் வேங்கடத்தான்* என்பரால் காண்ஏடீ,*
வெள்ளத்தான்* வேங்கடத்தானேலும்,* கலிகன்றி-
உள்ளத்தின் உள்ளே* உளன் கண்டாய் சாழலே. (2)