பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்* வளநாடு மூட இமையோர்*
தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன* அரண்ஆவன் என்னும் அருளால்*
அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி* அகல் வான்உரிஞ்ச,* முதுகில்-
மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை* மறவாது இறைஞ்சு என் மனனே! (2)
செருமிகு வாள்எயிற்ற அரவுஒன்று சுற்றி* திசைமண்ணும் விண்ணும் உடனே*
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப* இமையோர்கள் நின்று கடைய,*
பருவரை ஒன்று நின்று முதுகில் பரந்து* சுழலக் கிடந்து துயிலும்,*
அருவரை அன்ன தன்மை அடல்ஆமைஆன* திருமால் நமக்கு ஓர் அரணே.
தீதுஅறு திங்கள் பொங்கு சுடர்உம்பர் உம்பர்* உலகுஏழினோடும் உடனே,*
மாதிரம் மண்சுமந்த வடகுன்றும் நின்ற* மலைஆறும் ஏழு கடலும்*
பாதமர் சூழ்குளம்பின் அகமண்ட லத்தின்* ஒருபால் ஒடுங்க வளர்சேர்,*
ஆதிமுன் ஏனம்ஆகி அரண்ஆய மூர்த்தி* அதுநம்மை ஆளும் அரசே.
தளைஅவிழ் கோதை மாலை இருபால் தயங்க* எரிகான்றுஇரண்டு தறுகண்,*
அளவுஎழ வெம்மை மிக்க அரிஆகி அன்று* பரியோன் சினங்கள் அவிழ,*
வளை உகிர்ஆளி மொய்ம்பின் மறவோனதுஆகம்* மதியாது சென்று ஓர்உகிரால்*
பிளவுஎழ விட்ட குட்டம் அதுவையம்மூடு* பெருநீரில் மும்மை பெரிதே.
வெந்திறல் வாணன் வேள்வி இடம்எய்தி* அங்குஓர் குறள்ஆகி மெய்ம்மை உணர*
செந்தொழில் வேத நாவின் முனிஆகி வையம்* அடிமூன்று இரந்து பெறினும்,*
மந்தர மீது போகி மதிநின்று இறைஞ்ச* மலரோன் வணங்க வளர்சேர்,*
அந்தரம் ஏழினூடு செலஉய்த்த பாதம்* அது நம்மை ஆளும் அரசே.
இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும்* ஒருநாலும் ஒன்றும் உடனே,*
செருநுதலூடு போகி அவர்ஆவி மங்க* மழுவாளில் வென்ற திறலோன்,*
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர்* புலமங்கை கேள்வர் புகழ்சேர்,*
பெருநிலம் உண்டு உமிழ்ந்த பெருவாயர்ஆகி* யவர் நம்மை ஆள்வர் பெரிதே.
இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன* இனம்ஆய மான்பின் எழில்சேர்*
அலைமலி வேல் கணாளை அகல்விப்பதற்கு* ஓர்உருஆய மானை அமையா,*
கொலைமலி எய்துவித்த கொடியோன் இலங்கை* பொடிஆக வென்றி அமருள்,*
சிலைமலி செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்* திருமால் நமக்குஓர் அரணே.
முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண* முதலோடு வீடும் அறியாது,*
என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப* எழில் வேதம் இன்றி மறைய,*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி* இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ,*
அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த* அது நம்மை ஆளும் அரசே.
துணைநிலை மற்றுஎமக்குஓர் உளது என்றுஇராது* தொழுமின்கள் தொண்டர்! தொலைய*
உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி* உகஉண்டு வெண்ணெய் மருவி,*
பணைமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட* அதனோடும் ஓடி அடல்சேர்,*
இணை மருதுஇற்று வீழ நடைகற்ற தெற்றல்* வினைப் பற்றுஅறுக்கும் விதியே.
கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று* கொடியோன் இலங்கை பொடியா*
சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்* திருமாலை, வேலை புடைசூழ்*
கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு* கலிகன்றி சொன்ன பனுவல்,*
ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்* அவர்ஆள்வர் உம்பர் உலகே. (2)