பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
மன்னிலங்கு பாரதத்துத்* தேரூர்ந்து,* மாவலியைப்-
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்* பொருகடல்சூழ்*
தென்னிலங்கை ஈடழித்த* தேவர்க்கு இதுகாணீர்*
என்னிலங்கு சங்கோடு* எழில் தோற்றிருந்தேனே!. (2)
இருந்தான் என்னுள்ளத்து* இறைவன், கறைசேர்*
பருந்தாள் களிற்றுக்கு* அருள்செய்த, செங்கண்*
பெருந்தோள் நெடுமாலைப்* பேர்பாடி ஆட*
வருந்தாது என் கொங்கை* ஒளிமன்னும் அன்னே!
அன்னே! இவரை* அறிவன், மறைநான்கும்*
முன்னே உரைத்த* முனிவர் இவர்வந்து*
பொன்னேய் வளைகவர்ந்து* போகார் மனம்புகுந்து*
என்னே இவரெண்ணும்* எண்ணம் அறியோமே!
அறியோமே என்று* உரைக்கலாமே எமக்கு,*
வெறியார் பொழில்சூழ்* வியன்குடந்தை மேவி,*
சிறியான் ஓர் பிள்ளையாய்* மெள்ள நடந்திட்டு*
உறியார் நறுவெண்ணெய்* உண்டுகந்தார் தம்மையே?
தம்மையே நாளும்* வணங்கித் தொழுவார்க்கு,*
தம்மையே ஒக்க* அருள்செய்வர் ஆதலால்,*
தம்மையே நாளும்* வணங்கித் தொழுதிறைஞ்சி,*
தம்மையே பற்றா* மனத்தென்றும் வைத்தோமே.
வைத்தார் அடியார்* மனத்தினில் வைத்து,* இன்பம்-
உற்றார் ஒளிவிசும்பி* ஓரடிவைத்து,* ஓரடிக்கும்-
எய்த்தாது மண்ணென்று* இமையோர் தொழுதிறைஞ்சி,*
கைத்தாமரை குவிக்கும்* கண்ணன் என் கண்ணனையே
கண்ணன் மனத்துள்ளே* நிற்கவும், கைவளைகள்*
என்னோ கழன்ற?* இவையென்ன மாயங்கள்?*
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,* அவன்மேய,-
அண்ணல் மலையும்* அரங்கமும் பாடோமே.
பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே* ஆயிரம் பேரானை? பேர்நினைந்து
சூடோமே* சூடும் துழாயலங்கல்? சூடி,* நாம்
கூடோமே கூடக்* குறிப்பாகில்? நன்னெஞ்சே!
நன்னெஞ்சே! நம்பெருமான்* நாளும் இனிதமரும்,*
அன்னம்சேர் கானல்* அணியாலி கைதொழுது,*
முன்னம்சேர் வல்வினைகள் போக* முகில்வண்ணன்,*
பொன்னம்சேர் சேவடிமேல்* போதணியப் பெற்றோமே!
பெற்றாரார்* ஆயிரம் பேரானைப்,* பேர்பாடப்-
பெற்றான்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*
கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்* இவைகேட்கல்-
உற்றார்க்கு,* உறுதுயர் இல்லை உலகத்தே (2)