பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    மைந்நின்ற கருங்கடல் வாய்உலகுஇன்றி*  வானவரும் யாமும்எல்லாம்,* 
    நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்*  நெடுங்காலம் கிடந்தது ஓரீர்,*

    எந்நன்றி செய்தாரா*  ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்?* 
    செய்ந்நன்றி குன்றேல்மின்*  தொண்டர்காள்! அண்டனைய ஏத்தீர்களே  (2)   


    நில்லாத பெருவெள்ளம்*  நெடுவிசும்பின் மீதுஓடி நிமிர்ந்த காலம்,* 
    மல்ஆண்ட தடக்கையால்*  பகிரண்டம்  அகப்படுத்த காலத்து,*  அன்று-

    எல்லாரும் அறியாரோ*  எம்பெருமான்  உண்டு உமிழ்ந்த எச்சில்தேவர்,* 
    அல்லாதார் தாம்உளரே?*  அவன்அருளே  உலகுஆவது அறியீர்களே?     


    நெற்றிமேல் கண்ணானும்*  நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,* 
    ஒற்றைக்கை வெண்பகட்டின்*  ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,*

    வெற்றிப்போர்க் கடல்அரையன்*  விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,* 
    கொற்றப் போர்ஆழியான்*  குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியஆறே!    


    பனிப்பரவைத் திரைததும்ப*  பார்எல்லாம் நெடுங்கடலே ஆனகாலம்,*  
    இனிக் களைகண்இவர்க்கு இல்லை என்று*  உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி*

    முனித்தலைவன் முழங்குஒளிசேர்*  திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட* 
    கனிக்களவத் திருஉருவத்து ஒருவனையே*  கழல் தொழுமா கல்லீர்களே.  


    பார்ஆரும் காணாமே*  பரவைமா நெடுங்கடலே ஆனகாலம்,* 
    ஆரானும் அவனுடைய திருவயிற்றில்*  நெடுங்காலம் கிடந்தது,*  உள்ளத்து-

    ஓராத உணர்விலீர்! உணருதிரேல்*  உலகுஅளந்த உம்பர் கோமான்,* 
    பேராளன் பேரான*  பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே.  


    பேய்இருக்கும் நெடுவெள்ளம்*  பெருவிசும்பின் மீதுஓடிப் பெருகுகாலம்,* 
    தாய்இருக்கும் வண்ணமே*  உம்மைத்தன் வயிற்றுஇருத்தி உய்யக்கொண்டான்,*

    போய்இருக்க மற்றுஇங்குஓர்*  புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,*  பெற்ற- 
    தாய்இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ*  மாட்டாத தகவுஅற்றீரே!


    மண்நாடும் விண்நாடும்*  வானவரும்  தானவரும் மற்றும்எல்லாம்* 
    உண்ணாத பெருவெள்ளம்*  உண்ணாமல்  தான்விழுங்கி உய்யக்கொண்ட,*

     


    கணணாளன் கண்ணமங்கை நகராளன்*   கழல்சூடி, அவனை உள்ளத்து* 
    எண்ணாத மானிடத்தை*  எண்ணாத போதுஎல்லாம் இனியஆறே.


    மறம்கிளர்ந்த கருங்கடல் நீர்*  உரம்துரந்து பரந்துஏறி அண்டத்துஅப்பால்,* 
    புறம்கிளர்ந்த காலத்து*  பொன்உலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,*

    அறம்கிளந்த திருவயிற்றின்*  அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    நிறம்கிளர்ந்த கருஞ்சோதி*  நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.


    அண்டத்தின் முகடுஅழுந்த*  அலைமுந்நீர்த்  திரைததும்ப ஆ! ஆ! என்று,* 
    தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்*  தான்அருளி,*  உலகம்ஏழும்-

    உண்டுஒத்த திருவயிற்றின்*  அகம்படியில்  வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    கொண்டல்கை மணிவண்ணன்*  தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே.


    தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,* 
    யாவரையும் ஒழியாமே*  எம்பெருமான்  உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*

    காவளரும் பொழில்மங்கைக்*  கலிகன்றி  ஒலிமாலை கற்று வல்லார்,* 
    பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்*   பொன்உலகில் பொலிவர் தாமே.  (2)