பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
மைந்நின்ற கருங்கடல் வாய்உலகுஇன்றி* வானவரும் யாமும்எல்லாம்,*
நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்* நெடுங்காலம் கிடந்தது ஓரீர்,*
எந்நன்றி செய்தாரா* ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்?*
செய்ந்நன்றி குன்றேல்மின்* தொண்டர்காள்! அண்டனைய ஏத்தீர்களே (2)
நில்லாத பெருவெள்ளம்* நெடுவிசும்பின் மீதுஓடி நிமிர்ந்த காலம்,*
மல்ஆண்ட தடக்கையால்* பகிரண்டம் அகப்படுத்த காலத்து,* அன்று-
எல்லாரும் அறியாரோ* எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில்தேவர்,*
அல்லாதார் தாம்உளரே?* அவன்அருளே உலகுஆவது அறியீர்களே?
நெற்றிமேல் கண்ணானும்* நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,*
ஒற்றைக்கை வெண்பகட்டின்* ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,*
வெற்றிப்போர்க் கடல்அரையன்* விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,*
கொற்றப் போர்ஆழியான்* குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியஆறே!
பனிப்பரவைத் திரைததும்ப* பார்எல்லாம் நெடுங்கடலே ஆனகாலம்,*
இனிக் களைகண்இவர்க்கு இல்லை என்று* உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி*
முனித்தலைவன் முழங்குஒளிசேர்* திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட*
கனிக்களவத் திருஉருவத்து ஒருவனையே* கழல் தொழுமா கல்லீர்களே.
பார்ஆரும் காணாமே* பரவைமா நெடுங்கடலே ஆனகாலம்,*
ஆரானும் அவனுடைய திருவயிற்றில்* நெடுங்காலம் கிடந்தது,* உள்ளத்து-
ஓராத உணர்விலீர்! உணருதிரேல்* உலகுஅளந்த உம்பர் கோமான்,*
பேராளன் பேரான* பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே.
பேய்இருக்கும் நெடுவெள்ளம்* பெருவிசும்பின் மீதுஓடிப் பெருகுகாலம்,*
தாய்இருக்கும் வண்ணமே* உம்மைத்தன் வயிற்றுஇருத்தி உய்யக்கொண்டான்,*
போய்இருக்க மற்றுஇங்குஓர்* புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,* பெற்ற-
தாய்இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ* மாட்டாத தகவுஅற்றீரே!
மண்நாடும் விண்நாடும்* வானவரும் தானவரும் மற்றும்எல்லாம்*
உண்ணாத பெருவெள்ளம்* உண்ணாமல் தான்விழுங்கி உய்யக்கொண்ட,*
கணணாளன் கண்ணமங்கை நகராளன்* கழல்சூடி, அவனை உள்ளத்து*
எண்ணாத மானிடத்தை* எண்ணாத போதுஎல்லாம் இனியஆறே.
மறம்கிளர்ந்த கருங்கடல் நீர்* உரம்துரந்து பரந்துஏறி அண்டத்துஅப்பால்,*
புறம்கிளர்ந்த காலத்து* பொன்உலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,*
அறம்கிளந்த திருவயிற்றின்* அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,*
நிறம்கிளர்ந்த கருஞ்சோதி* நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.
அண்டத்தின் முகடுஅழுந்த* அலைமுந்நீர்த் திரைததும்ப ஆ! ஆ! என்று,*
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்* தான்அருளி,* உலகம்ஏழும்-
உண்டுஒத்த திருவயிற்றின்* அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,*
கொண்டல்கை மணிவண்ணன்* தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே.
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,*
யாவரையும் ஒழியாமே* எம்பெருமான் உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*
காவளரும் பொழில்மங்கைக்* கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,*
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்* பொன்உலகில் பொலிவர் தாமே. (2)