பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
குன்றம் எடுத்து மழைதடுத்து* இளையாரொடும்*
மன்றில் குரவை பிணைந்த மால்* என்னை மால்செய்தான்,*
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்* கிடந்தீர்கின்ற*
அன்றிலின் கூட்டைப்* பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ! (2)
பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து* அரிமாச்செகுத்து,*
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு* வன் பேய்முலை-
வாங்கி உண்ட,* அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய்,*
ஏங்கு வேய்ங்குழல்* என்னோடாடும் இளமையே!.
மல்லோடு கஞ்சனும்* துஞ்ச வென்ற மணிவண்ணன்,*
அல்லி மலர்த்தண்துழாய்* நினைந்திருந்தேனையே,*
எல்லியில் மாருதம்* வந்தடும், அதுவன்றியும்,*
கொல்லை வல்லேற்றின் மணியும்* கோயின்மை செய்யுமே!.
பொருந்து மாமரம்* ஏழும் எய்த புனிதனார்*
திருந்து சேவடி* என்மனத்து நினைதொறும்,*
கருந்தண் மாகடல்* மங்குலார்க்கும் அதுவன்றியும்,*
வருந்த வாடை வரும்* இதற்கினி என்செய்கேன்!
அன்னை முனிவதும்* அன்றிலின் குரல் ஈர்வதும்,*
மன்னு மறிகடல் ஆர்ப்பதும்* வளை சோர்வதும்*
பொன்னங் கலையல்குல்* அன்ன மென்னடைப் பூங்குழல்,*
பின்னை மணாளர்* திறத்தவாயின பின்னையே
ஆழியும் சங்கும் உடைய* நங்கள் அடிகள்தாம்,*
பாழிமையான கனவில்* நம்மைப் பகர்வித்தார்,*
தோழியும் நானும் ஒழிய* வையம் துயின்றது,*
கோழியும் கூகின்றதில்லைக்* கூரிருள் ஆயிற்றே!.
காமன் தனக்கு முறையல்லேன்* கடல் வண்ணனார்,*
மாமணவாளர்* எனக்குத் தானும் மகன்சொல்லில்,*
யாமங்கள் தோறும் எரி வீசும்* என்னிளங் கொங்கைகள்,*
மாமணி வண்ணர்* திறத்த வாய் வளர்கின்றவே!
மஞ்சுறு மாலிருஞ் சோலை* நின்ற மணாளனார்,*
நெஞ்சம் நிறைகொண்டு போயினார்* நினைகின்றிலர்,*
வெஞ்சுடர் போய் விடியாமல்* எவ்விடம் புக்கதோ,*
நஞ்சு உடலம் துயின்றால்* நமக்கினி நல்லதே!
காமன் கணைக்கு ஓர்இலக்கம்ஆய்* நலத்தில்மிகு,*
பூமரு கோல* நம் பெண்மை சிந்தித்திராது போய்*
தூமலர் நீர்கொடு* தோழி.நாம் தொழுதேத்தினால்*
கார்முகில் வண்ணரைக்* கண்களால் காணலாம் கொலோ!.
வென்றி விடையுடன்* ஏழடர்த்த அடிகளை,*
மன்றில் மலிபுகழ்* மங்கைமன் கலிகன்றிசொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* உரைப்பவர் தங்கள்மேல்*
என்றும் நில்லா வினை* ஒன்றும் சொல்லில் உலகிலே (2)