பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,*  மாமழை- 
    அன்று காத்த அம்மான்,*  அரக்கரை-

    வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,?*
    தென்றல் வந்து*  தீ வீசும் என்செய்கேன்!  (2)


    காரும் வார்பனிக்*  கடலும் அன்னவன்,* 
    தாரும் மார்வமும்*  கண்ட தண்டமோ,*

    சோரும் மாமுகில்*  துளியின் ஊடுவந்து,* 
    ஈர வாடைதான்*  ஈரும் என்னையே!


    சங்கும் மாமையும்*  தளரும் மேனிமேல்,* 
    திங்கள் வெம்கதிர்*  சீறும் என்செய்கேன்,*

    பொங்கு வெண்திரைப்*  புணரி வண்ணனார்,* 
    கொங்குஅலர்ந்ததார்*  கூவும் என்னையே!


    அங்குஓர் ஆய்க்குலத்துள்*  வளர்ந்து சென்று,* 
    அங்குஓர்*  தாய்உருஆகி வந்தவள்,*

    கொங்கை நஞ்சுஉண்ட*  கோயின்மை கொலோ,*
    திங்கள் வெம்கதிர்*  சீறுகின்றதே.


    அங்குஓர் ஆள்அரிஆய்,*  அவுணனை- 
    பங்கமா*  இருகூறு செய்தவன்,* 

    மங்குல் மாமதி*  வாங்கவே கொலோ* 
    பொங்கு மாகடல்*  புலம்பு கின்றதே!


    சென்றுவார்*  சிலை வளைத்து இலங்கையை- 
    வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,*

    முன்றில் பெண்ணைமேல்*  முளரிக் கூட்டகத்து,* 
    அன்றிலின் குரல்*  அடரும் என்னையே!


    பூவை வண்ணனார்*  புள்ளின் மேல்வர,* 
    மேவி நின்றுநான்*  கண்ட தண்டமோ,*

    வீவுஇல்ஐங்கணை*  வில்லி அம்புகோத்து,* 
    ஆவியே இலக்குஆக எய்வதே!


    மால் இனம்துழாய்*  வரும் என் நெஞ்சகம்,* 
    மாலின் அம்துழாய்*  வந்து என்உள்புக,*

    கோல வாடையும்*  கொண்டு வந்ததுஓர்* 
    ஆலி வந்ததால்*  அரிது காவலே!


    கெண்டை ஒண்கணும் துயிலும்,*  என்நிறம்- 
    பண்டு பண்டு போல்ஒக்கும்,*  மிக்கசீர்த்

    தொண்டர் இட்ட*  பூந்துளவின் வாசமே,* 
    வண்டு கொண்டு வந்து*  ஊதுமாகிலே


    அன்று பாரதத்து*  ஐவர் தூதனாய்ச்,* 
    சென்ற மாயனை*  செங்கண் மாலினை,*

    மன்றில்ஆர் புகழ்*  மங்கை வாள்கலி,*
    கன்றி சொல்வல்லார்க்கு*  அல்லல் இல்லையே  (2)