பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
கரைஎடுத்த சுரிசங்கும்* கனபவளத்து எழுகொடியும்,*
திரைஎடுத்து வருபுனல்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
விரைஎடுத்த துழாய்அலங்கல்* விறல்வரைத்தோள் புடைபெயர*
வரைஎடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரிவளையே. (2)
அரிவிரவு முகில்கணத்தால்* அகில்புகையால் வரையோடும்*
தெரிவுஅரிய மணிமாடத்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
வரிஅரவின் அணைத்துயின்று* மழைமதத்த சிறுதறுகண்,*
கரிவெருவ மருப்புஒசித்தாற்கு* இழந்தேன்என் கனவளையே.
துங்கமா மணிமாட* நெடுமுகட்டின் சூலிகை, போம்*
திங்கள்மா முகில்துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பைங்கண்மால் விடைஅடர்த்து* பனிமதிகோள் விடுத்துஉகந்த*
செங்கண்மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறிவளையே.
கணம்மருவும் மயில்அகவு* கடிபொழில்சூழ் நெடுமறுகின்,*
திணம்மருவு கனமதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
மணம்மருவு தோள்ஆய்ச்சி* ஆர்க்கபோய், உரலோடும்*
புணர்மருதம் இறநடந்தாற்கு* இழந்தேன் என் பொன்வளையே.
வாய்எடுத்த மந்திரத்தால்* அந்தணர்தம் செய்தொழில்கள்*
தீஎடுத்து மறைவளர்க்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
தாய்எடுத்த சிறுகோலுக்கு* உளைந்துஓடி தயிர்உண்ட,*
வாய்துடைத்த மைந்தனுக்கு* இழந்தேன் என் வரிவளையே.
மடல்எடுத்த நெடுந்தாழை* மருங்குஎல்லாம் வளர்பவளம்,*
திடல்எடுத்து சுடர்இமைக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
அடல்அடர்த்து அன்று இரணியனை* முரண்அழிய அணிஉகிரால்,*
உடல்எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே.
வண்டுஅமரும் மலர்ப்புன்னை* வரிநீழல் அணிமுத்தம்,*
தெண்திரைகள் வரத்திரட்டும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
எண்திசையும் எழுகடலும்* இருநிலனும் பெருவிசும்பும்,*
உண்டுஉமிழ்ந்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே.
கொங்குமலி கருங்குவளை* கண்ஆகத் தெண்கயங்கள்*
செங்கமலம் முகம்அலர்த்தும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
வங்கம்மலி தடங்கடலுள்* வரிஅரவின் அணைத்துயின்ற,*
செங்கமல நாபனுக்கு* இழந்தேன் என் செறிவளையே.
வார்ஆளும் இளங்கொங்கை* நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
சீர்ஆளும் வரைமார்வன்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
பேராளன் ஆயிரம்பேர்* ஆயிரவாய் அரவுஅணைமேல்*
பேராளர் பெருமானுக்கு* இழந்தேன் என் பெய்வளையே.
தேமருவு பொழில்புடைசூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்-
வாமனனை,* மறிகடல்சூழ்* வயல்ஆலி வளநாடன்,*
காமருசீர்க் கலிகன்றி* கண்டுஉரைத்த தமிழ்மாலை,*
நாமருவி இவைபாட* வினைஆய நண்ணாவே. (2)
அங்கும் இங்கும்* வானவர் தானவர் யாவரும்*
எங்கும் இனையைஎன்று* உன்னைஅறியகிலாதுஅலற்றி*
அங்கம்சேரும்* பூமகள் மண்மகள் ஆய்மகள்*
சங்குசக்கரக் கையவன் என்பர்* சரணமே. (2)
சரணமாகிய* நான்மறை நூல்களும் சாராதே*
மரணம் தோற்றம்* வான்பிணி மூப்புஎன்றுஇவை மாய்த்தோம்*
கரணப்பல்படை* பற்றறஓடும் கனல்ஆழி*
அரணத்திண் படைஏந்திய* ஈசற்கு ஆளாயே.
ஆளும் ஆளார் ஆழியும்* சங்கும் சுமப்பார்தாம்*
வாளும் வில்லும் கொண்டு* பின் செல்வார் மற்றுஇல்லை*
தாளும் தோளும்* கைகளைஆரத் தொழக்காணேன்*
நாளும் நாளும் நாடுவன்* அடியேன் ஞாலத்தே
ஞாலம் போனகம்பற்றி* ஓர்முற்றா உருஆகி*
ஆலம்பேர்இலை* அன்னவசம்செய்யும் அம்மானே*
காலம்பேர்வதுஓர்* கார்இருள் ஊழி ஒத்துஉளதால்* உன்
கோலம்கார்எழில்* காணலுற்று ஆழும் கொடியேற்கே
கொடியார்மாடக்* கோளூர்அகத்தும் புளியங்குடியும்*
மடியாதுஇன்னே* நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*
அடியார் அல்லல்தவிர்த்த* அசைவோ? அன்றேல்* இப்
படிதான் நீண்டுதாவிய* அசைவோ? பணியாயே.
பணியாஅமரர்* பணிவும் பண்பும் தாமேஆம்*
அணியார் ஆழியும்* சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்*
தணியா வெம்நோய்* உலகில் தவிர்ப்பான்* திருநீல
மணியார்மேனியோடு* என்மனம் சூழவருவாரே.
வருவார் செல்வார்* வண்பரிசாரத்து இருந்த* என்
திருவாழ்மார்வற்கு* என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
உருவார் சக்கரம்* சங்குசுமந்து இங்குஉம்மோடு*
ஒருபாடுஉழல்வான்* ஓர்அடியானும் உளன்என்றே.
என்றே என்னை* உன்ஏர்ஆர்கோலத்திருந்து அடிக்கீழ்*
நின்றே ஆட்செய்ய* நீகொண்டருள நினைப்பதுதான்*
குன்றுஏழ் பார்ஏழ்* சூழ்கடல்ஞாலம் முழுஏழும்*
நின்றே தாவிய* நீள்கழல் ஆழித் திருமாலே!
திருமால் நான்முகன்* செஞ்சடையான் என்றுஇவர்கள்* எம்
பெருமான் தன்மையை* யார் அறிகிற்பார்? பேசிஎன்*
ஒருமாமுதல்வா!* ஊழிப்பிரான் என்னை ஆளுடைக்*
கருமாமேனியன்! என்பன்* என்காதல் கலக்கவே.
கலக்கம் இல்லா* நல்தவமுனிவர் கரைகண்டோர்*
துளக்கம் இல்லா* வானவர் எல்லாம் தொழுவார்கள்*
மலக்கம் எய்த* மாகடல்தன்னைக் கடைந்தானை*
உலக்க நாம் புகழ்கிற்பது* என்செய்வது உரையீரே.
உரையா வெம்நோய்தவிர* அருள் நீள்முடியானை*
வரையார்மாடம்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
உரையேய் சொல்தொடை* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
நிரையே வல்லார்* நீடு உலகத்துப் பிறவாரே. (2)