பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
பொருமா நீள் படை* ஆழி சங்கத்தொடு,*
திருமா நீள் கழல்* ஏழ் உலகும் தொழ,*
ஒரு மாணிக் குறள் ஆகி,* நிமிர்ந்த,* அக்
கரு மாணிக்கம்* என் கண்ணுளது ஆகுமே.
கண்ணுள்ளே நிற்கும்* காதன்மையால் தொழில்,*
எண்ணிலும் வரும்* என் இனி வேண்டுவம்?*
மண்ணும் நீரும்* எரியும் நல் வாயுவும்*
விண்ணும் ஆய் விரியும்* எம் பிரானையே.
எம்பிரானை* எந்தை தந்தை தந்தைக்கும்-
தம்பிரானை,* தண் தாமரைக் கண்ணனை,*
கொம்பு அராவு* நுண் நேர் இடை மார்பனை,*
எம்பிரானைத் தொழாய்* மட நெஞ்சமே.
நெஞ்சமே நல்லை நல்லை* உன்னைப் பெற்றால்-
என் செய்யோம்?* இனி என்ன குறைவினம்?*
மைந்தனை மலராள்* மணவாளனைத்,*
துஞ்சும்போதும்* விடாது தொடர்கண்டாய்.
கண்டாயே நெஞ்சே* கருமங்கள் வாய்க்கின்று,* ஓர்
எண் தானும் இன்றியே* வந்து இயலுமாறு,*
உண்டானை* உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக்,* கண்டுகொண்டனை நீயுமே.
நீயும் நானும்* இந் நேர்நிற்கில்,* மேல்மற்றோர்.
நோயும் சார்கொடான்* நெஞ்சமே சொன்னேன்,*
தாயும் தந்தையும் ஆய்* இவ் உலகினில்,*
வாயும் ஈசன்* மணிவண்ணன் எந்தையே.
எந்தையே என்றும்* எம் பெருமான் என்றும்,*
சிந்தையுள் வைப்பன்* சொல்லுவன் பாவியேன்,*
எந்தை எம் பெருமான் என்று* வானவர்,*
சிந்தையுள் வைத்துச்* சொல்லும் செல்வனையே.
செல்வ நாரணன் என்ற* சொல் கேட்டலும்,*
மல்கும் கண்பனி* நாடுவன் மாயமே,*
அல்லும் நன்பகலும்* இடைவீடு இன்றி,*
நல்கி என்னை விடான்* நம்பி நம்பியே.
நம்பியை* தென் குறுங்குடி நின்ற,* அச்
செம்பொனே திகழும்* திரு மூர்த்தியை,*
உம்பர் வானவர்* ஆதி அம் சோதியை,*
எம் பிரானை* என் சொல்லி மறப்பனோ?
மறப்பும் ஞானமும்* நான் ஒன்று உணர்ந்திலன்,*
மறக்கும் என்று* செந்தாமரைக் கண்ணொடு,*
மறப்பு அற என் உள்ளே* மன்னினான் தன்னை,*
மறப்பனோ? இனி* யான் என் மணியையே.
மணியை வானவர் கண்ணனை* தன்னது ஓர்-
அணியை,* தென் குருகூர்ச் சடகோபன்,* சொல்
பணிசெய் ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
தணிவிலர் கற்பரேல்,* கல்வி வாயுமே.
கிளர் ஒளி இளமை* கெடுவதன் முன்னம்,*
வளர் ஒளி மாயோன்* மருவிய கோயில்,*
வளர் இளம் பொழில் சூழ்* மாலிருஞ்சோலை,*
தளர்வு இலர் ஆகிச்* சார்வது சதிரே.
சதிர் இள மடவார்* தாழ்ச்சியை மதியாது,*
அதிர் குரல் சங்கத்து* அழகர் தம் கோயில்,*
மதி தவழ் குடுமி* மாலிருஞ்சோலைப்,*
பதியது ஏத்தி* எழுவது பயனே.
பயன் அல்ல செய்து* பயன் இல்லை நெஞ்சே,*
புயல் மழை வண்ணர்* புரிந்து உறை கோயில்,*
மயல் மிகு பொழில் சூழ்* மாலிருஞ்சோலை,*
அயல்மலை அடைவது* அது கருமமே.
கரும வன் பாசம்* கழித்து உழன்று உய்யவே,*
பெருமலை எடுத்தான்* பீடு உறை கோயில்,*
வரு மழை தவழும்* மாலிருஞ்சோலைத்,*
திருமலை அதுவே* அடைவது திறமே.
திறம் உடை வலத்தால்* தீவினை பெருக்காது,*
அறம் முயல் ஆழிப்* படையவன் கோயில்,*
மறு இல் வண் சுனை சூழ்* மாலிருஞ்சோலைப்,*
புறமலை சாரப்* போவது கிறியே.
கிறி என நினைமின்* கீழ்மை செய்யாதே,*
உறி அமர் வெண்ணெய்* உண்டவன் கோயில்,*
மறியொடு பிணை சேர்* மாலிருஞ்சோலை,*
நெறி பட அதுவே* நினைவது நலமே.
நலம் என நினைமின்* நரகு அழுந்தாதே,*
நிலம் முனம் இடந்தான்* நீடு உறை கோயில்,*
மலம் அறு மதி சேர்* மாலிருஞ்சோலை,*
வலம் முறை எய்தி,* மருவுதல் வலமே.
வலஞ்செய்து வைகல்* வலம் கழியாதே,*
வலஞ்செய்யும் ஆய* மாயவன் கோயில்,*
வலஞ்செய்யும் வானோர்* மாலிருஞ்சோலை,,*
வலஞ்செய்து நாளும்* மருவுதல் வழக்கே.
வழக்கு என நினைமின்* வல்வினை மூழ்காது,*
அழக்கொடி அட்டான்* அமர் பெருங்கோயில்,*
மழக் களிற்று இனம் சேர்* மாலிருஞ்சோலை,*
தொழக் கருதுவதே* துணிவது சூதே.
சூது என்று களவும்* சூதும் செய்யாதே,*
வேதம் முன் விரித்தான்* விரும்பிய கோயில்,*
மாது உறு மயில் சேர்* மாலிருஞ்சோலைப்,*
போது அவிழ் மலையே* புகுவது பொருளே.
பொருள் என்று இவ் உலகம்* படைத்தவன் புகழ்மேல்,*
மருள் இல் வண் குருகூர்* வண் சடகோபன்,*
தெருள் கொள்ளச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்து,*
அருளுடையவன் தாள்* அணைவிக்கும் முடித்தே.
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு* சங்கொடு சக்கரம்வில்,*
ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்* தண்டு கொண்டு புள் ஊர்ந்து,* உலகில்
வன்மை உடைய அரக்கர்* அசுரரை மாளப் படைபொருத,*
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற* நான் ஓர் குறைவு இலனே. (2)
குறைவு இல் தடங்கடல் கோள் அரவு ஏறி* தன் கோலச் செந்தாமரைக்கண்,*
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த* ஒளி மணி வண்ணன் கண்ணன்,*
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி* அசுரரைக் காய்ந்த அம்மான்,*
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்* யான் ஒரு முட்டு இலனே.
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்* மூவுலகுக்கு உரிய,*
கட்டியை தேனை அமுதை* நன்பாலை கனியை கரும்பு தன்னை,*
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி* அவன் திறத்துப்
பட்ட பின்னை* இறையாகிலும்* யான் என் மனத்துப் பரிவு இலனே.
',பரிவு இன்றி வாணனைக் காத்தும்'* என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த*
திரிபுரம் செற்றவனும் மகனும்* பின்னும் அங்கியும் போர் தொலைய,*
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை* ஆயனை பொன் சக்கரத்து
அரியினை,* அச்சுதனைப் பற்றி* யான் இறையேனும் இடர் இலனே.
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்* எல்லா உலகும் கழிய,*
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்* உடன் ஏற திண்தேர்கடவி,*
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்* வைதிகன் பிள்ளைகளை,*
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி* ஒன்றும் துயர் இலனே.
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி* நின்ற வண்ணம் நிற்கவே,*
துயரில் மலியும் மனிசர் பிறவியில்* தோன்றி கண் காணவந்து,*
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்* புக உய்க்கும் அம்மான்,*
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ்துற்ற* யான் ஓர் துன்பம் இலனே.
துன்பமும் இன்பமும் ஆகிய* செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,*
இன்பம் இல் வெம் நரகு ஆகி* இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்
மன் பல் உயிர்களும் ஆகி* பலபல மாய மயக்குக்களால்,*
இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று* ஏதும் அல்லல் இலனே.
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்* அழகு அமர் சூழ் ஒளியன்,*
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்* ஆகியும் நிற்கும் அம்மான்,*
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு* எல்லாக் கருமங்களும் செய்,*
எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி* யான் ஓர் துக்கம் இலனே.
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி* துழாய் அலங்கல் பெருமான்,*
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து* வேண்டும் உருவு கொண்டு,*
நக்க பிரானோடு அயன் முதலாக* எல்லாரும் எவையும்,* தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று* ஒன்றும் தளர்வு இலனே.
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த* தனிமுதல் ஞானம் ஒன்றாய்,*
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்* அருவு ஆகி நிற்கும்,*
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை* பூதங்கள் ஐந்தை இருசுடரை,*
கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள்பற்றி* யான் என்றும் கேடு இலனே.
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,* அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண* நலனிடை ஊர்தி பண்ணி,*
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்* ஒரு நாயகமே. (2)
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்* யாதும் இல்லா
அன்று,* நான்முகன் தன்னொடு* தேவர் உலகோடு உயிர் படைத்தான்,*
குன்றம்போல் மணிமாடம் நீடு* திருக்குருகூர் அதனுள்,*
நின்ற ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)
நாடி நீர் வணங்கும் தெய்வமும்* உம்மையும் முன்படைத்தான்,*
வீடு இல் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்* அவன் மேவி உறைகோயில்,*
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனைப்*
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்* பல் உலகீர்! பரந்தே.
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து* அன்று உடனே விழுங்கி,*
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது* கண்டும் தெளியகில்லீர்,*
சிரங்களால் அமரர் வணங்கும்* திருக்குருகூர் அதனுள்,*
பரன் திறம் அன்றி பல் உலகீர்!* தெய்வம் மற்று இல்லை பேசுமினே!
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்* பிறர்க்கும்
நாயகன் அவனே,* கபால நல் மோக்கத்துக்* கண்டுகொண்மின்,*
தேச மாமதிள் சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனுள்,*
ஈசன்பால் ஓர் அவம் பறைதல்* என் ஆவது இலிங்கியர்க்கே?
இலிங்கத்து இட்ட புராணத்தீரும்* சமணரும் சாக்கியரும்*
வலிந்து வாது செய்வீர்களும்* மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்*
மலிந்து செந்நெல் கவரி வீசும்* திருக்குருகூர் அதனுள்,*
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்* ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)
போற்றி மற்று ஓர் தெய்வம்* பேணப் புறத்திட்டு* உம்மை இன்னே
தேற்றி வைத்தது* எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே,*
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு* திருக்குருகூர் அதனுள்,*
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்* அது அறிந்து அறிந்து ஓடுமினே.
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து* மற்று ஓர் தெய்வம்,
பாடி ஆடிப் பணிந்து* பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்,*
கூடி வானவர் ஏத்த நின்ற* திருக்குருகூர் அதனுள்,*
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு* அடிமைபுகுவதுவே
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட* மார்க்கண்டேயன் அவனை*
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது* நாராயணன் அருளே*
கொக்கு அலர் தடம் தாழை வேலித்* திருக்குருகூர் அதனுள்*
மிக்க ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் விளம்புதிரே
விளம்பும் ஆறு சமயமும்* அவைஆகியும் மற்றும் தன்பால்,*
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய* ஆதிப்பிரான் அமரும்,*
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனை,*
உளம் கொள் ஞானத்து வைம்மின்* உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.
உறுவது ஆவது எத்தேவும்* எவ் உலகங்களும் மற்றும்தன்பால்,*
மறு இல் மூர்த்தியோடு ஒத்து* இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,*
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு* திருக்குருகூர் அதனுள்*
குறிய மாண் உரு ஆகிய* நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே.
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்* வண் குருகூர்நகரான்*
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்* மாறன் சடகோபன்,*
வேட்கையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,*
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்* மற்றது கையதுவே. (2)
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும்* பெரிய பாரதம் கைசெய்து* ஐவர்க்குத்-
திறங்கள் காட்டியிட்டுச்* செய்து போன மாயங்களும்*
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை* நின்று நின்று உருக்கி உண்கின்ற* இச்-
சிறந்தவான் சுடரே!* உன்னை என்றுகொல் சேர்வதுவே!* (2)
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்* மாய மாவினை வாய் பிளந்ததும்*
மதுவை வார் குழலார்* குரவை பிணைந்த குழகும்*
அது இது உது என்னலாவன அல்ல* என்னை உன் செய்கை நைவிக்கும்*
முது வைய முதல்வா!* உன்னை என்று தலைப்பெய்வனே?*
பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட* பிள்ளைத் தேற்றமும்* பேர்ந்து ஓர் சாடு இறச்-
செய்ய பாதம் ஒன்றால்* செய்த நின் சிறுச் சேவகமும்*
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள* நீ உன் தாமரைக் கண்கள் நீர்மல்க*
பையவே நிலையும் வந்து* என் நெஞ்சை உருக்குங்களே*
கள்ள வேடத்தைக் கொண்டு போய்* புரம்புக்க ஆறும்* கலந்து அசுரரை-
உள்ளம் பேதம் செய்திட்டு* உயிர் உண்ட உபாயங்களும்*
வெள்ள நீர்ச் சடையானும்* நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்*
உள்ளம் உள் குடைந்து* என் உயிரை உருக்கி உண்ணுமே*.
உண்ண வானவர் கோனுக்கு* ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்*
வண்ண மால் வரையை எடுத்து* மழை காத்தலும்*
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து* கடந்து இடந்து மணந்த மாயங்கள்*
எண்ணும்தோறும் என் நெஞ்சு* எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே*.
நின்ற ஆறும் இருந்த ஆறும்/* கிடந்த ஆறும் நினைப்பு அரியன*
ஒன்று அலா உருவு ஆய்* அருவு ஆய நின் மாயங்கள்*
நின்று நின்று நினைக்கின்றேன்* உன்னை எங்ஙனம் நினைகிற்பன்* பாவியேற்கு-
ஒன்று நன்கு உரையாய்* உலகம் உண்ட ஒண் சுடரே!*
ஒண் சுடரோடு இருளுமாய்* நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து* என்-
கண் கொளாவகை* நீ கரந்து என்னைச் செய்கின்றன*
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்* என் கரிய மாணிக்கமே!* என் கண்கட்குத்-
திண் கொள்ள ஒரு நாள்* அருளாய் உன் திரு உருவே*.
திரு உருவு கிடந்த ஆறும்* கொப்பூழ்ச் செந்தாமரைமேல்* திசைமுகன்-
கருவுள் வீற்றிருந்து* படைத்திட்ட கருமங்களும்*
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்* என் நெஞ்சம் நின்று நெக்கு*
அருவி சோரும் கண்ணீர்* என் செய்கேன் அடியேனே!*
அடியை மூன்றை இரந்த ஆறும்* அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்-
முடிய* ஈர் அடியால்* முடித்துக்கொண்ட முக்கியமும் *
நொடியுமாறு அவை கேட்கும்தோறும்* என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்*
கொடிய வல்வினையேன்* உன்னை என்றுகொல் கூடுவதே?*
கூடி நீரைக் கடைந்த ஆறும்* அமுதம் தேவர் உண்ண* அசுரரை-
வீடும் வண்ணங்களே* செய்து போன வித்தகமும்*
ஊடு புக்கு எனது ஆவியை* உருக்கி உண்டிடுகின்ற* நின் தன்னை-
நாடும் வண்ணம் சொல்லாய்* நச்சு நாகு அணையானே!*
நாகு அணைமிசை நம் பிரான்* சரணே சரண் நமக்கு என்று* நாள்தொறும்-
ஏக சிந்தையனாய்க்* குருகூர்ச் சடகோபன் மாறன்*
ஆக நூற்ற அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்*
மாக வைகுந்தத்து* மகிழ்வு எய்துவர் வைகலுமே*.
உலகம் உண்ட பெருவாயா!* உலப்பு இல் கீர்த்தி அம்மானே,*
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!* நெடியாய் அடியேன் ஆர் உயிரே,*
திலதம் உலகுக்கு ஆய் நின்ற* திருவேங்கடத்து எம் பெருமானே,*
குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.
கூறாய் நீறு ஆய் நிலன் ஆகி* கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,*
சீறா எரியும் திரு நேமி வலவா!* தெய்வக் கோமானே,*
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும்* திருவேங்கடத்தானே,*
ஆறா அன்பில் அடியேன்* உன் அடிசேர் வண்ணம் அருளாயே.
வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா!* மாய அம்மானே,*
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!* இமையோர் அதிபதியே,*
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்* திருவேங்கடத்தானே,*
அண்ணலே! உன் அடிசேர* அடியேற்கு ஆஆ என்னாயே!
ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும்* அசுரர் வாழ் நாள்மேல்,*
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!* திரு மா மகள் கேள்வா-
தேவா* சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
பூ ஆர் கழல்கள் அருவினையேன்* பொருந்துமாறு புணராயே.
புணரா நின்ற மரம் ஏழ்* அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,*
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்* நடுவே போன முதல்வா ஓ,*
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்* திருவேங்கடத்தானே,*
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்* சேர்வது அடியேன் எந்நாளே?
,எந்நாளே நாம் மண் அளந்த* இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,*
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி* இறைஞ்சி இனம் இனமாய்,*
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்* திருவேங்கடத்தானே,*
மெய்ந் நான் எய்தி எந்நாள்* உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!* இமையோர் அதிபதியே,*
கொடியா அடு புள் உடையானே!* கோலக் கனிவாய்ப் பெருமானே,*
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே!* திருவேங்கடத்து எம் பெருமானே,*
நொடி ஆர் பொழுதும் உன பாதம்* காண நோலாது ஆற்றேனே
நோலாது ஆற்றேன் உன பாதம்* காண என்று நுண் உணர்வின்,*
நீல் ஆர் கண்டத்து அம்மானும்* நிறை நான்முகனும் இந்திரனும்,*
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்* திருவேங்கடத்தானே,*
மாலாய் மயக்கி அடியேன்பால்* வந்தாய் போலே வாராயே.
வந்தாய் போலே வாராதாய்!* வாராதாய் போல் வருவானே,*
செந்தாமரைக் கண் செங்கனிவாய்* நால் தோள் அமுதே! எனது உயிரே,*
சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்* திருவேங்கடத்தானே,*
அந்தோ அடியேன் உன பாதம்* அகலகில்லேன் இறையுமே.
அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து* அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்*
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்* பழனக் குருகூர்ச் சடகோபன்,*
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்* திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,*
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து* பெரிய வானுள் நிலாவுவரே.
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்* தானும் இவ் ஏழ் உலகை,*
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து* ஆள்கின்ற எங்கள் பிரான்,*
அன்புற்று அமர்ந்து உறைகின்ற* அணி பொழில் சூழ் திருவாறன்விளை,*
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து* கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)
ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி* அகல் இடம் முற்றவும் ஈர் அடியே*
ஆகும்பரிசு நிமிர்ந்த* திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்*
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு* மதிள் திருவாறன்விளை,*
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து* கைதொழக் கூடும்கொலோ!
கூடும் கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*
ஆடும் பறவைமிசைக் கண்டு* கைதொழுது அன்றி அவன் உறையும்,*
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி* ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*
நீடு பொழில் திருவாறன்விளை தொழ* வாய்க்கும்கொல் நிச்சலுமே!
வாய்க்கும்கொல் நிச்சலும்* எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற*
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்* வயல் சூழ் திருவாறன்விளை,*
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்* வடமதுரைப் பிறந்த,*
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்* மலர் அடிப்போதுகளே.
மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்* இருத்தி வணங்க,*
பலர் அடியார் முன்பு அருளிய* பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,*
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு* மதிள் திருவாறன்விளை,*
உலகம் மலி புகழ் பாட* நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்* தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை* அணி நெடும் தோள் புணர்ந்தான்,*
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப* உள்ளே இருக்கின்ற பிரான்,*
நின்ற அணி திருவாறன்விளை என்னும்* நீள் நகரம் அதுவே.
நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்* திருவாறன்விளை,*
நீள் நகரத்து உறைகின்ற பிரான்* நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்*
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய* வெம் போர்கள் செய்து.,*
வாணனை ஆயிரம் தோள் துணித்தான்* சரண் அன்றி மற்று ஒன்று இலமே.
அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று* அகல் இரும் பொய்கையின்வாய்,*
நின்று தன் நீள் கழல் ஏத்திய* ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,*
சென்று அங்கு இனிது உறைகின்ற* செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,*
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?* தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி* தெளி விசும்பு ஏறலுற்றால்,*
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்* அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,*
யாவரும் வந்து வணங்கும் பொழில்* திருவாறன்விளை அதனை,*
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்* என்னும் என் சிந்தனையே.
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை* தேவபிரான் அறியும்,*
சிந்தையினால் செய்வ தான் அறியாதன* மாயங்கள் ஒன்றும் இல்லை,*
சிந்தையினால் சொல்லினால் செய்கையால்* நிலத்தேவர் குழுவணங்கும்,*
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை* தீர்த்தனுக்கு அற்ற பின்னே.
தீர்த்தனுக்கு அற்றபின்* மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி* தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகி* செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தீர்த்தங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்களைத்,* தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்* தம் தேவியர்க்கே. (2)
நெடுமாற்குஅடிமை செய்வேன்போல்* அவனைக் கருத வஞ்சித்து*
தடுமாற்றுஅற்ற தீக்கதிகள்* முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்*
கொடுமாவினையேன் அவன்அடியார் அடியே* கூடும் இதுஅல்லால்*
விடுமாறுஎன்பதுஎன்? அந்தோ!* வியன் மூவுலகு பெறினுமே?. (2)
வியன் மூவுலகு பெறினும்போய்* தானே தானே ஆனாலும்*
புயல் மேகம்போல் திருமேனிஅம்மான்* புனைபூம் கழல்அடிக்கீழ்ச்*
சயமே அடிமை தலைநின்றார்* திருத்தாள் வணங்கி* இம்மையே
பயனே இன்பம் யான்பெற்றது* உறுமோ பாவியேனுக்கே?
உறுமோ பாவியேனுக்கு* இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய*
சிறுமாமேனி நிமிர்த்த* என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*
நறுமாவிரைநாள் மலர்அடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவன்அடியார்*
சிறுமா மனிசராய் என்னைஆண்டார்* இங்கே திரியவே.
இங்கே திரிந்தேற்கு இழுக்குஉற்றுஎன்!* இருமாநிலம் முன்உண்டுஉமிழ்ந்த*
செங்கோலத்த பவளவாய்ச்* செந்தாமரைக்கண் என்அம்மான்*
பொங்குஏழ் புகழ்கள் வாயவாய்* புலன்கொள் வடிவு என்மனத்ததாய்*
அங்குஏய் மலர்கள் கையவாய்* வழிபட்டுஓட அருளிலே?
வழிபட்டுஓட அருள்பெற்று* மாயன் கோல மலர்அடிக்கீழ்ச்*
சுழிபட்டுஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து* இன்புற்றுஇருந்தாலும்*
இழிபட்டுஓடும் உடலினில்பிறந்து* தன்சீர் யான்கற்று*
மொழிபட்டுஓடும் கவிஅமுதம்* நுகர்ச்சி உறுமோ முழுதுமே?
நுகர்ச்சி உறுமோ மூவுலகின்* வீடு பேறு தன்கேழ்இல்*
புகர்ச்செம்முகத்த களிறுஅட்ட* பொன்ஆழிக்கை என்அம்மான்*
நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்* நீண்ட அசுரர் உயிர்எல்லாம்*
தகர்த்துஉண்டுஉழலும் புள்பாகன்* பெரிய தனிமாப் புகழே?
தனிமாப் புகழே எஞ்ஞான்றும்* நிற்கும் படியாத் தான்தோன்றி*
முனிமாப் பிரம முதல்வித்தாய்* உலகம் மூன்றும் முளைப்பித்த*
தனிமாத் தெய்வத் தளிர்அடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவன்அடியார்*
நனிமாக் கலவி இன்பமே* நாளும் வாய்க்க நங்கட்கே
நாளும் வாய்க்க நங்கட்கு* நளிர்நீர்க் கடலைப் படைத்து* தன்
தாளும் தோளும் முடிகளும்* சமன் இலாத பலபரப்பி*
நீளும் படர்பூங் கற்பகக்காவும்* நிறைபல்நாயிற்றின்*
கோளும்உடைய மணிமலைபோல்* கிடந்தான் தமர்கள் கூட்டமே.
தமர்கள் கூட்ட வல்வினையை* நாசம் செய்யும் சதுமூர்த்தி*
அமர்கொள் ஆழி சங்குவாள்* வில்தண்டுஆதி பல்படையன்*
குமரன் கோல ஐங்கணைவேள்தாதை* கோதுஇல் அடியார்தம்*
தமர்கள் தமர்கள் தமர்களாம்* சதிரே வாய்க்க தமியேற்கே
வாய்க்க தமியேற்கு* ஊழிதோறுஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்குதோள்* பொன்ஆழிக்கை என்அம்மான்*
நீக்கம்இல்லா அடியார்தம்* அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள்* அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்* நல்ல கோட்பாடே
நல்ல கோட்பாட்டு உலகங்கள்* மூன்றினுள்ளும் தான்நிறைந்த*
அல்லிக் கமலக் கண்ணனை* அம்தண் குருகூர்ச் சடகோபன்*
சொல்லப் பட்ட ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
நல்ல பதத்தால் மனைவாழ்வர்* கொண்ட பெண்டீர் மக்களே. (2)
மாலைநண்ணித்* தொழுதுஎழுமினோ வினைகெட*
காலைமாலை* கமலமலர் இட்டு நீர்*
வேலைமோதும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து*
ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்* அடிஇணைகளே. (2)
கள்அவிழும் மலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
நள்ளிசேரும் வயல்சூழ்* கிடங்கின்புடை*
வெள்ளிஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்
உள்ளி* நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!
தொண்டர் நும்தம்* துயர்போகநீர் கமாய்*
விண்டுவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
வண்டுபாடும் பொழில்சூழ்* திருக்கண்ணபுரத்து
அண்டவாணன்* அமரர்பெருமானையே
மானைநோக்கி* மடப்பின்னைதன் கேள்வனை*
தேனைவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
வானைஉந்தும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்*
தான்நயந்த பெருமான்* சரண்ஆகுமே.
சரணம்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
மரணம்ஆனால்* வைகுந்தம் கொடுக்கும்பிரான்*
அரண்அமைந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்
தரணியாளன்* தனதுஅன்பர்க்கு அன்புஆகுமே.
அன்பன்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
செம்பொன்ஆகத்து* அவுணன்உடல் கீண்டவன்,
நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து
அன்பன்* நாளும் தன* மெய்யர்க்கு மெய்யனே
மெய்யன்ஆகும்* விரும்பித் தொழுவார்க்குஎல்லாம்*
பொய்யன்ஆகும்* புறமே தொழுவார்க்குஎல்லாம்*
செய்யில்வாளைஉகளும்* திருக்கண்ணபுரத்து
ஐயன்* ஆகத்துஅணைப்பார்கட்கு அணியனே.
அணியன்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
பிணியும்சாரா* பிறவிகெடுத்துஆளும்*
மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்* திருக்கண்ணரம்
பணிமின்* நாளும் பரமேட்டிதன் பாதமே
பாதம்நாளும்* பணிய தணியும்பிணி*
ஏதம்சாரா* எனக்கேல் இனிஎன்குறை?*
வேதநாவர் விரும்பும்* திருக்கண்ணபுரத்து
ஆதியானை* அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.
இல்லை அல்லல்* எனக்கேல்இனி என்குறை?
அல்லிமாதர் அமரும்* திருமார்பினன்*
கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்
சொல்ல* நாளும் துயர் பாடுசாராவே.
பாடுசாரா* வினைபற்றுஅற வேண்டுவீர்*
மாடம்நீடு* குருகூர்ச்சடகோபன்* சொல்
பாடலானதமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்-
பாடிஆடிப்* பணிமின் அவன் தாள்களே (2)
முனியே! நான்முகனே!* முக்கண்ணப்பா* என்பொல்லாக்-
கனிவாய்த்* தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*
தனியேன்ஆர்உயிரே!* என்தலை மிசையாய் வந்திட்டு*
இனிநான் போகல்ஒட்டேன்* ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே. (2)
மாயம்செய்யேல் என்னை* உன்திருமார்வத்து மாலைநங்கை*
வாசம்செய் பூங்குழலாள்* திருஆணை நின்ஆணை கண்டாய்*
நேசம்செய்து உன்னோடு என்னை* உயிர் வேறுஇன்றி ஒன்றாகவே*
கூசம்செய்யாது கொண்டாய்* என்னைக்கூவிக் கொள்ளாய் வந்துஅந்தோ!
கூவிக்கொள்ளாய் வந்துஅந்தோ!* என்பொல்லாக் கருமாணிக்கமே!*
ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு* நின்அலால் அறிகின்றி லேன்யான்*
மேவித்தொழும் பிரமன் சிவன்* இந்திரன் ஆதிக்குஎல்லாம்*
நாவிக் கமல முதல்கிழங்கே!* உம்பர் அந்ததுவே.
உம்பர்அம்தண் பாழேஓ!* அதனுள்மிசை நீயேஓ*
அம்பரம் நல்சோதி!* அதனுள் பிரமன் அரன் நீ*
உம்பரும் யாதவரும் படைத்த* முனிவன் அவன்நீ*
எம்பரம் சாதிக்கலுற்று* என்னைப்போர விட்டிட்டாயே.
போரவிட்டிட்டு என்னை* நீபுறம்போக்கலுற்றால்* பின்னையான்-
ஆரைக்கொண்டு எத்தைஅந்தோ!* எனதுஎன்பதுஎன்? யான்என்பதுஎன்?*
தீர இரும்புஉண்ட நீரதுபோல* என்ஆர்உயிரை-
ஆரப்பருக* எனக்கு ஆராஅமுதுஆனாயே.
எனக்கு ஆராஅமுதாய்* எனதுஆவியை இன்உயிரை*
மனக்குஆராமை மன்னி உண்டிட்டாய்* இனிஉண்டொழியாய்*
புனக்காயாநிறத்த* புண்டரீகக்கண் செங்கனிவாய்*
உனக்குஏற்கும் கோலமலர்ப்பாவைக்கு* அன்பா! என்அன்பேயோ!
கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய* என் அன்பேயோ*
நீலவரை இரண்டு பிறைகவ்வி* நிமிர்ந்தது ஒப்ப*
கோல வராகம்ஒன்றாய்* நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்*
நீலக் கடல்கடைந்தாய்!* உன்னைபெற்று இனிப் போக்குவனோ? (2)
பெற்றுஇனிப் போக்குவனோ* உன்னை என் தனிப்பேருயிரை*
உற்ற இருவினையாய்* உயிராய்ப் பயன் ஆவையாய்*
முற்றஇம் மூவுலகும்* பெரும்தூறுஆய் தூற்றில்புக்கு*
முற்றக் கரந்துஒளித்தாய்!* என்முதல் தனிவித்தேயோ!
முதல்தனி வித்தேயோ!* முழுமூவுலகுஆதிக்கு எல்லாம்*
முதல்தனி உன்னைஉன்னை* எனைநாள் வந்து கூடுவன்நான்?*
முதல்தனி அங்கும்இங்கும்* முழுமுற்றுறுவாழ் பாழாய்*
முதல்தனி சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவிலீஓ!
சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவில் பெரும் பாழேயோ*
சூழ்ந்ததனில் பெரிய* பரநல் மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில் பெரிய* சுடர்ஞான இன்பமேயோ!*
சூழ்ந்ததனில் பெரிய* என் அவாஅறச் சூழ்ந்தாயே! (2)
அவாஅறச் சூழ்* அரியை அயனை அரனை அலற்றி*
அவாஅற்று வீடுபெற்ற* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
அவாஇல் அந்தாதிகளால்* இவைஆயிரமும்* முடிந்த-
அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்* பிறந்தார் உயர்ந்தே. (2)