பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
பத்து உடை அடியவர்க்கு எளியவன்;* பிறர்களுக்கு அரிய
வித்தகன்* மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
மத்து உறு கடை வெண்ணெய்* களவினில் உரவிடை யாப்புண்டு*
எத்திறம், உரலினோடு* இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)
எளிவரும் இயல்வினன்* நிலை வரம்பு இல பல பிறப்பாய்*
ஒளிவரும் முழு நலம்* முதல் இல கேடு இல வீடு ஆம்*
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்* முழுவதும்; இறையோன்*
அளிவரும் அருளினோடு* அகத்தனன் புறத்தனன் அமைந்தே.
அமைவு உடை அறநெறி* முழுவதும் உயர்வு அற உயர்ந்து*
அமைவு உடை முதல் கெடல்* ஒடிவு இடை அற நிலம் அது ஆம்*
அமைவு உடை அமரரும்* யாவையும் யாவரும் தான் ஆம்*
அமைவு உடை நாரணன்* மாயையை அறிபவர் யாரே?
யாரும் ஓர் நிலைமையன் என* அறிவு அரிய எம் பெருமான்*
யாரும் ஓர் நிலைமையன் என* அறிவு எளிய எம் பெருமான்*
பேரும் ஓர் ஆயிரம்* பிறபல உடைய எம் பெருமான்*
பேரும் ஓர் உருவமும்* உளது இல்லை இலது இல்லை பிணக்கே.
ஊனில் வாழ் உயிரே* நல்லை போ உன்னைப் பெற்று,*
வான் உளார் பெருமான்* மதுசூதன் என் அம்மான்,*
தானும் யானும் எல்லாம்* தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,*
தேனும் பாலும் நெய்யும்* கன்னலும் அமுதும் ஒத்தே.
ஒத்தார் மிக்காரை* இலையாய மாமாய,*
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய்,* என்னைப் பெற்ற-
அத் தாய் ஆய் தந்தை ஆய்* அறியாதன அறிவித்து,*
அத்தா, நீ செய்தன* அடியேன் அறியேனே.
அறியாக் காலத்துள்ளே* அடிமைக்கண் அன்பு செய்வித்து,*
அறியா மா மாயத்து* அடியேனை வைத்தாயால்,*
அறியாமைக் குறள் ஆய்* நிலம் மாவலி மூவடி என்று,*
அறியாமை வஞ்சித்தாய்* எனது ஆவியுள் கலந்தே.
எனது ஆவியுள் கலந்த* பெரு நல் உதவிக் கைம்மாறு,*
எனது ஆவி தந்தொழிந்தேன்,* இனி மீள்வது என்பது உண்டே,*
எனது ஆவி ஆவியும் நீ* பொழில் ஏழும் உண்ட எந்தாய்,*
எனது ஆவி யார்? யான் ஆர்?* தந்த நீ கொண்டாக்கினையே.
இனி யார் ஞானங்களால்* எடுக்கல் எழாத எந்தாய்,*
கனிவார் வீட்டு இன்பமே* என் கடல் படா அமுதே,*
தனியேன் வாழ் முதலே* பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,*
நுனி ஆர் கோட்டில் வைத்தாய்* நுன பாதம் சேர்ந்தேனே.
சேர்ந்தார் தீவினைகட்கு* அரு நஞ்சை திண் மதியை,*
தீர்ந்தார் தம் மனத்துப்* பிரியாது அவர் உயிரைச்,*
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை* அரக்கியை மூக்கு-
ஈர்ந்தாயை,* அடியேன் அடைந்தேன்* முதல் முன்னமே.
முன் நல் யாழ் பயில் நூல்* நரம்பின் முதிர் சுவையே,*
பல் நலார் பயிலும்* பரனே பவித்திரனே,*
கன்னலே அமுதே* கார் முகிலே என் கண்ணா,*
நின் அலால் இலேன்காண்* என்னை நீ குறிக்கொள்ளே.
குறிக்கொள் ஞானங்களால்* எனை ஊழி செய் தவமும்,*
கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*
உறிக்கொண்ட வெண்ணெய் பால்* ஒளித்து உண்ணும் அம்மான் பின்,*
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்* பிறவித் துயர் கடிந்தே.
கடி வார் தண் அம் துழாய்க்* கண்ணன் விண்ணவர் பெருமான்,*
படி வானம் இறந்த* பரமன் பவித்திரன் சீர்,*
செடி ஆர் நோய்கள் கெட* படிந்து குடைந்து ஆடி,*
அடியேன் வாய்மடுத்துப்* பருகிக் களித்தேனே.
களிப்பும் கவர்வும் அற்று* பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,*
ஒளிக்கொண்ட சோதியுமாய்* உடன்கூடுவது என்று கொலோ,*
துளிக்கின்ற வான் இந்நிலம்* சுடர் ஆழி சங்கு ஏந்தி,*
அளிக்கின்ற மாயப் பிரான்* அடியார்கள் குழாங்களையே.
குழாம் கொள் பேர் அரக்கன்* குலம் வீய முனிந்தவனை,*
குழாம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த,*
குழாம் கொள் ஆயிரத்துள்* இவை பத்தும் உடன் பாடி,*
குழாங்களாய் அடியீர் உடன்* கூடிநின்று ஆடுமினே.
ஒழிவு இல் காலம் எல்லாம்* உடனாய் மன்னி,*
வழு இலா* அடிமை செய்யவேண்டும் நாம்,*
தெழி குரல் அருவித்* திருவேங்கடத்து,*
எழில் கொள் சோதி* எந்தை தந்தை தந்தைக்கே. (2)
எந்தை தந்தை தந்தை* தந்தை தந்தைக்கும்
முந்தை,* வானவர் வானவர் கோனொடும்,*
சிந்து பூ மகிழும்* திருவேங்கடத்து,*
அந்தம் இல் புகழ்க்* கார் எழில் அண்ணலே.
அண்ணல் மாயன்* அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி,* வாய்க் கருமாணிக்கம்,*
தெள் நிறை சுனை நீர்த்,* திருவேங்கடத்து,*
எண் இல் தொல் புகழ்* வானவர் ஈசனே.
ஈசன் வானவர்க்கு* என்பன் என்றால்,* அது
தேசமோ* திருவேங்கடத்தானுக்கு?,*
நீசனேன்* நிறைவு ஒன்றும் இலேன்,* என்கண்
பாசம் வைத்த* பரம் சுடர்ச் சோதிக்கே.
சோதி ஆகி* எல்லா உலகும் தொழும்,*
ஆதிமூர்த்தி என்றால்* அளவு ஆகுமோ?,*
வேதியர்* முழு வேதத்து அமுதத்தை,*
தீது இல் சீர்த்* திருவேங்கடத்தானையே.
வேம் கடங்கள்* மெய்மேல் வினை முற்றவும்,*
தாங்கள் தங்கட்கு* நல்லனவே செய்வார்,*
வேங்கடத்து உறைவார்க்கு* நம என்னல்-
ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.
சுமந்து மாமலர்* நீர் சுடர் தூபம் கொண்டு,*
அமர்ந்து வானவர்* வானவர் கோனொடும்,*
நமன்று எழும்* திருவேங்கடம் நங்கட்குச்,*
சமன் கொள் வீடு தரும்* தடங் குன்றமே.
குன்றம் ஏந்திக்* குளிர் மழை காத்தவன்,*
அன்று ஞாலம்* அளந்த பிரான்,* பரன்
சென்று சேர்* திருவேங்கட மா மலை,*
ஒன்றுமே தொழ* நம் வினை ஓயுமே. (2)
ஓயும் மூப்புப்* பிறப்பு இறப்பு:பிணி,*
வீயுமாறு செய்வான்* திருவேங்கடத்து
ஆயன்,* நாள் மலர் ஆம்* அடித்தாமரை,*
வாயுள்ளும்மனத்துள்ளும்* வைப்பார்கட்கே.
வைத்த நாள் வரை* எல்லை குறுகிச் சென்று,*
எய்த்து இளைப்பதன்* முன்னம் அடைமினோ,*
பைத்த பாம்பு அணையான்* திருவேங்கடம்,*
மொய்த்த சோலை* மொய்பூந்தடந் தாழ்வரே.
தாள் பரப்பி* மண் தாவிய ஈசனை,*
நீள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொல்,*
கேழ் இல் ஆயிரத்து* இப் பத்தும் வல்லவர்*
வாழ்வர் வாழ்வு எய்தி* ஞாலம் புகழவே. (2)
கோவை வாயாள் பொருட்டு* ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,* மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்!* குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,*
பூவை வீயா நீர் தூவிப்* போதால் வணங்கேனேலும்,* நின்
பூவை வீயாம் மேனிக்குப்* பூசும் சாந்து என் நெஞ்சமே.
பூசும் சாந்து என் நெஞ்சமே* புனையும் கண்ணி எனதுடைய,*
வாசகம் செய் மாலையே* வான் பட்டு ஆடையும் அஃதே,*
தேசம் ஆன அணிகலனும்* என் கைகூப்புச் செய்கையே,*
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த* எந்தை ஏக மூர்த்திக்கே.
ஏக மூர்த்தி இரு மூர்த்தி* மூன்று மூர்த்தி பல மூர்த்தி-
ஆகி,* ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,*
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற* நாராயணனே உன்-
ஆகம் முற்றும் அகத்து அடக்கி* ஆவி அல்லல் மாய்த்ததே.
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த* மாயப் பேய் உயிர்-
மாய்த்த,* ஆய மாயனே! வாமனனே மாதவா,*
பூத்தண் மாலை கொண்டு* உன்னைப் போதால் வணங்கேனேலும்,* நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்* புனையும் கண்ணி எனது உயிரே.
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,*
எண் இல் பல்கலன்களும்* ஏலும் ஆடையும் அஃதே,*
நண்ணி மூவுலகும்* நவிற்றும் கீர்த்தியும் அஃதே,*
கண்ணன் எம் பிரான் எம்மான்* கால சக்கரத்தானுக்கே.
கால சக்கரத்தொடு* வெண் சங்கம் கை ஏந்தினாய்,*
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாராயணனே என்று என்று,*
ஓலம் இட்டு நான் அழைத்தால்* ஒன்றும் வாராயாகிலும்,*
கோலம் ஆம் என் சென்னிக்கு* உன் கமலம் அன்ன குரைகழலே.
குரைகழல்கள் நீட்டி* மண் கொண்ட கோல வாமனா,*
குரை கழல் கைகூப்புவார்கள்* கூட நின்ற மாயனே,*
விரை கொள் பூவும் நீரும்கொண்டு* ஏத்தமாட்டேனேலும்,* உன்
உரை கொள் சோதித் திரு உருவம்* என்னது ஆவி மேலதே.
என்னது ஆவி மேலையாய்* ஏர் கொள் ஏழ் உலகமும்,*
துன்னி முற்றும் ஆகி நின்ற* சோதி ஞான மூர்த்தியாய்,*
உன்னது என்னது ஆவியும்,* என்னது உன்னது ஆவியும்*
இன்ன வண்ணமே நின்றாய்* என்று உரைக்க வல்லேனே?
உரைக்க வல்லேன் அல்லேன்* உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்*
கரைக்கண் என்று செல்வன் நான்?* காதல் மையல் ஏறினேன்,*
புரைப்பு இலாத பரம்பரனே!* பொய் இலாத பரஞ்சுடரே,*
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த* யானும் ஏத்தினேன்.
யானும் ஏத்தி* ஏழ் உலகும் முற்றும் ஏத்தி,* பின்னையும்
தானும் ஏத்திலும்* தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்,*
தேனும் பாலும் கன்னலும்* அமுதும் ஆகித் தித்திப்ப,*
யானும் எம் பிரானையே ஏத்தினேன்* யான் உய்வானே
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி* கண்ணன் ஒண் கழல்கள் மேல்*
செய்ய தாமரைப் பழனத்* தென்னன் குருகூர்ச் சடகோபன்,*
பொய் இல் பாடல் ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்,*
வையம் மன்னி வீற்றிருந்து* விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)
மாசு அறு சோதி* என் செய்ய வாய் மணிக்குன்றத்தை*
ஆசு அறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே*
பாசறவு எய்தி* அறிவு இழந்து எனை நாளையம்?*
ஏசு அறும் ஊரவர் கவ்வை* தோழீ என் செய்யுமே?*
என் செய்யும் ஊரவர் கவ்வை* தோழீ இனி நம்மை*
என் செய்ய தாமரைக் கண்ணன்* என்னை நிறை கொண்டான்*
முன் செய்ய மாமை இழந்து* மேனி மெலிவு எய்தி*
என் செய்ய வாயும் கருங்கண்ணும்* பயப்பு ஊர்ந்தவே*.
ஊர்ந்த சகடம்* உதைத்த பாதத்தன்* பேய்முலை-
சார்ந்து சுவைத்த செவ்வாயன்* என்னை நிறை கொண்டான்*
பேர்ந்தும் பெயர்ந்தும்* அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்*
தீர்ந்த என் தோழீ!* என் செய்யும் ஊரவர் கவ்வையே?*
ஊரவர் கவ்வை எரு இட்டு* அன்னை சொல் நீர் படுத்து*
ஈர நெல் வித்தி முளைத்த* நெஞ்சப் பெருஞ் செய்யுள்*
பேர் அமர் காதல்* கடல் புரைய விளைவித்த*
கார் அமர் மேனி* நம் கண்ணன் தோழீ! கடியனே*
கடியன் கொடியன்* நெடிய மால் உலகம் கொண்ட-
அடியன்* அறிவு அரு மேனி மாயத்தன்* ஆகிலும்-
கொடிய என் நெஞ்சம்* அவன் என்றே கிடக்கும் எல்லே*
துடி கொள் இடை மடத் தோழீ!* அன்னை என் செய்யுமே?
அன்னை என் செய்யில் என்?* ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்*
என்னை இனி உமக்கு ஆசை இல்லை* அகப்பட்டேன்*
முன்னை அமரர் முதல்வன்* வண் துவராபதி-
மன்னன்* மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.
வலையுள் அகப்படுத்து* என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு*
அலை கடல் பள்ளி அம்மானை* ஆழிப்பிரான் தன்னை*
கலை கொள் அகல் அல்குல் தோழீ!* நம் கண்களால் கண்டு*
தலையில் வணங்கவும் ஆம் கொலோ?* தையலார் முன்பே*.
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து* மருது இடை-
போய் முதல் சாய்த்து* புள் வாய் பிளந்து களிறு அட்ட*
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை* எந் நாள்கொலோ*
யாம் உறுகின்றது தோழீ!* அன்னையர் நாணவே?*
நாணும் நிறையும் கவர்ந்து* என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு*
சேண் உயர் வானத்து இருக்கும்* தேவ பிரான் தன்னை*
ஆணை என் தோழீ!* உலகுதோறு அலர் தூற்றி* ஆம்-
கோணைகள் செய்து* குதிரியாய் மடல் ஊர்துமே*.
யாம் மடல் ஊர்ந்தும்* எம் ஆழி அங்கைப் பிரான் உடை*
தூ மடல் தண் அம் துழாய்* மலர் கொண்டு சூடுவோம்*
ஆம் மடம் இன்றி* தெருவுதோறு அயல் தையலார்*
நா மடங்காப் பழி தூற்றி* நாடும் இரைக்கவே*.
இரைக்கும் கருங் கடல் வண்ணன்* கண்ண பிரான் தன்னை*
விரைக் கொள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
நிரைக் கொள் அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரைக்க வல்லார்க்கு* வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்* (2)
நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமும் ஆய்*
வெல்பகையும் நட்பும்* விடமும் அமுதமும் ஆய்*
பல்வகையும் பரந்த* பெருமான் என்னை ஆள்வானை*
செல்வம் மல்குகுடித்* திருவிண்ணகர்க் கண்டேனே*. (2)
கண்ட இன்பம் துன்பம்* கலக்கங்களும் தேற்றமும் ஆய்*
தண்டமும் தண்மையும்* தழலும் நிழலும் ஆய்*
கண்டுகோடற்கு அரிய* பெருமான் என்னை ஆள்வான் ஊர்*
தெண் திரைப் புனல்சூழ்* திருவிண்ணகர் நல் நகரே*
நகரமும் நாடுகளும்* ஞானமும் மூடமும் ஆய்*
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய்* நிலன் ஆய் விசும்பு ஆய்*
சிகர மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை* யாவர்க்கும் புண்ணியமே*.
புண்ணியம் பாவம்* புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்*
எண்ணம் ஆய் மறப்பு ஆய்* உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்*
திண்ண மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
கண்ணன் இன் அருளே* கண்டுகொள்மின்கள் கைதவமே*
கைதவம் செம்மை* கருமை வெளுமையும் ஆய்*
மெய் பொய் இளமை* முதுமை புதுமை பழமையும் ஆய்*
செய்த திண் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பெய்த காவு கண்டீர்* பெரும் தேவு உடை மூவுலகே*
மூவுலகங்களும் ஆய்* அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்*
பூவில் வாழ் மகள் ஆய்* தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்*
தேவர் மேவித் தொழும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பாவியேன் மனத்தே* உறைகின்ற பரஞ்சுடரே*.
பரம் சுடர் உடம்பு ஆய்* அழுக்குப் பதித்த உடம்பு ஆய்*
கரந்தும் தோன்றியும் நின்றும்* கைதவங்கள் செய்தும்* விண்ணோர்-
சிரங்களால் வணங்கும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை* யாவர்க்கும் வன் சரணே*.
வன்சரண் சுரர்க்கு ஆய்* அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்*
தன்சரண் நிழற்கீழ்* உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
என்சரண் என் கண்ணன்* என்னை ஆளுடை என் அப்பனே*
என் அப்பன் எனக்கு ஆய்* இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்*
பொன் அப்பன் மணி அப்பன்* முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*
மின்னப் பொன் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்*
தன் ஒப்பார் இல் அப்பன்* தந்தனன் தன தாள் நிழலே*. (2)
நிழல் வெய்யில் சிறுமை பெருமை* குறுமை நெடுமையும் ஆய்*
சுழல்வன நிற்பன* மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்*
மழலை வாய் வண்டு வாழ்* திருவிண்ணகர் மன்னு பிரான்*
கழல்கள் அன்றி* மற்றோர் களைகண் இலம் காண்மின்களே*
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த*
தாள் இணையன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
ஆணை ஆயிரத்துத்* திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்*
கோணை இன்றி விண்ணோர்க்கு* என்றும் ஆவர் குரவர்களே*. (2)
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி* தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,*
புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்* என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*
வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த* வேத ஒலியும் விழா ஒலியும்,*
பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும் அறா* திருப்பேரெயில் சேர்வன் நானே! (2)
நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,*
நான்இத் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்* என்வசம் அன்றுஇதுஇராப்பகல்போய்,*
தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ்* தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,*
வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்* செங்கனி வாயின் திறத்ததுவே.
செங்கனி வாயின் திறத்ததாயும்* செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்,*
சங்கொடு சக்கரம் கண்டுஉகந்தும்* தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*
திங்களும் நாளும் விழாஅறாத* தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,*
நங்கள்பிரானுக்குஎன் நெஞ்சம் தோழீ!* நாணும் நிறையும் இழந்ததுவே.
இழந்த எம்மாமைத் திறத்துப் போன* என்நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,*
உழந்து இனியாரைக் கொண்டுஎன்உசாகோ?* ஓதக் கடல்ஒலி போல* எங்கும்
எழுந்தநல் வேதத்துஒலி நின்றுஓங்கு* தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,*
முழங்கு சங்கக்கையன் மாயத்துஆழ்ந்தேன்* அன்னையர்காள் என்னை என்முனிந்தே?
முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலைஉண்டு* மருதுஇடைபோய்,*
கனிந்த விளவுக்குக் கன்றுஎறிந்த* கண்ண பிரானுக்குஎன் பெண்மை தோற்றேன்,*
முனிந்துஇனி என்செய்தீர் அன்னைமீர்காள்!* முன்னிஅவன் வந்து வீற்றிருந்த,*
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே* காலம் பெறஎன்னைக் காட்டுமினே
காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்* காதல் கடலின் மிகப் பெரிதால்,*
நீல முகில்வண்ணத்து எம்பெருமான்* நிற்கும்முன்னே வந்துஎன் கைக்கும் எய்தான்,*
ஞாலத்துஅவன் வந்து வீற்றிருந்த* நான்மறையாளரும் வேள்வி ஓவா,*
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்* கூடுபுனல் திருப்பேரெயிற்கே.
பேர்எயில் சூழ்கடல் தென்இலங்கை* செற்றபிரான் வந்து வீற்றிருந்த,*
பேரெயிற்கே புக்குஎன்நெஞ்சம் நாடி* பேர்த்து வரஎங்கும் காண மாட்டேன்,*
ஆரை இனிஇங்குஉடையம் தோழீ!* என்நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,*
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?* என்நெஞ்சம் கண்டதுவே கண்டேனே
கண்டதுவே கொண்டுஎல்லாரும் கூடி* கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக்
கொண்டு,* அலர் தூற்றிற்றுஅது முதலாக்* கொண்டஎன் காதல் உரைக்கில் தோழீ,*
மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்* நீள்விசும்பும் கழியப் பெரிதால்,*
தெண்திரை சூழ்ந்துஅவன் வீற்றிருந்த* தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே
சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!* அன்னையர்காள்! என்னைத்தேற்ற வேண்டா,*
நீர்கள் உரைக்கின்றது என்இதற்கு?* நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை,*
கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட* கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,*
ஏர்வள ஒண்கழனிப் பழன* தென்திருப்பேரெயில் மாநகரே.
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்* நாண்எனக்கு இல்லைஎன் தோழி மீர்காள்,*
சிகர மணிநெடு மாடம் நீடு* தென்திருப் பேரெயில் வீற்றிருந்த,*
மகர நெடுங்குழைக் காதன் மாயன்* நூற்றுவரை அன்று மங்க நூற்ற,*
நிகர்இல் முகில்வண்ணன் நேமியான்* என் நெஞ்சம் கவர்ந்துஎனை ஊழியானே?
ஊழிதோறுஊழி உருவும் பேரும் செய்கையும்* வேறவன் வையம் காக்கும்,*
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை* அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்* இவை திருப்பேரெயில் மேய பத்தும்,*
ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்* அவர்அடிமைத் திறத்து ஆழியாரே. (2)
அங்கும் இங்கும்* வானவர் தானவர் யாவரும்*
எங்கும் இனையைஎன்று* உன்னைஅறியகிலாதுஅலற்றி*
அங்கம்சேரும்* பூமகள் மண்மகள் ஆய்மகள்*
சங்குசக்கரக் கையவன் என்பர்* சரணமே. (2)
சரணமாகிய* நான்மறை நூல்களும் சாராதே*
மரணம் தோற்றம்* வான்பிணி மூப்புஎன்றுஇவை மாய்த்தோம்*
கரணப்பல்படை* பற்றறஓடும் கனல்ஆழி*
அரணத்திண் படைஏந்திய* ஈசற்கு ஆளாயே.
ஆளும் ஆளார் ஆழியும்* சங்கும் சுமப்பார்தாம்*
வாளும் வில்லும் கொண்டு* பின் செல்வார் மற்றுஇல்லை*
தாளும் தோளும்* கைகளைஆரத் தொழக்காணேன்*
நாளும் நாளும் நாடுவன்* அடியேன் ஞாலத்தே
ஞாலம் போனகம்பற்றி* ஓர்முற்றா உருஆகி*
ஆலம்பேர்இலை* அன்னவசம்செய்யும் அம்மானே*
காலம்பேர்வதுஓர்* கார்இருள் ஊழி ஒத்துஉளதால்* உன்
கோலம்கார்எழில்* காணலுற்று ஆழும் கொடியேற்கே
கொடியார்மாடக்* கோளூர்அகத்தும் புளியங்குடியும்*
மடியாதுஇன்னே* நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*
அடியார் அல்லல்தவிர்த்த* அசைவோ? அன்றேல்* இப்
படிதான் நீண்டுதாவிய* அசைவோ? பணியாயே.
பணியாஅமரர்* பணிவும் பண்பும் தாமேஆம்*
அணியார் ஆழியும்* சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்*
தணியா வெம்நோய்* உலகில் தவிர்ப்பான்* திருநீல
மணியார்மேனியோடு* என்மனம் சூழவருவாரே.
வருவார் செல்வார்* வண்பரிசாரத்து இருந்த* என்
திருவாழ்மார்வற்கு* என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
உருவார் சக்கரம்* சங்குசுமந்து இங்குஉம்மோடு*
ஒருபாடுஉழல்வான்* ஓர்அடியானும் உளன்என்றே.
என்றே என்னை* உன்ஏர்ஆர்கோலத்திருந்து அடிக்கீழ்*
நின்றே ஆட்செய்ய* நீகொண்டருள நினைப்பதுதான்*
குன்றுஏழ் பார்ஏழ்* சூழ்கடல்ஞாலம் முழுஏழும்*
நின்றே தாவிய* நீள்கழல் ஆழித் திருமாலே!
திருமால் நான்முகன்* செஞ்சடையான் என்றுஇவர்கள்* எம்
பெருமான் தன்மையை* யார் அறிகிற்பார்? பேசிஎன்*
ஒருமாமுதல்வா!* ஊழிப்பிரான் என்னை ஆளுடைக்*
கருமாமேனியன்! என்பன்* என்காதல் கலக்கவே.
கலக்கம் இல்லா* நல்தவமுனிவர் கரைகண்டோர்*
துளக்கம் இல்லா* வானவர் எல்லாம் தொழுவார்கள்*
மலக்கம் எய்த* மாகடல்தன்னைக் கடைந்தானை*
உலக்க நாம் புகழ்கிற்பது* என்செய்வது உரையீரே.
உரையா வெம்நோய்தவிர* அருள் நீள்முடியானை*
வரையார்மாடம்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
உரையேய் சொல்தொடை* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
நிரையே வல்லார்* நீடு உலகத்துப் பிறவாரே. (2)
ஓராயிரமாய்* உலகுஏழ்அளிக்கும்*
பேராயிரம்கொண்டதுஓர்* பீடுஉடையன்*
காராயின* காளநல்மேனியினன்*
நாரயணன்* நங்கள்பிரான்அவனே. (2)
அவனேஅகல்ஞாலம்* படைத்துஇடந்தான்*
அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான் அளந்தான்*
அவனேஅவனும்* அவனும்அவனும்*
அவனே மற்றுஎல்லாமும்* அறிந்தனமே.
அறிந்தனவேத* அரும்பொருள்நூல்கள்*
அறிந்தனகொள்க* அரும்பொருள்ஆதல்*
அறிந்தனர்எல்லாம்* அரியைவணங்கி*
அறிந்தனர்* நோய்கள்அறுக்கும்மருந்தே.
மருந்தேநங்கள்* போக மகிழ்ச்சிக்குஎன்று*
பெரும்தேவர் குழாங்கள்* பிதற்றும்பிரான்*
கரும்தேவன்எம்மான்* கண்ணன்விண்உலகம்*
தரும்தேவனைச்* சோரேல்கண்டாய்மனமே!
மனமே! உன்னை* வல்வினையேன்இரந்து*
கனமேசொல்லினேன்* இதுசோரேல்கண்டாய்*
புனம்மேவிய* பூந்தண்துழாய் அலங்கல்*
இனம்ஏதும்இலானை* அடைவதுமே.
அடைவதும்அணியார்* மலர்மங்கைதோள்*
மிடைவதும்* அசுரர்க்குவெம்போர்களே*
கடைவதும்* கடலுள்அமுதம்* என்மனம்
உடைவதும்* அவற்கேஒருங்காகவே.
ஆகம்சேர்* நரசிங்கம்அதுஆகி ஓர்*
ஆகம்வள்உகிரால்* பிளந்தான்உறை*
மாகவைகுந்தம்* காண்பதற்கு என்மனம்*
ஏகம்எண்ணும்* இராப்பகல்இன்றியே (2)
இன்றிப்போக* இருவினையும்கெடுத்து*
ஒன்றியாக்கைபுகாமை* உய்யக்கொள்வான்*
நின்றவேங்கடம்* நீள்நிலத்துஉள்ளது,
சென்றதேவர்கள்* கைதொழுவார்களே.
தொழுதுமாமலர்* நீர்சுடர்தூபம்கொண்டு*
எழுதும்என்னும்இது* மிகைஆதலின்*
பழுதுஇல்தொல்புகழ்ப்* பாம்புஅணைப்பள்ளியாய்*
தழுவுமாறுஅறியேன்* உனதாள்களே
தாளதாமரையான்* உனதுஉந்தியான்*
வாள்கொள் நீளமழுஆளி* உன்ஆகத்தான்*
ஆளராய்த்தொழுவாரும்* அமரர்கள்*
நாளும் என்புகழ்கோ* உனசீலமே?
சீலம்எல்லைஇலான்* அடிமேல்* அணி
கோலம்நீள்* குருகூர்ச்சடகோபன்* சொல்
மாலைஆயிரத்துள்* இவை பத்தினின்
பாலர்* வைகுந்தம்ஏறுதல் பான்மையே (2)
வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!* மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்*
காமரு குயில்களும் கூவும் ஆலோ!* கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*
ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு* ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ*
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!* தகவிலை தகவிலையே நீ கண்ணா! (2)
தகவிலை தகவிலையே நீ கண்ணா!* தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்குஆராச்*
சுகவெள்ளம் விசும்புஇறந்து அறிவை மூழ்கச்- சூழ்ந்து அதுகனவுஎன நீங்கி ஆங்கே*
அகஉயிர் அகம்அகம்தோறும் உள்புக்கு* ஆவியின் பரம்அல்ல வேட்கை அந்தோ*
மிகமிக இனி உன்னைப் பிரிவைஆமால்* வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.
வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு* வெவ்வுயிர் கொண்டு எனதுஆவி வேமால்*
யாவரும் துணைஇல்லை யான் இருந்து* உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*
போவதுஅன்று ஒருபகல் நீஅகன்றால்* பொருகயல் கண்இணை நீரும் நில்லா*
சாவது இவ்ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த* இத் தொழுத்தையோம் தனிமை தானே.
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்- துயரமும் நினைகிலை கோவிந்தா நின்-
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி* துறந்து எம்மைஇட்டு அவை மேய்க்கப் போதி*
பழுத்த நல்அமுதின் இன்சாற்று வெள்ளம்* பாவியேன் மனம்அகம்தோறும் உள்புக்கு-
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்* பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!*
பிணிஅவிழ் மல்லிகை வாடை தூவ* பெருமத மாலையும் வந்தின்று ஆலோ!*
மணிமிகு மார்பினில் முல்லைப் போது* என்வனமுலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து
அணிமிகு தாமரைக் கையை அந்தோ!* அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்
அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்* ஆழிஅம் கண்ணா! உன் கோலப் பாதம்*
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*
வடித்தடம் கண்இணை நீரும் நில்லா* மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே*
வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு* வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கே.
வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கு* வெள்வளை மேகலை கழன்று வீழ*
தூமலர்க் கண்இணை முத்தம் சோர* துணைமுலை பயந்து என தோள்கள் வாட*
மாமணி வண்ணா! உன்செங்கமல வண்ண* மெல் மலரடி நோவ நீபோய்*
ஆமகிழ்ந்து உகந்துஅவை மேய்க்கின்று உன்னோடு* அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே?
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்குஎன்று* ஆழும் என்ஆர்உயிர் ஆன்பின் போகேல்*
கசிகையும் வேட்கையும் உள்கலந்து* கலவியும் நலியும் என்கை கழியேல்*
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்* கைகளும் பீதக உடையும் காட்டி*
ஒசிசெய் நுண்இடைஇள ஆய்ச்சியர்நீ* உகக்கும் நல்லவரொடும் உழிதராயே
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்* திருவுள்ளம் இடர்கெடும்தோறும்* நாங்கள்-
வியக்க இன்புறுதும் எம்பெண்மை ஆற்றோம்* எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்*
மிகப்பல அசுரர்கள் வேண்டுஉருவம் கொண்டு* நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ*
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே* அவத்தங்கள் விளையும் என்சொல்கொள் அந்தோ!
அவத்தங்கள் விளையும் என்சொல்கொள்அந்தோ!* அசுரர்கள் வன்கையர் கஞ்சன்ஏவ*
தவத்தவர் மறுக நின்று உழிதருவர்* தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்-
உவர்த்தலை உடன்திரி கிலையும் என்றுஎன்று- ஊடுற என்னுடை ஆவி வேமால்*
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி* செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவே!
செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவு* அத்திருவடி திருவடிமேல்* பொருநல்-
சங்குஅணி துறைவன் வண்தென் குருகூர்* வண்சட கோபன் சொல் ஆயிரத்துள்*
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை* அவனொடும் பிரிவதற்கு இரங்கி* தையல்-
அங்குஅவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான்- உரைத்தன* இவையும் பத்து அவற்றின் சார்வே. (2)