பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
ஆற்றில் இருந்து* விளையாடுவோங்களைச்*
சேற்றால் எறிந்து* வளை துகிற் கைக்கொண்டு*
காற்றிற் கடியனாய்* ஓடி அகம் புக்கு*
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்*
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (2)
குண்டலம் தாழ* குழல் தாழ நாண் தாழ*
எண் திசையோரும்* இறைஞ்சித் தொழுது ஏத்த*
வண்டு அமர் பூங்குழலார்* துகிற் கைக்கொண்டு*
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்*
வேண்டவும் தாரானால் இன்று முற்றும்
தடம் படு தாமரைப்* பொய்கை கலக்கி*
விடம் படு நாகத்தை* வால் பற்றி ஈர்த்து*
படம் படு பைந்தலை* மேல் எழப் பாய்ந்திட்டு*
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்*
உச்சியில் நின்றானால் இன்று முற்றும்
தேனுகன் ஆவி செகுத்துப்*
பனங்கனி தான் எறிந்திட்ட* தடம் பெருந்தோளினால்*
வானவர் கோன் விட* வந்த மழை தடுத்து*
ஆனிரை காத்தானால் இன்று முற்றும்*
அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்
ஆய்ச்சியர் சேரி* அளை தயிர் பால் உண்டு*
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப்* பிடியுண்டு*
வேய்த் தடந்தோளினார்* வெண்ணெய் கோள் மாட்டாது*
அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்*
அடியுண்டு அழுதானால் இன்று முற்றும்
தள்ளித் தளர் நடை யிட்டு* இளம் பிள்ளையாய்*
உள்ளத்தின் உள்ளே* அவளை உற நோக்கிக*
கள்ளத்தினால் வந்த* பேய்ச்சி முலை உயிர்*
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்*
துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்
மாவலி வேள்வியில்* மாண் உருவாய்ச் சென்று*
மூவடி தா என்று* இரந்த இம் மண்ணினை*
ஒரடி இட்டு* இரண்டாம் அடிதன்னிலே*
தாவடி இட்டானால் இன்று முற்றும்*
தரணி அளந்தானால் இன்று முற்றும்
தாழை தண்-ஆம்பற்* தடம் பெரும் பொய்கைவாய்*
வாழும் முதலை* வலைப்பட்டு வாதிப்பு உண்*
வேழம் துயர் கெட* விண்ணோர் பெருமானாய்*
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்*
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்
வானத்து எழுந்த* மழை முகில் போல்*
எங்கும் கானத்து மேய்ந்து* களித்து விளையாடி*
ஏனத்து உருவாய்* இடந்த இம் மண்ணினைத்*
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும்
அங் கமலக் கண்ணன்தன்னை* அசோதைக்கு*
மங்கை நல்லார்கள்* தாம் வந்து முறைப்பட்ட*
அங்கு அவர் சொல்லைப்* புதுவைக்கோன் பட்டன் சொல்*
இங்கு இவை வல்லவர்க்கு* ஏதம் ஒன்று இல்லையே* (2)
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்* வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்* இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்* தூய நான்மறையாளர் சோமுச் செய்ய*
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. (2)
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்* தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்*
சந்து அணி மென் முலை மலராள் தரணிமங்கை* தாம் இருவர் அடி வருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்* ஐந்துவளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
கொழுந்து அலரும் மலர்ச் சோலைக்* குழாம்கொள் பொய்கைக்* கோள்முதலை வாள்எயிற்றுக் கொண்டற்குஎள்கி*
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி* அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட* இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட*
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து* தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்* அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்* குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்*
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி* கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்*
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்* பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
மறை வளர புகழ் வளர மாடம்தோறும்* மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத*
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று* அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று* தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*
வெறி ஆர்ந்த மலர்மகள் நாமங்கையோடு வியன்கலை எண் தோளினாள் விளங்கு*
செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி* இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு* வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று* காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட*
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
பார் ஏறு பெரும் பாரம் தீரப்* பண்டு பாரதத்துத் தூது இயங்கி*
பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை* செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை*
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்* புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்*
சீர் ஏறு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
தூ வடிவின் பார்மகள் பூமங்கையோடு* சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று* கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை*
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை* செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை
தீ வடிவின் சிவன் அயனே போல்வார்* மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்*
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று*
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த* கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)
கிளர் ஒளி இளமை* கெடுவதன் முன்னம்,*
வளர் ஒளி மாயோன்* மருவிய கோயில்,*
வளர் இளம் பொழில் சூழ்* மாலிருஞ்சோலை,*
தளர்வு இலர் ஆகிச்* சார்வது சதிரே.
சதிர் இள மடவார்* தாழ்ச்சியை மதியாது,*
அதிர் குரல் சங்கத்து* அழகர் தம் கோயில்,*
மதி தவழ் குடுமி* மாலிருஞ்சோலைப்,*
பதியது ஏத்தி* எழுவது பயனே.
பயன் அல்ல செய்து* பயன் இல்லை நெஞ்சே,*
புயல் மழை வண்ணர்* புரிந்து உறை கோயில்,*
மயல் மிகு பொழில் சூழ்* மாலிருஞ்சோலை,*
அயல்மலை அடைவது* அது கருமமே.
கரும வன் பாசம்* கழித்து உழன்று உய்யவே,*
பெருமலை எடுத்தான்* பீடு உறை கோயில்,*
வரு மழை தவழும்* மாலிருஞ்சோலைத்,*
திருமலை அதுவே* அடைவது திறமே.
திறம் உடை வலத்தால்* தீவினை பெருக்காது,*
அறம் முயல் ஆழிப்* படையவன் கோயில்,*
மறு இல் வண் சுனை சூழ்* மாலிருஞ்சோலைப்,*
புறமலை சாரப்* போவது கிறியே.
கிறி என நினைமின்* கீழ்மை செய்யாதே,*
உறி அமர் வெண்ணெய்* உண்டவன் கோயில்,*
மறியொடு பிணை சேர்* மாலிருஞ்சோலை,*
நெறி பட அதுவே* நினைவது நலமே.
நலம் என நினைமின்* நரகு அழுந்தாதே,*
நிலம் முனம் இடந்தான்* நீடு உறை கோயில்,*
மலம் அறு மதி சேர்* மாலிருஞ்சோலை,*
வலம் முறை எய்தி,* மருவுதல் வலமே.
வலஞ்செய்து வைகல்* வலம் கழியாதே,*
வலஞ்செய்யும் ஆய* மாயவன் கோயில்,*
வலஞ்செய்யும் வானோர்* மாலிருஞ்சோலை,,*
வலஞ்செய்து நாளும்* மருவுதல் வழக்கே.
வழக்கு என நினைமின்* வல்வினை மூழ்காது,*
அழக்கொடி அட்டான்* அமர் பெருங்கோயில்,*
மழக் களிற்று இனம் சேர்* மாலிருஞ்சோலை,*
தொழக் கருதுவதே* துணிவது சூதே.
சூது என்று களவும்* சூதும் செய்யாதே,*
வேதம் முன் விரித்தான்* விரும்பிய கோயில்,*
மாது உறு மயில் சேர்* மாலிருஞ்சோலைப்,*
போது அவிழ் மலையே* புகுவது பொருளே.
பொருள் என்று இவ் உலகம்* படைத்தவன் புகழ்மேல்,*
மருள் இல் வண் குருகூர்* வண் சடகோபன்,*
தெருள் கொள்ளச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்து,*
அருளுடையவன் தாள்* அணைவிக்கும் முடித்தே.