கோவில் திருவாய்மொழி
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்* நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்* கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்* கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்* பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (2)
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்* செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்-
பையிற் துயின்ற பரமன் அடி பாடி* நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்* செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்*
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி* உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்.
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி* நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்* தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி-
வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்* நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய் (2)
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்* ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி*
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து* பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்*
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து* தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும் மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்* தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்* தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.
புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்* வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு* கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி*
வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை* உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்* உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்*
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்* கலந்து- பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே*
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து* வாச நறுங் குழல் ஆய்ச்சியர்* மத்தினால்-
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ* நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ* தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய்.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு* மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து* உன்னைக்- கூவுவான் வந்து நின்றோம்* கோதுகலம் உடைய-
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு* மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்* ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்* தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்*
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்* மாமீர் அவளை எழுப்பீரோ* உன் மகள் தான்-
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ* ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ*
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று* நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்.
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!* மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்* நம்மால்- போற்றப் பறை தரும் புண்ணியனால்* பண்டு ஒருநாள்-
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்* தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ*
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே* தேற்றமாய் வந்து திற-ஏலோர் எம்பாவாய்.
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து* செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்*
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே* புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய்*
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து* நின்- முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்*
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி* நீ- எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய்.
கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி* நினைத்து முலை வழியே நின்று பால் சோர*
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்* பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி*
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற* மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்*
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்* அனைத்து இல்லத்தாரும் அறிந்து-ஏலோர் எம்பாவாய்.
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்* கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்* வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று*
புள்ளும் சிலம்பின காண் போது-அரிக் கண்ணினாய்* குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*
பள்ளிக் கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்* கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய்*
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்* செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்*
செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர்* தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்*
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்* நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்*
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.
எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ* சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்*
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்* வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக*
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை* எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்*
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க- வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய* கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண-
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்* ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை-
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்* தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்*
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா!* நீ- நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய். (2)
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்* எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்*
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே* எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்*
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த* உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் *
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா* உம்பியும் நீயும் உகந்து-ஏலோர் எம்பாவாய்.
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்* நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்*
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்* வந்து எங்கும் கோழி அழைத்தன காண்* மாதவிப்-
பந்தர்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்* பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்*
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப* வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய். (2)
குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்* மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்*
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்* வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்*
மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை* எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்* தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று* கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்*
செப்பம் உடையாய் திறல் உடையாய்* செற்றார்க்கு- வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்*
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்* நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்*
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை* இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்.
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப* மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்*
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்* ஊற்றம் உடையாய் பெரியாய்* உலகினில்-
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்* மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்*
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே* போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்.
அங்கண் மா ஞாலத்து அரசர்* அபிமான- பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே*
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்* கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ* திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்*
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்* எங்கள்மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்.
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்* சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து*
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி* மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா* உன்- கோயில் நின்று இங்ஙனே போந்தருளி* கோப்பு உடைய-
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த- காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய். (2)
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி* சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி* கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி*
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி* வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி*
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்* இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்.(2)
ஒருத்தி மகனாய்ப் பிறந்து* ஓர் இரவில்- ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த* கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே!,* உன்னை- அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்*
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி* வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.
மாலே! மணிவண்ணா! மார்கழி நீர் ஆடுவான்* மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன* பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே* சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே* ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய்.
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா* உன்தன்னைப்- பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்* சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே*
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்* ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்* கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். (2)
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்* அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து* உன்தன்னைப்-
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்* குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது* அறியாத பிள்ளைகளோம் அன்பினால்* உன்தன்னைச்-
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே* இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய். (2)
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து* உன்- பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து* நீ- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா* எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்* உன்தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்* மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய். (2)
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்* திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி*
அங்குப் பறைகொண்ட ஆற்றை* அணி புதுவைப்- பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன*
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே* இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்* எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (2)