பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    விண் நீல மேலாப்பு*  விரித்தாற்போல் மேகங்காள்* 
    தெண் நீர் பாய் வேங்கடத்து*  என் திருமாலும் போந்தானே?* 

    கண்ணீர்கள் முலைக்குவட்டிற்*  துளி சோரச் சோர்வேனைப்* 
    பெண் நீர்மை ஈடழிக்கும்*  இது தமக்கு ஓர் பெருமையே?*  (2)   


    மா முத்தநிதி சொரியும்*  மா முகில்காள்*  வேங்கடத்துச் 
    சாமத்தின் நிறங்கொண்ட*  தாளாளன் வார்த்தை என்னே* 

    காமத்தீ உள்புகுந்து*  கதுவப்பட்டு இடைக் கங்குல்* 
    ஏமத்து ஓர் தென்றலுக்கு*  இங்கு இலக்காய் நான் இருப்பேனே*     


    ஒளி வண்ணம் வளை சிந்தை*  உறக்கத்தோடு இவை எல்லாம்* 
    எளிமையால் இட்டு என்னை*  ஈடழியப் போயினவால்* 

    குளிர் அருவி வேங்கடத்து*  என் கோவிந்தன் குணம் பாடி* 
    அளியத்த மேகங்காள்!*  ஆவி காத்து இருப்பேனே*        


    மின் ஆகத்து எழுகின்ற*  மேகங்காள்*  வேங்கடத்துத்- 
    தன் ஆகத் திருமங்கை*  தங்கிய சீர் மார்வற்கு* 

    என் ஆகத்து இளங்கொங்கை*  விரும்பித் தாம் நாள்தோறும்* 
    பொன் ஆகம் புல்குதற்கு என்*  புரிவுடைமை செப்புமினே*         


    வான் கொண்டு கிளர்ந்து எழுந்த*  மா முகில்காள்!*  வேங்கடத்துத்- 
    தேன் கொண்ட மலர் சிதறத்*  திரண்டு ஏறிப் பொழிவீர்காள்* 

    ஊன் கொண்ட வள் உகிரால்*  இரணியனை உடல் இடந்தான்* 
    தான் கொண்ட சரிவளைகள்*  தருமாகிற் சாற்றுமினே*   


    சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த*  தண் முகில்காள்!*  மாவலியை- 
    நிலங் கொண்டான் வேங்கடத்தே*  நிரந்து ஏறிப் பொழிவீர்காள்* 

    உலங்கு உண்ட விளங்கனி போல்*  உள் மெலியப் புகுந்து* 
    என்னை நலங் கொண்ட நாரணற்கு*  என் நடலைநோய் செப்புமினே*       


    சங்க மா கடல் கடைந்தான்*  தண் முகில்காள்!* வேங்கடத்துச்- 
    செங்கண் மால் சேவடிக் கீழ்*  அடிவீழ்ச்சி விண்ணப்பம்* 

    கொங்கை மேல் குங்குமத்தின்*  குழம்பு அழியப் புகுந்து* 
    ஒருநாள் தங்குமேல் என் ஆவி*  தங்கும் என்று உரையீரே* (2)       


    கார் காலத்து எழுகின்ற*  கார்முகில்காள்!*  வேங்கடத்துப்- 
    போர் காலத்து எழுந்தருளிப்*  பொருதவனார் பேர் சொல்லி* 

    நீர் காலத்து எருக்கின்*  அம்பழ இலை போல் வீழ்வேனை* 
    வார் காலத்து ஒருநாள்*  தம் வாசகம் தந்தருளாரே *.     


    மத யானை போல் எழுந்த*  மா முகில்காள்!*  வேங்கடத்தைப்- 
    பதியாக வாழ்வீர்காள்!*  பாம்பு அணையான் வார்த்தை என்னே* 

    கதி என்றும் தான் ஆவான்*  கருதாது*  ஓர் பெண்கொடியை-
    வதை செய்தான் என்னும் சொல்*  வையகத்தார் மதியாரே* (2)    


    நாகத்தின் அணையானை*  நன்னுதலாள் நயந்து உரை செய்* 
    மேகத்தை வேங்கடக்கோன்*  விடு தூதில் விண்ணப்பம்* 

    போகத்தில் வழுவாத*  புதுவையர்கோன் கோதை தமிழ்* 
    ஆகத்து வைத்து உரைப்பார் *  அவர் அடியார் ஆகுவரே* (2)