பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    மன்னு பெரும்புகழ் மாதவன்*  மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை 
    உகந்தது காரண மாக*  என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே?* 

    புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்*  பொதும்பினில் வாழும் குயிலே!* 
    பன்னி எப்போதும் இருந்து விரைந்து*  என் பவளவாயன் வரக் கூவாய்*. (2)   


    வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட*  விமலன் எனக்கு உருக்காட்டான்* 
    உள்ளம் புகுந்து என்னை நைவித்து*  நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்* 

    கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்*  களித்து இசை பாடும் குயிலே* 
    மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது*  என் வேங்கடவன் வரக் கூவாய்*.      


    மாதலி தேர் முன்பு கோல்கொள்ள*  மாயன் இராவணன் மேல்*
    சரமாரி தாய்தலை அற்று அற்று வீழத்*  தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்* 

    போது அலர் காவிற் புதுமணம் நாறப்*  பொறி வண்டின் காமரம் கேட்டு* உன் 
    காதலியோடு உடன் வாழ்குயிலே!*  என் கருமாணிக்கம் வரக்கூவாய்*.     


    என்புருகி இனவேல் நெடுங்கண்கள்* இமை பொருந்தா பல நாளும்* 
    துன்பக்கடல் புக்குவைகுந்தன் என்பதோர்*  தோணி பெறாது உழல்கின்றேன், 

    அன்புடையாரைப் பிரிவுறு நோய்*  அது நீயும் அறிதி குயிலே* 
    பொன்புரை மேனிக்கருளக் கொடியுடை*  புண்ணியனை வரக்கூவாய்*.


    மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்*  வில்லிபுத்தூர் உறைவான் தன்* 
    பொன்னடி காண்பதோர் ஆசையினால்*   என் பொ ருகயற் கண்ணிணை துஞ்சா* 

    இன்னடிசிலோடு பாலமுதூட்டி*  எடுத்த என் கோலக்கிளியை* 
    உன்னொடு தோழமை கொள்வன் குயிலே!*  உலகளந்தான் வரக் கூவாய்*. (2)


    எத்திசையும் அமரர் பணிந்தேத்தும்*  இருடீகேசன் வலி செய்ய* 
    முத்தன்ன வெண்முறுவல் செய்யவாயும் முலையும்*  அழகழிந்தேன் நான்* 

    கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை*  கொள்ளும் இளங்குயிலே*
    என்  தத்துவனை வரக் கூகிற்றியாகில்*  தலையல்லால் கைம்மாறிலேனே!*.


    பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானை*  புணர்வதோர் ஆசையினால்*
    என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து*  ஆவியை ஆகுலம் செய்யும், அங்குயிலே!*

    உனக் கென்ன மறைந்துறைவு* ஆழியும் சங்கும் ஒண் தண்டும்* 
    தங்கிய கையவனை வரக்கூவில்*  நீ சாலத் தருமம் பெறுதி*. 


    சார்ங்கம் வளைய வலிக்கும்*  தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்* 
    நாங்கள் எம்மில் இருந்தொட்டி அகச்சங்கம்*  நானும்  அவனும்  அறிதும்* 

    தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்*  சிறுகுயிலே*
    திருமாலை ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றியாகில்*  அவனை நான் செய்வன காணே!*


    பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர்*  பாசத்து  அகப் பட்டிருந்தேன்* 
    பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ்குயிலே!*  குறிக்கொண்டு இது நீ கேள், 

    சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்*  பொன்வளை கொண்டு தருதல்* 
    இங்குள்ள காவினில் வாழக் கருதில்*  இரண்டத் தொன்றேல் திண்ணம் வேண்டும்*.


    அன்றுலகம் அளந்தானை யுகந்தது*  அடிமைக் கணவன் வலி செய்ய* 
    தென்றலும் திங்களும் ஊடறுத்து*  என்னை நலியும் முறைமை அறியேன்* 

    என்றும் இக்காவில் இருந்திருந்து*  என்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே!* 
    இன்று நாராயணனை வரக் கூவாயேல்*  இங்குற்று நின்றும் துரப்பன்*. 


    விண்ணுற நீண்டு அடிதாவிய மைந்தனை*  வேற் கண் மடந்தை விரும்பி* 
    கண்ணுற என்கடல் வண்ணனைக் கூவு*  கருங்குயிலே! என்ற மாற்றம்* 

    பண்ணுற நான்மறையோர் புதுவை மன்னன்*  பட்டர்பிரான் கோதை சொன்ன* 
    நண்ணுறு வாசக மாலை வல்லார்*  நமோ நாராயணாய வென்பாரே!* (2)