பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    கார்க்கோடற் பூக்காள்!*  கார்க்கடல் வண்ணன் என்மேல்*  உம்மைப்- 
    போர்க் கோலம் செய்து*  போர விடுத்தவன் எங்கு உற்றான்?* 

    ஆர்க்கோ இனி நாம்*  பூசல் இடுவது?*  அணி துழாய்த்- 
    தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப்*  படைக்க வல்லேன் அந்தோ!*  (2)    


    மேல் தோன்றிப் பூக்காள்!*  மேல் உலகங்களின் மீது போய்* 
    மேல் தோன்றும் சோதி*  வேத முதல்வர் வலங்கையில்* 

    மேல் தோன்றும் ஆழியின்*  வெஞ்சுடர் போலச் சுடாது*  
    எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து*  வைத்துக்கொள்கிற்றிரே*.


    கோவை மணாட்டி!*  நீ உன் கொழுங்கனி கொண்டு*  எம்மை 
    ஆவி தொலைவியேல்*  வாயழகர்தம்மை அஞ்சுதும்* 

    பாவியேன் தோன்றிப்*  பாம்பு அணையார்க்கும் தம் பாம்புபோல்* 
    நாவும் இரண்டு உள ஆய்த்து*  நாணிலியேனுக்கே*        


    முல்லைப் பிராட்டி!*  நீ உன் முறுவல்கள் கொண்டு*  எம்மை-
    அல்லல் விளைவியேல்*  ஆழி நங்காய்! உன் அடைக்கலம்* 

    கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட*  குமரனார்- 
    சொல்லும் பொய்யானால்*  நானும் பிறந்தமை பொய் அன்றே*.    


    பாடும் குயில்காள்!*  ஈது என்ன பாடல்?* நல் வேங்கட- 
    நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால்*  வந்து பாடுமின்* 

    ஆடும் கருளக் கொடி உடையார்*  வந்து அருள்செய்து* 
    கூடுவராயிடில்*  கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே*


    கண மாமயில்காள்!*  கண்ணபிரான் திருக்கோலம் போன்று* 
    அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு*  அடி வீழ்கின்றேன்* 

    பணம் ஆடு அரவணைப்*  பற்பல காலமும் பள்ளிகொள்* 
    மணவாளர் நம்மை வைத்த பரிசு*  இது காண்மினே*             


    நடம் ஆடித் தோகை விரிக்கின்ற*  மா மயில்காள்*  
    உம்மை நடம் ஆட்டம் காணப்*  பாவியேன் நான் ஓர் முதல் இலேன்* 

    குடம் ஆடு கூத்தன்*  கோவிந்தன் கோமிறை செய்து* 
    எம்மை  உடை மாடு கொண்டான்*  உங்களுக்கு இனி ஒன்று போதுமே?*    


    மழையே! மழையே! மண் புறம் பூசி*  உள்ளாய் நின்று* 
    மெழுகு ஊற்றினாற் போல்*  ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற* 

    அழகப்பிரானார் தம்மை*  என் நெஞ்சத்து அகப்படத் தழுவ நின்று*
    என்னைத் ததைத்துக்கொண்டு*  ஊற்றவும் வல்லையே?*. 


    கடலே! கடலே! உன்னைக் கடைந்து*  கலக்கு உறுத்து* 
    உடலுள் புகுந்து*  நின்ற ஊறல் அறுத்தவற்கு*  

    என்னையும் உடலுள் புகுந்து*  நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு*  என்- 
    நடலைகள் எல்லாம்*  நாகணைக்கே சென்று உரைத்தியே?*    


    நல்ல என் தோழி!*  நாகணைமிசை நம்பரர்* 
    செல்வர் பெரியர்*  சிறு மானிடவர் நாம் செய்வதென்?* 

    வில்லி புதுவை*  விட்டுசித்தர் தங்கள் தேவரை* 
    வல்ல பரிசு வருவிப்பரேல்*  அது காண்டுமே*  (2)