பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ* மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட* 
    எய் வண்ண வெம் சிலையே துணையா* இங்கே- இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்* 

    கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்* கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே* 
    அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ!* அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே! (2)      


    நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்* 
    செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்- 

    கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்* 
    எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே   


    உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* என்- ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
    தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்* சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன* 

    கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக்* கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது* 
    புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்* என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே? 


    இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!* இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட* 
    பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*

    ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்- 
    பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!


    மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்* கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்* 
    தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே* தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி* 

    என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்* என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு* 
    பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!   


    தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்* தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்* 
    பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த* அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை* 

    ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்* அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று* 
    நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது* நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே 


    செங் கால மட நாராய் இன்றே சென்று* திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு* 
    என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்* இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை* நாளும்- 

    பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்* பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்* தந்தால்- 
    இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்* இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே (2)  


    தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச்* சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால்* 
    மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த* வரை உருவின் மா களிற்றை தோழீ* என்-தன்- 

    பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு* போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி* 
    என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த* எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே


    அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை* அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை* 
    குன்றாத வலி அரக்கர் கோனை மாள* கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து -

    வென்றானை* குன்று எடுத்த தோளினானை* விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்- 
    நின்றானை* தண் குடந்தைக் கிடந்த மாலை* நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே (2)


    மின்னு மா மழை தவழும் மேக வண்ணா!* விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று* 
    அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த* அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை* 

    மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்* மான வேல் பரகாலன் கலியன் சொன்ன* 
    பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார்* தொல்லைப்- பழவினையை முதல் அரிய வல்லார் தாமே (2)